Showing posts with label வைகோ.ju vi. Show all posts
Showing posts with label வைகோ.ju vi. Show all posts

Wednesday, April 03, 2013

ஸ்டெர்லைட் ரகசியம் - வைகோ! @ ஜூனியர் விகடன்


வளைக்கப் பார்த்தார் அந்த ஆலையின் அதிபர்!
ஸ்டெர்லைட் ரகசியம் சொல்லும் வைகோ!


ஆலையைப் பூட்டும் உத்தரவு வந்ததுமே அனைவரும் வாழ்த்து சொன்னது வைகோவுக்குத்தான். 'இது எங்களின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று, ம.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அங்கும் சென்று வைகோ வாதாடினார். ஏப்ரல் 2-ம் தேதி, உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டெல்லி செல்வதற்கு வழக்கறிஞர் தேவதாஸு​டன் தயாராகிக்கொண்டு இருந்த வைகோவை அவரது அண்ணா நகர் வீட்டில் சந்தித்தோம். 

''ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று, இந்தப் பிரச்னையை நீங்கள் எப்போது கையில் எடுத்தீர்கள்?'


''என்னுடைய வாழ்நாளில் வரலாற்று முக்கியத்​துவம் வாய்ந்த ஒரு சாதனையைப் படைத்த மனநிறைவோடு, உங்களைச் சந்திக்கிறேன். மக்கள் மன்றத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்துக்கு இன்று ஒரு விடிவு பிறந்துள்ளது. இன்று, சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வு ஓரளவு உருவாகியுள்ளது. ஆனால், இந்த ஆலையை அவர்கள் தொடங்கத் திட்டமிட்டபோது அப்படி இல்லை. 'வளர்ச்சியைத் தடுக்கிறோம்’ என்றுகூட சிலர் பிரசாரம் செய்தனர். எனவே, மக்களிடம் விழிப்பு 
உணர்வை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கினோம்.

1994-ம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்கினர். அந்த ஆலையில் இருந்து விஷப் புகை வெளி​யேறினால் விவசாயம் பாதிக்கப்படும் என்று, அந்த மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் கொந்தளித்துப்போன மக்கள், இரும்புக் கம்பி, சம்மட்டி சகிதமாகச் சென்று அந்த ஆலையை அடித்து நொறுக்கினர். மக்கள் போராட்டமாக அது வெடித்தது. உடனே, அந்த மாநில அரசு ஆலையின் லைசென்ஸை ரத்துசெய்துவிட்டது. கோவாவில் தொடங்க அரசிடம் அனுமதி கேட்டனர். அங்கு அனுமதி கிடைக்கவில்லை. குஜராத் சென்றனர். அங்கேயும் அனுமதிக்கவில்லை. அதன் பிறகுதான், தமிழகத்துக்கு வந்தனர்.
தமிழ்நாட்டில் அனுமதி கிடைத்துவிட்டது. ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்குப் பசுமை அடர்த்தி இருக்கவேண்டும் என்பது தளர்த்தப்பட முடியாத விதிமுறை. ஆனால், எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் ஆலையை அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்கினர். தூத்துக்குடி பகுதியில் உள்ள மீனவர்கள் அந்தக் காலகட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். இந்த ஆலையைத் தொடங்கினால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படும் என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தினோம். சரியாகச் சொன்னால் 1996-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரதம் இருந்தது முதல், கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இறுதி வாதத்தை எடுத்துவைத்தது வரை இந்த 17 ஆண்டு காலமும் என்னுடைய முக்கியமான வரலாற்றுக் கடமையாக இதைச் செய்தேன்.''


''இந்த ஆலையின் செயல்பாடுகள் காரணமாக எப்படிப்​பட்ட பாதிப்பு ஏற்படுவதாகச் சொல்கிறீர்கள்?''


''நிலம், நீர், காற்று ஆகிய மூன்றுமே மாசுபடு​கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நச்சுக் காற்றை சுவாசிப்பதால், மக்களுக்குப் புற்றுநோய் ஏற்படும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் புற்றுநோயால் இறந்துள்ளனர். அவர்கள் மரணத்துக்குக் காரணம் புற்றுநோய் என்பதுகூட தெரியாத அறியாமையில் இருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே வசிக்கும் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் மாசுபட்ட நிலத்தடி நீரைக் குடித்ததால் செத்து மடிந்திருக்கிறது.


 இங்கிருந்து மாதிரி எடுத்து அனுப்பப்பட்ட தண்ணீரை ஆய்வுசெய்த உலகப் புகழ்பெற்ற அமெரிக்கச் சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செரானி, 'இந்தத் தண்ணீரைக் குடித்தால், மனிதர்களுக்கு கேன்சர் ஏற்படும். கால்நடைகள் இறந்துவிடும்’ என்று அறிக்கை கொடுத்துள்ளார். இவை அனைத்தும் இத்தனை ஆண்டு காலம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி காலை லேசாக நச்சுவாயு வெளியேறியபோது மரங்களில் இருந்த இலைகள் பட்டுப்போயுள்ளன. பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்படியானால் பெரிய பிரச்னை ஏதாவது ஏற்பட்டால், பாதிப்பின் அளவு அதிகரிக்கும். இன்னொரு போபால், தென்தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பதறித்தான் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தோம்.

'எங்களை, எங்கள் பிள்ளைகளை, பேரப்​பிள்ளைகளை ஆரோக்கியமாக வாழவிடுங்கள். ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்துங்கள்’ இப்படி ஓர் துண்டுப் பிரசுரம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதுதான் உண்மை.''


''உங்களது மனதை மாற்றும் காரியத்தில் அந்த நிறுவனம் இறங்கவில்லையா?''


''எனது பொது வாழ்க்கையில் நான் சந்தித்த மிக முக்கியமான சோதனை, இந்தப் பிரச்னை. எத்தனையோ முறை, யார் யாரோ என்னை வந்து பார்த்து இந்த விவகாரத்தில் இருந்து என்னை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று துடித்தனர். ஆனால், யாருக்கும் நான் இடம் கொடுக்கவில்லை. நீதித் துறையில் இருந்த மிக முக்கிய​மான, நான் மதிக்கக்கூடிய மனிதர் ஒருவர்  என்னை போனில் அழைத்து, 'உங்களைப் பார்க்க வரணும்’ என்று நேரம் கேட்டார். நானும் வரச் சொன்னேன். குறிப்பிட்ட நாளில் எங்கள் கட்சி அலுவலகமான தாயகத்தில் நான் காத்திருந்தேன். அவரும் வந்தார். 

'ஸ்டெர்லைட் பற்றி தவறான தகவல்கள் உங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றன. நீங்கள் நினைக்கும் அளவுக்கு அது சுற்றுச்சூழலைப் பாதிக்காது. ஸ்டெர்லைட் சேர்மன் அனில் அகர்வால் உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறார். நீங்கள் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், அவர் உங்களை வந்து பார்க்கத் தயாராக இருக்கிறார். அதுக்காகத்தான் நான் டெல்லியில் இருந்து வந்தேன்’ என்றார். 'நீங்க தப்பா நினைக்காதீங்க. எனக்கு அவரைப் பார்க்க விருப்பம் இல்லை’ என்று சொன்னேன். 'அவரைப் பார்க்கிறதுல என்ன தவறு?’ என்று அவர் கேட்டார். 'எங்க கிராமத்துல, பனமரத்துக்கு கீழே நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுன்னு சொல்லுவாங்க. நான் அவரை எதற்காகச் சந்தித்தாலும் தவறாகத்தான் பேசப்படும். எனக்கு அகர்வாலைப் பார்க்க விருப்பம் இல்லை. ஸ்டெர்லைட் சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று சொல்லிட்டேன். அவர் வருத்தத்துடன் திரும்பிச் சென்றுவிட்டார்.


அதன் பிறகு ஒருநாள், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது ஒரு தம்பதி வந்தனர். கணவன் என்னிடம், 'தமிழகத்தின் முக்கியமான தலைவர் நீங்கள். உங்களுக்கு முதல்வராகும் தகுதி இருக்கிறது’ என்று புகழ்ந்தார். அவரது விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தார். அதில் 'அனில் அகர்வால், மேனேஜிங் டைரக்டர் - ஸ்டெர்லைட்’ என்று இருந்தது. 'வைகோ எனக்கு உங்களிடம் பேச பத்து நிமிடம் நேரம் வேண்டும். நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள்’ என்றார்.


 'ஸாரி மிஸ்டர் அகர்வால்.. எனக்கு உங்களிடம் பேச விருப்பம் இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கே பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லி​விட்டேன். இருபது நாட்களுக்குப் பிறகு, டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தேன். என்னுடைய பக்கத்து சீட்டில் அதே அகர்வால் உட்கார்ந்து இருந்தார். எனக்கு வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் சொல்லிவிட்டு, ஸ்டெர்லைட் வழக்கு சம்பந்தமான ஃபைலைப் படித்துக்கொண்டே வந்தேன். அவர் ஏதோ புத்தகம் படித்தார். அருகருகே இருந்தும் இரண்டே கால் மணி நேரமும் எதுவும் பேசவில்லை. இப்படி எத்தனையோ முறை அவர்கள் என்னை வளைக்கப் பார்த்தனர். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், இல்லை என்றால் அது தூத்துக்குடி வட்டாரத்துக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதில், எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.''


''ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகளில் நீங்களே ஆஜராகி வாதாடி வருகிறீர்களே?''


''நான் சட்டம் படித்தபோது, 'தவறான ஆட்களுக்​காகவும் ஆஜராக வேண்டி வருமே?’ என்று என்னுடைய அக்கா கேட்டார். மூன்று தமிழர்களின் தூக்குக்கு எதிராகவும் புலிகள் மீதான தடையைக் கண்டித்தும் இப்போது ஸ்பெக்ட்ரம் ஆலை விவகாரத்திலும் நானே வாதாடியபோது, நியாயமான காரியங்களுக்காக வாதாட இந்த சட்டப் படிப்பு பயன்பட்டது என்ற மனநிறைவை அடைகிறேன்.

 உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் ஆஜராக நான் காத்திருந்தேன். அப்போது, அங்கே வந்த இரண்டு போலீஸார் என்னிடம், 'நீங்கள் இங்கே உட்காரக் கூடாது. வெளியே போங்க’ என்று விரட்டினர். நான் வாதாட வந்திருக்கிறேன். எனக்கு பாஸ் இருக்கிறது என்று சொல்லியும் கேட்கவில்லை. அங்கிருந்த வழக்கறிஞர்கள் எனக்காகப் பேசிய பிறகுதான் அந்தப் போலீஸார் அமைதி அடைந்தனர். நான் வாதாட வேண்டிய நேரத்தில், முன்வரிசையில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்தேன்.

 பக்கத்​தில் உட்கார்ந்திருந்த ஒரு வழக்கறிஞர், 'இந்த ஸீட்டில் நீங்கள் உட்காரக் கூடாது. வேறு ஒருவர் வருகிறார் எழுந்திருங்கள்’ என்றார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது. தலை குனிந்தபடி எழுந்தேன். ஆனால் நீதிபதி ரவீந்திரன் இதைக் கவனித்திருக்கிறார். அந்த வழக்கறிஞரைப் பார்த்து, 'இவர் மிஸ்டர் வைகோ. வழக்கில் ஆஜராக வந்திருக்கிறார். அவரை எப்படி உட்காரக் கூடாது என்று நீங்கள் சொல்லலாம்? நீங்க உட்காருங்க மிஸ்டர் வைகோ’ என்று சொன்னார். நான் அதிர்ந்துவிட்டேன்.


 உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு நீதிபதி என்னை அறிந்து இப்படிச் சொன்னது, காயம்பட்ட மனசுக்கு மருந்து போட்டதைப் போல இருந்தது. என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டும் வகையில் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சொன்னபோது, 'ஸ்டெர்லைட் ஆலையை ரத்னகிரியில் சம்மட்டியை வைத்து மக்கள் அடித்து நொறுக்கினர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றுதான் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறோம். இங்கும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நாங்கள் எங்கே போவோம்? இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை இல்லை. எங்கள் மக்களின் பிரச்னை!’ என்று உணர்ச்சிவசப்பட்டு நான் பேசுவதற்கும் நீதிபதிகள் அனுமதித்தனர். நான் மனநிறைவுடன் செய்த வாதம் அது. நீதிமன்றத்தில் எத்தகைய தீர்ப்பு வந்தாலும், ஆலையைப் பூட்டும் வரை எனது போராட்டம் தொடரும்.''


''நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் உடனுக்குடன் ஜெயலலிதா நிறை​வேற்றுகிறாரே... அதன் ரகசியம் என்ன?''


(சிரிக்கிறார்) ''காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரிதான்... எல்லாமே தற்செயலாக நடந்தது. இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். முதல்வர் அதைச் செய்தபோது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. நான் சொன்னதால்தான் அவர்கள் நிறைவேற்றினார் என்று சொல்லவில்லை. சேவல் கூவவில்லை என்றாலும் பொழுது விடியும். நான் கூவியதால்தான் பொழுது விடிந்தது என்று சேவல் நினைத்தால், அது சேவலின் அறியாமை. எங்களுக்குக் காரியம் நடக்கிறது. அது போதும். பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!''  


- கே.ராஜாதிருவேங்கடம்
படம்: ஆ.முத்துக்குமார்

thanx - vikatan

readers views


1. சென்னை உயர் நீதி மன்றம் பாட்டியின் கையில் இருக்கிறது. எனவே உடனே ஒரு மூடுவிழா நாடகம். உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதி மன்றத்துக்கு செக் வைத்து விட்டது. வைகோவுக்கும், இவரின் பாத்திரத்துக்கும் ஆப்பு வைத்துவிட்டதை படிக்கல் வில்லையா?


2. ஆலையை மூடும் பட்சத்தில், பத்தாயிரம் பேர் நேர் முகமாகவும், மறைமுகமாகவும் வேலை இழப்பதை பற்றி வைகோ என்ன நினைக்கிறார், அதற்கு மாற்று வழிகள் எதையும் யோசித்தாரா என்பதையும் கேட்டிருக்கலாமே?
[ பி.கு. இந்த கருத்து வைகோவை அறிந்து கொள்ளவே அன்றி , அவருக்கு எதிராக அல்ல.]


3. பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!'' பாத்திரம் ஓட்டை ஒடுசல், கரடு முரடா இருந்தாலும், கை நிறைய காசு கிடைக்குது. பாத்திரத்துக்கு ஓட்டு கிடைக்குது, வைகோவைப்போல வெட்கங்கெட்டவர் கிடைக்க மாட்டார். எத்தனை முறை அவமானபடுத்தினாலும் அதிமுகவை விட்டு வேறு கட்சியுடன் சேரமாட்டார்.


4. அம்மாவிடம் அன்று 49 கோடி வாங்கியதும் மக்கள் நலனுக்குத்தான் என்று நம்புவோம் 
இப்படி எந்த தொழிச்சலை வந்தாலும் எதிர்த்து போராடினால் எப்படி நாடு முன்னேறும்


5. பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!.....வரும் தேர்தலில் அம்மா உங்களுக்கு ஐந்து அல்லது ஆறு பணியாரம் கண்டிப்பாய் தருவார்.......


6. கடைசி பதில்.......... தாங்க முடியலைடா சாமி ............. ம தி மு க வுக்கு 10 நாடாளுமன்ற சீட்டு பார்சல் !!!!!!!!!!!

7. வைகோ இவ்வளவு கஷ்டப்பட்டும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது... இவரை வளைக்கபபார்த்தார்கள் முடியவில்லை... ஆனால் தற்பொழுது நீதி துறையையே வளைத்துவிட்டார்களே... அதாங்க 100 கோடி டெபாசிட்... அதுக்கு கமிஷன் எவ்வளவுன்னு நீதிபதிகளுக்கே வெளிச்சம்...

8.எங்க கிராமத்துல, பனமரத்துக்கு கீழே நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுன்னு சொல்லுவாங்க... அப்படியா எந்த கிராமம் அது? எங்க கிராமத்தில பனமரத்துக்கு கீழே நின்னு கள்ளை குடிச்சாலும் பாலுன்னுதான் சொல்லுவாங்க. மனுசங்கள நம்பவே மாட்டாங்களா உங்க கிராமத்தல?


9. ஆலையைப் பாதுகாப்புடன் இயக்குவது என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர, மூடுவது என்பது தமிழக நலனுக்கு நல்லதல்ல. 

அதே சமயம், இந்த ஆலையைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்த அம்மையார் தான் தற்போது முதல்வராக இருக்கிறார் என்கிற முக்கியமான தகவலை ஜூ.வி மறைத்திருக்கிறது.

10/ வை.கோ. வாழ்க! வை.கோ. வுக்கு ஆதரவு தராத தமிழர்கள் மடையர்களே!