Showing posts with label SHORT STORY. Show all posts
Showing posts with label SHORT STORY. Show all posts

Thursday, February 14, 2013

என் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும் - சபிதா -சிறுகதை

20 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தாஜ்மகாலுக்குச் செல்கிறேன். முதல்முறை பூமியில் கால் பதித்து நடைபயிலும் பிள்ளையைப் போல இருந்தது மனம்.  
 
 
மார்பிள் தரையின் குளிர்ச்சியைப் பாதம் உணரத் துவங்கி, நரம்புகளின் வழியே தலைக்கு ஏறியது கிறுகிறுப்பாக இருந்தது. தாஜ்மகாலைத் தூரமாக நின்று தரிசிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அழகு முழுமையாகப் புலப்படும். அதன் அருகில் சென்றாலோ, அது விஸ்வரூபம் எடுக்கும். அதனுள் நுழைந்துவிட்டாலோ... நாம் அதில் மூழ்கிக் காணாமல் போய்விடுவோம். காதலில் கரைந்துவிடுவதைப் போலத்தான்.


தொலைவில் நின்று தாஜ்மகாலைக் கவனிக்கத் தொடங்கினேன். முன்பு இருந்த தூய்மையான அழகை தாஜ்மகால் மெள்ள இழந்துவருவது உண்மைதான். காரணம், அமில மழை என்கிறார்கள். அதன் மேல் ஸ்தூபியில் லேசான மஞ்சள் நிறம் படியத் தொடங்கியுள்ளது, பல தடவை சலவைக்கு உட்படுத்தப்பட்ட வெண்ணிற ஆடையைப் போல. காற்றிலும் நாசி வெறுக்கும் ஒருவிதமான துர்நாற்றம். மனித மனங்களைப் போலவே தாஜ்மகாலும் மெள்ள மெள்ள மாசு அடைந்துவருகிறது.

தாஜ்மகால் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று. என்னைப் பொறுத்தவரையில் தாஜ்மகால் வெறும் கட்டடம் மட்டும் இல்லை. வெறும் காதலின் சின்னமும் இல்லை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒன்று இங்கு இருக்கிறது. இந்தக் காற்றில் சொல்ல முடியாத துக்கமும் காதலும் மிதக்கிறது. இந்தத் தூண்களில் காதல் படிந்து உள்ளது. இந்தப் பெரிய பிரமாண்டமான அமைப்பு என்னைத் துரும்பனாக மாற்றிக் கேலி செய்கிறது.


எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் அது. இமய மலையின் முன் நிகழும் அதே அற்புதம். காதலும்கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்த னைக் கருத்துகள் உலவினா லும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும். காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான்.


தாஜ்மகால் வெறும் ஷாஜகானின் காதலுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. இங்கு வருகை தரும் எவருமே தங்க ளுடைய மனக் கண்ணில் ஒரு மின்னல் நொடிப்பொழுதே னும் தாங்கள் இழந்த காதலி யையோ, நழுவிப்போன காதலையோ நினைக்காமல் இருக்க முடியாது. பல இதயங்கள் தூவிய காதல் இந்தக் காற்றில் முளைத்து வேர் விட்டிருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் தன் முயற்சி எதுவும் இன்றி தூண்டப்படும் பக்தியைப் போலவே தாஜ்மகாலின் உள்ளே யும் காதல் மேலெழும்பும்.


வெளிப் பிராகாரத்தில் கால்போன போக்கில் சுற்றி அலைந்துகொண்டு இருந்தேன். ஏனோ, சாலைகளில் பிரக்ஞையற்றுச் சுற்றும் கந்தல் ஆடைக்காரனின் நினைவு வந்தது. அவனுடைய உலகம் முற்றிலும் வேறானது. அவன் இந்த உலகத்தோடு ஒரு நூலிழை அளவே கட்டப்பட்டு இருக்கிறான். அதில் நாம் அறியாத ஒரு மேன்மையான வாழ்வும் இருக்கலாம்தான்.


பரந்து விரிந்த வெண்ணிற மார்பிள் தரை எனக்குச் சற்றும் சொந்தம் இல்லாத, ஆனாலும் நான் சரிய ஏங்கும் மடியைப் போலத் தோன்றியது. வானம் பார்க்க நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வேண்டும்போல இருந்தாலும், சுற்றி லும் அங்கொன்றும் இங்கொன்று மாக அலையும் மனித நடமாட்டத்தை மனதில்வைத்துக் குட்டைச் சுவருக்கு முதுகைக் கொடுத்துக் கால்களை நீட்டி அமர்ந்தேன். இப்படித்தான் மனதில் தோன்று வதை எல்லாம் நம்மால் செய்ய முடிவது இல்லை. சத்தமாகப் பாட, சுற்றி உள்ளவர்களைப் பற்றி சட்டை செய்யாமல் குதித்து ஆட... என எத்தனை மனத் தடைகள்?



மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம்போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். களைப்பாக இருந்தது. இந்த உலகில் இருந்து முற்றிலும் என்னைத் துண்டித்துக்கொள்ள முயல்பவனைப் போல கண்களை இறுக மூடிக்கொண்டேன். உள் இழுத்து முழுவதுமாக வெளி யிட்ட மூச்சு, புதைந்துபோயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டது.



முதல்முறையாக தாஜ்மஹால் பார்க்க வந்தது அமுதாவுடன். பலரும் எங்களுடன் இருந்தார்கள் என்றாலும், அன்று இங்கு இருந்தது நான், அமுதா மற்றும் தாஜ்மகால் மட்டுமே.


 அமுதாவுக்கும் எனக்குமான காதல் நீடித்தது ஒரே ஒருநாள் மட்டுமே. சொல்லப்போனால் சில நொடிப் பொழுதுகள் மட்டுமே. ஆனாலும் அந்தக் காதல் வாழ்நாள் முழுவதும் வலி தரக் கூடியதாக, வலிமையானதாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை. அமுதாவை நினைத்ததும் அவளுடைய சுருள்சுருளான அடர்ந்த முடிதான் நினைவில் ஆடியது. அவள் என்னை உரசிக்கொண்டு அமரும்போது, ஒன்றாக உறங்கும்போது எல்லாம் என் மூக்கின் துவாரத்தில் அவை கிச்சுகிச்சு மூட்டும். தொடர்ந்த தும்மலின் எரிச்சலில், ''ஏய்... பஞ்சு மிட்டாய் தலை... தள்ளிப் போடி'' என்பேன். பதிலுக்கு அவள் நகங்களால் கிள்ளிய காயங்களின் தழும்புகள்கூட இப்போது என்னிடம் இல்லை.



ஏதேனும் புத்தகத்தில் அவள் மூழ்கியிருக்கும்போது அவள் கையில் உள்ள ஒற்றை முடியை மட்டும் அவள் அறியாமல் மெள்ள இழுப்பது எனக்குப் பிடித்தமான விளையாட்டு. வலியால் துடித்தபடி அலறும் அமுதா, என்னைத் துரத்திப் பிடித்துத் தலைமுடியைப் பற்றி இழுத்து ஓர் அடியேனும் போடாமல் ஓய மாட்டாள்.



உண்மையில் அமுதாவைத் திருமணம் செய்து கொள்ள எங்களுக்குள் எந்தத் தடையும் இல்லை. உறவின் முறையில் அவளை நான் மணந்துகொண்டு இருக்கலாம்தான். அமுதாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி மாற்றலாகும்படியான மத்திய அரசு வேலை. அவளுடைய கல்வியின் காரணமாக, பால்யம் தொட்டே அவள் எங்கள் வீட்டில் எங்களுடன் வளர வேண்டியதாயிற்று.


என் வீட்டில் நான், அப்பா, அம்மா, அமுதா மற்றும் அமுதா வயதில் ஒரு தங்கை. அமுதாவை ஆசை தீரக் காதலிப்பதற்கான எல்லாவிதமான சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும், சுதந்திரமும், உரிமையும் இருந்தது எனக்கு. கண்ணாமூச்சி ஆடும்போது, ஓடிப் பிடித்துப் புரண்டு விளையாடும்போது, குளியல் அறையில் இருந்து ஈரம் சொட்டச் சொட்ட அமுதா வெளியேறும்போது, பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றும்போது... ஏகாந்தமான எந்தச் சூழலிலும் அந்தப் பாழாய்ப் போன காதல் எங்களுக்குள் மணி அடிக்கவே இல்லை.




ஒருவேளை அந்த வெளிப்படையான சூழல்தான் எங்கள் காதலுக்குப் பெரும் தடையோ? காதலில் கள்ளத்தனமும் தடைகளும்தான் சுவாரஸ்யமோ? என்னவென்று இதுவரையில் விளங்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் பெண் மனம் மட்டும் அல்ல; மனித மனங்களே ஆழமானவைதான். ரகசியங்களும், மர்மங்களும், அழகும், அபாயமும் நிறைந்த கடல் மாதிரி.



யாரோ தோள் தொடுவதைப் போல உணர்ந்ததும் மெள்ளக் கண் திறந்தேன். ஓர் இளைஞன் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தான். நெடுநேரமாக என்னை அழைத்துக்கொண்டு இருந்திருப்பான்போலும். நான் சுய நினைவு வந்தவனைப் போல மெள்ளத் தலையை உலுக்கிக்கொண்டு, ''யெஸ்...'' என்றேன்.



''யூ டேக் எ போட்டோகிராஃப் ப்ளீஸ்... இஃப் யூ டோன்ட் மைன்ட்...'' என்றான். அவன் பின்னால் மலர்ந்த புன்னகையுடன் ஓர் இளம் பெண் நின்றுகொண்டு இருந்தாள். அவர்கள் இருவருடைய முகங்களும் காதலால் ஜொலித்துக்கொண்டு இருந்தன. அவர்கள் இருவரும்தான் இந்த உலகிலேயே இன்பமயமானவர்களைப் போல இருந்தார்கள். நிச்சயம் உலகம் காதல் வயப்பட்டவர்களின் கைகளில்தான் உள்ளது.



அந்த இளைஞன் தன்னிடம் இருந்த கேமராவை என்னிடம் நீட்டினான். நான் கோணம் பார்க்கத் தயாரானேன். அவர்கள் பசை போட்டதைப் போல ஒட்டிக்கொண்டார் கள். கரங்களைக் கோத்துக்கொண்டார்கள். முத்தமிட்டுக்கொண்டார்கள். ஒரே சால்வைக்குள் குளிர்காய்ந்தார்கள். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் ஒரு வகையில் அவனது காதல் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. மிக இயல்பாகத் தோன்றிய பொறாமையைப் புறந்தள்ளிவிட்டு அவர்களை ரசிக்கத் தொடங்கினேன்.



அமுதாவுக்குத் திருமணமான புதிதில் அவள் கணவனுடன் சேர்ந்து எடுத்திருந்த தேனிலவுப் புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். அந்தப் புகைப்படங்களில் எல்லாம் நெருக்கம் காட்டுவதில் அமுதாவுக்குச் சிறு தயக்கம் இருந்ததைப் போலத் தோன்றியது. அவள் முகத்தில்கூட மென்சோகம் இழையோடியதைப் போல இருந்தது. அல்லது அவ்வாறு எண்ணிக்கொள்வது எனக்குச் சமாதானமாக இருந்தது.



நன்றி சொல்லி கேமராவுக்காகக் கை நீட்டினான் இளைஞன். கைகுலுக்கி விடைபெற்றான். அந்தப் பெண் தூரத்தில் இருந்து கையசைத்துச் சென்றாள்.


அமுதாவின் திருமணத்துக்குப் பிறகு நாங்கள் சில முறை சந்தித்தோம். கிரஹப் பிரவேசம், அறுபதாம் கல்யாணம், திருமண வீடு, துக்க வீடு இப்படிச் சில சந்தர்ப்பங்களில்தான் சந்திக்க முடிந்தது. அமுதா உணவு பரிமாற நேரிட்டால் எனக்குக் கூடுதலாக ஒரு ஸ்வீட் கிடைக்கும். ஒரு பண்டிகையின்போது என் மனைவியும் நானும் அமுதாவுக்கு மிக விருப்பமான நிறத்தில் புடைவை ஒன்றைப் பரிச ளித்தோம். இப்படித்தான் நாங்கள் அன்பை இதுநாள் வரை பரிமாறிக் கொண்டோம்.



வயிறு, 'என்னைக் கொஞ்சம் கவனி’ என்று பசியை அனுப்பியது. ஒரு சிறுவனிடம் பேல்பூரி வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன்

.
அம்மா ஊரில் இல்லாத நாட்களில் அமுதாதான் சமைப்பாள். கிச்சனைப் போர்க்களமாக்கிவிடுவாள். அப்பா சத்தம் இல்லாமல் சாப்பிடுவார். நான்தான் அவளைச் சீண்டுவேன். ''ச்சீ... என்னடி சாப்பாடு இது... இதுக்குப் பேர் என்ன? இல்ல... இனிமேதான் வைக்கப்போறியா? உன் பரிசோதனைக்கு நான் என்ன எலியா?'' என்பேன். அமுதாவுக்கு முகம் எல்லாம் சிவந்துவிடும். புருவத்தை நெரித்துக் கண்களை உருட்டுவாள்.


''பாருடா... உனக்கு சமைக்கவே தெரியாத ஒருத்திதான் பொண்டாட்டியா வருவா. நீ அவளுக்கும் சேர்த்துச் சமைக்கிற கோலத்தை நான் பார்க்கத்தான் போறேன். அன்னைக்கு வெச்சுக்கறேன் உன்னை. என் சாபம்டா இது...'' என்பாள். அவள் பேச்சின் தாளத்துக்கு ஏற்ப அவள் சுருள் முடியும் ஆடும். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்கு அமுதா அவள் பெற்றோருடன் டெல்லிக்குச் சென்றுவிட்டாள். அப்புறம் அமுதாவின் கல்யாணச் செய்தியுடன்தான் அத்தை எங்கள் வீட்டுக்கு வந்தாள். மொட்டை மாடியில் அத்தையும் நானும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.


அத்தை திடுமென அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாள். ''ஏண்டா ஹரி, உனக்கு அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு தோணவே இல்லையா?'' என்றாள்.



நான் அதிர்ந்துபோய் ''ச்சீ... என்ன அத்தை, நான் ஒருநாளும் அமுதாவை அப்படி நினைச்சதே கிடையாது...'' என்று பதறினேன்.


''இதையேதான் அவளும் சொன்னா!'' என்றாள் அத்தை சாதாரணமாக.


பின் மிகவும் ஆர்வமாக, ''அத்தை, இப்போ அமுதாவுக்குப் பார்த்திருக்கிற வரன் யாரு? பையன் என்ன பண்றான்?'' என்றேன்.


''காலேஜ்ல கூட படிச்ச பையனாம். அமுதாவை ரொம்பப் பிடிக்குமாம். அவகிட்டகூடச் சொல்லாம நேரா எங்ககிட்ட வந்தான். எங்களுக்கும் பிடிச்சுஇருந்தது. சரின்னு சொல்லிட்டோம்...'' என்ற அத்தையிடம், ''கழுதை... இவளும் லவ் பண்ணியிருப்பா. இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க... நீங்களும் நம்பிட்டீங்களாக்கும்'' என்று சிரித்தேன்.


அத்தையும் சிரித்தபடி, ''அது சரி, உனக்கு எப்போ கல்யாணம்... நீயும் யாரையாவது..?'' என்று அடிக் கண்ணால் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள். அப்படியே அமுதாவின் வயதான பிம்பம்போல இருந்தது.


''ம்... லவ் பண்ற லிஸ்ட் பெருசு. அதுக்குக் குறைஞ்சது நான் அஞ்சு கல்யாணமாவது பண்ணணும்!'' என்றேன்.


''போடா வாலு...'' என்றபடி அத்தை அடிக்க வந்தாள்.


தாஜ்மகாலைச் சுற்றி உள்ள புல் தரையில் ஆங்காங்கே நாரைகள், சிறகு முளைத்த குட்டிக் குட்டி தாஜ்மகாலைப் போல அலைந்துகொண்டு இருந்தன. அப்பாவுக்கு ஏனோ அமுதா மேல் தனிப் பிரியம். எல்லாவற்றுக்கும் ''அமுதாவைப் பார்... அமுதாவைப் பார்'' என்று ஒப்பிட்டுப் பேசுவார்.


''நீ ஏண்டி இங்க இருக்கே. உன் வீட்டுல போய் இருக்க வேண்டியதுதான. நான் நிம்மதியா இருந்திருப்பேன். உன்னாலதான் இந்தாளு என்னைத் திட்டுறாரு'' என்று சண்டையிட்ட அன்றைக்கு, அமுதா பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி ரகளையே செய்துவிட்டாள். அப்பாவும் அம்மாவும் அவளைச் சமாதானம் செய்யப் பெரும்பாடுபட்டார்கள். பிற்பாடு நான் அவளிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம் தனிக் கதை.



அமுதாவின் திருமணத்துக்காக ஒரு வாரம் முன்பே நாங்கள் டெல்லிக்குச் சென்றுவிட்டோம். அந்த ஒரு வாரம் முழுவதும்தான் நான் அமுதாவை மிக அருகில் நன்றாக உணர்ந்தேன். அமுதா முற்றிலும் வேறு யாரோவைப் போலவே இருந்தாள். அவள் தோற்றத்தில், உடல் மொழியில் மெருகேறி இருந்தது. அமுதா எங்கள் வீட்டுப் பெண் என்ற பெருமிதமும் உரிமையும் தோன்றியது. திருமணத் துக்கு முதல் நாள் அமுதாவுக்குத் திடீரென அந்த ஆசை வந்தது.



''தாஜ்மகால் போலாமா?''


நான் பதில் சொல்லும் முன், ''ப்ளீஸ்... போலாம்டா. என் கடைசி ஆசை'' என்றாள்.


அத்தை, ''சரி... ஹரி கூடப் போ'' என்று சொன்னாள்.


''ம்ஹும்... நம்ம குடும்பத்துல எல்லாரும் வரணும்'' என்று சிறு குழந்தையைப் போல அடம்பிடித்தாள்.


அமுதா, பூப்போட்ட பச்சை நிற சல்வார் கமீஸில் தயாராகி வந்தாள். ''ஹரி... இந்த சல்வார் கமீஸ் எப்படி இருக்கு?'' என்று கேட்டவள், நான் பதில் சொல்வதற்கு முன், ''அவர் வாங்கித் தந்தது...'' என்றாள்.


அத்தை கேட்ட கேள்வி வட்டமடித்தது. 'ஏன் ஹரி, அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு உனக்குத் தோணவே இல்லையா?’


ஐயோ... இவள் என் அமுதாவாச்சே. இவளை எப்படி நான் யாருக்கோ தாரை வார்ப்பேன். அவளுக்கு இருட்டு என்றால் பயமாச்சே. வண்ணதாசனின் எழுத்துகள் என்றால் உயிரை விடுவாளே. குளிர்காலத்தில் மூச்சுவிடச் சிரமப்படுவாளே. புதியவனுக்கு இதெல்லாம் தெரியுமா? அவளை முழுவதுமாகப் பறிகொடுக்கப்போகிறோமோ என்ற பரிதவிப்பு என்னை அலைக்கழித்தது.


ஏன் இத்தனை நாட்களாக இப்படி முட்டா ளாக இருந்தேன். அமுதாவின் தோழிகளை வசீகரிக்கத் தோன்றிய அளவு ஏன் அமுதாவை வசீகரிக்கத் தோன்றவில்லை. அல்லது அவ்வாறு நடந்துகொண்டு அமுதாவை ஆழம் பார்த் தேனோ? இல்லை... இவள் என் அமுதாதானே எங்கே போய்விடப்போகிறாள் என்ற அலட்சியமும் உதாசீனமுமா? பைத்தியம் பிடித்துவிடும்போல இருந்தது.



காரில் அமுதா என் அருகில்தான் அமர்ந்து இருந்தாள். வழக்கத்துக்கு மாறாக இருவரும் வெகு அமைதியாக இருந்தோம். நடுவே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவே இல்லை. சண்டையிட்டுக்கொள்ளவும் இல்லை. அந்தப் பேரமைதி என்னைக் குலைத்தது. என் பால்யம் தொட்டு என்னுடன் வளர்ந்தவள், இன்று என் அருகில் இருந்தும் அந்நியமாகிப்போனாள். விநோதமான ஏதோ ஓர் உணர்வு தொண்டையை அடைத்தது. நடக்கக் கூடாத ஒன்று நடக்கப்போகிறது என்று உள்ளே மணி அடித்தது.



நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னர் ஒரு சிறிய மரக் கதவு திறந்தது. அது தாஜ்மகாலின் நுழைவாயில். ஒரு நிமிடம் இந்த வெண்மையான, பிரமாண்ட கட்டடத்தின் முன் நான் கரைந்துபோனேன். என் மூச்சு நின்றது. அறிவு ஸ்தம்பித்தது. தாஜ்மகால் பேரழகியாக மாறி என்னை மயக்கி, கோடானுகோடி உணர்வுகளைத் தூண்டினாள். என் பார்வை தாஜ்மகா லின் மேல் நிலைகுத்தி நிற்க, அமுதாவின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டேன். அவள் விரல்களோடு எனது விரல்களைக் கோத்துக் கொண்டேன். தொட்டுக்கொள்ளல் எங்களுக் குள் புதிதல்ல என்றாலும், இந்தத் தொடுதல் புதிது. அவள் விரல்களை விடுவித்துக்கொள்வாளோ என்ற பயத் தில் அவளுடைய கரங்களில் என் பிடியை மேலும் இறுக்கினேன். அமுதா என் முகத்தை உற்று நோக்கி னாள். நான் தாஜ்மகாலில் இருந்து கண்களை விலக்கவில்லை.



''ஹரி...'' என்றாள் அமுதா மிக பலவீனமாக. கடைசி மூச்சை வெளியிடும் ஆன்மாவின் குரலாக அது இருந்தது.


''ஷ்...'' என்றபடி அவள் விரல்களை மேலும் இறுகப் பற்றியபடி நடந்துகொண்டு இருந்தேன். நடைப் பூங்காவின் நடுவே இருந்த குளத்தில் தாஜ்மகாலின் பிம்பத்துடன் எங்களுடைய பிம்பமும் பிரதிபலித்தது.


''ஹரி... கல்யாணப் பொண்ணைப் பத்திரமா கூட்டி வா'' என்றவாறே எங்களிடம் இருந்து வெகு தூரமாகச் சென்றுகொண்டு இருந்தார்கள் குடும்பத்தினர்.


அமுதா, ''ஹரி...'' என்றாள் மறுபடியும், மிக சன்னமாக. அவளது குரல் யாரோ ஒருவரின் குரல்போல் ஒலித்தது. இப்போது அவளின் கரங்கள் எனது கரங்களை இறுகப் பற்றியிருந்தது.


தாஜ்மகாலின் வெளிப் பிராகாரத்தில் முதல் அடி எடுத்து உள் நுழைந்ததும் வீசிய காற்றில் அமுதாவின் தலை முடியில் ஒரு கற்றை முன் நெற்றியில் விழுந்தது. எப்போதும் மையிட்டதைப் போல இருக்கும் அமுதாவின் கண்கள் பிரகாசமாக விரிந்திருந்தன. அவை காதலாலும் கண்ணீராலும் பளபளத்தது. விரிந்த அவளுடைய இதழ்களின் நடுவே அவளது பற்கள் தெரிந்தன. நாசி சிவந்து துடித்துக்கொண்டு இருந்தது. அவளது காதோரத்தின் சுருள் முடிக் கற்றை ஒன்று கரிய நாகத்தைப் போலக் கன்னத்தில் வழிந்தோடியது. அதை ஒதுக்கிவிட வேண்டும் என என் கைகள் பரபரத்தன.


''அமுதா... நீ இத்தனை அழகாடி?'' என்றேன் உடைந்து தோற்றுப்போனவனாக... போரில் புறமுதுகுக் காட்டிய கோழையாக.


ரசாயனம் ஊற்றெடுத்தது. காமம் தலைக்கேறியது. முத்தமிடவோ, கட்டியணைக்கவோ இயலாமல் இரு தனித் தனி எரிமலைகளாக நாங்கள் கனன்றுகொண்டு இருந்தோம். தடயமேதும் இன்றி ஒரு களவு நிகழ்ந்தேறியது.



''ஹரி... என்னடா செய்ய நான்?'' என்றாள் அமுதா கண்ணீர் வழிய. அழுத்தப்பட்டு இருந்த மொத்த அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாக நாங்கள் மௌனித்து இருந்தோம். ஏதோ மந்திர விரலுக்குக் கட்டுப்பட்ட பொம்மைகளா னோம். நான் சுதாரித்து பற்றிய விரல்களை உதறி, திகைத்து விலகினேன். அமுதா என்னை ஊடுருவி வெறித்தாள் வெகுநேரம் வரை.



'குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல அவன் தனது பாவங்களில் இருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டா கும். சூரியனும் சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப்படுத்தவே இந்தக் கட்டடம் எழுப்பப்பட்டு உள்ளது!’ -  இவை ஷாஜஹானின் வாசகம் எனப் பின்னாளில் அறிந்தேன். 



ஒருவகையில் சரியான தருணத்தில் காதலை உணராத குற்றவாளி நான். அமுதாவுடன் நான் வாழ முடியாத வாழ்வு, என்னை மிகத் தூய்மையானவனாகவே இன்று வரை வைத்திருக்கிறது. அந்த நொடிப்பொழுது காதல் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. காதலிக்கக் காதலி தேவை இல்லையே. வெறும் காதல் மட்டுமே போதும். அவளுக்கும் அப்படித்தான் இருக்க முடியும்.


மீண்டும் ஒரு முறை பார்வையால் தாஜ்மகாலைப் பருகிவிட்டு வெளியேறத் தொடங்கினேன்.


அடுத்த முறை அமுதாவைப் பார்க்கும்போது கேட்க வேண்டும், அவள் மீண்டும் எப்போதாவது தாஜ்மகால் பார்க்க வந்தாளா என்று?


 thanx - vikatan

Thursday, December 06, 2012

குமுதம் இதழில் நிகழ்ந்த இலக்கியத்திருட்டு - அம்பலப்படுத்தினார் டாக்டர்

தமிழில் மட்டும் அல்ல அனைத்து மொழிகளிலும் சுடுதல் பிராசஸ் அப்பப்ப ஆங்காங்கே நடந்துட்டுதான் இருக்கு.குங்குமம் இதழில் அய்யம்பேட்டை வி விஜயலட்சுமி என்பவர் ( பெண் பெயரில் ஒரு ஃபேக் ஐ டி ) ஆனந்த விகடன்  இதழில் வந்த கவிதையை அப்படியே மகேஷ்-விஜய்  செய்து ஐ மீன் ஜெராக்ஸ் செய்து  மாட்டினார்.புகழ் பெற்ற இதழில் வந்த பிரபலமான படைப்பை திருடும்போது அவங்க என்ன தான் நினைப்பாங்கன்னு தெரியல . யாரும் கவனிக்க மாட்டாங்கன்னா? அல்லது மறந்துருவாங்கன்னா? 

ஏதாவது பிற மொழிப்படைப்பை மொழி பெயர்த்து பட்டி டிங்கரிங்க் பண்ணி அண்ணன் மிஷ்கின் மாதிரியோ, ஜெயம் ராஜா மாதிரியோ ஹோம் ஒர்க் பண்ணி இருந்திருக்கலாம். 


 அடுத்து தமிழ் நாடெங்கும் பிரபலமான திருச்சி அரவக்குறிச்சிப்பட்டி எம் அசோக் ராஜா  1980 களில் வந்த ஜோக்ஸ்களை 1995 டூ 2000 வரை ஜெராக்ஸ் எடுத்து பல பத்திரிக்கைகளில் மாட்டினார் . ஆனந்த விகடன் இதழில் இருந்து அவருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாகத்தகவல்.



இப்போது மாட்டி இருப்பவர் போளூர் சி ரகுபதி . இவர் குமுதம் , குங்குமம் இதழ்களில் பல ஒரு பக்க  சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பல வருடங்களாகவே இவர் பெயரை அடிக்கடி புக்ஸில் பார்த்திருக்கிறேன்.


பாண்டிச்சேரியில் கல்லூரி லெக்சரராகப்பணி ஆற்றும் புதுவை சந்திரகிரி என்பவரின் சிறுகதை தினமணிக்கதிர் இதழில்  வெளீயானதை ஒரு வருடம் கழித்து குமுதம் இதழில் ரகுபதி பிரசுரமாக்கி இருக்கிறார். 



ட்விட்டர் நண்பர் டாக்டர்



சிறுகதை கதிர் 16-31 ஜனவரி  94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய 
இந்த கதை
Views 102
419 days ago
சிறுகதை கதிர் 16-31 ஜனவரி 94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய இந்த கதை






 இன்று வெளியான தீபாவளி மலர் குமுதத்தில்
 போளூர் சி.ரகுபதி நூறு சதம்
 காப்பியடித்து அதே கதை இங்கே:
Views 116
419 days ago
 வெளியான தீபாவளி மலர் குமுதத்தில் போளூர் சி.ரகுபதி நூறு சதம் காப்பியடித்து அதே கதை இங்கே:

Wednesday, October 03, 2012

அக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன்-சிறுகதை

http://a5.mzstatic.com/us/r1000/081/Purple/5f/c6/32/mzl.avtdjaiz.jpg

மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்து த் தேய்ந்து அடங்கிப் போனபின் – ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.



நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருந்தனர்.



-வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.


“ஹேய்…. பஸ் இஸ் கம்மிங்!” என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.


வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த ‘டீஸல் அநாகரிகம்’ வந்து நிற்கிறது.


”பை… பை”
“ஸீ யூ!”
“சீரியோ!”
-கண்டக்டரின் விசில் சப்தம்.
அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.
பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.


மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது.


வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்‌ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் – அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.


அதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன.


பஸ்ஸைக் காணோம்!


அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி – அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.



எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.


…வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நறவென்று கேட்கிறது.


பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது.


“ஹேய்.. இட் இஸ்மை பஸ்!…” அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கறாள்.


“பை… பை….”




”டாடா!”
கும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் – இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. 


ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத… அவள் தாயாரின் புடவையில் கிழித்த – சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து ‘பிரஸ் பட்டன்’ வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த – அதிலும் ஒரு கல்லைக் காணோம் – கம்மல்… ‘ இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்’ என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்…


அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்…


“பஸ் வரலியே; மணி என்ன?” என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.


“ஸிக்ஸ் ஆகப் போறதுடீ” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின். “அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்” என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள்.



“ஓ எஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்” என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி…



“சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ” என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.
பஸ் வருகிறது… ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன். முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள்.
“பை.. பை!”



“தாங்க் யூ! என் பஸ்ஸும் வந்துடுத்து” என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸுக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களும் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான்.


அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் – எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. 



அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.




அவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட் வரை விழிகளை ஓட்டி ஓரு ஆச்சரியம் போலப் பார்க்கிறாள்.


அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கின்றான்.


“ப்ளிஸ் கெட் இன்… ஐ கேன் டிராப் யூ அட் யுவர் ப்ளேஸ்” என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.


அவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; “நோ தாங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழிச்சு.. மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..”


”ஓ! இட் இஸ் ஆல் ரைட்.. கெட் இன்” என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை…


அவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப்போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழகச் சிரிக்கிறான்.
இப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே..
“ம்… கெட் இன்.”
இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே…
அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது.



அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வெளிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது.



’ஸீட்டெல்லம் எவ்வளவு அகலமா இருக்கு! தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்’ என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளுக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள்.



“இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் – ஐயையோ – இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா?… காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்! பெரிசா இருக்கும்! அரண்மனை மாதிரி இருக்கும்… அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே?.. ஹை, இது என்ன நடுவிலே?… ரெண்டு ஸீட்டுக்கு மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! 



இது மேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் – இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு ‘ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹூம். அல்லி மொட்டு மாதிரி! இதை எரிய விட்டுப் பார்க்கலாமா? சீ! இவர் கோபித்துக் கொண்டார்னா!”



-”அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்” அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.


அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்து பார்க்கிறாள். பின்னர் ‘பவரைஇ வேஸ்ட் பண்ணப்படாது’ என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.


பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள்.



‘ஹ்ம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் – அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து – ‘டப்’ என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் – ‘அட! கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே’ – ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.



“தாங்ஸ்” – அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் – ‘அப்பா, என்ன வாசனை!’ – சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள்.



ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் “அம்மா” என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களும் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவ சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸும் ஒரு பக்கம் உருள்கிறது.



“ஸாரி” என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.



ஜன்னல் கண்ணாடியினூடே வெளியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வெளியே பார்க்கிறாள்.



தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது…!





“இதென்ன – கார் இந்தத் தெருவில் போகிறது?”


“ஓ! எங்க வீடு அங்கே இருக்கு” என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன்.
“இருக்கட்டுமே, யாரு இல்லைன்னா” என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.
”என்னடி இது வம்பாப் போச்சு” என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும் அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.
கார் போய்க்கொண்டே இருக்கிறது.
நகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது.



இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.


சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.


தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளும் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: “சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ.”



’நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ?.. இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே? என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது – இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது.. அழுதா இவர் கோபித்துக் கொண்டு ‘அசடே! இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே.. நாளைக்கு ஜூவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணனுமே! வேலை நிறைய இருக்கு.’



”இப்ப நாம எங்கே போறோம்” – அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.


“எங்கேயுமில்ல; சும்மா ஒரு டிரைவ்..”
“நேரம் ஆயிடுத்தே – வீட்டிலே அம்மா தேடுவா…”
“ஓ எஸ் திரும்பிடலாம்”
-கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைந்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில்,  தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.
காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.
திடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: “ஏன் கார் நின்னுடுத்து? பிரேக் டௌனா?”
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடி இடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.
அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.


அப்போது ரேடியோவிலிருந்து ஒரு ‘ட்ரம்ப்பட்’டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ ‘ட்ரம்’களின் தாளம்… அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி ’உனக்குப் பிடிக்கிறதா’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் ‘ஆம்’ என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.



ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு ‘காட்பரீஸ்’ சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருர்ந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக்கொண்டு ஹாய்யாக உட்காந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.




அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ‘ஒட்டு உசரமாய்’. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்ரன. 



பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.



“ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!” சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான்.



காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான்.



“எங்கே?” என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வெளியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. “எங்கே போறீங்க?”



“எங்கேயும் போகலே.. இங்கேதான் வரேன்” என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.



அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த – சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.



“என்ன அது?”


“சூயிங்கம்.”
“ஐயே, எனக்கு வேண்டாம்!”
”ட்ரை.. யூ வில் லைக் இட்.”
அவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.
“நோ!” – அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின் மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.
அவளுக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறாள்: “தாங்க் யூ!”
அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது.
அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வெளியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.
“டூ யூ லைக் திஸ் கார்?” – இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமாய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: “ஓ! இட் இஸ் நைஸ்.”



அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: “உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு – டூ யூ நோ தட்?” என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள்.



“ரியலி..?”
“ரியலி!”
அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. “டூ யூ லைக் மீ?” ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’



”ம்” விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.


வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது.


“ரொம்ப நல்லா இருக்கு இல்லே?” – இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.


“நல்லா இருக்கு.. ஆனா பயம்மா இருக்கே…”
“பயமா? எதுக்கு.. எதுக்குப் பயப்படணு?” அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: “எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு…”



“எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம்? “ என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.



“மே ஐ கிஸ் யூ?”


அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது.
திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டத்தைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ‘ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி… அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பது போல இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.



வெளியே…
வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!
ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.
“நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ! எங்க அம்மா தேடுவா…”
காரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷூஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது ‘சளக்’ என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் 



வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.
உடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள்.




முன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு ‘சூயிங்கம்’மை மென்று கொண்டிருக்கிறான்.



இந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு ‘ஹோ’ வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.



அவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளுக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் – அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட- அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே….



நரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெளியேறிப்  பிளிறுகிறதே…



அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். “ என்னை வீட்டிலே கொண்டு போய் விடப்போறீங்களா, இல்லையா?”
அவனது கை “டப்” என்று ரேடியோவை நிறுத்துகிறது.
“டோண்ட் ஷவ்ட் லைக் தட்!”  அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். “கத்தாதே!”



அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். “எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களுக்குக் கோடிப் புண்ணியம்” என்று வெளியே கூறினாலும் மனதிற்குள் “என் புத்தியைச் செருப்பால அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ! என்னென்னவோ ஆயிடுத்தே” என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.



“ப்ளீஸ்… டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்” என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்…



அந்த இருண்ட சாலையில் கண்களை கூசவைக்கும் ஒளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார்.


“சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ? இன்னும் கூட அழறாளே!” அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். “ஐ ஆம் ஸாரி.. உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவு செய்து மன்னித்துக் கொள்.”



…அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.



இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.
சந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களும் பூந்தோட்டங்களும் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுகலான தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.



‘இஞ்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்’ என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். “வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு…. ம்” அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்றுக் கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.



அந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தன் அருகே குள்ளமாய் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.



“ஆம். அடிமை! – உணர்ச்சிகளின் அடிமை!” என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: “ஐ ஆம் ஸாரி!”
அவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்… ஓ! அந்தப் பார்வை!
அவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன. “என்ன..” என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது.



“ஒண்ணுமில்லே” என்று கூறி அவள் நகர்கிறாள்.
அவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வெளிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.
கூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள்.



மழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: “என்னடி இது, அலங்கோலம்?”



அவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். “அம்மா!” என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்!



அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.



”என்னடி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு” தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரனம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: “ஏண்டி, ஏன் இப்படி அழறே? சொல்லு”
தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.
அந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். “மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் – அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்…. மனுஷாளே இல்லை… ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது.. நான் என்ன பண்ணுவேன்? அப்புறம் வந்து வந்து… ஐயோ! அம்மா…அவன் என்னெ….”



-அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.



“அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே..” என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.
அது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.



“என்னடி, என்ன விஷயம்?” என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி.



“ஒண்ணுமில்லை. இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு? தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிருப்பான்” என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா.
”சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ?” பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள்.



வாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக்குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து – அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா.



‘இவளை என்ன செய்யலாம்?… ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே?… தெய்வமே! நான் என்ன செய்வேன்?” என்று திரும்பிப் பார்த்தாள்.
அம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்றுக் கொண்டிருந்தன….
‘அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று.
-அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நெளிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது.
‘அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா? ஐயோ! மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா?… நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்?’
‘ம்… அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?’ அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.



நடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு “ஐயோ அம்மா! என்னைப் பார்க்காதேயேன்” என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்….



“அட கடவுளே! அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்” என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். ‘என் தலையெழுத்தே’ என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக் கொண்டு அரிக்கேன் விளக்குக்டன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.



‘இப்ப என்ன செய்யலாம்? அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா?….. அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ? அட தெய்வமே… வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா? அதுக்கு இவளைக் கொன்னுடலாமே? என்ன செய்யறது!’ என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது!



பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா.



குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.


கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி இருக்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: “உனக்கு அவனைத் தெரியுமோ?…


“ம்ஹூம்…”


“அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை!”


- பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள்.
’ம்…. வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ – என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பது போல் இன்னும் ஒரு கை சீயக்காயை ஆவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.
ஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். ‘அவர் மட்டும் இருந்தாரென்றால் – மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே?’



“இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா… மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள்.



 தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு.



 என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்… ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.



 உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி… நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே….? ஆமா – தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்… அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் 



– எல்லாம் மனசுதான்டி… மனசு சுத்தமா இருக்கணும்… ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா… வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..”



கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.


“அதென்ன வாயிலே ‘சவக் சவக்’ன்னு மெல்லறே?’


“சூயிங்கம்.”


“கருமத்தைத் துப்பு… சீ! துபுடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா” என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.
சுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை “கொழந்தே, ‘எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு’ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வய்சுக்கு அந்த பொண்ணை வெளியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே? என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே! ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி! இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன்?


 இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்: ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: “சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்…”



“பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆகியிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ” என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.



அந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல. அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள்.



அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ர பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கிறன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.



—————–


*(எழுதப்பட்ட காலம்: 1966)  


நன்றி: சுயதரிசனம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் – எட்டாம் பதிப்பு: ஜனவரி 1994 மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1)*


எஸ் ராம கிருஷ்ணன்,தமிழ் தொகுப்புகள்

Sunday, September 09, 2012

மீண்டும் அதே ஒலி! - யாழினி மாறன் - சிறுகதை

முடிவே முதலாக



மீண்டும் அதே ஒலி!



யாழினி மாறன்



ஊட்டிக் குளிரில் முடங்கிக் கிடந்த ஜெசிந்தா எழுந்து போய், ஜன்னலைத் திறந்து பார்த்தாள். ‘வாட் எ ஒண்டர்ஃபுல் க்ளைமேட்?’ காலைப் பனி மூடிய ஏரியின் அழகை முதன் முதலாக ரசித்த ஜெசிந்தாவின் பார்வை வீட்டு வாசலில் விழுந்ததும் திடுக்கிட்டது. காம்பவுண்ட் கேட் திறந்து கிடந்தது.



‘வினித் கூட இன்னும் எழுந்திருக்கலையே?’ யோசித்தபடியே பின்னால் திரும்பிப் பார்த்தாள். வினித் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.


டார்லிங் வீடு எப்படி இருக்கு?"


சூப்பர்ப்... பட், நம்ம ரெண்டு பேருக்கு இவ்வளவு பெரிய வீடா? எனக்குப் பயமாய் இருக்குங்க."



கொஞ்சலாகச் சொன்ன ஜெசிந்தாவை, ஹேய்... ஜெஸி... இது எனக்கு கம்பெனி கொடுத்த வீடு. நான் கூட இருக்கறப்ப உனக்கென்ன பயம் ..." என்றபடியே வினித் ஆசையாய் அணைக்க வந்த போதுதான், ‘சர்ரக்... சர்ரக்’ பக்கத்து ஹாலில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டு வினித்தைத் தள்ளி விட்டாள் ஜெஸி.



என்னங்க... வீட்டுல நம்மளைத் தவிர வேற யாரும் இல்ல. ஆனால் ஹால்ல யாரோ நடமாடுற சத்தம் கேட்குதே?"


ஜெஸி... புது ஊர்... புது இடம்... நடுராத்திரியில பூனை கீனை ஏதாவது போயிருக்கும்."



டீ எஸ்டேட்டில் மேனேஜராகப் பணிபுரியும் வினித்தை கல்யாணம் பண்ணிக்கொண்டு, ஊட்டிக்கு வந்த முதல் நாள் இரவு வினித் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொண்டாலும், அடுத்து வந்த நாட்களிலும் அந்தக் காலடி ஓசை கேட்டு ஜெசிந்தா பயந்து போனாள்.



இப்போ வீட்டு காம்பவுண்ட் கேட் திறந்து கிடக்கு. வினித்திடம் சொல்லி முதல்ல வேறு வீடு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான்..." வினித்தை எழுப்பி விஷயத்தைக் கூறினாள்.



அய்யோ... ஆரம்பிச்சிட்டியா? காத்துல கேட் தானா திறந்திருக்கும். இதுக்குப் போய் பயப்படலாமா டார்லிங்? முதல்ல உன்னைய ஒரு ஈ.என்.டி. டாக்டர்கிட்ட கூட்டிப் போயி உன் காதை செக்கப் பண்ணணும் ஜெஸி..." கிண்டலடித்தபடியே அணைக்க வந்த வினித்தை பொய்க் கோபத்தில் தள்ளி விட்டாள்.



அன்று முழுவதும் எஸ்டேட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு, இரவு உணவை உட்லண்ட்ஸில் முடித்துவிட்டு, வீடு திரும்பினார்கள். தூக்கம் வராமல் வினித் விழித்திருக்க, ஜெசிந்தா அசதியில் உடனே தூங்கிப் போனாள்.



இதோ பார் நிஷா. கல்யாணத்துக்கு முன்னால நாம லிவிங் டு கெதர் லைஃப்ல இருந்தோம். இப்போ எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி. என் வொய்ஃபுக்கு தெரியறதுக்குள்ள நம்ம ரிலேஷன்ஷிப்பை இதோட, இன்னியோட நிறுத்திப்போம். இனிமே இப்படி நடுராத்திரியில வீட்டுக்கு வராதே. அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. ப்ளீஸ்..."



வினித் யாரிடமோ பேசுவது, கனவில் கேட்பது போல் இருக்கவே, ஜெசிந்தா திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். அருகில் வினித் இல்லை. கூடவே அந்த ‘சர்ரக்... சர்ரக்...’ சத்தம்.



மீண்டும் அதே ஒலி. பல இரவுகள் கேட்டது. படுக்கையில் இருந்து திடுக்கென எழுந்த ஜெசிந்தாவுக்கு விக்கல் தூக்கிப் போட்டது. உள்ளங்கை ஈரத்தைத் துடைத்தபடி ஒருக்களித்த ஜன்னலை லேசாக விலக்கிப் பார்த்தாள்.



ஒரு ஜோடி செருப்புகள் வாசலைத் தாண்டிக் கொண்டிருந்தன.

நன்றி - கல்கி , புலவர் தருமி

மரப்பாச்சி -உமா மகேஸ்வரி - சிறுகதை

http://img.dinamalar.com/data/more_pic_gallery/nmalarnews_85447329283.jpg

பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார்





 எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை  அனுவிடம் நீட்டினார்.





சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு  நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு?  பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை.அப்பாவின் ஆர்வமோ  அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது.





அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’





அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.





மரச் செப்புகள், சிறு அடுப்பு, பானை, சட்டி, சருவம், குடம், கரண்டி என்று எதிர்காலச் சமையல் அறையின் மாதிரி அவள் சிறு கைகளில் பரவிச் சமைந்து




அவளைக் களைப்புறச் செய்தது. வட்டத் தண்டவாளத்தில் ஓடும் குட்டி ரயிலின் கூவல் சோகத்தின் நிழலை நெஞ்சுள் பூசுகிறது. கிளி, மைனா, புறா என்று பறவை பொம்மைகளின் மொழியோ சதா மேகங்களைத் துழாவிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் யுவதிகள் அவள் கற்பனையின் கனம் தாளமாட்டாத மெலிவோடு இருக்கிறார்கள்.





அம்மா சமையல், கழுவுதல், துவைத்தல், துடைத்தல் என எந்த நேரமும் வேலைகளோடிருக்கிறாள். பிறகு தங்கச்சிப் பாப்பாவின் குஞ்சுக் கை, கால்களுக்கு எண்ணெயிட்டு நீவி, காலில் குப்புறப் போட்டுக் குளிக்கவைக்கிறாள். துவட்டிச் சாம்பிராணிப் புகை காட்டி, நெஞ்சோடு அணைத்துச் சேலையால் மூடி மூலையில் உட்கார்ந்திருக்கிறாள் நெடுநேரம்.





‘அம்மா நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா?’





‘இன்னும் சின்னக் குழந்தையா நீ?’ நெஞ்சு வரை மேடேறிய கர்ப்ப வயிற்றோடு அம்மாவுக்குப் பேசினாலே மூச்சிரைக்கிறது. அவள் பகிர்ந்து தரும் அன்பின் போதாமை அனுவை அழுத்துகிறது.





அப்பா மெத்தையில் சாய்ந்து மடக்கி உயர்த்திய கால்களில் தங்கச்சிப் பாப்பாவைக் கிடத்தி தூரியாட்டுகிறார். கிலுகிலுப்பையை ஆட்டி பாப்பாவிற்கு விளையாட்டுக் காட்டுகிறார். ‘ங்கு, அக்கு’ என்று பாப்பாவோடு பேசுகிறார்.





‘அப்ப, இந்தக் கதையில அந்த ராஜா…’ என்று அனு எதையாவது கேட்டால்., ‘பெரிய மனுசிபோல் என்ன கேள்வி நை நைனு, சும்மா இரு’ என்று அதட்டுகிறார்.





‘நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்’ அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.





‘எனக்கு யாரிருக்கா? நான் தனி.’ அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் ‘ஆ, பொசுக்குதே’ என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.





மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின் இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்… அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.





வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ மார்புகளை அவளுக்குக் காட்டியது.





அவள் குளியல் அறைக் கதவுகளை மூடித் தன்னைத் தனிப்படுத்திக் கொள்வதில் அம்மாவிற்குக் ஆதங்கம். ‘நான் தலை தேய்து விடறேனே’ என்கிறாள்.



‘ஒண்ணும் வேணாம்’ என்று அனு விலகுகிறாள். அம்மா தனக்கும் அவளுக்கும் இடையே தள்ளத் தள்ள முளைத்தாடும் திரைகளை விலக்க முயன்று, தாண்டி முன்னேறுகையில் புதிது புதிதாய் திரைகள் பெருகக் கண்டு மிரண்டாள். நிரந்தரமான மெல்லிய திரைக்குப் பின்புறம் தெரியும் மகளின் வடிவக்கோடுகளை வருடத் தவித்தாள்.



எல்லோரும் தூங்கும் இரவுகளில் அனுவின் படுக்கையோரம் அம்மா உட்கார்ந்திருப்பாள். அனுவின் உறக்கத்தில் ஊடுருவி நெருடும் அம்மாவின் விழிப்பு. உள்ளங்கை அனுவின் உடல் மீது ஒற்றி ஒற்றி எதையோ எதையோ தேடும். ‘என்னம்மா?’ பாதி விழிப்பில் அனு கேட்டால் பதற்றமாகக் கையை இழுத்துக்கொண்டு, ‘ஒண்ணுமில்லை’ என முனகி, முதுகு காட்டிப் படுத்துக் கொள்வாள். அம்மாவின் முதுகிலிருந்து விழிகளும் வினாக்களும் தன் மீது பொழிவதை அனுவால் அறிய முடியும்.





பள்ளிக்குக் கிளம்பும் நேரம் இப்போதெல்லாம் மேலாடையைச் சரியாகப் போடுவது அம்மாதான், சாயங்காலம் அவள் வர பத்து நிமிடம் தாமதித்தால் , வாசலில் அம்மா பதறித் தவித்து நிற்கிறாள். எங்கே போனாலும் அம்மாவின் கண்களின் கதகதப்பும் மிருதும் அடைகாக்கிறது.





தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.





மரப்பாச்சியின் திறந்த உடல், கோடுகள் தாண்டி மிளிரும் விழிகள், இடுப்பும் மடங்கிய கையும் உருவாக்கும் இடைவெளி அனைத்தையும் உறிஞ்சத் திறந்த உதடுபோல் விரியும். அனுவின் உலகம் அதற்குள் வழுக்கி, நகர்ந்து, சுருங்கும்.





சிறுமிகள் அனுவை விளையாடக் கூப்பிட்டு உதடு பிதுக்கித் திரும்புகிறார்கள். கூடத்துத் தரையில் முடிவுற்று ஆடும் தொலைக் காட்சியின் ஒளி நெளிவுகள், இரவில் ஊறும் இருள், ஜன்னல் கதவுகள் காற்றில் அலைக்கழிய, அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள்.





மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது.



வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்றஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அதுமெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.;




துண்டு
துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில்
ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற
காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில்
முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து
, உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள். இன்னும் அம்மாவின் இதமான
சாயல்கள், அப்பாவின் உக்கிரக் கவர்ச்சியோடான அசைவுகள், அத்தனையும்
சிந்திய நிழற்துண்டங்கள், அபூர்வமான லயங்களில் குழைந்து கூடி உருவாகிறான்
ஒருவன்.





அவள் ஒருபோதும் கண்டிராத, ஆனால் எப்போதும் அவளுள்
அசைந்தபடியிருந்த அவன், அந்த ஊடுருவல் தனக்கு நேர்வதைத் தானேயற்று கவனம்
கொள்ள முடிவது என்ன அதிசயம்? தனக்கு மட்டுமேயாகவிருந்த அந்தரங்கத்தின்
திசைகளில் அவன் சுவாதீனம் கொள்வது குளிர்ந்த பரபரப்பாகப் பூக்கிறது. அந்த
இரவு, காலையின் அவசரத்திலும் உடைபடாது நீண்டது. அனு வேறெப்போதும் போலன்றி
தன் உடலை மிகவும் நேசித்தாள்.





கனவின் ரகசியத்தைப் பதுக்கிய மிதப்பில்
பகல்களிருந்தன. பள்ளி முடிந்ததும் தாவி வந்து அவளை அள்ளுகிற மரப்பாச்சி;
‘ஏன் லேட்?’ என்று ‘உம்’மென்றாகிற அதன் முகம்; நீள்கிற ரகசியக்
கொஞ்சல்கள்; அம்மா இல்லாத நேரம் இடும் முத்தங்கள்; அவள் படுக்கையில்
அவளுக்கு முன்பாகவே ஆக்கிரமித்திருக்கிற அவன். போர்வைக்குள் அனுவின்
கைப்பிடியில் இருக்கிற மரப்பாச்சியை அம்மா பிடுங்க முயற்சித்தால்,
தூக்கத்திலும் இறுகப் பற்றிக் கொள்கிறாள்.





அதன் விரிந்த கைகளுக்குள்
தன்னைப் பொதிந்தும், மார்பு முடிகளைச் சுருட்டி விளையாடியும் மீசை நுனியை
இழுத்துச் சிரித்தும் தோள்களில் நறுக்கென்று செல்லமாய்க் கிள்ளியும் அவள்
நேரங்கள் கிளுகிளுக்கும். தாபங்களின் படிகளில் சுழன்றிறங்குகிறாள் அவள்.
அகலவும் மனமின்றி அமிழவும் துணிவின்றி வேட்கையின் விளிம்பலைகளில் நுனிப்
பாதம் அளைகிறாள்.





கிருஸ்துமஸ் லீவ் சமயம் அத்தை வந்தபோது அனு கவுனை கால்களுக்கிடையில்
சேகரித்து, குனிந்து, கோல நடுச்சாணி உருண்டையில் பூசணிப் பூவைச்
செருகிக்கொண்டிருந்தாள். ‘அனு எப்படி வளர்ந்துட்டே!’ அத்தை
ஆச்சரியத்திற்குள் அவளை அள்ளிக் கொண்டாள். உணவு மேஜையில் விசேஷமான
பண்டங்கள், பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அம்மா. அத்தை அனுவை
லீவிற்குத் தன்னோடு அனுப்பும்படி கேட்டதும் அம்மாவின் முகத்தில் திகிற்
புள்ளிகள் இறைபட்டன. ‘


http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/TMI5sD3DFSI/AAAAAAAAGzQ/RjfkeIqnGWk/umamaheswari_thumb4.jpg

அய்யோ மதினி, இவளை நாங்க கடிச்சா முழுங்கிடுவோம்?
அப்படியே இவள் ஆளாகிற முகூர்த்தம் எங்க வீட்டில் நேர்ந்தால் என்ன
குத்தம்? எனக்கும் பிள்ளையா குட்டியா? ஒரு தரம் என்னோட வரட்டுமே’ அத்தை
அவளைத் தன்னருகில் வாஞ்சையாக இழுத்துக் கொண்டாள்.





ஒரு உறுப்பையே தன்னிலிருந்து வெட்டியெடுப்பது போன்ற அம்மாவின் வேதனை
கண்டு அனு மருண்டாள். துணிகளை அடுக்கிய பெட்டியில் மரப்பாச்சியை வைக்கப்
போனபோது அத்தை, ‘அங்கே நிறைய பொம்மை இருக்கு’ என்று பிடுங்கிப்
போட்டதுதான் அனுவுக்கு வருத்தம்.

அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின்
உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.

அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின்
வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம்
இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். ‘எந்த கிளாஸ் நீ?
எய்த்தா, நைன்த்தா?’ என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல்
கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது.





‘ எப்படி
மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா
நீ?’ என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின்
அனலில் அது ஊர்ந்தது. ‘சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?’ கேட்டு தொட்டுத்
தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது
நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு
ஓடினாள் அனு.





அத்தை பிரியமாயிருந்தாள். திகட்டத் திகட்ட கருப்பட்டி ஆப்பாம், ரவை
பணியாரம், சீனிப்பாலில் ஊறிய சிறு உருண்டையான உளுந்து வடைகள் என்று
கேட்டுக்கேட்டு ஊட்டாத குறைதான்.



‘உன் அடர்த்தியான சுருள்முடியில் இன்னிக்கு ஆயிரங்கால் சடை பின்னலாமா?
பின்னி முடித்து, கொல்லையில் பூத்த பிச்சி மொட்டுகளை ஊசியில் கோர்த்து
வாங்கி , ஜடையில் தைத்து, பெரிய கண்ணாடி முன் திருப்பி நிறுத்தி, சின்னக்
கண்ணாடியைக் கையில் தந்தாள். ‘நல்லாயிருக்கா பார் அனு!’



அம்மா ஒளிந்துவைத்த அன்பின் பக்கங்கள் அத்தையிடம் திறந்து புரண்டன. அனு
எந்நேரமும் அத்தையை ஒட்டி, இரவில் சுவர் மூலையில் ஒண்டிப் படுத்து,
அத்தையின் சேலை நுனியைப் பார்த்தபடியே தூங்க முனைவாள். அவ்வளவு
தூரத்தையும் ஒரு விரல் சொடுக்கில் அழித்துவிட்டு ,
மரப்பாச்சிக்குள்ளிருந்து கிளம்பி வருகிறான் அவன்.





அத்தைக்கும்
அனுவிற்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளியில் தன்னை லாவகமாகச் செலுத்திப்
பொருத்திப் படுக்கிறான். உறக்கத்தோடு அனுவின் தசைகளிலும் நரம்புகளிலும்
கிளர்ந்து கலக்கிறான். அவனும் அவளும் இடையறாத மயக்கத்தில் இருக்கையில்
ஒரு அன்னியப் பார்வையின் திடீர் நுழைவில் அத்தனையும் அறுபடுகிறது. அனு
உலுக்கி விழிக்கிறாள். மிகவும் அவசரமாக கழிப்பறைக்கு போகவேண்டும்
போலிருக்கிறது. கொல்லைக் கதவு திறந்து தென்னைகள், பவழமல்லி, மருதாணி
எல்லாம் கடந்து, இந்த இருட்டில் குளிரில்…அய்யோ, பயமா இருக்கே. அத்தையை
எழுப்பலாமா? ச்சே, அத்தை பாவம். அலுத்துக் களைத்து அயர்ந்த தூக்கம். ஏறி
இறங்கும் மூச்சில் மூக்குத்தி மினுக்கும். காதோர முடிப் பிசிறில்,
கன்னத்து வியர்வைத் துளிர்ப்பில் அத்தைக்குள் புதைந்த குழந்தை வெளித்
தெரிகிறது. எப்படியாவது தூங்கிவிடலாம். இல்லை, தாங்க முடியவில்லை.




அடிவயிற்றில் முட்டும் சிறுநீர் குத்தலெடுக்கிறது. மெல்ல எழுந்து
அத்தைக்கும் முழிப்புக் காட்டாமல் , கொலுசு இரையாமல் பூனைபோல நடந்து,
சாப்பாட்டு மேஜையில் இடித்துச் சமாளித்து, இருட்டில் தடவி சுவிட்சைப்
போடுகிறாள். கதவில் சாவியைத் திருகும் சிற்றொலி நிசப்தத்தின்
மென்மைக்குள் பெரிதாக வெடிக்கிறது. அத்தை புரள்வது கேட்கிறது. ‘ரொம்ப
இருட்டாயிருக்குமோ?’ பயந்து, நடுங்கி, அடித்தாழை ஓசையிட நீக்கி, கதவைத்
திறந்தால் பளீரென்று நட்சத்திரங்களின் கலகலத்த சிரிப்பு. மின்விளக்கின்
மஞ்சளௌளி தரையில் சிறுசிறு நாகங்களாக நெளிகிறது; மிக
அழகாக,அச்சமேற்படுத்தாததாக. தன் பயங்களை நினைத்து இப்போது சிரிப்பு
வருகிறது. காற்றில் அலையும் பாவாடை. பிச்சிப்பூ மணம். செடிகளின் பச்சை
வாசனை. மருதாணிப் பூக்களின் சுகந்த போதை, தாழ்ந்தாடுகிற நட்சத்திரச்
சரங்கள். நிலவின் மழலையொளி. கழிவறைக் கதவின் கிறீச்சிடல்கூட இனிமையாக.
சிறுநீர் பிரிந்ததும் உடலின் லகுத்தன்மை. இந்த மருதாணிப் புதர்கிட்டே
உட்கார ஆசையாயிருக்கே.




அய்யோ அத்தை தேடுவாங்க. திரும்பி வருகையில் அனு
தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள். உடல் மீது நூறு விழிகள் மொய்த்து
உறுத்தின. அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள்
அவளை இருக்கின, காலையில் உணர்ந்த அதே சுடு மூச்சு. ‘ச்சீ, இல்லை; என்னை
பேய் பிடிச்சிடிச்சோ?’ கரிய, நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம்
நெருக்கப்படுகிறது. கொட்டும் முத்தங்கள் – கன்னத்தில், உதட்டில்,
கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற
விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள்
கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள்.





வார்த்தைகளற்ற அந்த அலறலில்
அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின்
உடல் சாய்க்கப்பட்ட போது அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள்.
கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின் உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக
விலகினார்.





அத்தையின் உலுக்கல்; ‘அனு, என்ன அனு!’ அவளிடம் பேச்சு
மூச்சில்லை. ‘பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.’ மாமாவின்
சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில்
கிடத்துகிறாள்.

அரை மயக்க அலைகளில் புரளும் பிரக்ஞை. ‘இதுவா? இதுவா அது? இப்படியா,
இல்லை, முகமும் முகமும் பக்கத்தில் வரும்; உடனே ஒரு பூவும் பூவும்
நெருங்கி ஆடும்; வானில் புதிய பறவைகள் சிறகடிக்கும். நீலமேகமும் பசும்
புல்வெளியும் ஒட்டி உறவாடும்; திசைகளெங்கும் குழலிசை இனிமையாகப்
பெருகும்; அப்படித்தானே அந்த பாட்டில் வரும்? ஓஹோ, அப்படியிருந்தால் இது
பிடித்திருக்குமா? நீ விரும்புவது அணுகுமுறையின் மாறுதலையா? இல்லை. ச்சே,
இந்த மாமாவா? காதோர நரை. வாயில் சிகரெட் நெடி. தளர்ந்த தோள்களின் வலுவான
இறுக்கத்தில் இருந்த கிழட்டுக் காமத்தின் புகைச்சல். நெஞ்சைக் கமறுகிறது.
உடல் காந்துகிறது. மார்பு வலியில் எரிகிறது. கண்கள் தீய்கின்றன.





‘அய்யோ அனு, மேல் சுடுதே. இந்த மாத்திரையாவது போட்டுக்கோ’ அத்தை வாயைப்
புடவையால் போர்த்திக்கொண்டு விம்முகிறாள். மாமாவின் அறைக்கு ஓடி என்னவோ
கோபமாய்க் கத்துகிறாள்.





‘நான் இனி நானாயிருக்க முடியாதா? மாமாவின் தொடல் என் அப்பாவுடையது
போலில்லை. அப்பா என்னைத் தொட்டே ஆயிரம் வருடம் இருக்குமே! என் முதல் ஆண்
இவனா! என் மேல் மோதி நசுக்கிய உடலால் என்னவெல்லாம் அழிந்தது? பலவந்தப்
பிழம்புகளில் கருகி உதிர்ந்த பிம்பங்கள் இனி மீளுமா? மாமா என்னிலிருந்து
கசக்கி எறிந்தது எதை? எனக்கு என்னவோ ஆயிடிச்சே. நான் இழந்தது எதை?
தூக்கம் ஒரு நனைந்த சாக்குப்போல் இமைமீது விழுந்தது.







காலையில் தேய்ந்த ஒலிகள். அடுப்படியில் லைட்டரை அழுத்தும் சத்தம், பால்
குக்கரின் விசில், டம்ளரில் ஆற்றும் ஓசை. விழித்தபடி படுத்திருந்த
அனுவிடம், ‘இந்தா காப்பியைக் குடி அனு’ என்கிறாள் அத்தை.





‘வேணாம், எனக்கு இப்பவே அம்மாகிட்டே போகணும்’

அத்தையின் கெஞ்சல்களை அனு பொருட்படுத்தவில்லை. மாமா பேப்பரை
மடித்துவிட்டு பக்கத்தில் வருகிறார். மறைக்க முடியாத குற்ற உணர்வு அவர்
முகத்தில் படலமிட்டிருக்கிறது அசிங்கமாக.





‘உனக்கு மாமா ஒரு புது ஃப்ராக் வாங்கித் தரட்டுமா?’. தோளில் பட்ட கையை
அனு உடனடியாக உதறித் தள்ளுகிறாள். மாமா அத்தையின் முறைப்பில் நகர்ந்து
விலகுகிறார்.





பயணம் எவ்வளவு நீண்டதாக நகர்கிறது? எத்தனை மெதுவாகச் சுழலும் சக்கரங்கள்?
அத்தையின் மௌனம் நெஞ்சில் ஒற்றுவதாகப் படிகிறது. அத்தை அம்மாவின் நைந்த
பிரதியெனத் தோற்றம் கொள்கிறாள். ‘அம்மா, அம்மா! நான் உன்னிடம் என்ன
சொல்வேன்? என்னால் இதை எப்படிச் சொல்ல முடியும்?’

‘என்னாச்சு? உடனே திரும்பிட்டீங்க? அம்மா இடுப்புக் குழந்தையோடு ஓடி
வருகிறாள். அனுவைப் பாய்ந்து தழுவும் அவள் பார்வை. அத்தை
வரவழைத்துக்கொண்ட புன்னகையோடும் கலங்கி வருகிற கண்ணோடும்.

‘ஒரு நாள் உங்களைப் பிரிஞ்சதுங்கே உங்க பொண்ணுக்குக்க் காய்ச்சல்
வந்துடுச்சு’ எனவும் அம்மாவின் விழிகள் நம்பாமல் அனு மீது நகர்ந்து
தடவுகின்றன – கை தவறி விழுந்தும் உடையாமல் இருக்கிற பீங்கான் சாமானைப்
பதறி எடுத்துக் கீறவில்லையே என்று சரி பார்ப்பதுபோல.

அனு ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடுகிறாள். வீட்டின் நாற்புறமும் தேங்கிய
துயரம். அமானுஷ்யமான அமைதி அங்கே பொருக்குக் கட்டியுள்ளது. ‘என்
மரப்பாச்சி எங்கே?’ அனு தேடுகிறாள். கூடத்தில் தொலைகாட்சிப் பெட்டிமீது,
அடுக்களையில் பொம்மைகளிடையே, பாப்பாவின் தொட்டிலில், எங்கும் அது இல்லை.
‘அது கீறி உடைந்திருக்கும். நூறு துண்டாக நொறுங்கிப் போயிருக்கும். அம்மா
அதைப் பெருக்கி வாரியள்ளித் தூர எறிந்திருப்பாள். அனுவின் கண்களில் நீர்
கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில்
நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ,
எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத்
தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி
ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது
மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது.
மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் மார்புகளை அனு வெறுப்போடு
பார்த்தாள்.


http://abedheen.files.wordpress.com/2010/10/marappachchi_cover.jpg