Thursday, January 10, 2013

தாய்மையென்பது யாதெனில்.-ஜோஸி - சிறுகதை


தாய்மையென்பது யாதெனில்...

கதை: ஜோஸி / ஓவியம்: வேதா

காலை நேரம். அனிதா காஃபிக் கோப்பையை முரளியிடம் கொடுத்தவாறே சொன்னாள்.
முரளி, இன்னிக்கு வர்ஷாவோட ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு. அதோட மார்க்ஸ் எல்லாம் கொடுப்பாங்க."
ஸாரி அனி, இன்னிக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. கண்டிப்பா அவாய்ட் பண்ண முடியாது. நீ மட்டும் போ ப்ளீஸ்" என்றான்.
என்ன முரளி இப்படிப் பொறுப்பே இல்லாம இருக்கீங்க? இப்படியிருந்தா அவ எதிர்காலம் என்னாகும்?"
எனக்குப் பதிலாதான் நீங்க ஓவர் பொறுப்பா இருக்கீங்களே மேடம். நீங்க பார்த்துக்கங்க" என்று சொல்லிவிட்டு காலிக் கோப்பையை அவளிடம் கொடுத்து விட்டுக் குளிக்கச் சென்றான்.
இரவு மணி பதினொன்று. வீட்டுக்கு வந்த முரளி கை அலம்பிவிட்டு டைனிங் டேபிள் முன் அமர்ந்தான். தட்டில் சப்பாத்தி வைத்தாள் அனிதா.
ஒரு வாய் சாப்பிட்டதும், அனி, சூப்பர்! ஆமா, நீ ஏன் உம்முனு இருக்கே?" என்று அவளைச் செல்லமாகச் சீண்டினான்.
காலையில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருந்ததே; என்ன சொன்னாங்க, வர்ஷா என்ன மார்க்ஸ் எடுத்திருக்கானு கேட்க மாட்டீங்களா?"
, ஸாரி! மறந்திட்டேன். சரி, சொல்லு."
அவ B + வாங்கியிருக்கா."
வெரிகுட்."

என்ன வெரிகுட் ஒரு தடவையாவது அவ A + எடுத்திருப்பாளா? இல்ல, A கிரேடாவது வாங்கலாம்ல."
ஏய் அனிதா, அவ குழந்தைடி. அதோட அவ படிக்கிறது செகன்ட் ஸ்டான்டர்ட் புரியுதா?"
சும்மாயிருங்க. அவ என்ன குழந்தையா? அவளோட கிளாஸ்லே கீர்த்தனானு ஒரு பொண்ணு. எப்பவுமே அவதான் A + தெரியுமா?"
அனி, குழந்தைகளை கம்பேர் பண்ணாதே."
நான் ஒண்ணும் கம்பேர் பண்ணல; சும்மா சொன்னேன். அவ அம்மாவை இன்னிக்குப் பார்த்தேன். ரொம்ப படிச்ச மாதிரிகூட தெரியலை"
நீ போய் டிப்ஸ் கேட்க வேண்டியது தானே?" என்றான் கை கழுவியவாறே.
ஆமாங்க. எம்.எஸ்சி. படிச்சுட்டு வீட்லே உட்கார்ந்து இவளுக்குச் சொல்லிக் குடுக்கிறேன். நான் போய் டிப்ஸ் கேட்கணுமா? நல்லா திட்டிட்டேன் வர்ஷாவ."
அவள அடிச்சியா?"
பின்ன கொஞ்சுவாங்களா?"
அனிதா, நீ அவ படிப்பு விஷயத்துல ரொம்ப ஓவரா நடந்துகறியோனு எனக்குத் தோணுது. அவ எப்படிப் படிக்கிறாளோ படிக்கட்டும்; இனிமேல் இப்படிப் பண்ணாதே" என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டுப் படுக்கை அறையில் அழுது அழுது சோர்ந்து கிடந்த குழந்தையை அணைத்துக் கொண்டான்.
முரளி சொந்தமாக பிஸினஸ் செய்வதனால் அனிதாதான் வீட்டு நிர்வாகம், குழந்தை, படிப்பு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறாள். அதிலும் படிப்பு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பு. வர்ஷாவுக்கு அனிதா பாடம் சொல்லிக் குடுக்கும்போது முரளிக்கு சில சமயம் கோபமும், சில சமயம் சிரிப்பும் வரும்.
ஒருநாள் வர்ஷா சத்தமாக அழுவது கேட்டது. பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடிவிட்டு முரளி ஓடினான். முரளியைப் பார்த்ததும் குழந்தை அவனைக் கட்டிக் கொண்டாள்.
வர்ஷா, என்னடா ஆச்சு?"
அம்மா அழறாங்கப்பா"
அம்மா அழறானு நீயும் அழறியா?"
ம்," என்றாள்.
வர்ஷாவின் மேத்ஸ் புக்கைக் காட்டியபடி முரளி, இந்த சம்மை பத்துத் தடவைக்கு மேல சொல்லிக் கொடுத்துட்டேன். அவ தலையிலே ஏறல. ஒருவேளை நம்ம பொண்ணுக்கு மேத்ஸ் வரவே வதா?" என்று சொல்லிவிட்டு கண்ணீர்விட, முரளி வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கினான். அதைப் பார்த்த குழந்தை அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அனிதா கோபமாகி, இப்ப எதுக்குச் சிரிக்கிறீங்க?" என்றாள்.
பின்ன என்ன? சின்ன விஷயத்துக்குப் போய் நீ அழுதால் சிரிப்பு வராதா? அனி விடு. அவ குழந்தை!"
அப்ப அந்தக் கீர்த்தனா குழந்தை இல்லையா?"
முரளி ஒன்றும் பேசாமல் சென்றான்.
அன்று வர்ஷாவின் பிறந்தநாள், வர்ஷாவுக்குப் புத்தாடை அணிவித்து அழகு படுத்தினாள் அனிதா. கோயிலுக்குப் போய்விட்டு, ஹோட்டலில் காலை உணவை முடித்தார்கள்.
வர்ஷா புது டிரஸ்ல ரொம்ப அழகாயிருக்கா’ - என்று ஆசையோடு சொன்னான் முரளி.
கண்ணு போடாதீங்க" - என்ற அனிதாவின் குரலில் பெருமை வழிந்தது.
டாடி."
என்னம்மா?"
இன்னிக்கு கீர்த்தனாவுக்கும் ஹேப்பி பர்த்டே"
ஏண்டா செல்லம், இன்னிக்கும் அம்மாவை மூட்அவுட் பண்ற?"
சும்மாயிருங்க. ஆமா, இன்னைக்கு அவுட்டிங் போறோம்?"
அனி, இன்னைக்கு லீவுதானே? அதனால கம்பெனி புது டிரைவர் பாலுவை வரச் சொல்லியிருக்கேன். சின்னதா ஒரு பிக்னிக் போவோம், எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு. அதான் பாலுவை வரச் சொன்னேன்."

அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியில் டிரைவர் பாலு நின்றிருந்தான்.
சார், வரச் சொன்னீங்களே"
பாலு, நானே போன் பண்ணியிருப்பேனே!"
இல்ல சார் கோயிலுக்கு இந்தப் பக்கம் வந்தேன். அதான் அப்படியே கேட்டுப் போயிடலாம்னு வந்தேன்"
வர்ஷா, அப்போது வெளியில் ஓடினாள் கீர்த்தனாஎன்று கத்திக்கொண்டு. அங்கே பாலுவின் ஸ்கூட்டரைப் பிடித்த படி ஒடிசலாய் சிவப்பாய் அழகான ஒரு சின்னப் பெண் நின்றிருந்தாள்.
என்ன பாலு, கீர்த்தனா உங்க பொண்ணா?"
ஆமா மேடம், அவளை உங்களுக்குத் தெரிமா?"
ம்... தெரியும் வர்ஷாவோட கிளாஸ்மேட்"
கீர்த்தனாவை வர்ஷா உள்ளே கூட்டி வந்தாள்.
கீர்த்தனா, உனக்கும் இன்னைக்குப் பர்த்டேவா? வர்ஷா சொன்னாள்" என்றான் முரளி.
ஆமா அங்கிள்" என்றாள் மெல்லிய குரலில்.
அங்கு இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உற்சாகமாகப் பறிமாறப்பட்டன. இருவரும் துள்ளிக் குதித்தபடி உள்ளே போய் விளையாட ஆரம்பித்தனர்.
பாலு, உங்கப் பொண்ணு நல்லா படிப்பா போலிருக்கே. அவ பேச்சுத்தான் இங்கே அடிக்கடி ஓடும்" என்று முரளி சொல்லவும் பாலுவுக்குத் தெரியாமல் அவனை முறைத்தாள் அனிதா.
அவளாதான் படிப்பா. என் பொண்டாட்டிக்கு நேரம் இருக்கிறதில்ல, அவ கார்மென்ட்ஸ்ல வேலை பார்க்கிறாள். இப்ப முழுகாம வேற இருக்கா. குழந்தை பிறந்தால் வேலையை விட்டுடணும். அப்புறம் பாப்பாவுக்கு ஃபீஸ் கட்ட முடியாது. அதனால அடுத்த வருஷம் பாப்பாவை எங்க அம்மா ஊருக்குப் படிக்க அனுப்பிடுவேன்," என்றான்.
அனிதாவைப் பார்த்தான் முரளி. அவள் மிகுந்த சந்தோஷப்படுவாள் என்று நினைத்தான்.
ஆனால் அனிதாவோ, பாலு, எல்லோருக்கும் படிப்பு சுலபமாய் வராது. கீர்த்தனாவுக்கு அது வருது. அதோட கீர்த்தனா ரொம்ப ஈடுபாடோட படிப்பானு நினைக்கிறேன். இந்த வயசுல பெத்தவங்களோட இருக்கிறது தான் நல்லது. மேலும் உங்க அம்மாவும் வயசானவங்கதானே, அதனால கீர்த்தனாவை நாங்க படிக்க வைக்கிறோம். அதோட உங்க மனைவிக்குக் குழந்தை பிறந்து கொஞ்ச நாள் ஆனவுடன் அவங்களுக்கு டெய்லரிங் தெரியும்கிறதாலே நானே ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்றேன், சரியா?" என்றாள்.
எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை மேடம்," என்று நன்றியில் நெகிழ்ந்தான் பாலு.
முரளியும் ஆச்சரியத்தோடு அனிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பாலு, கீர்த்தனாவும் நம்மகூட வரட்டும். இன்னிக்கு நாம எல்லோரும் சேர்ந்தே வெளியில் போகலாம், என்ன முரளி சரியா?"
அனி இவ்வளவு நல்லவளா நீ?"
முரளி, வர்ஷாவோட கம்பேர் பண்ணி கீர்த்தனா மேல கொஞ்சம் பொறாமைப்பட்டது நிஜம்தான். அதே சமயம் அந்தக் குழந்தை ஃபீஸ் கட்ட முடியாமல் அங்கு படிக்கப் போறதில்லை"னு நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. அதுதான் அப்படிச் சொன்னேன்.
முரளி நாம விளக்கைத் தூண்டி விடுவது மாதிரி வர்ஷாவையும் தூண்டித்தூண்டி விட்டுப் படிக்க வைக்கிறோம். ஆனால், கீர்த்தனா மாதிரி குழந்தைகள், தானாகவே பிரகாசிக்கும் சூரியன் மாதிரி. அதை ஏழ்மைங்கிற மேகம் ஏன் மறைக்கணும்? அதான்..." என்றாள்.
ஏய், அனி சூப்பரா பேசுற. உண்மையில் நான்கூட இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பேனானு தெரியாது. ரியலி கிரேட் அனி நீ..." அன்புடன் அணைத்துக் கொண்டான்.
வர்ஷாவுக்கு மட்டுமே தாயாக இருந்து தவித்த அவளது மனது இப்போது கீர்த்தனாவுக்காகவும் தவித்ததை நினைத்து நெகிழ்ச்சி அடைந்தான் முரளி.

கமாடி(யூ)ட்டியில் கலக்குவது எப்படி?- சோம. வள்ளியப்பன்

-->
ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!

கமாடிட்டியில் கலக்குவது எப்படி?

சோம. வள்ளியப்பன்

சென்னை தியாகராய நகரில் பல ஆண்டுகளாக அவருக்கு ஒரு ஸ்டேஷனரி கடை இருந்தது. சமீபத்தில் அவர் கடையில் பழங்களை விற்கத் தொடங்கினார். படிப்படியாக ஸ்டேஷனரி பொருட்கள் குறைந்து, கடையின் முழு வியாபாரம் பழம்ஆனது.
தெளிவாகக் காரணம் சொன்னார். நான் ஏன் கடை வைத்திருக்கிறேன்? வியாபாரம் செய்து லாபம் பார்க்கத்தானே? ஸ்டேஷனரியில் கிடைக்கலை. பழத்தில் கிடைக்கும் என்றார்கள். செய்து பார்த்தேன். சரியாக வருகிறது. இப்போது அதுதான்.
ஷேர் மார்க்கெட்டையும் சிலர் அப்படித்தான் பார்க்கிறார்கள். லாபம் பார்க்கத் தான் இந்த வர்த்தகமே தவிர வேறு என்ன? ஷேர் போலவே எளிதாக, பகுதிநேர வேலையாக, வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய வர்த்தகமான கமாட்டிட்டீஸ், இப்போது ஷேர் வர்த்தகம் செய்பவர்கள் இடையே பிரபலம்.
விலை ஏறும் முன்பாக வாங்கி, விலை உயர்ந்த பின் விற்று லாபம் பார்ப்பது மற்றும், விலை உயர்ந்து, இறங்க இருக்கும் தருவாயில் விற்று, விலை இறங்கிய பிறகு அதையே வாங்கி, அதன்மூலம் லாபம் பார்க்கிற இரண்டு வழிகளுமே, கமாடிட்டீஸ்சில் சாத்தியம்.
வேறுபாடு, வாங்கி விற்கப்படும் பொருள். அங்கே பல்வேறு நிறுவனங்களின் பங்குகள். இங்கே பல்வேறு மூலப் பொருட்கள். தங்கம், வெள்ளி, அலுமினியம், கச்சா எண்ணெய் மற்றும் விவசாய விளைபொருட்கள். பங்குகளை தேசியப் பங்குச்சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தையின் (BSE) தரகர்கள் மூலம் வாங்கலாம், விற்கலாம். கமாடிட்டிகளை மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) மற்றும் நேஷனல் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (NCDX)ன் தரகரின் மூலம் வாங்கலாம்; விற்கலாம்.

கமாடிட்டிகளைப் பெரும் பிரிவுகளாக இப்படிப் பிரிக்கலாம்: முதலாவது புல்லியன். இதில் தங்கம் மற்றும் வெள்ளி. இரண்டாவது மெட்டல்ஸ். இதில் காப்பர், அலுமினியம் போன்றவை அடங்கும். மூன்றாவது எனர்ஜி. இந்தப் பிரிவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை. நாலாவதாக விவசாய விளைபொருட்கள். மிளகு, மஞ்சள், பருப்பு வகைகள், உருளை கிழங்கு போன்றவை.
என்னது உருளைக்கிழங்குக் கூடவா என்று வியப்பாக இருக்கலாம். 15 நாட்களுக்குள் கெட்டுவிடும் பொருட்களுக்குத் தான் இங்கே அனுமதி இல்லை. உருளைக்கு உண்டு.
பங்குகளைப் போலன்றி, பொருட்கள் சந்தையில், ஒரே பொருளே, பல்வேறு அளவு (லாட் சைஸ்)களில் கிடைக்கும். உதாரணத்துக்கு மெகா கோல்டு 100 கிராம், கோல்ட் குனியா 8 கிராம். சாதாரண முதலீட்டாளர்களால் இவற்றையெல்லாம் வாங்க முடியுமா என்று சிலர் யோசிக்கலாம். பங்கு சந்தையின், பியூட்சர்ஸ் வர்த்தகம் போன்றதுதான் கமாடிட்டீஸ் வர்த்தகம்.
வாங்கும்போது மொத்தப் பணமும் கொடுக்க வேண்டாம். மார்ஜின் பணமாக ஒரு சிறிய தொகை கட்டினால் போதும். உதாரணத்துக்கு, ஒரு கிலோ வெள்ளி கடந்த வாரம் ரூ. 58000 விற்றது. 1 கிலோ வாங்க விரும்புகிறவர்கள் அதற்கு சுமார் ரூ. 3300 கட்டினால் போதும். அதன்பிறகு வெள்ளி விலை உயர்ந்தால், வாங்கியவர் மேற்கொண்டு எதுவும் தர வேண்டாம். விலை இறங்கினால் மட்டுமே, மேலும் சிறிது மார்ஜின் பணம் கட்ட வேண்டி இருக்கும்.

பங்கு சந்தையின் F & O போலத்தான். வாங்கிய மாதத்துக்குள் வாங்கியதை விற்றும் விற்றதை வாங்கியும் நேர்செய்து கொண்டு விட வேண்டும். பங்கு சந்தையில் F & O அதிகபட்சம் மூன்று மாதங்கள்தான். கமாடிட்டியில் ஆறு மாதங்கள்வரை உண்டு. F & O இறுதிநாள் பங்குசந்தையில் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை. கமாடிட்டீஸில் மாதத்தின் கடைசிநாள். அதுவும் பொருளுக்குப் பொருள் மாறுபடும்.
வாங்கி விற்றதற்கு தரகர் கமிஷன் உண்டு. ஆனால், பங்குச்சந்தை போல எஸ்.டி.டி. கிடையாது. சர்வீஸ் டேக்ஸ் உண்டு. கமாடிட்டிகளை வாங்கி வைத்திருந்து விற்று லாபம் பார்த்தால் வருமான வரி உண்டு. விரும்பினால் கமாடிட்டிகளை டெலிவரி எடுக்கலாம்.
தங்கம் என்றால் நான்கு வகைகள். மெகா என்பது 100 கிராம் தங்கம், மினி என்பது 10 கிராம். குனியா என்பது 8 கிராம். கமாடிட்டியில் 1 கிராம் தங்கத்தைக்கூட வாங்க முடியும். அதன் பெயர் பெட்டல் (இதழ்). ஒரு கிராம் தங்கம் வாங்க ரூ.200 மார்ஜின் போதும். வெள்ளியைப் பொறுத்த வரை மெகா என்பது முப்பது கிலோ. வெள்ளி மினி 5 கிலோ. வெள்ளி மைக்ரோ 1 கிலோ. இது தவிர சில்வர் 1000 என்ற ஒரு வகையும் உண்டு.
பங்குகள்போல ரோல் ஓவர்தான் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. விரும்பினால் டெலிவரி கேட்கலாம். அவர்கள் குறிப்பிடும் இடங்களில் டெலிவரி பெற்றுக் கொள்ளலாம். சில தரகர்களிடம் மட்டும் இந்த வசதி இருக்கிறது.

பங்குகளுக்கு வர்த்தகக் கணக்கு தொடங்குவது போலவே, கமாடிட்டிக்கும் தனியாகக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். வழக்கமான தேவைகள்தான். வருமான வரி கணக்கு, முகவரி அட்டை, வங்கிக் கணக்கு போன்றவை.
பங்குகளை விட்டுவிட்டு ஏன் கமாடிட்டியில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரலாம். இவையும் வர்த்தகப் பொருட்கள். இவற்றிலும் விலை ஏற்ற இறக்கங்கள் உண்டு. வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான்.
பங்கு வர்த்தகமும் செய்யலாம். கூடவே கமாடிட்டியிலும் செய்யலாம். ஒரே தரகர் இரண்டு வகையிலும் உதவ முடியும். கமாடிட்டியில் வர்த்தக நேரம் அதிகம். பங்குகள், பங்குச் சந்தைகள், தரகர்கள், செபியின் (SEBI) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள். கமாடிட்டியினர் பார்வர்டு மார்க்கெட் கமிஷனால் கண்காணிக்கப் படுபவர்கள்.
கமாடிட்டியில் அன்னிய நேரடி முதலீட்டாளர் (FIIக்கள்) கிடையாது. இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பெரும்பாலான பெரிய ஊர்களில் கமாடிட்டி வர்த்தகம் செய்ய முடியும். தரகர்கள் இருக்கிறார்கள். தவிர, வீட்டில் இருந்தபடியே இணையம் மூலமும், ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம்.
கமாடிட்டி என்பது எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் பொருள் அல்ல. பங்குகள்போல ஒரு நிறுவனத்தின் லாப நட்டங்களைப் பொறுத்து விலை மாற்றம் அடைவது இல்லை. பெரும்பாலானவை உலகளாவிய பொருட்கள். உதாரணத்துக்கு, தங்கமும் கச்சா எண்ணெயும்.

சிலர் பங்கு விலைகளில் விளையாடுவதைப் போல, எவராலும் இப்படிப்பட்ட பொருட்களை வாங்கிக் குவித்து, விலையேற்றவோ, தொடர்ந்து விற்று விலை இறக்கவோ முடியாது.
இந்தப் பொருட்களின் தேவைகளை எவரும் தனியாகவோ, கூட்டுச் சேர்ந்தோ பெரிய அளவுகளில் மாற்ற முடியாது. அதனால் மிகப் பெரிய வீழ்ச்சிகள், ஏற்றங்கள் நிகழ்வது அரிது. (முன்பு ஒருமுறை வெள்ளியில் நடந்திருக்கிறது.)
சில பங்குகளின் விலைகள் ஒரேயடியாக எழுபது, எண்பது சதவிகிதம் எல்லாம் விழுந்து ரூபாய்க்கு 20, 30 காசுகள் மதிப்புள்ளவையாக ஆகி விடுவதுபோல கமாடிட்டிகளில் ஆகும் வாய்ப்பு மிகக் குறைவு.
கமாடிட்டிகளில் டிவிடெண்ட் கிடையாது. வாங்கினோம். தூக்கி உள்ளே வைத்தோம் என்று நீண்ட காலத்துக்கு விட முடியாது. டெலிவரி எடுத்தால்தான் அப்படிச் செய்ய முடியும்.
கமாடிட்டியிலும் பணம் பண்ணலாம். அதை புரிந்து கொண்டு, சரியான முடிவுகள் எடுத்தால்.