Showing posts with label birthday speech. Show all posts
Showing posts with label birthday speech. Show all posts

Saturday, December 15, 2012

ரஜினி - பிறந்த நாள் விழா - வீர உரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzhMmfGhECdKMX7xu48S5aG4Vj0ee10mN0TtvLeooBY86pbLaD0raZUVIvIVUIZcscZke8dWCihtABUFCK4U9JNi8ihW4G87rZMIob_cG8ZEnw1KP603NGWOPM6sgiy7nuNKo-uA5_Z44/s1600/rajinikanth-birthday-special13.jpg'என்னை கோழை என்று நினைத்து விடாதீர்கள்' - ரஜினி

தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா YMCA மைதானத்தில் நடைபெற்றது.  நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர், லாரன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.ரம ணன், பாண்டு, நமீதா, உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.


அவ்விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசியது :

ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். இதற்கு முக்கிய காரணம், 22 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம்தான், அப்போது நடந்த என் பிறந்தநாள் விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த 3 பேர் ஊருக்கு திரும்பிச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தனர். அதற்குப் பிறகுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.

என் பிறந்தநாளில் வெளியூருக்கு சென்றுவிடுவேன். அங்கு தனியாக அமர்ந்து, இதுவரை நான் என்ன செய்தேன்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இனி என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது ஆண்டவன் கையில் இருக்கிறது.

மிகப் பெரிய பிளான் போட்டால், அது நடக்காது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அப்படியே நடந்து விடாது. அதிகமாக சம்பாதிக்கலாம். அல்லது அதைவிட குறைவாக சம்பாதிக்கலாம். இதிகாசம், புராணங்களில் கூட நினைத்தது அப்படியே நடந்து விடாது.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக வரும் 12.12.12 அன்று என் பிறந்தநாளில், என் உயிரினும் மேலான ரசிகர்களை சந்தித்தது அதிக மகிழ்ச்சி அளித்தது. ஆனால், இது நடக்குமா என்று சந்தேகமாக இருந்தது. காரணம், என் உயிர் நண்பன், எனக்கு அனுமான் மாதிரி துணையாக இருந்த காந்தி, 10ம் தேதி ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். 11ம் தேதி உடல் அடக்கம் நடந்தது. மறுநாள் காலையில் என் பிறந்தநாள். 11ம் தேதியே ரசிகர்களுக்கு தகவல் சொல்லியாகி விட்டது. 


ஒரு நானூறு பேர் காலையிலேயே என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். உடனே நான் குளித்து முடித்து, அவர்களைப் பார்க்க வந்துவிட்டேன். ரசிகர்களைப் பார்த்த பிறகுதான் மகிழ்ச்சி ஏற்பட்டது. காந்தி இறந்த கவலையில் மூழ்கியிருந்த நான், அதிலிருந்து வெளியே வர ஆரம்பித்தேன். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், அந்த வலியை தீர்த்திருக்க முடியாது. ரசிகர்களை சந்தித்துப் பேசியபோது, அவர்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டபோது கிடைத்த சந்தோஷம் எல்லாம் ஆண்டவன் செயல்தான்.

சத்யநாராயணாவை நான் மன்றத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் இவ்வளவு நாட்கள் ஓய்வு எடுத்தார். காரணம், உடல்நிலை சரியில்லை. அவர் வந்தால்தான் ரசிகர்களை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும் என்று அவரை வரவழைத்தேன். என் ரசிகர்கள் பவர்புல் ஆட்கள் என்பது எனக்கு தெரியும். அரசியல் கடல் மாதிரி. அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. 



இங்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள சரத்குமார், தி.மு.கவில் உள்ள சந்திரசேகர் எல்லாம் வந்திருக்கிறார்கள். போயஸ் கார்டனும் வந்திருக்கிறது. கோபாலபுரமும் வந்திருக்கிறது. சரத்குமார் ஜெயலலிதா மேடத்திடமோ, சந்திரசேகர் டாக்டர் கலைஞரிடமோ இந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டிருந்தால், கண்டிப்பாக அவர்கள் அனுமதிப்பார்கள். காரணம், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் ரசிகர்கள்தான் என்னை வாழ வைத்தவர்கள். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். 1996ல் எனக்கு நடந்த பிரச்னை பற்றி எல்லாருக்கும் தெரியும். அதற்குப் பிறகு என் பெயரையோ, புகைப்படத்தையோ ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னேன்.

அப்போது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, அவர்கள் எல்லாரும், ‘உங்க ஆதரவு யாருக்கு? நீங்க தேர்தல் பிரசாரத்துக்கு வர வேணாம். ஆதரவை மட்டும் தெரிவிச்சா போதும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்காக என்னை கோழை என்று நினைத்து விடாதீர்கள். 


நான் செத்தாலும் சாவேனே தவிர, பிச்சை எடுத்தாவது வாழ்வேனே தவிர, கோழையாக மட்டும் சாக மாட்டேன். டாக்டர் கலைஞர் என்னை ஒரு நண்பராக ஏற்றுக் கொண்டவர். அதனால், டாக்டர் கலைஞரை எனது அருமை நண்பர் என்று சொல்லிக்கொள்கிறேன். அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருந்தாலும், அவர் என்னிடம் அரசியல் பற்றி பேசியதில்லை.

பிறகு ஒருமுறை என் படத்துக்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதுவும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் சொன்ன பாயின்ட் ரொம்ப நல்ல பாயின்ட். அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது வேண்டுமானால் வேறுவிதமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அரசியல் தலைவரும் வருகிறார்கள். 


ஆனால், இங்கு அவர்கள் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், இங்கு இருக்கும் சிஸ்டம் அப்படி. அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய பலமே அதன் தொண்டர்கள்தான். அவர்கள் நினைத்தால், ஒரு ஆட்சியை வரவழைக்க முடியும். அதைக் கவிழ்ப்பதும் அவர்கள்தான். என் குரு சச்சிதானந்த சுவாமிகள், தலையெழுத்து பற்றி அடிக்கடி சொல்வார். ஒரு நாட்டுக்கு யார் தலைவராக வர வேண்டும்? யார் ஆள வேண்டும் என்பது தலையெழுத்துப் படியே நடக்கும். அரசியலில் நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம். இல்லை என்றால், காமராஜர் மாதிரி ஒரு நல்ல தலைவர் தோற்றிருக்க முடியுமா?

உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். பிறகு சென்னைக்கு வந்தவுடன் எல்லா நியூஸ் பேப்பர்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் பார்த்தேன். ரசிகர்கள் நான் நலம்பெற வேண்டும் என்று கோயில், கோயிலாகச் சென்று வேண்டியதையும், பிரார்த்தனை செய்ததையும் படித்து தெரிந்துகொண்டேன். அவர்கள் என்மீது கொண்ட இந்த அன்புக்கு எப்படி ரியாக்ட் பண்றது என்று தெரியவில்லை. இங்கே பேசிய ராதாரவி, நான் நலம்பெற ஒரு வாரம் விரதம் இருந்ததாக சொன்னார். அதற்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

‘சந்திரமுகி’க்கு பிறகு ‘சிவாஜி’. அதற்குப் பிறகு ‘எந்திரன்’ படத்தில் நடித்தேன். வேட்டையன் கேரக்டரும், மொட்டை பாஸ் கேரக்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால், அடுத்து உருவாக்க இருந்த ‘ராணா’ படத்தில் வில்லனாக நடிக்க முடிவு செய்தேன். அப்போது எனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே மருத்துவமனையில்  சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்ததால் ஏற்பட்ட விளைவு இது.

நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில நண்பர்களின் தூண்டுதலால் இது நடந்தது. சினிமாவில் நடிக்க வந்த பிறகு நல்ல சரக்கு குடித்தேன். பிறகு இடைவிடாத ஷூட்டிங்கில் கடுமையாக உழைத்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது. அப்போது நடந்தது பற்றியும் ரசிகர்களுக்கு தெரியும். பிறகு லதாவை திருமணம் செய்தேன். மது அருந்துவதை குறைத்தேன். 


யோகா, உடற்பயிற்சி என என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டேன். ஆனால், அளவுக்கதிமாக சிகரெட் பிடித்தேன். அதனால் வந்த வினை தான், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள். தொடர்ந்து நான் மருந்துகளும், மாத்திரைகளும் எடுத்துக்கொண்டதால், சில மாதங்களாக உடம்பு ‘வீக்’ ஆகிக்கொண்டே வந்தது. உடனே மருத்துவ முறையை மாற்றினேன். இப்போது சொல்கிறேன். கடந்த ஓரிரு மாதங்களாக ரொம்ப நன்றாக இருக்கிறேன். டாக்டர்களே கூட, ‘இது ஒரு மிராக்கிள்’ என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

நான் உடல்நிலை தேறி வந்ததற்கு முக்கியமான காரணம், ரசிகர்களின் அன்பும், பிரார்த்தனையும்தான்.  என் ரசிகர்களாகிய நீங்கள் முதலில் உங்கள் தாய், தந்தையரை கவனியுங்கள். நமக்கு நம் வீடுதான் சொர்க்கம். பெற்றோரை வணங்குங்கள். அவர்களின் காலில் விழுந்து வணங்கி, அவர்களுடைய ஆசிகளைப் பெறுங்கள். எனது பிறந்தநாளை, உங்கள் பெற்றோரை வணங்கும் நாளாக நினைத்தால் அதுவே எனக்குப் போதும் " என்று பேசினார்.


நன்றி - விகடன்



http://timesofap.com/wp-content/blogs.dir/3/files/2012/10/rajinikanth-amitabh-bachchan1.jpg