Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

Thursday, February 12, 2015

தமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு - யார் டாப்?ஒரு அலசல்

a
கதாநாயகிகளின் பேட்டி என்றால் எப்போதுமே ஒரு கவனம் கிடைக்கிறது. அதற்குக் காரணம் அவர்களது நடிப்புத்திறனை மீறி அவர்கள் மீது படிந்திருக்கும் கிளாமர் பிம்பம்.
நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்று அறிமுக நடிகைகள் பேட்டிகள் கொடுத்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், தற்போது அதையே கொஞ்சம் திருத்தி ரஜினி, கமல், அஜித், விஜயுடன் நடிக்க வேண்டும். அல்லது அவர்களது படங்களில் தலைகாட்டினால்கூடப் போதும் என்பார்கள்.
முன்பெல்லாம் படம் முழுக்க கதாநாயகிகள் வருவார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்குப் போதிய முக்கியத்துவம் இருக்கும். ராதிகா, குஷ்பூ காலகட்டத்தில் ஒரு கதாநாயகிக்கு ஒரே நடிகருடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அதற்குப் பிறகு சிம்ரன், ஜோதிகா நடிக்க வந்த தருணத்தில் கதாநாயகியே கவர்ச்சிப் பொருள் ஆனார். இப்போது அதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு நான்கு காட்சிகள், மூன்று பாடல்கள்தான் கதாநாயகிக்கு என்ற நிலை வந்துவிட்டது.
கதாநாயகிக்கென்று கஷ்டங்கள் இருக்கின்றன. அதனால்தான் ஒரு கட்டத்தில் பணம் மட்டுமே குறிக்கோள் என்று கிடைத்த படங்களில் கவர்ச்சிக்குக்கூட மறுப்பு சொல்லாமல் தாராளம் காட்டி நடிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இப்போது கதாநாயகி பாத்திரங்களுக்கான ஆயுள் குறைவு. மூன்று வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நீடிப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது.
காத்திருப்பு அவசியம்
இந்தச் சவாலை மீறி கதாநாயகிகள் பயணிக்கக் காத்திருப்பு அவசியமாகிறது. ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, எங்கேயும் எப்போதும் ஆகிய மூன்று படங்கள் அஞ்சலியின் சினிமா வாழ்க் கையில் மைல்கற்களாக அமைந்தன.
ஒரு நாயகிக்கு மிகச் சில வருடங்களில் இப்படிப்பட்ட அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அபூர்வம். வழக்கமான கதாபாத்திரங்களுக்கிடையில், இப்படிக் கிடைக்கும் வாய்ப்பை அஞ்சலி மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
பூ படத்துக்குப் பிறகு நல்ல கதாபாத்திரத்துக்காகக் காத்திருந்த பார்வதி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகே மீண்டும் தமிழில் நடித்தார். ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’ படங்களில் நடித்த பார்வதி இப்போது கமலுடன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துள்ளார். திறமையிருந்தாலும் கதாநாயகிகளுக்குக் காத்திருப்பு அவசியம் என்பதை அஞ்சலியும் பார்வதியும் நமக்கு உணர்த்துகிறார்கள்.
இந்தத் தருணத்தில் கிளாமர் என்பது ஒரு கட்டத்தில் போரடித்துவிடும். ஆனால், நடிப்பு என்பது எப்போதும் போரடிக்காது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் காலத்துக்கும் கதாநாயகியை யாரும் மறக்க முடியாது.
அதனால்தான் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா என அனைவரும் பெண்களை மையப்படுத்தும் படங்கள் கிடைத்தால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறார்கள். ‘நீ எங்கே என் அன்பே’ படத்தில் கர்ப்பிணியாக நடிக்காத நயன்தாரா ‘மாயா’ படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார்.
‘ராணி ருத்ரம்மா தேவி’ சரித்திரப் படத்தில் தன் நடிப்புத் திறமையை நிரூபிக்க உள்ளார் அனுஷ்கா. நல்ல படத்தில் நடிப்புக்குத் திரும்ப வேண்டும் என்று காத்திருந்த ஜோதிகா ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ மலையாளப் பட மறு ஆக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். த்ரிஷா மூன்று பெண்களை மையமாகக் கொண்ட ‘போகி’ படத்தில் நடிக்கிறார்.
விருது நடிகை பட்டம்
இவர்களது அழுத்தமான பாதை ஒருபுறம் இருக்க, இன்னும் சில கதாநாயகிகள் விநோதமாகத் திரையை அணுகுகிறார்கள்.
தேசிய விருது வாங்கி விட்டால் “விருது நடிகை” என்று பெயர் வந்துவிடுமாம். அதன் பிறகு வணிகப் பட வாய்ப்புகள் வராதாம். இப்படிக் கருதுபவர்களும் உண்டு.
பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காகத் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. கருத்த முகம், அசாதாரண உடல் மொழி, கண்களால் பேசும் அழகு என நடிப்பில் ஜொலித்தார். ஆனால் தேசிய விருது வாங்கியவுடன் மளமளவென கிளாமராக நடித்துத் தன்னை கிளாமர் நடிகை என நிரூபித்துக்கொண்டார். ஆனால் இப்போதும் பிரியாமணியைப் பருத்தி வீரன் படத்தைச் சொல்லித்தான் அடையாளம் கண்டுகொள்கிறோம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா கிராமத்துப் பெண்ணாக நடித்து, ஒரே படத்தில் ஓஹோ என வளர்ந்தார். நகரத்துப் பெண்ணாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காததால் வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.
பிம்பத்தைத் தாண்டி
நடிகைக்கான அடையாளம் என்பது நடிப்புதானே தவிர கவர்ச்சி இல்லை என்பதைச் சொல்லும் நடிகைகள் இங்கே வெகு சிலரே. ‘யுத்தம் செய்' படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனும், ‘நந்தலாலா’ படத்தில் ரோகிணியும் மொட்டை போட்டு நடித்தார்கள். ஆனால், கதாநாயகிகள் அப்படித் தங்களை மாற்றிக்கொள்வதில்லை.
ஒரு படம் தயாரித்து முடித்து வெளியிடத் தடுமாறும்போது அந்தப் படத்தில் நடித்த சில கதாநாயகர்கள் பணம் கொடுத்து உதவுகிறார்கள். சம்பள பாக்கி இருந்தால் சில நேரம் விட்டுக் கொடுக்கிறார்கள். படம் நஷ்டம் அடைந்தால்கூடத் திருப்பித் தர நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் ஒரு கதாநாயகியைக் காட்ட முடியுமா? பாடல் வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட படத்தின் விளம்பர நிகழ்வுகள் நடிகைகள் இல்லாமலே நடக்கின்றன. ஆனால் இதற்கு நடிகைகள் மட்டும்தான் காரணமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
இந்தியில் ‘குயின்’ படத்தில் நடித்த கங்கணா ரணவத் அந்தப் படத்துக்கான கூடுதல் வசனங்களை எழுதியிருக்கிறார். ஆனால், தமிழில் அப்படியொரு மாற்றம் இன்னும் வரவில்லை என்பது கவனிக்க கூடிய உண்மை. சினிமா பற்றிய அக்கறையோ, அர்ப்பணிப்பு உணர்வோ பல நடிகைகளுக்கு இல்லை.
அபூர்வமாக ஒரு சில நடிகைகள் சினிமாவை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியது. மற்ற நடிகைகள் எப்போது இதைப் புரிந்துகொள்வார்கள்?

thanx - the hindu

Monday, November 19, 2012

ஒபாமா அதிபர் ஆனதால் இந்தியாவுக்கு லாபமா? நட்டமா? - ஓ பக்கங்கள் ஞாநியின் அலசல்

மறுபடியும் ஒபாமா...

ஞாநி

அமெரிக்க அதிபராக பாரக் ஹுசேன் ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது இங்கே இந்தியாவில் (நான் உட்பட) பலருக்கும் மகிழ்ச்சி தருவதைப் பார்க்கிறேன். ஒபாமாவால் இந்தியாவுக்கோ எனக்கு தனிப்பட்ட முறையிலோ ஏதோ பெரிய லாபம் கிடைத்துவிடும் என்பதாலா இந்த மகிழ்ச்சி? இல்லவே இல்லை.
ஒபாமாவை சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர்களிலிருந்து எழுந்து வந்து எல்லாருக்கும் சமமான நிலையை அடைந்த சாதனையின் பிரதிநிதியாக நாம் பார்ப்பதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். ஒரு காலத்தில் நிறவெறியும் அடிமைத்தனமும் நிரம்பி வழிந்த அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவர் குடியரசுத் தலைவராக முடியும் என்பதை மட்டுமல்ல, அடுத்தடுத்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று ஒபாமா காட்டியிருப்பதே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலித் முதலமைச்சர் ஆனாலோ, இந்தியாவில் ஒரு இஸ்லாமியர் பிரதமரானாலோ ஏற்படக்கூடிய மகிழ்ச்சிக்கு இது நிகரானது.
ஒபாமாவின் இரண்டாம் முறை தேர்தல் வெற்றியில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், இந்த முறை அவர் கறுப்பினத்தவர் என்ற அம்சம் முதல் முறை இருந்தது போல முக்கியத்துவம் பெறவே இல்லை. முதல்முறையும் கணிசமான வெள்ளையர் ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார் என்றாலும், அவர் கறுப்பினத்தவர் என்பதற்கு அப்போது இருந்த அழுத்தம் இப்போது இல்லை. இந்த முறை எல்லா அழுத்தமும், அவரது கொள்கைகள், செயல்பாடுகள், எதிர் வேட்பாளர் முன்வைத்த மாற்றுகள் ஆகியவை சார்ந்தே இருந்தன.

ஒபாமாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று எதிர் வேட்பாளரான குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னிக்கு பெரும் பணக்காரர்கள் நலனில் மட்டுமே அக்கறை காட்டக்கூடியவர் என்ற இமேஜ் ஏற்பட்டதாகும். ரோம்னி வந்தால் பணக்காரர்களுக்கு வரி குறையும்; சலுகைகள் அதிகரிக்கும். ஏழை, நடுத்தர மக்களுக்கு மருத்துவச் செலவு, கல்வி, உணவு போன்றவை எல்லாம் விலை உயர்ந்துவிடும் என்ற பயம் பரவலாக இருந்தது. ஒபாமாவுக்குச் சாதகமாக இருந்த இன்னொரு அம்சம், தீவிர வாதத் தலைவர் பின்லேடனை ஒபாமா ஆட்சியில்தான் கொல்ல முடிந்தது. இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதம் பற்றி அமெரிக்கர்கள் மனத்தில் உருவான பெரும் பயம், பின்லேடன் சாவில்தான் தணிந்தது என்று சொல்லலாம். இராக், ஆப்கனிஸ்தான் முதலிய வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளை மெல்ல மெல்ல திரும்பப் பெற ஒபாமா உத்தரவிட்டிருப்பது இன்னொரு சாதகமான அம்சம். கட்டாய ராணுவச் சேவை இருக்கும் அமெரிக்கச் சமூகத்தில், தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் சடலப் பெட்டிகள் வீட்டுக்கு வந்து இறங்குவது என்பது சராசரி அமெரிக்கக் குடும்பத்தின் மிக மோசமான கெட்ட கனவுகளில் ஒன்று.
தேர்தல் வாக்குப்பதிவு சமயத்தில் கிழக்குக் கடற்கரை மாகாணங்களில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய சாண்டி புயல், ஒபாமாவுக்குச் சாதகமாக அமைந்தது. ஒபாமா அரசின் துயர் துடைப்பு நடவடிக்கைகள் எதிர்க்கட்சி பிரமுகர்களும் பகிரங்கமாகவே பாராட்டும் அளவில் அமைந்தது இந்தப் பகுதி வாக்காளர்களின் பெரும் ஆதரவை ஒபாமாவுக்குத் திரட்டியது.
ஒபாமா மறுபடியும் ஜெயிப்பாரா என்ற கேள்விக்குறிக்குக் காரணம், அவர் சென்ற முறை ஜெயித்தபோது எழுந்த பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகள்தான். புஷ் ஆட்சியில் ஏற்பட்ட படு மோசமான பொருளாதார சரிவிலிருந்து நாட்டை முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவர்தான் மீட்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அப்போது மிக அதிகமாக இருந்தது. எதையும் ஒரே இரவில் மாற்றிவிட முடியாது என்று ஒபாமா சொல்லிக் கொண்டிருந்தபோதும் அமெரிக்க மக்களுக்கு ஒரு மாஜிக் தீர்வு தேவைப்பட்டது. நான்காண்டுகளில் அது சாத்தியமில்லை என்பது புரிந்துவிட்டது. ஒபாமா எடுத்த நடவடிக்கைகள் அடியோடு நிலையை மாற்றாவிட்டாலும், சரிவிலிருந்து மெல்ல மீள முடிந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்தார்கள். ரோம்னியிடம் இதைவிட சிறப்பான மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
ஜெயித்த பின்னரும் ஒபாமாவுக்கு அடுத்த நான்காண்டுகளில் பெரும் சோதனைகள் காத்திருக்கின்றன. புஷ் ஆட்சியில் அறிவித்த வரிச் சலுகைகள் முடியும் தேதி வருகிறது. அரசின் செலவுகளில் வெட்டுகள் செய்யவேண்டிய கெடுவும் அடுத்த ஆண்டில் வருகிறது. இவற்றால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க ஒபாமாவுக்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு பலமாக தேவை. ஏனென்றால் சுமார் 30 மாநிலங்களின் (முதலமைச்சர்களான) கவர்னர் பதவிகள் எதிர்க்கட்சி வசம் இருக்கின்றன. அது தவிர செனட்டில் மட்டும் தான் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையில் இருக்கிறது. ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்வில் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மை. எனவே அவர்களின் ஆதரவு இல்லாமல் எதையும் ஒபாமா நிறைவேற்ற முடியாது. அதனால்தான் ஜெயித்த உடனே ஒபாமா, தொடர்ந்து ரோம்னியுடன் பேசப் போவதாகவும் அமெரிக்காவை முன்னேற்ற, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் எல்லாரும் சேர்ந்து வேலை செய்யவேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்.

ஒபாமாவின் வெற்றி அமெரிக்காவுக்கு நல்லது. ஆனால் உலகத்துக்கு? நமக்கு?
உலகத்தைப் பொறுத்தமட்டில் கடந்த நான்காண்டுகளில் ஒபாமாவின் ஆட்சி எங்கேயும் புதிய போருக்கான ஆயத்தங்களில் ஈடுபடவில்லை. அண்மைக்காலத்தில் ராணுவச் செலவைக் குறைத்த முதல் குடியரசுத் தலைவர் அவர்தான். பல நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது உலகம் வரவேற்கும் செயலேயாகும்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒபாமா ஆட்சி பற்றிய மிகப்பெரிய கவலை நம் இளைஞர்களுக்கு அமெரிக்காவிலும் இங்கே இருக்கும் அமெரிக்க நிறுவனங்களிலும் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றித்தான். கடந்த ஒபாமா ஆட்சியிலேயே வேலை பர்மிட்டுகளுக்கான விசாக்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன. அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுதான் ஒபாமாவின் கோஷம். எனவே அமெரிக்காவில் இயங்கும் இந்திய கம்பெனிகளும் கூட அமெரிக்கர்களுக்கு அதிக வேலை தரவேண்டிய அவசியம் இருக்கிறது.
இது கவலைக்குரிய பிரச்னை என்றாலும் ரொம்பக் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அடுத்த ஆறாண்டுகளில் அமெரிக்காவுக்குத் தேவைப்படும் அறிவியல் பட்டதாரிகளில் சுமார் இரண்டேகால் லட்சம் பேர் பற்றாக்குறை இருக்கிறது. இது அமெரிக்கர்களைக் கொண்டு நிரப்பவே முடியாது. இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்துதான் வரவழைத்தாக வேண்டும்.
இந்தியாவின் பழைய கவலை இப்போது இல்லை. அமெரிக்கா நம்மை விட பாகிஸ்தானையே அதிகம் ஆதரித்து வந்திருக்கிறது என்பதே இந்தக் கவலை. இப்போது பாகிஸ்தானில் தாலிபானை ஒழிப்பதற்காக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் பாகிஸ்தான் அரசை அமெரிக்காவுக்கு எதிராக நிறுத்திவிட்டன. அந்த அரசு தாலிபானுக்கும் அமெரிக்க அரசுக்குமிடையே சிக்கித் தவிக்கிறது.
ஒபாமா இனி அமெரிக்காவின் அயல் உறவுக் கொள்கையில் ஆசியா முக்கிய அச்சாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது இங்கே சீனாவைத் தன் எதிரியாகத் தொடர்ந்து ஆக்கிக்கொள்ளாமல் அதே சமயம் தன் நலன்களையும் பாதுகாக்கும் விதத்தில் கையாளுவது எப்படி என்பதுதான் அமெரிக்காவின் அக்கறை. இதில் தனக்கு உதவுவதற்காகவே இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இந்தச் சீனா சார்ந்த கொள்கைப் பார்வைதான் அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் முடிவு செய்யும்.
இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர் பிரச்னையிலும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தமிழருக்கு சாதகமாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு பல ஈழத்தமிழர்களிடையிலும் இந்தியத் தமிழர்களிடையிலும் இருக்கிறது. .நா மனித உரிமை அமைப்பில் அமெரிக்கா, இலங்கை அரசு மீது கொண்டு வந்த கண்டனத் தீர்மானமே இந்த நம்பிக்கைக்குக் காரணம்.

ஆனால் இந்த விஷயத்தில் பெரிதாக அமெரிக்காவை நம்பமுடியாது என்பதே உண்மை. கடைசிப்போரில் இலங்கைப் புலிகளை முற்றிலும் அழித்து ஒழித்ததில் இந்தியா மட்டுமல்ல, அமெரிக்காவும்தான் இலங்கை அரசுக்கு உதவியது என்பதை மறக்க முடியாது. செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா அதுவரை புலிகளுக்கு தந்த ஆதரவை நீக்கிக்கொண்ட பின்னர்தான் புலிகள் பலவீனமானார்கள். எனவே இப்போது ஈழத்தமிழர் பிரச்னையை எப்படி இந்தியா இலங்கை - சீன உறவின் அடிப்படையில் அணுகுகிறதோ, அதே போல தொலைநோக்கில் சீனா சார்ந்தே அமெரிக்காவும் அணுகும் வாய்ப்பே அதிகம். எனவே பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை.
கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஒபாமா ஜெயித்தது நமக்குப் பொதுவாக வரவேற்கக்கூடிய ஒன்றானபோதும், ஜெயிப்பது ஒபாமா ஆனாலும் ரோம்னியானாலும், அமெரிக்காவின் சுயநலன்கள் சார்ந்தே அவர்கள் இயங்குவார்கள் என்பதுதான் வடிகட்டிய உண்மை. எல்லா காலங்களிலும் அமெரிக்க அரசுகள் அப்படித்தான் செயல்பட்டு வந்திருக்கின்றன.
இதே போல இந்தியத் தலைவர்களில் யார் ஜெயித்தாலும் இந்திய நலன்கள் சார்ந்தே இயங்குவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் நாம் இருப்பதைத்தான் நாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். உண்மையில் எது இந்தியாவின் நலனுக்கானது என்ற வழிமுறைகளைக் கூடக் காரண காரியங்களுடன் தெளிவாகவும் உறுதியாகவும் நமக்குச் சொல்ல முடியாத தலைவர்களையே நாம் பெற்றிருக்கிறோம். ஒபாமாவின் வெற்றியையொட்டி இதை நாம் சிந்திக்கத் தொடங்குவது அவசியம்.
இந்த வாரக் கோரிக்கை:
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 பிரிவை நீக்கிவிட்டு இன்னும் தெளிவான வரையறுக்கப்பட்ட பிரிவை உருவாக்கவேண்டுமென்பதே இந்த வாரக் கோரிக்கை. காரணம் இப்போதுள்ள பிரிவின்கீழ் யாரோ யாருக்கோ அனுப்பிய ஒரு எஸ்.எம்.எஸ் அல்லது ட்விட் அவதூறானது என்று சொல்லி யாரையும் கைது செய்து 3 வருட சிறை தண்டனை வாங்கிக் கொடுத்துவிடலாம்.
தொழிலதிபர் அரசியல்வாதி கார்த்தி சிதம்பரம் பற்றி புதுவையைச் சேர்ந்த ரவி சீனிவாசன் அனுப்பிய ட்விட்கார்த்தி வத்ராவை விட அதிக சொத்து சேர்த்து விட்டதாக அறிகிறேன்என்பதாகும். இது பற்றி கார்த்தி கொடுத்த - மெயில் புகாருக்கே ரவி கைது செய்யப்பட்டார். ரவியின் டிவிட்டுகளை மொத்தம் 16 பேர் மட்டுமே பார்க்க முடியும். அதில் 5 பேர் அவரது உறவினர்கள். இந்தியன் பீனல்கோடில் அவதூறு தொடர்பாக இருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு நிகரான புதிய பிரிவுகளையே தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும் வைக்க வேண்டும். இப்போது இருக்கும் 66 ஆபத்தானது. முறைகேடாக பயன்படுத்தக்கூடியது.