Showing posts with label எழுத்து. Show all posts
Showing posts with label எழுத்து. Show all posts

Wednesday, January 05, 2011

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் 2

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfaWtp6YYKUgMoIcSDTaKQqc_cm0aIF_a34-SMkAX_p2jKno8RN1x-zUuvxfDgRImLdLXyIO7fHL5jrcNm-k6K3gi5g3a-VrrPrcnoeR0lDd6yUcyUDwpmoJscx9fzjh1BZF8w5ddBn-I/s200/vikatan.jpg 
கோடம்பாக்கத்திலும் சரி,இலக்கியவாதிகள்,படைப்பாளிகள்,எழுத்தாளர்கள்,வாசகர்கள் வட்டத்திலும் சரி ஆனந்த விகடனில் ஒரு படைப்பு வருகிறது என்றால் அதற்கு கிடைக்கும் 
மரியாதையே தனி.எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டம் ஆனந்த விகடனின் பொற்காலம் எனலாம்.மற்ற இதழ்களில் 10 ஜோக்ஸ் வருவதும் ஆனந்த விகடனில் ஒரு ஜோக் வருவதும் ஒன்றுதான்.

அதே போல் கவிதைகள் கணையாழி இதழில் வந்தால் பெருமைதான் என்றாலும் ஆனந்த விகடனில் வந்தால் 8 லட்சம் வாசகர்களை அது சென்றடைகிறது என்பதால் அதன் வீச்சு அதிகம்.

படைப்பு அனுப்பி 7 நாட்களில் பரிசீலித்து பிரசுரம் செய்து விடுகிறார்கள் என்பது மற்ற பத்திரிக்கைகளோடு ஒப்பிடுகையில் செம ஸ்பீடு.வாரா வாரம் வியாழன் அன்று விகடன் வருகிறது என்றால் நாம் புதன் கிழமை ஒரு படைப்பை அனுப்பினால் அது பிரசுரிக்க தகுதி பெற்றால் அடுத்த வியாழன் அன்று பிரசுரம் ஆகி விடும்.

முகவரி - ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை,சென்னை 600008. மெயில் அட்ரஸ் [email protected]

1.ஜோக்ஸ் - அந்தந்த வாரத்தில் டாப்பிக்கல் மேட்டர் என்ன என்று பாருங்கள்.அதை நையாண்டி செய்து எழுதுங்கள்.அரசியல் நையாண்டிகளுக்கு முன்னுரிமை தருவார்கள்.டாக்டர் ராம்தாஸ்,கலைஞர், ஜெ ,கேப்டன் இவர்களது அறிக்கைகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள்.(அதுவே செம காமெடியாக இருக்கும் )அதை நக்கல் அடித்து எழுதினால் போதும்.உதாரணத்துக்கு ஆ ராசா மேட்டர் பாப்புலர் ஆன வாரத்தில் ஜோக்பாட் அந்தஸ்துடன் ரூ 300 பரிசு பெற்ற  ஒரு ஜோக் 

என் பையனை ராசா மாதிரி வளர்க்கப்போறேன்..

வேணாம்ங்க.. நல்ல படியா வளருங்க..

மேட்டர் ரொம்ப சிம்ப்பிளாகவும், சுருக்கமாகவும், சொல்ல வந்த கருத்தை நச் என சொல்லி இருப்பதையும் பாருங்கள்.தனி மனித அந்தரங்க தாக்குதல்கள் இல்லாமல் பொது வாழ்க்கை பற்றி மட்டும் எழுதுங்கள்.ஏ ஜோக்குகள்,வக்கிர எழுத்துக்கள் இவற்றை தவிர்க்கவும்.உத்வேகத்துடன் எழுத வேண்டும்.ஒரு ஜோக்கிற்கு ரூ 100 சன்மானம் தர்றாங்க.இதில் என்ன காமெடி என்றால் ஆனந்த விகடன் ரூ 6 என விற்கப்பட்ட போதும் சன்மானம் ஒரு ஜோக்கிற்கு ரூ 50 என தந்தார்கள்.இரண்டரை மடங்கு விலை ஏறிய பிறகு விலை ஏற்ற மற்றும் விகிதாச்சார முறைப்படி பார்த்தால் ரூ 250 தர வேண்டும். ஆனால் அப்படி எல்லா, காசை கணக்கு பார்த்து எழுதினால் முன்னேற முடியாது.

நமது படைப்பு பிரசுரம் ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் எழுத வேண்டும்.பொதுவாக ஒரு துறையில் நாம் இறங்கி வெற்றி பெற வேண்டும் எனில் அதே துறையில் வெற்றி பெற்ற மற்ற சாதனையாளர்களை கவனிக்க வேண்டும்.காப்பி அடிக்க அல்ல. இன்ஸ்பைரேஷனுக்காக. 
ஆனந்த விகடனில் ஜோக் எழுதி சாதனை படைத்தவர்கள் 3 பேர்.
1. ஹாய் மதன்.  2 படுதலம் சுகுமாரன் 3 . வி சாரதிடேச்சு

முன்ஜாக்கிரதை முத்தண்ணா,சிரிப்புத்திருடன் சிங்காரவேலு போன்ற தலைப்புகளில் மதனின் ஜோக்குகள் பக்கம் பக்கமாக வந்து ஹிட் ஆனது. இவருக்கு கார்ட்டூன் போட வரும் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.ஆனால் நாம் ஜோக் மட்டும் கார்டில் எழுதி அனுப்பினால் போதும் .ஒரு கார்டுக்கு 2 ஜோக் மட்டும் எழுதவும்.எழுதி கீழே உங்கள் பெயர் ,ஊர் பெயர் எழுதவும்,பின் பக்கத்தில் அட்ரஸ் எழுதவும்.ஊரின் மெயின் போஸ்ட் ஆஃபீசில் போஸ்ட் செய்யவும்.

எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் ஆனந்த விகடனில் வந்த அட்டைப்பட ஜோக்கிற்காக அதன் ஆசிரியர் ஒரு நாள் சிறையில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க ஜோக்கை எழுதி புகழ் பெற்றவர் படுதலம் சுகுமாரன்,

வி சாரதி டேச்சு வார்த்தை ஜால ஜோக் எழுதுவதில் கில்லாடி.ஒரு சாம்ப்பிள்.,
நானும் ,ரஜினியும் ஒரே இலைலதான் சாப்பிட்டோம்.

நிஜமாவா? அவ்வளவு நெருக்கமா?

ம்ஹும்,அவரும் வாழை இலைலதான் சாப்பிட்டார்,நானும் வாழை இலைலதான் சாப்பிட்டேன்.

நீங்க 10 ஜோக் எழுதுனா அதை உங்க நண்பர்கள்,நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஏன்னா நாம எது எழுதுனாலும் நம்ம மனசுக்கு அது பிரமாதம் என்றுதான் தோன்றும்.மற்றவர்கள் சொல்வதே சரியாக இருக்கும்..

டாக்டர்கள் ஜோக்,சினிமா சம்பந்தப்பட்ட ஜோக் ஈசியா செலக்ட் ஆகும்.சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைக்கண்டு நாம் பொங்கி எழுவோமே,அந்தக்கோபத்தைக்கூட ஜோக்காக மாற்றலாம். 2 பக்க கட்டுரையை விட 2 வரி ஜோக்கின் வீரியம் அதிகம்.

ஒரு பத்திரிக்கையை வாங்கினால் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி பிடிக்கும்,ஆனால் எல்லோருக்கும் பிடித்த பகுதி ஜோக் தான்.சிந்திக்க ,எழுத எல்லாத்துக்கும் ஜோக்தான் பெஸ்ட்.

ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதி வந்தேன்..அது மக்களை போய் அதிகம் ரீச் ஆகவில்லை(ஒரு வேளை எனது சரக்கு சரி இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்)பிறகுதான் என் ரூட்டை மாற்றினேன்.

ஆனந்த விகடனில் வந்த எனது முதல் ஜோக்

ஜட்ஜ் - பஸ்ல மணிபர்சை  பிக்பாக்கெட்அடிச்சியா?

கைதி - மணி பர்சை பாலு அடிச்சான்,கந்தசாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்.

ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வந்த எனது முதல் ஜோக்

என் ரத்தத்தின் ரத்தமே அப்படின்னு மேடைல பேசுனது தப்பா போச்சு.

ஏன் தலைவரே?

கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு.

2. கவிதை 

ஆனந்த விகடனில் கவிதை எழுதி வரவைப்பதும் ,அரசியல்வாதியை நேர்மையாக நடக்கவைப்பதும் ஒன்றுதான். மிக அரிது. ஆனால் ஆதலையூர் சூர்யகுமார்,நாவிஷ் செந்தில்குமார்,டி அய்யப்பன் போன்றவர்கள் சர்வசாதாரணமாக கலக்கி வருகிறார்கள். ஒரு பக்க கவிதைக்கு ரூ 300 தர்றாங்க. கவிதையின் சைஸை பொருத்து ரூ 100 ,  ரூ 200 என மாறும்.

ஏ4 வெள்ளைத்தாளில் எழுதி கவரில் வைத்து அனுப்பவும்.காதல் கவிதைகள் எழுதுவதை விட வித்தியாசமான அனுபவங்கள், சமூக அவலங்கள்,பெண்கள் மனது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட கவிதைகள் அதிகம் வருகிறது.

3. சிறுகதை - முன்பெல்லாம் விகடனில் 4 கதை வந்தது.இப்போ ட்ரெண்ட் மாறிடுச்சு. கதையை யாரும் விரும்ப்பி படிக்கறதில்லை,பொறுமையும் இல்லை.மேம்போக்காக புரட்டுவதே  ஃபேஷன் ஆகிடுச்சு. ஏ4 ஷீட்டில் 8 பக்கம் வரும்படி எழுதினால் விகடனில் 3 பக்கம் வரும்படி அமையும். 2 மாதம் கழித்து வரும் (செலக்ட் ஆனா) . நீங்கள்  படைப்பு அனுப்பி 1 மாதத்தில் உங்களுக்கு தகவல் வந்துடும். உங்க கத செலக்ட் ஆகி இருக்கு. இந்த கதை வேறு புக்குக்கு அனுப்பலை, என் சொந்தக்கற்பனையே என உறுதி மொழிக்கடிதம் கேட்டு வாங்கிக்கொள்வார்கள்.
பொதுவாக விகடனில் கட்டுரைகள் எழுத உள்ளேயே ஆள் இருக்காங்க. அதனால அதை விட்டுடுங்க. இப்போ புதுசா அலை பேசுதே என்ற பகுதியில் ட்விட்டரில் நம் மக்கள் ட்வீட்டுவதை போடறாங்க, இதில் சாதனை படைக்கும் அளவு படைப்புகள் வந்தது பரிசல்காரன் கிருஷ்ணகுமார், திருப்பூர்.இவரை எனக்கு 15 வருடங்கள் முன்பே தெரியும். மாத இதழ்களில் கவிதையில் கலக்கியவர். கே பி கிருஷ்ணகுமார் திருப்பூர் என வரும், பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் ஊஞ்சல் மாத இதழில் பின்னி எடுத்தார்.
சிலர் பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும்போது எடிட்டருக்கு கவரிங்க் லெட்டர் வைத்து அனுப்புவது உண்டு. டியர் சார் ஒரு கவிதை அனுப்பி இருக்கேன் ,தயவு செஞ்சு பிரசுரிக்கவும்  என இருக்கும் இது தேவை இல்லாதது. அதே போல் பத்திரிக்கைக்கு ஃபோன் போட்டு சார் நான் அனுப்புன மேட்டர் வந்துச்சா? செலக்ட் ஆச்சா? எனவும் கேட்க வேண்டாம் . 

தகுதி உடைய படைப்புகள் தானாக தேர்வு பெறும். ஆர்வக்கோளாறில் நம் தகுதியை இழக்கக்கூடாது.

வலைப்பூக்கள் நடத்தும் பதிவர்கள் அனைவரும் பத்திரிக்கை உலகை கலக்க வேண்டும் என்பதே என் ஆசை.ஏன் எனில் பதிவுலகம் அதிக பட்சம் 10,000 பேர் படிக்கறாங்க. அதிலும் நம்ம எழுத்தை எல்லாம் அதிக பட்சம் 2000 பேர்தான் படிக்கறாங்க. ஆனால் பத்திரிக்கை யில் எழுதினால் அது குறைந்தபட்சம் எட்டு லட்சம் மக்களை சென்றடைகிறது என்பதை மறக்க வேணாம்.மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

டிஸ்கி - 1. அடுத்த வாரம் என்றதும் அப்பாடா ,பிளாக் 6 நாள் லீவா?தப்பிச்சோம்டா சாமி என யாரும் மனப்பால் குடிக்கவேண்டாம் (அதென்ன மனப்பால்?மன டீ ,மன காப்பி எல்லாம் கிடையாதா?) இந்தத்தொடர் அடுத்த வாரம் மீண்டும் வரும் , மற்றபடி எனது மொக்கை ஜோக்குகள்  தினமும் தொடரும்

டிஸ்கி 2 - சிலர் என்னை வம்புக்கு இழுத்து பதிவு போடறாங்க,நான் கோபப்பட்டு பதிலடி கொடுப்பேன்,பதிவுலகில் அடுத்த சண்டையை ஆரம்பிப்போம் என ,அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது சாரி எனக்கு சண்டை போடத்தெரியாது,மொக்கை பதிவுகளை மட்டுமே எழுத தெரியும்.எந்த எழுத்து நல்ல எழுத்து என்பதை காலம் தீர்மானிக்கும்.