Showing posts with label ‘ஸ்பாட்லைட்-கலக்கல் ஹாலிவுட்திரைப்படம்.. Show all posts
Showing posts with label ‘ஸ்பாட்லைட்-கலக்கல் ஹாலிவுட்திரைப்படம்.. Show all posts

Sunday, November 01, 2015

‘ஸ்பாட்லைட்-கலக்கல் ஹாலிவுட்திரைப்படம்.

பிரபல அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தாமஸ் மெக்கர்த்தி இயக்கத்தில் வரும் நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது ‘ஸ்பாட்லைட்’ என்னும் ஹாலிவுட் திரைப்படம். இயக்குநர் மெக்கர்த்தி தனது ‘அப்’ திரைப்படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்டு விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் வெளிவரும் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினர் மேற்கொண்ட விசாரணையைப் பற்றிய படம் இது. 2002-ம் ஆண்டு மாஸாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெற்ற பாலியல் முறைகேடுகளைத் துப்புத் துலக்கி விளக்கமான அறிக்கைகளைத் தொடர்ந்து பிரசுரித்துவந்தது ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை. இதற்காக 2003-ம் ஆண்டு அந்தப் பத்திரிகைக்கு புலிட்ஸர் விருதும் கிடைத்தது. இந்தச் சம்பவங்களை உள்ளடக்கியதே இந்த ஸ்பாட்லைட் திரைப்படம்.
கத்தோலிக்க ஆலயத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் சுரண்டலுக்காக ஐந்து கத்தோலிக்கப் பாதிரியார்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விவகாரத்தில் ‘த பாஸ்டன் க்ளோப்’ பத்திரிகை துணிச்சலுடன் செயல்பட்டுத் திரைமறைவு ரகசியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுப் பாதிரியார்கள் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. பின்னர் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான ‘த பாஸ்டன் க்ளோப் ’ அறிக்கைகள் படு சூடாக அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டன. இந்தச் சூடான சம்பவங்களை அப்படியே ருசிகரமான திரைக்கதையாக்கியிருக்கிறார் தாமஸ் மெக்கார்த்தி. இதைத் திரைக்கதையாக்கியதில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜோஷ் சிங்கர்.
கால ஓட்டத்தில் இந்தப் பாலியல் முறைகேடுகள் தொடர்பான முணுமுணுப்புகள் சிறிது சிறிதாகச் சமூகத்தினரிடையே ஒலித்து மறைந்துவிட்டது. மக்களும் ஊடகங்களும் இந்த அவமானகரமான கதையை மறந்துவிட்டுத் தத்தம் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சட்ட அமைப்பும் காவல்துறையும்கூட இந்தச் சம்பவத்தை விட்டு விலகி நெடுதூரம் வந்துவிட்டன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தின் பின்னணியில் மறைந்து கிடந்த உண்மையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியது பாஸ்டன் க்ளோப் பத்திரிகை. உண்மையை வெளி உலகுக்குத் தெரியப் படுத்த துணிச்சலுடன் செயலாற்றியது.
இதுதான் இப்போது திரைப்படமாகியிருக்கிறது. ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் பாலியல் முறைகேடுகளை அறியாத தலைமுறையினருக்கு இந்தப் படம் அந்த மோசமான சம்பவங்களை நினைவுபடுத்தும். இந்தப் பத்திரிகையின் ஸ்பாட்லைட் குழுவினராக மார்க் ரூஃபலோ, மைக்கேல் கீட்டன், ரேச்சல் மெக்காதம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான திரைக்தையை மெக்கார்த்தியும் ஜோஷ் சிங்கரும் கடந்த 2013-ம் வருடத்திலேயே முடித்துவிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2014 செப்டம்பர் 24 அன்று பாஸ்டனில் தொடங்கி நடைபெற்றிருக்கிறது. கடந்துபோன வரலாற்றின் கறை படிந்த தருணங்கள் மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வரும்போது அது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துமோ என்ற ஆவலுடன் அமெரிக்கா இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

தஹிந்து