Showing posts with label ANANDHA VIKADAN. Show all posts
Showing posts with label ANANDHA VIKADAN. Show all posts

Thursday, June 23, 2011

கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி

http://lh4.ggpht.com/-oXTk_1S2qSU/TR9wwsV6VfI/AAAAAAAAE4k/iKbvi5-EOfk/DSC06684.JPG 
 
விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்


1. ''ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!''



2. ''தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?''   

''கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.  
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது 'கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!''


3. ''எத்தனையோ இசங்கள் இருக்கின்றன... அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?'' 


''கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்...

'மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ''


\
 4.''இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?'' 

''ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். 'இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர்  நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, 'என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.

ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது:   A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!''


5.  '' 'எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?'' 

'' 'நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!''


6.  ''அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை - இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?'' 


''உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் - இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை.

இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது.

கல்வி நிலையங்கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது.  அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!''

 http://maduraivaasagan.files.wordpress.com/2010/12/dhesandhiri.jpg?w=447&h=288
7. ''இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?'' 


''ஒருபோதும் இல்லை. காரணம்,   இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.


10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால்  ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், 'பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!''


8.  ''அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?'' 

அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு  முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில்  பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது. 

லஞ்சம்  வாங்குவதைத் தனது திறமை என்று  எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது. 

அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!''


- அடுத்த வாரம்... 


''உங்களுக்கு தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி யார்?'' 

''உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பது இல்லையே... பயமா?'' 

''சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்... யாருக்கு ரசிகர்கள் அதிகம்?'' 


- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன... 

நன்றி - விகடன்

Thursday, March 24, 2011

வை கோ - ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார். ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு.

கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்... வெறும் பார்வையாளர்! 



1. ''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''

''மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.
பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.


ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.


'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''

அண்ணே.. முதல்ல பேச்சு வார்த்தைன்னா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருக்கனும்.. முதல் கட்ட பேச்சு வார்த்தை, 2வது கட்ட பேச்சு வார்த்தை.. இதெல்லாம் எதுக்கு..பேரம் பேச இதென்னா மாட்டுச்சந்தையா?
2. ''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?'' 

''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார்.

எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!


அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். 

அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை.

ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.


சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

அதிமுக என்றாலே அ வமானத்தை தி னமும்  மு ந்திக்கொண்டு தரும் க ழகம் என்று தான் பொருள்.. ஏம்ப்பா அவ்வளவு கஷ்டப்பட்டு அங்கே போறீங்க.. அந்தம்மா குணம்தான் தெரியுதல்ல....


3. ''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?'' 


''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!


48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. 

ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. 

அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.

ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.


தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 

'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

இப்படி சொல்ற நீங்க.. இதே ஜெ உங்களுக்கு 20 சீட் குடுத்திருந்தா அம்மான்னா சும்மா இல்ல... ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொல்லி இருப்பீங்க.. மனுஷனோட நாக்கு இருக்கே அது நரம்பில்லாதது.. எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசும்....


4. ''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?'' 


''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''


அப்படி சொல்ல முடியாது.. தி மு க வின் நிரந்தர ஓட்டு வங்கி 32%, அதிமுகவின் நிரந்தர ஓட்டு வங்கி 29 % ... மீதி இருக்கற எல்லா எதிர்க்கட்சியும் ஒண்ணு சேர்ந்து ஓட்டே போடாத, போடப்பிடிக்காத அனைவரும் ஒன்று சேர்ந்தா மாற்றம் நிகழும்...

5. ''தனியாக நிற்பது..?'' 


''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

அதுவும் இல்லாம கைக்காசு வீணா செலவு தான் ஆகும்.. அதையும் சொல்லுங்க.. இதுல என்ன ஒளிவு மறைவு.?
6. ''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?'' 

''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.


ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்னு எல்லாரும் சொன்னப்பவே நீங்க ஒண்ணு மறந்துட்டீங்க... தன்மானம் இருக்கறவங்க இந்தக்காலத்துல அரசியலுக்கே வரக்கூடாது.. சுய மரியாதை இருக்கறவங்க அம்மா கூட கூட்டுன்னு அங்கே போய் கால்ல விழக்கூடாது...

7. ''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?'' 

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

இங்கே தான் கலைஞர் தப்பு பண்ணீட்டார்.. லட்சங்களை காட்டாம கோடியை காட்டி இருந்தா எல்லாரும் புற்றீசல் மாதிரி அங்கே போய் இருப்பாங்க.. உங்க கட்சி ஆளுங்களை குறைச்சு மதிப்பிட்டுட்டார் கலைஞர்....


8. ''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?'' 


''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? அம்மாவுக்கு எதிராத்தான் போடுவாங்க.. அது அய்யாவுக்குத்தான் போகும்.. கலைஞருக்கு செம லாபம்...
9. ''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?'' 

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். 

ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

எனக்கென்னவோ நீங்க அடுத்த எலக்‌ஷனுக்கு அய்யா கூடவே சேர்ந்து எனது ஒரே தலைவன் கலைஞர் தான்னு வீர முழக்கம் இடுவீங்களோன்னு டவுட்டா இருக்கு...


10. '' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?'' 

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

சீட் குடுக்க முடியலைன்னா கலைஞர் இதயத்தில் இடம் உண்டுன்னு டகால்டி அடிப்பாரே.. அந்த மாதிரி இது அம்மா டெக்னிக்....


11. ''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?'' 

''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''

நீங்க இருப்பீங்க... கட்சி இருக்குமா? # டவுட்டு