Showing posts with label ஹிந்து. Show all posts
Showing posts with label ஹிந்து. Show all posts

Monday, December 26, 2011

பாரதரத்னா விருது சினிமா நடிகர்களுக்கு தரலாமா? ஒரு ஆய்வு

கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற பரவலான பரிந்துரையின் எதிர்வினையாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி  தி ஹிண்டு நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.


குடியரசு தினத்தன்று வழங்கப்படும் 'பாரத ரத்னா' விருதுதான் இன்றைய நாட்களில், செய்தியாகின்றன. மிர்சா காலிப் மற்றும் சரத் சந்திர சட்டோபத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தபோது, சிலர் அதை எதிர்த்தார்கள். இறந்து போனவர்களுக்கு எல்லாம் அந்த விருது வழங்கப்படக் கூடாது என்பதே அவர்கள் சொல்லும் காரணமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரையில், மிகச் சரியானவர்களுக்கு... அவர்கள் இறந்து போயிருந்தாலும் விருது வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. கடந்த காலங்களில், இறந்த பின்னால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. சர்தார் படேல் மற்றும் டாக்டர் அம்பேத்கார் ஆகியோர் சிறந்த உதாரணங்கள்.

மிர்சா காலிப் நவீன மனிதர்தான். ராமரைப் போல புராணகால மாந்தரோ அல்லது கௌதம புத்தர் போல தொன்மையானவரோ அல்ல. நிலப்பிரபுத்துவ மரபில் இருந்து வந்தவரே ஆனாலும், நவீன நாகரிகத்தின் நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் அந்த மரபுகளை உடைத்தெறிந்தார்.

செய்யுள் ஒன்றில் அவர் இப்படி எழுதுகிறார்:

'ஈமான் முஜே ரோகே ஹை
ஜோ கின்சே ஹெ முஜே கஃபர்
காபா மேரே பீசே ஹை
கலீசா மேரே ஆகே..'

இதில் 'கலீசா' என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் தேவாலயத்தைக் குறிக்கும். ஆனால் இங்கே நவீன நாகரிகத்தைக் குறிக்கிறது. அதேபோல, 'காபா' என்பது இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவைக் குறிக்கும் நேரடியான சொல். ஆனால் இங்கே அது நிலப்பிரபுத்துவத்தைக் குறிக்கிறது. ஆக, இந்தச் செய்யுள் தரும் உண்மையான பொருள் என்னவெனில்: "மத நம்பிக்கை என்னை பின்னுக்கு இழுக்கிறது, ஆனால் ஐயப்பாடுகள் என்னை முன்நோக்கி இழுக்கின்றன; நிலப்பிரபுத்துவம் என் பின்னால் இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னால் இருக்கிறது."

காலிப், இதன் மூலம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து நவீன நாகரிகத்தை அங்கீகரிக்கிறார். அதுவும் இந்தியா நிலப்பிரபுத்துவச் சூழலில் ஆழ்ந்திருந்த 19-ம் நூற்றாண்டின் மத்தியில் இதை எழுதுகிறார்.

உருதுக் கவிதை, இந்தியப் பண்பாட்டுப் புதையலில் மின்னும் ரத்தினமாக இருப்பது ('உருது என்பது என்ன' என்ற என் கட்டுரையை www.kgfindia.com என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்). மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது இந்தச் சிறந்த மொழிக்கு. 1947-க்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளில், கற்றவர்கள் மத்தியில் மிகச் சரளமாகப் புழங்கக் கூடிய மொழியாகத்தான் உருது இருந்தது. இந்து, இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்துவர் என யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் உருது மொழி பேசுபவராக இருந்தார்கள். எனினும், 1947-க்குப் பிறகு சில தீய சக்திகள் உருது மொழியை அயல் மொழி என்றும் அது இஸ்லாமியர்களின் மொழி மட்டுமே என்றும் தவறான பொய்யுரைகளைப் பரப்பினார்கள்.

உருது மொழியில் மிக முன்னோடியான ஒரு நபர் மிர்சா காலிப். நம்முடைய கலவையானப் பண்பாட்டின் மிகச்சிறந்த பிரதிநிதியாவார். அவர் இஸ்லாமியராக இருந்த போதும், மதச்சார்பின்மையுடன் இருந்தார். பல இந்து மத நண்பர்களையும் அவர் கொண்டிருந்தார். அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம்முடைய பண்பாடு, அதில் முக்கியக் கூறான உருது, இன்னமும் நம்மிடையே வாழ்கிறது.

ஏப்ரல் 2011-ல் டெல்லியில் நடந்த ஜாஷ்ன்-ஈ-பஹார் முஷாய்ராவின் போது நான் முதன்முதலாக காலிப் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அங்கு கூடியிருந்த பிரபலங்களால் அது பெருமளவு ஆமோதிக்கப்பட்டது. சபாநாயகர் மீரா குமார், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், முதன்மை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி ஆகியோர் அவர்களில் சிலர். எனினும், சில நாட்களில் முன்னணி பத்திரிகை ஒன்று என்னுடைய கோரிக்கையை 'பைத்தியக்காரத்தனமாகிப் போன சென்டிமென்டலிசம்' என்று எழுதியது.

கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சரத் சந்திர சட்டோபாத்யாயாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். சரத் சந்திரர் தன்னுடைய கதைகளின் வழியே இந்தியாவை இன்றும் நாசப்படுத்தி வருகிற சாதிய அமைப்பையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும், மூடநம்பிக்கைகளையும் முழு மூச்சாகச் சாடியிருப்பார் (பார்க்க ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ராஹீன், தேவ்தாஸ், பிராமன் கி பேட்டி, கிராமின் சமாஜ் உள்ளிட்ட கதைகளை).

1933-ல் கல்கத்தா டவுன் ஹாலில் அவரைப் பெருமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், தனது ஏற்புரையில் சரத் சந்திரர் இவ்வாறு சொல்கிறார்: ''என் முன்னோடிகளுக்கு மட்டுமே கடன்பட்டது அல்ல எனது இலக்கியம். ஏழ்மையானவர்களுக்கும், தங்களின் எல்லாவற்றையும் இந்த உலகத்துக்குக் கொடுத்துவிட்டு அதனிடம் இருந்து திரும்ப எதையும் பெற்றுக் கொள்ளாத சாமான்யர்களுக்கும், பலவீனர்களுக்கும் மற்றும் கவனித்துக் கவலைப்பட யாருமே இல்லாது கண்ணீர் சிந்தும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். அவர்களின் துயரங்களை எடுத்துக் கொண்டு அவர்களுக்காகப் போராட அவர்களே என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட முடிவுறாத அநீதிகளுக்கும், ஒப்புக் கொள்ள முடியாத, தாங்கிக் கொள்ளமுடியாத அநீதிகளுக்கும் நான் சாட்சியமாக இருந்திருக்கிறேன். இந்த உலகத்தில் வசந்த காலங்கள், அழகோடும் செல்வத்தோடும் அன்று பூத்த பூக்களின் இனிமையான நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றலோடும், குக்கூப் பறவைகளின் பாடல்களோடும் சிலருக்கு வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த நல்ல விஷயங்கள் எல்லாமே பூகோளத்திற்கு வெளியேதான் இருக்கின்றன. எனது பார்வையோ தொடர்ந்து சிறைப்பட்டிருக்கிறது.''

இந்தியாவில் இன்றும் 80 சதவிகித நம் மக்கள் கொடுமையான வறுமையில், கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், வேலைவாய்ப்பின்மையின் பிரச்னைகள் தாண்டவமாடுகையில், ஆரோக்கியம், வீட்டு வசதி, கல்வி மற்றும் பல பிரச்னைகள் மிகுந்திருக்கும் சூழலில் இந்தப் பேச்சு நிச்சயமாக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும். 

தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து எழுதிய தமிழ்க் கவிஞன் சுப்ரமணிய பாரதிக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். 

பெண்களின் முன்னேற்றத்துக்காக வன்மையுடன் எழுதப்பட்ட பாரதியின் கவிதை ஒன்று இங்கே தரப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் 'ஹின்சா விரோதக் சங் எதிர் மிர்சாபூர் மோதி குரேஷ் ஜமத் மற்றும் பிறர்' தொடர்பான வழக்கில் மார்ச் 14, 2008-ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது:

'முப்பது கோடி முகமுடையாள்
எனில் மெய்ப்புறம் ஒன்றுடையாள்
இவள் செப்புமொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்'

பாரதியின் இன்னொரு பாடல்:

கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் காலிப்பை, சரத் சந்திரரை, சுப்ரமணிய பாரதியைப் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இப்படியான ஒரு கீழ்த்தரமான பண்பாட்டுக்குள் மூழ்கிவிட்டோம்.

நம் உண்மையான நாயகர்களை நாம் ஒதுக்கிவிட்டோம். கற்பனை நாயகர்களை மட்டும் கொண்டாடுகிறோம். இன்றைய தலைமுறை இந்தியர்கள் நம் பண்பாட்டில் இருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதை நான் வருத்தத்துடன் சொல்கிறேன். இவர்களின் கவலை முழுக்க பணம், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட், கற்பனை உலகம் என்றே இருக்கிறது. 

இன்று இந்தியா குறுக்குச்சாலைகளில் நின்று கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்கு வழிகாட்டுவதோடு நில்லாமல் அதனை முன்னெடுத்துச் செல்லும் மனிதர்கள் நமக்குத் தேவை. அப்படியானவர்களுக்கே... அவர்கள் இறந்த போயிருப்பினும் கூட பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் அவர்களுக்கு. அப்படியான விருதை சமூகத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றோருக்கு வழங்குவது அந்த விருதை ஏளனம் செய்வதாகும்!

(ஜாஷ்ன்-ஈ-பஹார் முஷாய்ராவின்: இஸ்லாமியர்களின் கவிதை வாசிக்கும் திருவிழா, கிட்டத்தட்ட நம் ஊர் மார்கழி சீஸன் போல.)