Showing posts with label ஸ்டாலின். Show all posts
Showing posts with label ஸ்டாலின். Show all posts

Wednesday, March 27, 2013

ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ சோதனை -புலனாய்வு - துலங்கும் மர்மங்கள் - ஜூ வி


கார் மட்டும்தான் காரணமா?

ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ...

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாவது விதி, அடிக்கடி நிரூபிக்கப்படுவது அரசியலில்தான். தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த புதன்கிழமை, 'சோனியாவின் பேச்சு திருப்தி அளிக்கவில்லை. காங்கிரஸுடன் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை’ என்றார். இதை​யடுத்து, தி.மு.க. அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களைக் சமர்ப்பித்த 24 மணி நேரத்துக்குள் ஸ்டாலின் வீட்டுக்குள் நுழைந்தது சி.பி.ஐ. 

கருணாநிதியின் குடும்​பத்துக்கு வெளிநாட்டுக் கார்களால் எப்போ​துமே வில்லங்கம்தான். கடந்த 2010-ம் ஆண்டு மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், பல கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை அன்பளிப்பாகப் பெற்றார் என்ற சர்ச்சையில் சிக்கினார். மீண்டும், 2011-ம் ஆண்டு மஸராட்டி வகை காரை சபரீசனும் உதயநிதி ஸ்டாலினும் முறைகேடான வழியில் இறக்குமதிசெய்து பயன்படுத்துவதாக ஒரு பிரச்னை கிளம்பியது. இப்போதும் வெளிநாட்டு கார் விவகாரத்தை வைத்தே சி.பி.ஐ-யும் ஸ்டாலினின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது.

இதன் உண்மையான விவரங்களை அறிய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 'இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கார்கள் சுற்றுகின்றன. முறைகேடான வழியில் இறக்குமதி செய்யப்பட்டு அவை இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி அந்தக் கார்களைப் பறிமுதல்செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதையடுத்து, வரி இழப்பைத் தடுக்கும் பொருட்டு இதுபோன்ற கார்களைப் பயன்படுத்துபவர்கள் யார்? அவர்கள் யார் மூலம் இவற்றை வாங்கினர் என்று விசாரிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆறு மாத காலமாக இந்தியாவில் உள்ள முக்கியத் தலைநகரங்கள் அனைத்திலும் இந்த வேலை நடைபெற்றது.


தமிழகத்தில் நாங்கள் நடத்திய சோதனையில், இதுபோல் 30-க்கும் மேற்பட்ட கார்கள் இறக்கு​மதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. அதில் பல கார்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உறவினர்கள், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி வந்தனர். கருணாநிதி தன்னுடைய பயணத்துக்கு 'லம்போகினி’, 'ஆஸ்டன் மார்ட்டின்’, 'பென்ஸ்’ ஆகிய கார்களைப் பயன்படுத்துகிறார். மு.க.ஸ்டாலின் 'ரேஞ்ச் ரோவர்’ என்ற ஸ்போர்ட்ஸ் மாடல் காரைப் பயன்படுத்தி வருகிறார். அவருடைய மருமகன் சபரீசன் 'பிஎம்டபிள்யூ மற்றும்  மஸராட்டி கார்களை பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது

. எல்லாவற்றையும்விட விலை உயர்ந்தது, மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் ஹம்மர் கார். இதனால்தான் அவர்கள் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டுக்குச் சென்றுள்ளனர். இந்த சோதனை இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடைபெறுகிறது'' என்றவர்,


''வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி​செய்து பயன்படுத்தும்போது, அதற்கு இரண்டு வகையில் வரி விதிக்கப்​படுகிறது. புதிய கார்களை வாங்கிப் பயன்படுத்தினால் அதற்கு ஒரு வரியும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்​களை வாங்குவதற்கு ஒரு வகை வரியும் விதிக்கப்படுகிறது. ஆனால், இங்குள்​ளவர்கள் புதிய கார்களின் ஆவணங்களைத் திருத்திவிட்டு, பழைய கார்கள் என்று வரி ஏய்ப்பு செய்வார்கள்.


 தமிழகத்தில் இப்படிப் போலியாக ஆவணங்களைத் திருத்தி, கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற காரியங்களுக்கு உடந்தையாக இருந்த ஒருவர், முன்பு விமானநிலையத்தில் மக்கள் தொடர்பாளராக இருந்தவர். அதன்பிறகு, வருவாய் புலனாய்வுத் துறை மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். அமலாக்கத் துறை ஆணையராக இருந்த இன்னொருவரின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும். இந்தச் சோதனையை அடுத்து, மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்யப்படும். வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்'' என்றனர்.

ஆனால், ரெய்டு நடத்திய சி.பி.ஐ., ஸ்டாலின் குடும்பத்தினருக்கு உள்ள தொழில் தொடர்புகள், சொத்துக்கள் பற்றிய பல முக்கிய ஆவணங்களையும் அள்ளிச்சென்றதாகச் சொல்கிறார்கள்.  

சி.பி.ஐ. ரெய்டு நடந்தபோது, காலையில் நடைப்பயிற்சிக்காக முன்னாள் மேயர் மா.சுப்பிர​மணியனுடன் ஸ்டாலின் வெளியில் சென்றிருந்தார். தகவல் தெரிந்த தி.மு.க. தொண்டர்கள் ஸ்டாலினின் வீட்டுக்கு முன் திரண்டனர். அவர்கள் வெளியில் இருந்தபடியே 'சி.பி.ஐ. நாயே வெளியே போ’ என்றும் 'காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை ஒழிக’ என்றும் கோஷங்களை எழுப்பினர்.


அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஸ்டாலினைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து, 'இதைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கிறீர்களா?’ என்றனர்.

''அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே. அப்புறம் என்ன? இது பழிவாங்கும் நடவடிக்கை​தான்'' என்றார் கோபத்துடன்.

தகவல் அறிந்து துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்தனர். ரெய்டு, அதிகாலையில் நடந்ததால், அனைவரையும் உடற்பயிற்சி ஆடைகளில் பார்க்க முடிந்தது. செல்வியும் உடற்பயிற்சி ஆடையிலேயே வந்திருந்தார். இரண்டரை மணி நேர ரெய்டை முடித்துக் கொண்டு சி.பி.ஐ அதிகாரிகள் வெளியே வந்தபோது, ஏற்கெனவே கொதித்துப்போய் இருந்த தி.மு.க. தொண்டர்கள் கோஷம் எழுப்பியதுடன் அதிகாரிகளின் கார்களையும் தாக்கினர். மிகவும் ரகசியமாக வந்திருந்ததால், போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

சோதனை நடந்துகொண்டிருந்தபோதே, சி.பி.ஐ-யின் இந்தச் செயல்பாடுகளைக் கண்டித்து பி.ஜே.பி-யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை விட்டன. ஆச்சரியமளிக்கும் வகையில் ப.சிதம்பரமும் சி.பி.ஐ-யின் இந்தச் செயல்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று பேட்டி கொடுத்தார்.

சிறிது நேரத்தில், சி.பி.ஐ. தன் பங்குக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் ''33 கார்​களைப் பற்றி புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மூத்த வருவாய் புலனாய்வு அதிகாரி ஒருவர் மீதும் இறக்குமதியாளர் ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

காரில் ஆரம்பித்திருக்கிறார்கள். விளைவு, வேகமாகத்​தான் இருக்கும்.

ஜோ.ஸ்டாலின்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

thanx - vikatan 

 readers views

1. ஒழுங்காக வரியை கட்டி எடுத்தால், வருமான வழிமுறையை காட்டனும்... இப்ப மாட்டி கொண்டு, அடுத்தவன் மீது பழியை போட்டு தப்பித்து கொள்வார்கள்.... இந்த போலி பகட்டெல்லாம் ரொம்ப காலம் நிற்காதுங்க....

2. பழிவாங்கு நடவடிக்கையாகவே இருக்கட்டும். வரி ஏய்ப்பு செய்து வெளினாடு கார்களை வாங்குவது தவறுதானே. அதுவுமில்லாம் வெளினாட்டு கார்கள் வாங்கும் அளவுக்கு என்ன சம்பாத்தியம் ஸ்டாலினுக்கு? ஜெ வின் புடவை, செருப்புக்கு குதியாய் குதித்தவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

உங்ககிட்ட தான் கார் கம்பெனியையே வாங்கு அளவுக்கு பணம் இருக்கே,அப்புறம் எதுக்கு இந்த மோசடி வேலை?

3. ஒழுங்காகப் படித்துப் பட்டமும் பெற்று , சுயமாகத் தொழில் செய்தும் தன் வாழ்நாளில் ஒரு சராசரி இந்தியன் சட்டத்திற்கும் உட்பட்டு வரிகளை முறையாகச் செலுத்திய பின் ஒரு வீடோ அல்லது இரண்டு வீடுகளோ கூடவே ஒன்றிரண்டு கார்களோ தான் வாங்க முடியும் ! ஆனால் இந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த குஞ்சு குளுவான்கள் கூட தலைக்கு ஆயிரம் கோடிச் சொத்து, பங்களா , விலைஉயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் , வருடத்தில் 45 அல்லது 60 நாள் வெளினாட்டு உல்லாசப் பயணங்கள் , சின்னத் தலைவலிக்குக் கூட லண்டனில் சிகித்சை , பத்து லக்ஷம் சதுர அடிக்குக் குறையாமல் அம்பா கிம்பா போன்ற லம்பா மால்கள் , ஹோட்டல்கள் , உட்கார்ந்தது தின்றழித்தால் ஒரு நூறு தலை முறைக்கும் சொத்துக்கள் ! அப்பப்பா ! இந்தத் திருட்டுக் கும்பலைக் கண்டிக்கத் தவறினால் கூட பரவாயில்லை ! ஆனால் இவர்கள் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு சுய மரியாதையையும் விட்டு விட்டு இன்னமும் அலையும் கழகக் கண்மணிகளை நினைத்தால் தான் தமிழ் நாட்டின் தலைவிதியை நினைத்துக் கவலையாக இருக்கிறது !

4. இன்னுமா இவங்களை நம்புறீங்க சும்மா இருங்க இப்பவே கண்ணை கட்டுது இனிதான் இருக்கு செம காமெடி திராவிட இனமே இனிமே உனக்கு நல்ல நேரம்தான்



Saturday, February 09, 2013

குஷ்பூ தான் அடுத்த சி எம்மா? என்ன கொடுமை சுந்தர் சி சார் இது?

 
 
தி மு.க-வைப் பொறுத்தவரை திருச்சியை 'திருப்புமுனை' என்பார்கள். அப்படி ஒரு திருப்புமுனைக்கான விவாதங்களை இன்று திருச்சி தொடங்கி வைத்துவிட்டது. 'கருத்​துக்குப் பதில் சொல்ல செருப்பா?' என்று தி.மு.க-வுக்குள்ளேயே முகச்​சுளிப்புகளும் உடனே தொடங்கி​விட்டது!'' - சிறியதொரு வருத்தம் கலந்த முகபாவத்தோடு கழுகார் சொன்னார்.  
 
 
 
கடந்த வியாழன் அன்று வெளியான 'ஆனந்த​விகட’னில் நடிகை குஷ்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். 'தி.மு.க-வின் அடுத்தத் தலைவர் யார்?’ என்பது தொடர்​பான கேள்விகளுக்கு பதில் அளித்த குஷ்பு, 'தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டும் முடிவு எடுத்துட்டதால, அடுத்தத் தலைவர் தளபதியா​தான் இருக்கணும்னு அவசியம் இல்லை.



 அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். கட்சியின் பொதுக்குழு கூடித்தான் அதை முடிவு எடுக்க வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். பேட்டியைத் தொடர்ந்து எழுந்துவிட்ட கலாட்டாக்களைப் பற்றித்தான் விரிவான தகவல்களோடு வந்திருந்தார் கழுகார்.


''இந்தப் பேட்டி இடம்பெற்ற 'ஆனந்த விகடன்' இதழ் கடைகளில் வெளியானது வியாழக்கிழமை காலை... கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகள் திருமணம் அன்றுதான்! கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைத்து தி.மு.க. பிரமுகர்களும் திருச்சியில் இருந்தார்கள். கட்சியின் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கோட்டை மாநகரில் குவிந்​திருந்தனர்.




 குஷ்பு பேட்டியைப் படித்ததுமே கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ஏக டென்ஷன் ஏறிவிட்டது. உடனடியாக இது ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் போனது. 'தலைவர் பதவி பற்றி கருத்து சொல்ல இவர் யார்? குஷ்புவுக்கு யார் இப்படி எல்லாம் பேட்டி கொடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது?’ என்று  கொந்தளித்தனராம். பல்வேறு ஊர்களில் இருந்தும் ஸ்டாலினுக்கு கலவையான கருத்துக்கள் போனில் வர ஆரம்பித்தன.



 'தேவை இல்லாமல் குஷ்புவை வளர்த்துவிட்டு இப்போ அவஸ்தைப்படுறோம்’ என்று முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்குள் கூடிப் பேசிக்கொண்டனர். குஷ்புவிடம் விளக்கம் கேட்கலாம் என்று சிலரும், அவரைக் கட்சியை விட்டு நீக்கிவிடலாம் என்று சிலருமாக கருத்து சொல்ல ஆரம்பித்தனர். 'உள்கட்சி விவகாரம் பற்றி அ.தி.மு.க-வில் இப்படி எல்லாம் பேச முடியுமா?’ என்று சிலர் ஒப்பீட்டு பட்டிமன்றம் நடத்தி​​னார்கள். 'கட்சிக்குள் வந்து மூணு வருஷம்கூட ஆகாதவர்... தலைமையைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்துவிட்டாரா?’ என்றும் கேள்விகள் எழும்பியது. அத்தனையுமே கருணாநிதி, ஸ்டாலின் காதுக்கும் போனது!''


''குஷ்பு ரியாக்ஷன்?''


''சிவா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்​பதற்காக அவரும் திருச்சிக்கு வந்திருந்தார். ஃபெமினா ஹோட்டலில் தங்கி இருந்தார். அதுதான் வில்லங்கம் ஆகிவிட்டது. நடக்கப் போகும் விபரீதத்தை உணராத குஷ்பு, சங்கம் ஹோட்டலில் இருந்த ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் தர எண்ணினாராம். ஆனால், 'ஸ்டாலின்தான் சந்திக்க மறுத்துவிட்டார்’ என்று தி.மு.க-வினர் சொல்கிறார்கள்.



 இதைத் தொடர்ந்து திருமண விழா நடந்த தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு ரொம்ப காஷ§வலாகவே வந்தார் குஷ்பு. எதுவுமே நடக்காத மாதிரி குஷ்புவை மேடையிலும் அனுமதித்தார்கள். கருணாநிதியின் அருகில் வந்து ஏதோ சிரித்துப் பேசிச் சென்றார். மேடையில் அவரை பேசச் சொன்னார்கள். 



'குடும்பம் என்றால் சண்டைச் சச்சரவு இருக்கும். அதைச் சமாளித்து வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்று யதார்த்தமாக அறிவுரை சொல்லிச் சென்றார். ஃபெமினா ஹோட்டலுக்கு லாபியில் சற்றே ரிலாக்ஸாக அவர் உட்காரவும் சென்னையில் அவரது வீட்டின் மீது ஒரு கும்பல் கல் வீசித் தாக்கிய தகவல் வரவும் சரியாக இருந்தது. 'நான் அப்படி ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே’ என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்!''


''கருத்துச் சண்டைதான் அவருக்குப் புது​சில்லையே...!''



''ஆனால், குஷ்புவை மேடை ஏற்றி வாழ்த்தச் சொன்​னது, மண அரங்கில் முதல் வரிசையில் இருந்த ஸ்டாலினின் மனைவியை கொந்தளிக்க வைத்துள்ளது. உடனடியாக அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு வந்துவிட்டாராம் அவர். 'குஷ்புவை யார் பேசச் சொன்னது?’ என்று பிறகு கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் அவர் சீறியதாகவும் சொல்லப்படுகிறது. 



திருமணம் முடிந்து ஹோட்டலுக்கு வந்த ஸ்டாலினும் டென்ஷனாகவே இருந்தாராம். 'உடனடியாக சென்னை திரும்ப வேண்டும். டிக்கெட் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் கே.என்.நேருவுக்குப் போனதும் அவர் பதறிவிட்டார். 'கட்சிக்கு தேர்தல் நிதி கொடுக்கும் கூட்டம் மாலையில் இருக்கிறது. அதுல நீங்க இல்லைன்னா எப்படி?’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம். அதன் பிறகுதான் மாலைக் கூட்டத்​தில் கலந்துகொள்ள சம்மதித்தாராம் ஸ்டாலின்!''


''அந்த அளவுக்குப் போய்​விட்டதா?''



''சென்னையில் குஷ்பு வீட்டை அடித்தார்கள் என்ற தகவல், திருச்சி விசுவாச தி.மு.க-வினரையும் உசுப்பி விட்டது. தங்கள் பங்குக்கு ஃபெமினா ஹோட்டலை நோக்கி ஒரு கும்பல் சென்றது.  வெளியே காத்திருந்தது. மதிய விமானத்தைப் பிடித்து சென்னை வருவதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்த குஷ்புவை நோக்கி ஒருவர், செருப்பை வீசி இருக்கிறார். அவருடன் வந்தவர்கள் அதனை தட்டி விட்டுவிட்டார்கள். 




அடுத்து பத்துப் பதினைந்து பேர் வந்து, செருப்பைக் கழற்றி வரிசையாக வீச வர... அதனை குஷ்புவுடன் வந்தவர்கள் தடுக்க... அதையும் தாண்டி குஷ்பு தலையில் ஒருவர் அடித்துவிட... 'நான் போலீஸைக் கூப்பிடுறேன்’ என்று இவர் சொல்ல... 'எங்க தளபதியைப் பத்திப் பேச நீ யாரு?’ என்று கூடடத்​துக்குள் இருந்து ஒரு கர்ஜனை புறப்பட... மறுபடியும் ஹோட்டலுக்குள் திரும்பிப் போனார் குஷ்பு.!''



''ம்!''


''குஷ்புவை மையம் கொண்டு தி.மு.க-வுக்குள் கடந்த இரண்டு மாதங்களாகவே சுழல் இருக்கிறது. 'குஷ்பு அளவுக்கு அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார். பொதுமேடைகளில் அவர் தலைவரிடம் பேசுவது மீடியாக்களில் அதிகமாக வருகிறது. கட்சியிலும் தலைவரிடமும் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள அடிக்கடி அவர் கோபாலபுரத்துக்கு வந்து செல்வது குடும்பத்துக்குள் பலரது முகத்தையும் சுளிக்க வைத்துள்ளது.



 அதனால் கோபாலபுரம் இல்லத்துக்கு அவர் வரக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்று நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன். 'கோபாலபுரத்துக்கு வராதே... குஷ்புக்கு தடை போட்டதா குடும்பம்?’ என்று 25.11.12 தேதி ஜூ.வி-யில் அட்டைப் படம் போட்டிருந்தீர்! 



தென் சென்னை எம்.பி. தொகுதியை தனக்குத் தர​வேண்டும் என்று குஷ்பு கேட்டதாகவும் அதற்குத் தலைமை சம்மதிக்கவில்லை என்றும்கூட அப்போது கிளம்பியச் செய்தியைச் சொல்லி இருந்தேன். அதையெல்லாம் வைத்துத்தான் குஷ்பு இப்படி கருத்துச் சொல்லிவிட்டாரா என்றுகூட சீனியர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர்.''



''அடுத்து அவர் என்ன செய்வார்?''



''தான் சொன்னதை சிலர் மிஸ்அண்டர்​ஸ்டேண்டிங் செய்துகொண்டார்கள் என்று சொல்லி வருகிறாராம். ஆனால் குஷ்புவை கட்சியை விட்டு நீக்குவதில் சிலர் முடிவோடு இருக்கிறார்கள். அநேகமாக ஒரு வாரத்துக்குள் விவகாரம் வெடிக்கும்'' என்ற கழுகார், சிறிது இடைவெளிவிட்டு மறுபடியும் தொடங்கினார்.



''திருச்சி சிவா மகள் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய கருணா​நிதி ஒரு ஸ்கூப் நியூஸ் கொடுத்தார். 'ஆறு மாதத்துக்கு முன்பு இந்த நிகழ்ச்சிக்கு தேதி வாங்கிய சிவா, அதன் பிறகு என்னை இன்று காலை வரை ஒரு முறைகூட நினைவுப்படுத்தி அழைக்கவே இல்லை. அப்படி இருந்தும் நான் இங்கே வரக் காரணம், எங்களுக்கு இடையே உள்ள குடும்பப் பாசம். தம்பி சிவாவுக்கு எதிர்காலம் பொற்காலமாக அமைய இருக்கிறது. 




அவரது பேச்சில் நானே மயங்கி​யவன். அவரது கொள்கை விளக்கப் பேச்சை நான் என்றும் மறக்கப் போவதில்லை’ என்று பொடி வைத்துப் பேசினார். சிவாவின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. தி.மு.க-வுக்கு இப்போது உள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கொண்டு ராஜ்யசபா எம்.பி-யைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை.



அதனால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சிவாவுக்கு வழங்கப்படலாம் என்பதைக் கருணாநிதி அப்படி சூசகமாக சொன்னதாகக் கழக முன்னோடிகள் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பலரும் 'திருச்சி தொகுதி எம்.பி.' என்று சிவாவை இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.''
''ஆனால், அவருடைய லோக்கல் எதிரி கே.என்.நேருதானே வெற்றிக்குப் பாடுபட வேண்டும்?''


''அது அவர்கள் பாடு!'' என்ற கழுகார்,

''திருச்சி வந்தால் பெரும்பாலும் சங்கம் ஹோட்டலில் தங்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதிக்கு இந்த முறையும் அங்கேதான் ஜாகை. காலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டார் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் சரிவர அவர் காதில் விழாததால், தலைவருக்கு  அருகில் அமர்ந்தபடி உரக்கச் சொன்னார் ஸ்டாலின். 



என்ன தோன்றியதோ...  பத்திரிகையாளர்களுடன் ஒரு குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார். திருமண விழாவில் முன்னிலை என பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வரவில்லை. அவர்தான் கால் வலி காரணமாக சிகிச்சை எடுக்​கிறாரே!. மதுரை மருத்துவமனைக்கு அழகிரி வீல் சேரில் வந்தது பலரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது.''



'
அட்டைப் படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்


படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து


 


 குஷ்புவுக்கு ஆதரவாக துரை தயாநிதி!  




திருச்சி சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தில், ''நான் நலமாக இருக்கிறேன். ஒரு துரதிருஷ்டம் நேர்ந்துவிட்டது. விசாரணை முடியும் வரை இது​பற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது'' என்று தட்டிவிட்டார் குஷ்பு. 



அவருக்கு உடனே ஆதரவு கமென்ட்கள் பறந்து வர ஆரம்பித்தன. எஸ்.வி.சேகர், பாடகி சின்மயி ஆகிய பிரபலங்கள் தைரியம் சொன்னார்கள். மீண்டும் குஷ்பு, ''இந்த இக்கட்டான சூழலில் பல தரப்புகளில் இருந்தும் வரும் ஆதரவுகளை கண்டு என் மனம் உணர்ச்சிவசப்படுகிறது. நான் எப்போதும் வெற்றிபெறும் பெண்ணாகவே இருந்து வருகிறேன். இப்போதும் அப்படியே'' என்று பதிவு போட... அழகிரியின் வாரிசான துரை தயாநிதி இதை  'ரீ-ட்விட்’ செய்ததை ஸ்டாலின் தரப்பு கவனிக்கத் தவறவில்லை.


சர்ச்சைக்குரிய பேட்டி


சின்ன தும்மல், களைப்பான கண்கள், சோர்வு ததும்பும் குரல்... குஷ்பு இஸ் நாட் ஃபீலிங் வெல்! ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் பாய்ந்து வந்த பதில், அதிரடி!




ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, தி.மு.க-வில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு.  



''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''



  ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக் கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''



 


''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''


'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''



''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''



''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும்.  தலை வர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப் பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''



''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''



''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''



''சமீப காலமா தி.மு.க-வில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?''



''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? தி.மு.க-வின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கிய மான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்ட யும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத் துக்கே தெரியும்...



 எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில்நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக் கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட் டுக்கு எதிரா நடந்த கண்டனஆர்ப் பாட்டத்துல தலைவர் முன்னிலை யில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்து வம் கொடுக்குறாங்கன்னு பேசு னாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக் குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட் டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!''



''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...''


(கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.''  



'' 'விஸ்வரூபம்’ பட விவகாரத்தின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லைனு நம்புறீங்களா?''



'' 'விஸ்வரூபம்’ பத்தி இனிமே நாம பேசினா, அது கமல் சாருக்குத்தான் பிரச்னையா முடியும். கமல் சாரைப் பாதிக்கும்கிறதால அதைப் பத்தி நான் எதுவும் பேச விரும் பலை. அதான் அரசாங்கம் சார்பிலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!''



''அது தொடர்பான விவாதத்தில், 'ஜெயா டி.வி-க்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை’னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்களே?''


''அதை நீங்க நம்புறீங்களா? சம்பந்தம் இல்லைனு சொல்றாங்க. ஆனா, அந்தப் பேட்டி கொடுத்தப்ப, ஜெயா டி.வி. மைக் மட்டும்தான் அவங்க
முன்னாடி இருக்கு. எல்லா உண்மையும் புரியுற அளவுக்கு மக்கள் தெளிவா இருக்காங்க.''  



''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?''



''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதி காரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணிபத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.''



''நாடாளுமன்றத் தேர்த லில் நீங்க போட்டியிடுவீங்களா?''


''தெரியலையே! இன் னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமை தான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை மறுத்திடுச்சு’னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.''



''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு தி.மு.க.-வில் அதிகரிச்சுட்டே இருக்கே?''



''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது.  ஒன் ப்ளஸ் ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும்.உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? தி.மு.க. ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்து கிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல் லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்!



இன்னொரு விஷயம்,உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சி யின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக் கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.''



''எப்பவும் ஏதாவது ஒரு சர்ச்சை உங்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கே... சமீபத்தில், ராமர் படம் போட்ட புடவை. ஒருவேளை பரபரப்புக்காகவே இப்படிப் பண்றீங்களா?''



''யாரை விமர்சிச்சா லாபம் கிடைக்குமோ, அவங்களைத்தானே தொடர்ந்து குறிவைப்பாங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் அவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது. அது, குஷ்பு யாருக்கும்பயப்பட மாட்டா!



என் டிக்ஷனரியில் பயம்கிறதே கிடையாது. அன்பு, பாசத்துக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். அச்சுறுத்தல், மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். எனக்குப் பயம்னா என்னன்னே தெரியாது!''


 




மக்கள் கருத்து 


1. பத்த வெச்சுட்டியே பரட்ட



2.சேலையில ஒரு டிசைனை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் அரசியல் செய்த்து.... அந்த கேடுகெட்ட கூட்டம்தான் கருத்துச் சுதந்திரம் பற்றி எக்காளம்போட்டது...... அட ஒரு சேல தனக்குப் புடிச்சமாதிரி கட்டமுடியல.... கருத்தாம் சுதந்திரமாம்... கேடுகெட்டதுகள்... 


3. அப்பாடா இன்னுமொரு வருங்கால முதல்வர் பேட்டியை விகடன் தந்துள்ளது!. யார் கண்டது திமுக காரர்கள் இவரை முதல்வராக தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் இவர் ஒரு சினிமா ஹிரோயின். கனவு உலகத்தில் மயங்கும் தமிழர்கள் இப்படி செய்தாலும் செய்வார்கள்.



 



4. விகடன் புண்ணியத்தால் குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர தலைவியாக போகிறார்... இந்த பேட்டியை படித்த ஸ்டாலினின் உண்மை தொண்டர்கள் தலைவி குசுப்பூவிற்கு பலவிதமான இன்னல்களை கொடுக்க துவங்கிவிட்டனர்... திருச்சியில் கார் மீது தாக்குதல், திருச்சி விமாண நிலையத்தில் செருப்பு வீச்சு, சென்னையில் குசுப்பூ வீட்டின் மீது கொடூர தாக்குதல்.... திமுகவில் இப்படியெல்லாம் செய்வார்கள் என்பதை அறியாதவரா குசுப்பூ??? இனி தான் குசுப்பூ தனது வீரியத்தை வீசுவார்... அப்பொழுது தான் ஸ்டாலினுக்கு பலவிதங்களிலும் போட்டியாக பல காரியங்களை செய்வார்... முடிவு குசுப்பூவின் பிடிக்கு திமுக போவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது... அப்புறமென்ன கருணாநிதியின் காலத்திற்கு பிறகு குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர முதலாளி..



5. அதிகப் பிரசங்கித்தனமான பேட்டி. தலைவரே ஸ்டாலின் அடுத்தவர் என்று சொல்லியும் இப்படி ஒரு பேட்டி கொடுப்பதற்கு குஷ்பூவுக்கு தைரியம் எப்படி வந்தது? பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஏதோ திராவிடப் பாரம் பாரம்பர்யத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர் போல பேசுகிறார். சொல்ல முடியாது இவர் எம்.பி ஆகி அமைச்சராகவும் ஆகி விடலாம், எதுவும் நடக்கும். வாக்காளனும் இவருக்கு ஓட்டைப் போட்டு விட்டு, ஓட்டுப் போட்டதையே மறந்து விட்டு டாஸ்மாக்கில் விழுந்து கிடப்பான்.



6. அன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் கோவில் கட்டினார்கள்.... இன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் செருப்பை வீசி மரியாதை செய்திருக்கிறார்கள்... இதெல்லாம் செய்தது யார் தெரியுமா??? மாபெரும் ஜனநாயகம் இயக்கம் என்று தணக்கு தானே புகழாரம் சூட்டி கொள்ளும் கருணாநிதி திமுகவின் உடன்பிறப்புக்கள்.... இனியென்ன குசுப்பூவை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவார்கள்.... இதையறிந்தே குசுப்பூவும் அஞ்சாநெஞ்சரின் ஆசியை பெற்றிருக்கிறார்... அஞ்சாநெஞ்சரின் அருளாசியிருக்கும் போது இனி குசுப்பூவிற்கு பயமில்லை...


 




நன்றி - விகடன் 

Monday, July 30, 2012

மு.க. ஸ்டாலின் சமாளிஃபிகேஷன் பேட்டி @ கல்கி - 60 வயசாகியும் ஏன் இளைஞர் அணித்தலைவர் போஸ்ட்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 


இளைஞர் அணிக்கு வயது 33!



எங்கள் எழுச்சி எதிரிகள் வீழ்ச்சி!



ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பு!

ப்ரியன்



தி.மு.க. பொருளாளரும், அதன் நம்பிக்கை நட்சத்திரமுமான மு.க. ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். அவரது குஷிக்குக் காரணங்கள் இரண்டு


. ஒன்று, தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களுக்கு விஸிட் செய்து ஒன்றிய, நகர, பகுதி, மற்றும் பேரூர் இளைஞர் அணிக்கு, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்தது;


 அடுத்து, சமீபத்தில் நடத்திய சிறை நிரப்புப் போராட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாக நடந்தது. எங்கள் இளைஞர்களின் எழுச்சியால் எதிரிகள் நடுங்குகிறார்கள்" என்கிறார் ஸ்டாலின்.


 முப்பத்தி இரண்டு ஆண்டுகள் முடித்து முப்பத்தி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞர் அணி குறித்து இங்கே பேசுகிறார் ஸ்டாலின்.



சென்ற சட்டமன்றத் தேர்தலில் கழகம் தோல்வியடைந்த பின் இளைஞர் அணியை இன்னமும் பலப்படுத்தி, அதற்கு புத்துணர்வு ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கழகம் தோல்வியடைந்திருந்த நிலையில், தொண்டர்கள் விரக்தியினால் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும் கழக இளைஞர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை தளரவில்லை. மாவட்டம் மாவட்டமாக விஸிட் செய்தேன். ஆளும்கட்சி கிளப்பிய கைது பயத்தை தூக்கியெறிந்து விட்டு இளைஞர்கள் வெள்ளமென திரண்டார்கள். தமிழகமெங்கும் 4649 அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.


 ஒன்றிரண்டு மாவட்டங்களில், சில உரசல்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து அந்த மாவட்டங்களிலும் நிர்வாகிகளைப் போட்டிருக்கிறோம். இப்போது மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் போடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்கிறார் இளைஞர் அணியின் செயலாளராக விளங்கும் ஸ்டாலின். 1984 முதல் இந்தப் பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/cartoon-kagidha-odam.jpg


1949-ல் தோன்றிய தி.மு.க.வில் 1980ல்தான் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறதே!



பேரறிஞர் அண்ணாவின் பின்னால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அணி திரண்டார்கள். மொழி, இன உணர்வு, சமூக நீதி என்று கழகத்தின் இலட்சியப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களின் மொழி உணர்வின் உச்சகட்ட வெளிப்பாடு. தொடர்ந்து 1967ல் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பிறகு, கழகத்தில் இளைஞர்களின் புது வரவு கணிசமாக குறைந்து வருவது தெரியவந்தது.


 அண்ணாவின் பின் அணிவகுத்த இளைஞர்களும் முதியவர்களாகி வர, இந்த விஷயத்தில் புதிய பார்வையும், அணுகுமுறையும் தேவை என்று உணரப்பட்டது. மாறிவரும் சூழலை முற்றும் உணர்ந்து, காலத்திற்கேற்ற தேவையாக டாக்டர் கலைஞர் அவர்களால், கழகத்தில் மற்றொரு அணியாக இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. மதுரை ஜான்சி ராணி திடலில் இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது கழகம் ஆட்சியில் இல்லை. இருந்தும் அந்தத் தொடக்கம் மிகப் பெரிய எழுச்சியாக இருந்தது




உடனேயே நீங்கள் அதன் செயலாளர் ஆகிவிட்டீர்களா?!



இல்லையில்லை... இரண்டு வருட காலம் நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. 1982ல் திருச்சி வாசவி மகாலில் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பலரும் என்னை செயலாளர் ஆக்க வேண்டும் என்று மிக வலியுறுத்திப் பேசினார்கள். ஆனால் தலைவர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ‘மகனை நியமித்து விட்டார்’ என்ற விமர்சனம் வரும் என்று கடைசி வரை ஒப்புக் கொள்ள மறுத்தார். எனவே பேராசிரியர் மாற்று ஏற்பாடாக நானும் உள்ளிட்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவில் திருச்சி சிவா, பரிதிஇளம் வழுதி, தாரை மணியன், வாலாஜா அசேன், ஜெயம் ஜூலியஸ், பஞ்ச வர்ணம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


 அடுத்த இரண்டு வருடம் நாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட அளவில் நிர்வாகிகள் போட்டோம். அந்தக் காலகட்டம் மறக்க முடியாதது. ஒரே காரில் நாங்கள் செல்வோம். பெரும்பாலும் நான்தான் கார் ஓட்டுவேன். இந்தச் சமயத்தில் என் நெஞ்சில் என்றும் பசுமையாக இருக்கும் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



1967-68ல் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற பெயரில் சார்பு மன்றம் வைத்திருந்தோம். அதன் சார்பாக அண்ணா பொன்விழா கொண்டாட முடிவு செய்தோம். ம.பொ.சியை அணுகினோம். அவர் வர ஒப்புக் கொண்டார். நான் நண்பர்களுடன் அண்ணா அவர்களை விழாவுக்கு அழைக்கச் சென்றேன். அண்ணா மாடியில் உடம்பு முடியாமல் படுத்திருந்தார். கீழே என்.வி. நடராசன், சத்தியவாணி முத்து ஆகிய தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ‘அண்ணாவைப் பார்க்க முடியாது’ என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து, அண்ணாவின் கார் என் வீட்டுக்கு வந்தது. ஓட்டுநர் வந்து, ‘அண்ணா அழைத்தார்’ என்று கூப்பிட்ட போது பிரமிப்பு; ஆச்சர்யம். சந்தித்து விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்



 ‘ஏற்பாடு செய்... வருகிறேன்’ என்றார். ஆனால் அண்ணாவின் உடல்நிலை மேலும் மோசமாக அவர் விழாவுக்கு வர முடியவில்லை. ம.பொ.சி. தலைமையில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்தச் சம்பவத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. போன்று தமிழகமெங்கும் இளைஞர் மன்றங்கள் இயங்கி வந்தன. எனவே, நாங்கள் மாநிலம் முழுதும் இளைஞர் அணியை கட்டமைப்பது சுலபமாக இருந்தது. 1984-ல் நான் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டேன். இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி கழக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 25 லட்சம் பேர் இளைஞர் அணி. கழகக் கோட்டையின் காவல் அரணாக இளைஞர் அணி உருவாகியிருப்பது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHmxMbhxFIQZGqbQTJpDKuug3J4VLZlaAyGBQoS37xFVFRby1JXHF6hQ-WzlaBjdUHDMeJginPzXWwS8CTI3bx1UXTPIj8dkHaMPWAVcR-6oE559c4e9bz4y7de2683ByFtMrelyHpGCs/s1600/karuna+retair.jpg

கழகப் பிரமுகர்களின் மகன்கள்தான் இளைஞர் அணியில் பிரகாசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறதே?



தவறான கருத்து. உழைப்பும் பொது நல அர்ப்பணிப்பும் மிக்க இளைஞர்கள் எந்தவித பின்புலமுமின்றி உயர்ந்திருக்கிறார்கள். பொன்முடி, அன்பரசன், மா. சுப்பிரமணியன், முபாரக், கார்த்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம்."



தேர்தல் வந்தால் பெரும்பாலான சீட்கள் இளைஞரணிக்கு என்பதால்தான் ‘அணி திரள்கிறார்கள்’ என்பது உண்மைதானா?



நான் ஏற்கெனவே சொன்னது போல கழகத்தில் உள்ள மற்ற அணிகளைப் போலத்தான் இளைஞர் அணியும் இருக்கிறது. தேர்தலில் சீட் என்பது வெற்றி வாய்ப்பை மனத்தில் வைத்துத்தான் கொடுக்கப்படும். இளைஞர் அணியில் உள்ள திறமையாளர்களைப் போல மற்ற அணிகளிலும் திறமையானவர்கள், விசுவாசமிக்கவர்கள் இருக்கிறார்கள். எனவே இளைஞர் அணியில் இடம்பெற்றிருந்தாலே தேர்தல் சீட் கிடைக்கும் என்பது சரியல்ல."



வர்த்தகமயமாகி விட்ட அரசியலில் பொதுநல அர்ப்பணிப்புடன் இளைஞர்கள் வருகிறார்களா?



சமூகத்தில் பல துறைகள் சீரழிவைச் சந்தித்து வருவதைப் போன்று அரசியலிலும் சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது. சுயநல நோக்கத்துடன் ஒருசிலர் வரக்கூடும். பாசறைக் கூட்டம் என்று பெயரில் இளைஞர்களின் உரத்த சிந்தனையையும், சமூக நோக்கங்களையும் செழுமைப்படுத்துகிறோம். கழகத்தின் அடித்தள லட்சியங்களை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றக்கூடிய அளவில் விதைக்கிறோம். எங்களை நோக்கி வீசப்படும் விமர்சனக் கணைகளை எப்படி எதிர்ப்பது என்ற பயிற்சியும் கொடுக்கிறோம்."



அது சரி ஸார். மாவட்ட அளவில் அமைப்பாளர்களுக்கு முப்பது வயது என்று வரம்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் மேல்மட்ட அளவில் பார்த்தால் அறுபது வயது ஆனவர் கூட பொறுப்பில் இருக்கிறார்களே. உங்களுக்கே கூட அறுபது ஆகிவிட்டதே...?




பொதுவாகவே இதுபோன்ற விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் முப்பது வயதுக்குள்தான் இருக்க வேண்டும். மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு வயது வரம்பு நாற்பது. ஆனால் கழக சட்டத்தின்படி தலைமைக் கழகத்தில் பொறுப்பில் உள்ள எங்களுக்கு வயது வரம்பு இல்லை. களத்தில் இருப்பவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், மேலே வழி காட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்த ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg

கழகத்தில் எதிர்பார்க்கப்படும் உயரத்தைத் தொட காத்திருக்கும் நீங்கள் தகுதிவாய்ந்த மற்றொருவருக்கு இளைஞர் அணி பொறுப்பைக் கொடுக்கும் காலம் வந்துவிட்டதா?



பொருளாளர் பதவியுடன் கூடுதல் பொறுப்பாகவே இளைஞர் அணி செயலாளர் பொறுப்பையும் வகிக்கிறேன். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அனைவரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறேன். மற்றபடி இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வேண்டியவர்கள் தலைவரும், பேராசிரியரும்தான். அவர்கள் தக்க நேரத்தில் முடிவெடுப்பார்கள்."





தலைவரது மகனாக இருப்பதால் இளைஞர் அணி சிறப்புச் சலுகைகளைப் பெறுகிறதா?




தலைவரைப் பொறுத்தவரை எல்லா அணிகளையும் சமநோக்கோடுதான் பார்க்கிறார். ஒரு உதாரணம்: அறிவாலயத்துக்கு கழக அலுவலகம் மாற்றப்பட்ட பின் அன்பகத்தை இளைஞர் அணி பயன்பாட்டுக்குக் கேட்டோம். அப்போது அங்கே தொழிற்சங்கமும் இயங்கி வந்தது. எந்த அணி பத்து லட்சம் கொடுக்கிறதோ அதற்குத்தான் அன்பகம் கொடுக்கப்படும்" என்று சொல்லிவிட்டார் தலைவர். அதன்பின் தமிழகமெங்கும் அலைந்து திரிந்து ரூபாய், ரூபாயாக சேர்த்து பதினொரு லட்சத் தைக் கொடுத்துதான் இளைஞர் அணிக்காக அன்பகத்தைப் பெற்றோம். தலைவர் மகனென்று தூக்கிக் கொடுக்கப்படவில்லை."



இளைஞர் அணியின் அடுத்தகட்ட நடவடிக்கை?



அமைப்பாளர்கள் போடுவது கூடிய விரைவில் முழுவதுமாக முடிந்துவிடும். அடுத்து இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு விரைவில் நடைபெறப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேதியும், இடமும், தலைவர், பேராசிரியர் ஒப்புதலுடன் அறிவிக்கப்படும்!"



அடேங்கப்பா!


இளைஞர் அணி சார்பாக அறக்கட்டளையொன்றை நிறுவியிருக்கிறார்கள். அண்ணா, கலைஞர் பிறந்த நாளின் போது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி என்று அசத்துகிறார்கள். பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு கோடியே பதினேழு லட்ச ரூபாய் பரிசுத் தொகை இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதாம்.



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி,அன்னா கண்ணன்


http://img.photobucket.com/albums/v144/annakannan/ulalal.jpg

Monday, June 11, 2012

ஸ்டாலின் ,அழகிரி யை விட கனிமொழியே கரெக்ட் - இளங்கோவனின் அதிரடி பேட்டி

ஸ்டாலின் அல்ல... அழகிரி அல்ல... கனிமொழியே கரெக்ட்!

இளங்கோவனின் அதிரடி


''பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு எதிரா போராட வந்த இடத்துல, 'மத்திய அரசின் கூட்டணியில இருந்து விலகுவோம்’னு முழங்குறாரு. அடுத்த அரை மணி நேரத்துல, 'கூட்டணியில் இருந்து நான் விலகுவேன்னு சொல்லவே இல்லை’ன்றாரு. அவர் வரவர ரொம்பச் சரியில்லைங்க... ஏன் இப்படில்லாம் பண்றாரு?'' - பேட்டி எடுக்கச் சென்ற என்னை கருணாநிதி குறித்த விசாரணை யுடன் வரவேற்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.



 ''சமாளிக்காதீங்க... ஆயிரம் சொன்னாலும் பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசின் கொள்கைகள்தானே காரணம், இது நியாயமா?''



''இல்லவே இல்லை... அது பொருளாதாரத் தெளிவின்மை இல்லாதவர்கள் சொல்ற கருத்து. பெட்ரோலை இறக்குமதி செஞ்சு, இந்தியாவில் விற்கும் சில தனியார் கம்பெனிகள்தான் அதன் விலையையும் நிர்ணயம் செய்கின்றன. இவ்வளவு ஏன், 'மத்தியில் இருப்பது ஆள்வதற்கு லாயக்கற்ற கட்சி’னு குறை சொல்றாங்களே ஜெயலலிதா, அவங்க பெட்ரோல் விலையில் மாநில அரசின் 27 சதவிகித வரியைக் குறைக்க வேண்டியதுதானே? 10 சதவிகிதம் குறைச்சாலே, பழைய விலைக்கு பெட்ரோல் கொடுக்க முடியுமே. மற்ற மாநிலங்களில் அப்படி வரி குறைச்சு இருக்காங்களே... அதை ஜெயலலிதாவும் செஞ்சிருக்கலாமே. மத்திய அரசைக் குறை சொல்றதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா இதுவும் பேசுவார்... இன்னமும் பேசுவார்!''



''நேர்மையாகச் சொல்லுங்கள்... மத்திய காங்கிரஸ் அரசின் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் எந்தக் குறையும் இல்லையா?''


''மத்திய அரசின் செயல்பாடு இப்போது அதிக அளவிலான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்குங்கிறதை ஒப்புக்கிறேன். குறிப்பா, பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவு. அதை மத்திய அரசும் உணர்ந்து இருக்கு.


 மாநில அரசைப் பத்தி நீங்க கேட்கிறதுக்கு முன்னாடியே சொல்றேன். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்களைக் கொடுத்தது மட்டுமே ஜெயலலிதா அரசின் கடந்த ஒரு வருட ஆட்சியின் அசுர சாதனை. இன்னொரு சாதனை, டாஸ்மாக் விற்பனையை அதிகரிச்சு இருக்கிறார். மக்களுக்கு செஞ்ச நல்லதைவிட, அவர்களின் சுமையை மேலும் அதிகரிச்சு இருக்கிறது ஜெயலலிதாவோட அரசு.''


''ஜாக்கிரதையா உங்கள் நண்பர் விஜயகாந்தைப் பற்றிக் கருத்து சொல்லாமல் தவிர்க்கிறீர்களே?''


''விஜயகாந்த் வளர வேண்டிய ஒரு நல்ல அரசியல்வாதி. தமிழகத்தில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறார். தன்னோட சக்தியை அவர் நல்ல பாதைக்குக் கொண்டுபோய் பயன்படுத்தணும். விஜயகாந்திடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். அவர் நல்லா வருவார்னு நம்பிக்கை எனக்கு இருக்கு!''


''மதுரை ஆதீன சர்ச்சைகளைக் கவனிக்கிறீங்களா?''


''பொதுவாவே, இந்தச் சாமியார்கள் மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. சாமியார்கள் பெரும்பாலும் மக்களை ஏமாத்துறவங்களாதான் இருக்காங்க. அவங்களை நம்பி ஏமாந்துபோகாமல் மக்கள்தான் உஷாரா இருக்கணும்!''


'' 'தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம்’னு பா.ஜ.க. சொல்லி இருக்கிறதே?''


''பா.ஜ.க. மட்டுமா... ராமதாஸ், திருமாவளவன் எல்லாம்கூடத்தான் சொல்றாங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அது ஒரு கனவு. தூக்கத்தில் இருந்து முழிக்கிறப்ப, 'தமிழகத் தில் ஆட்சியைப் பிடிப்போம்’னு சொல்றதை ஒரு வழக்கமா வெச்சிருக்காங்க. ஆனா, ஒரு விஷயத்தை எல்லோரும் தெளிவாப் புரிஞ்சுக்கணும்.


 தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் இந்த மூணு கட்சிகளும்தான் பெரிய கட்சிகள். இதுல ஒண்ணுதான் தமிழகத்தை ஆள முடியும். வேற யாரும் தலை கீழா நின்னாலும் கதைக்கு ஆகாது!''



''தி.மு.க-வில் கருணாநிதிக்குப் பிறகு அழகிரியா... ஸ்டாலினா? உங்கள் சாய்ஸ் யார்?''



''அவங்க ரெண்டு பேருமே அதுக் குச் சரியான ஆள் கிடையாது. கனிமொழிதான் அந்தப் பதவிக்குத் தகுதியானவங்க. தலைமைப் பொறுப்பை ஏற்கிற எல்லாத் தகுதிகளும் கனிமொழிகிட்ட இருக்கு. பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் தரணும்னு முழங்கும் கலைஞர், அவர் காலத்துலயே கனிமொழியை தி.மு.க-வின் தலைவர் ஆக்கணும். அப்போதுதான் தி.மு.க-வின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்!''



''சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றனவே..?''



'' 'என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்’ என்று பிரதமர் பகிரங்கமாகவே அறிவிச்சுட்டாரே.   ஊழல் புகார் சுமத்திய அண்ணா ஹஜாரே அதை நிரூபிக்க வேண்டியதுதானே? சிதம்பரமோ, பிரதமரோ யார் தப்பு செய்திருந்தாலும் ஆதாரத்தோடு அதை நிரூபிக்கட்டும். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால், அவர்கள் சொல்லும் எதையும் கேட்டுக்கொள்ள நான் தயார்!''



''சமீபத்தில் என்ன படம் பார்த்தீங்க?''



'' 'பெரியார்’ படத்துக்குப் பிறகு நான் தியேட்டர் போய்ப் பார்த்த படம் 'கர்ணன்’. அந்தக் காலத்துல டூரிங் டாக்கீஸில் சிவாஜி படம் பார்த்த ஞாபகங்கள் எல்லாம் வந்து போச்சு. அந்தப் படத்தைப் போல நல்ல கதையம்சத்துடன் வெளியான பழைய படங்கள் எல்லாத்தையும் தூசு தட்டி புதுப் பொலிவோடு கொண்டு வந்தால் நல்லா இருக்கும்!''


Wednesday, June 06, 2012

ஆ ராசாவின் உள்குத்து கடிதம் - கலைஞர் அதிர்ச்சி - ஜூ வி கட்டுரை

அலற வைத்த ஆ.ராசா கடிதம்


ழுகார் உள்ளே நுழைந்ததும், தனது சிறகுகளுக்குள் இருந்து 'முரசொலி’யை எடுத்தார்! 

''கருணாநிதியின் 89-வது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களைவிட, வராதவர்களைப் பற்றித்தான் அதிகம் பேச்சு'' என்று பொடி வைத்துச் சொன்ன கழுகார், கையில் இருந்த ஜூன் 2-ம் தேதி முரசொலியின் இரண்டாம் பக்கத்தைத் திருப்பினார்.


''ஆ.ராசாவின் கடிதம்தானே?'' என்றோம்.


''கடிதமா அது. தி.மு.க. வட்டாரத்தில் அதை, 'கந்தகக் குண்டு’ என்றே வர்ணிக்கிறார்கள். நிபந்தனை ஜாமீனில் வெளியே விடப்பட்டு இருக்கும் ராசா, டெல்லியில்தான் தங்கி இருக்கிறார். டெல்லியை விட்டுக் கிளம்ப வேண்டுமானால், தனி நீதிமன்றத்தின் அனுமதி வாங்க வேண்டும். 'ஜூன் 3-ம் தேதி தலைவரின் பிறந்தநாள். அதற்கு நிச்சயம் நீங்கள் வந்துவிட வேண்டும்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொன்னார்கள். ராசாவும் ஆர்வமாக இருந்தார். ஆனால், கோபாலபுரத்தில் சிலருக்கு அதில் விருப்பம் இல்லை. 'ராசா வந்தால், பிறந்த நாள் விழாவின் ஹைலைட்டே அவர் வருகை என்று ஆகிவிடும்’ என்று சொல்லி கட்டையைப் போட்டு விட்டார்கள். இது ராசாவின் கவனத்துக்குப் போனதாம். கோபம் கொண்டாலும் ஏனோ தன்னை சாந்தப்படுத்திக் கொண்டார்!''


''சிறை தந்த பக்குவமாய் இருக்கும்.''


''இருக்கலாம்! சென்னைக்கு வந்து கருணாநிதியை வாழ்த்த இயலாத நிலையில், டெல்லியில் இருந்தே ஒரு கடிதத்தை எழுதினார் ராசா. அந்தக் கடிதம் தனது கைக்குக் கிடைத்ததும் கலங்கிப்போன கருணாநிதி, நான்கைந்து முறைக்கு மேல் அதைப் படித்தாராம்.


 'அப்படியே முரசொலியில் போடலாம்’ என்று சொன்னவர், திடீரென  'போடலாமா... வேண்டாமா?’ என்று குழம்பிப்போனாராம். கருணாநிதியை அளவுக்கு மீறிப் புகழ்வதுதான் அந்தக் கடிதத்தின் ஒட்டுமொத்த சாரம்சம் என்றாலும், ஒரே பத்தியில் தன்னுடைய ஒட்டுமொத்த ஆத்திரத் தையும் தீர்த்துவிட்டார் ராசா என்பதுதான் கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு!''


''என்ன சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்?''


''கருணாநிதி தனது வாழ்க்கை வரலாறாக எழுதிய 'நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காண்பித்துத் தொடங்கும் ராசா, 'வாழ்க்கையைப் போராட்டம் என்று வர்ணிப்போர் உளர், எனக்கோ போராட்டமே வாழ்க்கை... என்று சொல்லி இருக்கிறீர்கள். இது உங்களைப் பற்றிய உங்களின் சுயவிமர்சனம். இந்த வரையறைக்குள் வர எனக்கும் தகுதி உண்டு என வரித்துக்கொள்வதற்கு உங்களுக்குப் பின் தலைவன் இல்லை என்பது உங்களுக்குப் பெருமை. எங்களின் வெறுமை’ என்று கடுமையான வார்த்தைகள் போட்டு எழுதி இருக்கிறார் ராசா.


'கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின்தான் தலைவர்... இல்லை இல்லை அழகிரிக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது... ஏன் ஒரு பெண் வரக் கூடாதா? கனிமொழிதான் அடுத்த தலைவர்’ என்று ஒவ்வொருவரும் அணி அணியாகப் பிரிந்து நிற்கிறார்கள். இந்த அணிகளுக்கு ஆட்களைத் திரட்டுவது மட்டும்தான் இப்போது கட்சியில் நடக்கிறது. கட்சியில் ராசா என்பவரும் முக்கியமான மையம். 

அவரை யார் இழுப்பது என்று போட்டியே நடக்கிறது. ராசாவுக்கும் ஸ்டாலினுக்கும் ஏனோ பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு இரண்டு மூன்று தடவை திகார் சிறையில் போய்ப் பார்த்தார் அழகிரி. ஸ்டாலினும் இரண்டு தடவை ராசாவுடன் திடீர் சந்திப்பு நடத்தினார். கனிமொழி மீதும் ராசாவுக்கு சில வருத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் கலை ஞருக்கு இணையான தகுதி இங்கு எவருக்கும் இல்லை என்ற கோபத்தை ராசா காட்டினார்’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.''


''ராசாவின் கோரிக்கைதான் என்ன?''


''ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவி அவருக்குத் தரப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். 'கட்சிக்காகத்தான் அவர் பல அவமானங்களைப் பட்டார். அதைக் கட்சிதான் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால், அவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் வேண்டா வெறுப்பாகப் பார்ப்பது ஏன்?’ என்று ராசா ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். அதனால்தான், ராசா சென்னைக்கு வராமல் இருப்பதே நல்லது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்களாம்!''


''கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்படி?''


''எல்லாக் கூட்டங்களிலும் உமது நிருபர்கள் வலம் வந்தார்களே! ஒரு சில குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். மூன்று நாட்களாக ஸ்டாலின் நல்ல மூடில் இல்லை. ஜூன் 1-ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. மகளிர் அணி விழா நடத்தியது. மகளிர் அணி நடத்தினாலும் கனிமொழிக்கு முக்கியத்துவம் தந்த விழா அது. ராஜாத்தி அம்மாள் துணையாக அந்தக் கூட்டத்துக்குப் பார்வையாளராக வந்த கருணாநிதி, விழா முடியும் வரை நெடுநேரம் இருந்து, கண்டுகளித்தார். கனிமொழியின் அன்றைய பேச்சு பலராலும் வரவேற்கப்பட்டது. கூட்டத்துக்கு ஸ்டாலினும் வந்திருந்தார்.


அடுத்த நாள், காமராஜர் அரங்கத்தில் இளைஞர் அணி சார்பில் ஒரு கருத்தரங்கம். வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்துக்கும் கருணாநிதி வரவேண்டும் என்று அழைத்தாராம் ஸ்டாலின். வருகிறேன் என்று முதலில் ஒப்புக்கொண்ட கருணாநிதி, ஏனோ வரவில்லை. இது ஸ்டாலினைக் கோபம்கொள்ள வைத்ததாம். அதனால்தான் 3-ம் தேதி பிறந்த நாள் அன்று முழுப் பங்களிப்பையும் தராமல் ஸ்டாலின் தவிர்த்து விட்டதாகச் சொல்கிறார்கள்'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்.


''சிங்கத்தைச் சீண்டிவிட்டது மாதிரி நடராஜன் சிலிர்த்து எழ ஆரம்பித்து இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கி விட்டார் நடராஜன் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். போலீஸுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நடராஜன், இப்போது மனித உரிமை கமிஷனின் கதவைத் தட்டிவிட்டார். 4-ம் தேதி, காவல்துறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் நடராஜன் புகார் அளித்தார்.


 புகார் கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், 'கடந்த பிப்ரவரி 18-ம் தேதி டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் வந்த 15-க்கும் மேற்பட்ட போலீஸார் என் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து என்னைத் தாக்கினார்கள். ஏன், எதற்கு என்றுகூட எனக்குப் புரியவில்லை. அதன்பின், என்னை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றி, செங்கிப்பட்டி, வல்லம் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு என்கவுன்ட்டர் செய்து என்னைக் கொல்லப்போவதாகப் பேசிக்கொண்டனர்.


 அதன் பிறகு, எங்கிருந்தோ வந்த உத்தரவை அடுத்து என்னை தஞ்சாவூர் கொண்டு சென்றனர். இது மனித உரிமை மீறல்’ என்று சொன்னார். டெல்லிக்குச் சென்று மத்திய மனித உரிமை ஆணையத்திலும் இதுபற்றி புகார் கொடுக்கப்போகிறாராம்.


'இப்போது, அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அதிலும் போலீஸ்காரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை. நில மோசடி என்று போலிப் புகாரில் என்னைக் கைது செய்த போலீஸ்காரர்களால் அதை நிரூபிக்க முடிந்ததா? என் வீட்டில் இருந்து எதையாவது இந்த போலீஸால் கைப்பற்ற முடிந்ததா? நான் இப்போது ஜாமீனில் இருக்கிறேன். ஆனால், இப்போதும் இந்தப் போலீஸ் தொல்லையைத் தாங்க முடியவில்லை. அதிகாலையில் வாக்கிங் போக முடியவில்லை. இருட்டில் மறைந்துகொண்டு ஒருவன் பின் தொடர்கிறான். கேட்டால், போலீஸ் என்கிறான். 

 ஆனால், அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொன்னால், காட்டுவது இல்லை. அவன் போலீஸ்காரனா இல்லை... ராமஜெயம், தா.கிருஷ்ணனைக் கொலை செய்த கும்பலில் ஒருவனா என்பது எப்படித் தெரியும்?’ என்று பதற்றமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் நடராஜன்.''


''ம்!''


''தஞ்சாவூரில் பி.ஆர்.ஓ-வாக இருந்தவர் கிரி. இவர் எம்.நடராஜனுக்கு ஒரு வகையில் உறவினர். ஜெ. - சசி பிரிவின்போது இவர் வேலூருக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், தஞ்சாவூரில் நடந்த நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அம்மா பயத்தில் உளவுத்துறையைக் கண்டு பலரும் ஓடி ஒளிந்தனர். 

 ஆனால், இவர் மட்டும் வலிய உளவுத்துறையினரிடம் சென்று 'என்னைப் பற்றி ஏதாவது போட்டுக்கொடுங்க’ என்று ரீதியில் பேசினார். திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கல்தா கொடுத்த நேரத்தில், இவரையும் சேலம் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இடமாற்றம் செய்தார்கள். பதவி ஏற்பதற்காக சேலம் சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். பின்னே, அப்படி ஒரு பதவியே கிடையாது என்று அங்கு சொன்னார்களாம்.''


''இது மாதிரியான இடத்தை எல்லாம் எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறார்களோ!'' என்று நாம் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடி எஸ்கேப் ஆனார் கழுகார்!


படங்கள்: என்.விவேக், கே.குணசீலன்


 பிரேமலதா காட்டிய திசை!


இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, ஜூன் 3-ம் தேதி புதுக்கோட்டை வந்தார் பிரேமலதா விஜயகாந்த். கறம்பக்குடியில் பிரசாரத்தைத் தொடங்கியவர், மீனம்பட்டி கிராமத்தில் பேசியபோது, ''தி.மு.க தலைவர் கருணாநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்'' என்று புது டிராக் போட்டார். ''இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு தே.மு.தி.க. சார்பில் 89-வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரி¢வித்துக் கொள்கிறோம்'' என்று மீண்டும் அவர் அழுத்திப் பேசியது அ.தி.மு.க-வினரை யோசிக்க வைத்திருக்கிறது. 'இந்தப் பேச்சுக்கு கருணாநிதியிடம் இருந்து விரைவில் பாசிட்டிவ் பதில் வரும்’ என்று தே.மு.தி.க-வினர் சந்தோஷத்தில் கிடக்கிறார்கள்.


 கார்த்திகேயன் மன மாற்றம்!


அகில இந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடந்தது. பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் கலந்துகொண்டார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் மனித உரிமை ஆர்வலர்கள் வந்திருந்தார்கள்.

 இதில் ஹைலைட், ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனின் அறிக்கைதான். மரண தண்டனை தேவை இல்லை என்பதற்கான வாதங்களை அறிக்கையில் வைக்கும் கார்த்திகேயன், 'என் எண்ணத்தில் மரண தண்டனை உலகமெங்கும் ஒரு நாள் ஒழிக்கப்பட்டுவிடும் எனத் திண்ணமாக நம்புகிறேன். தூக்குக் கயிற்றின் நிழலில் இருக்கும் மனிதனின் எண்ணவோட்டம், தண்டனை விதிப்புக்கும் தண்டனை நிறைவேற்றத்துக்கும் இடையே உள்ள மிகநீண்ட இடைவெளி, தன் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை ஆகியன ஒன்றாக இணைந்து கொடும் மனவலியை ஏற்படுத்தி உள்ளத்தைச் சிதைத்து இரட்டைத் தண்டனைக்கு வழி வகுத்துவிடும்'' என்று கறாராக தனது முடிவைச் சொன்னது, தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது!



1.ஆவுடையப்பன் - ஜெயக்குமார்... இதில் சமாளிப்பதில் கெட்டி யார்? 

 
ஆவுடையப்பன் சீரியஸான முகத்தை வைத்துச் சமாளிப்பார். ஜெயக்குமார் சிரித்த முகத்துடன் அதையே செய்வார். ரெண்டு பேருமே ஜாடிக்கு ஏற்ற மூடிகள்!


 
2. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக ஒரு தமிழர் கூட இல்லையாமே? 


காரியக் கமிட்டியிலா... காங்கிரஸிலா?



3. நூற்றாண்டு விழா காணும் மு.வ. பற்றி..? 



மொழி வளமும் இலக்கியத் திறனும் இருக்குமானால், ஓர் அலுவலக எழுத்தர்கூட தன்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகும் அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு உதாரணம் மு.வரதராச​னார். காக்காய் பிடிப்பு, கழுத்​தறுப்புகள் இல்லாமல் தன் தகுதியால் அந்தப் பதவியை அடைந்த சிலரில் ஒருவர். பரிமேலழகர் மூலமாக, பண்டிதர்களுக்கு மட்டுமே என மூடிவைக்கப்பட்டு இருந்த திருக்குறளை, தனது இனிய, எளிய தெளிவுரை மூலமாக பாமரர்க்கும் திறந்து விட்டவர்.


 'மு.வ.வின் கையடக்கத் திருக்குறள் தெளிவுரை’ என்ற பாக்கெட் அளவுப் புத்தகம் இதுவரை எத்தனை லட்சங்கள் விற்றன என்பது அதை வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கே தெரியாது.
அனைத்தையும்விட, தமிழ் இலக்கியம் சொல்லும் நெறிகளின்படி வாழ்ந்த மனிதர். ஏழை மாணவர்களை அவரே படிக்க வைத்தார். தன்னை விடத் தகுதியான மாணவன் என்று உணர்ந்தால், தனது புத்தகத்துக்கு மதிப்புரை எழுதவும் வைத்தார். அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபோது ஒரு காட்சி...
கோவில்பட்டி கோ.வெ.நா.கல்லூரி முதல்வரும் தகுதிவாய்ந்த அறிஞருமான அரசு.நாராயணசாமி, உடல் நலம் குன்றிய நிலையிலும் தன்னைப் பார்க்க வருகிறார் என்று தெரிந்ததும், துணை வேந்தரான மு.வ. தனது அறையில் இருந்து எழுந்து வெளியில் வந்து அவரைச் சந்தித்து அனுப்பி​வைத்த பெருந்தன்மைக்காரர். தமிழால் மு.வ. தகுதி பெற்றிருந்தாலும் அவரால் தமிழும் தகுதி பெற்றது!\\




3. பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றையும் ஏற்றிய ஜெயலலிதா, பெட்ரோல் விலையை ஏற்றியதற்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கிறாரே? 


'எந்த விலையாக இருந்தாலும் நான்தான் உயர்த்துவேன்’ என்ற எண்ணத்தால் இருக்குமா?



4. நாடகம் சரி, அதென்ன 'கபட’ நாடகம்? 



அரங்கத்தில் நடப்பது நாடகம். அரசியலில் நடப்பது கபட நாடகம்! 'கபடம்’ என்றால் திருட்டுத் தனம்.


சமீபத்திய உதாரணம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தினார்கள். நாடு முழுவதும் எதிர்ப்பு வந்தபோதும், 'எங்களுக்கு வழி இல்லை. மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று மத்திய பிரசார பீரங்கிகள் ஊதின.


 திடீரென, இப்போது 2 ரூபாய் குறைக்கப்பட்டது மட்டும் எப்படி சாத்தியம் ஆனது? 6 ரூபாய் உயர்த்தினால் போதுமானது என்றுகூட எண்ணெய் நிறுவனங்கள் சொல்லி இருக்கலாம். '8 ரூபாய் உயர்த்துவோம். எதிர்ப்பு வந்ததும் 2 ரூபாய் குறைப்போம்’ என்று ஒட்டகத்தின் கண்ணில் புல்லைக் காட்டி எடுத்துப் போடும் ஏமாற்று வேலையை பட்டப்பகலில் செய்தார்களே... அதற்குப் பெயர்தான் கபட நாடகம்!




5. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரே பிரதமராக வர வேண்டும்’ என்கிறாரே சங்மா? 


இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன், நேரடியாகத் தேர்தலில் நின்று வென்று எம்.பி. ஆனவர் அல்ல. மாநிலங்கள்அவை உறுப்பினர். எனவே, சங்மாவுக்கு மன்மோகன் மீது என்ன வருத்தமோ? ஒருவேளை சங்மாவுக்கு எதிராக சிங் கட்டையைப் போடுகிறாரோ?


6. 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ விளம்பரங்களுக்கு மட்டும் பல கோடி செலவு செய்து விட்டார்கள் போல? 


ஒருவேளை, நூறு ஆண்டுகளுக்குத் தர வேண்டிய விளம்பரங்களை ஓராண்டில் தரத் திட்ட​மிட்டுள்ளார்களோ?



7. உண்மையான தமிழினத் தலைவர் யார் என்று கேட்டால்  'பட்’டென்று என்ன சொல்வீர்கள்? 


யாரும் இல்லை என்பேன்!



8. 'தமிழ் ஈழம் கேட்பதைக் கைவிட வேண்டும் என்று இங்கு உள்ள தலைவர்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்’ என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்? 


யாராவது அவரை வாங்கித் தரச் சொன்னார்​களா? ஞானதேசிகன் ஏன் பயப்​படுகிறார்?



9. அரசியல் அறம் என்பது என்ன? 


எழுத்தாளர் வைகறை, 'வாருங்கள் கவிஞர் இன்குலாப்பை சந்திப்போம்’ என்ற நிகழ்ச்சிக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசிய இன்குலாப் இப்படிச் சொன்னார்...


'தமிழர் பெரும்பான்மையாக இருந்து சிங்களவர் களை ஒடுக்கினால், என் பேனா சிங்​களவர் களுக்காகவே எழுதும்’. இதுதான் அரசியல் அறம்!


10. வெற்றி மட்டுமே ஒரு மனிதனை அடையாளப்​படுத்துகிறதே? 


வீரபாண்டிய கட்டபொம்மனும், பூலித் தேவனும், மருது பாண்டியரும் வாழ்ந்த காலத்தில் தங்களின் லட்சிய வெற்றிகளைப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களை மனிதர்கள் ஆராதிக்கிறார்களே. என்ன காரணம்? வெற்றி பெற்றவர்களைத்தான் அடையாளப்படுத்த வேண்டுமானால், அவர்களைக் காட்டிக் கொடுத்தவர்​களைத்தான் நாம் பூஜித்திருக்க வேண்டும்.
லட்சியத்துக்காக, கொள்கைக்காகப் போராடியவர்கள், வாதாடியவர்கள் வரலாற்றில் இடம் பெறு​​வார்கள். அதில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை!


 THANX -JU VI

Monday, April 23, 2012

ஸ்டாலின் - அழகிரி - மதுரை - என்ன பிரச்சனை? ஜூ வி கட்டுரை

துரையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் 17 பேருக்கு அதிரடியாக ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி, அழகிரியின் அஸ்திவாரத்தில் கை வைத்து இருக்கிறது தி.மு.க. தலைமை! 



'தங்கள் மாவட்டத்தில் கடந்த 15.4.2012 காலை, கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தியபோது, தாங்கள் அந்தக் கூட்டத்திலும், அன்று மாலை தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளாததோடு, தங்கள் பகுதியில் இருந்து விண்ணப்பித்து இருந்த இளைஞர்களையும் நேர்காணலில் கலந்துகொள்ளச் செய்யாதது கழகக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியதாகவும் தலைமைக் கழகம் கருதுகிறது.


 தங்களின் இச்செயலுக்கு உரிய காரணத்தையும் விளக்கத்தையும் இக்கடிதம் கண்ட ஒரு வார காலத்துக்குள் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். தவறினால், தலைமைக் கழகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்’ என்று, தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கூரியரில் அனுப்பிய நோட்டீஸ் 17-ம் தேதி, மதுரை தி.மு.க-வினர் வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே விழுந்தது.  


முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், பொன்முத்துராமலிங்கத்தின் மகன் சேதுராமலிங்கம், ரவீந்திரன், முபாரக் மந்திரி, ஒச்சுபாலு உள்ளிட்ட எட்டு பகுதிச் செயலாளர்கள், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சின்னம்மாள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலிங்கம் உள்ளிட்டவர்கள்தான் ஷோ-காஸ் நோட்டீஸ் வாங்கிய பாக்கியவான்கள்.


 இதற்கிடையே, ஸ்டாலினின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநகரச் செயலாளர் தளபதி, அழகிரிக்கு பயந்து ஏற்கெனவே தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு ஃபேக்ஸில் அனுப்பி விட்டாராம்.


கடந்த 17-ம் தேதி காலையில் அறிவாலயத்தில் ஆற்காட்டார் முன்னிலையில் கருணாநிதியிடம் வருத்தப்பட்டு பேசிய ஸ்டாலின், 'கழகத்தில் சேலமும் மதுரையும் மட்டும் தனித்தீவாக இருக்கிறது. என்னை நோகடிக்கும் விதமாகவே தொடர் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தலைவரின் நிகழ்ச்சியை நிர்வாகிகள் புறக்கணித்தால் அவர் என்ன மனவேதனையில் இருப்பாரோ, அத்தகைய வேதனையில்தான் இப்போது நான் இருக்கிறேன். என்னைப் புறக்கணித்த அத்தனை பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

இதையடுத்து, 'மதுரையில் என்னதான் நடந்தது?’ என்று அழகிரி வட்டத்து சீனியர்கள் சிலருக்குப் போன் போட்டு விசாரித்தாராம் டி.கே.எஸ்.இளங்கோவன். அவரிடம் பேசிய பொறுப்பாளர் ஒருவர், 'கடந்த 10 வருஷமா அண்ணன் - தம்பி சர்ச்சைக்குள்ள சிக்கிக்கிட்டு நாங்க படாதபாடு படுறோம். போனா இவருக்கு வருத்தம்;


போகாவிட்டால் அவருக்குக் குத்தம். நாங்க என்னதான் பண்றது? கட்டுக்கோப்பான இயக்கத்தில் தலைவரோட பிள்ளைகளே ஆளுக்கு ஒரு நிலைப்பாட்டுல இருந்தாங்கன்னா... நாளைக்கு வீரபாண்டியார் மகன் ஒரு தப்புச் செஞ்சா தலைவரால் எப்படித் தட்டிக்கேட்க முடியும்?’ என்று வேதனையைக் கொட்டினாராம்.

நம்மிடம் பேசிய மதுரை தி.மு.க-வின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர், ''1982-ல் இருந்து அழகிரியால் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்ட சிம்மக்கல் தாவூத், காவேரிமணியம், வேலுச்சாமி போன்றவர்கள் பிறகு, அவராலேயே ஓரம் கட்டப்பட்டார்கள். அந்த வரிசையில் இப்போது தளபதியும் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். 'எனக்குப் பதவியே வேண்டாம்; பொழப்பைப் பாக்கவிடுங்க’ன்னு கடந்த நாலு மாசமாவே சொல்லிட்டு இருந்தாரு தளபதி.

 ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்காக, யாருகிட்டயும் கை ஏந்தாம 10 லட்ச ரூபாய் வரை செலவு செஞ்சிருக்கார். அதுதான் தப்பாப்போச்சு. கட்சி சொன்ன வேலையை செய்யலைங்கிறதுக்காக நடவடிக்கை எடுத்தா, அது சரி. ஆனா, கட்சி சொன்ன வேலையை செஞ்சதே தப்புங்கிற மாதிரி தளபதியை ராஜினாமா பண்ண வெச்சது நியாயம்தானா?'' என்று வருத்தப்​பட்டார்.

தி.மு.க. சட்டப்புள்ளி ஒருவரோ, ''ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அன்று 'எங்களைப் போக வேண்டாம்’னு சொன்னது உண்மைதான். அதை மீறி நாங்கள் வந்திருந்தால், அதனால் வரும் பாதிப்புகளில் இருந்து ஸ்டாலின் எங்களைக் காப்பாற்றி இருப்பாரா? ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு எங்​களைப் போகவிடமால் தடுத்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும்​தானே... அப்படியானால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பும் தைரியம் தலைமைக்கு இருக்கிறதா?’  என்று சீறினார்.

ஷோ-காஸ் நோட்டீஸ் பற்றி அவைத்தலைவர் இசக்கி​முத்துவிடம் பேசினோம். ''விளக்கம் கேட்டிருக்காங்க. அழகிரி அண்ணன் வந்ததும் அவருகிட்ட கேட்டுட்டு முடிவெடுக்கலாம்னு இருக்கேன்'' என்றார்.

பொருளாளர் மிசா பாண்டி​யனிடம் கேட்டதற்கு, ''வழக்கமா பொதுச்செயலாளர்தான் நோட்டீஸ் அனுப்​புவார். ஆனா, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்​கோவன் அனுப்பி இருக்கார். இது உண்மையான நோட்டீஸ்தானா இல்லை, யாராச்சும் டுபாக்கூரா அனுப்பி​ இருக்​காங்களான்னு செக் பண்ணணும்'' என்று கலகலப்பாக ஆரம்பித்தவர்,


 ''இளைஞர் அணி நேர்காணல் கூட்டங்களுக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் போகணும்னு கட்டாயம் இல்லை. அதனால் போகலை. கண்டனக் கூட்டத்துக்கு நாங்க போகலைன்னு யாரு சொன்னது? அந்தக் கூட்டமும் முறையாவா நடந்துச்சு? கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளரான அழகிரி அண்ணனின் பெயரை போஸ்டர்களில் போடலை. அவருக்கே இந்த நிலை என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்னு யோசிச்சோம்.


அதனால, மேடைக்குப் போகாம இருந்துட்டோம். மீறி மேடைக்குப் போயிருந்தாலும் ஏதாவது குழப்பத்தை விளைவித்து, 'இவங்களாலதான் நடந்துச்சு’னு எங்க மேல பழிபோடவும் தயங்க மாட்டாங்க. அப்படித்தானே பரமக்குடியில ரித்தீஷ் மேல பழி சுமத்தினாங்க?

துணைச் செயலாளர் சின்னம்மாளின் சொந்த அண்ணன் 13-ம் தேதி கடலூரில் விபத்தில் இறந்து விட்டார். துக்கத்தில் இருந்த அவருக்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். எங்களுக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி அண்ணன் இருக்கிறார். 20-ம் தேதி அவர் மதுரை வந்ததும், இதற்கு என்ன பதில் கொடுக்கிறதுன்னு கேட்டு முடிவெடுப்போம்.


மதுரை நிர்வாகிகள் அனைவரையும் தலைமைக் கழகம் சென்னைக்கு அழைத்து, எங்கள் மீது கூறப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டுக்கு, எங்களிடமும் விளக்கம் கேட்கணும். நாங்கள் 17 பேரும் பொறுப்பில் இருந்து விலகத் தயார். ஆனால், எங்களுக்கு பதிலாக வரும் 17 பேருக்காவது இனிமேல் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற விதியை கழகத் தலைமை வகுத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார். 

''கட்சிப் பொறுப்பாளர்களை ஸ்டாலின் கூட்டத்துக்கு போக​விடாமல் நீங்கள்தான் கஸ்டடியில் வைத்திருந் ததாக சொல்கிறார்களே'' என்று கேட்டதற்கு,


''கஸ்ட​டின்னு சொன் னாங்களா... அடைச்சி ​வெச்​சிருந்தேன்னு சொன்​னாங்களா? என்னோட காம்ப்ளக்ஸ் வாசல்ல நான் இருக்கும்போது கட்சிக்​காரங்க என்னைப் பார்க்க வர்றாங்க. உங்களைப் போலநண்பர்​​களும் வர்றாங்க. அவங்கள உட்கார​வெச்சுப் பேசிக்கிட்டு இருந்தா, அடைச்சி​வெச்சிருக்கேன்னு சொல்றதாக்கும்'' என்று சிரித்தார் மிசா பாண்டியன்.

அழகிரி படம் இல்லாமல் போஸ்டர் அடித்தது குறித்து இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தரப்பிடம் பேசினோம். 'உங்க படத்தை போஸ்டர்ல போடலாமா?’ என்று அழகிரியிடம் ஜெயராம் கேட்டதாகவும்,  'எம் பேரைப் போட்டா கண்டிச்சு அறிக்கை விடுவேன்’ என்று அழகிரி சொல்லி விட்டதாகவும் சொல்கிறார்கள். 

ஷோ-காஸ் நோட்டீஸ் விவகாரத்தைக் கேள்விப்பட்ட அழகிரி, 'உங்களுக்கு எதுக்கு அனுப்புறாங்க? தைரியம் இருந்தா எனக்கு அனுப்பட்டும்’ என்று சீறியதாகச் சொல்கிறார்கள். ''நோட்டீஸுக்கு பதில் கொடுக்க வேண்டாம். எல்லாரும் ராஜினாமா பண்ணிருங் கன்னுதான் அண்ணன் சொல்லப்போறார்'' என்று சொல்லும் அழகிரி விசுவாசிகள், அழகிரியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

இதனிடையே, கடந்த 16-ம் தேதி மதுரையில் ஸ்டாலினை சந்தித்த தென்மாவட்டச் செயலாளர்கள் சிலர், 'இனிமே நீங்க அடிக்கடி மதுரைப் பக்கம் வரணும். எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தால், உங்கள் பின்னால் நிற்கத் தயார்’ என்று தெம்பு கொடுத்தார்களாம். 'எனக்கென்ன தயக்கம்? நீங்கள் அழைத்தால் கட்டாயம் வருவேன்’ என்று சொன்ன ஸ்டாலின், 'மே தினப் பொதுக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தலாம்னு யோசிக்கிறேன்’ என்று சொன்னாராம்.

மதுரை மண்ணில் இன்னும் என்னென்ன களேபரங்கள் அரங்கேறப் போகின்றனவோ..?

டெயில் பீஸ்: 19-ம் தேதி இரவு ஷோ-காஸ் நோட்டீஸ் பெற்ற 17 பேரும் மதுரையில் ஹோட்டல் ஒன்றில் ரகசியமாகக் கூடிப் பேசினார்களாம். 'போஸ்டர்களில் அண்ணன் அழகிரியின் பெயர் போடாதது குறித்து மாநகரச் செயலாளர் தளபதியிடம் விளக்கம் கேட்டோம். அவர் சரியான பதிலை சொல்லாததால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை’ என ஒரே மாதிரியானப் பதிலை அழகிரியிடம் காட்டிவிட்டு அனுப்ப அனைவரும் முடிவு செய்திருக் கிறார்களாம்.

-


 காமராஜர் - கண்ணதாசன் நட்பு எப்படிப்பட்டது? 


ஒரு கள்ளமும் இல்லாத தகப்பனுக்கும் எதிர்பார்ப்பு இல்லாத பிள்ளைக்குமான நட்பு அது. கண்ணதாசன் தி.மு.க.வில் இருக்கும்போது, காமராஜரை பொதுமேடைகளில் விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர். 'அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ என்று பாட்டு எழுதி, காமராஜருடன் ஐக்கியம் ஆனவர். 'காட்டுக்கு ராஜா சிங்கம், பாட்டுக்கு ராஜா கண்ணதாசன்’ என்று பெருந்தலைவரே பாராட்டினார். 'ராஜாவோ இல்லையோ... நான் அடிபணியும், சக்கரவர்த்தி எனக்குச் சூட்டிய மகுடம் இது’ என்றார் கண்ணதாசன்.


கவிஞரிடம் தலைவருக்குப் பிடிக்காதது... மதுவின் மீதான மயக்கம். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஒருவர் நியமிக்கப் படும்போது... மது பெர்மிட் இருந்தால் அதனை சரண்டர் செய்துவிட வேண்டும் என்பது அந்தக் காலத்து விதி. கண்ணதாசனுக்கு டெல்லியில் இருந்து நோட்டீஸ் வந்தது. 'சரண்டர் பண்ணிடப்போறேன்’ என்று காமராஜரிடம் கவிஞர் சொன்னார். 'எதை?’ என்றார் தலைவர். 'அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கார்டைத்தான்’ என்று கவிஞர் சொன்னதும் காமராஜர் சிரித்த சிரிப்பில் இருக்கிறது அவர்களின் நட்பு.


''உங்கள் பெயரை 'காமதாசன்’ என்று மாற்றலாமா?'' என்று ஒருவர் கேட்டார். ''நல்லது 'ராஜ’ என்று நடுவில் சேர்த்து 'காமராஜதாசன்’ என்று வையுங்கள்'' என்று சொன்ன பதிலில் நட்பு மட்டும் அல்ல, பக்தியே தெரிகிறது!



திருச்சியில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழாவினால் திருப்பம் உண்டா? 


இளங்கோவன் இருந்த பக்கம் ப.சிதம்பரம் திரும்ப மாட்டார். தங்கபாலு பக்கம் இளங்கோவன் திரும்ப மாட்டார். இந்தத் திருப்பத்தையா கேட்கிறீர்கள்?
 எஸ்.ஏ.காதர், விழுப்புரம்.


'ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது’ என்கிறாரே ஜெயலலிதா?


'யாருடைய சட்டத்தின் ஆட்சி’ என்பதையும் ஜெயலலிதா விளக்கிச் சொல்லி இருக்க வேண்டும். நாளிதழ்களில் நித்தமும் தெறிக்கிறதே ரத்தம். அது யாருடைய சட்டத்தின் ஆட்சி?


'கொலவெறி’ பாடல் இருந்தும் '3’ படம் குப்புறக் கவிழ என்ன காரணம்? 


அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு இருந்தால்... சினிமா மட்டுமல்ல, எதுவுமே கவிழத்தான் செய்யும்!


தம்மைச் சந்திக்க வந்த பா.ஜ.க. முக்கியத் தலைவர் அருண் ஜெட்லியிடம் தமது கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறுமா? 


ஆசை நிறைவேறுமா என்பது அப்புறம். ஜெயலலிதா, இப்படி ஒரு கோரிக்கை வைத்தாரா என்பதே சந்தேகம். துணை ஜனாதிபதி என்றால் யாருக்கு? தனக்கா? இல்லை கட்சியில் இன்னொரு வருக்கா? புரோட்டோகால்படி தன்னைவிட உயர்வான ஒரு பதவியை இன்னொருவருக்கு வாங்கித் தருவாரா ஜெயலலிதா? லாஜிக் இடிக்கிறதே!


இலங்கை செல்லும் குழுவில் கனிமொழி, திருமாவளவன் ஆகிய இருவரும் இடம்பெற்றிருக்க வேண்டாமா? 


போன முறை போய் 'பெயர் கெட்டது’தான் மிச்சம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்!




கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நிகழ்ச்சி ஏதாவது சமீபத்தில் நடந்ததா? 


இலங்கை செல்லும் குழுவில் தி.மு.க. இடம்பெறாது என்ற கருணாநிதியின் அறிவிப்பு!
காங்கிரஸையும் மன்மோகன்சிங்கையும் சோனியாவையும் விட்டுக் கொடுக்க மாட்டார் கருணாநிதி என்பதே இது வரையிலான நிலைமையாக இருக்க... அவரது இந்த முடிவு எதிர்பாராததுதான்.


தமிழக வாக்காளர்கள் ஏமாறுகிறார்களா? ஏமாற்றப் படுகிறார்களா? 


ஏமாறுகிறார்கள்! ஏமாறத் தயாராகவும்  இருக் கிறார்கள்.. எத்தனை முறை வேண்டுமானாலும்!!



மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளராக மூன்றாவது முறை பிரகாஷ் காரத் தேர்வானது குறித்து? 


பிரகாஷ் காரத் மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டதைவிட முக்கியமானது, மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாநாட்டில் போடப்பட்டுள்ள தத்துவார்த்த தீர்மானம். 'அனைத்து வகையான கேடான போக்குகளுக்கு எதிராக நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்துவோம்’ என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

'பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே இந்தியாவைப் பொறுத்தவரை, வர்க்கப் போராட்டமாக அமையும்’ என்று, சீத்தாராம் யெச்சூரி பேசி இருக்கிறார். மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரகாஷ் காரத் இதற்கு என்ன முயற்சிகள் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே அவரை அளவிட முடியும்!


மூன்றாவது அணி அமைப்பதால் எல்லாம் அவர்களது தத்துவார்த்த தீர்மானத்தை நிறைவேற்றிவிட முடியாது!



  தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் என்ன ஆகும்? 


கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் எல்லாரும் சேர்ந்து நடிக்கும் படம் எப்படி இருக்கும்? சகிக்காது அல்லவா? அப்படி இருக்கும் அந்தத் தொகுதி!