Sunday, November 01, 2015

ஓம் சாந்தி ஓம் (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : ஸ்ரீகாந்த்
நடிகை :நீலம் உபத்யாயா
இயக்குனர் :சூர்யா பிரபாகர்
இசை :விஜய் எபினேசர்
ஓளிப்பதிவு :கே.எம்.பாஸ்கரன்
நாயகன் ஸ்ரீகாந்த் திருச்சியில் ஒரு கார் ஷோரூமில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் நாயகி நீலம் உபாத்யாய் சாலையில் வரும்போது, அவரைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார் ஸ்ரீகாந்த். பல்வேறு இடங்களில் நீலத்தை பார்க்கும் ஸ்ரீகாந்த், அவருடன் அறிமுகமாகி பழக ஆரம்பிக்கிறார். பின்னர் ஸ்ரீகாந்த் வேலை செய்யும் இடத்திலேயே நீலம் வேலைக்கு சேர்கிறார். பிறகென்ன, இருவருக்கும் உள்ள இடைவெளி குறைந்து காதலிக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் செல்லும் இடத்திற்கெல்லாம் அவரை ஐந்து பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களை சந்திக்கும் ஸ்ரீகாந்த், அவர்கள் அனைவரும் ஆவி என்று தெரிந்துக் கொள்கிறார். ஆவியாக இருக்கும் ஐந்து பேரும் ஸ்ரீகாந்திடம் நிறைவேறாத ஆசைகளால் தாங்கள் இறந்து விட்டதாக கூறி, தங்களின் ஆசைகளை நிறைவேற்றும் படி கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீகாந்த்தும் சம்மதிக்க, அவர்களின் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறார்.

ஐந்து பேருக்கும் உதவி செய்வதற்காக ஸ்ரீகாந்த் செல்லும் இடங்களில் இல்லாம் நாயகி நீலத்தை பார்க்கிறார். ஸ்ரீகாந்த் தனியாக பேசுவதையும், தேவையில்லாத காரியங்களையும் செய்வதை பார்க்கும் நீலம், அவர் மனநோயாளி என்று தீர்மானிக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது. ஸ்ரீகாந்தை விட்டு நீலம் பிரிந்து செல்கிறார்.

இறுதியில் ஸ்ரீகாந்த், ஆவிகளின் ஆசைகளை நிறைவேற்றினாரா? காதலி நீலத்துடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் ஸ்ரீகாந்த், சிறப்பாக நடித்திருக்கிறார். சாதாரண மனிதனாகவும், காதலனாகவும், ஆவிகளுக்கு உதவி செய்பவராகவும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நீலம் உபாத்யாய், நாயகனுடன் டூயட் பாடவும் ரொமான்ஸ் செய்யவும் வாய்ப்புகள் குறைவு. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் பாலையா, அவருக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வரும் காட்சிகளில் கலகலப்பு. வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஆடுகளம் நரேன்.

சமீபத்தில் வெளியான பெரிய ஹீரோவின் படத்தின் கதைக்கருவும் இப்படத்தின் கதைக்கருவும் ஒன்றுதான். ஆனால் இப்படம் பெரிய ஹீரோவின் படத்திற்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. சில காரணங்களால் தற்போது தான் ரிலீசாகியிருக்கிறது. படம் பார்க்கும் போது அந்த படத்தின் தாக்கமே அதிகமாக இடம் பெறுகிறது. ஒரு கமர்ஷியல் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சூரிய பிரபாகர். லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

பாஸ்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. படத்தின் காட்சிகளை தெளிவாக காண்பித்திருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவோடு விஜய் எபினேசரின் இசையோடு பார்க்கும் போது ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது.



மொத்தத்தில் ‘ஓம் சாந்தி ஓம்’ ஆவிகளின் நண்பன்.

-மாலைமலர்