Monday, September 28, 2015

ஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள்விகள்!

ருங்கால தமிழக முதல்வராக கனவு காணும் அரசியல்வாதிகளில் உங்கள் கனவுதான் நனவாக வாய்ப்பு அதிகம்.
உத்தரபிரதேசத்தில் 45 வயதில் அகிலேஷ் யாதவ் முதல்வராகிறார். அங்கே அவரது தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. இங்கே உங்கள் தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறதோ இல்லையா உங்கள் தமையனுக்கு தட்டிக் கொடுக்கும் மனப்பக்குவம் நிச்சயமாக இல்லை. 'நமக்கு நாமே...' என்று ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும்  நீங்கள்' உங்கள் வீட்டில் இருந்து அதனை தொடங்குவதுதான் சரியானதாக இருக்கும்.
கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த உங்களுக்கு, துணை முதல்வர் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. நிச்சயமாக தமிழக வரலாற்றில் அப்படியொரு பதவி அதுவரை இருந்தது இல்லை. உங்களுக்காகவே அது உருவாக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு பின்னால் 100க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்தன. அந்த சமயத்தில் உங்களது அணிவகுப்பை பார்த்தபோது ஜெயலலிதாவே மேல் என்ற எண்ணம் சாமானியனுக்கு எழாமல் இல்லை. 


இப்போது தேர்தல் என்றவுடன் மதுவிலக்கு என்கிறீர்கள். தமிழத்தில் 'டாஸ்மாக்' என்ற குழந்தையை பெற்றெடுத்தது அதிமுக அரசுதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த குழந்தை வளர்ந்து ,இன்று வீதிக்கு வீதி வில்லனாக நின்று கொண்டிருக்கிறது. அதற்கு உங்கள் ஆட்சியும் ஒரு காரணம் என்பதை உங்களால் மறுத்து விட முடியுமா?

தி.மு.க ஆட்சியின் போது, உங்களைச் சுற்றி ஒரு லாபி, உங்கள் தமையனை சுற்றி ஒரு கூட்டம், சகோதரியை சுற்றி ஒரு அணி என்றெல்லாம் இருந்ததே... இதையெல்லாம் உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்? கடந்த காலத்தில் உங்கள் கட்சி, ஆட்சியை இழந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது உங்கள் குடும்ப உறுப்பினர்கள்  மக்களிடையே சம்பாதித்த வெறுப்புணர்வு என்பதை உங்களால் மறந்து விட முடியுமா?
உங்கள் கட்சியினர், மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்கள், உங்களுக்கு நெருக்கமான உறவினர்கள்  மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் நடந்து வருகிறது. இந்தியாவையே உலுக்கி போட்ட அந்த வழக்கு, உங்கள் வீட்டை மையமாக வைத்துதான் உருக்கொண்டது என்பது உங்களுக்கு தெரியதா? 
'கோபப்படுங்கள்' என்று இப்போது விளம்பரத்தில் வருகிறீர்கள். அடுத்த முதல்வராக யாருக்கு வாய்ப்பு அதிகம் என்று உங்கள் உறவினர் பத்திரிகையில் வெளி வந்த கருத்துக்கணிப்புக்காக 3 அப்பாவி உயிர்கள் பலியானதே. அதற்கு உங்கள் பதில் என்ன? 


நீங்கள் 'நேர்மையானவர்' என்றே வைத்துக் கொள்வோம். உங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களெல்லாம் கல்வித் தந்தையாக இப்போது திகழ, உங்கள் ஆட்சியும் ஒரு காரணம் என்பதையும் மறந்து விட முடியவில்லை.

உங்கள் ஆட்சியில் நடந்த விஷயங்களை விடுங்கள்.தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வேறு இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் கருதுவது உங்களைத்தான். ஆனால் நீங்களும், துரைமுருகனும்  எந்த ஆக்கப்பூர்வமான செயலிலும் ஈடுபடாமல், வருவதும் போவதுமாகத்தானே இருந்தீர்கள் என்பதை மறுக்க முடியாதுதானே...


கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் குறைகளைத் தேடி நீங்கள் பயணிக்கவில்லை. இப்போது தேர்தல் நெருங்குகிறது. ராகுல்காந்தி போல வேடம் புனைகிறீர்கள்...உப்பளத் தொழிலாளியாக மாறுகிறீர்கள், மிகச் சாதாரண கடைகளில் டீ குடிக்கிறீர்கள், மரத்தடியில் அமர்ந்து சாதாரண மக்களிடையே உரையாடுகிறீர்கள். பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் ஆட்சியின் போது உங்கள் கட்சித் தொண்டர்களே உங்களை சாதாரணமாக அணுக முடியாத நிலை இருந்ததே. ஒருவேளை அத்தகையை தவறுகளை களைந்து, இறங்கி வந்தால் ரொம்பவே சந்தோஷம். ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு ஏற்படாதிருக்கட்டும்.

  -இன்னமும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சாமானியன்

நன்றி-தஹிந்து