Showing posts with label vikatan. Show all posts
Showing posts with label vikatan. Show all posts

Sunday, February 03, 2013

புதிய தலைமுறை திரு மாலன் அவர்களிடம் சில கேள்விகள்

விகடன் , குமுதத்திற்குப்பின்  இளைஞர்களின் வரவேற்பைப்பெற்ற இதழ் புதிய தலைமுறை. குறுகிய கால கட்டத்தில் ஒரு லட்சம் புக் சேல்ஸ். அவங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க . அதாவது மாதம் ஒருவருக்கு அந்த இதழை தயாரிக்கும் வாய்ப்பு . 4 இதழ்கள் தயாரிக்கலாம்.வாரம் ஒரு புக் வீதம் மாதம் 4 புக் , இந்த மாதிரி 12 பேருக்கு வாய்ப்பு . ஒரு வருடம் - 12 மாதம் , 12 பேர் தலா 4 வாரம், 48 வாரம் வாசகர் தயாரிப்பு 


 வரவேற்க வேண்டிய  விஷயம். ஏன்னா எல்லாருக்கும் பத்திரிக்கை தயாரிக்கும் , பணி புரியும் எண்ணம், ஆசை இருக்கும், ஆனா வாய்ப்பு இருக்காது. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாய் இந்த அறிவிப்பு இருக்கு.


 ஆனா அதுல அவங்க போட்ட கண்டிஷன் ஸ் பார்த்தா மிடில் கிளாஸ் ஃபேமிலி இளைஞர்கள் கலந்துக்கவே முடியாது . சென்னை வந்து போகும் செலவை அவங்க ஏத்துக்க மாட்டாங்களாம், புதிய தலைமுறை ஊழியர்களுக்கான சலுகைகள் ஏதும் கிடையாதாம், ஒரு வாரம் தங்கி செயல்படும்போது அதுக்கான செலவையாவது ஏத்துக்குவாங்களா? அல்லது அதுவும் நாம தானா? என்ற தகவல் கொடுக்கப்படலை



எனது கேள்விகள்


1.  பி கே பி நடத்திய உங்கள் ஜூனியர் மாத இதழ் இதே போல் பல வருடங்களுக்கு முன்பு ( 1996 டூ 1999 )  இதே போல் ஒரு வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்கியது . அவர்கள் புக் சேல்ஸ் இவர்களுடையதை விட 25 மடங்கு கம்மி. அவங்களே  சென்னை வந்து போகும் செலவை ஏத்துக்கிட்டாங்க , இத்தனைக்கும் அவங்களுக்கு அந்த புக்கால பெரிய லாபம் ஏதும் இல்லை. மினிமம் 10,000 மேக்சிமம் 20,000 புக் சேல்ஸ் ஆன ஒரு புக்கே இத்தனை செலவு செய்யும்போது  1,50,000 புக்ஸ் விற்கும் புதிய தலைமுறை ஏன் ஓ சி யில்  மங்களம் பாட நினைக்குது? 


2. இதே போல் குமுதம் ஆஃபீசில் 2000 ஆம் ஆண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழுக்காக டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் சை சென்னை வர வைத்து ஒரு மீட்டிங்க் போட்டாங்க. வந்தவங்களுக்கு அப் அண்ட் டவுன் சார்ஜ் குடுத்து , ஆளுக்கு  ஒரு வாட்ச் ( ஒர்த் ரூ 1850 ) பரிசு தந்தாங்க . மதிய விருந்தும் இருந்தது , பின் 2012 ஆம் ஆண்டு இதே போல் இன்னொரு மிட்டிங்க் , இதிலும் டிட்டோ . ஏன் உங்க பத்திரிக்கை மட்டும் எளிய மக்களை , இளைஞர்களை கண்டுக்க மாட்டேன்கறீங்க? 



3. ஆனந்த விகடன்  - விக்ரம், விஜய்  என பல வி ஐ பி நடிகர்களுடன் வாசகர் சந்திப்பு நடத்திய போது இதே போல்  அசத்தலான பரிசு கொடுத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ( ரூ 500 பில் ஒரு ஆளுக்கு )  விருந்து கொடுத்தது .


இப்படி பல முன்னுதாரணங்கள் பத்திரிக்கை உலகில் இருக்கு . நீங்க ஏன் அப்படி செய்யக்கூடாது? 

 ஒரு ஆஃபீஸ்ல பணி புரியும்  ஆள் ஒரு வாரம் லீவ் போட்டா  சம்பளம் பிடிச்சுக்குவாங்க , பல காரணம் சொல்லி லீவ் எடுக்கனும் .அது போக  சென்னை வந்து போகும் செலவும் கூடுதல் சுமைதானே? 


இதை எல்லாம் நான் எனக்காக கேட்கலை,. ஏன்னா நான் இதுக்கு விண்ணப்பிக்கலை . மற்ற மிடில் கிளாஸ் இளைஞர்கள் சார்பா கேட்கறேன். ( நான் கலந்துக்காததுக்கு காரணம் இது யூத்ங்களுக்கானது , என்ன தான் நான் யூத்தா இருந்தாலும்  18 வயசு டூ 25 வயசு யூத் இல்லை ) 




 இந்த பதிவை படிக்கும் பத்திரிக்கைத்துறையினர் ஏழை இளைஞர்களின் கஷ்டம் உணர்ந்து இது போன்ற விழாக்கள்,  பத்திரிக்கைத்தயாரிப்பிப்பணிகள் இவற்றுக்கு  போக்குவரத்துச்செலவு தந்து உதவுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்






Saturday, January 26, 2013

விகடனின் தர வரிசை சரியா?பொங்கல் ரிலீஸ் படங்கள் - விகடன் விமர்சனங்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF_9gCy_7WOUEGSJB_cGQvc0G-YUxECqdQZ3vj3sqfNYdX-fEC3jc4VxlmDTVzGu6D0C3fHpXtJmXw4sV6jFdgffggj7HBVApBQKTy6J5M6gXXyOiaDWtitsBaeDKVZdv6SVE1htgmfYw/s1600/Vishal,+Trisha%27s+Samar+Tamil+Movie+New+Wallpapers,+Latest+HQ+Posters+-+www.TodaysWorld.in+(4).jpg
விமர்சனம் : சமர்

விகடன் விமர்சனக் குழு
வில்லன் யாரென்று தெரியாமல் ஆடும் கண்ணாமூச்சியே... சமர்!  

 'ப்ரேக்-அப்’ ஆன காதலி சுனைனா வைச் சந்திக்க பாங்காக் செல்கிறார் விஷால். ஆனால், அங்கு அவரை வரச் சொன்ன சுனைனா வரவில்லை. திடீரென விஷாலைக் கொல்ல ஒரு கும்பல் முயற்சிக்கிறது. இன்னொரு கும்பல் அவரைக் காப்பாற்றுகிறது. அவரைத் தொழிலதிபர் எனக் கொண்டாடு கிறார்கள். போலீஸ் மரியாதை, ஆடம்பர கார், நட்சத்திர ஹோட்டல் சூட் என வசதிவாய்ப்பு தேடி வருகிறது. சில நாட்களிலேயே அது பறி போகிறது. 'தனக்கு ஏன் இப்படி நடக்கிறது?’ என்று புரியாமல் தவிக்கும் விஷால், தன்னைச் சுற்றிக் கட்டப்பட்ட சதிவலையை அறுப்பதே மீதிக் கதை! 
'டபுள் ஹீரோ கதையா... விஷாலுக்கு ஞாபக மறதியா... ஆள் மாறாட்டக் கதையா... அண்டர்ப்ளே கதையா?’ என்றெல்லாம் யோசிக்கவைத்து, இறுதியில் சஸ்பென்ஸ் கலைத்த விதத்தில் 'அட’ போடவைக்கிறார் இயக்குநர் திரு. கொஞ்ச காலமாக ஃபார்மில் இல்லாத விஷாலுக்கு இது முக்கியமான படம்.



 ஆனாலும், ஸ்க்ரீனில் விஷா லிடம் அந்த உற்சாகம் இல்லையே. சண்டைக் காட்சிகளில் செம ஆக்ரோஷம் காட்டும் விஷால், ரொமான்ஸ் காட்சிகளிலும், என்ன நடக் கிறது என்று புரியாமல் பதறும் காட்சிகளிலும் பரிதவிக்கிறார்.


திடீர் அறிமுகத்தில் விஷாலோடு காதல்கொள்ளும் பெண்ணாக த்ரிஷா. பாடல் காட்சிகளில் அழகாகவும், காதல் காட்சிகளில் அழுத்தமாகவும் இருக்கிறார். சுனைனா... சும்மாச் சுக்கும்ணா!



சிறிது நேரமே வந்தாலும் வில்லன்கள் ஜே.டி.சக்கரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவருமே மிரட்டி இருக்கிறார்கள். தாங்கள் சாவோமா, மாட்டோமா என்று விழப்போகும் விமானத்தில் வில்லன்கள் பெட் கட்டி விளையாடுவது ஒரு டெரர் சாம்பிள். ஆனால், எதற்கெடுத்தாலும் அவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பது லேசான அலுப்பு.  



விஷால், சுனைனாவின் பிறந்த நாள் பரிசாகக் காட்டுக் குள் கிடைத்த மலர்களை வைத்துப் பூங்கொத்து தயாரிக்கும் காட்சி கவிதை.


 'நீ எல்லாத்துக்கும் கணக்குவெச்சிருக்கே. நான் காதலை கணக்கே இல்லாம வெச்சிருக்கேன்’, 

கேம்ல பூ விழுமா? தலை விழுமா?னு கேட்டுட்டு இருக்கக் கூடாது... விழவைக்கணும்’, 


 'பயமுறுத்துனீங்க... பயந்தேன். துரத்துனீங்க... ஓடுனேன். சுத்த விட்டீங்க... நின்னேன். அதனால ஜெயிச்சேன்!’-

 எஸ்.ராமகிருஷ்ணன், திருவின் வசனங்கள் ஆங் காங்கே ரசிக்கவைக்கின்றன.



யுவன்ஷங்கர் ராஜாவின் இசையைவிட அதிக மாக ஈர்க்கிறது தரண்குமாரின் பின்னணி இசை. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு பாங்காக் அதிரடியையும், த்ரிஷாவின் அழகியலையும் அள்ளிக் கொடுக்கிறது.


தன்னை டீலில் விட்ட, அவ்வளவு பெரிய வில்லன் கும்பலை எதிர்க்க விஷால் எவ்வளவு தூரம் மெனக்கெட வேண்டும்? ஆனால், போகிற போக்கில் த்ரிஷாவைச் சாலையில் நிற்கவைத்துக் காய் நகர்த்துவது... போங்க பாஸ் போங்கு!


டெரர் கதையில் 'மிரட்டல் டான்’ என்று ஸ்ரீமனைக் காட்டி ஆங் காங்கே கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். வில்லன் அண்ட் கோவில் உறுப் பினராக இருக்கும் ஜெயப் பிரகாஷ், சம்பத், ஸ்ரீமன் திருந்துவது எதற்கு என்றே தெரியவில்லையே?


லாஜிக் பார்க்காவிட்டால், பார்க்க சுவாரஸ்மான த்ரில்லர் விளையாட்டு இந்த சமர்!


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0DIpRyX5E5n1HMtG445elK9KEY7FK5mrUOqZazlgoRvb0WnqcWi8TsBW81OGOF6rY7-8SJdgnkXPITRGl3BCD323KeVNqz1srocrHW2iWFcfMMGu7ndf1Fv1g6hF9R7PLX9fF_MD30g/s1600/Kanna+Laddu+Thinna+Aasaiya+Audio+Release+Posters+Cinema65+(6).jpg





விமர்சனம் : கண்ணா லட்டு தின்ன ஆசையா

விகடன் விமர்சனக் குழு
திர்வீட்டு அழகியை மூன்று வெட்டி ஆபீஸர்கள் கரெக்ட் பண்ண முயல, ஃபிகர் யாருக்கு என்பதே கதை. 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதையா அல்லது சந்தானத்தின் 'மனதில் உதித்த கதை’யா என்பது... பஞ்சாயத் துக்கு உட்பட்டது.


 'காமெடியே துணை’ என்று முடிவெடுத்த பிறகு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தரை இறங்கி தகர அடி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன்.


'கல்யாணம் டு காரியம்’ வரை கான்ட்ராக்ட் எடுத்துச்செய்யும் 'கேக்கே’ சந்தானம், காதல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாகச் சொல்லி நண்பர்களுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துச் சாய்ப்பது, 'பர்பி கீழே கிடக்குது’ என்று பவர் ஸ்டாரின் குடும்பக் கௌரவத்துக்கு ஜிஞ்சர் கொடுப்பது என வழியெங்கும் ரகளை. 'நான் காமெடியன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீயோ காமெடியன்னு தெரியாமலே பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கியே!’ என்று ரீலுக்கு ரீல் பவருக்கு பல்பு கொடுத்தும் பட்டாசு கிளப்புகிறார். 


கண் கூசும் கலர்களில் டி-ஷர்ட், த்ரீ-ஃபோர்த், குண்டக்க மண்டக்க ஹேர்ஸ்டைல் எனப் படம் முழுக்கக் காமெடிக் கூத்து கட்டுகிறார் பவர் ஸ்டார். நடிப்பு, டான்ஸ் என எதுவுமே பவருக்கு வரவில்லை. ஆனால், காமெடி பாடிலாங்குவேஜ் முழுக்க ஜாலிலோ ஜிம்கானா. நடன வகுப்பில் ரசிகர்களைக் கூட்டி அலப்பறை செய்வதும், பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் அடித்து மிரட்டுவதுமாக தன்னைத்தானே கிண்டல் அடித்துக்கொண்டு, நம்மையும் சிரிக்கவைப்பது பவரின் 'பவர்’. (அட... பவர் நடிப்புக்காக தியேட்டரில் நிஜமாகவே 'ஓடுகிறது’ இந்தப் படம்.) உள்ளூர் விளம்பர மாடலாக சேது ஓ.கே.



இந்தி வாத்தியாருக்குப் பதில் சங்கீதச் சக்ரவர்த்தி, டிரில் மாஸ்டருக்குப் பதில் பரத குரு, ரேஷன் அரிசிக்குப் பதிலாக பிரியாணி எனப் புதிய பாத்திரத்தில் பரிமாறப்பட்டு இருந்தாலும், 'இ.போ.நா.வா’-வில் இருந்த இனிப்பும் இன்னொசன்ஸும் இந்த லட்டில் இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒரிஜினலைக் கிண்டலடிக்கும் லொள்ளு சபா தொனி பிரதிபலித்ததையும் தவிர்த்து இருக்கலாம்.



படத்துக்கு ஒரு முடிவு வேண்டுமே? சிம்புவை வம்பாக உள்ளே இழுத்திருக்கிறார்கள்.


ஜெராக்ஸ் பிரதிதான். ரைமிங் டைமிங் டயலாக் காமெடிதான். இருந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது காமெடிச் சரக்கு பக்காவாக வொர்க் அவுட் ஆவது இந்த லட்டுவின் ஹிட்டு!


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSkimcGdyM87ycDl3kItNxigqFi9t1ENeVMS51nfb5Iys5h0H6qA4FPm4n5M4rrucbARCDruqRzAmsDPdZQUlAEEvpgGfJBv17VM7VKjbgiH1TZyV8e_Cb-3Uu0UFSeForbTFcok0ryQM/s1600/Alex+Pandian+Latest+Movie+stills+(1).jpg





விமர்சனம் : அலெக்ஸ் பாண்டியன்

விகடன் விமர்சனக் குழு
நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவரின் மகளை அலேக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர்’ கார் கதை. அதில் மசாலா பெயின்ட் அடித்து, குத்துப் பாடல்களைப் போட்டு, கிளாமர் ரூட்டில் கியர் போட்டால்... அதுதான் 'அலெக்ஸ் பாண்டியன்’.



 அமெரிக்காவின் மோசடியான மருந்து கம்பெனி தமிழகத்தில் மருந்து விற்க அனுமதி கேட்கிறது. நேர்மையான முதல்வர் விசு மறுக்கிறார். அவரைச் சம்மதிக்கவைக்க, அவரது மகள் அனுஷ்காவை  கார்த்தி மூலம் கடத்துகிறது  



வில்லன் குரூப். காதலில் விழும் கார்த்தி அனுஷ்காவைக் காப்பதே கதை.   ஹாலிவுட் காப்பி கதையில், ஏற்கெனவே தமிழ் சினிமாவில் நாம் பார்த்த காட்சிகளைப் புகுத்தி இது அந்தப் படமா, இந்தப் படமா என்று குழம்பவைத்த வகையில் வெற்றிபெற்றிருக் கிறார் இயக்குநர் சுராஜ். மற்றபடி எதுவுமே லேது.


எதிரிகளைப் பந்தாடும்போது கார்த்தியின் முறைப்புக் கண்களும், விறைப்பு உடம்பும் செம. மத்தபடி காமெடி (என்று நினைத்து)  டயலாக்குகள், பாடி லாங்குவேஜ் அத்தனையும் உஷ்ஷ்ஷப்பா... என்ன ஆசையோ, 'வேட்டைக் காரன்’ எம்.ஜி.ஆர், 'டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியன்’ ரஜினியை இமிட்டேட் செய் கிறார்.


டைட்டில் போடும்போது வருகிற அனுஷ்கா, நடுவில் காணாமல் போய், இன்டர்வெல்லின்போதுதான் மீண்டும் தலைகாட்டுகிறார். என்ன ஆச்சு? அழகான அனுஷ்கா இதில் கொஞ்சம் டயர்டாகவும், கொஞ்சம் முதிர்ச்சியாகவும் தெரிகிறாரே?


கதைக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கிளாமர் காட்டிவிட்டு பை பை சொல்கிறார். ஆரம்பத்தில் மூன்று தங்கைகளைக் காப்பாற்ற சந்தானம் படும்பாடு சிரிப்ஸ் என்றால், அதுவே முன்பாதி முழுக்க இழுப்பது செம கடுப்ஸ். சந்தானத்துக்கு டபுள் மீனிங் டயலாக் பேச சொல்லித் தர வேண்டுமா? இதில் மூன்று தங்கச்சி ப்ளஸ் 'ஏ’டாகூட விளையாட்டுக்கள்.


தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே லாஜிக்கைக் கிழித்துவிட வேண்டும்போல. அமெரிக்காவில் இருந்து கிளம்பிவந்து, தன் மகளையே கடத்தும் வில்லனை ஒரு மாநில முதல்வர் என்னவெல்லாம் செய்ய முடியும்? வில்லனின் போனுக்காகக் காத்திருக்கிறார் முதல்வர். தன்னைக் கடத்திய கார்த்தியை, அவர் தண்ணீர்கொடுத்தது, தலையைத் தடவிக் கொடுத்தது போன்ற அல்பக் காரணங்களுக்காக அனுஷ்கா லவ்ஸ் பண்ணுவதெல்லாம்... 'மாயன்’ எஃபெக்ட். ஒரு ஆம்னி வேனை வைத்துக்கொண்டு படா ஸ்கார்பியோக்களை கார்த்தி பறக்கவிடுவது எல்லாம்... இட்ஸ் எ மோட்டார் மிராக்கிள்.


ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காட்சிகளே அடி பின்னி எடுப்பதால், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் ஒட்டாத பாடல்களும், சரவணனின் கிறுகிறு சுற்றல் கேமராவும் பெரிய தவறாகத் தெரியவில்லை.
இயக்குநருக்கு ஒரு வேண்டுகோள்... ஆந்திரா டைப் காரசாரப் படங்களை ஆந்திராவில் எடுங்கள். தமிழ்நாடு பாவம் பாஸ்!



 http://www.cinemalead.com/photo-galleries/anushka-stills/wmarks/anushka-stills02.jpg



மக்கள் கருத்து 


1. என்னுடைய நண்பன் ஒருவன் டிக்கெட் எடுத்து விட்டேன் என்று சொன்னதால் அலெக்ஸ் பாண்டியன் போய் பார்த்தேன். பேராசையின் மொத்த உருவம் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்கும் . தெலுங்கில் ஒரு 80 கோடி தமிழில் ஒரு 50 கோடி , கல்லா கட்டிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
படம் பார்க்கும் யாராவது லாஜிக்கோ கதையோ கேட்டால் செருப்பால் அடிப்பது என்று முடிவு எடுத்து விட்டு படம் எடுத்து இருக்கிறார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டில் வந்த மிக மோசமான தமிழ்ப்படம் என்று இந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தை தைரியமாக சொல்லலாம். எல்லா காமெடியும் டபுள் மீனிங் காமெடி, காதில் ஒரு வரி கூட நிக்காத பாடல்கள், கதை என்ற வஸ்து மருந்துக்குக்கூட இல்லை, பார்த்துப் பார்த்துப் புளித்துப்போன காட்சிகள், அதைவிட புளித்துப் போன சண்டை காட்சிகள்……………………..சுருக்கமாகச் சொன்னால்……………………………………………

இந்த மாதிரி ஒரு மகனும் இப்படி சில உறவினர்களும் வாய்த்திருப்பதற்கு சிவகுமார் எத்தனை தடவை கம்ப ராமாயணம் படித்தாலும் பாவம் போகாது.



2. தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே லாஜிக்கைக் கிழித்துவிட வேண்டும்போல. அமெரிக்காவில் இருந்து கிளம்பிவந்து, தன் மகளையே கடத்தும் வில்லனை ஒரு மாநில முதல்வர் என்னவெல்லாம் செய்ய முடியும்? வில்லனின் போனுக்காகக் காத்திருக்கிறார் முதல்வர். தன்னைக் கடத்திய கார்த்தியை, அவர் தண்ணீர்கொடுத்தது, தலையைத் தடவிக் கொடுத்தது போன்ற அல்பக் காரணங்களுக்காக அனுஷ்கா லவ்ஸ் பண்ணுவதெல்லாம்... 'மாயன்’ எஃபெக்ட். ஒரு ஆம்னி வேனை வைத்துக்கொண்டு படா ஸ்கார்பியோக்களை கார்த்தி பறக்கவிடுவது எல்லாம்... இட்ஸ் எ மோட்டார் மிராக்கிள்.




3. அலெக்ஸ் பாண்டியனுக்கு, மதுரை டாக்டர் பி. சரவணனின் அகிலன் எவ்வளவோ தேவலாம். ஏன் கார்த்திக்கு இவ்வளோ கொலவெறின்னு தெரியலை. அதுலவும் இது முழுக்க ஆந்திரா பக்கமே எடுத்த படம் போலிருக்கு (மொட்டை போடும் காட்சியில் வரும் கோவிலில் காணப்படும் போர்டுகளைப் பாருங்கள்). சந்தானம் வழக்கம் போல இதில் சாக்கடையைக் கழுவிக் கழுவி ஊத்தியிருக்கிறார். க.ல.தி.ஆ.ல கூட இரட்டை அர்த்தம் இல்லை. இதில் ஏன் இவ்வளவு? ஓ, ஒரு வேளை சொந்தப் படம்ன்றதால அடக்கி வாசிச்சிட்டாரோ?



4. படமா இது?!காமெடியா இது?!பெண்கள் கேவலப்படுத்தப் படுகின்றனர்;அசிங்க வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.லட்டு தின்ன ஆசையா கூட ஒரு விதத்தில் பரவாயில்லை...மனோபாலாவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!



நன்றி - விகடன் 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPPh8A3WloGporEBJThMjLiZ9VggSYHprh9ITvLfKTGzQ12ox2QdpBu2owdD0WEGUMiRuXGT9lVSo28vshEmImhboQARcLRiFTRVmfGBwElFyE55J4inJ9ebLyHfoglbuVgQMUrXhmGO0/s1600/tamil_hot_actress_trisha_sexy_in_saree_navel_showing_image.jpg

Thursday, January 10, 2013

நாளைக்கும் வரும் கிளிகள் -பிரபஞ்சன் - சிறுகதை

நாளைக்கும் வரும் கிளிகள்

பிரபஞ்சன்
ஓவியங்கள் : மனோகர்
வீட்டைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமானதாக இல்லை. அவர் பெயரைச் சொன்னால், சின்ன குழந்தையும் வழிகாட்டும் என்று ஆசிரியர் சொன்னது பொய் இல்லை. பஸ்ஸைவிட்டு இறங்கி அவன் விழித்துக்கொண்டு நிற்கும்போது, ரோட்டோரம் இளநீர் விற்கும் அம்மாள் அவனை அழைத்து, மாமாவைப் பார்க்க வந்தீங்களா என்று கேட்டு, முகவரியையும் சொன்னார்.


 மாமாவின் வீடு, ஊருக்கு வெளியே, இன்னும் காங்கிரீட் காடாகிவிடாத, மரங்கள் மற்றும் மைதானம் காணப்படும் பகுதியில் ஒரு மாந்தோப்புக்குள் இருந்தது. அத்தனை காலையிலும் நிறைய கார்கள் தோப்புக்குள் நிறைந்து இருந்தன. ஆசிரியர், மாமாவைப் பேட்டி காணச் சொன்னபோது, அவன் தொலைபேசியில்

அவரைத் தொடர்புகொண்டு அவருக் குச் சௌகர்யமான நேரம் கேட்டான். உடனே மாமா சொன்னார்,

''காலையில் எத்தனை மணிக்குச் சாப்பிடுவீர்?''

''எட்டு, ஒன்பதுக்குள் சார்.''

''அந்த நேரம், நாம் சேர்ந்து சாப்பிடுவோம், சரியா?''

அந்தக் குரல் ஒரு நண்பரின் குரலாக இருந்தது. பிரமுகர்கள் குரல்போல இல்லை. பத்திரிகைக்காகப் பல பிரமுகர்களிடம் அவன் பேசி இருக்கிறான். அவர்களின் குரலில், ஒரு வெட்டுக் கத்தியின் முனை தெரியும். மாமாவோ, தொலைபேசியில் கை குலுக்கினார்.

வரவேற்பு அறையில் அவனை அமரவைத்துச் சென்றார் உதவியாளர். அவனுக்கு முன் பத்து இருபது பேர் இருந்தார்கள். பட்டு வேட்டி கட்டிய இரண்டு பேர், பட்டுப் புடைவை கட்டிய நிறையப் பெண்கள் இருந்தார்கள். ஏதோ பிரச்னைகளைச் சுமந்துகொண்டு, அந்தக் கணத்தில் ஆழ்ந்திருந்தார்போல, அவர்களின் அசாதா ரண அமைதி, சூழ்நிலைக்கு ஓர் அழுத்த வர்ணம் தந்திருந்தது. ஒரு புகழ்பெற்ற டாக்டரின் வரவேற்பு அறைக்குள் குழுமி இருக்கும் தீவிர நோயாளிகளின் வாசனையால் அந்த அறை நிரம்பி இருந்ததைப் போல அவன் உணர்ந்தான். எத்தனை வகையான வியாதிகள்? எவ்வளவு வியாதியஸ்தர்கள்? 



அவர்கள், திறக்கப்பட்டும் மூடப்பட்டும் இயங்கிய அறைக் கதவையே பார்த்தபடியே இருந்தார்கள். அந்த அறைக்குள்தான் மாமா இருக்கிறாராக்கும். நாலைந்து பேர்கள் கொத்தாக அறைக்குள் சென்றார்கள். அவன் மணியைப் பார்த்தான். எட்டாக இன்னும் இரண்டு நிமிஷங்கள் இருந்தன. சற்றுப் பொறுத்து அவன் வந்திருக்கலாம். அத்தனைக் கடமை உணர்வு தனக்குத் தேவைதானா என்று தனக்குள் விசாரித்துக்கொண்டான்.



 எட்டரை மணிக்கு அறைக்குள் அழைக்கப்பட்டான். இரண்டு சாரிகளிலும் போடப்பட்ட சோபாக்களுக்கு எதிரில் ஒரு பிரம்பு நாற்காலியில் மாமா அமர்ந்திருந்தார். மாமா இரண்டு கைகளையும் முகத்துக்கு நேராகவைத்து அவனை வணங்கினார்.




மாமா என்பது வெள்ளை கதர் வேட்டியும் வெள்ளைச் சட்டையும். சுமார் அறுபது வயது. முகம் பளிச்சென்று புன்னகையும் திருப்தியும் கூடியதாக, பசியறியாதது என்று சொல்லும்படியாக இருந்தது. ரிட்டையர்டு ஆன, அடிமைச் சிரிப்பு இல்லாத மேல்நிலை குமாஸ்தா போலவும், திமிர் இல்லாத பரம்பரை மிராசுதாரர் போலவும் காணப்பட்டார்.



 அறைகள் மனிதர்களை அடையாளம் காட்டும்தானே? அந்தப் பெரிய அறையில் ஆறு பேர் அமரும் இருக்கைகள் மட்டுமாக, நிறையக் காலி வெளிகள் இருந்தன. ஏதோ ஒரு கற்பூரமோ அல்லது மணப்பொருளோ, இந்திய வாசனை ஒன்று கமழ்ந்துகொண்டு இருந்தது. தங்க முலாம் பூசப்பட்ட சாமியார் மாதிரியான ஒருவரின் சிலை மட்டும் இருந்தது. வேறு எந்தச் சாமிப் படமும் இல்லை.



''ஒன்றும் சிரமம் இல்லையே... வீடு வந்து சேர...''

''இல்லை. எல்லோருக்கும் உங்களைத் தெரிகிறது.''

''என்னைத் தவிர'' என்று புன்னகைத்தார்.

அவன் உஷாரானான். எல்லோரையும்போல அல்ல அவர் என்று தோன்றியது.


''எங்கே உங்கள் வாசம்?''


அவன் ராணிப்பேட்டை என்றான்.


''அப்படியென்றால், ஏழு மணிக்குப் புறப்பட்டு இருப்பீர். பசிக்குமே... சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்.''


பக்கத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். உணவு மேசை நாற்காலிகள் மட்டும். மூன்று இலைகள் போடப்பட்டு இருந்தன. ஒரு மத்திய வயசு அம்மாள் வந்து பரிமாறினார். அவர்களுக்கு எதிரே, தனியாகப் போடப்பட்ட இலைக்கு இட்லி, வடை, சட்னி போட்டுவிட்டு, அப்புறம், அவர்கள் இலையில் பரிமாறினார்.


''உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளவில்லையே...''


''நான் மூர்த்தி.''

''நான் சந்துரு. சந்திரசேகரன். ஜனங்க மாமான்னு கூப்பிடறாங்க. ஏன்னு தெரியலை. தாயின் சகோதரருக்கு மாமான்னுதானே பேர். சரின்னு நான் ஏத்துக்கிட்டேன். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?''


''இல்லை.''


''நல்லது. எனக்கு உண்டு. நாற்பது வயசுக்கு மேல ஏற்பட்ட நம்பிக்கை அது. வெளியே ஒரு சிலையைப் பார்த்திருப்பீரே. அவர் என் குரு. அவர்தான் நம்பிக்கை ஏற்படுத்தினார். எதையாவது பற்றிக்கொள்ள வேண்டி இருக்கே. வீடு கண்டுபிடிக்கச் சிரமம் ஒண்ணும் இல்லையே?''


''சிரமமே இல்ல சார். குழந்தைகளுக்கும்கூட உங்களைத் தெரிகிறது.''


''எனக்குத்தான் தெரியவில்லை.''


மாமா சிரித்தார்.

மூர்த்தி, விழிப்புக்கு உள்ளானான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம்.
சம்பளம் தருகிற முதலாளி நினைவுக்குள் வந்தார். அவன் தொழில் கடையை விரிக்கத் தொடங்கினான்.


''நீங்கள் எப்படி இந்த...'' - பொருத்தமான வார்த்தையைத் தேடினான் மூர்த்தி.


''துறைக்கு வந்தீர்கள்னு கேட்கிறீர் இல்லையா? தொழில்னு கேட்கத்தான் தோணித்து இல்லையா. இது எனக்குத் தொழில் இல்லை.''


மாமா சற்று நேரம், அந்த மூன்றாவது, யாரும் சாப்பிடாத இலையைப் பார்த்தார். பிறகு சொன்னார், ''என் மனைவி அவருடைய 26-வது வயதில் காலமானார். என்னுடைய 30-வது வயதில். ஏதோ ஒரு நோய். கடவுளுக்கு ஒரு காரணம், அழைத்துக்கொள்ள வேண்டி இருக்கே... அவர் வலியால் அவஸ்தைப்படும்போது நான் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொன்னேன். நோய் குணமாயிடும்னு நம்பிக்கை ஊட்டுவேன். நம்பிக்கைதான். அப்போல்லாம் அவர் முகத்தில் தோன்றின வெளிச்சம் இருக்கே...


 அப்பப்பா! அப்போ எனக்குத் தோன்றியது. துன்பத்துக்கு உள்ளாகிற மனுஷங்களுக்குத் தேவை ஒரு வார்த்தை. ஒரு வார்த்தைதான் சார். எந்த மருந்தைக் காட்டிலும் பெரிய மருந்து அது. எல்லாம் சரியாயிடும். நல்லாயிடும். பிரச்னையே இல்லை. இதுகூட மனிதர்களுக்குக் கிடைக்கிறது இல்லை. அதைச் செய்வேன்னு, அதுதான் என் வாழ்க்கைனு முடிவு எடுத்தேன். இப்பவும் அதைத்தான் செய்துக்கிட்டு இருக்கேன்.''


அவர், உண்ணப்படாத இலையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். பிறகு சொன்னார், ''என் அக்காள் மகள். ப்ளஸ் டூ படித்தாள். அவளைச் சராசரி என்று அவள் அம்மாவேசொல்வாள். முட்டாள் ஆசிரியர்கள், அவளைக் கடைசி பெஞ்ச்னு சொன்னார்கள். நான் மட்டும் அவளை நம்பினேன். அவள் படிப்பா. நல்லாப் படிப்பா. ரொம்ப நல்ல மார்க் வாங்குவேனு சொன்னேன். என்ன மாயம்னு தெரியலை. நல்ல மார்க் வாங்கி, பாஸ் பண்ணினாள்.எனக்கு இந்தப் படிப்பு மேல நம்பிக்கை இல்லை. ஆனால், அவளுக்கு அதைச் சொல்ல முடியுமோ? முட்டாள் டாக்டர்கள், இந்த நோய் குணமா காதுனு சொல்வார்கள்.


நான் சொல்றது இல்லை. சொல்லக் கூடாது. கேன்சர், ஹெச்.ஐ.வி. ஏதோ ஒரு எழவு. வர வழி இருக்கும்னா, போகவும் வழி இருக்கும்தானே? வெளியில ஒரு பேஷன்ட் இருக்கார். அவரை நான் குணப்படுத்திட்டு இருக்கேன். உங்களுக்குத் தெரியுமா? நான் எம்.டி. படிச்ச டாக்டர். 20 வருஷ அனுபவம் எனக்கு உண்டு.''
''ஆனா, மருந்து கொடுக்கிறது இல்லை.''


''வேறு மருந்து கொடுக்கிறேன். நோயாளிகள் சாய்ந்துகொள்ள தோள் தேடுபவர்கள், அன்புக்கு அன்பாகச் சொல்லப்படும் ஒரு வார்த்தைக்கு ஏங்குகிறார்கள். டாக்டர்கள் நோய்க்கு எதிராக வேறு ஒரு நோயை உடம்புக்குள் ஏற்றுகிறார்கள். நான் ஆத்மாவுக்குள் எதையாவது கொண்டு செல்ல விரும்புகிறேன்.''


''ஆத்மா மருத்துவம்?''


''ஆம், நாம் எல்லோரும் நோயாளிகள் சார். எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத நோயாளிகள். படுக்கையிலே சாய்க்கப்பட்டால் ஒழிய, நாம் அதை நம்பறது இல்லை. நாம் ஆரோக்கியமா இருக்கிறதா நம்பறோம். இல்லை. நான் உங்களை உங்களையே உள்நோக்கிப் பார்த்துக்கொள்ளச் சொல்லிக்கொடுக்கிறேன். அவ்வளவுதான்.''


நாங்கள் கை கழுவ எழுந்தோம்.


''சார்... இந்த இலைக்கு யாருமே வரலையே. யாரையாவது எதிர்பார்க்கறீங்களா?''


''என் மனைவி அங்கே சாப்பிடறார்.''


மாமாவுடைய நூலகத்துக்குள் மூர்த்தி அமர்த்திவைக்கப்பட்டான். நண்பர்களைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றார் மாமா. பேஷன்ட்டுகளை அவர் நண்பர்கள் என்றார். ஆங்கிலப் புத்தகங்களால் நூலகம் நிரம்பி வழிந் தது. ஐரோப்பிய, ஆசிய தத்துவத்தரிசிகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தார்கள். மேசை மேல் சிலர் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தார்கள். வெளி வாசலை ஒட்டிய திறந்தவெளியில் மிளகாய் காய்ந்துகொண்டு இருந்தது. மூர்த்தி கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினான்


.
மேலே சுவரில் ஓர் இளம்பெண்ணின் படம் மாட்டப்பட்டு இருந்தது. அதன் கீழே, ஏ.வி.எஸ்.மணிமேகலை என்று எழுதப்பட்டு, பிறப்பு, இறப்பு குறிப்பிட்டு இருந்தது. அந்தத் தலைப்பு எழுத்துகள் தொடர்ந்து அவன் நினைவுக்குள் வந்துசேர்ந்தன. அடிக்கடி கேட்ட பெயர் அது.


மாமா வந்து சேர்ந்தார். ''காக்கவைத்தமைக்கு மன்னியுங்கள்'' என்றார்.


''இந்தப் படம்...''

''என் மனைவி.''

''ஏ.வி.எஸ். என்கிற எழுத்துகளை அடிக்கடி கேட்டதாக இருக்கிறது.'
'
''பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அந்தப் பெயரில்தான் இருக்கும். எல்லாம் இலவச அமைப்புகள்.''


மூர்த்திக்கு நினைவுவந்தது. அவன் தங்கை, அந்த மருத்துவமனையில்தான் சேர்க்கப் பட்டாள். சிலவருடங்களுக்குமுன்பு. அதைச் சொன்னான்.


''அப்படியா?'' என்ற மாமா, ''என்ன பிரச்னை. இப்போ நன்றாக இருக்கிறாரா?''


''நன்றாகி, மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள். ஸ்டவ் வெடித்து ஆஸ்பத்தி ரிக்கு வந்தாள். பூர்ண குணமாகி, ஆட்டோவில் வீடு திரும்பும்போது, லாரி மோதிப் பலியா னாள்.''


''கல்யாணம் ஆனவரா?''


''அதனாலதான் ஸ்டவ் வெடித்தது.''


''ம்... கணவன் இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு இருப்பானே?''


''அதேதான்!''


''புரிகிறது'' என்றார் மாமா.


சற்று அமைதிக்குப் பிறகு, மாமா சொன் னார்... ''இந்தியாவில் பெண்கள் பிறப்பதே பாவம்.''


அப்புறம், மாமா சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். ''மதியம் ஒரு மணிக்கு, நீங்கள் இங்கு இருந்தால் பார்க்கலாம் சார். இரண்டு பச்சைக் கிளிகள் இங்கே வந்து, இந்தச் சுவரில் உட்காரும். நான் தயாராக கொய்யாப் பழமோ, வாழைப் பழமோ அவற்றுக்கு முன்னால் வைப்பேன். சாப்பிட்டுப் போய்விடும். ஒரு விஷயம்... முதலில் தனியாகத்தான் ஒரு கிளி வந்துச்சு. அப்புறம் அது துணையைக் கூப்பிட் டுக் கொண்டுவந்தது. இணை பிரியாத கிளிகள். எனக்கு என்ன பிரச்னைன்னா, என்னால் ஊர்ப் பயணம் போக முடிவது இல்லை.  அதுகள் வந்து காத்திருந்து ஏமாந்து போயிடுமோனு கவலையா இருக்கு.''


''சமையல் பரிமாறினாங்களே, அந்த அம்மாள்...''


''அந்த அம்மாள் எங்களோட ரொம்ப காலமா இருக்கிறவர். என் மனைவி இருக்கும் போதே இங்கே இருந்தவர். அவங்க வெச்சாலும் கிளிகள் சாப்பிடுவது இல்லை. ஏன் நாமே எல்லோரிடமும் சிநேகம் பண்றமோ? இல்லையே? அந்த உணர்வு பறவைகளுக்கு இருக்க முடியாதா... இருக்கு.''


''கல் வெச்சுக் கட்டிய வீடுகளுக்கு முகம் இருக்கு. அது நம்மோடு பேசும்னு ஒரு எழுத் தாளர் எழுதியிருக்கார்.''


''தஸ்தயேவ்ஸ்கிதானே?''


''ஆமாம்.''


மூர்த்தி புறப்படத் தயார் ஆனான்.


''மத்தியானம் சாப்பிடலாமே, சேர்ந்து.''


''இருக்கட்டும் சார். அதிகம் சாப்பிடுட் டேன்.''


மாமா சிரித்தார். சொன்னார்... ''ஒரு வேண்டுகோள்...''


''சொல்லுங்கள்...''


''பேட்டின்னோ, கட்டுரைன்னோ என்னைப் பற்றி எதுவும் எழுத வேணாம். எனக்குக்கூச்சமா இருக்கும். பேசணும்னு தோணியது.பேசினேன். உங்க எடிட்டர் எனக்கு வேண்டியவன். ரொம்ப வருஷத்துச் சினேகன். முகத்துக்கு முன்னால மறுக்க முடியலை. தயவு செய்து ஒண்ணும் எழுத வேண்டாம். நான் அவன்கிட்ட பேசறேன்.''


''எனக்கும் தோணுச்சு சார்... எழுதலை.''


அவர் கைகுலுக்கினார். ''கார்ல போகலாமே...''


''வேணாம் சார். பல இடங்களுக்குப் போக ணும்...''


வெயில் கடுமையாக இருந்தது. வெயில் எப்போதுதான் நடந்து செல்பவர்களுக்கு இனிமையாக இருந்தது? இந்நேரம், கிளிகள் மாமா கொடுத்த பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். அவனுக்குத் திடுமெனச் சந்தோஷமாக இருந்தது. சங்கரபவனில் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொண்டான். அறைக்குத் திரும்பியவுடன் குளித்தான். மேசை மேல் சாப்பாட்டைப்பிரித்துவைத்தான். இலையை விரித்து சாதம் பரிமாறினான். கூட்டு, பொரியல் பரிமாறினான். சாம்பார் ஊற்றினான்.


வழக்கமாகச் சாப்பிடும் தட்டை எடுத்து தனக்கு முன் வைத்துக்கொண்டான். அதில் சோறு பரிமாறிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினான்.


சுமதியோட சேர்ந்து சாப்பிட்டு எத்தனைக் காலமாயிற்று?


அவனுக்கு அந்தக் கிளிகள் நினைவுக்கு வந்தன!


நன்றி - விகடன் 

இது கதிர்வேலன் காதல் - நயன் தாரா தான் வேணும்னு அடம் பிடிச்சேனா? -உதயநிதி ஸ்டாலின் ஓப்பன் டாக் (TALK)

அப்பாவுக்கு கங்கிராட்ஸ்... பெரியப்பாவுக்கு தேங்க்ஸ்!"

உற்சாக உதயநிதி ஸ்டாலின்
பாரதி தம்பி
படங்கள் : ஜி.வெங்கட்ராம்
ரு கல் ஒரு கண்ணாடி’ என்று காமெடிக் கபடி ஆடிய உதயநிதி ஸ்டாலின், அடுத்து காதல் கதகளி ஆட வந்துவிட்டார் நயன்தாராவுடன்!  


 ''ஆமாங்க... படத்தோட பேர்லயே காதல் வெச்சிட்டோம்... 'இது கதிர்வேலன் காதல்’. அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப் போராட்டம்தான் படம். 'சுந்தரபாண்டியன்’ இயக்குநர் பிரபாகர் கதையைச் சொன்னதுமே, 'நானே நடிக்கிறேன்’னு ஆசையா கேட்டு வாங்கிப் பண்றேன். சந்தானம் படம் முழுக்க வர்றார். ஹாரிஸ் ஜெயராஜ் 


மியூஸிக். பாலசுப்ரமணியெம் கேமரா. இப்போதைக்கு இவ்வளவுதான் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. பிப்ரவரியில் ஆரம்பிக்கிறோம்... தீபாவளிக்கு ரிலீஸ்!'' 

''நயன்தாராதான் ஹீரோயினா வேணும்னு அடம்பிடிச்சீங் களாமே... ஏன்?''


''அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்டுங்க. 'ஆதவன்’ தயாரிக்கும்போது இருந்தே பழக்கம். 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ பண்ணும்போதும் அந்த நட்பு தொடர்ந்தது. 'ஓ.கே. ஓ.கே’-வுக்கு அவங்களைத்தான் முதலில் கேட்டேன். ஆனா, 'நான் இனிமே நடிக்கிறதா இல்லை’னு அப்ப சொன்னாங்க. இப்போ திரும்பிக் கேட்டப்ப, உடனே ஓ.கே. சொன்னாங்க. நயன்தாரா நடிக்கிறது படத்துக்குப் பெரிய ப்ளஸ்!''
''இந்தப் படத்திலும் அப்படியே சாஃப்ட்டா காதலிச்சு, சந்தானம் பார்ட்னர்ஷிப்போட காமெடி பண்ணித்தான் நடிக்கப்போறீங்களா?''



''நமக்கு என்ன வருதோ அதை மட்டும் அழகாப் பண்ண வேண்டியதுதான். இந்தப் படத்தில் சின்னதா ஒரு சண்டை இருக்கு. அதுக்காக பத்து பேரைத் தூக்கிப்போட்டு அடிக்கிற மாதிரி எல்லாம் என்னால் நடிக்க முடியாது. என் இயல்புக்கு ஏத்த மாதிரி, பார்க்கிறவங்களுக்கு உறுத்தாத மாதிரி நடிப்பேன்!''


''கடந்த தி.மு.க. ஆட்சியில் ரெட் ஜெயன்ட் மூவீஸ், கிளவுட் நைன்னு உங்க குடும்ப நிறுவனங்களின் பட விளம்பரங்கள்தான் எங்கெங்கும். ஆனா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது அப்படியே குறைஞ்சிருச்சே... ஜெயலலிதா மேல் இருக்கிற பயம் காரணமா?''



''யாரைப் பார்த்தும் எந்தப் பயமும் இல்லை. அதிகாரம் இருக்கிறப்போ மட்டுமே நாங்க படம் எடுக்கலை. என்னைப் பொறுத்தவரை, எப்பவும் தொடர்ந்து படம் பண்ணிட்டுத்தான் இருக்கேன். ஆட்சி மாறிய பிறகுதான் 'ஏழாம் அறிவு’, 'ஓ.கே. ஓ.கே.’ படங்களை பெரிய பப்ளிசிட்டி பண்ணி வெளியிட்டோம். அதனால பயந்து ஒதுங்கிட்டேன்னு சொல்ல முடியாது. என் தொழிலை நான் நேர்மையா செஞ்சுட்டு இருக்கேன்!''



'' 'ஸ்டாலினை தி.மு.க. தலைவராக முன்மொழிகிறேன்’னு கருணாநிதி அறிவிச்சுருக்கார். அப்பாவுக்கு வாழ்த்துச் சொல்லிட்டீங்களா?''



''இன்னும் சொல்லலை... விகடன் மூலமா சொல்றேன்... கங்கிராட்ஸ் அப்பா! தலைவருடைய பையன் அப்படிங்கிற காரணத்துக்காக, கட்சியில் அப்பாவுக்கு எதுவும் சுலபமாக் கிடைக்கலை. ஒவ்வொரு கட்டத்துலயும் ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினர் சந்திக்கக்கூடிய எல்லா சிரமங்களையும் தாண்டித்தான் வந்திருக்கார். இப்போ தலைவரே அப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கார்னா, அது தான் பெரிய விஷயம். என்னைக்கூட 'அடுத்த இளைஞர் அணித் தலைவர்’னு சொன்னாங்க. அதைக் கேட்டப்ப எனக்கே சிரிப்புதான் வந்துச்சு. கட்சிக் காக உழைச்ச எத்தனையோ பேர் இருக்காங்க. நியாயமா அவங்களுக்குத்தான் பதவி எல்லாம் போகணும்... போகும்!''



''ஒரு மத்திய அமைச்சரா உங்க பெரியப்பா அழகிரியின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்?''



''ஏங்க, இதெல்லாம் பெரிய விஷயம். அவர் ஒரு பாசக்காரப் பெரியப்பா. நாங்க பசங்கள்லாம் பயங்கர சேட்டை பண்ணாலும், பெரியப்பாவுக்கு மட்டும் பயப்படுவோம். ரொம்பக் கண்டிப்பான வர். திடீர்னு கோபம் வரும். இப்பகூட அவர்னா எல்லோருக்கும் கொஞ்சம் பயம்தான். 'ஓ.கே. ஓ.கே.’ பார்த்துட்டு, 'ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கடா... எதிர்பார்க்கவே இல்லை’னு மனசுவிட்டுப் பாராட்டி னார். தேங்க்ஸ் பெரியப்பா!''



THANX - VIKATAN

Tuesday, December 11, 2012

செருப்பு தூசி மாதிரி அந்தாளு - அன்புமணி அதிரடி பேட்டி

காதல் திருமணத்தை பா.ம.க. எதிர்க்கலை... எதிர்க்கலை... எதிர்க்கலை! அதைத் தெளிவாப் புரிஞ்சுக்கோங்க. காதல் திருமணங்களையோ, கலப்புத் திருமணங்களையோ நாங்க எதிர்க்கலைனு எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தரத் தயார். எங்களுக்கும் காதல் பிடிக்கும். எங்களை ஏதோ காதலுக்கு வில்லன் மாதிரியே எல்லோரும் சித்திரிச்சுட்டு இருக்காங்க. நானே பல காதல் திருமணங்களை நடத்திவெச்சவன்தான்!'' - தடதடக்கத் தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்.



  ''ஆக, தர்மபுரிக் கலவரத்தில் பா.ம.க-வுக்குச் சம்பந்தமே இல்லை என்கிறீர்களா?''



'' 'என் பொண்ணைக் கடத்திட்டுப் போய் வெச்சுக்கிட்டு அஞ்சு லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுறாங்க’னு பொண்ணைப் பெத்த எந்த அப்பனாவது உங்ககிட்ட வந்து கதறி இருக்காங்களா? என்கிட்ட கதறி இருக்காங்க. தர்மபுரிக் கலவரம் மட்டும்தானே உங்களுக்குத் தெரியும்... அதுக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் சொல்றேன்... தர்மபுரியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகரோட பொண்ணு. ஸ்கூல் படிக்கிற வயசு. அவளை தலித் பையன் ஒருத்தன் காதலிச்சு இழுத்துட்டு ஓடிப் போயிட்டான். 



அஞ்சு கோடி ரூபாய் பேரம் பேசி, பணத்தை வாங்கிட்டு அந்தப் பொண்ணைத் திரும்பக் கொண்டுவந்து விட்டுட்டுப் போயிட்டான். அந்த மாவட்டத்துல காதலைப் பணம் பறிக்கிற ஒரு பிசினஸாவே பண்ணிட்டு இருக்காங்க. வசதியான வீட்டுப் பொண்ணுங்களாப் பார்த்து, காதல்ங்கிற பேர்ல மனசை மயக்கி, பெத்தவங்ககிட்ட பணம் பறிக்கிறதுதான் இவங்க வேலை.



நாய்க்கன்கொட்டாய் சம்பவத்துக்கு வன்னி யர்களோ, பா.ம.க-வினரோ காரணம் இல்லை. அந்தச் சம்பவத்தில், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்டுனு அத்தனை கட்சி களைச் சேர்ந்தவங்களுக்கும் பங்கு இருக்கு. பெண்களைக் கேலி செய்வது சாதிப் பிரச்னை கிடையாது. அது சமூகப் பிரச்னை. நடந்த சம்பவத்தை நாங்க நியாயப்படுத்த விரும்பலை. நிச்சயம் கண்டிக்கிறோம். ஆனா, ஒட்டுமொத்த அசம்பாவிதத்துக்கும் நாங்கதான் காரணம்னு உருவாக்கப்பட்ட மாயத் தோற்றத்தை விலக்கச் செய்யும் பொறுப்பும் எங்களுக்குத்தான் உண்டு. இந்த விவகாரத்தை எங்களுக்கு எதிரா சிலர் தூண்டிவிடுறாங்க.''



''யார் அப்படித் தூண்டிவிடுறாங்கனு சொல்ல முடியுமா?''



''வன்னியர்களும் தலித் மக்களும் ஒண்ணு சேரக் கூடாது. அப்படிச் சேர்ந்துட்டா, திராவிடக் கட்சிகளுக்கு வேலை இல்லாமப் போயிடும். அதனால, இரண்டு சமுதாயத்துக்கும் இடையில் குழப்பத்தை உண்டாக்க, 'தமிழினத்தின் தலைவர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, எங்களுக்கு எதிராக திருமாவளவனைத் தூண்டிவிடுறார். திருமாவளவனும் அதைப் புரிந்துகொள்ளாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்கார். திருமாவளவனைத் தூண்டிவிட்டுக் குளிர் காய்ந்துகொண்டு இருப்பது கருணாநிதிதான்.''




'' 'வன்னியர் சமூகத்துப் பெண்களை வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால், கையை வெட்டுங் கள்’னு பேசி பிரச்னையை ஆரம்பிச்சது பா.ம.க-வின் காடுவெட்டி குருதானே?''



''குரு சொன்னா, மக்கள் எல்லாரும் அப்படியே கேட்டுருவாங்களா? 'பா.ம.க-வுக்கு ஓட்டுப் போடுங்க’னு குரு சொல்லி, எல்லாரும் எங்களுக்கு ஓட்டுப் போட்டாங்களா? வீட்ல பள்ளிக்கூடம் படிக்கிற பொண்ணை எவனாவது காதல்ங்கிற பேர்ல இழுத்துட்டு ஓடினா, எப்படி வலிக்கும்? அந்த வலியும் வேதனையும் கொடுத்த ஆதங்கத்துலதான், குரு அப்படிப் பேசினார். அவரும் காதலை வெறுக்கலை. காதல்ங்கிற பேர்ல ஏமாத்துறவங்களைத்தான் திட்டினார். திரும்பவும் சொல்றேன்... நானோ, அய்யாவோ, குருவோ, காதலுக்கு எதிரானவங்க இல்லை. உண்மையான காதல்னா, உயிரைக் கொடுத்தாவது சேர்த்துவைக்கத் தயாரா இருக்கோம்.''



''எந்த நம்பிக்கையின் அடிப்படையில், 2016-ல் ஆட்சியைப் பிடிப்போம்னு சொல்றீங்க?''



''நான் கேட்கிற ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்க... ஒரு தமிழன் கர்நாடகாவிலேயோ, ஆந்திராவிலேயோ, கேரளாவிலேயோ போய் முதலமைச்சர் ஆக முடியுமா? 



 ஆனா, இங்கே பாருங்க... ஜெயலலிதா எந்த ஊர்னு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. விஜயகாந்த், தமிழர் கிடையாது... பூர்வீகம் ஆந்திரா. வைகோவோட பூர்வீகமும் தமிழ்நாடு கிடையாது. யாருக்கும் தெரியாத இன்னொரு தகவலும் சொல்றேன்... 'தமிழினத் தலைவர்’னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டு இருக்கும் கருணாநிதியோட பூர்வீகமும் ஆந்திராதான். ஆனா, அவரு அதை ஏத்துக்க மாட்டார். கருணாநிதியோட பூர்வீகம் ஆந்திரா என்பதற்கான ஆதாரங்கள் சீக்கிரமே வெளிவரும். அதனால், தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வாய்ப்புக் கொடுங்கள் என மக்களிடம் கேட்கப்போகிறோம். திராவிடம் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியைப் பிடிப்போம்.''





''திராவிடம் இல்லாத கட்சிகள்னா, தி.மு.க., அ.தி.மு.க, தே.மு.தி.க., ம.தி.மு.க. இல்லாம ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வேறு யாருடன் கூட்டணி வைக்கப்போறீங்க?''



''இவங்க கூட்டணியே எங்களுக்குத் தேவை இல்லைங்க. தமிழ்நாட்டு மக்கள் இருக்காங்க. அவங்க எங்களுக்கு ஓட்டுப் போடப்போறாங்க. தமிழனின் அடையாளத்தோடு இருக்கும் கட்சி களோடு, நாங்க கூட்டணிவைப்போம். அந்தக் கூட்டணிக்கு நாங்க தலைமை ஏற்போம். எங்களுக்கு அதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கு.''



''நீங்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்துவருகிறீர்கள். ஆனால், 'ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும் பெருங்குடிகாரர்கள்’ என்று வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி பேசியிருக்கிறாரே?''



''அவர் யாருன்னே எனக்குத் தெரியாதுங்க. செருப்புல இருக்கிற தூசியைப் பத்தி எப்பவாச் சும் கவலைப்பட்டு இருக்கோமா? அப்படித்தான் இதுவும்.''



''பா.ம.க-வில் உங்களுக்கு முக்கியப் பொறுப்பை ராமதாஸ் கொடுத்துவிட்டார். ஆனா, தி.மு.க-வில் தலைவர் பதவிக்குப் போட்டி இருந்துட்டே இருக்கு. அந்தப் பதவிக்கு ஸ்டாலினா... அழகிரியா... யார் உங்க சாய்ஸ்?''



''அய்யாவையும் கருணாநிதியை யும் தயவுசெஞ்சு ஒப்பிடாதீங்க. எந்தப் பதவியிலும் இல்லாத ஒரே தலைவர் எங்க அய்யாதான். தி.மு.க-வில் அப்படியா சொல் லுங்க? அப்பா, பையன், பேரன், மகள்னு ஒட்டு மொத்தக் குடும்பத்தோட பிடியில்தானே அந்தக் கட்சி இருக்கு. அவங்க கட்சியைப் பத்திப் பேச எனக்கு உரிமை கிடையாது. யாருக்கு அவங்க கட்சிக்குள் அதிக செல்வாக்கு இருக்கோ, அவங்களுக்குப் பொறுப்பு கொடுக்கட்டும்!''



''சினிமாவைத் தொடர்ந்து எதிர்த்து வந்த நீங்கள், இப்போது அமைதியாகிவிட்டீர்களே?''  



''கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம், பால் அபிஷேகம் பண்றதைத்தான் நாங்க எதிர்க்கிறோம். மத்தபடி எந்தக் காலத்திலும் நாங்க சினிமாவுக்கு எதிரானவங்க கிடையாது. நானும் சரி... அய்யாவும் சரி... நிறையவே சினிமா பார்ப்போம். நல்ல படம்னு சொன்னாங்கன்னா, மனைவி, குழந்தைங்களோட தியேட்டருக்குப் போய்ப் படம் பார்ப்பேன். தீபாவளிக்குப் பிறகு 'துப்பாக்கி’, 'அம்மாவின் கைப்பேசி’, 'லைஃப் ஆஃப் பை’னு மூணு படங்கள் பார்த்துட்டோம்.''



''ஜெயலலிதா ஆட்சிபற்றி?''



''இருண்ட காலம்... இருண்ட ஆட்சி. மின்சாரம் மட்டும் அல்ல... நிர்வாகமும் சரியாக இல்லை. மக்களின் கோபத்துக்கு ஜெயலலிதா பதில் சொல்லியே ஆகணும். கருணாநிதிக்கு மாற்றாக இருக்கும்னு நினைச்சு, இந்தம்மாவுக்கு ஓட்டுப் போட்டாங்க. இப்போ தப்பு செஞ்சுட்டோம்னு நினைச்சு மக்கள் வருத்தத்துல இருக்காங்க.''



''தமிழகத்தில் எதிர்க் கட்சியின் செயல்பாடு?''



''எவ்வளவு பெரிய பொறுப்பு அது? எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அந்தப் பதவியை அலங்கரிச்சு இருக்காங்க. இப்போ தமிழ்நாட்ல எவ்ளோ பிரச்னைகள் இருக்கு... அதைப் பத்தி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், சொந்தக் கட்சிக்காரங்க ளையே அடிக்கிறதும்பத்திரி கைக்காரங்களைத் திட்டுற துமா இருக்கார். அநாகரிகத் தின் உச்சத்தில் செயல்படு றார். ஒரு தலைவன் எப்பவும் மத்தவங்களுக்கு எடுத்துக் காட்டா இருக்கணும். ஆனா, நிலவரம் அங்கே அப்படியா இருக்கு? விஜயகாந்தைப் பத்தி இன்னும் எவ்வளவோ பேசலாம். ஆனா, இப்போ அது வேணாம்!''


நன்றி - விகடன் 

Friday, November 02, 2012

ஒரு ஈழப்போராளியின் ரத்தத்தை உறைய வைக்கும் பேட்டி

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்
இது ஒர் உண்மைக் கதை
ம.அருளினியன்
ஓவியங்கள் : ஸ்யாம்
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.



ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.



 உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.


''எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம் பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.



 என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.




நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.




''பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?''




''1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.




ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!''




''அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?''



''இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு  துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த  விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!''




''இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?'



''ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!''




''என்ன நடந்தது?''



''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் ரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.




அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப்போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்றுவிட்டோம். எமது போராட்டம் தோற்றுப்போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. 




முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு ராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியா வில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.




அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.




அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். 'சோதியா படையணி’யில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர்.




 காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர்.




 குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!'




''விசாரணை சித்ரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?''



''சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத் தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!'



''நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?'  



''பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான்  இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர்.



நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத மார்பை சப்பியவாறு 'பால்... பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!''




''ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?''



''எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!''




''யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?''



''பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.''




''தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?''



''அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.''

''இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர் களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?''




(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ''இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.



அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன்.




 (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.




ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாய்ப்  பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!''




''உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி’ என விமர்சித்...'



(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான்  எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!''
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)




வாசகர் கருத்து -


1.Venky1 Days ago
1. முதன் முதலாக அரசியல் கோ.... (வைகோ, திருமா, சீமான் போன்ற பலரை) அடையாளம் காட்டி அவர்களை வேறு எதையாவது செய்ய சொல்லுவது. அதிசயம். இனிமேலும், இதனை படித்து விட்டு அவர்கள் இலங்கை, ஈழம் என்று பேசினால் நிஜமாகவே வெட்கம் கெட்ட மாந்தர்கள் என்பதற்கு விளக்கமாக இருப்பார்கள்.

2. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் அதிகார ஆசையில் கருகி போன இவர்களை அடையாளம் கண்டது. அன்னிய அரசுகளின் பாதுகாப்பில், அந்த நாட்டின் குடிமக்களாகிவிட்டு அந்த தைரியத்தில் இந்த மக்களை தூண்டிவிட்டு அவர்களின் அழிவை வேடிக்கை பார்த்து - இந்த புலம் பெயர்தவர்களை போல ஒரு கொடிய கூட்டத்தை பார்க்கவே இயலாது. இன்றும் ஒரு அரசை அமைத்து கொண்டு, இந்த மக்களை இன்னமும் தூண்டிவிட்டு - இவர்களை என்ன செய்வது? போரினை தூண்டிய இவர்கள் இந்த பெண்ணின் அவல குரலை கேட்டது உண்டா? இல்லை அது அவர்களுக்கு வேடிக்கையா - இறந்த பெற்றோர்களை அடக்கம் செய்யாது ஓடியவர்கள் - இவர்களுக்கு காட்சி பொருட்களா என்ன? முதலில் அந்த புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வாயை அடையுங்கள். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களுக்கும் காட்டியது அதிசயமே.

உண்மையாகவே விகடனுக்கு இலங்கை தமிழர்களின் மீது அக்கறை உள்ளது என்பதை இது காட்டுகிறது. 
2. Ramakrishnan23 Hours ago
30 ஆண்டுகள் ஆகிவிட்டன ஒரு சந்ததி காலம் முடிந்துவிட்டது...என்ன செய்தார் பிரபாகரன் ....பரிதாபம்..பணம் கொடுத்து உதவலாம்...ஆனால் இழந்த வாழ்க்கையை கொடுக்க முடியுமா???? நம் அரசியல்வாதிகள் எல்லாரும் சுய நல வாதிகள்
இலங்கை தழிழர்கள் யாரும் நம்மை எதிர்பார்க்கவில்லை ஆனால் நாம்தான் அவர்களை வைத்து அரசியல் செய்கிறோம்
3. Appan23 Hours ago
படிக்க வேதனையாக உள்ளது. இந்த துயரத்தில் இந்தியா, தமிழகதிர்க்கும் பங்கு உண்டு. சில வருடங்களுகு முன் இப்படி ஒரு பெண் போராளி அந்த இயக்கதிலிருந்து வெளியே வந்து 'ஏன் இந்த இயக்கதிலிருந்து வெளி வந்தேன் என்று' மேலை நாட்டு பத்திரைகளில் எழுதி உள்ளார். அவர் கூற்றுப்படி பிரபகர்னிடைய போக்குத்தன் காரணம் என்கிரார். பிரபாகரன் ஈழ போராட்டம் எல்லாம் பணம் பன்ன ஈழம் விடுதலை பெற இல்லை. அந்த பெண்மனி இப்போ ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி உள்ளார். இந்த பெண் படிதவர் ஆதாலல் தொடக்கதிலே புலியை அறிந்து விலகினார். ஆனால் படிக்காத பெண்கள் இந்த கட்டுரையுல் உள்ள பெண் போல் கடைசிவரை போரிட்டு உயிரை இழந்தார்கள்.
4.முஹம்மது ரஸ்வி24 Hours ago
கடைசிக்கேள்விக்கான அந்த பாவப்பட்ட பெண்மணி சொன்னதைத்தான் ஈழம் போர் முடிவிற்கு வந்தததிலிந்து சொல்லி வருகிறேன். கருணாநிதி ஒன்றும் செய்யாமல் இலங்கை தமிழர்களை கைவிட்டார். வைகோ, பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள பேசியே கைவிட்டார்கள். மேடையில் மேலும் மேலும் உணர்ச்சி பொங்க பேசிவிட்டு அடுத்த கூட்டத்திற்கு பேச போய் விடுகிறார்கள். அங்கு அடிவாங்குவது யார். இராஜபக்சே இந்தியா வரும்போதெல்லாம் அவரை எதிக்கிறேன் பேர்வழி என்று அவரை கோபமூட்டி இன்னும் கொடுமைப்படுத்த ஏற்பாடு செய்கிறார்கள். இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். இறைவன் நாடினால், இலங்கையில் அமைதி திரும்பும்.




நன்றி - விகடன்

Thursday, October 11, 2012

பரதேசி -இயக்குநர் பாலா பேட்டி

சினிமாவுக்கு வராவிட்டால், செத்தே போயிருப்பேன்!"


'பரதேசி' பாலா
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPhnhmo-P9VVq0EljHSVawfVso7iHmhA43mQOzoiVOHy_KJUmhn-kDpXq3MDaiRat5a2IiA8EUxoEWLwEFcp5CBJNh6UqY9J1QvAByEIvZtIfqbkQfNQ-3C0IR6QPkhK-e227y2GDfJOY/s400/2004092113060201.jpg

'வலி சொல்லவே இல்லையே
வாய்மொழி
கண்ணீருதான் ஏழையின்
தாய்மொழி’




- வைரமுத்துவின் பாடல் வரிகள் எடிட்டிங் அறையின் வெளியே சன்னமாகக் கேட்கின்றன.



அதர்வாவா இது? ஆச்சர்யம் கண்களில் விரிய எதிரில் இருந்த புகைப்படங்களில் அடிமைகளின் உறைந்த சரித்திரம். 100 வருடம் வளர்கிற தேயிலைச் செடிகளின்  இலைகளைப் பறித்து, நறுக்கிக் குறுக்கி வளரவிடாமல் ஒரு செடியாகவே வைத்திருக்கிற பெரும் சோகம். நாம் அருந்தும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்காக, தேயிலைத் தோட்டங்களில் காலம் காலமாக ரத்தம் சிந்திய கொத்தடிமை உயிர்களின் உலகம்.



எடிட்டிங் அறையில் இருந்து பாலா வெளியே வருகிறார். உரையாடலில் இருந்து...



''பாலா பட வரிசையில் 'அவன் இவன்’ பெரிய ஏமாற்றம் தந்துச்சு. என்ன ஆச்சு உங்களுக்கு?''



''ஒண்ணும் ஆகலையே'' எனச் சிரிக்கிறார். ''சினிமா ஒரு பரமபதம். பகடைகள் இங்கே உருட்டப்பட்டுக்கிட்டே இருக்கும். எப்போ ஏணி... எப்போ பாம்பு வரும்னு  தெரியாது. தெரிஞ்சா அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு? 'அவன் இவன்’ உங்க விமர்சனப் பார்வையில் தோல்விதான்.



ஆனா, என்ன விமர்சனம் வந்தா எனக்கென்ன? விஷாலுக்குள் ஒளிஞ்சிருந்த அற்புதமான கலைஞனைக்  கண்டு பிடிச்சேன். ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கும் ஆர்யாவை என் கிராமம் வரைக்கும் அழைச்சுக் கிட்டுப் போனேன். என்னோட தயாரிப்பாளரை நிம்மதியா தூங்க வெச்சேன். இது மாதிரி சில நல்ல விஷயங்கள் 'அவன் இவன்’ மூலமா நடந்துச்சு. 'ஜாலியா ஒரு படம் எடேன்’னு சொன்ன உங்களை மாதிரி ஆளுங்களே 'நீ உன் ஸ்டைல்லயே படம் எடுடா’னு கேட்டுக்கிட்ட தால் இப்ப 'பரதேசி’.''





''இந்த மாதிரி டைட்டில்களை எங்கே பிடிக்கிறீங்க? 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்கே?''





''என்ன பயங்கரமா இருக்கு? நாம எல்லாருமே பரதேசிகள்தான். பிழைக்க வழி இல்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசிதான். படம் எடுக்கிற நானும் பேட்டி எடுக்கிற நீங்களும்கூட பரதேசிகள்தான். கார்ல போற பரதேசியும் இருக்கான்; பிச்சை எடுக்கிற பரதேசியும் இருக்கான். இப்படி 1940-கள்ல டீ எஸ்டேட்டுக்குக் கொத்தடிமையாப் போன பரதேசிகள்ல ஒருத்தன்தான் அதர்வா. நீங்க 'பரதேசி’ங்கிற தலைப்பே பயங்கரமா இருக்குங்கிறீங்க. இதுக்கு முதல்ல வெச்ச பேர்... 'சனி பகவான்’. சிரிக்காதீங்க!''




''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால்... இப்போ அதர்வா?''




''அதர்வாவைக் கவனிச்சுப் பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும்போதும் அவன் கண்ணுல மெல்லிசா ஒரு சோகம் தெரியும். ஒரு நடிகனுக்கு அது பேரழகு. நூறாவது படத்தில் தொட வேண்டிய உச்சத்தைத் தன்னோட மூணாவது படத்திலேயே அதர்வா தொட்டுட்டான்னு நினைக்கிறேன்.''



''ஒரு படத்துக்கான கதையை எப்படி முடிவு செய்றீங்க? 'ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி’யாப் பண்றீங்களா?''



''அந்தக் களத்தை மட்டும் எடுத்துக்கிட்டு அதுல இந்தப் பரதேசியை இறக்கிவிட்டுஇருக்கேன். இன்ஸ்பிரேஷன் இல்லாம நாம யாருமே இல்லை. ஒரு மனுஷன் அவனோட இருபது வயசு வரைக்கும்தான் வாழ்றான். அப்புறம், வேலை, குடும்பம், குழந்தைகள், அவங்க கல்வினு பிழைப்புதான் எல்லாமே.




நான் தறிகெட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கேன். அவ்வளவு அனுபவங்கள், மனிதர்கள், தரிசனங்கள் என் மனசுக்குள்ள இருக்கு. உள்ளுணர்வுதான் என்னை நகர்த் துது. என்னைப் பொறுத்தவரைக்கும் கதைனு ஒண்ணு கிடையாது. பாத்திரங்கள் தான். ஒரு காதல், ஒரு துரோகம், ஒரு பகை, ஒரு வலி, ஒரு வெற்றினு அவங்களுக்குள்ளே நடக்கிற பரமபதம்தான் எல்லாம்.



'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட  'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’. இது எல்லாத்தையும் சேர்த்துவெச்சுப் பாருங்க. நான் எங்கே கதையை முடிவு பண்றேன்? இங்கே யாரும் சுயம்பு இல்லை!''




''கதாநாயகர்களை வதைக்கிறீங்களே... 'சேது’வில் தொடங்கி 'பரதேசி’ வரை உங்கள் ஹீரோக்கள் எல்லோரையும் 'ஒரு டைப்பாக’ மாத்திடுறீங்களே?''




''படங்கள் கேட்குதே... என்ன செய்ய? சினிமால ஒரு நடிகன் தனியா துருத்திக்கிட்டு தெரியக்கூடாதுனு நினைக்கிறேன். அவனை ஒரு மனுஷனா, அந்தக் கதாபாத்திரமாதான் நீங்க பார்க்கணும். அதுக் குக் கொஞ்சம் மெனக் கெடத்தான் செய்யணும்; 'ஒரு டைப்பா’ மாத்திதான் ஆகணும்!''




''இந்தப் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?''



''நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள்தான் இருக்கும். கிட்டத்தட்ட என்னைத் தவிர, கேமராமேன் செழியன் முதல் எடிட்டர் கிஷோர் வரைக்கும் எல்லோரும் இதில் புதுசு.



முதல்முறையா என் படத்தில் வைரமுத்து பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் இசை. 25 வயசுக்கு 25 படங்கள் முடிச்சு நிக்கிறான் ஜி.வி.பிரகாஷ். அவனுக்குள்ள இருக்கிற பணிவும் பக்குவமும் பிரமிக்கவைக்குது. 'பரதேசி’யில பிரமாதப்படுத்தி இருக்கான்.



வைரமுத்து சார்... ஜி.வி.பிரகாஷின் வயசைக் காட்டிலும் கவிஞரின் அனுப வத்துக்கு வயசு பெருசு. அதுவும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொண்ணும் கதை பேசணும். மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்துல கெடந்தவன்தான் அதை எழுத முடியும். மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு வந்து, எடிட் பண்ணிப் போட்டுக் காட்டித்தான் பாடல்கள் கேட்டேன். மூணு மாசமாப் போராடி எடுத்துட்டு வந்த கதைக்கு மூணே வாரத்தில் வலி கூட்டிட்டார். நெஞ்சுக்குள்ள முள்ளு குத்துற தமிழ்!''




''ஆமா, உங்களுக்குப் பெண்கள் மீது மரியாதையே கிடையாதா? உங்க படங்கள்ல ஏன் ஆணாதிக்கம் தலைவிரிச்சு ஆடுது?''




''ஆணாதிக்கம் இருந்ததுங்கிறது உண்மைதான். எனக்கு ஒரு மகள் பிறந்து, அவள் தன்னோட பிஞ்சுக் கைகளால் அடிக்க ஆரம்பிச்சப்பவே எனக்குள் இருந்த, நான் கர்வப்பட்ட ஆணாதிக்க உணர்வு போய்டுச்சு. அவள் கற்றுத்தந்த அன்பு இந்தப் படத்தில் வேதிகா, தன்ஷிகாவுல ஆரம் பிச்சு படத்துல வர்ற ஒரு குட்டிப் பாப்பா வரைக்கும் இருக்கும்!''




''ஜாலியாப் பதில் சொல்லுங்க. பாலாவோட டாப் 10 மாதிரி வெச்சுக்கலாம்...''




''ம்... இது வேறயா?''



''பிடித்த 10 மனிதர்கள்... பிடித்த படைப்புகள் சொல்லுங்களேன்?''



''எம்.ஜி.ஆர். - 'பெற்றால்தான் பிள்ளையா’
சிவாஜி - 'தேவர் மகன்’
கலைஞர் - 'பராசக்தி’
ஜெயலலிதா - 'எங்கிருந்தோ வந்தாள்’
கமல் - 'மகாநதி’
ரஜினி - 'முள்ளும் மலரும்’
பாலுமகேந்திரா - 'வீடு’
போதும்ல?''





''இன்னும் மூணு இருக்கே...''



''இன்னுமா?''

''உங்களுக்குப் பிடிச்ச இயக்குநர்?''




''ருத்ரய்யா, மணிரத்னம், பாலாஜி சக்திவேல்.''



''நீங்க இயக்க விரும்பின நடிகர்கள்?''



''நானா படேகர். ஜோதிகா.''



''பிடித்த நடிகர்கள்?''    



''என் பட நாயகர்கள் எல்லோரும். இப்போ தைய மனநிலையில்... அதர்வா. ஹீரோயின்... அனுஷ்கா.''



''சரி, சினிமாவுக்கு வரலைன்னா, என்னவாகி இருப்பீர்கள்?''



''டாக்டராவா ஆயிருப்பேன்... ம்ஹூம்... நான் வாழ்ந்த கேடுகெட்ட வாழ்க்கைக்கு, செத்தே போயிருப்பேன். போதுமா? முடிச்சுக்குங்க!''



நன்றி - விகடன்

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன்


http://lh5.ggpht.com/-jRoOR5gKn9s/SoHJLf4OiwI/AAAAAAAAIfI/-Adh8mCNNxo/Director%252520K%252520Bhagyaraj%252520Family%252520%2525281%252529.jpg

1.   '' 'தாவணிக் கனவுகள்’ படத்தை ரீ மேக் செய்தால், பாக்யராஜ் யார்... சிவாஜி யார்? ஒரிஜினலைக் கெடுக்க மாட்டேன்... ரீ மேக் வேண்டாம் என்றெல்லாம் சொல்லாமல் பளிச்என்று சொல்லுங்கள்?'' 



''பாக்யராஜ் - சாந்தனு... சிவாஜி - ரஜினி.''




2. ''நீங்கள் இயக்கியதில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''



'' 'அந்த 7 நாட்கள்’ பார்த்துட்டு மணிரத்னம் சார், 'திரைக்கதையில் இதுதான் உச்சம்’னு சொன்னார். 'எப்படிங்க இப்படிலாம் கதையில ட்விஸ்ட் கொண்டுவர்றீங்க’னு ஆச்சர்யமாக் கேட்பாங்க. ஆனா, எனக்கென்னவோ என் பேரை காலாகாலத்துக்கும் சொல்ற மாதிரி பெஸ்ட் படம் இன்னும் கொடுக்கலைனுதான் தோணுது. அப்படி ஒரு படத்தை இனிமேல்தான் நான் இயக்கணும். அவை அடக்கத்துக்காகச் சொல்லலை. மனசுல பட்டதைச் சொல்றேன். அது மாதிரி எனக்குப் பிடிச்ச படத்தை எடுக்கிறப்போ, பாஸ்கர பாண்டியன்... உங்களுக்கு ஒரு ட்ரீட் இருக்கு.''





3. ''உங்க குரு பாரதிராஜா இயக்கத்தில் உங்களுக்குப் பிடிச்ச படம்... பிடிக்காத படம் எது?''



'' பிடிச்சது... '16 வயதினிலே’,


பிடிக்காதது 'வாலிபமே வா வா’.''



4. ''சிவாஜி, நீங்க, டி.ராஜேந்தர்... அபார திறமைசாலிகளா இருந்தும் அரசியல் வெற்றி மட்டும் உங்களுக்கு எல்லாம் எட்டாக் கனியாவே ஆயிடுச்சே... ஏன்?''



''இங்கே வரும்போது அதை நினைச்சு வரலை. சினிமா மட்டுமே லட்சியமா ஊறியிருந்தது காரணமா இருக்கலாம்.''




5. '' இந்தப் படத்தை ஏன் இயக்கினோம்னு உங்களை வருத்தப்பட வெச்ச படங்கள் என்னென்ன?'' 



''இயக்கினதுக்காக வருத்தப்படலை. 'ஏண்டா நடிச்சோம்?’னு வருத்தப்பட்ட படங்கள் உண்டு. அதை எதுக்கு வெளியே சொல்லிக்கிட்டு... விடுங்க!''


 சி.பி - நான் சொல்றேன் .ஞானப்பழம், ருத்ரா,வேட்டியை மடிச்சுக்கட்டு,என் ரத்தத்தின் ரத்தமே




'6. ' 'காதல்’, 'சுப்ரமணியபுரம்’, 'களவாணி’ படங்களை சாந்தனு மிஸ் செய்ததில் உங்க பங்கு என்ன?''



''அப்படிலாம் எந்தப் பங்கும் இல்லைங்க. 'காதல்’ படத்துக்குக் கேட்டப்போ சோனு ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருந்தான். காதலிக்கிறது, பொண்ணைக் கூட்டிட்டு ஓடுறதுனு அவன் நடிச்சா, அது ஏத்துக்கிற மாதிரி இருக்குமானு நான் தயங்குனேன். அதான் உண்மை.



'சுப்ரமணியபுரம்’ கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்போ அவனும் ஒரு பக்குவத்துக்கு வந்துட்டான். சசிகுமார் ஒரே ஷெட்யூல்ல முடிக்கிற மாதிரி டேட்ஸ் கேட்டார். சரி... கொடுத்திரலாம்னு முடிவு பண்ண சமயம், திடீர்னு அதுக்கு முன்னாடியே சோனு நடிச்சிட்டு இருந்த 'சக்கரைக்கட்டி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாப் பாடல்களையும் போட்டுக் கொடுத்துட்டாரு. சோனு நடிச்சு வெளிவர்ற முதல் படம் 'சக்கரைக்கட்டி’தான்னு தாணு சாருக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன். அதை மீற முடியலை. எப்பவும் நம்ம வார்த்தையில் நிக்கணும்னு நினைக்கிறவன் நான். அதனால அவன் 'சுப்ரமணியபுரம்’ பண்ண முடியாமப்போச்சு.



'களவாணி’ கதையும் எனக்குப் பிடிச்சது. கதை விவாதத்திலும் ஆர்வமாக் கலந்துக்கிட்டேன். ஆனா, அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியலை. அந்தப் படத்தில் வேறு ஒரு நடிகர் நடிச்சார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். சோனுவுக்கு மூன்று வாய்ப்புகளுமே தவறிப்போனது யதார்த்தமா நடந்ததுதான்.''





7. ''நெருக்கமானவங்களைக்கூட எம்.ஜி.ஆர். அதட்டி மிரட்டிருவாராமே... உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே. சொல்லுங்க?''




''அதட்டி மிரட்டிருவாரா... முறைச்சுப் பார்க்கிறதுலயே உண்டு இல்லைனு பண்ணிருவாருங்க!


'அண்ணா என் தெய்வம்’னு வாத்தியார் கடைசியா நடிச்ச படம் கொஞ்சமே கொஞ்சம் எடுத்ததோட நின்னுபோச்சு. காரணம், தலைவர் அரசியலுக்கு வந்து முதல்வராகவும் கோட்டையில் உட்கார்ந்தாச்சு. அப்ப அந்தப் படத் தயாரிப்பாளர்கள் என்கிட்ட வந்தாங்க. 'நீங்க இந்தப் படத்தை ஏதாவது பண்ண முடியுமா?’னு கேட்டாங்க. 'ஐயா, நீங்க முதல்ல வாத்தியார்கிட்ட கேட்டுட்டு வாங்க. இன்ன மாதிரி 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும். இதையும் தலைவர்கிட்ட சொல்லி ஒப்புதல் வாங்கிட்டு வாங்க’னு அனுப்பிவெச்சேன். திடீர்னு தலைவர்கிட்ட இருந்து அழைப்பு. 'கையோட உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க’னு ஆளுங்க வந்து நிக்கிறாங்க. 



என்னமோ ஏதோனு கலவரத்தோட வாத்தியார் வீட்டுக்குப் போனேன். வீட்ல பயங்கரக் கூட்டம். ஏகப்பட்ட பெரிய மனுஷங்க அவரைப் பார்க்கக் காத்துட்டு இருந் தாங்க. ஆனா, என்னை உடனே உள்ள வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க. போனேன். வேற எதுவும் கேட்கலை. எடுத்த எடுப்பிலேயே, 'அந்தப் படத்தை நீ டைரக்ட் பண்றேன்’னு சொன்னியானு கேட்டார். நான் மென்னு முழுங்கிட்டு, பயத்தை மறைச்சுக்கிட்டு, ஒரு வழியா 'ஆமா’னு சொல்லிட்டேன். 'அந்த’ நடிகர் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னியா?’னு அடுத்த கேள்வி பாய்ஞ்சு வருது. அதுக்கு தயங்கித் தயங்கி 'ஆமா’னு சொன்னேன். அப்படியே முறைச்சுப் பார்த்தாரு. இன்னைக்குத் தொலைஞ்சோம்னு நினைச்சு வெலவெலத்து நிக்கிறேன்.



'தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஆகுதோ, அதை நான் கொடுத்திடுறேன். அந்த நடிகரை வெச்சுலாம் நீ டைரக்ட் பண்ணணும்னு அவசியம் கிடையாது. அதுல நீ நடி. என் ஆசீர்வாதம் உண்டு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்ன?’னு கேட்டுட்டு அப்படியே கடகடனு சிரிச்சார். நம்ப முடியாம இன்ப அதிர்ச்சியில் அப்படியே சிலையாகிட்டேன். 



சுதாரிச்சு, 'உங்களை மாதிரி எப்படிங்க நான் சண்டை எல்லாம் போட முடியும்?’னு சொல்லிப் பார்த்தேன். 'அதான் 'தூறல் நின்னுபோச்சு’ படத்துல பிரமாதமா சண்டை போட்டியே... சிலம்பம்லாம் என்னை மாதிரி சுத்தினியே... அது போதாதா?’னு கேட்டார். அந்தப் படம்தான் 'அவசர போலீஸ் 100’. அதட்டி மிரட்டுறதுல மட்டுமில்லை, தட்டிக்கொடுத்துத் தூக்கிவிடுறதுலயும் வாத்தியாருக்கு நிகர் வாத்தியார்தாங்க. இன்னும் நிறைய இருக்குங்க. வாராவாரம் வருதுல்ல... பேசுவோம் நிறைய.''





8. ''இந்த திரைக்கதை ஞானம் உங்களுக்கு எப்படி வந்ததுனு யோசிச்சிருப்பீங்களே... என்ன தோணுச்சு?'' 



''என்னைச் சுத்தி நடக்கிறதை எப்பவும் கூர்ந்து கவனிச்சுட்டே இருந்ததில் வந்திருக்கலாம். கடவுளின் அனுக்கிரஹமாகவும் இருக்கலாம்!''



9. ''தி.மு.க-வில் குஷ்புவுக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பற்றி என்ன நினைக்கிறீங்க?'' 



''லேடீஸ் ஃபர்ஸ்ட். அதோட வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. இதுல பெருமையா சந்தோஷப்பட்டுக்கிறதைத் தவிர, வருத்தப்பட என்ன இருக்கு?''




10. ''சமீபத்தில் பார்த்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படங் கள் என்னென்ன?''



'' 'பர்ஃபி’ ரொம்பப் பிடிச்சது. படம் முழுக்கச் சின்னச் சின்ன பஞ்ச்களா திரைக்கதையை அழகாக்கி இருந்தாங்க. 'சாட்டை’ - கொஞ்ச நீளம். ஆனா, சுத்தமான படம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைச்சா, இன்னும் விறுவிறுப்பு சேரும்!''





11. '' 'விடியும் வரை காத்திரு’... செம த்ரில்லர் படம். அந்தக் காலத்துல அப்படி ஒரு படம் எடுக்க ணும்னு எப்படி தோணுச்சு?''



''வித்யாசமா முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. அதை விட 'ஒரு கைதியின் டைரி’ என்னைக் கவர்ந்த கதை.''





12/ ''நிஜமாவே முருங்கைக்காய் 'அந்த’ விஷயத்துக்கு செட்டாகுமா?''



''இன்னுமா சந்தேகம்?''



13. ''உங்கள் குரு பாரதிராஜா விடம் கற்றுக்கொண்டது என்ன?''



''சுறுசுறுப்பு.''



- நிறைய பேசலாங்க...




அடுத்த  வாரம்


''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்..?''



''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்..?''



''திரைக்கதையை அடிப்படையா வெச்சு தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களைச் சொல்லுங்களேன்?''



டிஸ்கி1  -தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி http://www.adrasaka.com/2012/10/10.html


டிஸ்கி 2 - 

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |...

http://www.adrasaka.com/2012/10/11.html


டிஸ்கி 3 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

 
 

 

d