Showing posts with label எப்படி இப்படி. Show all posts
Showing posts with label எப்படி இப்படி. Show all posts

Monday, September 21, 2015

எனக்காக ஒரு கொலை செய்வாயா?''-பட்டுக்கோட்டை பிரபாகர்

பல குற்ற வழக்குகளில் குற்ற வாளியைக் கண்டுபிடிக்க காவல் துறை பல வருடங்கள் பல விதமாக போராடும். கடைசியில் ஒரு சின்ன தடயம் குற்றவாளியை நோக்கி விரல் நீட்டும்.
அதே போல தடயவியல் துறை வளர்ச்சி அடையாத அல்லது அப்படி ஒரு துறையே தொடங்கப்படாத காலங் களில் நிகழ்ந்த பல குற்றங்கள் கடைசி வரை கண்டுபிடிக்கப்படாமல், அதன் கோப்புகளை பரணில் போட்டுவிடுவார் கள். இப்படிப்பட்ட வழக்குகளை ‘கோல்ட் கேசஸ்’ (cold cases) என்பார்கள்.
அப்படி கிடப்பில் போடப்பட்ட பல பழைய வழக்குகள் தடயவியல் துறை நவீனமடைந்த பிறகு, தூசி தட்டப்பட்டு பல பத்தாண்டுகள் கழித்தும் குற்றாவாளி களைத் தேடிப் பிடித்துத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு வழக்கைப் பற்றிப் பார்க்கலாம்.
லண்டனில் ஃப்ரெட் - சார்கலாட்டி கிராப் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதி. முதலில் மண வாழ்க்கை மேகம் ஒன்பதில்தான் மிதந்து கொண்டிருந்தது. போகப் போக சர்க்கரை போடாத காபியாக கசக்கத் தொடங்கியது. அடிக்கடி வாக்குவாதம். சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்கள் தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.
விவகாரம் விவாகரத்து வரை சென்றது. பிரிந்த பிறகு இரண்டு பேருக்கும் மனசாட்சியின் உறுத்தல். ‘‘காதலித்தோமே.. அந்தக் காதலுக்கு என்ன அர்த்தம்?’’ என்று தனித்தனி யாகப் புழுங்கினார்கள். மீண்டும் சந்தித் தார்கள். மனம்விட்டுப் பேசினார்கள். விவாகரத்தை ரத்து செய்துவிட்டு மீண் டும் திருமணம் செய்துகொண்டார்கள். இது சிறுகதையாக இருந்தால் இத் துடன் சுபம்.
ஆனால், கதை முடியவில்லை. கொஞ்ச நாட்கள் போனதும் மீண்டும் அவர்களுக்குள் தகராறு. சென்ற முறை யார் விட்டுக் கொடுப்பது என்கிற ஈகோ பிரச்சினை. இந்த முறை, பிரச்சினைக்குக் காரணம் இன்னொரு பெண். விவாக ரத்து ஆகி பிரிந்து இருந்தபோது ஃப்ரெட்டுக்கு முளைத்த ஒரு காதல் ரகசியமாக தொடர்வதை ஒரு மனைவி எப்படி அனுமதிப்பாள்?
ஒரு நல்ல காலைவேளையில் சார் கலாட்டி வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் வீட்டை விட்டுச் சென்றதை, தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சொல்லி அவளை சமாதானப்படுத்தச் சொன்னான் ஃப்ரெட்.
ஆனால், யாராலும் அவளைத் தொடர்புகொள்ள முடிய வில்லை. அவள், தான் இருக் குமிடத்தை யாரிடமும் சொல் லாமல் எங்கோ சென்றுவிட் டாள். புதிய காதலியுடனும் ஒன்றமுடியாமல், மனைவியை யும் மறக்க முடியாமல் தினம் புழுக்கத்துடனேயே ஃப்ரெட் வாழ்ந்து வருகிறான் என்று இங்கேகூட கதையை முடிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், உண்மைக் கதை இன் னும் முடியவே இல்லை. எங்கோ சென்றுவிட்ட மனைவியை அவளது தோழியான கார்லி ரோஸ்லின் விடாமல் தேடிக் கண்டுபிடிக்க முயன்றாள். ஃப்ரெட்டை சந்தித்து பல முறை விசாரித்தாள். ‘அதெப்படி ஒரு சின்ன தகவல்கூட இல்லாமல் ஒரு பெண் தொலைந்து போக முடியும்?’ என்று அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தோழி ஃப்ரெட்டின் புதிய காதலியான விண்ட்லா மேரியை தனிமையில் சந்தித் தாள். ‘‘எனக்கு ஃப்ரெட் மேல் சந்தேக மாக இருக்கிறது. அவன்தான் அவளை ஏதாவது செய்திருக்க வேண்டும்’’ என்று சொன்னாள்.
‘‘ஒருவேளை உன் புதிய காதலுக் காக தன் காதல் மனைவியை அவன் கொலை செய்திருந்தால், நாளைக்கு இன் னொரு பெண்ணுக்காக உன்னையும் அவன் கொலை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம்?’’ என்று கார்லி ரோஸ் லின் கேட்ட கேள்வி விண்ட்லா மேரியை சிந்திக்க வைத்தது. அவளுக்குள் உயிர் பயத்தை விதைத்தது. இருவரும் உண்மையைக் கண்டுபிடிக்கத் தீர் மானித்து ஒரு திட்டம் வகுத்தார்கள்.
ஃப்ரெட்டை ஒரு விடுமுறைக்கு ஒரு படகு வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் மேரி. அவனுக்கு நிறைய மது ஊற்றிக் கொடுத்தாள். தன்னுடன் சரசமாட அனு மதித்தாள். அவன் இரண்டு விதமான மயக்கத்தில் இருந்தபோது மெதுவாக ஆரம்பித்தாள்.
‘‘நீ எனக்காக எது வேண்டுமானாலும் செய்வாயா?''
’’நிச்சயமாக செய்வேன்!''
‘‘எனக்காக ஒரு கொலை கூட செய்வாயா?''
‘‘ஏற்கெனவே உனக் காக ஒரு கொலை செய்து விட்டேன் கண்ணே…'' என்று அவன் உளறி விட்டான்.
அவள் அதிர்ச்சியில் உறைந்துபோனாள். தன் அதிர்ச்சியை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, அவன் செய்கைக்கு மகிழ்ந்தவள்போல காட்டிய படியே ‘‘எப்படிக் கொலைசெய்து, பிணத்தை எப்படி அப்புறப்படுத்தினாய்?’’ என்று கேட்டாள்.
‘‘ஊருக்கு வெளியே இருந்த ஒரு காட்டுப் பகுதிக்கு பிக்னிக் அழைத் துச் சென்று, தனிமையான ஓர் இடத் தில் அவள் கழுத்தை நெரித்துக் கொன்றேன். பிறகு, தயாராக வாங்கிச் சென்ற பெட்ரோலை அவள் சடலத்தின் மீது ஊற்றி எரித்தேன். பொறுமையாகக் காத்திருந்து ஒரு எலும்புத் துண்டைக்கூட விட்டுவைக்காமல் பொறுக்கி எடுத்து, ஆற்றில் வீசிவிட்டேன். அதன் பின்னர் மனைவி கோபித்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டதாக எல்லோரிடமும் சொன் னேன்’’ என்று நடந்ததை சொன்னான் ஃப்ரெட்.
மேரியும், ரோஸ்லினும் காவல் துறைக்குச் சென்று ஓர் போலீஸ் அதி காரியை அணுகி எல்லாவற்றையும் சொன்னார்கள். அவனே ஒப்புக்கொண்டி ருந்தாலும் ஆதாரம் தேவைப்பட்டது. கொலை நடந்த காட்டுப் பகுதிக்குச் சென்றுத் தேடினார்கள்.
கொலை நடந்த வருடம் 1981. உண்மை வெளிப்பட்ட வருடம் 1990. ஒன்பது ஆண்டுகள் ஆனதால் எந்தத் தடயமும் போலீஸுக்குக் கிடைக்கவில்லை. அதே போல எலும்புத் துண்டுகள் வீசப்பட்ட ஆற்றிலும் தேடினார்கள். எதுவுமே கிடைக்கவில்லை.
கைது செய்து அதிரடியாக விசாரிக்க முடிவுசெய்து, ஃப்ரெட்டைக் கைது செய்தார்கள். ‘‘மேரியிடம் அப்படி நான் எதுவும் சொல்லவே இல்லை. தற்போது மேரிக்கும் எனக்கும் சில பிரச்சினைகள். அதனால் என்னைப் பழிவாங்க இப்படிப் பொய் சொல்கிறாள்’’ என்று சாதித்தான்.
அவன் சொல்வதுதான் பொய் என்பது புரிந்தாலும் அதை நிரூபிக்க முடியாமல் போலீஸார் தவித்தார்கள். அந்தக் காவல் அதிகாரி கொலை நடந்த காட்டுப் பகுதியில் மீண்டும் மீண்டும் சுற்றி வந்தார். ஒரு விஷயம் மட்டும் அவரை ஈர்த்தது.
கொலை நடந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு மரம் மட்டும் வளர்ச்சி குறை வாக இருப்பதைப் பார்த்தார். தடயவியல் துறை, விவசாய விஞ்ஞானிகளுடன் களமிறங்கியது. வளர்ச்சி குன்றிய மரத்தை சோதனை செய்தார்கள். பெட்ரோலியப் புகை படிந்ததால் குறிப் பிட்ட அந்த ஒரு மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த ஆராய்ச்சி முடிவு மற்றும் மேரி யின் வாக்குமூலம் இவற்றின் அடிப்படை யில் கொலை செய்யப்பட்டவரின் உடல் இல்லாமலேயே சந்தர்ப்ப சாட்சியங் களின் அடிப்படையில் ஃப்ரெட்தான் கொலைகாரர் என்று கோர்ட் தீர் மானித்து, 75 வருடங்கள் சிறைத் தண்டனை அளித்தது.
இதனால் ஃப்ரெட் ஒரு பாடம் கற்றுக் கொண்டிருப்பான். இனிமேல் கொலை செய்தால் பிணத்தை எரிக்கும்போது மரங்கள் இல்லாத பகுதியில் வைத்து எரிக்க வேண்டும் என்று. ஆனால், நவீன தடயவியல் துறையின் முன்னேற்றத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியும் என்பதே உண்மை!
- வழக்குகள் தொடரும்…


நன்றி-தஹிந்து

Tuesday, September 15, 2015

கள்ளக்காதல்கொலைவழக்கு-பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘சந்தேகத்தின் பலனை சாதக மாக்கி அவரை விடுதலை செய் கிறேன்!’’ என்று தீர்ப்பு வாசித்து விட்டு, கண்ணாடியைக் கழற்றும் நீதிபதி களைப் பல திரைப்படங்களில் பார்த்திருப் பீர்கள். டெல்லியில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீஸ் 3 வருடங்கள் துப்பறிந்து, 4 குற்றவாளிகளைக் கைது செய்து, 5 வருடங்கள் வழக்கு நடத்தி, ஆயுள் தண்டனை என்று தீர்ப்பான பிறகு, உயர் நீதிமன்றம் ‘சந்தேகத்தின் பலனை…’ என்று ஆரம்பித்தது. அந்தத் தீர்ப்பு சமூக போராளிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் பின்னணி என்ன?
1999-ம் வருடம் ஜனவரி 23-ம் தேதி. டெல்லியில் தன் அடுக்கு மாடி குடியிருப் பின் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து காத்திருந்தார் ராகேஷ் பட்னாகர். பிறகு தன்னிடம் இருந்த சாவியால் திறந்து உள்ளேச் சென்றுப் பார்த்து அலறினார். உள்ளே அவர் மனைவி ஷிவானி பட்னாகர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொட்டிலில் அவர்களின் இரண்டு மாதமே ஆன குழந்தை அழுதுகொண்டிருந்தது.
போலீஸ் வந்து தடயங்களை சேகரித்து விட்டு ‘‘விசாரித்து குற்றவாளியைப் பிடிப்போம்’’ என்று பேட்டியளித்து விட்டுச் சென்றது. இந்தக் கொலை செய்திக்கு மீடியாக்களில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. காரணம்… கொலை செய்யப்பட்ட ஷிவானி, பிரபல பத்திரிகையின் சீனியர் பத்திரிகையாளர்.
கூலிப் படை வைத்து ஷிவானியின் கணவரே கொலையை நடத்தியிருக் கலாம் என்றும் யோசித்தது. ராகேஷ் 70 முறை விசாரிக்கப்பட்டார். ஆனால், அவரைக் கைது செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
3 வருடங்கள் விசாரித்து, 2002-ம் வரு டம் 3 பேரை கைது செய்தது போலீஸ். அந்த 3 பேரும் கூலிப் படையைச் சேர்ந் தவர்கள் என்பதும், இந்தத் திட்டத்தின் மூளையாக செயல்பட்டது ஒரு பெரிய போலீஸ் அதிகாரி என்பதும் தெரியவர, காவல்துறை ஆடிப் போனது.
ரவிகாந்த் ஷர்மா ஒரு ஐ.பி.எஸ் அதி காரி. ஹரியாணாவைச் சேர்ந்த அவர் சிறைத்துறை ஐ.ஜியாக பணியாற்றிய வர். பிரதம மந்திரியின் பாதுகாப்புப் பணி அதிகாரியாகவும் இருந்தவர்.
தகுந்த ஆதாரங்கள் இருந்ததால் ஷர்மாவை கைது செய்ய ஹரியாணா வில் உள்ள அவர் இல்லத்துக்கு போலீஸார் சென்றபோது ஷர்மா தலை மறைவானார்.
ஷர்மா வேலையில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி போலீஸ் அறிவித்தது. அவரைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50,000 தரப்படும் என்று புகைப்படத்துடன் அறி விப்பு வெளியிட்டது. ஆனால் ஷர்மா தலைமறைவாக இருந்தபடி பாட்னா கோர்ட்டிலும், டெல்லி கோர்ட்டிலும் 3 முறை முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித் தார். மூன்று முறையும் முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஷர்மா போலீஸில் சரணடைந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றங்களையும் மறுத்தார்.
போலீஸ் விசாரணைக்கு ஷர்மா ஒத்துழைக்கவில்லை. உண்மை கண் டறியும் லை டிடெக்டர் சோதனைக்கு மருத்துவக் காரணங்களை முன்வைத்து உட்பட மறுத்தார். என்னதான் நடந்தது?
ஷிவானி தன் பத்திரிகை அலுவல் தொடர்பாக பிரதமர் இல்லம் சென்ற போது ஷிவானிக்கு ஷர்மா அறிமுக மானார். அந்த அறிமுகம் நட்பாக மாறி யது. அடிக்கடி டெல்லியின் சில உணவு விடுதிகளில் சந்தித்துக் கொண்டார்கள். (குறிப்பிட்ட அந்த விடுதிகளுக்கு ஷிவா னியை நானே டிராப் செய்திருக்கிறேன். உள்ளே அவள் யாரை சந்திக்கப் போனாள் என்பது எனக்குத் தெரியாது என்றார் ராகேஷ்.)
ஷர்மா டெல்லி வரும்போதெல்லாம் எந்த ஓட்டலில் தங்குவாரோ அங்கு ஷிவானி சென்று சந்தித்திருக்கிறார். (ஷர்மா டெல்லியில் ஓட்டலில் தங்கிய அதே தேதிகளில் ஷிவானி அந்த ஹோட்ட லுக்கு டாக்ஸி பிடித்துச் சென்ற ஆதா ரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.)
ஷிவானியை 3 மாத ஜர்னலிஸம் படிப்புக்காக பத்திரிகை நிறுவனமே லண்டன் அனுப்பி வைத்தது. திரும்பும் போது சில தினங்கள் தாமதித்து சொந்த செலவில்இந்தியா திரும்பினார். டிக்கெட் செலவுக்கு என்ன செய்தாய் என்று ஒரு தோழி கேட்டபோது, ‘‘ஏர் இந்தியாவில் இருக்கும் நண்பர் டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்’’ என்றார்.
ஷிவானி லண்டனில் இருந்தபோது தன் போனில் இருந்து ஷர்மாவை 176 முறை அழைத்துப் பேசியிருக்கிறார். அதேப் போல அந்த மூன்று மாதங் களில் ஷர்மா தன்னுடைய போனில் இருந்து ஷிவானியை 90 முறை அழைத் துப் பேசியிருக்கிறார். (இதற்கான ஆதா ரங்கள் கோர்ட்டில் வழங்கப்பட்டன)
ஷிவானி தன் அந்தரங்கத் தோழியிடமும், தன் தங்கை செவந்தியிட மும் தனக்கும் ஷர்மாவுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பற்றிச் சொன்னதோடு, இருவரும் அவரவர் துணைகளை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக இருக் கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். பிறகு ஒருநாள் இருவரிடமும் ஷர்மா தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதால் எங்கள் உறவைப் பற்றி நான் சமூகத்துக்கும் அவர் மனைவிக்கும் தெரியப்படுத்தப் போகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். (ஷிவானியின் தோழி, தங்கை இருவரும் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொன்னார்கள்)
ஷிவானியின் அலுவலகத்தில் அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரை இயக்கு வதற்கான பாஸ்வேர்டு ‘ரவிகாந்த்’ என் பதாகும். (இதுவும் நிரூபிக்கப்பட்டது)
இதற்கிடையில் ஷர்மாவின் மனைவி தினமும் தொலைக்காட்சிகளில் தோன்றி, தன் கணவர் குற்றமற்றவர் என்றும், ஒரு அரசியல்வாதியை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக தன் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்றும் பேட்டி கொடுத்தார். அந்த அரசியல்வாதிக்கும் ஷிவானிக்கும் நட்பு உண்டு, அவர்தான் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்க வேண்டும் என்று கண்ணீருடன் குறறம்சாட்டினார்.
கோர்ட்டில் பரபரப்பாக நடந்த விசாரணையின்போது மொத்தம் 209 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். அதில் 51 பேர் போலீஸில் முதலில் சொன்ன வாக்குமூலத்துக்கு எதிராக மாற்றி சாட்சி அளித்தார்கள்.
2008-ம் வருடம் ஷர்மாவும் மற்ற மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அனைவருக்கும் ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே ஷர்மா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார்.
இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து 2011-ம் வருடம் ஷர்மா வும் மற்ற இருவரும் குற்றவாளிகள் இல்லையென்றும், பிரதீப் என்பவர் மட்டுமே குற்றவாளி என்றும் தீர்ப்பளித் தது. 9 வருடங்கள் திகார் ஜெயிலில் இருந்த பிரதீப் விடுதலையானார். உயர் நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள், ‘‘கீழ்க் கோர்ட்டில் பல ஆதாரங்கள் சரியில்லை. அடிப்படையான சந்தேகத்தை மட்டும் வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்கள்.
அரசுத் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக தெரிவித்தாலும், இந்தத் தீர்ப்பு விமர்சனத்துக்கு ஆளா னது. சுப்ரீம் கோர்ட் வக்கீல் அசோக் அரோரா பலவிதமான கேள்விகளை எழுப்பினார்.
வழக்கின் நடுவில் அரசுத் தரப்பின் வக்கீல்கள் மாற்றப்பட்டது ஏன்? 4 குற்றவாளிகளில் ஒருவருக்கு அளிக் கப்பட்ட தீர்ப்பை மட்டும் உறுதி செய்தது ஏன்? குற்றவாளியான பிரதீப் இந்த கொலையில் ஈடுபட சரியான காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். பிறகு அவர் எப்படி குற்றவாளியாவார்? ஷர்மா குற்றம் செய்யாதவர் என்றால் எதற்காக தலைமறைவானார்? அவருக்கும் ஷிவா னிக்கும் நெருக்கமான தொடர்பு இல்லை என்றால் லண்டனில் இருந்தபோது இருவரும் அத்தனைஅழைப்புகளில் ராக்கெட் விஞ்ஞானம் பற்றிப் பேசினார் களா? இப்படி அவரும் மற்றும் பலரும் கேட்கும் கேள்விகள் தொடர்கின்றன. திடீரென்று ஒரு அபூர்வ சக்தி கிடைத்து கையில் தராசுடன் நிற்கும் நீதி தேவதை பேசத் தொடங்கினால் ஒருவேளை சரியான பதில்கள் கிடைக்கலாம்.
- வழக்குகள் தொடரும்
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

நன்றி-த இந்து

Thursday, September 03, 2015

சாமியாரின் ஆள்மாறாட்ட வழக்கும், லீலைகளும் -பட்டுக்கோட்டை பிரபாகர்

வழக்கமாக ஒருவர் இன்னொரு வராக நடித்து ஆள் மாறாட்டம் செய்வார். பல ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் ஒரு வழக்கில் குமார் என்கிற ஒருவர் ‘நான்தான் குமார்’ என்று நிரூபிக்க பல வருடங்கள் நீதிமன்றங்களில் போராடினார்.
1909-ம் வருடம் அந்த சம்பவம் நடந்தது. அப்போது இந்தியாவுடன் சேர்ந்திருந்த பங்களாதேஷில் டாக்கா நகரத்துக்கு அருகே 2,300 கிராமங்களை உள்ளடக்கிய பாவல் என்கிற ஜமீன் இருந்தது. அதன் தலைநகர் ஜெய்தேப்பூர்.
3 ராஜகுமாரர்கள் அந்த ஜமீனை நிர்வகித்தார்கள். அதில் மோஜோ குமார் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது ராஜகுமாரன்தான் நம் கதாநாயகன். குமாருக்கு மிருகங்களை வேட்டையாடுவதும், பெண்களோடு உல்லாசமா க இருப்பதும்தான் வேலை. பிபாவதியை திருமணம் செய்தபிறகும் ஆட்டம் குறையவில்லை.
மலைவாசஸ்தலமான டார்ஜி லிங்கில் ஓய்வெடுக்க குமாரை அழைத்தான் பிபாவதியின் அண்ணன் சத்யன். அங்கு சென்ற ஓரிரு நாள் கழித்து குமார் இறந்துவிட்டதாக பாவல் ஜமீனுக்கு தகவல் வந்தது. மறுநாள் காலை டார்ஜிலிங்கில் குமாரின் உடலை சுடுகாட்டில் எரித்தார்கள். பிபாவதி அரண்மனையை விட்டு வெளியேறி தன் அண்ணனுடன் சென்றாள்.
அடுத்த சில வருடங்களில் மற்ற ராஜகுமாரர்களும் இறந்து போனார்கள். 3 பேருக்குமே வாரிசு இல்லாததால் பாவல் ஜமீனின் நிர்வாகப் பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்துக் கொண்டது.
12 வருடங்கள் கழித்து 1920-ம் வருடம் டாக்காவுக்கு ஒரு சாமியார் வந்தார். அவர் இறந்துபோன ராஜகுமாரன் குமார் சாயலில் இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட குமாரின் சகோதரி ஜோதிர்மயி சாமியாரை தன் வீட்டுக்கு அழைத்தாள்.
நடை, உடல் மொழி, பேச்சு எல் லாமே குமாருடைய சாயலோடு ஒத்திருந்தது. சாமியாரிடம் அவரைப் பற்றி கேட்டதற்கு, ‘‘டார்ஜிலிங் அருகில் ஒரு காட்டில் நினைவில்லாமல் கிடந்த என்னை தரம்தாஸ் என்கிற சாது காப்பாற்றி தன் சீடராக்கிக் கொண்டார், அதற்கு முன்பான என் வாழ்க்கை நினைவில் இல்லை. கடந்த 12 வருடங் களாக குருவோடு பல ஊர்களுக்கு போய்வந்தேன்’’ என்றார்.
இறந்துபோனதாக நம்பப்பட்ட குமார்தான் அந்த சாமியார் என்று ஜோதிர்மயியும், ஊர் மக்களும் நம்பி னார்கள். டாக்காவுக்குத் திரும்பிய சாமியாருக்குக் கொஞ்சம் கொஞ்ச மாக பழைய நினைவுகள் வரத் தொடங்கின.
சாமியார் மீண்டும் ஜெய்தேப்பூருக்கு அழைக்கப்பட்டார். மக்கள் கூட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சாமியாரை பலரும் கேள்விகள் கேட்டார்கள். சின்ன வயதில் தன்னை வளர்த்த தாதி, அரண்மனை பணியாளர்களின் பெயர்களை எல்லாம் சரியாக சொன்னார்.
எல்லோரும் சாமியார்தான் ராஜ குமாரன் என்று நம்பினார்கள். ஆனால், அராசாங்கத்திடம் இருந்து சொத்துக்களை அடைய சாமியார் நடத்தும் நாடகம் என்றார்கள் குமாரின் மனைவி பிபாவதியும், சத்யனும்.
மாவட்ட கலெக்டர் சாமியாரிடம் விசாரணை நடத்தி, குமாரின் உடல் எரிக்கப்பட்டதற்கு சரியான சாட்சிகள் இருப்பதால் ‘இவர் ராஜகுமாரன் இல்லை’ என தீர்ப்பு வழங்கினார்.
சாமியார் நம்பிக்கை இழந்து கொல்கத்தா சென்று தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டார். தாரா தேவி என்கிற பெண்ணை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் அவர் மேல் நம்பிக்கை கொண்ட ஆதர வாளர்கள் சேர்ந்து நிதி திரட்டி, பெரிய வக்கீல் மூலமாக கோர்ட்டுக்குப் போனார்கள்.
டாக்கா நீதி மன்றத்தில் 1933-ம் வருடம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. வழக்கு 3 ஆண்டுகள் நடந்தது. நிறைய சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். மருத்துவர்கள் சாமியாரைப் பரிசோதித்தார்கள். புகைப்பட நிபுணர் கள், சிலை வடிப்பவர்கள் என்று பலரும் குமாரின் பழைய புகைப்படங்களை வைத்து சாமியாருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்கள்.
குமாரின் ஆசை நாயகியாக இருந்த எலோகேஷி நீதிபதியிடம் குமாரின் அந்தரங்க உறுப்பில் இருந்த மச்சம் பற்றி சொன்னாள். சாமியாரை நீதிபதி சோதித்ததில் அந்தக் குறிப்பு சரியாக இருந்தது.
குமார் எப்படி யானை மேல் ஏறு வார்? எப்படி உண்பார் போன்ற கேள்விகளுக்கு சாமியார் சரியான பதில்களைச் சொன்னார். பிபாவதியும் சத்யனும் குமார் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தவர் என்று சில கடிதங்களை சமர்ப்பித்தனர். சாமியார் அதை மறுத் தார். பிறகு அந்தக் கடிதங்கள் போலி யாகத் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. சாமியாரின் குருவும், மற்ற சீடர்களும் விசாரிக்கப் பட்டனர். டார்ஜிலிங் அருகே ஒரு காட்டில் நினைவு தவறிய நபரை கண்டெடுத்த நிகழ்வை அவர்கள் ஒரே மாதிரி சொன்னார்கள்.
குமார் இறந்த மறுநாள் சுடுகாட்டில் எரிக்கப்பட்டபோது முகத்தை யாரும் பார்க்கவில்லை என்றும், அது துணி யால் மூடப்பட்டிருந்தது என்றும் பலர் சாட்சி சொன்னார்கள்.
நீதிபதி தன் இறுதித் தீர்ப்பில் சாமியார் தான் ராஜகுமாரன் என்று சொன்னார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பிபாவதி அப்பீல் செய்தார். 3 நீதிபதி களைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. ஒரு நீதிபதி சாதகமாகவும், ஒரு நீதிபதி பாதகமாகவும் தீர்ப்பு சொல்ல.. தலைமை நீதிபதி இங்கிலாந்தில் இருந்து தபாலில் அனுப்பிய தீர்ப்பு மக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. அவர் சாமியாருக்கு ஆதரவாக தீர்ப்பு தந்திருந்தார்.
அப்போது இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் இல்லாததால் வழக்கு லண்டனில் இயங்கிய பிரிவி கவுன்சிலுக்குச் சென்றது. அங்கே அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது.
தீர்ப்பு வந்த தினம் குமார் கோயி லுக்குச் சென்றார். அங்கே திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அடுத்த 2 நாட்களில் இறந்து போனார்.
குமாரின் சொத்துக்களுக்கு பிபாவதி சொந்தம் கொண்டாட முடியாது என்று, குமாரின் 2-வது மனைவி தாரா தேவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சொத்துக்கள் இரண்டு மனைவிகளுக்கும் சரிசமமாக ஒப்படைக் கப்பட வேண்டும் என்று தீர்ப்பானது. ஆனால் பிபாவதி தன் பங்காக வந்த சொத்துக்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிபாவதி சாகும் வரை சாமியாரை குமாராக ஏற்கவேயில்லை.
சரி, டார்ஜிலிங்கில் குமார் இறந்த இரவில் என்னதான் நடந்தது?
அப்போது சத்யனுடன் இருந்தவர்கள் பிறகு சொன்ன சம்பவம் இதுதான்: குமாரின் சொத்துக்கு சத்யன் ஆசைப் பட்டு உணவில் விஷம் கலந்து குமாருக்குக் கொடுத்தார்கள். அவசர மாக அன்றிரவே உடலை மயானத் துக்கு எடுத்துச் சென்றார்கள். திடீ ரென்று புயலுடன் கூடிய மழை வர, பாடையை கீழே வைத்துவிட்டு அருகில் இருந்த குடில்களில் ஒதுங்கி னார்கள். மழை நின்றதும் வந்து பார்த்தால் குமாரின் உடலை அங்கு காணவில்லை.
இரவோடு இரவாக வேறு ஒரு உடலைத் தேடிப் பிடித்து முகம் தெரியாமல் துணியைச் சுற்றி அதுதான் குமாரின் உடல் என்று சொல்லி மறுநாள் சுடுகாட்டில் எரித்துவிட்டார்கள்.
கொடுக்கப்பட்ட விஷத்தால் நினைவு தப்பிய குமார் மழையில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு தரம்தாஸ் என்ற சாதுவிடம் கிடைத்திருக்கிறார்.
தன்னை கொலை செய்ய முயன்றதாக குமார் ஒரு புகார் கொடுத்திருந்தால், தனியாக ஒரு குற்ற வழக்கு நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். ஜமீன் சொத்துக்களை அனுபவிக்காமல் தன் 63-வது வயதில் குமார் இறந்துவிட்டாலும், ஜமீனின் ராஜா நானே என்று போராடி உலகத்துக்கு நிரூபித்துவிட்டார்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

Sunday, August 23, 2015

சார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு -பட்டுக்கோட்டை பிரபாகர்

சார்லி சாப்ளின் என்கிற பெயரை உச்சரிக்கும்போதே அவரின் வித்தியாசமான உருவம் மனதில் வந்து உதடுகளில் ஒரு புன்னகை பரவும்.
சாப்ளின் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை குடிகாரர். தாய் மன நோயாளி. 7 வயதில் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலை. ஓரளவுதான் படித்தார். 14 வயதில் மேடை நடிகரானார்.
லண்டனில் பிறந்து ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இவர் உடல் மொழி மற்றும் பாவனைகளால் சிரிக்க வைக்கும் ஸ்லாப்ஸ்டிக் காமெடியில் மேதை. கதை, திரைக்கதை, வசனம், இசை, எடிட்டிங், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று அத்தனைத் துறைகளிலும் இயங்கியவர். உலகிலேயே உச்சமான சம்பளத்தைப் பெற்றவர். 1915-ம் வருடம் அதாவது 100 வருடங்களுக்குமுன் மியூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷன் அவருக்குக் கொடுத்த வருட சம்பளம் 6 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள்.
தி கிட், கோல்டு ரஷ், சர்க்கஸ், சிட்டி லைட்ஸ், தி கிரேட் டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ் போன்ற அவரின் பல படங்கள் காலம் கடந்தும் ரசிக்க வைப்பவை. கோடிக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்த அவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மிகவும் குறைவு. அவர் சந்தித்த வழக்குகளும் அதிகம்.
சாப்ளின் நான்கு முறை திரு மணம் செய்தவர். முதல் மூன்று திருமணங்களிலும் மன வேதனைதான் மிஞ்சியது. மூவருமே நடிகைகள். 17 வயதான மில்ட்ரெட் ஹாரிசை முதல் மனைவியாக்கிக் கொண்டபோது சாப்ளி னுக்கு வயது 29. இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து. இவர்களுக்குப் பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்தது மற்றொரு சோகம்.
16 வயது லிடா கிரேவை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டபோது சாப்ளினுக்கு வயது 35. திருமணத்துக்கு முன்பே லிடா கிரே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துவிட்டார். சட்டப்படி சாப்ளினைக் கைது செய்து கற்பழிப்பு வழக்கு போட சாத்தியம் இருந்ததால், அவசரமாக வெகு சில நண்பர்களை அழைத்து லிடா கிரேயை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தன.
ஆனால் லிடா கிரேக்கும் சாப்ளி னுக்கும் ஒத்துப் போகவில்லை. சாப்ளின் மன உளைச்சலுக்கு ஆளானார். தன் குழந்தைகளுடன் பிரிந்து சென்ற லிடா கிரே விவாகரத்து வழக்கு தொடுத்ததோடு சாப்ளினைப் பற்றி தரக்குறைவாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத் தார். சிலஅமைப்புகள் சாப்ளினுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அவர் நடித்த திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
லிடா கிரேக்கு 6 லட்சம் டாலர்கள் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு சாப்ளின் ஆளானார். அப்போது அமெரிக் காவில் விவாகரத்து வழக்கில் மனை விக்கு கணவனால் வழங்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது. மனச் சோர்வால் ஒரு வருடம் சாப்ளின் சினிமா தொடர்பாக எந்த வேலையும் செய்யவில்லை.
1928-ல் ஆங்கிலப் படங்கள் மவு னத்தை உடைத்து பேசும் படங்களாக வரத் தொடங்கின. ஆனால் சாப்ளின் ‘சர்க்கஸ்’ என்கிற மவுனப் படத்தைக் கொடுத்து வெற்றிபெற்றார். அடுத்து ‘சிட்டி லைட்ஸ்’ படத்தையும் மவுனப் படமாகவே கொடுத்தார். தன் பாணியை தொடர்வதா, பேசும் படங்களில் இறங்கு வதா என்கிற பெரிய குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. அதனால் கிட்டத்தட்ட 2 வருடங்கள் படம் எதுவும் எடுக்காமல் திரைக்கதை மட்டும் எழுதி ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்னும் பேசும்படம் எடுக்கத் தயாரானார்.
அந்த சமயம் இவர் 21 வயது பவுலட் கோர்ட் என்கிற நடிகையுடன் நெருக்க மாகப் பழகி வந்தார். எங்களுக்குள் ரகசியமாக திருமணம் நடந்தது என்று பிறகு அறிவித்தார். அப்போது சாப்ளி னுக்கு வயது 43.
இவர் நட்புடன் பழகிய இன்னொரு நடிகையான ஜோன் பெர்ரி தான் கர்ப்ப மாகஇருப்பதாகவும், அதற்குக் காரணம் சாப்ளின்தான் என்றும் அறிவித்தார். சாப்ளின் அதை திட்டவட்டமாக மறுத் தார். பெர்ரி வழக்கு தொடுத்தார்.
அதுவரை அரசியல் கலப்பு எதுவும் இல்லாமல் படங்கள் செய்துகொண்டி ருந்த சாப்ளின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தில் ஹிட்லரைக் கடுமை யாக கிண்டல் செய்திருந்தார். அந்தத் திரைப்படத்தை அப்போதைய ஜனாதி பதி ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து ஜனாதிபதி சர்ச்சிலும் மிகவும் ரசித்தா லும், அமெரிக்க அரசாங்கம் சாப்ளின் மேல் அரசியல் சாயம் பூசியது. அவரை கம்யூனிஸ்ட் என்று விமரிசித்தது. எஃப்.பி.ஐ அவருக்கு மறைமுகமாக பல தொல்லைகளைத் தரத் தொடங்கியது.
ஜோன் பெர்ரி வழக்கு தொடுத்த அதே சமயத்தில் எஃப்.பி.ஐயும் அவர் மேல் உப்புசப்பில்லாத நான்கு காரணங் களுக்காக வழக்கு தொடுத்தது. சாப்ளின் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளா மல் அமெரிக்க விரோதப் போக்கிலேயே வழக்குகளைச் சந்தித்தார்.
ஜோன் பெர்ரிக்கு கரோல் என்கிற பெண் குழந்தை பிறந்தது. சாப்ளினின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. (மரபணு பரிசோதனை அப்போது இல்லை) சோதனை முடிவு சாப்ளினுக்கு சாதகமாக இருந்தபோதும், அதை ஏற்காமல் அந்தக் குழந்தைக்கு சாப்ளின்தான் தந்தை என்றும் கரோலுக்கு 21 வயது நிரம்பும் வரை பராமரிப்பு செலவுகளை கொடுத்தாக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது கோர்ட்.
வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 18 வயது ஊனா ஓநில் என்கிற பெண்ணை சாப்ளின் 4-வது திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 54. சாப்ளின் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்த ஓநிலைப் பற்றி தன் சுயசரிதையில் ‘அவருடன் ஏற்பட்டது மட்டுமே மிகச் சரியான காதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதி 8 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.
அமெரிக்க உளவுத் துறையின் தொடர்ந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தால் சாப்ளின் மனம் நொந்து போனார். அவரை நாடு கடத்த வேண்டும் என்று குரல்கள் ஒலித்தன. தன் அடுத்த படத்தின் முதல் காட்சியை வெளியிட லண்டனுக்குப் புறப்பட்டார் சாப்ளின். அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்புவதற்கான பர்மிட்டை அரசு ரத்து செய்தது. பர்மிட் வேண்டுமானால் விசாரணையை சந்திக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
சாப்ளின் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப மாட்டேன் என்று அறிவித்தார். சுவிட்சர்லாந்தில் தங்கிக்கொண்டார். மனைவியை அமெரிக்காவுக்கு அனுப்பி தன் ஸ்டுடியோ, வீடுகள், பங்குகள் என்று அனைத்து சொத்துக்களையும் விற்றார்.
அடுத்து அமெரிக்காவை விமர்சிக் கும் விதமாக ‘கிங் ஆஃப் நியூயார்க்’ என்கிற படத்தை எடுத்தார் சாப்ளின். அந்தப் படத்தை அமெரிக்காவில் வெளியிடவில்லை. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு அமெரிக்க பத்திரிகையாளர்கள் வரக் கூடாதென்றும் உத்தரவிட்டார். அதுதான் அவரின் கடைசிப் படம். அது ஒரு மிகப் பெரிய தோல்விப் படமானது.
அதன் பிறகு உடல்நலம் குன்றி சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நடத்திய சூழலிலும், தன் மகளை நடிகையாக்கும் நோக்கத்தில் ஒரு கதையைத் தயார் செய்தார். ஆனால் அந்தப் படம் வரவேயில்லை.
1952-ல் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய சாப்ளினை 1972-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொள்ள அகாடமி அழைத்தது. தயக்கத்துக்குப் பிறகு அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்த சாப்ளினுக்கு அரங்கில் அத்தனை பேரும் எழுந்து நின்று இடைவிடாமல் 12 நிமிடங்கள் கை தட்டினார்கள். இது ஆஸ்கர் விருது விழா வரலாற்றில் மிகவும் நீளமான கை தட்டலாகும்.
1977-ல் தனது 88-வது வயதில் சாப்ளின் காலமானார். அதன் பிறகும் ஒரு வழக்கு. சாப்ளினின் கல்லறையில் இருந்து அவரின் சவப் பெட்டியைத் திருடிச் சென்று குடும் பத்தினரிடம் பணம் கேட்டு மிரட் டினார்கள். பெரிய போலீஸ் படை இறங்கி குற்றவாளிகளைப் பிடித் தார்கள். சவப்பெட்டி மீண்டும் புதைக் கப்பட்டு கடுமையான பாதுகாப்பு செய்யப்பட்டது.
கடைசியாக ஒரு லேட்டஸ்ட் வழக்கு..சாப்ளின் வாழ்ந்த சுவிட்சர்லாந்து வீடு 2016-ல் மியூசியமாகிறது. அதில் வைக்கப்பட இருந்த சாப்ளின் வாங்கிய ஆஸ்கர் விருதை இந்த ஜனவரியில் திருடிவிட்டார்கள். ஏதாவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கச் சொல்லி சாப்ளினின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.
- வழக்குகள் தொடரும்…

நன்றி -த இந்து

Thursday, August 20, 2015

மாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக்கோட்டை பிரபாகர்

ஒரு காதலால் ஒரு மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? ஒரு காதலால் தேர்தலில் ஒரு கட்சி தோல்வியைத் தழுவ முடியுமா? முடியும்!
கொல்கத்தாவில் 2007-ம் வருடம் நடந்த ஒரு காதலும், அதன் தொடர்பான சம்பவங்களும் 2011-ம் வருடம் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் 34 வருட ஆட்சி முடிவடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தன.
‘லக்ஸ்’ நிறுவனம் ஆண்களுக்கான உள்ளாடைகள் தயாரிக்கும் 200 கோடி மதிப்புள்ள நிறுவனம். அதன் அதிபர் அசோக் டோடி. இவர் ஓர் இந்து. அவரின் மகள் பிரியங்கா டோடி. அவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் கற்க ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அவருக்கு பாடம் எடுத்த இளைஞர் ரிஸ்வனூர் ரஹ்மான். இவர் இஸ்லாமியர்.
ரஹ்மானுக்கும், பிரியங்காவுக்கும் மன்மதன் அம்புவிட்டு காதல் மலர்ந் தது. மதம், அந்தஸ்து, வேற்றுமை காரணமாக குடும்பத்தினர் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள் என்பதால்,ரகசிய மாக சில நண்பர்களை மட்டும் சாட்சி களாக வைத்து, பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், அதை வெளிப்படுத்தாமல் அவரவர் வீட்டில் சாதாரணமாக நடந்துகொண்டார்கள்.
சில மாதங்கள் கழித்து ரஹ்மான் தன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் தகவல் சொன்னார். அவர்கள் அதிர்ந்து போனார் கள். பிரியங்காவை வீட்டுக்கு அழைத்து வந்தார். பிரியங்காவை விட்டு தன்னை மன்னித்து, தங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அசோக் டோடிக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார்கள்.
கடிதம் பார்த்ததும் அசோக் டோடிக்கு கோபம் தலைக்கேறியது. அவர் தனக் குத் தெரிந்த காவல்துறை அதிகாரியின் உதவியை நாடினார்.
காவல்துறை ரஹ்மான் வீட்டுக்கு வந்தது. பிரியங்காவை அவர் தந்தை வீட்டுக்கு அனுப்பிவிடும்படியும், காதலை மறந்துவிடும்படியும் மிரட்டல் தொணியில் பேசினார்கள். இருவரையும் காவல்துறையின் ஒரு அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள். வர மறுத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழுத்துப் போவோம் என்றார்கள்.
ரஹ்மானும், பிரியங்காவும் அவர்கள் சொன்ன அலுவலகத்துக்குச் சென்றார் கள். அங்கு பெரிய அதிகாரிகள் மிரட்டத் தொடங்கினார்கள். ரஹ்மான் தன் மனைவியைப் பிரியாவிட்டால் விளைவு விபரீதமாக இருக்குமென்று எச்சரித்தார்கள். பெரிய தொகை வாங் கித் தருவதாக ஆசை காட்டினார்கள். இதுபோல மூன்றுமுறை தங்கள் அலுவ லகங்களுக்கு அழைத்துப் பேசினார்கள்.
மூன்றாவது முறை பேசியபோது பிரியங்காவின் மாமா வந்திருந்தார். மகளைப் பார்க்காமல் அவளின் பெற் றோர் கவலையில் இருப்பதாகவும், ஒரு வாரத்துக்கு மட்டும் பிரியங்காவை அனுப்பி வைக்கும்படியும், ஒரு வாரத்துக்குப் பிறகு பிரியங்காவை மீண்டும் ரஹ்மான் வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுத்துபூர்வமாக அதி காரிகள் முன்னிலையில் உறுதியளித்தார் மாமா. அதை நம்பி பிரியங்காவை அவ ருடன் அனுப்பி வைத்தார் ரஹ்மான்.
ஆனால், பிரியங்கா ஒரு வாரம் கழித்து வரவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரஹ்மான் துடித்துப் போனார்.
“செல்வாக்குள்ள பெரிய இடம். அவர் களுடன் மோத முடியாது. நீ அவளை மறந்துவிட வேண்டியதுதான்'’ என்று உற வினர்கள் சொல்ல, கோபப்பட்டார் ரஹ்மான். “அதெப்படி? அவள் என் மனைவி, அவளை எதற்காக மறக்க வேண்டும்?’’ என்று வாதிட்டார் ரஹ்மான்.
சில தினங்கள் கழித்து வெளியே சென்ற ரஹ்மானைக் காணவில்லை. அவரை முகம் உருக்குலைந்த நிலையில் ஒரு ரயில்வே தண்டவாளத்தில் பிரேத மாகக் கண்டெடுத்தார்கள். அது தற்கொலையென்று காவல்துறை வழக்கை முடிக்க நினைத்தது. ரஹ்மா னின் குடும்பத்தினரும், நண்பர்களும் அது தற்கொலை அல்ல; கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டார்கள் என்றார்கள். ரஹ்மான் படித்த கல்லூரி யின் மாணவர்களும், தன்னார்வஅமைப் புகளும், சில இஸ்லாமிய அமைப்புகளும் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்கின.
இது தொடர்பாக வெடித்த கலவரத் தில் போலீஸ்காரர்களும், பொது மக் களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்த பலர் காயமடைந்தார்கள். காவல்துறையின் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பொது மக்கள் தினமும் மெழுகுவத்தி ஏந்தி நீதிக்காக ஊர்வலம் சென்றார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக முதல்வர் சில காவல்துறை அதிகாரிகளைப் பணிமாற்றம் செய்தார். தனி நபர் விசாரணை கமிஷன் அமைத் தார். கோர்ட்டின் உத்தரவுக்குப் பிறகு வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது எதிர் கட்சித் தலைவியாக இருந்த மம்தா பேனர்ஜி இப் பிரச்சினை யைக் கையிலெடுத்தார். காவல் துறையை தன் பொறுப்பில் வைத்திருக் கும் முதல்வரை கடுமையாக விமரிசித் தார். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற் றால் அந்தக் குடும்பத்துக்கு நியாயம் வாங்கித் தருவோம் என்று முழங்கினார்.
சி.பி.ஐ, விசாரணைக்குப் பிறகு ‘‘ரஹ் மான் தற்கொலைதான் செய்துகொண் டார், ஆனால் அவரை தற்கொலை செய் யத் தூண்டியதாக பிரியங்காவின் தந்தை, மாமா, மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலரின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று அறிக்கை தந்தது. அசோக் டோடி சுப்ரீம் கோர்ட்டுக் குச் சென்று சி.பி.ஐ அறிக்கையின் மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்து உத்தரவு வாங்கினார்.
தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்று திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மம்தா பேனர்ஜி முதல்வரானார். “இந்த விவகாரம் எங்கள் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது உண்மை'’ என்று ஒப்புக்கொண்டார் தலைவர் ஜோதி பாசு.
சமீபத்தில் சி.பி.ஐ குற்றம்சாட்டிய ஒரு காவல்துறை அதிகாரிக்கு பணி உயர்வு உத்தரவு கொடுத்ததற்காக மம்தா பேனர்ஜி கடுமையாக விமரிசிக்கப்பட் டார். “ரஹ்மான் மரணத்தை ஒரு தேர்தல் ஆயுதமாக மட்டும் பயன்படுத்தினாரா?'’ என்று மீடியா கேள்வி கேட்டு வருகிறது.
வெகு நாட்கள் இந்த விவகாரம் பற்றி வாயே திறக்காத பிரியங்கா டோடி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, “ரஹ்மான் குடும் பத்தினரின் சில நடவடிக்கைகளால் தான் விவகாரம் பெரிதாக வெடித்தது, இல்லையென்றால் சுமூகமாக சரிசெய் திருக்க முடியும்'’ என்று குற்றம் சாட்டி னார். அது பற்றி ரஹ்மானின் தாயாரிடம் கேட்டபோது, “அவை நியாயமே இல் லாத குற்றச்சாட்டு என்றும், இறந்த தன் கணவனின் உடலைக் காணக்கூட பிரியங்கா வரவில்லை, அதன் பிறகு தன் னையும் சந்திக்கவில்லை. இந்த வீட்டில் இருந்த அவரது உடைமைகளை ஒப் படைக்கச் சொல்லி ஒரு வக்கீல் மூலமாக கடிதம் அனுப்பினார் அவர்’’ என்றார்.
காதலித்தபோது ஒருமுறை ரஹ்மான் பிரியங்காவிடம் சொன்னாராம், “மதம் தான் பிரச்சினை என்றால்.. நான் வேண்டு மானாலும் ஹிந்துவாக மாறிவிடுகிறேன்’' என்று. அதேப் போல பிரியங்கா தன் மாமியார் “வசதியாக வாழ்ந்த உன்னால் எப்படி இந்த வசதியற்ற வீட்டில் வாழ முடியும்?’' என்று கேட்டபோது, “நான் சில மாதங்களாக எங்கள் வீட்டில் ஏ.சி போட்டுக்கொள்ளாமல் தூங்கிப் பழகி வருகிறேன், ரஹ்மானுக்காக எந்த வீட்டிலும் என்னால் வாழ முடியும்’’ என்றாராம்.
தந்தை பெரியாரிடம் ஒருவர் தன் புது மனைவியுடன் வந்து, “அய்யா, நாங்க வெவ்வேறு ஜாதி. இது கலப்புத் திருமணம்’' என்றார். பெரியார் சிரித்தபடி, “நீ ஒரு கழுதையையோ குதிரையையோ திருமணம் செய்திருந்தால்தான் அது கலப்புத் திருமணம். ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்வதில் எங்கே கலப்பு வருகிறது?’’ என்றார். ஆனால் இன்னும் நம் நாட்டில் ஜாதி, மதம் தாண்டி நிகழும் காதல் திருமணங் களைப் பலர் ஏற்பதில்லை.
இதன் வெளிப்பாடாகத்தான் ஆயிரக் கணக்கில் கவுரவக் கொலைகள் நிகழ் கின்றன. (சுப.வீர பாண்டியன் இவற்றை ஆதிக்கக் கொலை என்றோ அல்லது ஆணவக் கொலை என்றோ குறிப்பிட வேண்டும் என்கிறார்.)
இவர்களின் திருமணத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்ட ரஹ்மானின் மாணவரான ஹுஸ்ஸேய்ன், “ரஹ்மான் மிரட்டியதால்தான் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டேன் என்று சொல்ல வேண்டும்’’ என்று போலீஸ் மிரட்டியதால் நான்வேறு ஊருக்குப் போய்விட்டேன். இந்த விவகாரத்தில் பல மனிதர்களின் வேறு முகங்கள் வெளிப்படுவதை உணர்ந்தேன். அதை மையமாக வைத்து நான் எழுதிய கவிதைத் தொகுப்புக்கு ‘சாகித்திய அகாடமி’ பரிசு கிடைத்தது. இந்தக் காதலும், தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் சாதாரண எழுத்தாளனாக இருந்த என்னை வீரியமிக்க சிறந்த எழுத்தாளனாக மாற்றியது’’ என்கிறார்.


நன்றி -த இந்து

Sunday, August 09, 2015

தடயவியலின் உதவியால் தீர்ப்பளிக் கப்பட்ட முதல் வழக்கு - பட்டுக்கோட்டை பிரபாகர்

ஓவியம்: ஷ்யாம்
ஓவியம்: ஷ்யாம்
லண்டனில் மேடம் டுஸாட்ஸ் மெழுகுச் சிலை காட்சியகத்தில் உலகம் முழுவதும் பிரபலமான பிரமுகர்களின் சிலைகளை வைத் திருக்கிறார்கள். எதிர்மறை செயல்களால் பிரபலமானவர்களின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில் அங்கே சிலை யாக நிற்கும் ஒருவன் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் ஹேக்.
அப்படி என்ன செய்தான் அவன்?
ஹேக்குக்கு இரக்கம் என்றால் பொருள் தெரியாது. பாறாங்கல் நெஞ் சன். பணத்துக்காக எதுவும் செய்வான். உச்சமான குற்றமான கொலையை சர்வ சாதாரணமாக செய்தவன். எத்தனை? 9 கொலைகள். தடயம் எதுவும் இல்லாமல் சாமர்த்தியமாக செய்தவன், கடைசியில் ஒரு சிறு தவறினால் மாட்டிக் கொண்டான்.
ஹேக் அதிகம் படிக்காதவன். பலவிதமான வேலைகள் செய்தான். பணம் கையாடல் செய்து மாட்டி பல முறை சிறைக்குச் சென்று திரும்பியவன். விடுதலையானதும் ஊரை மாற்றிக் கொள்வான். ஆனான், திருட்டை விடமாட்டான்.
ஹேக் தலைநகர் லண்டனுக்கு வந்து சேர்ந்தான். ஒதுக்குப்புறமாக வீடு எடுத்துத் தங்கினான். முன்பகுதியில் ஒரு மெக்கானிக் கடை வைத்துக் கொண்டான். அதில் வந்த வரு மானம் ஆடம்பரச் செலவுகளுக்கு போதவில்லை. பெரிய தொகையை பார்க்க வழி யோசித்தான்.
1943-ல் மேக்ஸ்வான் என்கிற பணக்காரனின் நட்பு கிடைத்தது. அவன் லண்டனில் தனி வீட்டில் தங்கியிருக்க, அவனுடைய பெற்றோர் வெளியூரில் இருந்தார்கள். ஹேக் மேக்ஸ்வானிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பழகி னான்.
ஒரு கொலைக் குற்றத்தில் கொலை செய்யப்பட்ட மனிதனின் உடல் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் குற்றவாளியைத் தண்டிக்க முடியாது என்று சட்டம் இருப்பதைத் தெரிந்து கொண்டான். ஒரு துண்டு எலும்புகூட காவல்துறைக்குக் கிடைக்காமல் செய்ய முடியுமா என்று யோசித்தான்.
கடைக்குச் சென்று கொஞ்சம் கந்தக அமிலம் வாங்கி வந்தான். ஒரு எலியைக் கொன்று, அந்த அமிலத்தில் போட்டு கவனித்தான். 30 நிமிடங்களில் அந்த எலி முற்றிலும் கரைந்து கூழாகியது. அதுதான் திட்டம் என்று தீர்மானித்தான்.
ஓர் இரவில் மேக்ஸ்வானை தனது வீட்டுக்கு வரவழைத்தான். திடீரென்று அவன் கழுத்தை நெரித்தான். மேக்ஸ் வான் இறந்ததும், அவன் உடலை 40 கேலன் கந்தக அமிலம் நிரப்பப்பட்ட தொட்டியில் தூக்கிப் போட்டான். மறுநாள் சோதித்துப் பார்த்தான். அந்த உடல் முழுக்க கரைந்து சதை, எலும்பு எல்லாம் கூழாக மாறியிருந்தது. அந்த சதைக் கூழை பாதாளச் சாக்கடையில் கொட்டிவிட்டான்.
மேக்ஸ்வானின் வீட்டுக்குப் போய் தங்கிக்கொண்டு அவனுடைய பெற் றோருக்குத் தகவல் கொடுத்தான். மேக்ஸ்வான் போருக்குச் செல்வதைத் தவிர்க்க, தலைமறைவாகச் செல்வ தாக தன்னிடம் சொல்லிவிட்டுப் போயி ருப்பதாக சொன்னான்.
மேக்ஸ்வானின் உடைமைகளை எல்லாம் விற்று பணமாக்கிக் கொண் டான். அந்த வீட்டையும் போலிப் பத்திரங்கள் தயாரித்து தன் பெயருக்கு மாற்றி விற்கும் முயற்சியில் இருந்த போது பெற்றோருக்கு இவன் மேல் சந்தேகம் வந்தது.
அதை உணர்ந்த ஹேக், மேக்ஸ் வானைப் பற்றிய தகவல் தருவதாகச் சொல்லி இருவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்தான். இருவரையும் மண்டை யில் தாக்கி கொலை செய்தான். அவர்களின் உடல்களையும் அமிலத் தொட்டியில் போட்டு கரைத்து, சாக்கடையில் கொட்டிவிட்டான்.
மேக்ஸ்வானின் வீட்டை விற்று பணமாக்கிக் கொண்டு சீட்டாட்டம், உல்லாசம் என்று ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தான். மூன்று கொலை களைப் பற்றியும் உலகம் அறியவில்லை. மேக்ஸ்வானின் உறவினர்கள் அவர்கள் எங்கோ வாழ்வதாக நினைத்தார்கள்.
ஐந்து வருட உல்லாச வாழ்க்கையில் பணம் எல்லாம் தீர்ந்துவிட, 1948-ல் அடுத்து இவன் பார்வையில் விழுந்தவர் டாக்டர் யஹனிர்சன். டாக்டரும் அவர் மனைவி ரோஸும் ஒரு கிளப்பில் அறிமுகமானார்கள். டாக்டருக்கு ஒரு வீடு விற்க வேண்டியிருந்தது. தான் விற்றுத் தருவதாக பொறுப்பேற்றுக் கொண்டான் ஹேக். அது சம்பந்தமாக அவர் வீட்டுக்கு பல முறை சென்று நம்பிக்கையை வளர்த்தான்.
ஒருநாள் டாக்டரை மெக்கானிக் கடைக்கு வரவழைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான். அடுத்து வழக்கம்போல அமிலக் குளியல்தான். டாக்டரின் மனைவிக்கு போன் செய்தான். தன்னைச் சந்திக்க வந்த டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டதாகச் சொன்னான். அவர் மனைவி ரோஸ் அலறிக்கொண்டு அங்கு வந்தாள். அவளையும் சுட்டான். அமிலத்தில் தூக்கிப் போட்டான். அவர்களின் வீட்டுப் பத்திரங்களை தன் பெயருக்கு மாற்றி விற்று பணமாக்கினான்.
அடுத்து வலையில் விழுந்தது கணவரை இழந்து தனியாக வாழ்ந்த ஆலிவ் டுராண்ட் என்கிற 69 வயது பெண்மணி. அவரிடம் செயற்கை நகங் கள் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக வும், தன் தொழிலில் முதலீடு செய் யும்படியும் கேட்டுக் கொண்டான். அது பற்றிப் பேச தன் மெக்கானிக் கடைக்கு அழைத்தான்.
ஆலிவ் டுராண்ட்டும் அமிலத்தில் கரைந்தார். சாக்கடையில் கலந்தார். அவரின் உறவினர்கள் காவல்துறைக்குச் சென்றார்கள். ஹேக்குடன் ஆலிவ் பழகி வந்ததைப் பற்றி ஒருவர் சொல்ல, ஒரு அதிகாரி ஹேக் மேல் சந்தேகம் எதுவுமில்லாமல் ஒரு சாதாரண விசாரணைக்காகத்தான் அவனைத் தேடி வந்தார்.
இங்கேதான் ஹேக்கின் ஓர் அல்ப புத்தி… அவனை சறுக்கிவிட்டது. ஹேக் வீட்டில் அதிகாரியின் கைக்கு ஒரு லாண்டரி பில் கிடைத்தது. பெண்கள் அணியும் பெர்சியன் ஆட்டுத் தோலால் ஆன ஓவர் கோட்டுக்கான பில் அது. இறந்தபோது ஆலிவ் அணிந்திருந்தது. அந்தக் கோட்டின் மேல் ஆசைப்பட்டு அதை அமிலத்தில் போடாமல் ஹேக் எடுத்து வைத்து லாண்டரிக்குப் போட்டிருந்தான்.
அது போதாதா அதிகாரிக்கு? வீட்டை முற்றிலும் குடைந்தார். ஏற்கெனவே அவன் விற்ற சொத்துக்களின் பத்திரங்கள் கிடைத்தன. அவன் வீட்டின் சாக்கடையில் கொஞ்சம் கூழாக இருப்பதை கவனித்த அதிகாரி அதை எடுத்து சோதனைக்கு அனுப்பினார். மேலும் ஒரு மெட்டல் ஸ்பிரிங் கம்பியும் அங்கே கிடைத்தது.
அந்தக் கூழில் மூன்று வெவ்வேறு மனிதர்களின் பித்தப்பை கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்த மெட்டல் ஸ்பிரிங் செயற்கைப் பல்லை வாயில் பொருத்துவது. அது ஆலிவுக்கு தன்னால் பொருத்தப் பட்டதாக ஆலிவின் பல் மருத்துவர் சான்றளித்தார்.
கடுமையாக விசாரித்ததும், போலீஸ் கண்டுபிடித்த 6 கொலைகளைத் தவிர மேலும் 2 பெண்கள், ஒரு ஆண் என்று மொத்தம் 9 கொலைகளைத் தான் செய்ததாக ஹேக் ஒப்புக்கொண்டான்.
ஆனால், தன்னை சில குரல்கள் துரத்துவதாகவும், அந்தக் குரல்கள் கொலை செய்யச் சொன்னதாகவும், தனக்கு ரத்தம் தொடர்பான கனவுகள் அடிக்கடி வருமென்றும் கோர்ட்டில் சொன்னான். அவனைப் பரிசோதித்த மனநல மருத்துவர்கள் அவன் பொய் சொல்வதாகச் சொல்லவே, ஜூரிகள் அவனைக் குற்றவாளி என்று தீர்மானித்தார்கள். 1949-ம் வருடம் தூக்கிலிடப்பட்டான் ஹேக்.
‘அமிலக் குளியல் கொலைகள்’ என்று அப்போது இந்த வழக்கு மிகவும் பேசப்பட்டது. வழக்கு நடந்தபோது தீர்ப்புக்கு முன்பே ’மிர்ரர்’ பத்திரிகையில் ஹேக்கைக் குற்றவாளி என்று கட்டுரை எழுதியதால், அதன் ஆசிரியர் சில்வெஸ்டர் கைது செய்யப்பட்டு கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
இங்கிலாந்தின் குற்ற வரலாற்றில் தடயவியலின் உதவியால் தீர்ப்பளிக் கப்பட்டது இதுவே முதல் வழக்காகும். கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கிடைக்கவில்லை என்றாலும் சூழ்நிலைகளும், தடயங்களும் கொலை நடந்ததை உறுதி செய்தாலே குற்றவாளியைத் தண்டிக்க முடியும் என்று இந்த வழக்கு புதிய தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 1954-ல் சட்டத் திருத்த மும் செய்யப்பட்டது.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

நன்றி- த இந்து

Sunday, August 02, 2015

செத்துப்போன செவலக்காளையின் சிரஞ்சீவி வழக்கு -பட்டுக்கோட்டை பிரபாகர்

உங்கள் நிலத்துக்கு ஒரு சான்றிதழ் கேட்டு வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள். ‘‘அந்த நிலம் இப்போது உங்கள் பெயரில் இல்லையே’’ என்கிறார் அங்குள்ள அதிகாரி.
நீங்கள் இதை ‘போலி பத்திர மோசடி’ என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அதிகாரி மேலும், ‘‘நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் இறப்புச் சான்றிதழைக் கொடுத்து, உங்கள் மாமா அந்த நிலத்தை தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டுவிட்டாரே. சட்டப்படி நீங்கள் இப்போது உயிருடனேயே இல்லை’’ என்கிறார்.
உங்களுக்கு எப்படி இருக்கும்?
அப்படித்தான் இருந்தது லால் பிஹாரி என்கிற அந்த 22 வயது இளைஞருக்கு. இது நடந்தது 1976-ம் வருஷம். உத்தரப்பிரதேசத்தில் அசம்கார் மாவட் டத்தில் காலியாபாத் நகரில் இருந்த அலுவலகத்தில்தான் அந்த அதிர்ச்சி அவருக்குக் கிடைத்தது.
‘‘நான் சிறுவனாக இருந்தபோதே என் தந்தை இறந்ததும், எனது தாய் இந்த ஊரைவிட்டு அமீலோ என்னும் ஊருக்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டார். பல வருஷங்களுக்குப் பிறகு இப்போது தான் இங்கு வருகிறேன்’’ என்று விளக்கம் தந்தார் லால் பிஹாரி.
ஆனால், ‘‘நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் மாமா உரிய மருத்துவச் சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்து சட்டப்படி உத்தரவு பெற்று, உங்கள் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டதால் எங்களால் எதுவுமே செய்ய முடியாது’’ என்றார் அதிகாரி.
லால் பிஹாரி முதலில் போலீஸுக் குப் போனார். ‘‘லால் பிஹாரி இறந்து விட்டான். நீ பொய்யாக புறப்பட்டு வந்திருக்கிறாய்’’ என்று போலீஸும் அவரைத் துரத்தியது. அடுத்து பிஹாரி தன்னுடைய மாமா வீட்டுக்குப் போனார். அங்கும் ‘‘நீ லால் பிஹாரி இல்லை. அவன் இறந்துபோய்விட்டான்’’ என்று முகத்தில் அடித்ததுபோலச் சொல்லி விரட்டினார்கள்.
‘இதை நான் சும்மா விடப்போவ தில்லை…’ என்று தீர்மானித்த லால் பிஹாரி, ஒரு வழக்கறிஞரைப் பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பத்திரிகைகளுக்கு எழுதிப் போட்டார்.
மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக தன் பெயருக்கு முன் பாக ‘இறந்தவன்' என்று அடைமொழி யுடன் லெட்டர் பேட் அடித்து, அதில் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதினார். தன் பெயரைப் போட்டு இறுதி ஊர்வலம் என்று நோட்டீஸ் அடித்து விநியோகித்து பொம்மை சிதைக்கு கொள்ளி வைத்து ‘காரியம்’ செய்தார்.
தன் மனைவிக்கு ‘விதவைக்கான நல நிதி வேண்டும்’ என்று மனு போட்டார். அவர் உயிருடன் இருப்பதால் அதைத் தர முடியாது என்று அதிகாரிகள் கடிதம் எழுதினால், அது தனக்குச் சாதகமான சான்றாகும் என்பது அவரின் நோக்கம். நேரில் வந்து விசா ரித்துச் சென்ற அதிகாரி, லால் உயிருடன் இருப்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல், அவர் மனைவியின் நெற்றியிலும், வகிட்டின் உச்சியிலும் குங்கு மம் வைத்திருப்பதால் அவர் விதவை இல்லை என்றும், அதனால் அவருக்கு நல நிதி தர முடியாது என்றும் பதில் கடிதம் அனுப்பினார்.
தன்னைக் கைது செய்து வழக்கு போட வேண்டும் என்பதற்காகவே போலீஸ்காரர்களிடம் தகராறு செய் தார். அப்படியும் இவரைக் கைது செய்யவில்லை. ஒரு கான்ஸ்டபிளுக்கு ஐநூறு ரூபாய் லஞ்சம் கொடுத்து தன் மேல் வழக்கு பதியச் சொல்ல, விவரம் புரிந்ததும் அவர் மறுநாள் வந்து பணத்தைத் தந்துவிட்டுப் போய்விட்டார்.
அடுத்த திட்டமாக தன் நிலத்தை சாமர்த்தியமாக அபகரித்த மாமாவின் 5 வயது பையனைக் கடத்திகொண்டு வந்து தன் வீட்டில் வைத்தார். மாமா தன் பெயர் போட்டு புகார் கொடுக்க வேண்டும் என்பது அவர் நோக்கம். ஆனால், அந்த ‘எம்டன்’ மாமா இவர் பையனை எதுவும் செய்ய மாட்டார் என்கிற நம்பிக் கையில் கடத்தப்பட்டு 5 நாட்களாகியும் புகாரே கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தவே பையனை அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் பிஹாரி.
ஒரு பத்திரிகையாளர் இவரின் நூதன மான போராட்டங்களைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதினார். அதைப் படித்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் உத்தரப்பிரதேச சட்டசபையில் இவரின் பிரச்சினையைப் பற்றிப் பேசினார். அந்தச் செய்தியைப் படித்த லால், லக்னோ சென்று தனக்கு நீதி வேண்டும் என்று ஒரு தட்டி எழுதிப் பிடித்துக்கொண்டு சட்டசபைக்கு வெளியில் தனி நபராக தர்ணாவில் இறங்கினார். போலீஸ் வந்து இவரை இழுத்துச் சென்றது.
சட்ட மன்றத்துக்குப் பார்வையாள ராகச் சென்றார். சபை நடந்து கொண்டி ருந்தபோது தன் பிரச்சினைகளை விளக்கி அச்சடித்த நோட்டீஸ்களை சபைக்கு நடுவில் வீசினார். சபைக் காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். 7 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடு விக்கப்பட்டார்.
ஒரு பக்கம் இவரின் வழக்கு நீதிமன்றத்தில் வாய்தாக் களுக்கு நடுவில் தொடர்ந்து கொண்டிருக்க, 1988-ல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அலஹாபாத் தொகுதியில் வி.பி.சிங்குக்கு எதிராக தேர்தலில் நின்றார். தனக்கு ஓட்டு எதுவும் விழாது என்று நினைத்த இவருக்கு 1,600 ஓட்டுக்கள் கிடைத்தன. 1989-ம் வருடம் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து தேர்தலில் நின்றார்.
கடைசி முயற்சியாக 1994-ல் தாசில் தார் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழை யப் போவதாக போஸ்டர் அடித்து ஒட்டி னார். ஆனால், அதற்குள் இவரின் இடைவிடாத 18 ஆண்டு சட்டப் போராட் டத்தின் பலனாக, இவர் உயிருடன் இருப்ப தாக நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தது.
இடைப்பட்ட காலத்தில் மாமாவுடன் சமாதானமாகிவிட்டதால் அந்த நிலத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டார்.
“எனக்கு சொத்து பெரிதில்லை. உயி ரோடு இருக்கும் என்னை இறந்துவிட்ட தாக சொன்ன அரசாங்கத்தின் பொறுப் பற்ற செயலை உலகுக்குக் காட்ட விரும் பினேன். அதற்காக நான் பட்ட அவமானங் கள் அதிகம். என்னை பைத்தியக்காரன் என்று விமர்சித்தார்கள். சாலைகளில் நான் நடந்தால், இறந்தவன் போகிறான் என்று கிண்டல் செய்வார்கள். என் மனைவி தினமும் அழுவாள். வழக்குக்காக என் சொத்து, சேமிப்பு எல்லாம் இழந்தேன்' என்கிறார் லால்.
சொத்துக்காக மோசடி செய்யப்பட்டு தன்னைப் போலவே போலிச் சான்றி தழ்கள் மூலம் இறந்துவிட்டதாக அறிவிக் கப்பட்டவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்கிறார். அவர்களுக்கு உதவ ‘இறந்தவர்கள் சங்கம்' என்னும் அமைப்பை இவர் தொடங்கினார். அதில் இப்போது 20 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இவரைத் தேடி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்கூட ஆலோசனைக்காக வந்து போகிறார்கள்.
1999-ல் இவரைப் பற்றியும் இவரின் அமைப்பைப் பற்றியும் ஒரு விரிவான கட்டுரையை ‘டைம்’ இதழ் வெளியிட்டது. அந்தக் கட்டுரையையே புகாராக எடுத் துக்கொண்ட உத்தரப்பிரதேச உயர் நீதி மன்றம், இந்த விவகாரத்தை உடனே கவனிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. அரசின் நடவடிக்கை களைத் தேசிய மனிதஉரிமை அமைப்பு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன் பிறகே அரசாங்கம் விழித்துக்கொண்டு இதுபோன்ற வழக்குகளில் முன்னுரிமை தந்து, இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட பலரை உயிருடன் இருப்பதாக திருத்தச் சான்றிதழ் அளிக்கத் தொடங்கியது.
லால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணைகொண்டு தகவல் அறிந்தபோது 2008-ல் 335 பேர்களும் 2012-ல் 221 பேர்களும் உயிருடன் இருப் பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இவருக்கு கண்ணீருடன் நன்றி சொன்னார்கள்.
அமெரிக்காவில் முதலில் கோமாளித் தனமாக நினைக்கிற, ஆனால் பிறகு மக் களுக்கு பலன் அளிக்கிற செயல்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் ‘இக் நோபல்' பரிசு 2003-ம் வருடம் லாலுக்கு அளிக்கப்பட்டது. இவரின் கதையை இந்தியில் திரைப்படமாக எடுக்க இயக்கு நர் சதீஷ் கடாக் முன்வந்திருக்கிறார்.
தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட வர்களுக்கு சேவை செய்வதையே தன் முழு நேர வேலையாக ஏற்றுக்கொண்டு வாழும் லால் பிஹாரிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தன் மகன் மற்றும் நண்பர்களின் உதவிகளோடுதான் இந்த அமைப்பை நடத்தி வருகிறார்.
- வழக்குகள் தொடரும்
நன்றி த இந்து

Tuesday, July 14, 2015

செக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்

ரத்னாகர் ஒரு கொள்ளைக்காரன். அவன் நாரதரிடமே கொள்ளை யடிக்க முற்பட்டபோது மாட்டிக் கொண்டான். ‘‘இந்தப் பாவத்தில் பங்கெடுக்க உன் குடும்பத்தினருக்கு சம்மதமா?’’ என்று கேட்டார் நாரதர். ரத்னாகர் குடும்பத்தில் கேட்க, அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. அன்று மனம் திருந்திய ரத்னாகர், நாரதர் சொல்லித் தந்த மந்திரத்தை ஜெபித்து தவம் இருந்தான். உடல் மறையும் அளவுக்கு எறும்பு கோபுரமாக புற்று கட்டியது. வரம் கிடைத்தது. அவர்தான் இராமாயணத்தை எழுதிய வால்மீகி. (சமஸ்கிருதத்தில் வால்மீகம் என்றால் எறும்புப் புற்று என்று ஒரு பொருள்)
இன்று அமெரிக்காவில் வாழும் ஒரு ரத்னாகர்தான் ஃபிராங்க் அபாக்னேல். ஒரு சமயம் அமெரிக்கா, சுவீடன், ஃபிரான்ஸ் என்று 12 நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தவன். அமெரிக்காவின் குற்றப் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ-க்குப் பெரிய சவாலாக இருந்த இவன், இப்போது அதே துறையால் ஒரு ஹீரோவாக மதிக்கப்படுபவன்.
வில்லன் எப்படி ஹீரோ?
அபாக்னேலுக்கு 12 வயதானபோது பெற்றோருக்குள் விவாகரத்து நடந்தது. அப்பாவிடம் பாசமாக வளர்ந்த அபாக்னேல், தன்னுடைய 16-வது வயதில் முதன்முதலில் அப்பாவின் கிரெடிட் கார்டு மூலம் 3,400 டாலர்கள் மோசடி செய்தான். அதில் சுவை கண்டு, பல வங்கிகளில் பொய்யான பெயர்களில் கணக்குகள் தொடங்கி போலி காசோலைகளைத் தயாரித்து, புத்திசாலித்தனமாக கிட்டத்தட்ட 25 லட்சம் டாலர்களுக்கு மோசடிகள் செய்தான்.
அபாக்னேலுக்கு பிடித்த விஷயம் ஆள் மாறாட்டம் செய்வது. விமானி யாக, டாக்டராக, வக்கீலாக, சிறை அதி காரியாக, காவல்துறை அதிகாரியாக, கல்லூரி விரிவுரையாளராக வெவ் வேறு பெயர்களில் புதுப் புது அடையாளங்களில் பல நிறுவனங்களை சாமர்த்தியமாக ஏமாற்றினான்.
‘பான் ஆம்’ என்கிற பிரபலமான விமான நிறுவனத்தில் ஆரம்பித்தது இந்த ஆள் மாறாட்ட விளையாட்டு. போலி அடையாள அட்டை தயாரித்து, தன் சீருடை தொலைந்து போனதாகச் சொல்லி, உடைப் பிரிவில் இருந்து சீருடை பெற்று, பயிற்சி விமானி என்கிற போர்வையில் விமானங்களில் பறக்கத் தொடங்கினான். அப்படி 26 நாடுகளுக்கு 250 பயணங்களை மேற்கொண்டான்.
ஒருமுறை 30 ஆயிரம் அடி உயரத்தில் 140 பயணிகளுடன் பறந்த விமானத்தை இயக்க இவன் அனுமதிக்கப்பட்டபோது பதற்றம் வந்தது. தன் உயிரையும் சேர்த்து இத்தனை பேரின் உயிர்களைப் பணயம் வைக்கிறோமே என்கிற பயத்தின் காரணமாக, அந்த வேடத்தைக் கலைத்தான். அதுவரை ஒரு விமானிக்கு உரிய சம்பளம் மற்றும் அத்தனைச் சலுகைகளையும் அனுபவித்தான்.
அடுத்து டாக்டர் சான்றிதழ் தயாரித்துக் கொண்டான். சூபர்வைசர் வேலையில் ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்ந்தான். அந்த வேலையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கத் தேவையில்லை. அதிலும் ஒருநாள் சிக்கல் வந்தது. ஓர் இரவு அவசர நோயாளியாக சேர்க்கப்பட்ட ஒரு குழந்தைக்கு இவனை வைத்தியம் பார்க்கச் சொல்லிவிட்டார்கள். புரியாமல் விழித்த அபாக்னேல் அந்த சமயம் பயிற்சிக்கு வந்திருந்த மருத்துவ மாண வர்களை அழைத்து, அவர்களுக்கு இது பயிற்சி என்று உத்தரவிட்டு வைத்தியம் பார்க்க வைத்தான். மனசாட்சி உறுத்தவே அந்த வேலையில் இருந்தும் விலகினான்.
இவனை கைது செய்வதற்காக நிய மிக்கப்பட்ட காவல் அதிகாரி, பல விதமாக பொறி வைத்துக் கொண்டிருந் தார். ஆனால், இவன் அவருடன் தொடர்பில் இருந்தபடி அவருக்குப் போக்குக் காட்டி ஊர் ஊராக தப்பித்துச் சென்றான். பிறகு, பிடிபட்டு சுவீடன் நாட்டிலும், ஃபிரான்ஸ் நாட்டிலும் தலா ஆறு மாதங்கள் சிறைகளில் இருந்தான்.
அமெரிக்காவில் இவன் மேல் இருந்த வழக்குகளுக் காக அதிகாரி இவனைக் கைது செய்து விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்து வந்தார். விமானம் ரன்வேயில் நிறுத்தத்துக்கு வரும் சமயம், விமானத்தின் அத்தனை வழிகளும் இவனுக்கு அத்துப் படி என்பதால் கழிவறையில் இருந்து நைசாக நழுவி வேறு வழியில் தப்பித்து, விமான நிலையத்தைவிட்டு ஓடிவிட்டான்.
ஆனால், போலீஸின் இடைவிடாத துரத்தலில் மாட்டிக் கொண்டான். அமெரிக்காவின் கோர்ட் இவனுக்கு 12 வருடங்கள் சிறைத் தண்டனை கொடுத்தது. அந்தச் சிறையில் இருந்தும் சாமர்த்தியமாக தன்னை சிறைத்துறை அதிகாரியாக நம்பவைத்து தப்பித்தான். மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தார்கள்.
இவனைக் கைது செய்த காவல் துறை அதிகாரிக்கு இவன் மேல் கோபம் இருந்தாலும் இவனுடைய அபாரமான புத்திசாலித்தனத்தின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. பல காசோலை மோசடி வழக்குகளில் இவனிடம் ஆலோசனை கேட்டார் அவர். சிறைத் தண்டனையை 5 வருடங்களோடு முடித்து, இவனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மோசடி வழக்கு களைத் தீர்க்க உதவி செய்ய வைத்தார்.
விடுதலையான அபாக்னேல் சில வேலைகளில் சேர்ந்தான். ஆனால், இவனுடைய குற்றப் பின்னணி தெரிந் ததும் உடனே வேலையைவிட்டு நிறுத் தினார்கள். மனம் நொந்துபோன அபாக்னேல் தன் புத்திசாலித்தனத் தையே ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி னால் என்னவென்று யோசித்தான்.
அபாக்னேல் ஒரு வங்கியின் உயர் அதிகாரியிடம் தன் குற்ற வரலாறு முழுவதும் சொல்லிவிட்டு, “உங்கள் வங்கி ஊழியர்கள் மத்தியில் ஒரு மணி நேரம் நான் பேசுகிறேன். காசோலை மோசடிகளை எப்படி தடுக்க முடியும் என்று விளக்குகிறேன். என் பேச்சு உபயோகமாக இருந்தால், எனக்கு 500 டாலர்கள் தாருங்கள்’’ என்றான். அனுமதி அளிக்கப்பட்டது. அற்புதமாகப் பேசினான் அபாக்னேல். பணம் தந்ததுடன் மற்ற வங்கிகளுக்கும் சிபாரிசு செய்தார் அந்த அதிகாரி.
காசோலை மோசடிகளுக்கு எதிரான வழிமுறைகளை வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் வழங்குவதையே தொழிலாக மேற்கொண்டான். காவல் துறைக்கும் ஆலோசகராக பணியைத் தொடர்ந்தான். 67 வயதான அபாக்னேல் இன்று மிகப் பெரிய இடத்தில் இருக்கிறான். தவறு… இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அபாக்னேல் தொடங்கி வெற்றி கரமாக நடத்தி வரும் இந்த நிறுவனம் இப்போது 14,000 நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். நிறைய விருதுகள் பெற்று, பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்துள்ளார். ஒரு தொண்டு நிறு வனம் நிதி திரட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் அபாக்னேலின் சிறப்புரைக்கும் அவருடன் ஒரு இரவு விருந்து சாப் பிடவும் 250 டாலர்கள் என்று நிர்ணயித்து டிக்கெட்டுகளை விற்று, 4 லட்சம் டாலர்களை நிதியாக திரட்டியது என்றால் ஒரு பேச்சாளராக இவரின் பிரபல்யத்தைப் புரிந்துகொள்ளலாம்.
அபாக்னேலின் மூன்று மகன்களில் ஒரு மகன் இன்றைக்கு காவல்துறையில் ஓர் அதிகாரியாக இருக்கிறார். அபாக்னேலின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் எடுத்த ‘கேட்ச் மி இஃப் யூ கேன்' திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது.
அபாக்னேல் ஒரு பேட்டியில், ‘‘நான் செய்த குற்றங்கள் மிகவும் மோச மானவை. ஒழுக்கமற்றவை. நியாய மற்றவை. அதனால்தான் மூன்று ஜனாதிபதிகள் எனக்கு பொது மன்னிப்பு வழங்க முன்வந்தபோதும் நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மோசடி குற்றங்களைப் பொறுத்தவரையில்..மோசடிகள் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் சிறந்ததாக நான் கருதுகிறேன்'’ என்றார்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

Tuesday, June 16, 2015

ஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்டை பிரபாகர்

அமெரிக்க வரலாற்றில் இது வரை நான்கு ஜனாதிபதி கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 1865-ல் ஆபிரஹாம் லிங்கன், 1881-ல் ஜேம்ஸ் கார்ஃபீல்ட், 1901-ல் வில்லியம் மெக்கன்லேயும், 1963-ல் ஜான் எஃப் கென்னடியும் கொல்லப்பட்டார்கள்.
ஜேம்ஸ் கார்ஃபீல்டை சுட்ட சார்லஸ் உடனே பிடிபட்டு, விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டான். வில்லியம் மெக்கின்லேயைச் சுட்ட லியானும் உடனே பிடிபட்டு, பிறகு மின்சார நாற்காலி மூலம் கொல்லப்பட்டான். ஜான் எஃப் கென்னடியைச் சுட்ட ஆஸ்வால்ட் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் மூன்றாம் நாள் அவன் சிறைக்கு மாற்றப்பட்டபோது, ஜேக் ரூபி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஆனால், லிங்கனை சுட்ட ஜான் வில்க்ஸ் பூத் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கே மிகப் பெரிய சவாலாக அமைந்தான்.
லிங்கன் ஜனாதிபதியாக பதவி யேற்றவுடன் அடிமைத்தனத்தை ஒழிப் பதில் தீவிரமாக இருந்தார். இதனால் அடிமைத்தனத்தை ஆதரித்த பல தெற்கு மாகாணங்களின் எதிர்ப்பைப் பெற்றார்.
அந்த எதிர்ப்புக் கும்பலில் ஒருவன் தான் ஜான் வில்க்ஸ் பூத். இவன் ஒரு மேடை நடிகன். இவனுக்கு நிறைய ரசிகர் கள் இருந்தார்கள். சொல்லப்போனால் லிங்கனே கூட இவனுடைய ரசிகர்.
பூத்தும், அவனுடைய நண்பர்கள் சிலரும் லிங்கனை முதலில் கடத்திச் செல்ல திட்டமிட்டனர். அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. பிறகுதான் கொலை செய்ய முடிவெடுத்தனர். 1865 ஏப்ரல் 14 வெள்ளியன்று, பூத் நடித்த ‘அமெரிக்கன் கஸின்’ நாடகத்தை பார்க்க ஃபோர்ட் ஹால் தியேட்டருக்கு தன் மனைவியுடன் லிங்கன் வரப்போவதை அறிந்ததும், தன் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற அதுதான் சந்தர்ப்பம் என்று தீர்மானித்தான் பூத்.
நாடகம் தொடங்கியது. சற்றே தாமத மாக தன் மனைவியுடன் வந்த லிங்கன், பால்கனியில் தனி அறையில் அமர்ந்து நாடகத்தை ரசிக்கத் தொடங்கினார். இரவு மணி 10-க்கு மேல், பூத் பங்கு பெறாத ஒரு காட்சி மேடையில் நடந்தபோது, அவன் ஒப்பனை அறையில் இருந்து மெல்ல நழுவி லிங்கன் அமர்ந்திருக்கும் பால்கனி பகுதிக்கு வந்தான். சத்தமில்லாமல் கதவைத் திறந்தான்.
நாடகத்தில் ஒரு நகைச்சுவை காட்சி. வந்திருந்த 1,700 பார்வையாளர்களும் அந்தக் காட்சியை உரக்க சிரித்து ரசிக்க… லிங்கனும் சிரித்தபடி இருக்க, பூத் தன் டெரின்ஜர் கைத் துப்பாக்கியால் லிங்கனின் பின் மண்டையில் சுட்டான். லிங்கன் நிலைகுலைந்து சரிந்தார். லிங்க னின் மனைவி அலறினார்.
லிங்கனுடன் வந்திருந்த ஓர் ராணுவ அதிகாரி பூத்தை பிடிக்க முயற்சிக்க, அவரை அவன் கத்தியால் குத்திவிட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்தான். அப்போது பூத்துக்குக் காலில் அடிபட்டது. அப்படி யும் அவன் சமாளித்துக்கொண்டு வெறியோடு மேடையேறி, ‘பழிக்குப் பழி வாங்கிவிட் டேன்’ என்று கத்தினான்.
முதலில் அதை ஏதோ நாடகத்தின் ஒரு பகுதி என்றே நினைத்தார்கள். பால்கனி பகுதியில் இருந்து அலறலும், ‘அவ னைப் பிடியுங்கள்’ என்ற ராணுவ அதிகாரியின் கத்தலுமே நடந்ததை உணர வைத்தது. உடனே பலர் அவ னைப் பிடிக்க துரத்தினார்கள். பூத்துக்கு அந்த நாடக அரங்கின் அமைப்புகள் நன்கு தெரியும் என்பதால் அத்தனை பேருக்கும் போக்குக் காட்டி ஓடி, நாடக அரங்கின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த குதிரையில் ஏறி தப்பிவிட்டான்.
நாடகத்துக்கு வந்திருந்தவர்களில் இரண்டு டாக்டர்களும் இருந்தார்கள். அவர்கள் மயங்கிய நிலையில் இருந்த லிங்கனுக்கு முதலுதவி செய்தார்கள். அரங்கத்துக்கு வெளியில் இருந்த ஒரு வீட்டுக்கு லிங்கன் தூக்கிவரப்பட்டார். சிறந்த மருத்துவர்கள் வந்தார்கள். லிங்க னின் கபாலத்தைத் துளைத்து மூளைப் பகுதியில் தங்கிவிட்ட தோட்டாவை நீக்க முயற்சித்தார்கள். மறுநாள் காலையில் லிங்கனின் உயிர் பிரிந்தது.
பூத்தும், அவனது நண்பன் ஹெரால் டும் கிளிண்டன் என்னும் சிறிய நகரத்துக் குப் போனார்கள். பால்கனியில் இருந்து குதித்தபோது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வைத்தியம் செய்ய மட் என் னும் டாக்டரை சந்தித்தார்கள். அவரிடம் குதிரையில் இருந்து விழுந்துவிட்ட தாக பொய் சொன்னான் பூத். டாக்டர் வைத்தியம் செய்து, ஒரு ஜோடி தாங்குக் கட்டைகளும் கொடுத்தார். பிறகு, டாக்ட ருக்கு லிங்கன் கொலையில் ராணுவத் தால் தேடப்படுபவன் பூத் என்பது தெரிய வந்ததும், அங்கிருந்து போகச் சொல்லி விட்டார்.
பூத் தன் நண்பனுடன் பிரிவினை வாதக் குழுவைச் சேர்ந்த சில நண்பர் களைத் தேடிச் சென்றான். அவர்கள் அடைக்கலம் கொடுக்கத் தயங்கினார் கள். கடைசியாக கேரட் என்கிற புகை யிலை விவசாயிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் இருவரும் தங்கினார் கள். உள்நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த பிரிவினைவாதக் குழுவின் படை வீரர்கள் என்று பொய் சொன்னார்கள்.
லிங்கன் சுடப்பட்டு 12 நாட்களுக்குப் பின்னர், ஏப்ரல் 26-ம் தேதி அன்று அவர்கள் தங்கியிருந்த பண்ணை வீட்டை அமெ ரிக்க ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தார்கள். இருவரை யும் வெளியே வருமாறு எச்சரித்தார்கள். இருவரும் வெளியே வரவே இல்லை. அவர்களை வெளியே வர வைப்பதற்காக, அந்த வீட்டைச் சுற்றிலும் தீ வைத்தார்கள். உயிர் பயத்தில் நண்பன் ஹெரால்டு மட்டும் வெளியே வந்து சரணடைந்தான்.
ஆனால், பூத், ‘என்னை உங்களால் உயிருடன் பிடிக்கவே முடியாது’ என்று கத்திவிட்டு வீரர்களை சுடுவதற்கு ஆயத்தமானான். இதை ஒரு இடுக்கு வழியாக கவனித்த ஒரு ராணுவ வீரன், பூத்தை தலையின் பின்புறம் சுட்டான். ரத்தம் தெறிக்க தடுமாறி விழுந்தவனை வெளியே இழுத்து வந்தார்கள். அதன் பிறகு மூன்று மணி நேரம் உயிருக்குப் போராடி இறந்தான் பூத். அவன் கடைசி யாக படை வீரர்களிடம், ‘என் தாயிடம் சொல்லுங்கள், அவள் மகன் தன் நாட்டுக் காக இறந்தான் என்று!’ என்றான்.
பூத்துடன் சதியில் ஈடுபட்டவர்களில் நான்கு பேர். இவர்கள் ராணுவ விசா ரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார் கள். அவர்களில் ஒருவர் பெண். மேரி சூரத் என்கிற அந்தப் பெண்மணி, ‘‘என் மகன் சூரத்தின் நண்பர்கள் என்பதால் அவர்கள் தங்குவதற்கு என் வீட்டை வாடகைக்குவிட்டேன்.
அதைத் தவிர இந்தச் சதியில் எனக்கு பங்கில்லை’ என்று கடைசி வரையில் வாதாடினார். தலை மறைவான தன் மகன் இருக்குமிடம் பற்றி தூக்கிலிடும் வரை சொல்லவில்லை. கனடாவுக்குத் தப்பிச் சென்ற ஜான் சூரத் 18 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டான். ஆனால், அவனுடைய வக்கீல்களின் சாமர்த்தியமான வாதங்களால் அவன் விடுதலையானான்.
லிங்கனின் உடல் வாஷிங்டனில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டப் பிறகு, ‘லிங்கன் ஸ்பெஷல்’ என்று குறிப்பிடப்பட்ட தனி ரயிலில் 1,6754 கிலோ மீட்டர் கடந்து, லிங்கனின் ஊரான ஸ்பிரிங்ஃபீல்டில் அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த ரயில் 180 நகரங் கள் வழியாக 13 நாட்கள் பயணம் செய் தது. வழியெங்கும் முக்கியமான நகரங் களில் லிங்கனின் உடல் பொது மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் மிக அதிகமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது லிங்கனுக்குதான்.
பூத் எப்படி பிடிபட்டான்?
பூத் இருக்குமிடம் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் டாலர்கள் தருவதாக அரசாங்கம் அறிவித் தது. (1865-ம் வருஷம் என்பதை நினை வில் கொள்க!) பூத்தை பிடிக்க 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் களத்தில் இறக்கப் பட்டார்கள். வீடுகளிலும், காடுகளிலும் அவர்கள் இரவு, பகலாக தேடினார்கள்.
அந்தத் தேடலில் ஓர் ஆற்றைக் கடக்கும்போது ஏற்பட்ட படகு விபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் உயிரை இழந்தார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு பண்ணை வீட்டில் பூத் பதுங்கியிருக்கும் தகவலை அதன் உரிமையாளர் கேரட் தெரிவித்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது. கேரட் மூலம் தகவல் தெரியவில்லை என்று இன்னொரு குறிப்பு அதை மறுக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ராணுவப் படை சுட்டு கைப்பற்றியது பூத்தே அல்ல; பூத் சாயலில் இருந்த வேறு ஒருவனைத்தான் என்றும், பூத் 40 ஆண்டுகள் தலைமறைவாகவே வாழ்ந்து இறந்தான் என்றும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இன்றைய அறிவியல் சாத்தியத்தில் இந்த சந்தேகத்தை சுலபமாக போக்க முடியும் என்று பூத்தின் குடும்ப வாரிசுகளில் சிலர் சட்டபூர்வமாக போராடி வரு கிறார்கள்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்ட பூத்தின் உடலை கல்லைறையில் இருந்து தோண்டி அவன் எலும்புகளில் டி.என்.ஏ சோதனை செய்யலாம் என்று கோர்ட்டில் அனுமதி கேட்டார்கள். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு கூட மற்றொரு முயற்சியாக மெரிலாண்ட் நேஷனல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் குண்டு துளைத்த பூத்தின் எலும்புகளை டி.என்.ஏ சோதனைக்கு வழங்க வேண்டும் என்று வழக்கு போட்டனர் குடும்பத்தினர். இதற்கும் மியூசியக நிர்வாகம் மறுத்துவிட்டட்து. இந்த வரலாற்று சந்தேகம் இன்றளவும் தொடர்கிறது.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]
நன்றி - த இந்து

Tuesday, June 02, 2015

12.01.1967 எம் ஜி ஆரை சுட்ட வழக்கில் எம் ஆர் ராதா மாட்டியது எப்படி? -க்ரைம் வழக்கு

பட்டுக்கோட்டை பிரபாகர்

12.01.1967 அன்று எம்.ஜி.ஆர் சுடப் பட்டார். எம்.ஆர். ராதாவும் சுடப் பட்டார். வழக்கின் விசாரணையில் ‘எம்.ஆர். ராதா என்னை சுட்டார். பிறகு தன்னைத் தானே கூட்டுக்கொண்டார்' என்றார் எம்.ஜி.ஆர். ‘எம்.ஜி.ஆர் என்னை சுட்டதால், அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி நான் அவரை சுட்டேன்' என்றார் எம்.ஆர். ராதா. எது உண்மை?
சம்பவத்தை கண்ணால் பார்த்த ஒரே சாட்சி எம்.ஆர். ராதாவுடன் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் வாசு மட்டுமே. அவர் தன் சாட்சியத்தில், ‘எம்.ஆர். ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டுப் பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அவ ரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கப் போராடினேன். அப்போது அவர் தன் னைத் தானே இரண்டாவது முறையாக சுட்டுக் கொண்டார். அதன் பிறகு நான் அந்தத் துப்பாக்கியைப் பறித்தேன். பிறகு போலீஸில் ஒப்படைத்தேன்' என்றார்.
எம்.ஜி.ஆர் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், எம்.ஜி.ஆர் தரப்பின் நிர்பந்தத்தாலும் தயாரிப்பாளர் வாசு பொய் சாட்சி சொல்கிறார் என்றது டிஃபன்ஸ் தரப்பு.
அரசுத் தரப்பு இருவருக்கும் இடை யில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு களைப் பதிவு செய்தது. ‘தொழிலாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப் பட்ட ஒரு காட்சியில், தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பஸ் வாங்கும் சூழலில் எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ்தான் இனி தொழி லாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' என்று வசனம் பேச வேண்டும். எம்.ஜி.ஆர் ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என்றார். அதை எம்.ஆர்.ராதா ஆட்சேபித்தார். ‘சினிமாவுக்குள் உன் கட்சியின் சின்னத்தைக் கொண்டு வராதே' என்றார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட, படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தி இறுதியில் திரைக்கதையில் இருந்தபடி ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார்.
‘நாத்திகம்’ பத்திரிகையில் எம்.ஆர். ராதா எழுதிய ஒரு கட்டுரையில் எம்.ஜி.ஆரின் பெயரைக் குறிப்பிடாமல், ஆனால் அது எம்.ஜி.ஆர்தான் என்று புரியும்விதமாக ஒரு செய்தியைக் குறிப் பிட்டிருந்தார். காமராஜரைக் கொலை செய்ய ஒருவர் சதி செய்வதாக குறிப் பிட்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் மனம் புண்பட்டது.
டிஃபன்ஸ் தரப்பில் எம்.ஜி.ஆர் சினிமா வில் எம்.ஆர். ராதாவை வளரவிடாமல் இடையூறுகள் செய்ததாகவும், எம்.ஆர். ராதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்ததாகவும் வாதிட்டார்கள்.
போலீஸ் தரப்பு தங்களிடம் வாசு ஒப்படைத்த ராதாவின் துப்பாக்கியின் ஆறு சேம்பர் களில் மூன்றில் மட்டுமே குண்டுகள் இருந்ததாகவும், எம்.ஜி.ஆர் வீட்டில் கைப்பற் றப்பட்ட அவரது துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது எம்.ஜி.ஆர் அணிந்திருந்த உடைகள் அவசரமாக ஏன் துவைக்கப்பட்டன என கேள்வி எழுப்பியது ராதா தரப்பு. அவற்றில் ரத்தக் கறைகள் அழிக்கப்படாமல் இருந்திருந் தால் அதில் எம்.ஜி.ஆரிடம் இருந்து துப் பாக்கியைப் பறிக்க ராதா முயன்றபோது, சிந்திய அவரின் ரத்தத் தடயங்களை நிரூபித்திருக்க முடியும் என்றது.
வழக்கு விசாரணை முடிந்து 1967-ம் வருடம் நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித் தார். தீர்ப்பின் சுருக்கம்: ‘எம்.ஆர். ராதா குண்டுகள் நிரப்பப்பட்டத் துப்பாக்கியை எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றதிலேயே அவரின் கொலை நோக்கம் தெரிகிறது.
அரசியல் விரோதம் காரணமாக ராதாதான் தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத் தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது. ஆகவே, ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்குகிறேன்.'
இந்த வழக்கில் உண்மை யைக் கண்டறிய மிக உதவி யாக இருந்தது தடயவியல் துறைதான். ஒரு துப்பாக்கி யில் இருந்து குண்டு வெளி யேறும்போது வெப்பத்தினால் சற்றே விரிவடைந்து சுழன்ற படி துப்பாக்கியின் குழலின் உட் பகுதியில் கடுமையான அழுத்தத் துடன் உரசியபடி வெளியேறும். அப்படி உரசுவதால் குண்டின் மேல் கோடுகள் விழும். குழலின் உட்புற அமைப்பு எல்லாத் துப்பாக்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. இரண்டு வெவ்வேறு துப்பாக்கிகளில் இருந்து சுடப்பட்ட குண்டுகளின் மேல் இருக்கும் உராய்வுக் கோடுகள் வெவ்வேறு விதமாகவே இருக்கும்.
இதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா இருவரின் துப்பாக்கிகளி லும் குண்டுகள் போட்டு சோதனைக்காக சுட்டு அந்த குண்டுகளையும் அவர் களின் உடல்களில் இருந்து நீக்கப்பட்ட குண்டுகளையும் மைக்ராஸ்கோப் வழியாக ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந் தார்கள்.
தடயவியல் துறையின் நிபுணர் களான டாக்டர். கே.சி.பி.கோபால கிருஷ்ணன், டாக்டர். பி.சந்திர சேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த சோதனைகளை நடத்தி மூன்று குண்டு களும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டவை என்று உறுதி செய்தார்கள்.
தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே அவரது அப்பீல் தள்ளுபடி செய்யப் பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண் டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவ ருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
விடுதலைக்குப் பின் மலேசியாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ராதா பேசியபோது, ‘எம்.ஜி.ஆரும் நானும் 50 வருஷமா நண்பர்கள். சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுக்கிட்டோம். அந்த சமயம் கம்பு இருந்திருந்தா, கம் பால சண்டை போட்டிருப்போம். துப் பாக்கிதான் இருந்துச்சி. அதனால துப் பாக்கியால சுட்டுக்கிட்டோம்' என்றார்.
அன்றைய தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் ஆப்ரஹாம் சுகுமார் ராதாவுக்கு முதலுதவி செய்தபோது அவர், ‘நான் தான் சுட்டேன், போலீஸுக்கு ஸ்டேட் மெண்ட் கொடுத்தாச்சு' என்று சொன்ன தாக தன் பிளாக்கில் எழுதியிருக்கிறார்.
பிறகு ஒருநாள் எம்.ஜி.ஆர் தடயவியல் நிபுணர் பி.சந்திரசேகரனிடம், ‘மிகவும் பக்கத்தில் இருந்து சுடப்பட்டபோதும் நானும், எம்.ஆர்.ராதாவும் எப்படி பிழைக்க முடிந்தது?' என்று கேட்ட தால், அவர் அந்த ரவைகளை (குண்டு) தீவிரமாக ஆராய்ந்தார். ஒரு துப்பாக்கி ரவையின் வேகத்தை உள்ளேயிருக்கும் ரவையின் பிடிப்புதான் தீர்மானிக்கிறது. ராதா பயன்படுத்திய ரவைகள் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட் டவை.
அவற்றை ஒரு தகர டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை யின் டிராயரில் வைத்திருந்தார். டிரா யரை ஒவ்வொரு முறை இழுத்து மூடும் போதும் ரவைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்திருக்கின்றன. அத னால் ரவையின் மேல் பிணைக்கப் பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. இப்படி அழுத்தம் குறைந்த ரவைகளைப் பயன்படுத்திய தால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றார்.
கதையில் உத்தி
நான் எழுதிய ஒரு கதையில் ஒரு கொலை. போலீஸ் சந்தேகிக்கும் ஒருவனைச் தேடிச் செல்வார்கள். அவன் தங்கியிருக்கும் அறை பூட்டப்பட்டிருக்கும். காத்திருப்பார்கள். அவன் கையில் சூட்கேஸோடு வருவான். தான் மூன்று நாட்களாக ஊரில் இல்லை என்று சொன்னபடி அறைக் கதவை சாவி போட்டு திறப்பான். கதவின் கீழ் இடுக்கு வழியாக உள்ளே தள்ளப்பட்டிருந்த மூன்று தினங்களின் தினசரி பேப்பர்களை எடுத்து மேஜையில் வைப்பான்.
அவனை சிக்க வைக்கும் எந்தத் தடயமும் கிடைக்காது. அந்த மூன்று தினங்களின் பேப்பர்களை செக் செய்வார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமையின் இலவச இணைப்புப் புத்தகம், சனிக்கிழமை பேப்பருக்குள் இருக்கும். அதை வைத்து அதட்டி விசாரித்ததும், தான் பேப்பர்களை செட்டப் செய்தபோது மாறிவிட்டதாகச் சொல்வான். செய்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]


நன்றி - த இந்து

Sunday, May 17, 2015

துப்பறியும் கதைகளை எழுதும்போது- பட்டுக்கோட்டை பிரபாகர் -குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...

குற்றங்களைக் கண்டுபிடித்தது தொடர்பாக ஓர் அலசல் தொடர்...
தொடர்’வதற்கு முன்..
அன்புள்ள உங்களுக்கு…
வணக்கம்.
பள்ளி நாட்களில் இருந்தே துப்பறியும் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். முத்து காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்த காலம். ‘இரும்புக் கை மாயாவி’-க்கு ரசிகர் மன்றம் வைக்காததுதான் பாக்கி. துப்பறியும் கதாபாத்திரங்களில் தேவனின் சாம்பு என்னை வெகுவாக கவர்ந்தார். பிறகு, சுஜாதாவின் கணேஷ்-வஸந்த். கல்லூரி காலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் பைத்தியமானேன். ஜெய்சங்கர் நடித்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களை விடாமல் பார்ப்பேன். அவர்தானே அப்போது தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!
ஒரு படத்தில் சி.ஐ.டியான ஜெய்சங்கர் தன் நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பார். இருவரும் வெளியே புறப்படும்போது ஒரு சிறிய காகிதத் துண்டை மடக்கி கதவின் ஓரத்தில் செருகி வைத்து கதவை மூடுவார். ‘என்ன செய்கிறாய்?’ என்று நண்பர் கேட்பார். ‘வா, சொல்கிறேன்’ என்று அழைத்துப் போவார். வெளியே வேலை முடிந்து இருவரும் திரும்புவார்கள். அந்த மடக்கப்பட்ட துண்டு சீட்டு கீழே கிடக்கும். ‘யாரோ கதவைத் திறந்தி ருக்காங்க’ என்பார் ஜெய். எனக்கு ‘அட’ என்று இருந்தது.
இதுபோல சின்னச் சின்ன ஐடியாக்களை எங்கே படித்தாலும், பார்த்தாலும், பேசினாலும் நான் ரசிக்கத் தொடங்கினேன். நான் கதை எழுதத் தொடங்கியபோது ‘அட’ என்று நினைக்க வைக்கிற கதைகள் அதிகம் எழுத வேண்டும் என்று ஆர்வப்பட்டேன்.
நான் எழுதிய முதல் சிறுகதையான ‘அந்த மூன்று நாட்கள்’ கதையில் அரைக் கிறுக்காக நடித்து ஒருவனை நம்ப வைத்து, அவனுக்கே தெரியாமல் கடத்தி வைத்து, அவனுடைய பெற் றோரை பிளாக் மெயில் செய்து பணம் பெற்றபின் அவனை விடுவிப்பான் ஒருவன். தான் கடத்தப்பட்டதோ, தன்னை வைத்து மிரட்டி பணம் வாங் கப்பட்டதோ தெரியாமல் கூலாக வீட்டுக்குத் திரும்பி பெற்றோர் சொன்ன பிறகுதான் உணர்வான் அவன்.
இந்த முதல் கதை எனக்குப் பெற் றுத் தந்த பாராட்டுக்கள்தான் என் னைத் தொடர்ந்து எழுத வைத்தது பரத், சுசிலா என்கிற துப்பறியும் ஜோடியை உருவாக்க வைத்தது. அவர்கள் காத லித்துக்கொண்டே துப்பறிந்தார்கள். இப்போதும் என்னைச் சந்திக்கும் வாசகர் கள் அவர்களை நலம் விசாரிக்கிறார்கள்.
துப்பறியும் கதைகளை எழுதும்போது எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆர்வம் சேர்ந்து கொள்ளும். செஸ் விளையாடுவது போல மூளை துறுதுறுக்கும். ஒரு புதி ருக்கு விடை தேடுவது எப்படி சுவாரஸ் யமான விஷயமோ அதுபோல சுவாரஸ் யமான புதிரை உருவாக்குவது இரண்டு மடங்கு சுவாரஸ்யமான விஷயம்.
‘Who Done it?’ என்கிற குற்றத்தை யார் செய்தது என்று கண்டுபிடிக்க வைக்கும் வகையான கதைகளில் பல கதாபாத்திரங்களின் மேல் சந்தே கத்தை விதைப்பதும், இறுதியில் ஒரு எதிர்பாராத முடிவைத் தருவதும் சவாலான வேலை. படிக்கும்போது பரபரப்பாக இருக்க வேண்டும் என்றால் எழுதும்போது கொஞ்சம் மண் டையை உடைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
இப்போது குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் விஞ்ஞானத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. மிகவும் குயுக்தி யான, விசித்திரமான உத்திகளுடன் குற்றங்களை செய்கிறார்கள் என்றால், அதை கண்டுபிடிப்பதிலும் அதே மாதிரி நுணுக்கமான புத்திசாலித்தனமான அணுகுமுறை அவசியமாகின்றன.
இந்தியாவின் உளவு ஸ்தாபனமான ரா (RAW), யுரேனியத்தைப் பயன் படுத்தி பாகிஸ்தான் அணு ஆயுத ஆராய்ச்சி நடத்தி வருவதை ரகசியமாக உளவு பார்த்து, அப்போது பிரதம ராக இருந்த மொரார்ஜி தேசாயிடம் தெரி வித்தது. இந்தத் தகவலை ’ரா’ எப்படி கண்டுபிடித்தது தெரியுமா? பாகிஸ் தானின் அணு ஆராய்ச்சி நிகழும் கவுட்டா ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக் கும் பகுதியில் உள்ள சலூன்களில் வெட்டப்படும் தலைமுடிகளை சேகரித்து அதை கதிரியக்க ஆராய்ச்சி செய்து இந்தமுக்கியமான தகவலைக் கண்டுபிடித்தது.
பல குற்ற வழக்குகளில் குற் வாளிகளைக் கண்டுபிடிக்க சின்ன தடயங்களே உதவியாக இருந்திருக் கின்றன. சில வழக்குகளில் அந்தத் தடயங்கள் உடனடியாக கிடைக் காமல் 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட கிடைத்திருக்கின்றன. கற்பனை களைவிடவும் உண்மைகள் வித்தியாச மானவை என்பார்கள்.
இந்தத் தொடரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ந்த பல வகையான குற்ற வழக்குகளில் குற்ற வாளிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று விரிவாக பார்க்கலாம். அத்தோடு இலவச இணைப்பாக நான் எழுதிய துப்பறியும் கதைகளில் கையாண்ட சில உத்திகளைப் பற்றியும் எழுத இருக் கிறேன்.
‘எப்படி? இப்படி!’ என்கிற புதிய தொடர் ‘அட’ என்று உங்களை புருவம் உயர்த்த வைக்கும். அல்லது ‘அடப் பாவிகளா!’ என்று அங்கலாய்க்க வைக் கும். அடுத்த வெள்ளி முதல் வாரா வாரம் சந்திப்போம். அதுவரை ஏற்கெனவே வணக்கம் கூறிவிட்டதால் ‘காத்தி ருங்கள்’ என்று மட்டும் கூறுகிறேன்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

நன்றி =  hindu