Showing posts with label 30 வகை. Show all posts
Showing posts with label 30 வகை. Show all posts

Friday, May 24, 2013

ஒல்லி கில்லி பெல்லி ஆக 30 வகை ஸ்லிம் ரெசிபி ( சமையல் குறிப்புகள் )


30 வகை ஸ்லிம் ரெசிபி
இளைக்கலாம்... அசத்தலாம்...

ஊசி போல உடம்பிருந்தா தேவை இல்ல பார்மஸி’ - இது பிரபலமான பாடல் வரி மட்டுமல்ல... உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஸ்டேட்மென்ட்டும் கூட! அதேசமயம் 'இளைக்கிறேன் பேர்வழி’ என்று பட்டினி கிடந்தால், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பிறகு என்னதான் செய்வது? ''இதற்கு நான் வழி சொல்கிறேன் வாருங்கள்'' என்று அக்கறையுடன் அழைப்புவிடுக்கும் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன், இங்கே 30 வகை 'ஸ்லிம் ரெசிபி’களை வழங்குகிறார். ''உடல் இளைக்க உதவும், சத்துமிக்க காய்கறி, மளிகைப் பொருட்களைக் கொண்டு இந்த உணவு வகைகளை செய்துள்ளேன். வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு, இந்த உணவுகளை முடிந்த அளவு பயன்படுத்தினால், மூன்று மாதங்களில் உடல் எடை கணிசமாக குறையும். கூடவே, கொஞ்சம் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம்'' என்கிறார் மாலதி.

அவல் உப்புமா
தேவையானவை: அவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

ஓட்ஸ் கட்லெட்
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வெங்காயம், உருளைக்கிழங்கு (சின்னது) - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி, கேரட் (துருவியது), குடமிளகாய் (நறுக்கியது) - தலா அரை கப், பிரவுன் பிரெட் ஸ்லைஸ் - 2, தனியாத்துள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் பொடி செய்யவும். பிரெட்டையும் பொடி செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். அது வதங்கியதும் பொடியாக நறுக்கிய  உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து மூடி வைத்து, பிறகு மேலும் வதக்கவும். காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து... ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, தட்டி தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

  தினை அரிசி உப்புமா
தேவையானவை: தினை அரிசி - ஒரு கப், வெங்காயம், கேரட், குடமிளகாய் (சின்னது) - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 வாழைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை: நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், கடைந்த தயிர் - 2 கப், பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம், தனியா - தலா அரை டீஸ்பூன், வெந்த கடலைப்பருப்பு - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.  
செய்முறை:  வாழைத்தண்டை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். பச்சை மிளகாய், தனியா, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த வாழைத் தண்டுடன் சேர்க்கவும். இதனுடன் தயிர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், வெந்த பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து, இது நுரைத்து பொங்கி வரும்போது எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

 ஓட்ஸ்  சம்பா ரவை இட்லி
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், சம்பா கோதுமை ரவை - அரை கப், தயிர் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 10, 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, இந்தக் கலவையை இட்லிகளாக செய்து பரிமாறவும்.

 வெந்தயத் தட்டு பச்சடி
தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், வெந்தயம் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும், வெந்தயத்தையும் சிவக்க வறுக்கவும். கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயையும் வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பும் சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடைந்த தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் பொடியை கலந்து... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுக்கு மிகவும் நல்லது.  நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

 அவரைக்காய் கூட்டு
தேவையானவை: அவரைக்காய் (நறுக்கியது) - ஒரு கப், பாசிப் பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு (பொடி செய்ய) - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உளுத்தம் பருப்பு (தாளிக்க) - கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: அவரைக்காய், பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் உளுத்தம்பருப்பு,   மிளகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுத்து இறக்கி, சீரகம் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வேக வைத்த காயுடன் இந்தப் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக எண்ணெயில் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

 தானிய அடை
தேவையானவை: காராமணி - ஒரு கப், பச்சைப் பயறு - ஒரு கப், கொண்டைக்கடலை - ஒரு கப், சிவப்பரிசி - ஒரு கப், சோள ரவை (மளிகைக் கடையில் கிடைக்கும்) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெள்ளை வெங்காயம் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லா தானியங்களையும் முதல் நாளே காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் அரைப்பதற்கு முன் சோள ரவையை கால் மணிநேரம் ஊற வைத்து சேர்த்து அரைக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, சிறிது நேரம் மூடி வைத்து, சுட்டடெடுக்கவும். ஒரு அடைக்கு கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டால் போதும்.

 கொள்ளு சுண்டல்
தேவையானவை:  கொள்ளு - ஒரு கப், காராமணி, பச்சைப் பயறு - தலா அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பொடி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, காராமணி, பச்சைப் பயறு ஆகியவற்றை ஒன்றாக முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... வேக வைத்த கொள்ளு கலவையை சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பொடியைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: பயறு வகைகள் வேக வைத்த நீரை, ரசம் செய்யும்போது சேர்க்கலாம்.

 புரூக்கோலி சப்பாத்தி
தேவையானவை:  புரூக்கோலி - ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், தனியாத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புரூக்கோலியை கழுவி பொடியாக நறுக்கவும். கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு இதை லேசாக வதக்கவும். இதனுடன் கோதுமை மாவு, தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, தாவாவில் போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.  
குறிப்பு: குழந்தை பெற்ற பெண்கள், ஒரு மாதத்துக்கு புரூக்கோலியை சாப்பிடக்கூடாது.

 வெள்ளை பூசணி பொரியல்
தேவையானவை: வெள்ளை பூசணி (நறுக்கியது) - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூசணிக்காயை சேர்க்கவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும் (சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும்). காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை பிழிந்து போடவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
வெள்ளை பூசணி வாயுத்தொல்லையை தணிக்கும்.

 முள்ளங்கி ராய்தா
தேவையானவை: துருவிய முள்ளங்கி - ஒரு கப், கடைந்த தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு). பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் (காரல் நல்லது. அப்படியே கூட தயிருடன் சேர்த்து, உப்பு போடலாம்). கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்.

 ராகி  பசலைக்கீரை மாசாலா
தேவையானவை:  கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - தலா ஒரு கப், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பவுடர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து, உப்பு போட்டு கிளறி, பால் விட்டு கலக்கவும். இதை ஆவியில் வேக வைத்து... ஆறியதும் சிறு துண்டுகளாக செய்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் கேழ்வரகு மாவு துண்டுகளை சேர்த்து... கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு கிளறி, கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பவுடரை தூவி இறக்கவும்.

 கோவைக்காய் கறி
தேவையானவை: நறுக்கிய கோவைக்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை நன்றாக கழுவி நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, கோவைக்காயை சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்றாக கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்து மூடி வைத்து, சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்கவும்.
கோவைக்காய் இரும்புச் சத்து கொண்டது.

 புடலங்காய் கடுகு பச்சடி
தேவையானவை: பொடியாக நறுக்கிய புடலங்காய் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது), தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: நறுக்கிய புடலங்காயை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். அரை டீஸ்பூன் கடுகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து... வெந்த காய் ஆறியதும் அதனுடன் கலக்கவும். பிறகு, கடைந்த தயிர் சேர்த்து... எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

கம்பு ரொட்டி
தேவையானவை:கம்பு மாவு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கம்பு மாவில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து வைக்கவும். வாழையிலையில் மெல்லியதாக இந்த மாவை தட்டி தவாவில் போடவும். சிறிதளவு எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். பிறகு, திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைத்து செய்யவும்).

 அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை:அகத்திக்கீரை (நறுக்கியது) - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - அரை டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் கீரையை போடவும். பிறகு மஞ்சள்தூள், பாசிப்பருப்பு சேர்த்து நீர் தெளித்து மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 5 நிமிடம் கழித்து மறுபடியும் நீர் தெளித்து வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
அகத்திக்கீரை வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. உடம்பில் உள்ள கெட்ட நீரை எடுக்கும்.

 சம்பா ரவை கிச்சடி
தேவையானவை: சம்பா கோதுமை ரவை - ஒரு கப், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, குடமிளகாய் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சம்பா கோதுமை ரவையை கடாயில் சிவக்க வறுக்கவும். வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... வெங்காயத்தை போட்டு வதக்கவும், பிறகு கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணியை போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்துக் கலந்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 சாமை அரிசி உப்புமா
தேவையானவை:சாமை அரிசி - ஒரு கப், வெள்ளை வெங்காயம், கேரட் - தலா ஒன்று, நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும். கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 காராமணி கிரேவி
தேவையானவை: காராமணி - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), பூண்டு - 2 பல், பட்டை - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1 அல்லது 2, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை முதல் நாள் ஊற வைக்கவும் (மாலையில் செய்வதானால் காலையில் ஊற வைக்கவும்). ஊறிய காராமணியை குக்கரில் வேக வைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பட்டை சேர்க்கவும். வெங்காயம் வதக்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும். ஆறியதும் இதை விழுதாக அரைத்து, காராமணியுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். உப்பு, கொத்தமல்லி சேர்த்து... 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.

 வெஜிடபிள் சாலட்
தேவையானவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கலர் கோஸ், வெள்ளை கோஸ், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் - தலா ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன் (வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, வெந்தயப்பொடி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் முளைகட்டிய பயறு சேர்க்கலாம்.
வாரத்துக்கு 4 நாட்கள் இதை சாப்பிட்டால்... உடல் நலம் மேம்படும்.

 கம்பு தோசை
தேவையானவை: கம்பு - 3 கப், சிவப்பரிசி, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், அவல் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கம்பு, சிவப்பரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும். 5 மணி நேரம் ஊற வேண்டும். முதலில் கம்பை போட்டு அரைக்கவும். கம்பு ஓரளவு அரைபட்டதும் அரிசி, உளுத்தம்பருப்பு - வெந்தயம், அவலை களைந்து போட்டு நைஸாக அரைக்கவும்.  பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை விட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

 முருங்கைக்கீரை சூப்
தேவையானவை:ஆய்ந்து, சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பூண்டு - ஒரு பல், மிளகு - கால் டீஸ்பூன், தனியா, சீரகம் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  வெங்காயம், தக்காளியை நறுக்கவும். மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ளவும். கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வந்தால், முருங்கைக்கீரை நிவாரணம் அளிக்கும்.

 துளசி ரசம்
தேவையானவை: துளசி இலை - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைக்கவும். புளியை நன்றாக கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களை அரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் துளசியை அரைத்து அதனுடன் சேர்த்து, நுரைத்ததும் இறக்கி... எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
துளசி, ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

 வெந்தயக் கறி
தேவையானவை:வெந்தயம் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்  - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், சக்கரை - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  வெந்தயத்தை முதல் நாள் ஊற வைக்கவும், மறுநாள் காலையில் எடுத்து நீரை நன்றாக வடித்து, 'ஹாட் பேக்’கில் போட்டு மூடி வைக்கவும். அதற்கு அடுத்த நாள் நன்றாக முளைவிட்டிருக்கும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... முளைகட்டிய வெந்தயத்தை சேர்க்கவும். கொஞ்சம் நீர் தெளித்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும்

 அவல் பிஸிபேளாபாத்
தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், நறுக்கிய  பூசணிக்காய் - அரை கப்,  கேரட் - ஒன்று, குடமிளகாய் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி, சௌசௌ - தலா அரை கப், வெங்காயம் - ஒன்று, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை களைந்து 10 நிமிடம் வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை  எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து பொடி செய்யவும். பாசிபருப்பை மஞ்சள்தூள், காய்களுடன் வேக வைக்கவும் (குடமிளகாய், வெங்காயம் தவிர). அதனுடன் புளிக் கரைசல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அரைத்து வைத்த பொடியை சேர்த்து... வெங்காயம், குடமிளகாயை வதக்கி போட்டு, அவலை பிழிந்து சேர்க்கவும். எல்லாம் சேர்ந்தாற்போல் வந்தததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

 தனியா பொடி
தேவையானவை:தனியா - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தனியாவை வாசனை வரும் வரை வறுக்கவும். காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். அந்த சூட்டில் புளியை பிய்த்துப் போடவும். பெருங்காயத்தை பொரித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு நைஸாக பொடி செய்து வைக்கவும்.
இதை புளி இல்லாமலும் செய்யலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். நீர் மோரில் ஒரு டீஸ்பூன் போட்டு குடிக்கலாம். இது உடலில் உள்ள கெட்ட நீரை எடுக்கும். பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். குமட்டலை போக்கும்.

 கொள்ளு  ஃப்ளாக்ஸ் சீட் பொடி
தேவையானவை: ஃப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், கொள்ளு - அரை கப்.
செய்முறை: கொள்ளுவை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் ஃப்ளாக்ஸ் சீட் சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும். வாரம் 3 நாளைக்கு ஏதாவது ஒரு காயில் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். கொள்ளு - ஃபிளாக்ஸ் சீட் பொடி சேர்த்தால் காய் சுவையாக இருக்கும்.
ப்ளாக்ஸ் சீட் கொழுப்பு சத்தைக் குறைக்கும்.

சுரைக்காய் பொரியல்
தேவையானவை: நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப்,  மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பொடி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... சுரைக்காயை சேர்க்கவும். மஞ்சள்தூள் தூவி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தேவையென்றால் கொஞ்சம் நீர் தெளிக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10 நிமிடம் கழித்து காயை நன்றாக கிளறி, ஃப்ளாக்ஸ் சீட் பொடி தூவி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடத் துக்குப் பிறகு இறக்கவும்.

 வரகு புளியோதரை
தேவையானவை: வரகு - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வரகை அரை மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாயை பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து... புளிக் கரைசலை விடவும். இதனுடன் உப்பு, தனியா - மிளகாய் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடவும். வேக வைத்த கடைசியில் வரகை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி
ஸ்பைஸி பப்பட் ரோல்
தேவையானவை: ஆச்சி அப்பளம் - 12 (அல்லது தேவைக்கேற்ப), எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
ஸ்டஃப்பிங் செய்ய தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் -  தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி     மஞ்சள்தூள், ஆச்சி கரம் மசாலாத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு  - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை (வெங்காயம் தவிர) குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு மசிக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுது, ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, காய்கறி விழுதைப் போட்டு, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து ஆறவிடவும். எலுமிச்சைச் சாறு சேர்க்கவும் இந்தக் கலவை ஆறியதும் சிலிண்டர்கள் மாதிரி உருட்டி வைக்கவும் (கலவை தளர இருந்தால், பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்).
வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). தட்டில் நீர் விட்டு, ஆச்சி அப்பளங்களை ஒவ்வொன்றாக அதில் நனைத்து, உடனே எடுத்து, நீரை மட்டும் ஒற்றி எடுத்தால் நமுத்த மாதிரி ஆகும். அப்பளத்தின் நடுவில்  சிலிண்டர் வடிவ காய்கறி உருண்டையை வைத்து ரோல் செய்தால் அப்பளம் ஒட்டிக்கொள்ளும். அல்லது கையால் நன்கு ஒட்டிவிடவும். எண்ணெய் காய்ந்ததும், ரோல்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  


இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி கெட்சப்  மிகவும் ஏற்றது
- ராஜி கணேசன், சென்னை-40


நன்றி - அவள் விகடன்
படம்: ஆ.முத்துக்குமார்

Sunday, March 17, 2013

30 வகை ஆந்திரா ரெசிபி -சமையல்கலை

னிமாவானாலும் சரி, சமையலானாலும் சரி... கலர்ஃபுல்லாக, 'சுர்ர்ர்’ என்று சுண்டி இழுப்பதுதான் ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டி! அத்தகைய ஆந்திர சமையலில் 30 ரெசிபிகளை இந்த இணைப்பிதழில் வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் சீதா சம்பத்.


 ''குண்டா பொங்கடாலு, டேட்ஸ் ஒபட்டு, ஆப்பிள் ரபடி, உண்ட்ரல்லு, பூரணம் பூரேலு, யுகாதி பச்சடி என்று வெரைட்டியான ஆந்திர ரெசிபிகளை தேடித் தேடி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளேன். இவற்றை செய்து பரிமாறினால், 'சால பாக உந்தி’ என்ற பாராட்டு உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்'' என்று உறுதி கூறும் சீதாவின் ரெசிபிகளை, சிறப்பாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

30 வகை ஆந்திரா ரெசிபி
தொகுப்பு: பத்மினி; படங்கள்: எம்.உசேன்
முருங்கைக் குழம்பு


தேவையானவை: முருங்கைக்காய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பூண்டு - 4 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, சின்ன வெங்காயம் - 10, பால் - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டுப் பல், மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு காய் வேகும் வரை கொதிக்கவிடவும். உடனே பாலை கலந்துவிடவும். கெட்டியானதும் தீயை நிறுத்தவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்து, உப்பு போட்டு நன்கு வதக்கவும். இதை சூடான குழம்பில் சேர்க்கவும்.
இந்தக் குழம்பை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

கத்திரிக்காய் ஊறுகாய்
தேவையானவை: கத்திரிக்காய் - 500 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, மிளகாய்தூள் - 50 கிராம், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, 'கட்’ செய்யவும்.  புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து, கத்திரிக்காயுடன் கலக்கவும். அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கலக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால்... கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

வொயிட் டோக்ளா
தேவையானவை: அரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு -  கால் கப், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - கால் கப்புக்கு சற்று குறைவான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, அரிசியை தனித்தனியாக ஊற வைத்து அரைத்து, உப்பு கலந்து, இட்லிக்கு கரைப்பது போல கரைத்து, இரவு முழுக்க மூடி வைக்கவும். மிளகு, சீரகத்தை வறுத்து தூள் செய்யவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவவும். மாவுடன் பேக்கிங் சோடா, எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், மிளகு - சீரகப் பொடி சேர்த்துக் கலக்கவும். கரைத்து வைத்த மாவை தட்டில் அரை பாகம் வரும்படி விட்டு ஆவியில் வேக வைத்து எடுத்து, 'கட்’ செய்யவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
இதனை கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

 ஆந்திரா பருப்பு பொடி
தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பொட்டுக்கடலை - ஒரு கப், பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதேபோல, சீரகம், பொட்டுக்கடலை, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்துக் கிளறி இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயை வறுத்து, மற்ற பொருட்களுடன் கலந்து, உப்பு சேர்த்து பொடி செய்தால்... ஆந்திரா பருப்பு பொடி தயார்.
இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட... அட்டகாசமான ருசியில் இருக்கும். அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் சேர்த்துச் சாப்பிடால், சுவை கூடும்.

ஓட்ஸ்  பனானா ஸ்மூத்தி
தேவையானவை: ஓட்ஸ் - 2 கப், பால் - முக்கால் கப், யோகர்ட் - கால் கப், வாழைப்பழம் - ஒன்று, தேன் - 2 டீஸ்பூன், வால்நட் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை: ஓட்ஸை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும்... யோகர்ட், வாழைப்பழ துண்டுகள், தேன், கொஞ்சம் பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்கவும். எடுத்த கலவையை கண்ணாடி கிளாஸில் விட்டு, மீதம் உள்ள பால் விட்டு கலக்கவும். வால்நட்ஸை மேலே தூவிவிடவும்.

மூளி சப்ஜி
தேவையானவை: முள்ளங்கி துண்டுகள் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சீரகத்தை சேர்த்து, பொரிந்ததும், எள் சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு போட்டு... வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து, வெந்து வரும்போது முள்ளங்கி துண்டுகள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள் போட்டுக் கலந்து வதக்கவும். லேசாக தண்ணீர் தெளித்துக் கிளறவும். முள்ளங்கி வெந்ததும் இறக்கவும்.

தக்காளி  பருப்பு ரசம்
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், தக்காளி - 4, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, தண்ணீர் - 5 கப்,  ரசப்பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை சுத்தம் செய்து, வேக வைத்து மசித்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தக்காளி, பூண்டு, மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்து எடுக்கவும். கடாயில் 3 கப் தண்ணீர் விட்டு, அரைத்த தக்காளி விழுது, புளிக் கரைசல், உப்பு, ரசப்பொடி, மஞ்சள்தூள் போட்டு, கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், பருப்புக் கரைசல் சேர்த்து நுரைத்து வரும்போது தீயை நிறுத்திவிடவும். கடாயில் நெய் விட்டு காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.

வெந்தையக்கீரை தொக்கு
தேவையானவை: வெந்தயக்கீரை இலை - 2 கப், தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் சேர்த்து பொரியவிடவும். இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். வெந்து வரும் சமயம் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் போட்டு கிளறவும். இதில் சுத்தம் செய்த கீரையைப் போட்டு சுருள வதக்கி எடுக்கவும். நன்கு ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு சூடானதும், அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாக சுருளக் கிளறி எடுக்கவும்.

படோலி
தேவையானவை: அவரைக்காய் - 100 கிராம், கடலைப்பருப்பு அல்லது பயத்தம்பருப்பு - அரை கப், வெங்காயம் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 10 பல், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, உப்பு, பச்சை மிளகாய், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, துருவிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் அரைத்த விழுதை கொட்டிக் கிளறவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து கடாயை மூடி வைக்கவும். 3 நிமிடத்துக்கு ஒரு முறை மூடியைத் திறந்து, கிளறிக் கொள்ளவும். நன்கு வெந்து வந்ததும் (கையில் ஒட்டாத பதம்)... நறுக்கி, வேக வைத்து, வதக்கிய அவரையை சேர்த்துக் கலக்கவும். ஒன்றாக சூடுபட வதங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி கலந்தால்... படோலி ரெடி.

சிலகாடா ஸ்வீட்
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ, பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து, வேக வைத்து, ஆறியதும் வட்ட வடிவில் 'கட்’ செய்யவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வெல்லத்தை சேர்த்து  கரைய விட்டு, கம்பி பதத்தில் பாகு தயார் செய்து, வள்ளிக்கிழங்கு துண்டுகளை அதில் போட்டு கலக்கவும். ஏலக்காய்த்தூள், நெய் விட்டுக் கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இதை ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

பெசரபப்பு கீர்
தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், பால் - 3 கப், நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், கோவா (சர்க்கரை இல்லாதது) - ஒரு கப், முந்திரித் துண்டுகள், திராட்சை இரண்டும் சேர்த்து - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பயத்தம்பருப்பை சுத்தம் செய்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து, ஒரு கப் பால் விட்டு வேக வைத்து எடுத்து, கரண்டியால் மசித்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை, கோவா கலந்து, மீதமுள்ள பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, கீர் போன்ற பதத்துக்கு வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு, முந்திரித் துண்டுகள், திராட்சையை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

பாலக்  - லைம் தால்
தேவையானவை: பாலக் (பசலைக் கீரை) - ஒரு கட்டு, துவரம்பருப்பு - கால் கப், வெங்காயம், எலுமிச்சம் பழம் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 5 (அல்லது விருப்பத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பூண்டு - 2 பல் , எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாலக், வெங்காயம், பச்சை மிளகாயை சுத்தம் செய்து, நறுக்கி, துவரம்பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் கலந்து மத்தால் கடைந்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், நசுக்கிய பூண்டு தாளித்து, பருப்புக் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

மாங்காய் புளியோதரை
தேவையானவை: மாங்காய் - ஒன்று, பச்சரிசி சாதம் - 3 கப்,  காய்ந்த மிளகாய் -  4, பச்சை மிளகாய் - 2, கடுகு,  சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள்,
மஞ்சள் தூள் தாளித்து, பச்சை மிளகாயை நீளவாட்டில் நறுக்கிப் போட்டு புரட்டவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, வறுத்து வைத்திருக்கும் பொருட்களை கலக்கவும். இதை அப்படியே சாதத்தில் சேர்த்து, மாங்காய் துருவல் போட்டு லேசாக கலக்கவும். பிறகு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் மூடி வைத்து, பின்பு பரிமாறவும்.

சூஜி லாடு
தேவையானவை: ரவை - ஒரு கப், தேங்காய் கொப்பரை - ஒன்று, சர்க்கரை - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், பால் (அ) நீர் - 25 மில்லி, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு - 10, வறுத்த திராட்சை - 30.
செய்முறை: கொப்பரையை துருவிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு முந்திரி துண்டுகள், திராட்சையை வறுக்கவும். இதனுடன் ரவையை சேர்த்து வறுக்கவும். பிறகு கொப்பரைத் துருவலையும் கலந்து, அடுப்பை குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாகும் வரை வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். காய்ச்சிய பால் (அ) சுடுநீர் விட்டுக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: பால் விட்டு தயாரித்தால், ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். சுடுநீர் விட்டு உருண்டை பிடித்தால் நாள் பட இருக்கும்.

குண்டா பொங்கடாலு
தேவையானவை: அரிசி - 2 கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா கால் கப், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 8 (அல்லது விருப்பத்துக்கேற்ப), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புகளைச் சுத்தம் செய்து, ஒன்று சேர்த்து 6 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்தில் அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். இஞ்சி - பச்சை மிளகாயை அரைத்து அதில் கலக்கவும் (பொடியாக நறுக்கியும் போடலாம்). கொத்தமல்லி இலை, நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள், சீரகம் சேர்த்துக் கலந்து 5 நிமிடம் மூடி வைக்கவும். குழிப்பணியார சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை எடுத்து  விடவும். வெந்ததும் திருப்பிவிடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்தால்... குண்டா பொங்கடாலு தயார்.
சட்னி, தக்காளி சாஸ் இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

டேட்ஸ் ஒபட்டு
தேவையானவை: மைதா - ஒரு கப், விதையில்லாத பேரீச்சம் பழம் - ஒரு கப், வெல்லம் - சிறிய எலுமிச்சம்பழ அளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை, பாதாம், - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.  
செய்முறை: மைதா, உப்பு, எண் ணெயைச் சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். பேரீச்சம்பழத்தை ஆவியில் வேக வைத்து மசிக்கவும். வெல்லத்தை தூளாக்கி, மசித்த பேரீச்சம்பழத்துடன் கலந்து, கடாயில் சேர்த்து, அடுப்பில் வைத்து, கெட்டியாக கிளறவும். இதில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பூரணமாக தயாரித்து, ஏலக்காய்த்தூள் சேர்த் துக் கலந்து எடுத்து வைக்கவும்.
பிசைந்து வைத்த மாவில் எலுமிச்ச பழ அளவு எடுத்து சிறிய சப்பாத்தி போல இட்டு அதன் மீது 2 டீஸ்பூன் அளவு பூரணம் வைத்து மூடி மீண்டும் தட்டி, சூடான தவாவில் போட்டு,  வெந்ததும் திருப்பி போட்டு நெய் தடவி எடுத்தால்... டேட்ஸ் ஒபட்டு தயார். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

தேங்காய் -  கொத்தமல்லி சட்னி
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு (கழுவி சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து அரைத்து எடுக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்).

சுரைக்காய் பூரேலு
தேவையானவை: சுரைக்காய் துருவல் - 2 கப், அரிசி மாவு - 5 கப், பச்சை மிளகாய் - 5 (அ) 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் (அ) அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் துண்டுகளாக்கி அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், சீரகம், சுரைக்காய் துருவல், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து, அரிசி மாவை தூவி நன்கு கலக்கவும் (தண்ணீர் சேர்க்கக் கூடாது). இந்த கலவையை சிறு உருண்டைகளாக செய்து ஈரத்துணியில் உருண்டையை வைத்து தட்டி, காயும் எண்ணெயில் போட்டு சிவந்ததும் திருப்பிவிட்டு எடுக்கவும். இதனை பேப்பர் டவலில் வைத்து எடுத்தால், அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும்.

தக்காளி -  கத்திரிக்காய் கறி
தேவையானவை: வயலட் கத்திரிக்காய் - 6, கடுகு, சீரகம், - தலா அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், தக்காளி - 2, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம் மூன்றையும் நீள வாட்டில் நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து, வறுபட்டதும் நறுக்கிய வெங்காய துண்டுகள் சேர்த்து, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல வந்ததும் மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கவும். கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு கலந்து 2 நிமிடம் மூடிவைக்கவும். உடனே திறந்து தக்காளி துண்டுகள் போட்டு கலந்து வேக வைத்தால். கிரேவியாக வந்து இருக்கும். கிரேவி திக்கானதும் தீயை நிறுத்திவிடவும். வேறு பாத்திரத்துக்கு மாற்றி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
இது... தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது.

 பியம் பாயசம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பால் - 3 கப், நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், சர்க்கரை இல்லாத கோவா - அரை கப், முந்திரி, திராட்சை - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாலை நன்கு காய்ச்சவும். கழுவிய அரிசியை சேர்த்துக் கலந்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். பிறகு, கோவாவையும் சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்தால்... பியம் பாயசம் தயார்.
இதை சூடாகவோ... குளிர வைத்தோ பரிமாறலாம்.

ஆந்திரா முறுக்கு
தேவையானவை: அரிசி - ஒரு கிலோ, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா 100 கிராம், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 25 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புகளை தனித்தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் வடித்து துணியில் நிழல் உலர்த்தலாக காய வைக்கவும். கடாயை சூடு செய்து... அரிசி, பருப்பை தனித்தனியாக வறுத்து, ஒன்றாகக் கலந்து, மெஷினில் கொடுத்து அரைக்கவும். இந்த மாவில், நெய், பெருங்காயத்தூள், உப்பு கலந்து, தண்ணீர் விட்டுப் பிசையவும். இதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து நீள வாட்டில் உருட்டி முனைகளை ஒட்டி 'ரிங்’ வடிவில் செய்து, காயும் எண்ணெயில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் (முறுக்கு அச்சில் போட்டும் பொரித்தெடுக்கலாம்).  
குறிப்பு: இந்த மாவையே பகோடா, ஓமப்பொடி, ரிப்பன் பகோடா செய்யவும் பயன்படுத்தலாம்.

பூரணம் பூரேலு
தேவையானவை: அரிசி - 3 கப், கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு கப், பயத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறுப்பு உளுத்தம் பருப்பை அரிசியுடன் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கால் கப் சர்க்கரையை கலக்கவும். பயத்தம்பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து கெட்டியாக அரைத்து எடுத்து, ஆவியில் வேக வைத்து எடுத்து, உதிர்த்துக் கொள்ளவும். இத்துடன் மீதமுள்ள சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் கலந்து நன்கு பிசைந்து உருண்டைகளாக  உருட்டவும். உருண்டைகளை அரிசி - உளுத்தம்பருப்பு மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடவும். வெந்ததும் திருப்பிவிடவும். பொன்னிறமாக வெந்ததும், எண்ணெய் வடித்து எடுக்கவும்.

தொண்டைக்காய் கறி
தேவையானவை: கோவைக்காய் - 20, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,  எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். வெங்காய துண்டுகளையும் போட்டு ஒரு சுற்றி சுற்றி எடுக்கவும். கோவைக்காய் துண்டுகளாக நறுக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, கடாயில் போட்டு, எண்ணெய் விட்டு வதக்கவும். வெந்து வரும் சமயத்தில், வெங்காய கலவையை கோவைக்காயுடன் சேர்த்துக் கிளறி, நல்ல வாசனையுடன் சேர்ந்தாற்போல வந்ததும் எடுக்கவும்.

யுகாதி பச்சடி
தேவையானவை: வேப்பம்பூ - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - கால் கப், புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன், பச்சை மாங்காய் (துருவியது) - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை ஊற வைத்து கொஞ்சம் கெட்டியாக கரைத்து எடுக்கவும். அதில் வெல்லத்தூளை போட்டு கரைக்கவும். இதனுடன் வேப்பம்பூ, துருவிய மாங்காய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கரை சலை கொதிக்கவிட்டு திக்காக இருக்கும் பதம் பார்த்து இறக்கினால்... உகாதி பச்சடி தயார்.

ஆப்பிள் ரபடி
தேவையானவை: ஆப்பிள் - 2, பால் - அரை லிட்டர், சர்க்கரை - ஒரு கப், பாதம் - 10 (துருவிக் கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப் பொடி - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாலை நன்கு காய்ச்சி வைக்கவும். ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவிய ஆப்பிளை வெறும் கடாயில் சூடுபட கிளறி... சர்க்கரை, பால் சேர்த்து, குறைவான தீயில் கொதிக்கவிடவும். திக்கான பதம் வந்ததும், பாதாம் துருவல், முந்திரிப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
இதை சூடாகவோ... குளிர வைத்தோ பரிமாறலாம்.

 கார்ன் ஃப்ளேக்ஸ் -  பிஸ்கட் மிக்ஸர்
தேவையானவை: கார்ன் ஃப்ளேக்ஸ் - 250 கிராம், குட்டியான உப்பு மற்றும் ஸ்வீட் பிஸ்கட்  இரண்டும் சேர்த்து - 100 கிராம், வேர்க்கடலை - 100 கிராம், முந்திரி - 3 டேபிள்ஸ்பூன், திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையானது.
செய்முறை: சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கார்ன் ஃப்ளேக்ஸை பொரித்து டிஷ்யூ பேப்பரில் போடவும் (எண்ணெயை உறிஞ்சிவிடும்). பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள்தூள்,  சர்க்கரைப் பொடியைக் கலக்கவும். வேர்க்கடலை, முந்திரி, திராட்சை தனித்தனியாக வறுத்து கலக்கவும். கறிவேப்பிலையை வறுத்து சேர்க்கவும். பிஸ்கட்களையும் சேர்க்கவும். சூடாக இருக்கும்போதே மிளகாய்த்தூளை கலக்கவும். கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ரெடி.

கலாகந்த்
தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பாதாம் துண்டுகள், முந்திரித் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சவும். இதனுடன் எலுமிச்சைச் சாறை கலக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைக்கவும். 10 நிமிடத்தில் பால் திரிந்து நிற்கும். அதிலிருந்து பனீரை வடிகட்டி எடுக்கவும்.
மீதி ஒரு லிட்டர் பாலை, பாதியாக சுண்டும் அளவு காய்ச்சவும். பனீரை உதிர்த்து பாலுடன் கலந்து, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இது சுண்டி அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து... நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டு பாதாம், முந்திரி தூவி அலங்கரிக்கவும்.

 மசாலா இட்லி
தேவையானவை: இட்லி - 4, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளாகாயை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்துள், உப்பு, துண்டு இட்லிகள் சேர்த்துக் கிளறி... ஒரு நிமிடம் மூடி வைத்துக் கிளறி பரிமாறவும்.

உண்ட்ரல்லு
தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், தண்ணீர் - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: கடலைப்பருப்பை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சூடானதும் சீரகத்தை வறுத்து, தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கும்போது உப்பு, கடலைப்பருப்பை சேர்க்கவும். இதில் அரிசி ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, கட்டி தட்டாமல் கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் நெய் தடவிக் கொண்டு கலவையில் கொஞ்சம் எடுத்து உருட்டினால்... உண்டரல்லு தயார்.
இதனை விநாயக சதுர்த்தி அன்று, விநாயகருக்கு  படைப்பார்கள்.

பயறு சட்னி
தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒன்றை டீஸ்பூன்.
செய்முறை: பச்சைப் பயறை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெறும் கடாயில் சீரகம், மிளகாயை வறுத்துப் பொடி செய்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். ஊற வைத்த பயறை தண்ணீர் வடிகட்டி மிக்ஸியில் போட்டு, எலுமிச்சைச் சாறு, உப்பு, சீரகம் - மிளகாய் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்தால்... பயறு சட்னி தயார்.
இதை டிபன் அயிட்டங்களுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

thanx- vikatan