Showing posts with label GNAANI. Show all posts
Showing posts with label GNAANI. Show all posts

Wednesday, April 11, 2012

ஓ பக்கங்கள் ஞானி கொதிப்பு, மக்களை மடையர்களாக்கும் ஜெ ,சசி, ராணுவ அமைச்சர்

பளிச் 1 :


சசிகலாவை ஜெயலலிதா திரும்ப சேர்த்துகிட்டது பத்தி அரசியல்ல இருக்கற பெரிய தலைங்க யாரும் வாயைத் திறக்கல. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னுதான் எல்லாரும் நினைக்கறப்பல தெரியுது. ஆனா எனக்கு இந்த மேட்டர், தமிழ்நாட்டு மக்களையெல்லாம் இந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் சரியான கேணப் பசங்கன்னு நிஜமாவே நம்பறாங்களோன்னு தோணுது. இல்லாட்டி கட்சியிலயும் ஆட்சியிலயும் ஜெயலலிதா பேரைக் கெடுக்கற வேலைங்களைத் தன் சொந்தக்காரங்க செஞ்சது 24 வருஷமா தனக்குத் தெரியாதுன்னு சசி சொல்றதை யாராவது நம்புவாங்களா? போயஸ் வூட்டை விட்டு வெளியில வந்ததும்தான் தனக்கு எல்லாம் தெரியவந்துச்சுன்னு சசி சொல்றதை ஏத்துக்கறேன்னு ஜெ சொல்றதை நாம ஏத்துக்கிட்டா, நாம எல்லாரும் கேணைங்கன்னுதானே அர்த்தம்?


சி.பி - பெங்களூர் கோர்ட்டில் கேஸ் நடப்பதால் அந்த தீர்ப்பு வருவதற்குள் தன் மேல் எந்த தவறும் இல்லை என நிரூபிக்க ஜெ நடத்திய நாடகம் தான் அது.. கதை வசனம் , டைரக்‌ஷன் ஜெ.. நடிப்பு சசிகலா.. ஏமாளி ஆடியன்ஸ் மக்கள்




இதெல்லாம் ஜெ, சசி சொந்த சமாச்சாரம்னு வுடமுடியாது. 24 வருஷமா ஏன் சசியைக் கூட வெச்சிகிட்டு அவங்க சொந்தக்காரங்கள்லாம் கட்சியிலயும் ஆட்சியிலயும் ஆடவுட்டாங்கன்னு ஜெ சொல்லணும். அவங்க கட்சியிலயும் ஆட்சியிலயும் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னும் சொல்லணும். அதுக்கு என்ன நடவடிக்கைன்னும் சொல்லணும். சசியை இப்ப திரும்ப சேத்துகிட்டது ஏன்னும் சொல்லணும். இனிமே என் சொந்தக்காரங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. எல்லாரையும் கட் பண்ணிட்டேன்னு சசி சொல்றாங்க இல்ல, முதல்ல நடராஜனுக்கு டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டாங்களான்னு சொல்லணும்.


சி.பி - நடராஜனை டைவர்ஸ் பண்ணினதா நாடகம் போட்டுட்டு  நாங்க சட்டப்படி பிரிஞ்சுட்டோம், ஆனா எங்கள் தார்மீக (!!!??? ) உறவு நீடிக்கிறதுன்னு நாடகம் போட எவ்வளவு நேரம் ஆகும்.. ?



ரெண்டு பேரும் எதுவும் சொல்லமாட்டாங்க. ராவணன், நடராஜன், திவாகரன், சுதாகரன்னு ஒவ்வொருத்தரா அடுத்து பழையபடி கட்சிவேலை, ஆட்சி வேலையிலல்லாம் மூக்கை நுழைக்கத்தான் போறாங்க. நாமும் பாத்துகிட்டு ஞேன்னு நிக்கப்போறோம். ஏன்னா நம்மதான் கேணைங்களாச்சே.


சி.பி - பழைய திருடி கதவைத்திறடி, நாட்டை நாசமாக்கி நாட்டு மக்களின் நம்பிக்கையை நாறடி



பளிச் 2:


ஒண்ணு ரெண்டு டி.வில ஒரு தரம் ரெண்டு தரம் காட்டினதோட சரி. பாதி பேப்பர்லஇந்த நியூசே வரல. பட்டப்பகல்ல நட்ட நடு ரோட்டுல ஒரு போலீஸ் அதிகாரி பொதுமக்களை அடிக்கறான். அவனை என்னான்னு கேக்க ஆளே இல்ல. தர்மபுரில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்துல குளறுபடி செஞ்சதுனால, வாத்யாருங்க சாலை மறியல் செஞ்சிருக்காங்க. தன் கிட்ட வந்து முறையிட்டு பேசற ஒரு ஆசிரியரை டி.எஸ்.பி சந்தனப் பாண்டியன் அடிக்கறாரு. வேணாங்க அடிக்காதீங்கன்னு கெஞ்சறாங்க அந்த ஆசிரியரோட மனைவி. அவங்களை அப்பிடியே புடிச்சுத் தள்ளறாரு பாண்டியன். அந்தம்மா அப்பிடியே பின்னால் மண்டை தரையில படறாமாதிரி ரோடுல விழறாங்க. 


இப்பிடி செஞ்ச அதிகாரி மேல என்ன நடவடிக்கைன்னு கேட்டா மாவட்ட எஸ்.பி அவர்கிட்ட விளக்கம் கேட்டிருக்குங்கறாரு. இதுல விளக்கம் கேக்க என்னா இருக்குது. டி.வில போட்டதைப் பார்த்தலே அந்த எஸ்.பிக்கு புரிஞ்சுடுமே. கொறைஞ்சபட்சம் டி.எஸ்.பியை சஸ்பெண்ட் பண்ணிட்டுதானே விளக்கம் கேக்கணும்…இதுக்கு நடுவுல, அடிவாங்கின ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டுப் போய் மிரட்டிக் கையெழுத்து வாங்கியிருக்காங்கன்னு ஒரு செய்தி சொல்லுது. இது என்ன நாடா, இல்ல காடா ? ராஜபக்‌ஷே பண்ணின அக்கிரமத்துக்கு சட்டசபையில தீர்மானம் போடறாங்க. ஐ.நால தீர்மானம் போடறாங்க. உள்ளூர் ராஜபக்‌ஷேங்களைக் கேப்பாரே இல்லியா? சம்பளம் பஞ்சப்படின்னா சத்தம் போடற ஆசிரியர் சங்கமெல்லாம் இதுக்கு குரல் குடுக்க வரமாட்டாங்களா?


சி.பி - தப்பு பண்ற போலீஸ் ஆஃபீசரை டிரான்ச்ஃபர் பண்றது  தண்டனை அல்ல.. அதே தப்பை  வேற ஏரியாவில் இன்னும் ஜாக்கிரதையா செய்ய தரும் வாய்ப்பு..



பளிச் 3:


அண்ணா பல்கலைக்கழகத்துல படிச்சுகிட்டிருந்த மாணவன் மணிவண்னன் தற்கொலை பண்ணிகிட்டது அவனைத் தெரிஞ்ச நண்பர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியா இருக்கு. தர்மபுரி மாவட்டத்துல செஙகல் சூளையில சிறுவனா இருந்தப்பவே கொத்தடிமையா இருந்த மணிவண்ணனை அதிகாரிங்க மீட்டு படிக்க உதவி செஞ்சதுல மாநிலத்துலயே 13 வது எடத்துல ப்ளஸ் டூ பாஸ் பண்ணி வந்திருக்கான். 


அவ்வளவு கஷ்டத்தை அவன் தாண்டி வந்து சாதிச்சதோட மட்டும் இல்ல, இப்ப கார்ப்பரேஷன் பள்ளியில படிக்கற ஏழை பசங்ககிட்ட போய் பேசி அவங்களை ஊக்கப்படுத்தற வேலையெல்லாம் செஞ்சுருக்கான்னு கிழக்கு பத்ரி சொல்றாரு. காசு திரட்டி ஏழை மாணவர்களுக்கெலாம் உதவி செஞ்சு வந்திருக்கான். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகணும், ஊர்ல குடிசைல இருக்கற அம்மாவுக்கும் பிரதருக்கும் நல்ல வீடு கட்டித்தரணும், அடுத்த மாசம் தன்னோட கவிதைத் தொகுப்பை வெளியிடனும்னெல்லாம் பேசிக்கிட்டிருந்தவன், ஏன் திடீர்னு தற்கொலை பண்ணிக்கணும் ?


அஞ்சு செம்ஸ்டர்ல மொத்தமா 26 பேப்பர்ல பாஸாகாம இருந்த்து ஒரு காரணம்கறாங்க. ஏதோ காதல் தோல்வி இன்னொரு காரணம்கறாங்க. மாநிலத்துலயே .13வது எடத்துல வந்த பையன், காலேஜ்ல பேப்பர் அரியர்ஸ் வெக்கறான்னா, ஏன்னு ரெண்டாவது செமஸ்டர்லயே வாத்யாருங்க கவனிக்கமாட்டாங்களா? அவனைக் கூப்பிட்டு என்னாப்பா ப்ராப்ளம்னு பேசிக் கண்டுபிடிக்கமாட்டங்களா? லவ்வுதான் பிரச்சினை, அதுனாலதான் படிப்பை கவனிக்கலேன்னா அத்த எப்பிடி ஹேண்டில் பண்ணணும்னு சொல்லறதுக்கு டாக்டருங்க மாதிரி யாரும் ஆளு காலேஜ்ல இல்லியா? 


மணிவண்ணன் மீதி பசங்களுக்கு உற்சாகம் குடுத்து பண உதவி பண்ணி அவங்களும் தன்னைப் போல நல்லா படிச்சு மேல வரணும்னு சொல்ற அறிவிருக்கற பையன். அவனுக்கு ஒரு பிரசினைன்னா இப்பிடி தீர்த்துக்கலாம்னு சொன்னா அவனால புரிஞ்சுக்கமுடியும். அத்த செய்யவே காலேஜுல ஆள் கெடையாதா? அப்ப, மணிவண்ணன் மாதிரி கூட இல்லாத சாதாரண பசங்க கதி என்னாகும் ? எல்லாரும் சினிமால தனுஷ் திரியறா மாதிரிதானே ஆவாங்க? தனுஷ் படத்தைப் பாத்து பசங்க உருப்பட முடியுமா ? காலேஜுல பாடம் சொல்லித் தந்தா மட்டும் போதாது. மனசை எப்பிடி வெச்சுக்கணும்னு சொல்லித் தர்ற வாத்யாருங்களையும் கூடவே போடணும்


சி.பி - மர்மமான மரணங்கள் பெரும்பாலும் கடைசி வரை மர்மமாகவே முடிஞ்சுடுது.. என்ன நடந்தது?ன்னு மக்களுக்குத்தெரியாமயே போயிடுது

.
பளிச் 4:


எவ்வளவு நல்ல மனுஷன்.. இப்பிடி கொடூரமா கொன்னுட்டாங்களேன்னு நான் பேசின ஒருத்தர் கூட சொல்லல… திருச்சி தி.மு.க பிரமுகர் ராமஜெயம் கொலையைப் பத்தித்தான் சொல்றேன். எல்லாரும் இப்பிடி கொடூரமா கொன்னிருக்கவேணாமேன்னு சொல்றாங்களே தவிர, நல்ல மனுஷன்னு சொல்லமாட்டேங்கறாங்க. இறந்தவரு யாரோ கொஞ்சம் பேருக்காவது நல்லவரா இருந்திருப்பார்ங்கறதுல எனக்கு சந்தேகம் இல்ல. ஆனா பெரும்பாலானவங்க அப்பிடி நினைக்கல. இதுதான் இன்னிக்கு தமிழ்நாட்டுல பெரும்பாலான அரசியல் பிரமுகர்களோட நிலைமை. ஜனங்க யாரும் அவங்களல ஒருத்தரையும் நல்லவங்கன்னு சொல்லக் கூடிய மன நிலையிலயே இல்லை. கொலை செய்யப்பட்டதும் கொலை செய்யப்பட்ட விதமும் பரிதாபத்தை ஏற்படுத்துதே தவிர, இருந்தப்ப இவங்கள்ல்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னுதான் சாதாரண மக்களே பேசறாங்க.


அரசியல்வாதிகளும் கட்சிகளும் இதைக் கொஞ்சம் தீவிரமா சிந்திக்கணும். மேலயிருந்து கீழ வரைக்கும் ஒவ்வொரு கட்சியிலயும் அதிகாரத்துல இருக்கறவங்கள்ல பெரும்பாலானவங்களுக்கு மக்கள் கிட்ட நல்ல பேரே இல்லை. தங்களுக்கு வேற வழியில்லாமதான் மக்கள் இவங்களை சகிச்சுகிட்டு இருக்காங்க. இப்பிடியே போனா இன்னும் பத்து வருஷத்துல ரெண்டுல ஒண்னுதான் நடக்கும். ஓட்டு போடவே ஜனங்க வரமாட்டாங்க


. இல்லாட்டி, எவன் வந்தாலும் ரவுடித்தனம் பண்ணி காசை சுருட்டப்போறான். எனக்கு இப்பவே எவன் நிறைய குடுக்கறானோ அவனுக்கு ஓட்டு போட்டுத் தொலைக்கறேன்கற நிலைக்கு மக்கள் வந்துடுவாங்க. ரெண்டும் நாட்டுக்கு நல்லது இல்ல. மக்களுக்கும் நல்லது இல்ல, அரசியலுக்கும் நல்லது இல்ல.


சி.பி - இப்பவே கிட்டத்தட்ட அந்த நிலைமை வந்துடுச்சே? எவன் யோக்கியன்? அப்டினு மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? எரியற கொள்ளில எது நல்ல கொள்ளி? அல்லது இந்த தடவை அதிமுக அடுத்த டைம்  திமுக அப்டிங்கற மன நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்களே.. 


பளிச் 5 


இந்த பட்ஜெட்ல ராணுவ செலவு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு வந்துடுச்சு. (1,93,407 ! ). ஆனா ராணுவ தளபதி நம்ம கிட்ட இருக்கற ஆயுதம் வெடி மருந்தெல்லாம் போதாது. இன்னும் ரெண்டு நாளைக்குதான் வரும், எல்லா ஆயுதமும் பழசாப் போச்சு, அது இதுன்னு குண்டு போட்டுகிட்டே இருக்காரு. இவ்வளவு பணம் குடுக்கறாங்களே புச்சா வாங்கவேண்டியதுதானேன்னா, ஓட்டை உடைசல்லாம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறாங்கன்னு வேற சொல்றாரு. இதுக்கு முன்ன எந்த ராணுவ தளபதியும் இவ்வளோ ஒப்பனா எல்லாத்தையும் போட்டு உடச்சதே கெடையாது. 


பொதுவா அரசாங்க அதிகாரிங்க, ராணுவ அதிகாரிங்களுக்கெல்லாம் ரிட்டையராயி ரெண்டு மூணு வருஷம் வேற போஸ்ட்டிங் எதுவும் வராதுன்னு தெரிஞ்சப்பறம்தான் மனசாட்சின்னு ஒண்ணு புச்சா வந்து உறுத்த ஆரம்பிக்கும். இவுருக்கு ரிட்டையர் ஆவறதுக்கு முன்னாடியே மனசாட்சி கொஞ்சம் ஒர்க் ஆவுது போல..


மிலிட்டிரிக்கு ஆயுதம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறது ரொம்பப் பழைய விஷயம்.. போபர்ஸ் கேசே அதானே…அது வெளியில வந்து ராஜீவ் ஆட்சி அவுட்டானப்பறம் வந்தவரு தேவ கவுடா, அவுரு கிட்ட கூட லஞ்சம் குடுக்க வந்தாங்கன்னு அவரு மகன் குமாரசாமி சொல்லியிருக்காரு. கவுடா என்கிட்ட வரல,அவன்கிட்ட வந்திருப்பாங்கன்னு சமாளிக்கறாரு.

 ஒவ்வொரு ஆட்சியிலயும் வராங்க, குடுக்கராங்க, வாங்கிக்கறாங்கன்னு நமக்குத் தெரியாதா என்ன..மொதல்ல இந்த ராணுவ பட்ஜெட்டை கொறைக்கணும். வெட்டியா அங்கே கொட்டற பணத்தை விவசாயத்துலயும் ஆஸ்பத்திரிலையும் படிப்புலயும் செலவு பண்ணா நாடு நெஜமா ஆரோக்கியமா இருக்கும். 


ஆனா, அப்பிடி செய்ய அதிகாரிங்க வுடமாட்டாங்க. பொய்யாவாச்சும் எல்லையில ஆபத்து. இங்கே ஊடுருவல்னு கதை விட்டுகிட்டு இன்னும் ராணுவ செலவை ஏத்திவிட்டுகிட்டேதான் இருப்பாங்க. அப்பதான் கொள்ளையடிக்க முடியும். அதுல அவங்களும் அரசியல்வாதிகளும் பங்கு போட்டுக்க முடியும்.அதுக்காக பொய்யா தேசபக்தியைக் கெளப்பி விட்டுடுவாங்க.


ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, செலவு எல்லாத்தையும் தனியா கணக்குத் தணிக்கை அதிகாரி மாதிரி ஒரு சுயேச்சையான அமைப்பை வெச்சு நடத்தினாதான் இதையெல்லாம் சரி பண்ண முடியும்.


சி.பி - நாட்ல எந்த ஊழலையும் தாங்கலாம், பாதுகாப்புக்கே பங்கம் விளைவிக்கும் ராணுவத்தில்  ஊழல் வந்தால்?


பளிச் 6


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தின அரசாங்கம் கேட்டுகிட்டபடி அவங்க சாகும்,வரை உண்ணாவிரதத்தை நிறுத்திகிட்டாங்க. ஆனா, அரசாங்கம் பதிலுக்கு தான் சொன்னபடி எதையும் ஒழுங்கா செய்யல. கைதான் 150 பேரை விடுதலை செய்யாம, வெறுமே ஜாமீன்ல மட்டும்தான் விட்டிருக்காங்க. இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்கு ஜாமீனும் கொடுக்காம தொடர்ந்து காவலை நீட்டிச்சுகிட்டே இருக்காங்க. வேணும்னே பல தொண்டு நிறுவனங்கள்ல ரெய்டு நடத்திகிட்டிருக்காங்க.ஒரு எடத்துலயும் ஒண்ணும் உருப்படியா குற்றம் சாட்டறமாதிரி கிடைக்கல.


அடுத்து உதயகுமார் மேல கிரிமினல் கேஸ் இருக்கறதுனால, அவரோட பாஸ்போர்ட்டை சரண்டர் பண்ண சொல்றாங்க. அப்பிடிப் பாத்தா நம்ம பார்லிமென்ட்ல 160 எம்.பிகளோட பாஸ்போர்ட்டை பறிமுதல் பண்ணியிருக்கணும். அவங்க பேர்லயும் கிரிமினல் கேசெல்லாம் இருக்குது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையில கோர் ட் உத்தரவுப்படி எஃப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்கற மாறன் பிரதர்சுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வெச்சுகிட்ட மாதிரி தெரியல.


போபால் விபத்து நடந்த உடனே அதுக்குப் பொறுப்பான கம்பெனி தலைவர் ஆண்டர்சனுக்கு தனி விமானம் ஏற்பாடு செஞ்சு அமெரிக்காவுக்கு தப்பிச்சுகிட்டு போறதுக்கு வேலை பாத்தவனெல்லாம் அதை எதிர்க்கறவங்க பாஸ்போர்ட்டை பிடுங்கப் பார்க்கறாங்க. நாளைக்கு கூடங்குளத்துல விபத்து நடந்தா முத வேலையா தனி விமானத்துல ரஷ்யன்களையெல்லாம் அனுப்பிடுவாங்கங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை.


சி.பி - கூடன் குளம் இயங்கட்டும் , சோனியா குடும்பம் அங்கே குடி பெயரட்டும் பார்க்கலாம்.. 


பளிச் 7 


இந்த சினிமா முதலாளிங்க அழும்பு தாங்கவேமுடியல… அவங்களுக்கும் தொழிலாளிகளுக்கும் சம்பள விஷயமா பிரச்சினைன்னா, சட்டப்படி அதைப் பேசி முடிக்க உதவி செய்யறதுக்குத்தான் தொழிலாளர் நல ஆணையர் இருக்காரு. இத்தனை நாள் அவர் கிட்ட போய் பேசிகிட்டிருந்தவங்க இப்ப பேச முடியாதுங்கறாங்க. அவுரு தொழிலாளருக்கு ஆதரவா இருக்கறாராம். ஆமா, அதுக்குத்தான் அந்த டிபார்ட்மெண்ட்டே வெச்சிருக்கு.


 ரெண்டு தரப்புக்கும் பாதிப்பு இல்லாம சமரசம் செய்ய முயற்சிக்கறதுதான் அவர் வேலை. தொழில் தகராறுல அரசாங்கத்துகிட்டயே போய் பேச முடியாதுன்னு சொல்ற முதல் ஆளு இந்த சினிமா முதலாளிங்கதான். அவர்கிட்ட பேசி தீர்வு வராட்டி அடுத்த கட்டம் லேபர் கோர்ட்,லேபர் டிரிப்யூனல்தான். நல்ல முதலாளிங்க பொதுவா லேபர் கமிஷனர் மட்டத்துலயே பேசி தீர்வுக்கு வந்துடுவாங்க. பிரச்சினை முடியற சமயத்துல க்ளைமாக்ஸ்ல வந்து சொதப்பாதீங்கப்பா…


சி.பி - இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இவங்க வேற வருஷா வருஷம் கொடியை பிடிக்கறாங்க..  ஹீரோவுக்கு கோடிக்கணக்குல சம்பளம் தர யோசிக்காதவங்க அடி மட்ட ஊழியர்களுக்கு 100 ரூபா தர யோசிக்கறாங்க  ஹூம்


பளிச் 8:


படிச்சதுல பிடிச்சதுன்னு இந்த வாரம் ஒண்ணை சொல்லணும்னா, அது ஒரு பழைய விஷயத்தைப் பத்தி புதுசா படிச்சதுதான். மார்ச் கடைசியிலதான் ஷேக்ஸ் பியர் பொறந்த நாளை உலக நாடக தினமா உலகம் முழுக்க கொண்டாடறாங்க. தமிழ்நாட்டுல கொண்டாடற நிலைமை இல்லை. இங்கே நாடகம்னா என்னன்னே குழம்பிப் போச்சு இல்லையா.. 


டி.,வி சீரியலை நாடகம்னு சொல்லிகிட்டிருக்காங்க. தமிழ் நாடகக்காரங்க மறக்கவே கூடாத கலைஞர்கள்ல ஒருத்தரான எம்.ஆர்.ராதா 1954ல திருச்சில ராமாயணம்னு ஒரு நாடகம் போட்டப்ப அடிச்ச் போஸ்டரை ஃபேஸ்புக்ல சந்திரன் வீராசாமி எடுத்துப் போட்டிருக்காரு. படிச்சேன். என் ராமாயணம் நாடகத்தைப் பாத்துட்டு மனசு புண்படறங்க யாரும் என் நாடகத்துக்கு வரவேணாம். அவங்க காசும் எனக்கு வேணாம். மீறி வந்து மனசு புண்பட்டா நான் அதுக்கு ஜவாப்தாரியில்லைன்னு போஸ்டர்லயே அடிச்சிருக்காரு. இன்னிக்கும் எதுக்காவது மனசு புண்படறேன்னு சொல்றவங்களுக்கு இதுல ஒரு அட்வைஸ் ஒளிஞ்சிருக்கு, இல்லியா?


ராதாவுடைய நாடகங்களை ஒடுக்கறதுக்குன்னே அந்த வருஷம் காங்கிரஸ் அரசாங்கம் பிரிட்டிஷ் காலத்து நாடகத் தணிக்கை சட்டத்தை திரும்பக் கொண்டு வந்தாங்க. சட்டத்துலருந்து தப்பிக்க, ராதா தன் நாடகத்தோட பேரை மட்டும் மாத்திகிட்டே இருந்தாரு. பெரிய அவமானம் என்னன்னா, அந்த சட்டம் இன்னும் தமிழ்நாட்டுல நடைமுறையில இருக்கு…! எந்த திராவிடக் கட்சியும் அதை நீக்கலே..


சி.பி - நாடகம் போடறதுல மன்னர் நம்ம கலைஞர் தான்.. என்னமா நடிக்கறாரு எல்லா விஷயத்துலயும்.. அதுவும் ஒத்திகையே இல்லாம?



பளிச் 9


இந்த வாரம் எனக்குப் பார்த்ததுல பிடிச்சது ஒரு சினிமா. விண்மீண்கள். பழைய டைரக்டர் சங்கரோட பேரன் விக்னேஷ் எடுத்திருக்காரு. புது கேமராமேன் ஆனந்த். அவங்க சித்தப்பா பிரபலமான கேமெராமேன் மணிகண்டன். அப்பா சினிமா பற்றின புத்தகத்துக்கு ஜனாதிபதி விருது வாங்கின ஓவியர் ஜீவானந்தன். பொறக்கறப்பவே மூளை வளர்ச்சி குன்றின நிலையில பொறக்கற குழந்தை வாலிபனாகி காதலை சந்திச்சா என்ன ஆகும்னு சொல்ற கதை. சின்னச் சின்ன ஓட்டைங்க இருந்தாலும், மசாலா பண்ணாம, நல்லா சொல்லியிருக்காங்க.


 கேரக்டர் ரோல்ல காமெடியன் பாண்டியராஜனுக்கு வித்யாசமான வாய்ப்பு. கூட நடிச்சவங்க எல்லாரும் பெரும்பாலும் புதுசு. ஆனா நல்லா நடிச்சிருக்காங்க. நல்ல ஒளிப்பதிவு. ஆனா இந்தப் படத்தை படிச்ச, எலைட், ஐ.டி க்ரூப்ஸ் உட்பட இண்ட்டெக்சுவலுங்க யாரும் சரியாவே ஆதரிக்கல. எல்லாரும் கொலை வெறிலதான் அலையறாங்களே தவிர கலைவெறியைக் காணோம். அப்பறம் எப்பிடி நல்ல படம் வரும் ?


பளிச் 10


அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யற நேரம் வந்துடுச்சு.போன தடவை நான் எழுத்தாளர் மகாஸ்வேத தேவி பேரை ரெகமெண்ட் பண்னேன். யார் கேக்கறாங்க. பிரதிபா வைப் போட்டுட்டாங்க. சரி மொத பெண்மணின்னு ஓகே சொன்னோம். அது தேறல.. சொந்தபந்தங்களோட ஊர் சுத்தறதுக்கே 200 கோடியை அழிச்சுடுச்சாமே. இந்த தடவை பாத்து போடணும். தமிழ்நாட்டுல மாபெரும் ஊழல் அரசியலுக்குப் பிதாமகரா இல்லாம இருந்திருந்தார்ன்னா நிச்சயம் கலைஞர் கருணாநிதியை ஜனாதிபதி ஆக்கணும்னு சொல்லியிருப்பேன். இப்ப ம்ஹூம். என்னோடசாய்ஸ் காந்தியோட பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. உங்க சாய்ஸ் வேற இருந்தா எழுதி அனுப்புங்க..


 சி.பி - நல்லதோ , கெட்டதோ  வாரிசுகளை ஒழிக்கனும். வேற ஆளே சிக்கலையா?


——————

நன்றி 
கல்கி 7.4.2012

Tuesday, June 14, 2011

ஆ ராசாவுக்கு ஒரு நியாயம்,கனிமொழிக்கு ஒரு நியாயமா? ஓ பக்கங்கள் ஞாநி பாய்ச்சல்,தி மு க எரிச்சல்

http://snapjudge.files.wordpress.com/2010/12/karunanidhi-azhagiri_stalin_mk_kanimozhi.jpg?w=383&h=266 

ஓ பக்கங்கள்

திருந்துங்கள்!

ஞாநி

1. தி.மு.க.வினருக்கு 

கலைஞர் கருணாநிதி திருந்துவதாகவோ தம் தவறுகளை உணர்வதாகவோ தெரியவில்லை. தோல்விக்குப் பின் தமக்கு மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னவர், அந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளாமல், மறுபடியும் அறிக்கைகள், பேச்சுகள் என்று பழையபடியே தம் தவறுகளுக்கு சுண்ணாம்படிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்.

தி.மு.க.தான் படுதோல்வியடைந்து விட்டதே, கருணாநிதிதான் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டாரே, ஏன் தொடர்ந்து அவர்களைப் பற்றி இன்னமும் எழுதவேண்டும் என்று சில நண்பர்கள் கேட்டார்கள். எழுத சில காரணங்கள் இருக்கின்றன. 

முதல் காரணம், ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா எடுக்கும் சில நடவடிக்கைகள் பற்றிய சர்ச்சைகள், விமர்சனங்கள், தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து தப்பு செய்துவிட்டார்கள் என்ற ஒரு கருத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஜெயலலிதாவின் தவறுகளை நிச்சயம் விமர்சிக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம், தி.மு.க ஆட்சியின் அராஜகங்களை, முறை கேடுகளை நியாயப்படுத்திவிட முடியாது. 

அவற்றுக்கான தண்டனை தேர்தல் தோல்வி மட்டுமல்ல; ஊழலும் முறைகேடும் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாவது காரணம், தி.மு.க. என்ற கட்சி அடியோடு அழிந்துபோவதில் எனக்கு உடன்பாடில்லை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாகவேண்டுமென்பதும், அது திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், காந்திய இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களின் சிறந்த கூறுகளின் கலப்பாக அமைய வேண்டுமென்பதும் என் கனவுகளில் ஒன்று. ஆனால் அப்படி ஒன்று நிகழ்வதற்கான சமூகக் காரணங்கள் கனிவதற்கும் கனிந்து வரும் வரையிலும், தி.மு.க. என்ற கட்சி புதுப்பிக்கப்பட வேண்டும்.

தி.மு.க.வின் வீழ்ச்சிக்கு பிரதானமான காரணம் கருணாநிதி தம் குடும்பங்களின் சுயநலத்தை முன்னிறுத்தி அதற்கேற்ப கட்சியை வடிவமைத்துக் கொண்டார். தம் குடும்பம் போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தம்மை அண்டிப் பிழைக்கும் ஒரு பிரமுகரின் குடும்பம் பாளையக்காரராக ஆட்சி செய்யும் முறையை அவர்தான் வலுப்படுத்திப் பாதுகாத்தார். இதையெல்லாம் மறைப்பதற்கான முகமூடியாக தமிழ், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றைத் தம் முழுத்திறமையுடன் பயன்படுத்தி வந்தார் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டது.


இனி தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு அது குறைந்தபட்சம் அண்ணா காலத்து தி.மு.கழகமாகவேனும் ஆகவேண்டுமானால், கருணாநிதி உருவாக்கிய குடும்ப அரசியல் கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும். அதற்கான சூழல் இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது. டெலி ஃபோன் நிலையத்தையே டி.வி.க்காக பயன்படுத்தியது போன்ற கருணாநிதி குடும்பத்தினரின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து, ஒவ்வொருவராக சிறை நோக்கி நெடிய பயணம் தொடங்குகிறார்கள். அவரது பாளையக்காரக் குடும்பங்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. அடுத்து அவர்கள் மீதும் நிலப்பறி, மணற்கொள்ளை போன்ற பல குற்றங்களுக்காக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

http://1.bp.blogspot.com/-dgDQYX3mz14/TcQJHF7-JXI/AAAAAAAAB7U/pc1sDNjyCBo/s1600/ECART_1304613014.jpg
சுருக்கமாகச் சொல்வதானால், இன்று தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டுமானால் கருணாநிதியைக் கட்சியிலிருந்து விலகியிருக்கச் சொல்லக் கூடிய அளவு உட்கட்சி ஜனநாயகம் மறுபடியும் ஏற்பட்டால்தான் முடியும். ஆனால், அவரோ தொடர்ந்து தம் வார்த்தை விளையாட்டுகள், பேச்சுத்திறமை போன்றவற்றின் மூலம் எஞ்சியிருக்கக்கூடிய தொண்டர்களை ஏமாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். அதற்கான அடையாளம்தான் திருவாரூர் நன்றியுரை. அதில் அவர் சொல்லிய ஒவ்வொரு கருத்தையும் மயக்கமின்றி கேள்வி கேட்டால் தான் உண்மையான திராவிட இயக்கத் தொண்டனால் தி.மு.க.வைக் காப்பாற்ற முடியும்.


அந்த உரையில் கருணாநிதி சொல்கிறார்: “என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ, அல்லது வேறு காரணத்தாலோ, சிறையில் உள்ளார்.”

தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “தலைவா, அப்படின்னா, மத்திய அரசுல ஏன் இன்னமும் தி.மு.க. ஆட்சியில இருக்குது? அரசு அலட்சியம்னா ஏன் எதிர்த்துப் பதவி விலகாம இருக்காங்க? வேற காரணம்ன்னா என்ன? நீராராடியாவோட கனி பேசின பேச்சுல அவுட் ஆன சமாச்சாரமா? ராசா, கனி,டெலிகாம் அதிகாரிங்க, கம்பெனி நிர்வாகிங்க அல்லாரும் உள்ள இருக்கறதுக்கு சுப்ரீம் கோர்ட்டோட கண்டிப்புதானே காரணம், தலைவா?”

அடுத்து, கருணாநிதி, கட்சியினரின் அனுதாப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்காகச் சொல்கிறார்: “திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.”
தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே?

தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க. அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj76G9CChu2JRxzuqQgNxNrhLqYQwaB0ZNPr8SSdiztgm2NSSGWfe4b8wbwHRhjHIVvD0g9XqUdNohS8GK3D6u2roc-3KXGD1RHZP2-0bDOZ5ZdIng3a57QZ0qyKJ97mVNt4rGq0BnPJJM/s1600/A_Raja.jpg
‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே. நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’

அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது. ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”


கனிமொழி செய்த குற்றமென்ன என்று கருணாநிதி பேசியிருக்கிறார்: “கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இரு என்று நான் தான் சொன்னேன். அவர் வேண்டாமென்றார். நான் வற்புறுத்திய காரணத்தால் சேர்ந்தார். வேதனையைப் பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதற்காக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.”

தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி: “தலைவா, நாங்கள்லாம் சொந்தக்காரங்கன்னு இப்ப ஷோக்கா சொல்றீங்க இல்ல? இதே நினைப்பு ஏன் கலைஞர் டி.வி.ல பங்கு குடுக்கறப்ப உங்களுக்குத் தோணலே? கனியை வற்புறுத்தினா மாதிரி எங்களையும் கேட்டிருக்கலாமில்ல? பங்கு குடுக்கறப்ப அவங்க ஞாபகம் மட்டும்தான் வருது. மாட்டிக்கிட்டு கஷ்டப்படறப்ப சப்போர்ட் சேர்க்க மட்டும்தான் எங்க ஞாபகம் வருமா உங்களுக்கு?”

இனி கலைஞர் கருணாநிதி என்ன முயற்சி செய்தாலும் வரலாற்றில் அவர் பங்களிப்பு ஏற்கெனவே குறிக்கப்பட்டு விட்டது. 1917ல் நீதிக் கட்சியாகத் தொடங்கிய திராவிட இயக்கத்தின் 94 ஆண்டு வரலாற்றில் கருணாநிதி ஓர் அடிக் குறிப்பாகவே எஞ்சுவார். சமூக இயக்கமான திராவிட இயக்கத்துக்கு வலுவான அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு அண்ணா காரணமாக இருந்தார். தமது குடும்ப சுயநலத்துக்காக அந்த அரசியல் அதிகாரத்தைப் பணயம் வைத்தவர் கருணாநிதி.

அவரிடமிருந்து இயக்கத்தை மீட்கும் பணிதான் இனி நிகழ வேண்டிய தி.மு.க, திராவிட இயக்க வரலாறு. அந்த மீட்பை முன்னெடுத்துச் செல்ல தி.மு. க.வுக்கு இப்போதைக்கு இருக்கும் தலைவர், கருணாநிதியின் மகன் ஸ்டாலின்தான் என்பது வரலாற்றின் விசித்திரம். தலைவர்கள் திருந்தாவிட்டால் அவர்களைத் தூக்கி எறிபவர்களாகத் தொண்டர்கள் திருந்தினால்தான் வரலாறு மாறும்.
2. புதிய ஆட்சிக்கு:
ஒவ்வொரு ஆட்சியும் தனக்கு முந்தைய இன்னொரு கட்சி ஆட்சியின் திட்டங்களைத் தன் விருப்பத்துக்கேற்ப மாற்றுவது என்பது தி.மு.க.-அ.இ.அ.தி.மு.க வரலாற்றில் மாறாத அம்சம். மாற்றுவது புதிய ஆட்சியின் உரிமையாக இருக்கலாம். ஆனால் கூடவே அதற்கு ஒரு கடமையும் இருக்கிறது. ஏன் மாற்றுகிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, மக்களை ஏற்கச் செய்யவேண்டியதுதான் அந்தக் கடமை. ஸ்விட்சர்லாந்தில் இருப்பது போல முக்கிய திட்டங்களை, சட்டங்களைக் கொண்டு வரும்போது ரெஃபரண்டம் நடத்தும் முறையை ஜெயலலிதா பரிசீலிக்க வேண்டும்.


ஜெயலலிதா முதலமைச்சர் பதவி ஏற்றதும் தி.மு.க.வின் இலவச வீட்டு வசதித் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சமச்சீர் கல்வித் திட்டம், புதிய சட்டமன்ற, செயலகக் கட்டடம், மெட்ரோ ரயில் எல்லாம் கைவிடப்படும் என்பதும் சில வேறு பெயரில் செயலாக்கப்படும் என்பதும் எதிர்பார்த்ததுதான்.
சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குழுவில் அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிஞர்கள் இருக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற, கால வரையறை தேவை.

எப்படிப் பார்த்தாலும் அடுத்த கல்வியாண்டில் பொதுப் பாடத் திட்டம் நடைமுறையில் வரவேண்டும். சமச்சீர் கல்வியில் அது ஒரு சிறிய அம்சம்தான். கூடவே பொதுத் தேர்வு முறையும் சேர்த்துச் செயல்படுத்தப் படவேண்டும். ஒரே பாடத் திட்டத்துக்கு வெவ்வேறு விதங்களில் தேர்வு நடத்தக் கூடாது.


மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எல்லா பொதுமக்களுக்குமாக விரிவுபடுத்தப்படும் என்றும் தனியார் முதலீடு மருத்துவத்தில் அதிகரிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அரசு அறிவித்திருக்கிறது. அப்படியானால் அரசு மருத்துவமனைகளின் வேலை என்ன? தனியார் மருத்துவ சேவைக் கட்டணம், தனியார் கல்விக் கட்டணம் போலவே எல்லாராலும் செலவிட முடியாதது.

மெட்ரோ ரயில் திட்டமும் புதிய தலைமைச் செயலகமும் இன்னமும் முடிக்கப்படாதவை. மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் ஆய்வு அளவிலேயே இருப்பதால் அதைக் கைவிடுவதில் சிக்கல் இல்லை. தலைமைச் செயலகம் கட்டி முடிக்காமலே தி.மு.க அரசு திறப்பு விழா நடத்தியது. கட்டியதில் ஊழல் பற்றி விசாரிப்பதற்காக மீதி கட்டட வேலையைக் கைவிடுவது அபத்தமானது. விசாரணை முடியும்வரை கட்டடம் பயன்படாமலே வீணாகும்.

ஜெயலலிதா அரசு அறிவித்து வரும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு திட்டத்திலும் விளக்கமான வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டோம். அதனால் நாம் விரும்பியதைச் செய்தால் கேட்பார் இல்லை என்ற பழைய மனோநிலை இனி உதவாது. அந்த மனநிலையிலிருந்து திருந்தாவிட்டால், மக்கள் அடுத்த தேர்தலில் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பாடத்தை தி.மு.க.வுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து ஜெயலலிதா கற்கவேண்டும்.


3. மீடியாவுக்கு 
அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாள் நடந்தது. நாடே கொந்தளிப்பது போன்ற ஒரு மாயையை அப்போது ஆங்கில டி.வி.சேனல்கள் உருவாக்கின. அந்த மாயையில் அடுத்து பத்திரிகைகளும் சிக்கின.
அடுத்தபடியாக யோகா வணிகர் பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போதும் அதேபோன்ற ஒரு மாயையை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை.
இரண்டுக்கும் நடுவில் மேதா பட்கர் எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதை இதே ஆங்கில டி.வி. சேனல்களும் பத்திரிகைகளும் கண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்கு ஒரு வரி செய்தி சொல்லி விட்டுவிட்டன. காரணம் மேதா பட்கரின் உண்ணாவிரதம் மும்பையில் கோல்பார் பகுதியில் 24 ஆயிரம் குடிசைவாசிகளை அகற்றி நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட்காரர்களுக்குத் தருவதைக் கண்டிப்பதாகும்.


அதில் மேட்டுக்குடி மீடியாவுக்கு அக்கறையில்லை. ஆனால் மேதாவின் உண்ணா விரதம்தான் ஜெயித்தது. காரணம் மக்கள் அவரோடு திரளாக இருந்ததுதான். மகாராஷ்டிர அரசு மேதாவின் கோரிக்கைகளை ஏற்று விசாரணைக்கு உத்தரவிட்டது.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல மீடியாவும் பத்திரிகைகளும் கூட திருந்த வேண்டியிருக்கிறது. அசல் பிரச்னைகளை விட்டுவிட்டு போலியானவற்றுக்கு முக்கியத்துவம் தருவது மக்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது.
இந்த வார அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 1450 பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒரு சதவிகிதம் கல்லூரிகளில் மட்டுமே முறையான உள்கட்டமைப்பும் ஆய்வக வசதிகளும் இருப்பதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்திருக்கிறது.


\நன்றி - கல்கி,ஓ பக்கங்கள் ஞாநி