Showing posts with label அவள் விகடன். Show all posts
Showing posts with label அவள் விகடன். Show all posts

Wednesday, August 22, 2012

செட்டிநாடு ரெசிபிகள்

30 வகை செட்டிநாடு ரெசிபி


தொகுப்பு: பத்மினி

படங்கள்: எம்.உசேன்


'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த இணைப்பிதழில் 'செட்டிநாடு சமையல் மேளா’வையே நடத்திக் காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் 'சமையல் கலை நிபுணர்' கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.



''சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும் உற்ற துணையாகவும் இருக்கும்'' என்று உறுதி கூறும் கிருஷ்ணகுமாரியின் ரெசிபிகளை, கலாரசனையுடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. 




 மிளகாய் சட்னி

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20,  புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வாணலியில்  சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து,  அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.


குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.


 வெள்ளை பணியாரம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.


குறிப்பு:  மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!


 கல்கண்டு வடை

தேவையானவை: உளுந்து - ஒன்றரை கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந் தால், வடை கறுத்து விடும்.

 கும்மாயம்

தேவையானவை: வெள்ளை முழு உளுந்து - ஒரு கப், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் - ஒன்றரை கப், நெய் - கால் கப்.


செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.


 இனிப்பு சீயம்


தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


பூரணம் செய்ய: தேங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன். 

செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து  வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.


பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்.... சுவையான இனிப்பு சீயம் தயார்!


ஜவ்வரிசி ஊத்தப்பம்


தேவையானவை: இட்லி அரிசி - 4 கப், உளுந்து - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.



குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல்  சேர்த்துக் கொள்ளலாம்.

 குழி பணியாரம்



தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்.... சுவை யான குழி பணியாரம் ரெடி.



கருப்பட்டி பணியாரம்



தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் - தலா கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.

குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.

 கந்தரப்பம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுந்து - கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - இரண்டரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை  ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.



 ஐந்தரிசி பணியாரம்



தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை - தலா அரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்... ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி,  மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.



 பால் பணியாரம்



தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.



செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

 பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்... சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!

 பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை -  உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - முக்கால் கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா  கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.



குழம்புக்கு: தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.

செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.



 கத்திரிக்காய் மசாலா



தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் -  ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.



 வெண்டைக்காய் மண்டி



தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், அரிசி களைந்த நீர் - 2 கப், புளி - எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு பல் - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.



 மாங்காய் வற்றல் ரசம்



தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், மாங்காய் வற்றல் - 6, வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகு - சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 6 பல், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு - சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.



குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.



 கத்திரிக்காய் திரக்கல்


தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



அரைக்க: பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.


செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.



தண்ணிக் குழம்பு



தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், புளி - சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.

பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்.



செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

 வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: துவரம்பருப்பு,  காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு - மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது... இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.



 செட்டிநாட்டு அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்


செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.



 ஜவ்வரிசி பாயசம்


தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி,  ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.


குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் - தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.

 சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை: சுண்டைக்காய்  - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, புளி - கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.



குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.

 கீரை மண்டி

தேவையானவை: கீரை - ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 2, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - கால் கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய  பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).



குறிப்பு:  வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாக உதவும் உணவு இது. 'மண்டி இருந்தால், உண்டி பெருக்கும்’ என்பது செட்டிநாட்டு பழமொழி.



 சிவப்பரிசி புட்டு

தேவையானவை: சிவப்பரிசி மாவு - ஒரு கப், சர்க்கரை - ருசிக்கேற்ப, தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: வறுத்த சிவப்பரிசி மாவை தண்ணீர் தெளித்துப் பிசிறிக் கொள்ளவும் (கட்டியில்லாமல் பிசிறவும்). ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் ஆவியில் வேக வைத்து எடுத்து, வேக வைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை,  ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்கு கலக்கினால்... சுவையான சிவப்பரிசி புட்டு தயார்.


 கவுனி அரிசி



தேவையானவை: கவுனி அரிசி - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), நெய் - 3 டேபிள்ஸ்பூன்.


செய்முறை: கவுனி அரிசியை சுத்தம் செய்து 5 டம்ளர் நீரில் சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி, அடுப்பில் வைக்கவும். 2 விசில் வந்ததும், 'சிம்’மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் சர்க்கரை, நெய், துருவிய தேங்காய் கலந்து சூடாகப் பரிமாறவும். இனிப்பு தூக்கலாக வேண்டுமானால், கூடுத லாக கொஞ்சம் சர்க்கரை சேர்க்கவும்.

குறிப்பு: செட்டிநாட்டு விசேஷங்களில் இது கண்டிப்பாக இடம் பிடிக்கும். சிவப்பு அரிசிக்கும், கவுனி அரிசிக்கும் வித்தியாசம் உண்டு. எனவே கடைகளில் கவனமாக கேட்டு வாங்க வேண்டும்.

 சூப்பி

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, பால் - அரை டம்ளர், பூண்டு - 2 பல், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, பிரியாணி இலை, கீறிய பச்சை மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் துவரம்பருப்பு வேக வைத்த நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும், பூண்டை தட்டிப் போடவும். பின்னர் பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கி பரிமாறவும். விருப்பப் பட்டால், பீன்ஸ், காலிஃப்ளவர், கேரட் சேர்த்துக் கொள்ளலாம்.

 கார சட்னி

தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தோல் உரித்த சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.


குறிப்பு: வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை. செட்டிநாட்டு டிபன் வகைகளின் சுவையைக் கூட்டுவதில் இந்த கார சட்னிக்கு முக்கிய இட முண்டு.

 பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு, பொடித்த வெல்லம் - தலா 2 கப், தேங்காய் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள இரண்டாம் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். அதில் உருட்டி வைத்துள்ள உருண்டை களைப் போட்டு வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும், முதல் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

பீட்ரூட் வடை

தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பருப்பு வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவிட்டு, அவற்றுடன், மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய பீட்ரூட், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்தெடுத்தால்... சுவையான, செட்டிந£ட்டு ஸ்பெஷல் பீட்ரூட் வடை தயார்.


 வெஜிடபிள் பொங்கல்


தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், தக்காளி, கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 5, பச்சைப் பட்டாணி - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று,  முந்திரி - 10, நெய் - தேவையான அளவு, எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
.

செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து, மூன்றரை டம்ளர் நீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். காய்கறிகள் அனைத்தை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெயை சூடாக்கி, மிளகு, சீரகம், பட்டை, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்த காய்கறி கல வையை, குழைய வேகவைத்த அரிசி - பருப்புடன் சேர்த்துக் கிளறி, நெய் ஊற்றிக் கலந்தால்... வெஜிடபிள் பொங்கல் தயார். இதை சூடாகப் பரிமாறவும். தேங்காய் சட்னி  இதற்கு சிறந்த காம்பினேஷன்.


நன்றி - அவள் விகடன்

Sunday, June 10, 2012

அப்பாவிக்கணவர்களுக்கான 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

'டைம் மேனேஜ் மென்ட்’ என்பது, வேலைக்கு செல்பவர் களுக்கு மட்டுமல்ல... இல்லத்தரசிகளுக் கும் அவசியம். சமை யல் அறையில் செல விடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு... வீட்டை அழகு படுத்துவது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, ரிலாக்ஸ் பண்ணுவது போன்றவற்றுக்கு பயன்படுத்த  உதவும் வகையில் '30 வகை ரெடி மிக்ஸ்’ ரெசிபிகளை அளிக்கிறார் சீதா சம்பத்.


''ரெடி மிக்ஸ்களை சுத்தமான, ஈரமில்லாத, காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைப்பது முக்கியம். வீட்டிலேயே செய்வதால்... ருசியில் அசத்தலாக இருப்பதுடன், நிறைய நாட்களுக்கு ஸ்டாக் வைத்து பயன்படுத்தலாம்'' என்று நம்பிக்கையூட்டும் சீதாவின் ரெசிபிகளை, கண்களுக்கு பரவசம் அளிக்கும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.


 பாதாம் மில்க் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், குங்குமப்பூ - 15 இதழ்கள், பாதாம் எசென்ஸ் - 2 துளிகள்.

செய்முறை: பாதாம்பருப்பை சுடு நீரில் ஊற வைத்து தோல் நீக்கி, நிழலில் உலர வைத்து, வெறும் கடாயில் சூடுபட வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அத்துடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து பொடி செய்யவும். பிறகு, பாதாம் எசென்ஸ் விட்டு நன்கு கலந்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.








தேவைப்படும்போது ஒரு  கிளாஸ்  சூடான பாலில், ஒரு ஸ்பூன் பாதாம் பொடி கலந்து பருகலாம். பாலில் பாதாம் மிக்ஸை தேவையான அளவு கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.

குறிப்பு: பாதாம் பருப்பை தோல் உரிக்காமல், வெறும் கடாயில் சூடுபட வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

 பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி ரவை - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை  டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, இஞ்சித் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்  மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, வறுத்தவை அனைத்தையும் பச்சரிசி ரவையில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைத்தால்... பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் தயார்.



பிடிகொழுக்கட்டை தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரெடிமிக்ஸுக்கு 2 பங்கு என்ற அளவில் தண்ணீரை எடுத்து கொதிக்கவிடவும். தண்ணீரில் ரெடி மிக்ஸை தூவி கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் பிடித்து வைக்கவும் (நீளவாட்டிலும் தயார் செய்யலாம்). அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதை குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும்.

 பச்சடி ரெடி மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு -  ஒரு கப், கடுகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சித் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் நைஸாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்து, ஆறியதும் உளுத்தம்மாவில் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பச்சடி ரெடி மிக்ஸ்.

குறிப்பு: பச்சடி தேவைப்படும்போது ஒரு கப் தயிரில் 2 டீஸ்பூன் அளவு ரெடி மிக்ஸ் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

 பாயசம் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், ரவை - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால்  டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 2 டீஸ்பூன்.



செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். ரவை, சேமியாவை வறுத்து, ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து, சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும்.

பாயசம் தேவைப்படும்போது இந்த மிக்ஸில் தேவையான அளவு எடுத்து, பால் கலந்து கொதிக்கவிட்டு, பாயசம் தயார் செய்யலாம்.
 
 தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ் 

தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பொட்டுகடலை - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் (காய வைத்தது) - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  



செய்முறை: வெறும் கடாயில் தேங்காய் துருவலை போட்டு, தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும். பொட்டுக்கடலை, காய்ந்த பச்சை மிளகாயை மிக்ஸியில் பொடிக்கவும். வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஈரம் போக வறுத்து எடுத்து, தேங்காய் கலவை யில் சேர்த்துக் கலந்தால்... தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ் தயார்!
எவ்வளவு தேங்காய் சட்னி தேவையோ... அந்த அளவுக்கு கலவையை எடுத்து, தண்ணீர் விட்டு கலந்து உபயோகப்படுத்தவும்.
 தக்காளி ரசம் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: காய்ந்த தக்காளிப் பழ துண்டுகள் - 16 (முழு பழம் 4 - தக்காளி பழ சீஸனில் பழத்தை வாங்கி எவர்சில்வர் கத்தியால் 'கட்’ செய்து, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கலாம்), தனியா - 3 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் துண்டுகள் - 2, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தக்காளி, கடுகு, நெய் நீங்கலாக, எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து, கடுகை நெய்யில் வறுத்து கலந்தால்... தக்காளி ரச ரெடி மிக்ஸ் தயார்.
கடாயில் காய்ந்த தக்காளிப் பழ துண்டுகள் 4, 5 போட்டு, தேவையான அளவு ரச மிக்ஸ், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நுரைத்து வந்ததும் கீழே இறக்கவும். இந்த ரசத்தை பருப்புத் தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.

 ஸ்பெஷல் புளியோதரை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: புளி - சிறிய கமலா ஆரஞ்சு சைஸ், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்,  மிளகாய் வற்றல் - 10, பெருங்காயம் - சிறிய கட்டி, விரலி மஞ்சள் - ஒன்று, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை  - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.




செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... மஞ்சள், வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுத்து நைஸாக பொடி செய்யவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து கொரகொரப்பாக பொடித்து, தனியாக வைத்திருக்கவும். வெறும் கடாயில் புளியை போட்டு ஈரம் போக வறுத்து, உப்பு சேர்த்து பொடி செய்யவும். கறிவேப்பிலையை தனியாக வறுத்து கைகளால் தூளாக்கவும். எல்லா பொடியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கலந்து எடுத்து வைக்கவும். இதுதான் ஸ்பெஷல் புளியோதரை ரெடி மிக்ஸ்.
புளியோதரை தேவைப்படும்போது, உதிரியாக வடித்த சாதத்தில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிளறி, தேவையான அளவு புளியோதரை பொடி மிக்ஸ் போட்டு கலந்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து வடாம், சிப்ஸ் தொட்டு சாப்பிடவும்.
 
 மோர்க்குழம்பு ரெடி மிக்ஸ் 

தேவையானவை: தேங்காய் துருவல் - 2 கப், சீரகம் - 4  டீஸ்பூன், பச்சை மிளகாய் (காய வைத்தது) - 6 (காரம் வேண்டுவோர் சற்று கூடுதலாக சேர்க்கலாம்), பெருங் காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - கால் கப், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தேங்காய் துருவலை வெறும் கடாயில் உப்பு சேர்த்து வறுக்கவும். துவரம்பருப்பை தனியாக வறுக்கவும். தேங்காய் துருவல், துவரம்பருப்பு, காய்ந்த பச்சை மிளகாய், சீரகம் கலந்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை சேர்த்தால்... மோர்க்குழம்பு ரெடி மிக்ஸ் தயார்.
மோர்க்குழம்பு தேவைப்படும்போது, ஒரு கப் புளிப்பு தயிரில் தேவையான அளவு மோர்க்குழம்பு மிக்ஸ் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நுரைத்து வரும்போது தீயை நிறுத்தி விடவும்.

 கொத்தமல்லி இலை பொடி 

தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கொத்தமல்லி இலையை ஆய்ந்து சுத்தம் செய்து துணியில் போட்டு  நிழலில் உலர்த்தி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கொத்தமல்லி இலையை சூடான வெறும் கடாயில் போட்டு எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். இதுதான் பச்சை கொத்தமல்லி இலை பொடி.

குறிப்பு: இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடலாம். கொத்தமல்லி கிடைக்காதபோது இந்த ரெடி மிக்ஸை ரசம், சாம்பாருக்கு போடலாம்.

 பஜ்ஜி  போண்டா ரெடி மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 500 கிராம், பச்சரிசி - 50 கிராம், மிளகாய் வற்றல் - 5, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் அரைத்து வாங்கி, அதில் தேவையான அளவு உப்பு கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் பஜ்ஜி - போண்டா ரெடி மிக்ஸ்.



பஜ்ஜி தேவைப்படும்போது, தேவை யான அளவு ரெடி மிக்ஸுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பஜ்ஜி செய்யும் விதத்தில் நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பெரிய பச்சை மிளகாய், காலிஃப்ளவர் எது தேவையோ அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு, வெந்து பொன்னிறம் ஆனதும் திருப்பிவிட்டு, பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.
போண்டா என்றால்... நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை  கரைத்து வைத்த மாவில் கலந்து உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

 லெமன் ரைஸ்  லெமன் சேவை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: லெமன் சால்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல்  - 6, பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை. இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்     கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல்,  கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில், பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை - இஞ்சியை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும்.   லெமன் சால்ட், உப்பையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி எடுக்கவும். இதில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்தால்... லெமன் ரைஸ் - லெமன் சேவை ரெடி மிக்ஸ் தயார்.

லெமன் சாதம் / லெமன் சேவை தயாரிக்க வேண்டும் என்றால், சாதம் / சேவையில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு ரெடி மிக்ஸ் போட்டு லேசாக கலந்து மூடி வைத்து, 5 நிமிடம் கழித்து பரிமாறலாம். சிப்ஸ், வடாம் இதற்கு சரியான சைட் டிஷ்.

 பருப்பு உசிலி ரெடி மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4.

செய்முறை: துவரம்பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக மெஷினில் அரைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைத்து எடுக்கலாம்). இதுதான் பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.



தேவைப்படும்போது பருப்பு உசிலி மிக்ஸில் தண்ணீர் தெளித்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பிசிறி வைத்த பருப்பு உசிலி மிக்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்ததும் வேக வைத்த காய்கறியை தண்ணீர் வடித்து  சேர்த்து, சூடுபட கிளறி இறக்கவும்.

குறிப்பு: கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ, கோஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பருப்பு உசிலி செய்யலாம்.

 தேங்காய் சாதம்  தேங்காய் சேவை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: தேங்காய் துருவல் -  ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல்  - 2, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். வறுபட்டதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே கடாயில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக ஈரம் போக வறுத்து எடுக்கவும். தேங்காய் துருவலை உப்பு கலந்து வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் தேங்காய் சாத ரெடி மிக்ஸ்.

தேங்காய் சாதம், தேங்காய் சேவை செய்ய... தேவையான அளவு ரெடி மிக்ஸை சாதம் (அ) சேவையுடன் சேர்த்து லேசாக கலக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.

 அடை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து - ஒரு கப், மிளகாய் வற்றல் - 3.

செய்முறை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து மெஷினில் கொடுத்து கொரகொரப்பாக  அரைத்து வாங்கவும். இதுதான் அடை ரெடி மிக்ஸ்.



அடை செய்யும்போது தேவை யான அளவு அடை  ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டி யாக கரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலந்து வழக்கம் போல அடை தயார் செய்யவும்.

குறிப்பு: மாவில் கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு கலந்தும் செய்யலாம்.

 மிளகு வடை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு - ஒரு கப், மிளகு -  ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மெஷினில் ரவை போல உடைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதுதான் மிளகு வடை ரெடி மிக்ஸ்.



வடை தேவைப்படும்போது,  இந்த ரெடி மிக்ஸை தண்ணீர் தெளித்து நன்கு கலந்து பிசிறி, 15, 20 நிமிடம் ஊற வைக்கவும். கொஞ்சம் கலவையை எடுத்து  உருட்டினாற் போல செய்து எண்ணெய் தொட்டுக் கொண்டு,  பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஈர வெள்ளை துணியில் வடையாக தட்டவும் (நடுவில் ஓட்டை போடலாம்). சூடான எண்ணெயில் வடைகளை போட்டு வேகவிட்டு, பொன்னிறம் ஆனதும் திருப்பி விட்டு, வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

 பாகற்காய் சாதம் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: பாகற்காய் வற்றல் - 50 கிராம், மிளகாய் வற்றல் - 6, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பாகற்காய் வற்றலை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். பாகற்காய் வற்றலில் ஏற்கெனவே உப்பு சேர்க்கப்பட் டிருக்கும் என்பதால்,  குறைவான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்யவும்



இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு  டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம். இந்த பாகற்காய் பொடி சுகர், பித்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
பாகற்காய் வற்றல் செய்முறை: பாகற்காயை வட்டமாக கட் செய்து, விதை நீக்கி... தயிர், உப்பு கலந்து ஊற வைத்து, காய வைத்து எடுத்து டப்பாவில் வைக்கலாம். இது நாள்பட இருக்கும். கடையிலும் பாகற்காய் வற்றல் கிடைக்கும்.

 கறிவேப்பிலை குழம்பு பொடி  கறிவேப்பிலை பொடி ரெடி மிக்ஸ் 

தேவையானவை: கறிவேப்பிலை (சுத்தம் செய்தது) - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  ஆகியவற்றையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்யவும். கறிவேப்பிலையை  தனியே வறுத்து பொடிக்கவும்.
புளியை  உப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன், ஏற்கெனவே தயாராக உள்ள பொடிகளை சேர்த்துக் கலந்தால்... கறிவேப்பிலை குழம்பு பொடி - கறிவேப்பிலை பொடி ரெடி மிக்ஸ் தயார்.
தேவையான அளவு கறிவேப்பிலை குழம்பு ரெடி மிக்ஸில் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் கால் டீஸ்பூன் கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்... கறிவேப்பிலை குழம்பு தயார். கறிவேப்பிலை ரெடி மிக்ஸ் பொடியை சாதத்தில் நேரடியாக கலந்தும் சாப்பிடலாம்.

 மசால் வடை ரெடி மிக்ஸ்

தேவையானவை: கடலைப் பருப்பு - ஒரு கப், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்புடன் ஜவ்வரிசியை சேர்த்து சன்ன ரவையாக உடைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், உப்பு இரண்டையும் சேர்த்துப் பொடித்து கடலைப்பருப்பு கலவையில் கலக்கவும். காய்ந்த கறிவேப்பிலையை கையினால் நொறுக்கி சேர்க்கவும். இதில் சோம்பை சேர்த்துக் கலந்தால்...  மசால் வடை ரெடி மிக்ஸ் தயார்.



மசால் வடை தேவைப்படும்போது... தேவையான அளவு  ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் தெளித்து 10 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காய துண்டுகளை தேவையான அளவு கலந்து பிசைந்து கொள்ளவும்.  இந்தக் கலவையில் சிறிது சிறிதாக எடுத்து, வடையாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

 ரவா லட்டு ரெடி மிக்ஸ்

தேவையானவை: ரவை - ஒரு கப், சர்க்கரை - ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை  டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் (நெய்யில் வறுத்தது) - 10, நெய் - சிறிதளவு.



செய்முறை: வெறும் கடாயில் ரவையை பச்சை வாசனை போக வறுக்கவும். மிக்ஸியில் ரவையைப் பொடியாக்கவும். சர்க்கரையையும் பொடியாக்கவும். ரவைப் பொடி, சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகள் சேர்த்து நன்கு கலந்தால்... ரவா லட்டு ரெடி மிக்ஸ் தயார்.
ரவா லட்டு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து... சூடாக்கிய நெய் சேர்த்துக் கலந்து... கலவை சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும்.

 எள் சாதம் ரெடி மிக்ஸ்

தேவையானவை: எள் (கறுப்பு (அ) வெள்ளை) - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு, சூடானதும் மிள காய் வற்றல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் எள்ளை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துப் பொடித்தால்... எள் சாத மிக்ஸ் தயார்.
தேவைப்படும்போது உதிரியாக வடித்த சாதத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு எள் பொடி சேர்த்துக் கலக்கவும்.

 மிளகு குழம்பு ரெடி மிக்ஸ்

தேவையானவை: மிளகு, துவரம்பருப்பு - தலா 4 டீஸ்பூன், தனியா - ஒரு கப், மிளகாய் வற்றல் - 2, பெருங்காயம் - ஒரு சிறு கட்டி, புளி - பெரிய எலுமிச்சம் பழ அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பெருங்காயம், தனியா, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். மிளகை வாசனை வரும் வரை வறுக்கவும். கறிவேப்பிலையையும் வறுக்கவும். அதே கடாயில் புளியை வறுக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக பொடி செய்யவும். இதில் உப்பு சேர்த்து  ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... மிளகு குழம்பு மிக்ஸ் தயார்.

மிளகு குழம்பு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் விட்டு கரைத்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
 அங்காயப் பொடி
தேவையானவை: தனியா - 4 டீஸ்பூன், வேப்பம்பூ - 8 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், சுண்டைக்காய் (காய்ந்தது) - 15, பெருங்காயம் - சிறிதளவு, மிளகாய் வற்றல் - ஒன்று, சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வேப்பம்பூ, கறிவேப்பிலை, சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து, சுக்குப் பொடியை சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா, மிளகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த சுண்டைக்காய் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். முதலில் செய்து வைத்திருக்கும் பொடியை இதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, உப்பு சேர்த்தால்... அங்காயப் பொடி தயார்.

சாதத்தில் தேவையான அளவு அங்காயப் பொடி சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடவும். பிரசவித்த பெண்களுக்கு 12-ம் நாள் முதல் இந்த பொடி கலந்த சாதம் சிறிதளவு சாப்பிட்ட பிறகுதான்  மற்ற உணவுகளை சாப்பிட அனுமதிப்பார்கள். உடல் வலிமை யாகவும், வயிற்று ரணம் ஆறவும் அவர்களுக்கு இதை கொடுப்பார்கள்.

கண்டதிப்பிலி ரசம் ரெடி மிக்ஸ்

தேவையானவை: கண்டதிப்பிலி - 10 குச்சி, மிளகு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி, புளி - எலுமிச்சம் பழ அளவு, நெய், சீரகம் - தலா அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: புளி, உப்பு இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும். கண்டதிப்பிலி, மிளகு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். இந்தப் பொடியை புளி - உப்பு பொடியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து எடுத்து வைத்த பொடியில் கலந்தால்... கண்டதிப்பிலி ரசம் ரெடி மிக்ஸ் தயார்.

ரசம் தேவைப்படும்போது, ரெடி மிக்ஸை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நுரைத்து வந்ததும் இறக்கவும்.
வாயு தொல்லை, உடல் வலியிலிருந்து நிவாரணம் அளித்து,  ஜீரண சக்தியை அதிகரிக்கும் இந்த ரசம்.
 
 தேன் குழல் ரெடி மிக்ஸ்

தேவையானவை: பச்சரிசி - 6 கப், வெள்ளை உளுந்து - ஒரு கப், எள் (அ) சீரகம் - 10 கிராம், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெள்ளை உளுந்தை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து பச்சரிசியுடன் கலந்து மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். அந்த மாவில் எள் அல்லது சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்தால்... தேன் குழல் ரெடி மிக்ஸ் தயார்.

தேன்குழல் தேவையானபோது ரெடி மிக்ஸ் மாவில் சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, மாவை அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். வெந்ததும் திருப்பிவிடவும். சிறிது நேரத்துக்குப் பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.

 வேப்பம்பூ பொடி

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு ஆழாக்கு, தனியா - கால் ஆழாக்கு, மிளகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4 (விரும்பினால் அதிகம் சேர்க்கலாம்), பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும். தனியா, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியற்றையும் வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்தால்... வேப்பம்பூ பொடி தயார்.
சாதத்தில் நெய் விட்டு, தேவையான அளவு வேப்பம்பூ பொடி ரெடி மிக்ஸ் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

 புதினா சட்னி ரெடி மிக்ஸ்

தேவையானவை: புதினா இலை - 2 கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (காய வைத்தது) - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் (வறுத்தது), பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையானஅளவு.



செய்முறை: புதினா இலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புதினா, வறுத்த தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, புதினா கலவையில் போட்டு நன்கு கலந்தால்... புதினா சட்னி ரெடி மிக்ஸ் தயார். சட்னி தேவைப்படும்போது இந்தக் கலவையில் சிறிது எடுத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: எலுமிச்சைச் சாறு சிறிது விட்டும் கலக்கலாம்.

 ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
.
செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து டப்பாவில் எடுத்து வைக்கவும். இதுதான் ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்.



ரிப்பன் பக்கோடா தேவைப்படும்போது தேவையான அளவு இந்த ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். சூடான எண்ணெய் தயாராக இருக்கட்டும். பிசைந்த மாவை நாடா அச்சில் போட்டு நேரடியாக எண்ணெய் மேல் சுற்றி பிழியவும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

 பயத்தலாடு ரெடி மிக்ஸ்

தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றே கால் கப்,  முந்திரித் துண்டுகள் (வறுத்தது) - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.



செய்முறை: வெறும் கடாயில் பயத்தம்பருப்பை வாசனை வரும் வரை... சிவக்க (அ) பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பயத்தம்பருப்பு, சர்க்கரை இரண்டையும் பொடி செய்யவும், வறுத்த முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பயத்தம்பருப்பு ஆகியவற்றை பொடியில் சேர்த்து நன்கு கலந்தால்... பயத்தலாடு ரெடி மிக்ஸ் தயார்.

தேவையான போது, நெய்யை சூடாக்கி, தேவையான அளவு ரவா லட்டு மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

 இட்லி  தோசை மிளகாய்ப் பொடி

தேவையானவை: மிளகாய் வற்றல் - 10 (விருப்பப்பட்டால் அதிகம் சேர்க்கலாம்), கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, எள் - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல்,  பெருங்காயத்தை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். எள்ளை தனியாக (பொரியும் வரை) வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து, டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

 ரவா இட்லி ரெடி மிக்ஸ்

தேவையானவை: ரவை - ஒரு கப், லெமன் சால்ட் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5, மிளகாய் வற்றல் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெறும் கடாயில் ரவையை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு... சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், முந்திரிப் பருப்பு துண்டுகள், கறிவேப்பிலையை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து எடுக்கவும். இதனுடன் வறுத்த ரவை, உப்புச் சேர்த்துக் கலக்கவும். இதில் லெமன் சால்ட் கலந்து மூடி வைக்கவும். இதுதான் ரவா இட்லி மிக்ஸ்.


ரவா இட்லி தேவைப்படும்போது... தேவையான அளவு புளிப்பு தயிர், ரவா இட்லி மிக்ஸ் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு வழக்கம் போல இட்லி தயாரிக்கவும்.


நன்றி - அவள் விகடன்

Thursday, August 11, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் !

ரொமான்ஸ் ரகசியங்கள் !


 ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒன்று... பேச்சு. மற்றொன்று... தொடுதல்!

'ஸ்வீட் நத்திங்ஸ்' (Sweet nothings) என்பார்கள். காதலிக்கும் பருவத்தில் காதலர்கள் கண்டதையும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்த சினிமா, கேட்ட பாடல், ஜோக்குகள், பிடித்த மழை, பிடிக்காத மனிதர்கள்... என்று இந்தப் பேச்சுதான், காதல் என்கிற நீண்ட உறவின் ஆரம்பம். செல்போன் வந்துவிட்ட பிறகு. அர்த்தமற்ற ஸ்வீட்டான பேச்சுகளுக்கு அளவே இல்லா மல் போய்விட்டது.; அதுதான் காதலின் நெருக்கத்தையும் வளர்க்கிறது!

கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமிக் கிறது’ என்கிறது ஒரு தியரி. நம் சமூகத்தில் உள்ள பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால்... இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமை களை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள். அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்று இருக்கும்.
 
'ஒரே ஒரு துணையுடன் வாழ்க்கை முழுக்க வாழ்வதா... அது எப்படி சாத்தியம்?' என்று நம்மூர் ஜோடிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மேல்நாட்டினர். பேச்சு, உடல் உறவு, மனப்பகிர்வுகள் குறைந்து போகும் நிலையில்... அந்த உறவை விவாகரத்தின் மூலம் துண்டித்து விட்டு, புதிய உறவுகளைத் தேடுவது அவர்களின் வழக்கம். ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. ஒருவனுக்கு ஒருத்தி, காதல் உணர்வு, குடும்பப் பாசம், கடமை உணர்வுகள் எல்லாம் கலந்தது நம்மூர் ரொமான்ஸ்! ப்ளஸ், மைனஸ் இரண்டுமே இதில் உண்டு.

காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அகஸ்மாத் தாகப் பட்டுக் கொள்ளும் விரல்கள், உடலின் கவர்ச்சிகரமான பாகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே எடுத்துச் செல்கிறது. 'தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது' என்கிறது அறிவியல் உண்மை.

துரதிருஷ்டவசமாக நம்மூரில் இந்தத் 'தொடுதல்’ எனும் அற்புதமான விஷயம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. 'தொடுதல்’ என்றால் உடலுறவு அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற 'பேஸிக் இன்ஸ்டிங்க்ட்' (Basic Instinct). ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.

காலம் காலமாக பெண்களை அடுப் படியில் அடிமையாகவே வைத்திருந்த மனோபாவத்தில் இருக்கும் இந்திய ஆண்களுக்கு, பெண்களை எப்படி அணுகுவது என்பது பெரும் பிரச்னை.

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழி லில் இருந்துவிட்டு, படம் இயக்கும் ஆசையுடன் இப்போது கோடம்பாக் கத்தில் செட்டிலாகியிருக்கும் ஒரு நண்பர் சொன்னார்... ''தமிழ் சினிமாவின் ஹீரோக்களைப் பாருங்கள்... அவர் களுக்கு ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது போன்ற வற்றைப் பற்றிப் பெரிய பிரச்னை இருக் கிறது. அந்தக் கால எம்.ஜி.ஆரிடம் இருந்து இப்போதைய சிம்பு வரை பெண்களுக்கு அட்வைஸ் செய்வதையே காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். அல்லது மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ என்று பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய ஹீரோவோ 'தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுடுவேன். மரியாதையா காதலிச் சுடு’ என்று பெண்ணை மிரட்டுகிறான். மற்றொருவன் 'அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சா விட்டுட்டுப் போயிட்டே இருப்பீங்கடி...’ என்று பிதற்றுகிறான். இதில் உச்சகட்டமாக காதலிக்கவில்லை என்பதற் காக கதாநாயகியின் மீது கோர்ட்டில் வழக்கே போட்டு விடுகிறான் மற்றொரு ஹீரோ.

பெண் என்பவள் ஒரு சக மனுஷி, அவளிடம் நிதானமாக, அன்பாகப் பேச முடியும், விவாதிக்க முடியும் என்று ஏன் இவர்களுக்குத் தோணுவதில்லை?’' என்று அந்த இயக்குநர் கேட்டபோது, அதிலிருக்கும் நியாயத்தை உணர முடிந்தது.

நம் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய மென்மொழியே தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் கணவன் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது.

பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விஷயங்களில் கட்டுப்பெட்டித்தனமாகவும், தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்னை.

தொடுதல் என்கிற 'ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மஸாஜ்தான். ஆதாமைக் கடவுள் தொட்டு ஆசீர்வதிப்பது போல்தான் பிரபல ஓவியத்தை வரைந்தார், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மைக்கேல் ஆஞ்சலோ. நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்... 'மஸாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன' என்று பிரசாரமே செய் தவர்.

'ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது... மூளையில் 'எண்டோர்ஃபின்’ (Endorphin)எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டு வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆதலினால் அன்புக்குரிய ஜோடிகளே... நிறைய பேசுங்கள். அவை அர்த்தமற்ற பேச்சாகக்கூட இருக் கட்டும், பேசுங்கள். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்த மிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால்... உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்' என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்!

Saturday, July 09, 2011

அரிசிம்பருப்பு தோசை,உளுந்து வடை மிக்ஸ் , செய்வது எப்படி?



1..அரிசி - பருப்பு தோசை மிக்ஸ் 

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை, சீரகம் - சிறிதளவு.  

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தோசை தேவைப்படும்போது, அரைத்த மாவை தேவையானஅளவு எடுத்து... உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 2 மணி நேரம் கழித்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து, காயும் தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

சட்னியுடன் சூடாகப் பரிமாறலாம். இந்த தோசையை செய்வதும் ஈஸி... சுவையும் வித்தியாசமாக இருக்கும். ஆறு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

2.  வெங்காய குழம்பு 

தேவையானவை: பொடி யாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 50 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, குழம்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, குழம்பு நன்றாக மனம் வந்து கொதித்ததும் இறக்கவும்.

இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

3. உளுந்து வடை மிக்ஸ் 

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு (அ) காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
வடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, மிளகு (அ) மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வடை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசையவும். 10 நிமிடம் ஊற வைத்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

4. பருப்பு வடை மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த இஞ்சி, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

வடை செய்ய: நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, தனியா, பெருங்காயத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

வடை தேவைப்படும்போது, அரைத்த மிக்ஸுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசையவும். பதினைந்து நிமிடத்தில் வடை மாவு நன்றாக ஊறிவிடும். இந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நன்றி - அவள் விகடன்

Sunday, July 03, 2011

ரவா இட்லி,. தனியா குழம்பு , அடை மிக்ஸ் , அரிசிம்பருப்பு சாதம் அசத்தலா செய்வது எப்படி?

http://www.supanet.com/woman-cleaning-clean-kitchen-lady-14693465.jpg

ரவா இட்லி மிக்ஸ் 

தேவையானவை: ரவை - 100 கிராம், முந்திரி - 10, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கி காய வைத்த இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.  
ரவா இட்லி செய்ய: தயிர் - 2 கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவையை கடாயில் நன்றாக வாசனை வரும்வரை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உடைத்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சேர்த்து வறுத்து, ரவையுடன் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

ரவா இட்லி தேவைப்படும்போது அரை மணி நேரத்துக்கு முன்பாக, ரவை கலவையில் தயிர், உப்பு,  சோடா உப்பு கலந்து கொத்தமல்லி போட்டு கலக்கவும். இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, வெந்ததும் எடுக்கவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.


http://www.systemsdesigngroup.net/photos/kitchen%20touch%20panel.jpg

2.  தனியா குழம்பு

தேவையானவை: தனியா - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய பூண்டுப் பல் - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் தனியா, மிளகாயை சிவக்க வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து... வறுத்துப் பொடித்த தனியா - மிளகாய்தூளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும் இறக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி, குழம்பில் சேர்க்கவும்.

இது பத்திய குழம்பு. பசி எடுக்க வைக்கும். ஜீரணத்துக்கு நல்லது.

குறிப்பு: இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். வறுத்துப் பொடிக்க நேரமில்லாதவர்கள், தனியாத் தூள், மிளகாய்த்தூள் வாங்கி சேர்க்க லாம்.


3. அடை மிக்ஸ் 

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 75 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

அடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்தால்... அடை மிக்ஸ் ரெடி! அதிக அளவு மாவு தேவையாக இருந்தால் மெஷினில் அரைக்கலாம்.

அடை தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அடை மாவு மிக்ஸ், உப்பு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு அடை மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, சூடான தோசைக்கல்லில் மாவை சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மொறுமொறுவென எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள வெல்லம், வெண்ணெய், தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். இந்த மிக்ஸை மாதக்கணக்கில் பயன்படுத்தலாம்.

4. குழம்பு பவுடர்

தேவையானவை: மிளகு - 75 கிராம், சீரகம், தனியா - தலா 50 கிராம்.

குழம்பு செய்ய: புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 10,    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சீரகம், தனியாவை ஒன்றாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி குழம்பில் சேர்த்து இறக்கவும்  

சூடான சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிடலாம். இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்த லாம்.

 5.அரிசி - பருப்பு சாதம் 

தேவையானவை: சாப்பாட்டு புழுங்கலரிசி - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயம், குழம்பு வடகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு - 3 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள்,     மஞ்சள்தூள், பூண்டு, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, குழம்பு வடகம் தாளித்து, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கலந்து, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.
இதற்கு வறுத்த வெங்காய வடகம், அப்பளம் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

Saturday, July 02, 2011

மோர்க்குழம்பு, ரவா உப்புமா,அரிசி உப்புமா... சமையல் குறிப்புகள்




உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

உப்புமா கொழுக்கட்டை செய்ய: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மிக்ஸியில் ரவையாக உடைத்து சலிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உடைத்த ரவையில் கொட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. மூன்று வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்
.
2. மோர்க்குழம்பு மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு,  கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.

மோர்க்குழம்பு செய்ய: தயிர் - 100 கிராம், தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை), எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகள், அரிசி,  தனியா, சீரகம், 5 காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.

மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும்  இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.

3.ரெடிமேட் சாம்பார் மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.

சாம்பார் செய்ய: நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: வெறும் கடாயில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடிக்கவும். புளி, கொப்பரை துருவலையும் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.  இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சேமித்து வைக்கவும்.

சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 4.ரவா உப்புமா மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை ரவை - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.
உப்புமா, கிச்சடி செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து, தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறி வேப்பிலை போட்டு சிவக்க வறுத்து, ரவையில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

உப்புமா தேவைப்படும்போது, கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து (ஒரு பங்கு உப்புமா மிக்ஸ் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர்), ஒரு டம்ளர் உப்புமா மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரவை வெந்ததும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மூடி வைத்து, 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால் உப்புமா தயார்.

தண்ணீர் கொதிக்கும்போதே மஞ்சள்தூள், வதக்கிய காய்கறிகளை சேர்த்து, ரவா கிச்சடி போலவும் செய்யலாம். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய அருமையான டிபன் இது. இந்த மிக்ஸை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5. அரிசி உப்புமா மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, துவரம்பருப்பைக் கலந்து மெல்லிய ரவையாக மிக்ஸியில் உடைத்து சலித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, உடைத்த ரவையுடன் கலந்து சேமித்து வைக்கவும். 

அரிசி உப்புமா தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர்), உடைத்து சலித்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி, நன்றாக வேக விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: உப்புமா கிளறும்போது தண்ணீர் பற்றாமல் போனால், கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்