Sunday, June 26, 2011

வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்



சொத்து வரிக்கும், செல்வ வரிக்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி-பதில்
1. ''சொத்து வரி, செல்வ வரி வேறுபாடு என்ன? விளக்க முடியுமா?''
அசோக்குமார், பென்னாகரம், தருமபுரி.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர், மனோகர் அண்ட் சவுத்ரி அசோசியேட்ஸ்.

'' பிராபர்டி டேக்ஸ்’ என்ற சொத்து வரி என்பது குறிப்பிட்ட சொத்து இருக்கும் பகுதியை பராமரிப்பு செய்யும் மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டும் வரி. இந்த வரி உள்ளாட்சி அமைப்பின் கணக்கில் ஏறிவிடும். அவை, இதைக் கொண்டுதான் சாலைகள், தெரு விளக்குகள் அமைப்பது மற்றும் பராமரிப்பு போன்ற வேலைகளை செய்கின்றன. 


செல்வ வரி என்பது ஒருவர் அளவுக்கு அதிகமான சொத்துகள் குவிப்பதைத் தடுக்கும் விதமாக வசூலிக்கப்படுகிறது. குடியிருக்கும் வீடு மற்றும் வாடகை வருமானம் வரும் வீட்டை தவிர்த்து சும்மா போட்டு வைத்திருக்கும் வீடு, மனை, தங்க நகைகள், கார் போன்றவற்றின்  மதிப்பு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 'வெல்த் டேக்ஸ்’ என்ற செல்வ வரி கட்ட வேண்டும். இது மொத்த சொத்து மதிப்பில் 1% விதிக்கப்படும். இந்த வரி மத்திய அரசின் கணக்குக்கு செல்லும்.''


2.''வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்கள் (என்.ஆர்.ஐ.) இந்தியாவில் விவசாய நிலம் வாங்க முடியுமா?''

அந்தோனி ஜோசப், மெயில் மூலமாக.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர், மனோகர் அண்ட் சவுத்ரி அசோசியேட்ஸ்.

''வெளிநாட்டில் வசிக்கும் என்.ஆர்.ஐ.க்கள் அப்பார்ட்மென்ட், மனை போன்றவற்றை இந்தியாவில் வாங்கலாம். ஆனால், விவசாய நிலங்களை வாங்க முடியாது.''


3.''தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?''

சி.எஸ். நிவாஸ்குமார்,      திருவள்ளூர்.

டி.பார்த்தசாரதி, பார்த்தசாரதி அசோசியேட்ஸ், சார்ட்டர்ட் என்ஜினீயர்.

''ஒரு மனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஒதுக்கப்பட்டு இருந்தால், அந்த மனை அவரது பெயரில் கிரயம் (SALE DEED) செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மிக முக்கியமாக பார்க்க வேண்டும். மேலும், அந்த நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தும் போது அந்த நிலத்தின் உரிமையாளர் ஏதும் வழக்கு தொடர்ந்தாரா, வழக்கு நிலுவையில் உள்ளதா? என்பதையும் கவனித்து கொள்ள வேண்டும்.''   
   

4.''என் தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். சித்திக்கு பிள்ளை இல்லை. நான் மற்றும் எனது அக்கா என இரண்டு வாரிசுகள். தற்போது குடியிருக்கும் வீடு, என் தந்தையின் தாய் வழிப் பாட்டனாரின் உயில்படி என் தந்தையின் பெயரில் இருக்கிறது. இந்த வீட்டை எங்கள் மூவரின் அனுமதியின்றி தந்தையால் விற்க முடியுமா?''

ஆர்.சுரேஷ், திருவண்ணாமலை.

என். ரமேஷ், வழக்கறிஞர்.

''தாய் வழிப் பாட்டனார் எழுதி வைத்த உயில் மூலம் தங்கள் தகப்பனாருக்கு கிடைத்த சொத்து அவரின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். பரம்பரை சொத்தாக கருதப்பட மாட்டாது. எனவே, அந்த சொத்தை தன் விருப்பப்படி மாற்றி அமைக்க உங்கள் தகப்பனாருக்கு உரிமை உள்ளது. அவரின் காலத்திற்கு பின்பு, உயில் எதுவும் எழுதாவிட்டால் உங்கள் மூவருக்கும் (நீங்கள், அக்கா, சித்தி) சம பங்கு உரிமை கிடைக்கும்.''


5.''நண்பர் ஒருவர் அண்மையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிப்பட்டு இறந்து விட்டார். சாலை விபத்தில் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் மூலம் கிளைம் கிடைப்பதுபோல ரயிலில் அடிபட்டு இறப்பவர்களுக்கு மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?'
'
ஜே.மகேஷ், செங்கல்பட்டு.

சுந்தர்ராஜன்கிளை மேலாளர், வெல்த் மேனேஜ்மென்ட், ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி

''பொதுவாக சாலை விபத்தில் மட்டுமே மூன்றாம் நபர் பாலிசி பொருந்தும். ரயிலில் அடிபட்டு இறந்த உங்கள் நண்பருக்கு மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் மூலம் கிளைம் கிடைக்காது. தனிநபர் விபத்துக்கான பாலிசி உங்கள் நபர் எடுத்திருந்தால் மட்டுமே அவருக்கு கிளைம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.''


6.''வீட்டுக் கடன் மாதத் தவணையை இரு மடங்குகளாக அதிகரித்து கட்டலாம் என திட்டமிட்டுள்ளேன். அப்படி கட்டினால் அபராதம், வேறு கட்டணம் ஏதாவது உண்டா?''

எஸ்.இ. முத்து, மெயில் மூலமாக.

பத்மநாபன்கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திருவண்ணாமலை.

பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரையில், மாதத் தவணையை அதிகரித்து கட்டும்போது எவ்வித கட்டணமும் இருக்காது. கூடுதலாக கட்டும் தொகையும் உடனடியாக அசலில் கழிக்கப்பட்டுவிடுவதால் வட்டி செலவும் குறையும். அதேநேரத்தில், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஓராண்டில் பாக்கி கடன் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் மற்றும் சில இ.எம்.ஐ.-களை மொத்தமாக கட்டத்தான் அனுமதிக்கும் நிலை இருக்கிறது. நீங்கள் கடன் வாங்கியிருப்பது பொதுத் துறை வங்கியா? அல்லது தனியார் துறை வங்கியா என்பதை பொறுத்து முடிவு எடுங்கள்..''

7.''என்னிடம் 50 அம்புஜா சிமென்ட்ஸ் பங்குகள் உள்ளன. ஏ.சி.சி. நிறுவனம், அம்புஜா நிறுவனத்துடன் இணைய போவதாக பேசப்படுகிறது. அப்படி இணையும்பட்சத்தில்  விலை எவ்வாறு கணக்கிடப்படும்?''

ரமேஷ்பட், சி.இ.ஓ. அனிராம் நிறுவனம்

''அம்புஜா சிமென்ட்ஸ், ஏ.சி.சி. நிறுவனத்துடன் இணையப் போகிறது என்பது புரளி. அப்படியே இணைந்தாலும் எந்த விகிதத்தில் பங்குகள் கொடுப்பார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே விலையைப் பற்றி கூறமுடியும். அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி. இந்த இரண்டு நிறுவனங்களுமே நல்ல வலிமையான நிறுவனம். எனவே அதிகாரப்பூர்வ தகவல் நிறுவனங்களிடமிருந்து வந்த பிறகு எந்த முடிவையும் எடுக்கவும்.''


நன்றி - நாணயம் விகடன்

கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி? (ஆன்மீகம்)


கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1. கோ தானம் எதற்காக... அதன் மகிமைகள் என்ன?

பசு மாட்டில் 14 உலகங்களும் அடங்கியுள்ளன. பசுவை தானம் அளித்தால், அகில உலகையும் தானம் அளித்த பலன் உண்டு. வேள்விக்குத் தேவையான நெய், இறைவனின் அபிஷேகத்துக்கு உகந்த பால், தயிர், நெய், பஞ்சகவ்யம் ஆகியன பசுவிடம் இருந்து கிடைக்கின்றன. பால், தயிர், நெய், கோமியம், சாணி ஆகிய ஐந்தின் கலவை பஞ்சகவ்யம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து; கவ்யம் என்றால் பசுவிடம் இருந்து வந்தது என்று பொருள். இது, நமது எலும்பு மற்றும் தொடு புலனோடு இணைந்த பாபத்தை அழிக்கவல்லது என்கிறது சாஸ்திரம் (யத்வகஸ்திகதம்பாபம...).

கோமூத்திரம் வெள்ளைப்பாண்டை அறவே அகற்றும்; பஞ்ச கவ்யகிருதம் மனநோயைக் குணப்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் பால் முழு உணவு. உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மையாக்குவதுடன், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது பசுவின் பால். நெய்யானது, ஜீரண சக்தியை வலுப்படுத்தி உடலுக்கு வலுவூட்டும். மருத்துவ குணமுடைய பொருள்களை மற்றவர்களுக்கு அளிப்பதால் உண்டாகும் பெருமை சொல்லில் அடங்காது. ஆறறிவு இல்லாதது, ஆறறிவு பெற்றவர்களை வாழ வைக்கிறது. பசுவின் பாலுக்கும் நெய்க்கும் ஈடான மற்றொரு பொருள் இல்லை. அதன் இழப்பை, தற்காலச் சூழலில் வாழும் ஆறறிவு பெற்றவர்களிடம் காணமுடிகிறது.



தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குத் தாய்ப்பாலாகச் செயல்படுவது பசும்பால்தான். இயற்கையின் படைப்பை கடைச் சரக்காக மாற்றக்கூடாது என்பதால், தானமாக (இனாமாக) அளிக்கச் சொன்னது தர்மசாஸ்திரம். பால் கொடுப்பது பசு; பணம் பெறுவது மற்றொருவர் என்று இருக்கக்கூடாது என்பதால், பசுவை தானமாக அளிக்கப் பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம். வேள்விக்குத் தேவையான நெய்யை அளிப்பதால், வேள்வி அரசன் கண்ணன், பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாகத் தோன்றினான்.




2. அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியம் என்பார்கள். ஆனால், அந்த அரிசி மாவை தின்ன வரும் எறும்புகள், நம்மையும் அறியாமல் காலில் மிதிபட்டு இறந்தால், பாபம் சேராதா?

அனுதினமும் மருந்தடித்துக் கொசுக்களைக் கொன்று குவிக்கிறோம். அது பாபம் இல்லையா? அதேபோல், நடக்கும் போது நமது செருப்புகளுக்கு அடியில் அகப்பட்டு ஈ- எறும்பு போன்றவை மடிகின்றனவே?! வெண்டைக்காயை நறுக்கும் போது, சில நேரம் எதிர்பாராதவிதமாக உள்ளிருக்கும் புழுக்களும் அறுபட்டுவிடுமே! மாவரைக்கும்போதும், அம்மியில் அரைக்கும் வேளையிலும் மிகச்சிறிய உயிரினங்கள் குழவியில் அடிபட்டு மடிந்துபோகலாம்; வரட்டி, விறகுகளில் ஒளிந்திருக்கும் உயிரினங்கள், அடுப்பு நெருப்பில் மடிய நேரிடுகிறதே? தேனுக்காக தேனீக்களைத் தெரிந்தே அழிக்கிறோமே?! வரையறை இல்லாத அஹிம்சையை ஏற்றால், பல நன்மைகளை இழக்க நேரிடும். எறும்பு வராமல் இருக்க, தெரிந்தே நாம் எறும்புப் பொடியை உபயோகிப்போம்.



விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோ, 'லக்ஷ்மண ரேகையை’ (சாக்பீஸ் கோடு போன்று) அறிமுகம் செய்து, எறும்புகளை அழிக்க வழி சொல்கிறது.



உங்கள் கவனத்துக்கு ஒரு விஷயம்... எறும்புக்கு உணவளிப்பதற்காக மாக்கோலம் போடுவதில்லை. தரையைச் சுத்தம் செய்து, கோலம் போட்டு, சுப காரியங்களை நிறைவேற்றும்படி பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம் (ரங்க வல்யாத்யலம் கிருதம்). கோலம் போட்டு அதில் விளக்கை வைப்போம். கோலத்தின் மீது கும்பம் வைப்பதும் உண்டு. கோலமிட்டு அதன்மீது தட்டு வைத்து, விருந்தினரின் கால்களை அலம்பிப் பணிவிடை செய்வோம். அக்னி குண்டத்துக்குக் கோலம் போட்டு அழகுபடுத்துவோம்.



மற்றபடி, எறும்புக்கு உணவளிக்கவே கோலம் பயன்படும் எனும் கூற்று, சாஸ்திரத்துக்குப் புறம்பானது. எறும்புகள் கோலத்தைத் தாறுமாறாக்கினால், வேறு கோலம் வரைந்து சரிசெய்ய வேண்டும். கோலத்தை அழிப்பது அபசாரம். ஈரம் காயும் வரை, நாமே கோலத்தை மிதித்து அழித்துவிடாமல் இருக்கக் கண்காணிப்போம் இல்லையா?!



அரிசி மாவால் கோலமிடுதல் என்பது, எறும்புகளுக்கு உணவளிக்கும் எண்ணத்தில் எழவில்லை. அரிசியில் விச்வே தேவர்கள் குடியிருக்கிறார்கள். கோலத்தில் நிரம்பியிருக்கும் அவர்களது சாந்நித்தியம், செய்யும் சடங்கின் நிறைவுக்குத் துணை புரியும் (தண்டுலா:வைச்வதேவத்யா:). ஆக, கோலத்தில் எறும்புகள் வராமல் பார்த்துக்கொண்டு, அதில் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். கோலத்தைக் காலால் மிதிக்கக்கூடாது. அதில் கவனம் வேண்டும். சடங்கு முடியும் வரை கோலம் இருக்க வேண்டும். கஷ்டப்பட்டுக் கோலம் போட்டுத்தான் எறும்புகளுக்கு உணவளித்து மகிழவேண்டும் என்பதில்லை; அரிசியை ஒரு மூலையில் கொட்டி வைத்தால் போதும்; எறும்புகள் எடுத்துக்கொள்ளும்; கால்களில் மிதிபட்டு மடியாமலும் இருக்கும்.




3. எங்கள் மகன், மகள் இருவருமே கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்கள் அந்திம காலத்துக்குப் பிறகு, எங்களுக்கு இவர்கள் கர்ம காரியங்கள் செய்யலாமா? கூடாது எனில், வேறு யார் மூலம் செய்யலாம்?



பண்பு, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றை ஒதுக்கி, தன்னிச்சையாகக் கலப்புத் திருமணத்தைச் சந்தித்த பிறகு, மீண்டும் சம்பிரதாயத்தை எட்டிப் பார்ப்பது சரியல்ல. தற்காலச் சூழலில், விருப்பப்படி திருமணம் செய்யலாம் என்று வந்த பிறகு, பழைய சடங்குகளை நிறைவேற்ற நினைப்பது பொருளற்றது. கலப்புத் திருமணத்தை ஏற்காதவர்களுக்கு, மரபுப்படி செயல்படுவது சிறப்பான விஷயம். அதன் சட்டதிட்டங்கள் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றிருக்கக்கூடாது. மரபை மீறியவனுக்கு அந்தச் சட்டதிட்டங்கள் பொருந்தாது; விருப்பப்படி செயல்படலாம்.



தங்கள் பங்காளிகளில் எவரேனும் முன்வந்தால், அவர்கள் உங்களுக்கானதை நிறைவேற்றலாம். அவர்கள் மரபோடு இணைந் தவராக இருக்கவேண்டும். நாம் விருப்பப்படி செயல்படுவோம்; தர்ம சாஸ்திரம் அதை ஏற்கவேண்டும் என நினைக்கக்கூடாது. வரம்பு மீறிய செயலுக்கு என்றைக்கும் தகுதி இழப்பு உண்டு. கலப்பு மணத்தில் மற்றொருவரின் மரபுப்படி செயல்படலாம். கலப்பில் இரண்டுக்கும் சம அந்தஸ்துதான். ஆகையால், ஒன்று இல்லையெனில் மற்றொன்றைப் பின்பற்றலாம்!


4. நவக்கிரகங்களை எந்தெந்த திசையை நோக்கிப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?



சூரியன் கிழக்கு முகமாக இருக்கலாம். சந்திரன்- மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்- வடக்கு; குரு- வடக்கு; சுக்கிரன்- கிழக்கு; சனி- மேற்கு; ராகு- தெற்கு; கேது- தெற்கு... இந்த முறையில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது, ஸம்ஸ்கார ரத்னமாலை எனும் நூல். அத்துடன், மற்ற எல்லா கிரகங்களையும் சூரியனை நோக்கி பிரதிஷ்டை செய்வதும் சிறப்பு என்றும் சொல்கிறது.



விண்வெளியில் இருக்கும் கிரக வரிசைப்படியும் பிரதிஷ்டை செய்யலாம். கோள வடிவில்... சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்கிற ஏழு கிரகங்கள் வரிசையாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து ராகு- கேதுவையும் பிரதிஷ்டை செய்யலாம். கிரகங்கள் காலத்துடன் இணைந்திருக்கும்; காலம், எப்போதும் நம்முடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு சுப காரியத்திலும் கிரக வழிபாடும் இணைந்திருப்பதால், நவக்கிரகங்களுக்கென தனி வழிபாட்டு முறை தலை தூக்காத காலம் இருந்தது. தினமும் நீராடியதும், கை நிறைய தண்ணீரை அள்ளி 3 முறை கிரகங்களுக்குத் தர்ப்பணம் செய்யும் நடைமுறையை, வேத காலத்திலி ருந்தே வேதம் ஓதுபவர்கள் கடைப்பிடிப்பது உண்டு.



பிற்காலத்தில் வந்த சிந்தனையாளர்கள், நவக்கிரகங் களை ஆலயப் பிரவேசம் செய்வித்து, பிரதிஷ்டை செய்யும் முறையையும் பரிந்துரைத்தனர். இன்றும் பல கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருக்காது. ஆலயத்தில் உறைந்திருக்கும் (மூலவர்) திருவுருத்திலேயே நவக்கிரக சாந்நித்தியம் இருப்பதாகச் சொல்வார்கள். இந்தக் கோயில் ராகு ஸ்தலம், இது கேது ஸ்தலம் என்று சுட்டிக் காட்டுவதும் உண்டு. தற்போது பக்தர்களின் விருப்பம், பொருளாதாரம் ஆகியவற்றை முன் வைத்து, மற்ற மூர்த்தங்களுடன் சேர்த்து, நவக்கிரகங்களும் கோயிலில் இடம் பெற்றுள்ளனர்.



முன்பு கோயிலைத் தேடிச் சென்று பக்தன் வழிபடுவான். இப்போதெல்லாம் பக்தனுக்கு வசதியான இடங்களில் கோயில் வந்துவிடுகிறது. தனித்தன்மை மாறி, வியாபார ஸ்தலமாகக் காட்சியளிக்கும் கோயில்களும் உண்டு. இந்த மாதிரியான சிக்கலைத் தவிர்க்க, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய முனையவில்லை முன்னோர்கள்.



எதிலுமே ஒரு புதுமை- ஒரு வித்தியாசம் இருந்தால், மக்களுக்கு ஈடுபாடு ஏற்படும். அதை அறிந்த அறிஞர்கள், புதுமையாகத் தோற்றுவித்ததே நவக்கிரக பிரதிஷ்டை. அதன் பிறகு, குறிப்பிட்ட திசைகள்வாரியாக அவர்களை பிரதிஷ்டை செய்யும் முறை பிரபலமானது.



5. வடநாட்டில், பெரியவர்களை வணங்கும்போது தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? அதேபோல், நம் கோயில்களில் நைவேத்தியம் செய்த பிறகே ஆரத்தி காட்டுகிறோம்; ஆனால், அங்கெல்லாம் ஆரத்திக்குப் பிறகே நைவேத் தியம் சமர்ப்பிக்கிறார்கள். ஏன் அப்படி?


தேசத்துக்கு தேசம் நடைமுறையில் மாறுபாடு தென்படும். இதை தேசசாரம்... அதாவது, நாட்டு நடப்பு அல்லது சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திர சட்டதிட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக் காதவற்றை சம்பிரதாயம் என்று ஏற்று, நடைமுறைப்படுத்துவார்கள்.



திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பு- ஜானுவாசம் என்றொரு சம்பிரதாயம் உண்டு. அதேநேரம், மணப்பெண் அழைப்பு எனும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படும். மாமன் மகள்- அத்தை மகன் இவர்களின் திருமணம் நடந்தேறும்; முறைப்பெண் என்று அதைக் கடைப்பிடிப்பார்கள். தலையில் முக்காடு இடுவது, வடநாட்டு சம்பிரதாயம். பிற பெண்களைக் கூர்ந்து கவனிக்கக் கூடாது. அதற்கு உகந்த வகையில் முக்காடு பயன்படும். ஸ்ரீராமனுடன் வனவாசம் செல்லும்போது, முக்காடு போட்டுக் கொண்டிருந்தாள் சீதை. 'மக்கள் உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டும்; முக்காடை அகற்றி, முகத்தைக் காட்டு’ என சீதைக்கு ஸ்ரீராமன் கட்டளையிட்டதாகத் தகவல் உண்டு.



சம்பிரதாயம் என்றால், எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று அல்ல. நைவேத்தியத் துக்குப் பிறகு ஆரத்தியும், ஆரத்திக்குப் பிறகு நைவேத்தியமும் சம்பிரதாயத்தில் விளைந்தது. கோயிலுக்கு பெரிய மனிதர்கள் விஜயம் செய்யும்போதெல்லாம் ஆரத்தி எடுக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் உண்டு. எனவே, சம்பிரதாயங்கள் குறித்த ஆராய்ச்சியைக் கைவிட்டு, வழிபாட்டில் கவனம் செலுத்துவதே நல்லது!


- பதில்கள் தொடரும்

நன்றி - சக்தி விகடன்

Saturday, June 25, 2011

உங்க கேரியர் பற்றி நீங்களே கேர் எடுத்துக்கலைனா எப்படி?

கேரியர் அன்லிமிடட் -1 : சவால்களை வரவேற்போம்!

- பிரிட்டோ

(எவ்விதப் பணிச் சூழலைக் கொண்ட இளைஞர்களையும் பக்குவப்படுத்த முனையும் வழிகாட்டித் தொடர்)
நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதுதானா? எல்லா பிரச்னைகளுக்கான தீர்வையும்  உங்களால் எப்போதும் சரியாக கண்டறிய முடிகிறதா?

'ஆம்' என்று சொன்னால், கங்கிராட்ஸ்... நீங்கள் நன்றாக பொய் சொல்கிறீர்கள்!
உண்மை என்னவென்றால், பெரிய பெரிய (அரசியல்/தொழில்) தலைவர்கள் கூட  சில நேரம்  தடுமாறும் இடம் அது.
சரியான முடிவு எடுக்கும் திறன், அனுபவத்தால் வருகிறது. அந்த அனுபவமோ, தவறான முடிவு எடுத்ததால் வருகிறது.
சவால்களை வரவேற்போம்..!
பிரபல சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம். இதுவரை அவர்கள் சந்தித்திராத புதுப் பிரச்னை. தீர்வு காண வேண்டும்.
ஒரு கஸ்டமர் தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடைக்கு போய் இவர்கள் தயாரித்த சோப்பை வாங்கி இருக்கிறார். சோப்பு பாக்கெட்டில் சோப்பு இல்லை. காலியாக இருந்திருக்கிறது. கம்பெனிக்கு போன் செய்து புகார் செய்துவிட்டார்.
"ப்ச்.. அவர் பொய் சொல்றார்பா," என்று இதை அலட்சியமாக ஒதுக்கி விட்டு, சமோசா சாப்பிட போகவில்லை அந்த சோப்பு கம்பெனி நிர்வாக அதிகாரி. மீட்டிங் கூட்டினார்.
சகலமும் இயந்திரமயம் ஆக்கப்பட்ட சோப்பு தொழிற்சாலை அது. சோப்பு தயாராகி, வரிசையாக வந்து, தானாகவே பேக் செய்யப்பட்டு தானாகவே பெரிய அட்டைப் பெட்டிகளில் அடுக்கப்படும்படியாக இருந்தது அவர்கள் இயந்திர அமைப்பு.
தயாரித்து பேக் செய்யப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு சோப்பு பாக்கெட்டிலும் சோப்பு இருப்பதை உறுதி செய்ய என்ன செய்யலாம் என்று முடிவு செய்யத்தான் இந்த அதிகாரிகளின் அவசர மீட்டிங்.
மீட்டிங்கில், புதிதாக வேறு பேக்கிங் இயந்திரங்கள் வாங்கலாம், சோப்புகள் அடுக்கிய அட்டைப் பெட்டியை கடைகளுக்கு அனுப்பும் முன் வேலையாட்களை வைத்து எடை போட்டு பார்த்து அனுப்பலாம் உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்காக புதிதாக வேலைக்கு எடுக்கப்பட வேண்டிய ஆட்களும் செலவினங்களும் பரிசீலிக்கப்பட்டன.

இறுதியில் அங்கே வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளி சொன்ன யோசனையை அமல்படுத்தினார்கள். என்ன அது?
சோப்பு பாக்கெட்டுகள் அட்டைப்பெட்டியை அடையும் இடத்துக்கு அருகில் ஒரு மேசையை வைத்தார்கள். அதன் மீது ஒரு பெரிய சைஸ் டேபிள் ஃபேனை வைத்தார்கள். பாக்கெட்டில் சோப்பு இல்லாவிட்டால், காலி பாக்கெட் காற்றில் பறந்துவிடும். சோப் இருக்கும் பாக்கெட்டுகள் மட்டுமே அட்டைப் பெட்டியை வந்தடையும்.
மிக எளிமையான யோசனை. ஆனால் பெரிய செலவில்லாமல், பிரச்னைக்கு தீர்வு தருகிறது.இந்த யோசனை ஏன் மற்ற அதிகாரிகளுக்கு உடனே தோன்றவில்லை..?காரணம், அவசரம்.
பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதற்றமே அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது.  அவசரப்பட்டு புது இயந்திரமோ, வேலையாட்கள் நியமனமோ செய்திருந்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?
பல நேரங்களில் பிரச்னைக்கான தீர்வு மிக எளிதானதாக இருக்கும்.

பிரச்னையை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மாதிரி தான். பின்னர் பதற்றப்படாமல் அதை அணுகினால், தீர்வு கிடைப்பது எளிதாகிறது.
பிரச்னை என்பது ஒரு சவால். அதற்கான தீர்வு தேடுவதை நம்மை மேம்படுத்திக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், தினம் தினம் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்கலாம்.
சவால்கள் கூடக் கூட உங்களது தீர்வு காணும் திறன் கூடும். புத்தி கூராகும்; வாழ்க்கை நேராகும்.


நன்றி - நாணயம்  விகடன் 

பழ வகையில் பல வகை சமையல் செய்வது எப்படி?(வீட்டில் சமைக்கும் சில பெண்களுக்கு மட்டும் )

 ஃப்ரூட்ஸ் சமையல்

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டும்தான். அதனால்தான்... காட்டு வாழ்க்கை நடத்திய வேடர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவ்வளவு ஏன்... இன்றைக்கும்கூட காட்டில் பழங்களைத் தின்றே உயிர் வாழும் விலங்கு மற்றும் பறவைகளை எடுத்துக் கொள்ளுங்  களேன்... அவையெல்லாம் எத்தனை அழகாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

 
உடலின் ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, எலும்புகளுக்கு வலுவூட்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி என பல வழிகளிலும் உதவும் பழங்கள்... என்றென்றும் இளமையையும் தரக்கூடிய அற்புத வைத்தியரும்கூட!

அத்தகைய பழங்களில் 30 வகை ரெசிபிகளை அசத்தலாக செய்து காட்டியிருக்கிறார் நங்கநல்லூர் பத்மா. அவை அனைத்தும் செஃப் ரஜினியின் கை வண்ணத்தில் அழகழகாக இங்கே இடம் பிடிக்கின்றன.

பழ ரெசிபிகளை செய்து கொடுத்து ஃபேமிலியை பரவசப்படுத்துங்கள்!

1. பலே பருப்பு வடை 

துவரம் பருப்பு, கடலைப்பருப்புடன் சிறிது உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், 2 பல் பூண்டு, உப்பு, நான்கு தக்காளி சேர்த்து அரைத்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். பருப்பு வடையினால் ஏற்படும் வாயுத் தொல்லை, இந்த வடையைச் சாப்பிடும்போது ஏற்படாது.

2. சுலபமான சிப்ஸ் 

உருளைக்கிழங்கை மெல்லிய வட்டங்களாக சீவி, உப்பு சேர்த்து வேக வைத்து, வெயிலில் நன்றாக உலர்த்தி டப்பாவில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது மிளகாய் தூள் சேர்த்து சிப்ஸாக பொரித்துக் கொள்ளலாம்.

3. கொட்டு ரசம் 

மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம்பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை கரைத்து, அரைத்தப் பொடியை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைத்தால்... சட்டென சுவையான 'கொட்டு ரசம்' ரெடி!

4. இஞ்சி பச்சடி 

இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, தயிருடன் சேர்த்து கலக்கவும். சிறிது எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டினால் இஞ்சி பச்சடி ரெடி! ஜீரணத்துக்கும் மிகவும் நல்லது.


5. பலா கறி 

பலாக் கொட்டையை நன்றாக வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, பலாக் கொட்டை துண்டுகளை போடவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, தேங்காய், மாங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

6.  பலாப்பழ சக்கவரட்டி 

தேவையானவை: பலாச்சுளைகள் - 20, வெல்லம் - 200 கிராம், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும். உருட்டும் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதைப் போட்டு, நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துப்போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:  இது பலாப்பழ சீசன். இந்த சக்கவரட்டியை தயாரித்து வைத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு சுகியன், பாயசம், போளி என்று விதவிதமாக தயாரித்துக் கொடுக்கலாம்.


7. பைனாப்பிள் போளி 

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், வட்டமாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வெல்லம் - 200 கிராம், நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா மாவில் கேசரிப்பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக போளி மாவு பதத்தில் பிசைந்து மூடி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பைனாப்பிளை பொடியாக நறுக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,  சிறிது கெட்டியாக பாகு காய்ச்சவும். அரைத்த பைனாப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தட்டி, உள்ளே பூரணத்தை வைத்து மூடி போளியாக தட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவியும் போளி சுடலாம். ஆப்பிள், வாழை போன்ற விருப்பப்பட்ட பழங்களிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.

8. மாம்பழ மில்க் ஷேக் 

தேவையானவை: மாம்பழம் - 2, பால் - 500 மி.லி, சர்க்கரை - 150 கிராம்.
செய்முறை: மாம்பழத்தை தோல்சீவி மிக்ஸியில் விழு தாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். அரைத்த மாம்பழம் விழுது, சர்க்கரை ஆகியவற்றை பாலுடன் சேர்த்து கலந்து நன்றாகக் கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.

குறிப்பு: மாம்பழம் சூடு என்று சிலர் மாம்பழம் பக்கமே போக மாட்டார்கள். பால் சேர்த்து பருகும்போது, சூடும் தாக்காது; உடம்புக்கும் நல்லது.

9.தர்பூசணி தோசை 

தேவையானவை: தர்பூசணி - அரை கிலோ, புழுங்கல் அரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 150 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி, தனியாக அரைத்து, மாவுடன் கலக்கவும். மாவில் உப்பு சேர்த்து கரைத்து காயும் தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு: அரிசி, உளுந்துடன் தர்பூசணியை சேர்த்து அரைத்தால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

10. பழ வடை

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - 100 கிராம், பச்சை ஆப்பிள், பேரிக்காய் - தலா 1, மிளகு - 6 (எண்ணிக்கையில்), இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பச்சை ஆப்பிள், பேரிக்காயை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தீயை மிதமாய் வைத்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பச்சை ஆப்பிள் மிகவும் நல்லது. இதற்கு சாஸ் அல்லது சட்னி சூப்பர் சைட்-டிஷ்!

11.  சப்போட்டா கொழுக்கட்டை 

தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, வெல்லம் - 100 கிராம், சப்போட்டா - 4, தேங்காய் - அரை மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து சல்லடையால் சலிக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். அரைத்த சப்போட்டா விழுது, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பாகுடன் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும், உலர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கிளறி, கெட்டியானதும் இறக்கி நன்றாகப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து, சப்போட்டா உருண்டைகளை வைத்து மூடி இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பருப்பில்லாமல் பழத்தை வைத்து செய்யும் இந்தக் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருக்கும். எல்லாப்பழங்களிலும் இதேபோல் கொழுக்கட்டை தயாரிக்கலாம்.

 12. ஆப்பிள் பர்பி 

தேவையானவை: ஆப்பிள் - 1, சர்க்கரை - 150 கிராம், தேங்காய் - அரை மூடி, ரவை - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரைய விடவும். ஆப்பிள் தோல் சீவி பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஆப்பிள் மற்றும் தேங்காயை சர்க்கரைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். ரவை தூவி சேர்த்து நெய் விட்டு ஏலக்காய்த்தூள் போட்டு மேலும் கெட்டியாகக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடவும்.

குறிப்பு: தேங்காய் பர்பியை விட, பழங்களில் செய்யும் இதுபோன்ற பர்பி நல்ல டேஸ்டாக இருக்கும்.

13.  வெரைட்டி ஃப்ரூட் இட்லி 

தேவையானவை: மாம்பழம் - 1, புழுங்கல் அரிசி - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 100 கிராம், ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், பைனாப்பிள் - தலா 4 துண்டுகள், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பழங்களை பொடியாக நறுக்கவும். அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து மாம்பழத்துண்டு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து நறுக்கிய பழத் துண்டுகளை கலந்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அப்படியே சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். மாம்பழத்திற்கு பதிலாக பப்பாளி சேர்த்தும் இதே முறையில் இட்லி தயாரிக்கலாம்.

14.  பப்பாளி அப்பம் 

தேவையானவை: அரிசி மாவு, கோதுமை மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பப்பாளிப் பழத் துண்டுகள் - 100 கிராம், நெய் - 100 மி.லி, தேங்காய் - அரை மூடி.
செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். தேங்காயைத் துருவி, வெல்லம், பப்பாளித் துண்டுகள் சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், மாவுக் கலவை சேர்த்து நன்றாகக் கலந்து பணியாரக் கல்லில் நெய் தடவி அப்பமாக ஊற்றவும். ஒரு குச்சியின் உதவியால் திருப்பிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கடாயிலும் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி ஊத்தப்பமாகவும் செய்யலாம்.

15. வெரைட்டி ஃப்ரூட் சுகியன் 

தேவையானவை: பைனாப்பிள் துண்டுகள் - 100 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 4, மாம்பழம், வாழைப்பழம் - தலா 2 துண்டுகள், உளுத்தம்பருப்பு, பொன்னிறமாக வறுத்த பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மி.லி.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து கெட்டியாக வடை மாவு பதத்தில் அரைக்கவும். வறுத்த பாசிப்பருப்பை ஊற வைத்து பைனாப்பிள் துண்டுகள், மாம்பழத்துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கிளறி பூரணமாக தயாரிக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டையாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து அரைத்த உளுந்து மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: தீயை மிதமாக வைத்துதான் பொரிக்கவேண்டும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும் இந்த சுகியன்.

16.  ஸ்ட்ராபெர்ரி ஜாம் 

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 20, பேரீச்சம்பழம் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை: இஞ்சி தோல் சீவி நறுக்கி, ஸ்ட்ராபெர்ரி, பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: பிரெட், சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். ஆப்பிள், பைனாப்பிள் பழத்திலும் இதேபோல் தயாரிக்கலாம்.

 17. வாழைப்பழ அல்வா 

தேவையானவை: வாழைப்பழம் - 6, சர்க்கரை - 150 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கி நன்றாக மசிக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரிப்பவுடர் சேர்த்து, நெய் விட்டு முந்திரிப்பருப்பு போட்டு நன்றாகக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: விசேஷ நாட்களில் வாழைப்பழம் மீந்து விட்டால், இந்த அல்வா செய்து ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

18. பழ ஊறுகாய் 

தேவையானவை: கொய்யாப்பழம், பச்சை ஆப்பிள், பேரிக்காய், ப்ளம்ஸ், கிவிப் பழம் - தலா 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொய்யாப்பழம், கிவிப் பழத்தை பொடியாக நறுக்கவும். ஆப்பிள், பேரிக்காயின் தோலை சீவி பொடியாக நறுக்கவும். ப்ளம்ஸ் விதையை நீக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, அதனுடன் உப்பு, மிளகாய்த்து£ள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: எண்ணெயே சேர்க்காமல் பழங்களை வைத்தே ஈசியாக இந்த ஊறுகாய் செய்யலாம். பிரெட்டில் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.

19.  பழ பச்சடி 

தேவையானவை: வாழைப்பழம், ஆப்பிள் - தலா 1, கருப்பு திராட்சை - 200 கிராம், தக்காளி - 2, சர்க்கரை - 100 கிராம், செர்ரிப் பழம் - 6.
செய்முறை: வாழைப்பழம், ஆப்பிளை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். சிறிது வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, செர்ரிப் பழத்தை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: திருமணங்களில் இந்தப் பழப்பச்சடிக்குதான் முதலிடம். விருப்பமான பழங்களிலும் இந்தப் பச்சடியை செய்து கொள்ளலாம்.


20.  மில்க் ஃப்ரூட் தூத்பேடா 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை, நறுக்கிய சப்போட்டா, நறுக்கிய ஆப்பிள் - தலா 100 கிராம், வாழைப்பழத் துண்டுகள் - 4, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாலை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சவும். சப்போட்டா, ஆப்பிள், வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். பாதாமை ஊற வைத்து முந்திரி சேர்த்து அரைத்து, சர்க்கரை ஏலக்காய்தூள் சேர்த்து கொதிக்கும் பால் விழுதுடன் கலந்து, கெட்டியாக கிளறி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும். நன்றாக பிசைந்து சிறிய வட்டமாக தட்டி வைக்கவும்.

குறிப்பு: இந்த தூத்பேடா மிகவும் ருசியாக இருக்கும். கோவா தயாரிக்காமல் ஜாமூன் மிக்ஸ் பயன்படுத்தியும் செய்யலாம்.

21. சப்போட்டா சத்துமாவு உருண்டை 

தேவையானவை:  சப்போட்டா - 4, கோதுமை, தினை, பொட்டுக்கடலை, கேழ்வரகு, பாசிப்பருப்பு, சர்க்கரை, சோள மாவு - தலா 100 கிராம், முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: சப்போட்டாக்களை தோல் உரித்து விதை நீக்கவும். கோதுமை, தினை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, கேழ்வரகு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து சர்க்கரை சேர்த்து மெஷினில் நைசாக அரைக்கவும். இவற்றை ஒன்றாக சேர்த்து, சப்போட்டா பழம், சோள மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். வறுத்த முந்திரியை சேர்த்து, நெய் விட்டு கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: சத்தான, பழச்சுவையுடன் கூடிய உருண்டை இது. பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

22. பழ பாசந்தி 

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1, செர்ரிப் பழம் - 4, உலர்ந்த திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: ஆப்பிள், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். பாலை பாதியளவுக்கு சுண்டக் காய்ச்சி சர்க்கரை சேர்க்கவும். மீண்டும் கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி இறக்கி ஆறியதும், நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி, செர்ரிப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.

குறிப்பு: பாலும், பழமும் கலந்து வாசனையும், டேஸ்டும் அபாரமாக இருக்கும்.

 23.வாழைப்பழ கேசரி 

தேவையானவை: ரவை - 250 கிராம், வாழைப்பழம் - 4, பால் - 500 மி.லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மி.லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: சிறிது நெய்யில் ரவையை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நெய் விட்டு வதக்கவும். பாலைக்காய்ச்சி வறுத்த ரவையை போட்டு கிளறி, வதக்கிய வாழைப்பழத்தையும் மசித்து சேர்த்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து நெய் விட்டு கிளறி, இறக்கவும்.

குறிப்பு: சத்யநா ராயணா பூஜையின் போது வாழைப்பழ கேசரி செய்து நைவேத் தியம் செய்வார்கள். கேசரிப்பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

24. மாம்பழ மோர்க்குழம்பு 

தேவையானவை: மாம்பழம் - 1, மோர் - 500 மி.லி, காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழத்தை நறுக்கி லேசாக வேக வைத்து நன்றாகக் கூழாக்கவும். வெந்தயம், காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காயை துருவி சேர்த்து அரைக்கவும். இதனுடன் மாம்பழக்கூழ், மோர், உப்பு சேர்த்து கரைத்து, சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து கலந்து லேசாக கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: மாம்பழ சீசனில் இந்த மோர்க்குழம்பு செய்யலாம். காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்த்தும் செய்யலாம். பொரித்த பப்படம், இதற்கு சூப்பராக இருக்கும்.

25. மிக்ஸ்டு ஃப்ரூட் இடியாப்பம் 

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய  கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், உரித்து கொட்டை நீக்கிய கமலா ஆரஞ்சு சுளை - தலா 100 கிராம்.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு போல் நன்றாக வழுவழுவென அரைக்கவும். அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் மாவைப் போட்டு கெட்டியாக கிளறி, உருண்டைகளாக உருட்டவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போடவும். வெந்ததும் உருண்டைகள் மேல் எழும்பி வரும். அவற்றை தனியே எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும். இதனுடன் மாதுளை, கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள், கமலா ஆரஞ்சு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: வழக்கமான இடியாப்பம் போல் செய்து பழங்களுடன் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

26. ஃப்ரூட்ஸ் பால் கொழுக்கட்டை 

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, அரிசி - 200 கிராம் (ஊற வைக்கவும்), பால் - 500 மி.லி, பொடித்த வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்துக்கள், பொடியாக நறுக்கிய சப்போட்டா - சிறிதளவு.
செய்முறை: ஊறிய அரிசியுடன் தேங்காயை துருவி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறி நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து உருட்டிய உருண்டைகளைப் போட்டு வேக விட்டு எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி வேக வைத்த உருண்டைகளைப் போட்டு வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதித்ததும், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், சப்போட்டா சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: வாழைப்பழம், பலாப்பழத்திலும் இந்த கொழுக்கட்டை செய்யலாம்.

27. ஃப்ரூட்ஸ் கோஸ்மல்லி 

தேவையானவை: லிச்சிப் பழம் - 10, பாசிப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பேரிக்காய், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் - தலா 50 கிராம், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிக்கவும். இதனுடன் பேரிக்காய், லிச்சி, ஆப்பிள், மாதுளை முத்துக்கள், உப்பு சேர்த்து மேலாக எலுமிச்சை சாறு விட்டு நன்றாகக் கலக்கவும்.

 
குறிப்பு: பாசிப்பருப்புக்கு பதிலாக முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்தும் தயாரிக்கலாம். கடலைப்பருப்பு ஊற வைத்து சிறிது வேக வைத்தும் செய்யலாம். திருமண சாப்பாட்டு பந்தியில் கோஸ்மல்லிக்கு தனி இடம் உண்டு.

28.பலாப்பழ பாயசம் 

தேவையானவை: பலாச்சுளை - 10, பொடித்த வெல்லம் - 100 கிராம், நெய் - 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 200 மி.லி.
செய்முறை: பலாச்சுளையை நெய்விட்டு வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி, அரைத்த விழுது, வறுத்த முந்திரி,  ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: படு ருசியாக இருக்கும் இந்த பலாப்பழ பாயசம்... கேரள மக்கள் விரும்பி சாப்பிடும் ரெசிபி!

 29.ஃப்ரூட் பொங்கல் 

தேவையானவை: அரிசி - கால் கிலோ, வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா - தலா 1, நெய் - 100 மி.லி, கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - 500 மி.லி, முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்கு பால், நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து அல்லது ஆறு விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்றாகக் குழைத்து, கல்கண்டு, மீதமுள்ள பால், வாழைப்பழம், சாத்துக்குடி, பைனாப்பிள் துண்டு, சப்போட்டா சேர்த்து, நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: ஒரே ஒரு பழத்திலும் இதேபோல் செய்யலாம். நெய்யில் ட்ரை ஃப்ரூட்ஸ் வறுத்தும் சேர்க்கலாம்

30.மல்டி ஃப்ரூட் லஸ்ஸி 

தேவையானவை: திராட்சை - 10 எண்ணிக்கை, சப்போட்டா, மாம்பழம், சிறிய வாழைப்பழம் - தலா 1, சாத்துக்குடி ஜூஸ் - 200 மி.லி, சர்க்கரை - 50 கிராம், அதிகம் புளிக்காத தயிர் - 500 மி.லி.
செய்முறை: திராட்சை, சப்போட்டா தோல் உரித்து விதை நீக்கவும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சர்க்கரை, திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாத்துக்குடி ஜூஸ், தயிர் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு: தயிரில் சர்க்கரை மட்டும் சேர்த்து லஸ்ஸி குடிப்பதை விட இந்த ஃப்ரூட் லஸ்ஸி உடலுக்கு மிகவும் எனர்ஜியைத் தரும். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

31. ஆப்பிள் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - 150 கிராம், ஆப்பிள் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து, ஆப்பிள், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் அரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக் கவும்.

குறிப்பு: காரம் இல்லாமல் பழ வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும் இந்த அடை. பிடித்தமான பழங்களை வைத்து இதே முறையில் அடை தயாரிக்கலாம்.

32.  ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், வெண்ணெய் - 4 டீஸ்பூன், மாம்பழத் துண்டு, சப்போட்டா துண்டுகள் - தலா 6, பைனாப்பிள் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 100 மி.லி.
செய்முறை: மாம்பழம், சப்போட்டா, பைனாப்பிள் இவற்றை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து, வெண்ணெய் போட்டு மிருதுவாக பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சைட்-டிஷ் தேவை இல்லை. புளிப்பும், தித்திப்புமாய் அருமையாக இருக்கும்.

 33. ஃப்ரூட் சூப்

தேவையானவை: ஆப்பிள், சாத்துக்குடி - தலா 1, நறுக்கிய தர்பூசணி, நறுக்கிய கிர்ணிப்பழம், விதையில்லாத திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: சாத்துக்குடியின் தோல், விதைகளை நீக்கி சுளையை தனியாக எடுக்கவும். இதனுடன் தோல் சீவிய ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் மிளகுத்தூள் சேர்த்து கலக்கி அப்படியே பருகலாம்.

குறிப்பு: சூப்பை 'ஜில்’லென்றும் குடிக்கலாம்.

34. கிவி சட்னி

தேவையானவை: கிவிப் பழம் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கடுகு - அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சித் தோல் சீவி, கிவிப் பழத்துடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்த பழ விழுது, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: கிவிப் பழம் லேசாக புளிப்பு சுவையுடன் இருக்கும். தேவைப்பட்டால் சுவைக்காக அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பஜ்ஜி, வடைக்கு ஏற்ற சிறந்த காம்பினேஷன்.

35. சாபுதானா ஃப்ரூட் உப்புமா

தேவையானவை: ஜவ்வரிசி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய ஆப்பிள், மாதுளை முத்து, பொடியாக நறுக்கிய பைனாப்பிள் - தலா 100 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மி.லி.
செய்முறை: ஆப்பிள், மாதுளை முத்து, பைனாப்பிள் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, ஜவ்வரிசியுடன் கலந்து ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறவும். வேர்க் கடலையை மிக்ஸியில் பொடித்து மேலாக உப்பு மாவில் தூவி நன்றாகக்  கிளறவும்.

குறிப்பு: இந்த உப்புமா நார்த் இண்டியன் ஸ்பெஷல். பழம் சேர்த்து செய்வதால் ஒரு தனி டேஸ்ட்.


நன்றி - அவள் விகடன்

Friday, June 24, 2011

சென்னை,கோவை ,வெளியூர் பதிவர்கள் பேச்சு ( நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 5)

 

1.டாக்டர் கந்தசாமி, கோவை - நான் என் பிளாக்லயே யார் வேண்டுமானாலும் என் பதிவை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம் என எழுதி வெச்சிருக்கேன்..
( நீர் மனுஷன்)ஏன்னா எல்லாரும் படிக்கனும்கறதுகுத்தான் நாம் எழுதறோம்.. அதை யார் பேஸ்ட் பண்ணி போட்டா என்ன? மொத்தத்துல நம்ம படைப்பு யாருக்காவது யூஸ் ஆனா சரி.. (அப்போ என் படைப்பு யாருக்கும் யூஸ் இல்லைங்கறீங்களா? அவ்வ்வ்வ்)என் பிளாக்ல கமெண்ட் பாக்ஸை க்ளோஸ் பண்ணி வெச்சுட்டேன்.. (ஏன்,அது என்ன குணச்சித்திர நடிகையா?மூடி மூடி வைக்க?)அவங்க கமெண்ட் போட நான் அதுக்கு நன்றி கமெண்ட் போடனும்,அப்புறம் அவங்க பிளாக் போகனும்.. என்னால சுதந்திரமா செயல்பட முடியாது..




2. வலைச்சரம் சீனா -அண்ணன் நைஸா பத்தோட பதினொண்ணா எங்களோட உட்காரப்பார்த்தார்.. நாங்க விடுவோமா? அவரை தலைமை ஏற்று நடத்திக்கொடுக்கனும்னு உணவு உலகம் அண்ணன் பக்கத்துல உட்கார வெச்சுட்டோமில்ல.. “ நான் 2 வருடங்களாகத்தான் இந்த பொறுப்பேற்று இருக்கேன்.. வாரா வாரம் ஒரு பதிவரை எழுத வெச்சு மெயிண்டெயின் பண்றது சிரமமா இருக்கு.. ஆனா ஆத்ம திருப்திக்காக இதை பண்றேன்..புதிதாக எழுத வருபவர்களை,ஊக்குவிப்பதே என் நோக்கம்.. “





3.  பலா பட்டறை சங்கர்  - வந்த பதிவர்கள்லயே செம பர்சனாலிட்டி அண்ணன் தான்.. செம ஹேண்ட்ஸம்.. கந்த சாமி பட விக்ரம் மாதிரி இருந்தார்.. ஆர்ப்பாட்டமா ஆள் இருந்தாலும் அவரது பேச்சு ,குரல், த்வனி எல்லாம் அமைதியாவும், அவரது பக்குவத்தை ,அனுபவத்தை எடுத்து உரைப்பதாவும் இருந்தது.. 

”உண்மைத்தமிழன் உட்பட பலர் பத்திரிக்கைகளில் வந்த மேட்டர்களை பதிவா போடறாங்க.. சிலர் அதை காப்பி பேஸ்ட் என சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை அது தேவை தான். ஏன்னா புக் ஒரு வாரம் போனா அழிஞ்சுடும்,ஆனா பதிவு ரெக்கார்டா இருக்கும், நாளைக்கே அந்த டைட்டில் குடுத்து கூகுள்ல தேடுனா கிடைக்கும், நம்ம அவசரத்துக்கு உதவும்..

அதே சமயம் தமிழ்மணம்ல நெம்பர் ஒன் வர்றதால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.. ( அண்ணன் நம்மளைத்தான் மறைமுகமா தாக்கறார் ஹி ஹி ) சிங்கிள் டீக்கு கூட உதவாது.. அதனால எழுதுவதை ஒரு பொழுது போக்கா வெச்சுக்கிட்டு  பொழப்பைப்பாருங்க.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்).. இப்போ எல்லாரும் கூகுள்  பஸ்ல கமெண்ட் போட ஆர்வமா இருக்காங்க ,பதிவு எழுதறதுல ஆர்வம் குறைஞ்சிண்டிருக்கு. இது மாறனும்.. . இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.




4. பெயர் சொல்ல விருப்பமில்லை - ஹா ஹா இவரோட காமெடி.. இவருக்கு சப்போஸ் ஒரு லவ்வர் இருந்தா .....

” டியர் .. நான் இப்போ 3 மாசம்.. முழுகாம இருக்கேன்.. இப்போவாவது உங்க பெயர் சொல்லுங்க..  

சாரி.. எனக்கு  என் பெயர் சொல்ல விருப்பமில்லை, உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள வும் இஷ்டம் இல்லை.. அப்டின்னு அல்வா கொடுத்திருப்பாரோ..?

“ நான்  தளத்துல கணிதம் கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டேன்.. எடுபடலை.. 

அது உங்க தப்பு.. கணக்கு பண்ணுவது எப்படி?ன்னு டைட்டில் குடுத்திருக்கனும் .செம ஹிட் ஆகி இருக்கும்..



5. இம்சை அரசன் பாபு.. - இவர் ஆள் பார்க்க தாதா மாதிரி இருந்தாலும் பச்ச மண்ணுய்யா.. இவரோட கிராமியம் கலந்த தமிழை கேட்பவர்கள் இவரை மறக்கவே முடியாது.. லோகோவை வைத்து இவர் முரடானவர்னு யாராவது நினைச்சா ஏமாந்தே போனீங்க.. செம சாஃப்ட் டைப்.. ( தொட்டு பார்த்தியா?ன்னு கேட்கக்கூடாது.. ஹி ஹி ) 

” நான் சீரியஸ் பதிவு எப்பவாவதுதான் எழுதறேன்... (பொதுவா நீங்க பதிவே எப்பாவாவதுதானே எழுதறீங்க? அவ்வ்வ்வ்வ்)என் பொண்ணுகிட்டே நான் வாங்குன பல்புகளை மையமா வெச்சுத்தான் நான் கதை எழுதறேன்.. (மய்யமா வெச்சு .. மய்யம்..... கமல் ரசிகரோ..?)

 பாபு அண்ணே . உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் .. நீங்க  பெத்த பொண்ணை வெச்சு பதிவு போடறீங்க.. நான் ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களை வெச்சு பதிவு தேத்தறேன்.. ஏன் என்னை மட்டும் எல்லாரும் வையறாங்க? அவ்வ்வ்வ்வ்வ்......




6. தமிழ்வாசி பிரகாஷ்.. இவர் பேரையும், லோகோவையும் பார்த்துட்டு சின்னப்பையன்னு நினைச்சுட்டுப்பார்த்தா ஆள் பிரபுவுக்கு தம்பி மாதிரி இருக்கார்.. (அப்போ குஷ்பூக்கும் இவருக்கும் என்ன முறை?ன்னு கேட்கக்கூடாது)இவர் வர்ற வழில பஸ்ல மாட்டிக்கிட்டாராம். பஸ் பஞ்சராம்.. அதான் வர லேட்னார்.. ( பஸ்ல மாட்னாரா? பஸ்ல  வந்த மிஸ் பிக்கப் ஆகி அவரை விரட்னாரா ந்னு சரியா தெரில,, )




7. வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்னன் - விக்ரம் படத்துல சத்யராஜ்  தகடு எங்கேடா.. தகடு தகடு அப்டினு கேட்பாரே.. அந்த ஆள் மாதிரியே இவரு இருந்தாரு.. அவர் கன்னத்துல பெரிய தழும்பு.. இவர் உடம்பெல்லாம் கொழுப்பு..  (செம ஜாலி பார்ட்டி.. ) யோவ்.. ஏய்யா கூலிங்க் க்ளாஸ்ல வர்லை?  என கேட்டு கலாய்த்தோம்..  இவரு சரியா பேசலை.. கேட்டதுக்கு சாரி.. என் லவ்வர் கூடவே சரியா பேசமாட்டேன்னாரு.. (கூச்ச சுபாவமாம்)




8. வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது.இங்கே கலந்துக்கிட்ட பதிவர்களிலேயே  சீனியர் பதிவர்  இவர் தான்.. ( அப்போ ஜூனியர் பதிவர் ? வேற யாரு நான் தான் ஹி ஹி ) ராமலட்சுமி மேடம் யார்னா பஸ்ல இப்போ சமீப காலமா கலக்கறவங்க.. ஃபோட்டோ போட்டி நடத்தும் ஒரே பதிவர்.. செம கலக்கல் ஃபோட்டோஸ் இவர் தளத்துல இருக்கும்.. சுடறவங்க போய் சுட்டுக்குங்க.. ஹி ஹி .. 



9. ரசிகன் ஷர்புதின்.. _ இவர் சரியான லொள்ளூ பார்ட்டி.. எல்லார் தளத்துக்கும் போய் அவங்க பிளாக்கிற்கு மார்க் போடுவார்.. ஆனானப்பட்ட கேபிள் சங்கர்க்கே 50 மார்க் தானாம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த பழக்கம் அவருக்கு எப்படி வந்ததுன்னா.. 

இவருக்கு 19 வயசு இருக்கும்போது காலேஜ் வாசல்ல, ஸ்கூல் கேட் கிட்டே நின்னு போற ,வர்ற ஃபிகர்ங்களுக்கு மார்க் போட்டுட்டு வருவாராம்.. இதுக்கு மார்க்கோ ஃபோபியா சைட்டோ கார்க்னு வியாதி பேரு... அதை குணப்படுத்திட்டாங்க.. ஆனா.. இதை.. ??? முடியல ஹா ஹா 






10. ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல் - இவர் சம்சாரத்தோட வந்திருந்தார்

( அவரோட சம்சாரம் தான் ) ஆன்மீகப்பதிவர்... ரொம்ப அமைதியா இருந்தாரு.. அவர் மிசஸ் அவரை விட அமைதி.. ரொம்ப குடுத்து வெச்சவர் சார் நீங்கன்னேன்.. நைஸா , “தம்பி.. அண்ணி வீட்ல புலி வெளில எலி “ன்னார்.. சேம் பிளட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. 




11. லேப்டாப் மனோ..  - இவரை தெரியதவங்க யார் இருக்க முடியும்?லேட்டா தான் வந்தார்.. கூடவே ஒரு பாடிகார்டை கூட்டிட்டு வந்தார்.. பி ஏ அப்டின்னு பில்டப் குடுத்தார்.. விசாரிச்சா.. அவரோட மச்சினராம்... மச்சினியோட சுத்தற ஆள் எதுக்கு மச்சினரோட சுத்தனும்னு பார்த்தா மனோவோட சம்சாரம் சந்தேகப்பேர்வழியாம் (அவருமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மனோ என்ன பண்றார்னு கண்காணிக்க அனுப்பி இருக்காங்க.. ( என்ன பண்ணுவாரு.. தில்லு முல்லு தான் ) டேய்.. தம்பி லேப் டாப் எங்கேன்னு கேட்டா  அத்தை பொண்ணு கிட்டே குடுத்துட்டு வந்துட்டேன்னு கதை விட்டார்....ஆனா லோகோல பார்த்ததை விட ஆள் ஸ்மார்ட்.. லோகோல கேப்டன் மாதிரி இருந்தாரு.. 




12. வெறும்பய ஜெயந்த் -   சிங்கப்பூர் பதிவர்,ஆள் தளபதி தினேஷ் மாதிரி இருந்தாரு..இவருக்கு கை குடுத்து என் கையே போச்சு.. முறம் மாதிரி முரட்டு கை,.. ஆள் செம ஜாலி டைப்.. ஜோதி மேட்டர் என்னய்யா ஆச்சுன்னு கேட்டா யோவ்,, அவ என் காதலி,, மேட்டர்னா பல்லை தட்டிடுவேன்னு மிரட்னார்

13.மணிஜி , சென்னை - இவர் எனக்கு ஏற்கனவே அறிமுகம்,நேரில் இப்போதுதான் பார்க்கிறேன். தண்டோரா எனும் பிளாக்கின் ஓனர். ஜாக்கிசேகரின் நெருங்கிய நண்பர்..இவர் சங்கருடன் வந்தார்.. விழாவுக்கு தாமதமாக வந்தததால் இவர் அதிகமாக  எதுவும் பேசவில்லை என நினைக்கிறேன்...ஆனால் அனைவரின் பேச்சையும் உற்று கவனித்தார்..  விழா முடிந்ததும் சங்கர் சாருடன் குற்றாலம் கிளம்பி விட்டார்.


14. ஜாக்கி சேகர் அவர்கள் வருவதாக இருந்தது,கடைசி நிமிடஅவசரப் பணியின் காரணமாக வர முடியாமல் போய் விட்டது

மீதி புது பதிவர்கள்  எனக்கு சரியா அடையாளம் தெரில,. மன்னிக்கவும்.. அடுத்து ஓ சி சாப்பாடு போஸ்ட்.. கடைசி பகுதி......நிறைவுப்பகுதி.. ( 2ம் ஒண்ணு தானே?)

தொடரும்..