Showing posts with label GNANI. Show all posts
Showing posts with label GNANI. Show all posts

Monday, January 21, 2013

கடல்-துளசி-15 - லிப் கிஸ்-ஏன்? - ஓ பக்கங்கள் ஞாநி ???? VS மணிரத்னம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAHmoyVck_8G2iLYlVZOE0N2bFoixi3uf5QK0WZYqnKhLBRVQ_YbnPqHy7DpT55JrRvNA7NxeJogylp0O66qcYCIZK6Xscwt-eFQvWGWi03Io8kBNFvSOszoLqkxiv2Z1g_yoiHSTTbg5w/s1600/Kadal+Unseen+Movie+Posters+(4).jpg

ஒரு முத்தம்; பல கேள்விகள்!

ஞாநி

‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல் முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.

பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணிபுரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்தச் சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ஃபேஸ்புக், சமூக இணையதளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.


 http://tamilspicy.com/wp-content/plugins/wp-o-matic/cache/acabe15c6d_kadal-nenjukule-picturized.jpg



நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் :

15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா?

படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான் உதவி செய்வது, மெழுகுவர்த்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா?

பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களா?

இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா?

தில்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த ஃபேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன்?"


இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் ஃபேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை. என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.

இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 http://www.cutmirchi.com/upimages/1358430697_0.jpg




உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18 தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்க வைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவருடைய அம்மா ராதாவுடையதுதான்.


இப்படி வளர் இளம்பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்க வைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்பட வேண்டும்.


அது மட்டுமல்ல, தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட தில்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும் பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர். ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்" என்று செய்தி அனுப்பினேன்.எனக்கும் செய்தி வந்தது. இனி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்" என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.


சினிமா, சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர் களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்குப் பதிலாக பலப்படுத்துகின்றன.


தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண் பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவச் சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர்பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சர்யமானதுதான்.


இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.


http://newindianexpress.com/incoming/article1423224.ece/ALTERNATES/w460/Thulasi.jpg

அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.


என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.

குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.


எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யுஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலைநாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.


பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமென்று தனக்குத் தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குனரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவர்த்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.


காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்குச் சொல்லித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாக வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.



thanx - kalki , pulavar tharumi

http://moviegalleri.net/wp-content/gallery/thulasi-nair-at-kadali-audio/actress_thulasi_nair_hot_photos_kadali_audio_launch_0407aa0.jpg

Thursday, January 10, 2013

ஒரு சி எம் அலர்ட்டா இருக்கனும், அசால்டா இருக்கக்கூடாது - ஓ பக்கங்கள் ஞாநி கார சாரக்கட்டுரை



பக்கங்கள்

ஆர் யூ தேர் மேடம் சி.எம்.?

ஞாநி

இதுவரையில் நான் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதில்லை. காரணம் வாழ்த்துச் சொன்னால், வாராவாரம் இந்தச் சமூகத்தின் மோசமான நிலைமைகளைப் பற்றி எழுதிவிட்டு, இதில் வாழும் எங்களுக்கு என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது என்று சிலர் கோபித்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்தான். இதையெல்லாம் மீறி வாழ உங்களுக்கும் எனக்கும் மன வலிமை வேண்டும் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து போயிருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, திருப்பதி கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு, சாலை விபத்துகள் எத்தனை என்ற புள்ளி விவரங்கள் வெளிவந்து இருக்கலாம்.
டிசம்பர் 30 அன்று திடீரென்று வந்த உத்வேகத்தில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு புரட்சி செய்ய முடியுமா என்று பார்த்தேன். எகிப்திலே செய்தார்கள், தில்லியிலே செய்தார்கள் என்றெல்லாம் படிக்கிறோமே. சென்னையில் செய்தால் நடக்காதா என்ன என்று பார்க்கத் தோன்றியது.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி தமிழகத்தில் உடனடியாக பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் விதத்தில் டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளை மூடும் படி முதலமைச்சரைக் கோருகிறேன். தாங்களும் கோர விரும்புவோர் கீழ்வரும் மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பலாம். [email protected]என்று ஓர் வேண்டுகோளை ஃபேஸ்புக் நேயர்களுக்கு எழுதினேன். நான் எதிர்பார்த்த மாதிரியெல்லாம் உடனே ஆயிரக்கணக்கானோர் அனுப்பிவிடவில்லை. என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அனுப்பினோர் அனுப்பாதோர் என்று பலர் பதில் கமெண்ட் போட்டார்கள்.
அதில் கிடைத்த முக்கியமான செய்தி -இந்த சி.எம். செல் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதுதான். சி.எம்.செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதை யாரும் பார்க்கப் போவதில்லை என்றே பொது மக்கள் நம்புகிறார்கள். யாராவது ஒரு அதிகாரி பார்த்தாலும் அதற்கு அப்புறம் அவரும் எதுவும் செய்யப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள்.
ஆற்காடு சாலையில் இருக்கும் மெகா குப்பைத் தொட்டியை அகற்றச் சொல்லி இதுவரை ஐயாயிரம் பேர் சி.எம். செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டோம். சாலை நடுவே அமர்ந்து போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஒரு சாதாரண குப்பைக்கிடங்கு.... பல ஆயிரம் கோடி பணம் வர்ற கடைகளையா மூடப் போறாங்க?" என்று கேட்கிறார் ஒருவர். ஐந்தாயிரம் பேர் மின்னஞ்சல் அனுப்பியும் சி.எம். செல் கவனிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
விபத்தாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு கொலை என்று அவரது குடும்பத்தாரால் இன்றும் நம்பப்படும் விஷயம் சி.எம்.செல்லுக்குத்தான் முதலில் அனுப்பப்பட்டது. அதிகாரிகளால் அது கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி பல நாட்கள் கடந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை. அந்த கேஸ் மூடப்பட்டது. ஒருவருடம் முன்னால் அவர் மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, அது முடிந்துபோன விஷயம் என புகாரையே எடுக்கவில்லை. நான் கமிஷனரிடம் நேரில் அழைத்துச் சென்று புகாரைப் பதிவு செய்தேன். ஒருவருடம் தாண்டியும் இன்னமும் விசாரணை நிலைமையிலேயே உள்ளது," என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர்.

சி.எம்.செல் செய்யும் அதிகபட்ச வேலை அங்கு வரும் மனுவை உரிய துறைக்கு அனுப்புவதுதான் போலிருக்கிறது. அதையும் எப்போதாவது ரேண்டம் அடிப்படையில் செய்வார்கள் என்று நினைக்கிறேன். சூளைமேடு மாநகராட்சிப் பள்ளியில் புகைப்படக் கல்வி தி.மு. ஆட்சியில் நிறுத்தப் பட்டதை மறுபடியும் தொடங்கும்படி கோரி ஒரு வருடம் முன்பு நான் சி.எம்.செல்லுக்கு அனுப்பிய மனுவை மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆம். நிறுத்திவிட்டோம் என்று ஒரு பதிலை மாநகராட்சி எனக்கு அனுப்பியது. அதுதான் எனக்கே தெரியுமே!
சென்னை மேயர் சைதை துரைசாமியின் ஃபேஸ்புக் தளம் பற்றி ஆஹா ஓஹோ என்றார்கள். இப்போது பார்த்தால் அந்தத் தளத்தில் எதுவும் உருப்படியாக நடப்பதாகவே தெரியவில்லை. ஒரு கிறித்துவ பிரசாரகர் தம் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மாநகராட்சி, மின்வாரியம், குடிநீர் வாரியம் எல்லாம் இணையம் மூலம் நம்மிடம் வசூல் செய்யும் தளங்களைச் சிறப்பாக நடத்துகின்றன. ஆனால் புகார் தெரிவிப்பதற்கானவை எதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை.
சரி நேரில் போய் முதலமைச்சர் அலுவலகத்திலேயே மனு கொடுத்தால் கவனிப்பார்கள் என்று நம்பினால் அதுவும் மூட நம்பிக்கைதான். சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு அணு உலை பிரச்னை தொடர்பாக முதல்வரைச் சந்திக்க விரும்புவதாகவும் நேரம் ஒதுக்கும் படியும் கோரி பிப்ரவரி 2012ல் நானே நேரில் சென்று முதல்வரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தேன். ரொம்ப வேலைப் பளு. நேரம் ஒதுக்குவதற்கு இல்லைஎன்று கூட இன்றுவரை அதற்குப் பதில் கிடையாது. சமூகப் பிரச்னையைப் பற்றி தம்மிடம் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வந்து பத்து நிமிடம் பேச நேரம் ஒதுக்க முடியாதவர், தமக்கு தில்லி கூட்டத்தில் போதிய நேரம் ஒதுக்காததைக் கண்டித்து வெளி நடப்புச் செய்கிறார்! என்ன கொடுமை இது!
சி.எம்.செல் வேஸ்ட். சி.எம். ஆபீசில் மனு கொடுத்ததும் வேஸ்ட். நேரில் தெருவில் இறங்கிப் போராடினால்தான் ஒருவேளை கவனிப்பார்களா என்றால்...? இதோ இன்னொருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அனுபவம்: சில நாட்களுக்கு முன்பு மோகன் ப்ரூவரீஸ் என்ற மதுபான உற்பத்தி ஆலையில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த ஆலை ஆற்காடு சாலையில்தான் இருக்கின்றது. ஊருக்குள் ஒரு மதுபான உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதை அகற்றச் சொல்லி பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சம்பவம் நடந்த அன்று இரவு பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வீதியில்தான் உறங்கினார்கள். ஆலையின் சிலிண்டர் இருக்கும் இடம் வெடித்து இருந்தால் வளசரவாக்கம், போரூர், மேற்கு கே.கே நகர் வரை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக ஆற்காடு சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் செய்தோம். எங்களை போலீஸ் வைத்து அடித்தார்கள். குழந்தைகள், பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் இன்னமும் ஒரு மதுபான ஆலை சென்னையின் மையப்பகுதிக்குள் இயங்கி வருகின்றது."
தெருவில் இறங்கிப் போராடினால் போலீஸை வைத்து அடி உதை மிரட்டல்... சுதந்திர இந்தியாவின் 65 வருட வரலாற்றிலேயே இருந்திராத மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் இடிந்த கரை மக்களை, சோந்த ஊரிலேயே சிறை வைத்திருக்கிறது தமிழக அரசு. கூடங்குளத்துக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து யார் போனாலும் தடுத்துத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூடங்குளம் செல்ல யாரிடமேனும் முன் அனுமதி பெற வேண்டுமா என்று மனு போட வேண்டிய நிலைமை. சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதும் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று பதில் தருகிறது போலீஸ். ஆனால் வருடம் முழுவதும் அமைதியாகப் போராட்டம் நடக்கும் இடத்தில் வருடம் முழுவதும் 144 தடை உத்தரவைப் போட்டு வருகிறது அரசு. அதை மீறித்தான் உலகப்புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் விநாயக் சென் முதல் யாரானாலும் இடிந்தகரைக்குச் செல்ல முடியும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். இதுவரை அவரோ அவருடைய எந்த ஓர் அமைச்சரோ அந்த அமைதியான மக்களைச் சந்திக்கக்கூட முன்வரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த புதிதில் வாராவாரம் பத்திரிகையாளரைச் சந்திப்பேன் என்று சொல்லி, சொன்ன வாக்குறுதியை சில வாரங்களிலேயே மீறிவிட்ட முதலமைச்சரை இப்போது யார் சந்திக்க முடியும்; யாரெல்லாம் சந்திக்க முடியாது என்றே தெரியவில்லை. நான் விரும்பினால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை எளிதில் சந்தித்துவிடலாம் போலிருக்கிறது. ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம் என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவரென்றாலும் கலைஞர் கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும்கூட ஒருவர் தம் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது. இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. மின்வெட்டு முதல், சென்னை குப்பை நகரமாக இருப்பதுவரை, திருப்பூர் சாயப்பட்டறை சிக்கல் முதல், வருடக்கணக்கில் நூலகங்களுக்குப் புத்தகமே வாங்காதது வரை எதுவானாலும் முதலமைச்சர் கவனத்துக்குப் பிரச்னையை எடுத்துச் செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
தம் குடிமக்களுடன் எந்தத் தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என்ன நிர்வாகம் செய்ய முடியும்? அமைச்சர்கள் முதல் ..எஸ். அதிகாரிகள்வரை முதல் வரை அணுகிச் சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தம் மக்களின் நிலை பற்றி நிர்வாகத்தின் குறைகள் பற்றி யார் அவருக்குத் தகவல் சொல்வார்கள்? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதலமைச்சர் நமக்கு எதற்கு என்பது தான் என் கேள்வி. முதுகில் கொட்டும் குளவியை அடிப்பதற்காக, கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொண்டது போன்ற நிலையில் இருக்கிறோம்.
இப்படித் தம்மைத்தாமே ஓர் இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வாழ்வது அவருக்குச் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் கூட அவருக்கு இருக்கலாம். அவற்றையாவது நமக்குச் சொல்ல வேண்டும். தனி நபராக இருந்தால் அவர் தனிமைச் சிறையில் தம்மைத்தாமே பூட்டிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு பொருட்டுமில்லை. ஒரு முதலமைச்சர் இப்படி இருப்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தம் இல்லாதது. தெருப் போராட்டம் முதல் மின்னஞ்சல் வரை எதுவும் அவர் கவனத்துக்குச் செல்ல முடியாது என்றால், எப்படி ஆட்சி நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் தேவை.
கடந்த ஆண்டில் பலமுறை முதல்வருக்குப் பகிரங்கக் கடிதங்களையும் பல தமிழகப் பிரச்னைகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அவை முதல்வர் கண்ணுக்குப் போயிற்றா என்று தெரியாது. இந்தப் புத்தாண்டில் தார்மிக பலம் படைத்த எந்த அரசு அதிகாரியாவது இந்தக் கட்டுரையை முதலமைச்சருக்குக் காட்டிப் பதில் பெற்றுத் தந்தால் அதையே நமக்கான புத்தாண்டுப் பரிசாகக் கருதுவேன்.

thanx - kalki