Showing posts with label VIP. Show all posts
Showing posts with label VIP. Show all posts

Tuesday, August 28, 2012

இந்தியாவில் பரவும் வி ஐ பி கலாச்சாரம் - ஓ பக்கங்கள் ஞானி @ கல்கி

ஓ பக்கங்கள்

விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி. நோயாளி!

ஞாநி


நிறைய பேர் என்னை ஒரு வி.ஐ.பி என்று கருதுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதுவதால், டி.வி.களில் தோன்றுவதால், பரவலாகப் பலருக்கு என் முகம் பரிச்சயமாகியிருப்பதால், நான் ஒரு வி.ஐ.பி. என்று அவர்கள் நினைக்கிறார்கள்.


வி.ஐ.பி. என்ற ஜாதியே இந்தியாவுக்கே உரியது. மேலை சமூகத்தில் அதை ஏறத்தாழ ஒழித்துவிட்டார்கள். எல்லோரும் சமம்.



வி.ஐ.பி. என்றால் என்ன அர்த்தம்? எல்லா பொது இடங்களிலும் முன்னுரிமை, சலுகைகளுக்கு உரியவர் என்றே இங்கே அர்த்தம். ஏர்-போர்ட்டில் ஒருமுறை லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது பார்த்தேன். இன்னும் சிலர் இருந்தார்கள். ஒரு சினிமாப் பாட்டு சக்கரவர்த்தி வந்ததும் எல்லோரும் ஒதுங்கி அவர் முதலில் லிஃப்டுக்குச் செல்ல வழிவிட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட முன்னுரிமைகளைப் பெற குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடற்குறையுடையோர் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதே என் கருத்து.



நான் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். பரிசோதனை நிலையங்களுக்குப் போகிறேன். டோக்கன் வரிசைப்படி என் முறைக்காகக் காத்திருக்கிறேன். நான் ஐந்நூறு ரூபாய் பீஸ் கொடுக்கும் டாக்டரைச் சந்திக்க இரண்டு மணி நேரமெல்லாம் வரிசையில் காத்திருந்திருக்கிறேன். காத்திருக்கும் மற்றவர்களும் அதே பீஸ்தான் கொடுக்கிறார்கள். அவர்களும் காத்திருக்கிறார்கள்.



க்யூவில் நிற்காமல் முன்னே செல்லும் உரிமையுடையவர் வி.ஐ.பி. என்பது நம் சமூகத்தில் நிலவும் கிறுக்குத்தனம். இதை வோட்டுச் சாவடியிலிருந்து ஏர்-போர்ட் வரை எங்கேயும் பார்க்கலாம். தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கக் கூட முடியாத நிலை ஒரு வி.ஐ.பி.க்கு என்ன தான் இருக்க முடியும்? மலம் கழிக்கும் அவசரத்தைத் தவிர வேறெதற்கும் இந்தச் சலுகையைத் தரமுடியாது.



வி.ஐ.பி.யின் நேரம் பொன்னானது. அந்த நேரத்தில் அவர் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பது வீணாகிவிடும் என்றெல்லாம் கற்பனையாகச் சொல்லப்படுகின்றன. இந்த வி.ஐ.பி. கலாசாரத்தை எல்லா இடங்களிலும் நிச்சயம் ஒழித்துக் கட்டவேண்டும்.



குறிப்பாக மருத்துவத் துறையில் ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது. வி.ஐ.பி.களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. சுமார் 29 வருடங்களுக்கு முன்னால் என் அம்மா ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அதிகாலையில் இறந்துபோனார். அந்த வார்டுக்குப் பக்கத்து வார்டில் ஒரு முன்னாள் அமைச்சர் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். என் அம்மா இறந்த உடனே மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நிமிடமே பிணத்தை எடுத்துக் கொண்டு ஓடும்படி என்னைத் துரத்தினார்கள். காரணம் செத்துக் கொண்டிருக்கும் வி.ஐ.பி.யைப் பார்க்க சாகப் போகும் சில வி.ஐ.பி.கள் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடுவார்களாம். அப்போது வார்டில் பிணம் இருக்கக்கூடாதாம். மாடியிலிருந்து அம்மாவின் உடலைக் கீழே எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டேன். வரவில்லை. அம்மாவின் உடலை என் இரு கைகளில் ஏந்திக் கொண்டு படிகளில் இறங்கி வெளியே வந்தேன். நான் வெளியேறவும் வி.ஐ.பி.களின் கார்கள் நுழையவும் சரியாக இருந்தது!




சிகிச்சையில் ஒரு வி.ஐ.பி.க்கு முன்னுரிமை உண்டா என்ற கேள்வி இந்த வாரம் மனத்தில் அலைமோதியது. காரணம் மத்திய அமைச்சரும் முன்னாள் மராட்டிய முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்தான்.



மரணப்படுக்கையில் இருந்த விலாஸ்ராவுக்கு கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் முழுக்கக் கெட்டுவிட்டன. அவற்றை உறுப்பு தானமாக வாங்கி அவருக்குப் பொருத்தி அவரைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் குடும்பத்தினர் முயற்சி செய்தார்கள்.



உறுப்பு தானத்தில்தான் வி.ஐ.பி. பிரச்னை நுழைகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்கள் மிகக் குறைவு. மூளைச் சாவு ஏற்பட்டதும் உறவினர் சம்மதத்துடன் ஒருவரின் உறுப்புகளை எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமே நம் நாட்டில் தாமதமாகத்தான் வந்தது.



எப்போதுமே தேவைப்படும் உறுப்புகளின் எண்ணிக்கையை விட, கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எனவே உறுப்பு பொருத்தப்பட வேண்டிக் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உறுப்பு கிடைக்கக் கிடைக்க வரிசைப்படி அளிக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் பின்பற்றும் நடைமுறை.



விலாஸ்ராவ் இந்தப் பட்டியலில் முதலில் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு முன்பே பலர் காத்திருந்தார்கள். ஆனால் விதிகளை வளைத்து விலாஸ்ராவுக்கு ஒரு கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பெற்றுவிடமுடியுமா என்று கொஞ்சம் முயற்சிகள் நடந்திருக்கின்றன.



காத்திருப்போரில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. திடீரென உடல்நலம் குலைந்து உடனடியாக மாற்று உறுப்பு பொருத்தப்படாவிட்டால் இறந்துவிடும் ஆபத்தான நிலையில் இருப்பவரை அக்யூட் நோயாளி என்று சொல்வார்கள். இவர்களிலும் மிக அவசர நிலையில் இருக்கும் சிலரே முன்னுரிமைக்கு உரியவர்கள். நீண்ட காலமாக உடலின் ஒவ்வொரு பாகமாகப் பழுதடைந்து மெல்ல மெல்லச் சீர்குலைந்து வந்த நிலையில் இருப்போர் க்ரானிக் எனப்படுவர். இவர்கள் முன்னுரிமைக்கு உரியவர்கள் அல்ல.




விலாஸ்ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் பழுதாகி, பல காலம் ஆயிற்று. அதன்பின் அதில் புற்றுநோயும் ஏற்பட்டது. அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. அவர் க்ரானிக் நோயாளி நிலையில் இருந்தவர்.



வி.ஐ.பி. என்பதற்காக அவருக்கு முன்னுரிமை தர மாற்று உறுப்புகள் தொடர்பான சட்டங்களில் ஒரு வழியும் கிடையாது. அவ்வளவு ஏன், இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் வி.ஐ.பி. என்ற வரையறையோ, யாருக்கும் சலுகையோ கிடையாது.



எனவே விலாஸ்ராவை க்ரானிக் கேட்டகரியில் இல்லாமல், ஹைப்பர் அல்ட்ரா க்ரிட்டிகல் கேஸ் என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அறிவித்தது. அந்த முன்னுரிமை பெற்றும் கூட, இன்னமும் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக இல்லாத நிலையிலேயே அவர் காலமாகிவிட்டார்.



மும்பையில் கல்லீரல் பெற இயலாத நிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து இங்கே விதியை வளைக்க ஏதேனும் செய்யமுடியுமா என்ற முயற்சி நடந்திருக்கிறது. இங்கேயும் சிரமம் என்ற போது மறுபடியும் மும்பையில் முயற்சித்தார்கள். உறுப்பு தான விதிகளின்படி வி.ஐ.பி. என்று யாரும் இல்லை. எனவே அவரை வி.ஐ.பி. யாகக் கருதி முன்னுரிமை தந்து உறுப்பை ஒதுக்கீடு செய்யமுடியாது என்று மும்பையில் சொல்லிவிட்டார்கள். ஆனால் க்ரானிக் நிலையில் இருந்த அவர் உறுப்பு கிடைக்கும் முன்பே காலமாகி விட்டார்.



அமெரிக்கா, மும்பை, சென்னை, ஏர் ஆம்புலன்ஸ் என்றெல்லாம் அலைந்து விலாஸ்ராவுக்கு உறுப்பு தானம் பெற்று பொருத்த முயற்சித்தவர்கள், அவர் இறந்த பின் அவரது கண்களையோ உடலையோ கூட தானமாகத் தரவில்லை. இதுதான் நம் சமூகத்தின் வி.ஐ.பி. மனநிலை. எனக்கு எல்லோரும் தரவேண்டும். நான் யாருக்கும் எதையும் தரமாட்டேன்.



மருத்துவச் சிகிச்சை பெறுவதில் வி.ஐ.பி.க்கு முன்னுரிமை என்று எதுவும் இருக்க முடியாது. எல்லா உயிரும் சமமானவை என்பதே சரியான கோட்பாடு. ஆனால் நாம் உயிர்களை வி.ஐ.பி. உயிர், சாதா உயிர் என்று பிரித்தே நடத்துகிறோம்.



விலாஸ்ராவ் தொடர்பாக வெளியான இணையச் செய்திகளில் கமெண்ட் அடித்த பல வாசகர்கள், ‘விலாஸ்ராவ் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ள நபர். அவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இதுவும் தவறான அணுகுமுறைதான். ஊழலில் தொடர்புடையவர் செத்து ஒழியட்டும் என்று விட முடியாது. அவரை நீதிக்கு முன் நிறுத்திக் குற்றத்தை நிரூபித்து, தண்டிப்பதுதான் சரியான வழி. எந்த மனித உயிரும் காப்பாற்றப்படவேண்டியதுதான் - விலாஸ்ராவ் உட்பட. ஆனால் விலாஸ்ராவ் வி.ஐ.பி. என்பதால் முதலில் காப்பாற்றப் படவேண்டும் என்பதே தவறான அணுகுமுறை.



உண்மையில் எல்லா உயிர்களையும் சமமாக மதித்துக் கவனிப்பவர்கள் மருத்துவ மனையில் இருக்கும் நர்சுகள்தான். எங்கிருந்துதான் இப்படி அற்புதமான நர்சுகள் வருடந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறை மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும்போதும் வியக்கிறேன். அவர்கள் தான் நம் நாட்டு மருத்துவத்துறையின் மிகப்பெரிய சொத்து.



எனக்கு மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு அவற்றிலிருந்து மெல்ல மெல்ல முழுமையாகக் குணமடைய ஆறு வாரங்கள் தேவைப்படும் நிலையில், சென்ற இரண்டு வாரங்கள் ஓ பக்கங்களை எழுத முடியாமல் போய்விட்டது. எனக்கு முகம் தெரியாத எண்ணற்ற வாசகர்கள் என்னை நலம் பெற வாழ்த்தியதுதான் ஒருவன் எழுத்தாளனாக இருப்பதில் கிடைக்கும் மிகப்பெரிய வருவாய். அறுவை அனுபவங்களைப் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.



இந்த வாரக் கேள்வி



வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து வேலை பார்த்த ஆயிரக்கணக்கானோர் பதற்றமான மனநிலையில் ஊர் திரும்பியது வருத்தமான விஷயம்தான். ஆனால் எனக்கு ஒரு அடிப்படைச் சந்தேகம். ஏன் இத்தனை ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து பிழைக்க வேண்டியிருக்கிறது? அந்த மாநிலங்களில் விவசாயம், தொழில் இவற்றின் நிலை என்ன? ஏன் அங்கே வேலை வாய்ப்புகள் இல்லை? அதற்கு யார் பொறுப்பு?



இந்த வார பதில்



தியேட்டர்களில் கூட்டம் குறைந்ததற்குக் காரணம் என்ன என்று சினிமா பிரமுகர்கள் ஒரு கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள்:



இதோ பதில்: காரணம்

1: குப்பையாக படம் எடுக்கிறீர்கள்.

2. பெண்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்பாதபடி படம் எடுக்கிறீர்கள்.


3. பெரும்பாலான தமிழ் டி.வி. சேனல்கள் தாங்களே சினிமா கொட்டகை மாதிரி இருக்கின்றன.


 4. கொட்டகைக்கு வந்து காஃபி சாப்பிட்டாலே திவாலாக்கிவிடுகிறீர்கள். அண்மையில் ஒரு சாதாரணக் கொட்டகையில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ. 30 கொடுத்து படம் பார்த்தேன். கேன்டீனில் மோசமான காஃபி குடித்தேன். விலை: பத்து ரூபாய்.




இந்த வாரப் பூச்செண்டு


கட்சி சார்பு இல்லாமல் மக்கள் சார்பாகச் செய்திகளை வழங்கி வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து இரண்டாம் ஆண்டில் நுழையும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு!

நன்றி - கல்கி, புலவர் தருமி, ஓ பக்கங்கள் ஞானி