Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Tuesday, December 15, 2015

மனுசங்க.. 30: மழைக்காலம்!-கி.ராஜநாராயணன்

கோடையிலும் கடுங்கோடை என்று உண்டு. கூரை வீட்டுக்காரர்கள் பாடுதான் திண்டாட்டம்.
தகர வீட்டுக்காரரை சம்மந்தகாரர்கள் ரொம்பத்தான் கேலி பண்ணுவார்கள். தூறல் விழுந்தால் கூட பலமாகச் சத்தம் கேட்கும். காலையில் வீட்டுக்காரரைப் பார்த்ததும் ‘‘மாமோவ், ராத்திரி செம மழை’’ என்பார்கள்.
சில கோடையில் கல்மழையும் பெய் யும். அவர்கள் காதுபட ‘‘எந்தப் பயல் வொளோ கல்லெவிட்டு எறிஞ்சாங் கப்போ’’ என்பார்கள்.
இந்த வீடுகளின் பெரியாட்கள் காலைக் கஞ்சி குடிச்சி முடிஞ்சதும் பொடிமட்டையும் கையுமாக கம்மாய்க் கரை மரத்து நிழலைப் பார்த்து வந்து, அங்கே தட்டிநிறவியிருக்கும் மணலே சரணம் என்று வந்து படுத்துவிடுவார்கள்.
இந்த வயசாளிகளுக்குப் பெரும் பாலும் வயித்துக்கு ரெண்டுவேளைதான். காலையில் கஞ்சிதான். ராத்திரி என்பது சாயந்திரம் தீபம் பொருந்தியவுடன் வந்து விடும். அதோடு ராத்திரிச் சாப்பாடும் கிடைத்துவிடும். பகல்பொழுதில் குடிப் பது கஞ்சி என்றும் ராத்திரிக்குச் சோறும் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.
வீடு தவறாமல் வந்து கேட்டு வாங்கும் தொள்ளாலிமார் காலையில் ‘‘கஞ்சி ஊத்துக்கம்மா’’ என்றும், தீபம் பொருந்திய பிறகு வந்து வாங்குவதை ‘‘சோறு போடுங்கம்மா’’ என்றும்தான் கேட்பார்கள். இவை இப்போது முடிந்து போன காலமாகிவிட்டது.
சிலசில வீடுகளில் மத்தியானம் கருப்பட்டிக் காப்பி பால் விட்டும் அல்லது பால்விடாமலும் கிடைக்கும் காப்பி வருவதுக்கு முன்னால் அந்த இடத்தை ‘பானக்கரம்’ என்கிற ‘பானகம்’ பிடித்திருந்தது.
சோற்றில் மக்காஞ்சோறாய் இருந்தா லும், அதில் ஊறிய தண்ணீருக்கு எப்பவும் மவுசுதாம். கொஞ்சம் பசை யுள்ளவர்கள் வீட்டில் மோர் கிடைக் கும். இவையெல்லாம் நான் சொல்லு கிற மரத்தடி மகராசன்களான கிழவ னார்களுக்குத்தான்.
‘உபயோகி; உபயோகித்து முடிந்ததும் தூற எறி’ என்கிற காலம் இல்லை அது. தேய்ந்துப்ப்பொன கலப்பைக்குத்தி ஆனாலும் வீட்டின் ஒரு மூலையில் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். இந்த வயசானவர்கள் எல்லோரும் தேய்ந்துபோன கலப்பைக்குத்திகள். அவர்களுக்கே அவர்களைத் தூரப்போட எப்படி மனசு வரும்?
இந்த கடும் வெயில் காய்ப்பு சித்திரை பத்தாம் தேதிவரை இருக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் வானத் தில் ஒரு நைய்ப்பு பிறக்கும். மக்கள் சொல்லுவார்கள் உடனே ‘சித்ரை பத்தினில் சீராடும் மேல்காத்து’ என்று.
காற்று தூரத்தில் புறப்பட்டு வரும் போதே அதன் ஓசை முதலில் வந்துவிடும். வைக்கோல் பாரவண்டி தென்கிழக்காக இருந்தால் உடனே அதை கீழ்மேலாக நிறுத்தி வைத்துவிடுவார்கள். அப்படி வைக்கவில்லை என்றால் அந்த பார வண்டியை மேல்காற்று புரட்டிப் போட்டுவிடுமாம்.
மேல்காற்று இந்த மனுசனோடு ரொம்பவே ஆட்டம் காட்டும். அதனு டைய அதிகாரம் ஐப்பசி பத்து வரை இருக்கும்.
குளத்தங்கரை மரத்தடி வயசாளி களை இந்த மேல்காற்றுப் பருவத்தில் அங்கே பார்க்க முடியாது. வீடுகளினுள் அடங்கிவிடுவார்கள்.
மேல்காற்றுப் பருவத்தின் அதிகாலை நேரங்கள் காலை 7 மணிவரை இன்பமானது. அவ்வளவு சுகமானதாக இருக்கும்.
மேல்காற்றுப் பருவத்தின் காலத்தில் பதநீரின் தித்திப்புக் கூடியிருக்கும்.
மேல்காற்று ஆளுகைக்கு உட்பட்ட ஊர்களில் எல்லாம் மாடுகள் உட் கொள்ளும் தீவனப்படப்புகள் எல்லா முமே கீழ்மேலாகத்தான் அமைந் திருக்கும்.
மரங்களின் ‘தலைமுடி’களைப் பிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டும்.
‘‘செய், காத்து என்ன இப்படி அடிக்கி’’ என்று கேட்பவர்களுக்கு, வீட்டி னுள் இருக்கும் கிழவி, கிழவன்மார்கள், ‘‘அடிக்கட்டும் அடிக்கட்டும் எவ்வளவுக் கெவ்வளவு பலமாக அடிக்கோ அவ் வளவுக்கு மழை நல்லாப் பெய்யும்’’ என்பார்கள்.
தரையில் சரியாக நடக்கவிடாமல் மனுசனைத் தள்ளுவது போலவே காகங்களையும் ஒழுங்காக பறக்க விடாமல் காற்று தள்ளும்.
இந்த மரத்தடி வயசாளிகளில் பலவகை இருந்தார்கள்.
அந்தக் காலத்தில் ஆண்கள் எல்லோருமே பெண்களைப் போல தலைமுடி வளர்த்து கொண்டைப் போட் டுக்கொண்டிருப்பார்கள். சிலருக்கு மட்டும் பெண்களே பார்த்து பெருமைப் படும்படியாகவும் பொறாமைப் படும்படியாகவும் தலைமுடி அமைந் திருக்கும்.
போலய்யா தாத்தாவுக்கு மட்டும் இவ்வளவு வயசாகியும் காதோரம் கூட ஒரு முடியும் நரைக்கவில்லை. அவரிடம் இன்னொரு அதிசயம் தலையில் சொட்டு எண்ணெய் வைத்துக்கொள்ள மாட்டார். சனி, புதன் எண்ணெய் தேய்த்தும் தலை மூழ்கவும் மாட்டார்.
தலைமுடி அதிகமாக இருப்பவர் களுக்கு ஏகப்பட்ட நல்லெண்ணெய் செல்லும். இந்தப் பெரியக் கொண்டைத் தாத்தா சொல்லுவார்: ‘‘தலைக்குத் தேய்த்துக்கொள்ற எண்ணெய சோத்தில் விட்டுத் திங்கலாமே!’’ என்று.
கும்பா நிறைய்ய கம்மஞ்சோறு வைத்து அதன் மத்தியில் குழி செய்து கருப்பட்டியை நுணிக்கிப் போட்டு நிறைய்ய நல்லெண்ணெய்யை விட்டு குழப்பித் தொட்டுத் தொட்டு தின்பது என்கிற வழக்கம் இருந்தது.
வேற தொடுகறி எதுவும் வேண்டாம். வீட்டில் உள்ள ஆண், பெண்கள், வேலையாட்கள், குழந்தைகள் என்று நல்லெண்ணெய் புழங்கினால் ஓராண்டுக்குக் குடம்குடமாக எண்ணெய் செல்லுமெ.
அவர்களது காடுகளில் எள் விளைந்து வருவதினால்தான் ஈடுகொடுத்து முடிகிறது.
‘எண்ணெய்’ என்பதே எள்நெய் என்பதில் இருந்து வந்தது என்பார்கள் தமிழ்ப் படித்த பெரியவர்கள்.
மூதாதையர்களுக்கு அவர்கள் காலமான பிறகு எள்ளும் தண்ணியும் இடுவதில் இருந்தே எள்ளின் மகத் துவத்தை அறிந்துகொள்ளலாம்.
வீட்டைவிட்டு வெளியே அல்லது வெளியூர் கிளம்பிவிட்டால் செய்யும் முதல் காரியம் நல்லெண்ணெய் கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொண்டு, நுனிநகங்கள் மட்டும் முங்கத் தொட்டுத் தொட்டு முகம், கை, கால் என்று எண்ணெய் தெரியாமல் எண்ணெய் விட்டுக்கொள்ளுதல் என்கிற சடங்கை முடிக்காமல் கிளம்ப மாட்டார்கள்.
- இன்னும் வருவாங்க…

தஹிந்து

Saturday, November 07, 2015

மனுசங்க.. 27: மாசம் சுளையா ஒரு ரூபா சம்பளம்!

இந்த மஞ்சள் நிற தொழதொழா அங்கிச்சட்டை போடுறதுக்கு முன்னாடி துரசாபுரம் தாத்தாவும் அந்த ஊர்க்காரங்க போல வேட்டியக் கட்டி முழங்கால் உசரத்துக்குவிட்டு பின்புறம் சொருகிக்கொண்டு, ஒரு வட்டலேஞ்சி மட்டுமெ கட்டிக்கொண்டு தான் இருந்தார். இந்தத் தொங்காரமாகக் கட்டிக் கொள்கிறதும் மடிச்சிக் கட்டிக் கொள்கிறதும் இப்பத்தான் வந்தது.
தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில், இந்த மண்ணில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகளையே உண்ணுவது என்றுதானிருந்தது.
“இந்த நெல்லுச் சோறுங்கிறது நேத்துவந்ததுதான்” என்பார்கள்.
‘‘அப்போ கல்யாணம்போல விசே ஷங்களுக்குப் பந்தி பரிமாற என்ன சாப்பாடு செய்தீர்கள்?’’ என்று கேட்டால்.
பெரியப் பெரிய மண் பானைகளில் கம்மம்புல் குத்திப்போட்டு கம்மஞ்சோறு தான். நாலைஞ்சி ஆடுகளை அறுத்துப்போட்டு ஆட்டுக்கறிதான். கட்டாயம் தயிர் உண்டு.
காலையில் கருப்பட்டித்தான். பணி யாரம், வடை இப்படி இருக்கும்.
“பெரிய பானைச் சோறு” என்ற பெயர் கம்மஞ்சோறுக்கு உண்டு. சிறிய பானைச் சோறு என்றால் நெல்லுச் சோற்றைக் குறிக்கும்.
எல்லாச் சோற்றுக்கும் தலையாயது பருப்புக்கறிதான்.
‘‘எப்போ எங்களுக்குப் பருப்புச் சோறு போடப்போறீக?’’ என்று யாராவது கேட்டால், ‘கல்யாணச் சாப்பாடு எப்போ?’ என்று அர்த்தம். அதிலும், முக்கியமாக நிச்சயதார்த்தம் அன்று நூற்றுக்கு நூறு தனிப் பருப்பும், நெய்யும்தான். மருந்துக்குக்கூட அதில் காரமோ, புளிப்போ இருக்கக்கூடாது.
பருப்புப் பிரியர்கள் என்று தனியாக தாத்தாக்கள் உண்டு. அவர்களுக்குப் ‘பப்பு தாத்தா’ என்றே பட்டப்பெயர் இருக்கும். எத்தனை தடவை மறு சாதம் வாங்கினாலும் பருப்புக்கறி பருப்புக்கறிதான்!
அரிசியில் பருப்பைச் சேர்த்து சாதம் வடிக்கிறதும் உண்டு. முக்கியமாக உளுத்தம்பருப்பு. அதன் தோல் களைந்தும் களையாமலும்; இரண்டு வகைப் பிரியர்கள். இதுக்குக் காரண மான கோழிக் கறி விசேஷம்!
தசரதராம் சீத்தாராமனைப் போல சாப்பாட்டுராமன்கள்தான் மனுசர்களில் அதிகம். இவனுடைய அனுபவிப்பில் சரிபாதி சாப்பாடுதான்.
“அடைமழைக் காலங்களில் ராத்திரி பூஜையின்போது, குற்றாலம் திருக் கோயிலில் சுவாமிக்கு சுக்குவெந்நி உண்டு தெரியுமோ?” என்று கேட்டார் ஒருத்தர்.
‘‘தெரியாதே சுவாமிகளே’’ என்றார் மற்றவர். ‘‘சாப்பிட்டவை செமிக்க வேண்டிதான்’’ என்று ஆமோதித்த இன்னொருவர் ‘‘தீபாவளி பட்க்ஷணம் செய்யும்போதே அம்மாக்கமார் ‘தீபாவளி மருந்து’ என்று லேகியம் போல ஒன்றை யும் தருவார்களே ஞாபகம் இருக்கா?’’ என்று விளக்கினார்.
‘‘பிளாக்கெட்’’
என்று சொல்லி ஒரு நாள் ஒருவனைத் திட்டினார் தாத்தார்.
இது ஒரு வசவு என்று யாருக்கும் தெரியாது. சிரிப்புதான் வந்தது கேட்ட வர்களுக்கும் பட்டவனுக்கும்.
வெளிநாட்டுச் சாமான்களின்மீது நம்மிடையே ஒரு மதிப்பு இருப்பதைப் போல, வெளி நாட்டு வசவுகளின்பேரிலும் இருக்குமோ என்னவோ
டேய் கருந்தலையா, கருவாயா (பிளாக்ஹெட், பிளாக் மவுத்) என்ப தெல்லாம் ஒரு வசவா?
ஒரு வெள்ளைக்கார அம்மையார் கேட்டார்: ‘‘ரோமம் என்று சொல்வதை ஒரு வசவாக எப்படிக் கருதுகிறார்கள் உங்கள் மக்கள்’’ என்று.
எப்படி பதில் சொல்லுகிறது.
அந்த அம்மையார் தமிழ் படித்துக் கொண்டிருப்பவர்.
அது ரோமம் இல்லையம்மா மயிர் என்று பதில் சொல்லப்பட்டது.
‘‘இரண்டும் ஒன்றுதானே…’’ என்றார் அவர்.
ஆமாம்; ஒன்றுதான். ஆனாலும் ரோமம் என்றால் கோபப்பட மாட்டார்கள். வார்த்தைகளின் விசித்திரமே தனிதான்!
எங்கே திரும்பினாலும் மரங்கள்தான் அந்த ஊரில். முக்கியமாகப் பனை மரங்கள் தோப்புத் தோப்பாய்; ஆயிரக் கணக்கான மரங்கள். தாத்தாவின் குடும் பத்துக்கே ஆயிரம் மரங்கள் சொந்தமாக இருந்தன. விடலிகள், பருவப் பனைகள் மற்றும் ஆண், பெண் மரங்கள் என்று.
பனைமரங்களின் மகத்துவத்தை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
துரசாபுரம் தாத்தாவின் வீட்டுக்கு ஒரு புது வேலையாள் சம்பளக்காரனாக வந்திருந்தான். ‘சக்கணை’ என்று பெயர் அவனுக்கு.
அந்தக் காலத்திய சம்பளக்காரர் களுக்கு வருஷத்துக்கு ஒருமுறைதான் சம்பளம் தருவார்கள். சாப்பாடு மூணுவேளையும். துணிமணியும் உண்டு. வீட்டோடு தங்கிக்கொள்ளலாம். சித்திரை மாதத்திலிருந்துதான் கணக்கு. ஒவ்வொரு மாசத்துக்கும் சம்பளம் சுளையாக ஒரு ரூபாய்.
தாத்தா காலத்து ஏழு ரூபாய்களை கொண்டுபோய்க் கொடுத்தால், ஒரு பவுன் கிடைக்கும் சொக்கத் தங்கமாக.
சோபாக் கட்டிலில் தாத்தா உட் கார்ந்து தலை சாய்த்தார். அப்படிப் படுத்துக்கொண்டே வீட்டிலும் தெரு வழியாகவும் போற வாரவர்களைப் பார்க்கலாம்.
இந்தப் பட்டகசாலை அகலமும் நீளமும் கொண்ட அமைப்பில் இருக் கும். எதிர்மூலையில் சக்கணையன் கும்பாவின் முன்னால் அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். கம்மஞ் சோற்றை ஆள்க்காடி விரலால் ஒரு வழிப்பு வழித்து, காணத் துவையளின் மேல் பட்டதோ, படலையோ என்று தொட்டு எடுத்ததும் தெரியாது, களு கென்று விழுங்கியதும் தெரியாது. அப்படியொரு வேகம்.
பசி வயிறு ‘கொண்டா… கொண்டா என்கிறதாம்.
ரெங்கநாயகிப் பாட்டிதான் சோறு வைத்துக்கொண்டிருந்தாள்.
பாட்டிக்கு ஒரு சந்தேகம் கேட்கணும் என்று, ‘‘சக்கணை’ங்கிறது எந்தச் சாமியோட பெயரு?
‘‘அது ஏம்பேரு இல்லேம்மா; எங்க ஊரோட பேரு.’’
‘‘ஊரோட பேரா? அந்த ஊரு எங்கிட்டு இருக்கு?’’
இப்போ அந்த ஊரு இல்லேம்மா; ஊரு அழிஞ்சிபோயிட்டது.’’
சாய்ந்து படுத்திருந்த தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார்.
- இன்னும் வருவாங்க…


தஹிந்து

Thursday, October 29, 2015

மனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு!-கி.ராஜநாராயணன்

துரசாபுரம் தாத்தா பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறார். அந்த ஊர்களில் எல்லாம் ஊர் தவறாமல் பஜனை மடங்கள் இருந்தன. நம்ம ஊருக்கும் ஒரு பஜனைக் கோயில் இருந்தால் நல்லா இருக்குமே என்கிற எண்ணம் சமீபகாலமாக அவருக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.
வீட்டுக்குள்ளேயே நடந்தவர் தெருவில் இறங்கி நடந்தார்.
விறுவிறு என்று நடந்து, கண்மாய்க் கரை அரசமரத்தடி நிழலில் நின்று கொண்டு, அந்த ஊரின் முக்கியமான நாலு பெரியவர்களை வரவழைத்தார்.
துரசாபுரம் தாத்தாவோடு சேர்ந்து அய்ந்து பேர்களும் உட்கார்ந்தார்கள்.
‘‘நம்ம ஊருக்கென்று ஒரு பஜ னைக் கோயில் வேண்டாமா… அதைப் பத்தி நீங்களெல்லாம் ஏதாச்சும் யோசிச் சீங்களா...? என்று கேட்டார் தாத்தா.
கோயில் வேண்டாம் என்று யார் சொல்வார்கள்.
‘‘நீங்க மொத அடி எடுத்து வையுங்க… உங்க பாட்டையில் எத்தன தடங்கள் பின் தொடருதுன்னு அப்புறம் பாருங்க’’ என்றார்கள்.
அதில் ஒருத்தர் ரொம்பவும் ஆர்வ மாக ‘‘முடிச்சிருவோம்... ஒரு தலைக்கட் டுக்கு எவ்வளவு வசூலிக்கலாம்? ”என்று கேட்டார்.
‘‘என்னுடைய செலவிலேயே ஊர்ப் பொதுவுக்குக் கட்டுவோம். நீங்கள் சம்மதமும் ஒத்தாசையையும் தந்தால் போதும்’’என்றார்.
தங்கமுட்டை இடுகிறேன் என்றால் யார்தான் வேண்டாம் என்று சொல் வார்கள்.
‘‘சரீ… ரொம்ப நல்லது! கட்டப் போற கோயில் செலவுகளைப் பராமரிக்க, விழாக்கள் கொண்டாட இதுகளுக்கெல் லாம் வருமானத்துக்கு என்ன செய்ய?’’
‘‘என்னோட தோட்டம், கிணறு, மனாம் பாரி எல்லா நிலங்கள், தொழு, வீடு, பசு மாடுகள் எல்லாத்தையும் கோயில் பேருக்கே எழுதி வெச்சிருதேம்’’ என்றார்.
இதுகளை எல்லாம் அங்கே கூட்டமாக வந்து கேட்டுக்கொண்டிருந்த ஊர் மக்கள் ஆச்சரியத்தில், சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் போனார்கள். மிக உயர்ந்து தோன்றினார் தாத்தா அவர்களுக்கு.
‘‘கோயில் பேரில் எழுதி வைத்து விட்டால் அந்தக் கோயில் வந்து சம்சாரித்தனம் பார்க்குமா?’’ என்று கேட்டார் அதில் ஒருத்தர்.
‘‘யாரையாவது பொறுப்பாளியாக்கி எழுதி வைக்கணும்’’ என்றார் இன் னொருத்தர்.
‘அதுதான் யார்… யார்?’ என்று மண் டைக் குழம்பியது சிலருக்கு. ‘நம்ம பேருக்கு எழுதி வைத்தால் தேவலையே’ என்றிருந்தது இன்னும் சிலருக்கு.
‘‘மழைத் தண்ணி இல்லாத காலங் களிலும், பஞ்சமே வந்தாலும்கூட கோயில் காரியம் நிற்கக்கூடாது’’ என்று தாத்தா சொன்னபோது, ‘‘அதானெ… கானம் என்றால் வாயைத் திறக்கிறதும் கடிவாளம் என்றால் வாயை மூடிக் கிறதுமா’’ என்றார் ஒருத்தர்.
அவரே இருக்கட்டும் எப்போது போல என்றார்கள் சிலர்.
‘‘சட்டையைக் கழற்றிப் போட்ட நாகம் திரும்பவும் அதை எடுத்து அணியாது’’ என்றார் தாத்தா கராலாக.
அந்தக் கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டு வந்திருந்த ஊர் மடத்துச் சாமியாருக்கு, தாத்தா சொன்ன பதிலுக்குப் பதிலாக, ‘‘நாகரட்ணத்தைக் கக்கித் தந்துவிட்ட நாகம் திரும்பவும் அதை எடுத்து விழுங்குமா?’’ என்று கேட்டார்.
தனது சொத்துப் பத்து செல்வங்களை, கழற்றிப்போட்ட கந்தலான ஒரு பாம்புச் சட்டை என்று தாத்தா சொன்னது சாமி யாருக்குப் பிடிக்கவில்லை. அவை நாகரத்தினம் போன்ற விலை மதிப்பற் றவை என்று சொன்னதும் சரியே.
கூட்டம் இப்போது கோயிலைக் கட்டுவதற்கான இடத்தைப் பற்றிய விவாதத்தில் இறங்கியிருந்தது.
முதல் எடுப்பிலே தாத்தா சொல்லி விட்டார் ‘‘ஊர் மடத்தை பஜனை மடம் ஆக்க வேண்டாம்’’ என்று.
ஊர் என்றால் அப்படியும் ஒன்று இருக்கவே வேண்டும்.
கோயில் கட்ட என்றால் அதுக்குத் தக்கன இடமாக அமைந்திருக்க வேண் டுமே என்பது அனைவரின் கவலையும், இதில் வெளியில் சொல்ல முடியாத கவலையும் சிலருக்கு உண்டு. ஊரின் வடக்குப் பகுதியில் கோயில்கள் இருக் கின்றன. ஆனால், அவை திருநீறு பூசிக்கொள்ளும் சாமிகள். இவர்கள் தேடும் இடம் திருமண் இட்டுக்கொள்ளும் சாமிக்கான கோயில் இடம்.
ஒரு இலக்கியக் கூட்டத்தில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
சிவன் கோயில்கள் செம்மண் இருக்கும் இடங்களாகவும், வைணவக் கோயில்கள் இருக்கும் இடங்கள் கருப்பு மண் இருக்கும் இடங்களாகவும் இருக்கக் காரணம் என்ன?
எல்லா இடத்திலுமா இப்படி என்று ஒரு கிளைக் கேள்வியும் வந்தது.
கிளைக் கேள்விக்கு மட்டும் பதில்:
அநேகமாக என்று சொல்லியாகி விட்டது. முதல் கேள்விக்கு சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.
என்றாலும் சமாளிக்கும் பதிலாக இப்படி சொல்லப்பட்டது:
சிவன் சிவப்பு, அதனால் சிவப்பு மண்; விஷ்ணு கருப்பு, அதனால் கருப்பு மண்!
பெரும்பாலான கிராமத்து மக் களுக்கு இந்தக் கவலை எல்லாம் ஏதும் கிடையாது. எல்லா சாமிகளும் நம்ம ஊரில் இருப்பது நல்லதுதானெ என்பதுதான் எண்ணம்.
‘அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன் தலையிலெ மண்ணு’ கிராமத்துப் பிள்ளைகள்கூட இப்படித்தான் பாட்டு சொல்லுவார்கள்.
கடோசியில் எல்லாருமாகச் சேர்ந்து தேர்ந்தெடுத்த இடம், இடிந்து போன பழைய பவுண்டுத் தொழு இருந்த இடம்.
தாத்தாவுக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்துவிட்டது.
ஊருக்கு வடக்கே இரண்டு பாறைகளைத் தெரிந்தெடுத்தார்கள். ஒன்றில் செம்பரைப் பாய்ந்த அரளைக் கற்களாகப் பெயர்த்துக் குவித்தார்கள். இன்னொன்றில் நீள நீளமான, கனமான தூண்களுக்கு ஆனவையாக உடைத்து வைத்தார்கள்.
கற்களுக்காகப் பாறைகளைத் தோண்டி உடைத்து எடுக்கும் பள்ளங்களில் ஒரு பள்ளத்தில் நீர் சுரந்து தேங்கியது. ஒன்றைத் தேடிப் போனால் ரெண்டு கிடைக்கும் என்பார்கள். குடி தண்ணீர் கிடைத்தது அடுத்த லாபம். தாத்தாவுக்கு அப்படி ஒரு பேர் உண்டு.
கோயிலுக்கு கல் கட்டிடம் கட்டு வதற்கு முன்னதாக தற்காலிகமாக ஒரு மண் கட்டிடம் இருக்கட்டும் என்று ஆரம்பித்தார்கள். சீமந்து (சிமெண்ட்) வராத காலம் அது. சுண்ணாம்புச் சாந்துதாம் முக்கியமாக இருந்தது. கீழ்ப் பகுதி மண்ணும் தலைப் பகுதி சுண்ணாம்புமாக துரு பிடிக்காதத் தகடுகளால் வேய்ந்த சாய்ப்பு வைத்துக் கட்டி முடித்தார்கள்.
கட்டிடம் கட்டும்போதே கோயி லினுள் வைக்கும் சாமி சிலையால் ஆனதான அல்லது மற்ற பஜனை மடங்களில் உள்ளது போல பெரிய்ய அளவிலான படங்களா என்ற பேச்சும் எழுந்தது.
கல் கட்டிடம் எழும்போது சிலை வைத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு படம் போதும் என்று முடிவானது.
ஊர்க்கூடி, சேர்ந்து செய்யும் பொதுக் காரியங்களின்போது நிலவுகிற சந்தோஷமே ஒரு தனிதான்!
ஒருவர் மேல் ஒருவர் அப்படிப் பிரியமாக அந்நியோன்யம் நிறைந்து காணப்படும். எப்போதும் இப்படியே இருந்தால் தேவலையே என்றிருக்கும். இதுக்காகத்தானோ பெரியவர்கள் இப்படிப் பொதுக் காரியங்கள் செய்யும்படி வைத்தார்களோ என்று தோன்றும்.
- இன்னும் வருவாங்க…

தஹிந்து

Tuesday, October 13, 2015

மனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை!-கி.ராஜநாராயணன்

மனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை!


காசிக்குப் போக வேண்டும் என்கிற ஆசை இந்தியாவுல யாருக்குத்தான் இருக்காது? எல்லோருக்குமே ஆசைதான். ஆனால் எங்கே போக முடிகிறது?
காசிக்குப் போகவென்று புறப்பட்டு வந்தவர்களைக் கண்டுவிட்டால், அவர் களுக்கு மரியாதை செய்து அனுப்ப வேண்டும் என்று தோன்றிவிடுகிற தல்லவா?
மனிதர்கள் மீது கடவுள் வந்து இறங்கு வது என்பதையும், அதைக் கண்டு உடல் புல்லரிப்பதையும் அனுபவிக்க ஒருவித மனப்பக்குவம் வேண்டும். எல்லோ ராலும் முடியாது அது. அசாத்திய கடவுள் நம்பிக்கை இருந்தால்தான் அந்த அனுபவம் கிடைக்கும். ராகங்களை எல்லோராலும் இனம் கண்டும், கேட்டும் அனுபவிக்க முடிந்துவிடுகிறதா என்ன?
கட்டில் சோபா மீது முழுவதும் சாய்ந்து ஏதோ ஒன்றில் லயித்து எங்கோ ஒன்றைப் பார்த்த நிலையில் இருந்த துரசாபுரம் தாத்தாவின் அருகே ஊருக்கு வந்த பந்த சேர்வையின் கானகோஷ்டி இசைக்கத் தயாரானது.
சுருதிப் பெட்டியில் இருந்து நாகப் பாம்பு வெளிவருவதைப் போல சுருதி யின் உச்சம் வெளிவர ஆரம்பித்தவுடனே, எல்லோருடைய காதுகள் வழியாக நுழைந்து மனங்களைச் சென்றடைந்து கொண்டிருந்தன. அப்படியே லயித்து கண்களை மூடினார் தாத்தா. திடீரென்று ஒரு பெண் குரல் ஓங்கி கூக்குரலிட்டது. ‘‘சீனுவாச மூர்த்தி ஏழுமலையானே…’’ என்று.
ஏதோ பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவனை ஆபத்துக்கு உதவக் கூப்பிட்டது போல இருந்தது அந்தக் குரலின் அழைப்பு.
பதினெட்டு, பத்தொன்பது வயசு இளவட்டம் முற்றாத மீசையும் அரும்பும் தாடியும் கொண்ட அந்த முகத்தின் கன்னங்களைக் குத்தித் துளையிட்டு வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்தது. அவன் மீதுதான் அந்த சீனுவாச மூர்த்தி வந்து இறங்கிக்கொண்டிருந்தார். ஈரவேட் டியை முறுக்கிப் பிழிவது போல அவ னுடைய உடம்பை யாரோ பிழிகிறார்கள் போலும். அங்கு உள்ள கூட்டமே ஓங்கி அழைக்கிறது ‘‘சீனுவாசா… கோவிந்தா…’’ என்கிறது.
தாத்தாவின் கண்களில் இருந்து கண்ணீர் பொங்குகிறது. கூட்டமே குதித் துக் குதித்து ஆடத் தொடங்குகிறது, முன்னேறுவதும் குனிந்து பின்வாங்கு வதாயும்.
அந்தப் பெண் குட்டிக்கு ஆறு வயசுக் குள்தான் இருக்கும். பட்டுப் பாவாடை உடுத்தி, உச்சிக் கொண்டை போட்டு அதில் நீலநிறம் மின்னும் மயில் பீலி சொருகியிருந்தாள். முகம் மொள்ளும் கண்கள். புல்லாக்கு மினுங்கும் மூக்கு. பூரிப்பான புன்முறுவல்.
அளவாகத் தலையைச் சாய்த்தும் பிஞ்சுக் கைகள் இரண்டையும் உயர்த்திக் கொண்டு, மல்லிகைப் பூ அரும்புகள் போன்ற சலங்கைகள் அணிந்த பாதங் களைத் தரையில் நோகாமல் தாளம் தட்டி காவடி எடுத்து ஆட ஆரம்பித்ததை தாத்தா கவனித்தார். தானும் தலையைச் சாய்த்து ஆட வேண்டும் போலிருந்தது அவருக்கு.
பாடல் பாலகிருஷ்ணனுடைய லீலா வீனோதங்களை விவரித்துக்கொண் டிருந்தது. மனிதத்துக்கும் பைத்தியத்துக் கும் மத்தியில் உள்ள ஒரு புத்தி இருந்தால்தான் அப்படியான பக்திப் பாடல்களை ரசிக்க முடியும் போல. ஏன் தங்கள் கண்கள் கண்ணீர்விடுகின்றன என்று அவர்களுக்கே தெரியவில்லை.
அபூர்வமாகச் சில பைத்தியங்கள் சொல்வதும் நிஜமாகவும் இருக்கும். ரொம்ப ரொம்பக் காலத்துக்கு முன் னால், திருப்பதியின் மலை மேலே ஒரு பைத்தியம் அலைந்துகொண்டிருந்த தாம். கூட யாரோடவோ பேசிக்கொண்டு வருவதுபோல பேசிக்கொண்டே வருமாம்.
‘‘யாரோடப்பா பேசிக்கிட்டே வர்றே…’’ என்று ஒருநாள் கோயில்பட்டர் அவனிடம் கேட்டபோது, ‘‘வேற யாரோட, இந்தப் பயலோடுதான்…’’ என்று கோயில் மதில் சுவரை தலையாலேயே திருப்பிக் காட்டினானாம்.
பக்கத்தில் யாரும் இருந்தால் அவ ரோடும் சேர்ந்து சிரிக்கலாமே என்று தோன்றியது பட்டருக்கு.
எழுந்ததும் காலையில் பைத்தியம் முகத்தில் விழிப்பது நல்லதுதான் என்று யாரோ, எங்கோ சொன்னது பட்டருக்கு ஞாபகம் வந்தது.
வீட்டில் வந்து சொல்லிச் சிரித்தார். ‘‘வேற யாரோட, அந்தப் பயலோடதாம்’’ என்கிறான் என்று திரும்பவும் சொல்ல, சிரித்தார்கள்.
பட்டரோட பாட்டி எச்சரித்தார். ‘‘சிரிக்காதேயுங்கோ; சுவாமி நெனைச்சா யாரோடும் பேசுவார்…”
மறாநாளும் பட்டர் அந்தப் பைத்தியத் தைப் பார்க்க நேர்ந்தது. ரொம்பவும் சோர் வாக இருந்தார். அவன் முன்னால் போய் இவர் நின்றதும்,
‘‘ராத்திரியெல்லாம் தூங்கலை…’’ என்றான்.
‘‘தூங்க வேண்டியதுதானே…’’
‘‘எங்கே தூங்கவிடுறான்; விளை யாட்டு… ஒரே விளையாட்டுதான்!’’
‘‘உன்னோடயா…’’
‘‘ஆமாம்… என்னோடதாம்!’’
‘‘வேண்டியதுதாம்…’’ என்று பளிச் என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்துவிட்டார் பட்டர்.
பேசினார் என்று சொன்னான்; சரீ என்றிருந்தால் இப்போ என்னோட வந்து விளையாடுறார் என்கிறானே! தூங்கவிடாமல் ராத்திரியெல்லாம் வந்து துன்பப்படுத்துறார் என்பதுபோல் அல்லவா சொல்கிறான்.
‘‘காலக் கொடுமையில் பெருச்சாளி காவடி எடுத்து ஆடுச்சாம்’’ என்பது போலல்லவா இருக்கு.
மறுநாள் காலையில், இன்னிக்கு அவம் மூஞ்சியிலேயே முழிக்கப்படாது என்று வேற பக்கம் பார்த்து நடந்து போனார் பட்டர்.
எதிரே வந்தவனைப் பார்த்ததும் ‘‘பெரு மாளே…’’ என்று சொல்லிக்கொண்டார்.
நேரத்தையும் நாளையும் நாமா உண்டாக்கினோம்.
எதிரே வந்தவன் ஆனந்த நடனம்தான் ஆடவில்லை. அவ்வளவுக்கு சந்தோஷம் பொங்க நின்றான்.
இன்னிக்கு என்ன சொல்லப் போறானோ தெரியலையே என்று பதற்றம் பட்டருக்கு.
‘‘ஜெயிச்சுட்டேனே… அந்தப் பயலை ஜெயிச்சுட்டேனே…’’ என்று அவய மிட்டான், அந்தப் பைத்தியக்காரன்!
- இன்னும் வருவாங்க…
ஓவியங்கள்: மனோகர்

ன்றி-தஹிந்து

Monday, September 28, 2015

மனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ராஜநாராயணன்

உலகத்துல ஒவ்வொரு மனுசங் களுக்குப் பெயர் இருப்பது போல, கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்கும் பெயர்கள் உண்டு. எதுக்கு சாகுபடி செய்ற நிலத் துக்கெல்லாம் பேரு வெச்சிருக்காங்க? அன்றைய வேலை முடிஞ்சு சாயந் தரமா வீடு திரும்புறப்ப, ‘‘ஏம்பா, நாளைக்கு எந்தப் புஞ்சையில வேலைன்னு கேட்குறப்ப சரியா பதில் சொல்லணுமே... அதுக்குத்தான்!
‘‘இந்தத் திசையில் உள்ள, இந்தப் பெயருடைய புஞ்சையில் வேலை’’ என்பார்கள்.
அந்தக் காலத்தில் மனுசப் பெயர் களில் ஜாதி ஒட்டியிருக்கும். ஆனால், புஞ்சைகளில் ஜாதிப் பெயர் மட்டுமே ஒட்டியிருக்கும்.
‘கிட்ணஞ்செட்டியார் வீட்டு புஞ்சை’ என்பதை ‘செட்டியார் வீட்டு புஞ்சையில் வேலை’ என்பார்கள். காரணப் பெயர் களும் உண்டு. நடுவோடைப் புஞ்சை (புஞ்சையின் நடுவில் ஒரு ஓடை), மதுரை வழிப் புஞ்சை, எருவடிப் புஞ்சை, குட்டைவெளிப் புஞ்சை, பாறையடிப் புஞ்சை, வன்னிமரப் புஞ்சை, ஊருணிப் புஞ்சை, போனாம்போக்கிப் புஞ்சை. இதில் ‘போனாம் போக்கி’ என்பதற்கு சொன்ன காரணத்தை ஒருவரிடம் சொன்னபோது கண்கள் பனித்துவிட்டன அவருக்கு.
மனுசன் வாழ்க்கையில் மண் அப்படி ஓர் ஒட்டுதல்கொண்டது. ‘ஏர் பிடித்து உழும்போது மண்ணில் இருந்து ஒரு பெண் குழந்தை கிடைத்தது ஜனகமகராஜனுக்கு’ என்ற வரிகளைப் படிக்கும்போது மனங்கொள்ளாத மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் எற்படு கிறதே நமக்கு.
நலங்கள் பெருகப் பெருக குடும்பம் அகன்றுகொண்டே வரும் ஆலமரம் போல. அவர்களோடு யாரும் சண்டைக் குப் போக முடியாது. பிலுபிலு என்று வந்துவிடுவார்கள்.
வீடுகள் போல மாடுகள் இருக்கவும் தனித் தொழுவங்கள் இருக்கும் அவர் களிடம். தீமைகள் போல கொசுக் களும் விருத்தி அடையாத புண்ணிய காலம் அது.
தூர ஊர்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு விருந்தாட வருவார்கள் சொந்தபந்தங்கள். பொழுது போகவில்லை என்றால் வீட்டைச் சுற்றி நிற்கிற ஆடுகளை எடுத்து கொஞ்சி குலாவுவார்கள். வீட்டில் படுக்க இடமில்லை என்றால் தொழுவங் களில் போய் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்வார்கள்.
அப்படி வந்த விருந்தாடிகளில் சிறுவர்களைத் தவிர மற்ற ஆண்கள், பெண்கள் அனைவரும் இவர்களுடன் காட்டு வேலைகளுக்கும்கூடப் போவார் கள். சமையல் கட்டுகளிலும் வேலை செய்வார்கள்.
ஆண்களின் பேச்சுகள் பெரும்பாலும் மாடுகள், மாட்டுச் சந்தைகள் பற்றித் தான் இருக்கும். சிறுவர்களும் அந்தப் பேச்சை ரசித்துக் கேட்பார்கள்.
மாடுகள், பொதி மாடுகள் இவை போக வில்வண்டி, ரேக்ளா வண்டிக்கு என்றே தெரிந்தெடுத்த மாடுகளை செல்லமாக வளர்ப்பார்கள். பெருமை பீத்திக்கொள்ளும் பேச்சுகளே அதிகம் இருக்கும். ‘சரிதாண்டா நிறுத்துங்கடா பெருமைப் பீத்தக்குழல்களா…’ என்று அதட்டுவார்கள் வயசான தாத்தாக்கள்.
பகுத்து (பெருமை) பேசாத சம்சாரிகள் தான் யார்? ‘கோப்பய்ய நாயக்கனுக்கு என்ன பகுத்து; கோழி பகுத்து; குஞ்சு பகுத்து’’ என்கிற சொலவடையுடன் அன்றைய பேச்சு முடியும்.
பகல் பொழுதுகளில் எல்லோரும் காட்டு வேலைகளுக்குப் போய்விட்டால் வீட்டில் இருப்பவர்கள் தவங்கிப் போன வயோதிகர்களும் குழந்தைகளும்தான். இதுதவிர ஒருசில வீடுகளில் ஊன முற்ற நபர் ஒருவர் இருப்பார். அதாவது நடக்க முடியாமல் கால் முடங்கியவர்கள் அல்லது வாய் பேசத் திறன் இல்லாதவர்கள். இவர்களிடம் இருந்துதான் ’கதைகள் காரணங்கள்’ பிறக்கின்றன. கற்பனைகளும் கனவு களும் வருகின்றன பறந்து. மனஸ்தாபங் கள், அழுகைகள், கண்ணீர் எல்லா மும் உண்டு. சொல்கதைகளின் குவியல்கள் இவர்களிடம் இருந்துதான் புறப்படுகின்றன.
வீட்டினுள் இருக்கிற பால் மாடுகள், கன்றுகள், கோழிகள், நாய்கள், பூனைகள் போன்ற உயிர் ராசிகளையெல்லாம் இவர்கள்தான் கவனித்துக் கொள்வார் கள். வாய் பேச இயலாதவர் ஆண் என் றால்கூட அவருக்குக் கல்யாணம் நடந்துவிடும். வாய் பேச இயலாத பெண்களின் நிலைதான் பரிதாபகர மானது ஆகும். இவர்களுக்கு அவ்வளவு எளிதாக திருமண நடந்தேறாது. ஒருவேளை அந்த வாய் பேச இயலாத பெண்ணுக்கு சொத்துபத்து, நிலம்நீச்சு என்று எதாவது இருந்தால் கட்டாயம் கல்யாணம் நடந்தேறிவிடும்.
ரெண்டாந்தாரம், மூன்றாந்தாரம் என்பதெல்லாம் அப்போது ரொம்ப சகஜம். வீட்டு வேலைகள், தண்ணீர் சுமக்க, களை செதுக்க என்று எத் தனையோ பேர் இருந்தாலும் காணாது. வீடு பூராவும் பிலுபிலுவென்று பிள்ளை கள். வீட்டுக்குள் தலையை நுழைத்ததும் குழந்தைகளின் மூத்திர வாடையும் பிரசவ வாடையும் இருந்துகொண்டே இருக்கும்.
முட்டுவீட்டுப் பிள்ளைகள் இறந்து போனால் இடுகாட்டுக்குக் கொண்டு போவது இல்லை. வீட்டுக்குப் புறத்தாலேயே புதைத்துவிடுவார்கள்.
வயசாளிகள் கூடிப் பேசுகிற, சந்திக்கிற இடங்கள் என்றே சில இடங்கள் இருந்தன. குளுமையான வீட்டடி நிழல்கள், கம்மாய்க்கரை அரசமரத்தடிகள், கிராம தேவதையின் முன்புறக் கூரையடிகள். இதில் மட்டும் ஒரு சவுகரியம் ‘வெயிலு வந்திரிச்சு’ என்று எழுந்திரிச்சு போக வேண்டியது இல்லை.
மத்தியில் ஒரு கோழித் தூக்கம்கூட போடலாம். சலிப்புத் தட்டும்போது ஒரு ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளை யாட்டுக்கூடத் தொடங்கலாம். பாக்கு அளவு இருக்கிற பதினைஞ்சி சின்னச் சின்னக் கல்லுகளும், அதே அளவு இருக்கிற மூணு ஓட்டுச் சில்லுகளும் இருந்தால்போதும். கோடு கிழிக்க ஏதோ ஒரு பச்சிலையோ, கரித்துண்டோ கிடைத்தால் முடிந்தது. மனசில் ஆட்டை ஒழுங்கு இருக்கணும். திருட்டுத்தனம் மட்டும் இருக்கவே கூடாது.
‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு தென் தமிழக கிராமங்களில் புகழ்பெற்ற சிறுவிளையாட்டு. பசி, தாகம் மறந்து ஆடிக்கொண்டே இருக் கலாம். ரெண்டு பேர் மட்டும் போதும் விளையாட. பார்க்கறதுக்கு நாலு பேர் கூடிவிடுவார்கள்.
சில வீடுகளில், கோயில்களில், குளக் கரையில் என அகலமான படிக்கட்டு களில் இந்த ‘பதினைஞ்சாம் பிள்ளை விளையாட்டு’ என்கிற ‘ஆடுபுலி ஆட்டம்’ ஆடுவதற்கென்றே கல் தச்சனைக் கொண்டு வரைந்த கோடுகளை அங்கங்கே பார்க்கலாம்.
வீட்டுக்கு வீடு போய் அல்லது தெருவிட்டுத் தெரு சென்று பொறணி பேசவோ, சட்டமாக உட்கார்ந்துகொண்டு ஊர்க் கதைப் பேசுகிறவர்கள் பெண் களிலும் இருந்தார்கள்; ஆண்களிலும் இருந்தார்கள் அப்போது.
இதுவொரு பேச்சு சுவாரஸ்யம். இப்படிப் பேசுவதில் சிலர் ‘சொகம்’ கண்டுவிடுவார்கள். இந்தப் பேச்சு ‘சொகம்’ கூட ஒருவிதமான ஆட்டம் போல, விளையாட்டைப் போலத்தான். பேசிச் ‘சொகம்’ கண்ட நாக்கும், ஆடி ‘சொகம்’ கண்ட காலும் ஒரே இடத்தில் நிற்காது என்பார்கள், அது நெசந்தான்.
- இன்னும் வருவார்கள்…


நன்றி-தஹிந்து

Thursday, September 03, 2015

சொர்க்கத்தின் சாவி! - கி.ராஜநாராயணன்

எனக்கு நெருக்கமாக ஒரு நண்பர் ஒருவர் இருந்தார். அவரை அவருடைய அத்தைதான் அன் போடு எடுத்து வளர்ந்து வந்தாள். அத்தைக்கு வயதாகி தலை சாய்ந்த வுடன், வீட்டு முன்வாசல் திண்ணைக் கட்டிலில் படுத்த படுக்கையாகிவிட்டாள். தளர்ந்த வயோதிகத்தைத் தவிர அத்தையை வேறு எந்த சீக்கும் அண்டவே இல்லை. சீக்குதான் இல்லை என்றாலும்கூட எப்பப் பார்த் தாலும் பொழுது முச்சூடும் அனத்திக் கொண்டே இருப்பாள். இந்த அமைதியின்மைக்கு என்ன காரணம் என்று நண்பர் யோசித்துக்கொண்டே இருந்தாராம்.
ஒருநாள் பக்கத்துத் தெருவில் ஒரு கல்யாணம். கதவைப் பூட்டிக்கொண்டு எல்லோரும் அங்கே புறப்படும்போது, பூட்டிய தலைவாசக் கதவின் பெரிய இரும்புச் சாவியை அத்தையிடம் கொடுத்தார்களாம். அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாளாம்.
அத்தையின் நிம்மதியின்மைக்கான முழுக் காரணம் உடனே புரிந்துவிட்டதாம் நண்பருக்கு. அதன் பிறகு இதே வழியைப் பின்பற்றினோம் என்றார். அத்தையின் சாவு நெருங்க நெருங்க, ஒரு வேற்றுச் சாவியை அத்தையின் கையில் நிரந்தரமாக கொடுத்து வைத்துவிட்டார்களாம்.
ஒருநாள் அத்தை இறந்துவிட்டார். முறையான இறுதிச் சடங்குகள் செய்வதற்காக உறவுமுறைகள் எல்லாரும் கூடி, அவரது உடம்பைக் குளிப்பாட்ட முனைந்தபோது… விரல் கள் அழுத்தமாக மூடியிருந்த அத்தை யின் ஒரு கையில் இருந்து அந்த சாவியை எடுக்க ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்திருந்ததாம். அப்போ ஒரு வேடிக்கை ஆசாமி இப்படி சொன்னாராம்: ‘‘மேலே சொர்க்கவாசல் பூட்டியிருந்தாக்கூட, தள்ளு தள்ளு… நானே சாவி கொண்டாந்துட்டேன்னு சொல்லி, திறந்திருப்பார் உங்க அத்தை.’’
‘‘ஞாயப்படி பார்த்தா அந்தச் சாவியையும் அத்தையோட பிரேதத் துடன் கூடவே வெச்சுத்தான் அவங்களை மேலே ’அனுப்பி’ இருக்கணும். எப்படி சும்மா வெறுங்கையோட அவங்களை மேலே அனுப்பி வைக்க முடிஞ்சுதோ…’’ என்று சொன்னார் ஒரு பெண்மணி. அதையும் இங்கே நினைச்சுப் பார்க்க வேண்டியிருக்கு!
ஒரு மாதாந்த வெள்ளிக்கிழமையன்று உத்தியம்மா வீட்டை ஒதுங்க வைத்து, சாணிப் பால் கரைசலால் மெழுக ஆயத்தம் செய்தாள்.
வீட்டினுள் அடைசலாக இருந்த சாமான் சட்டுகளையெல்லாம் ஓர ஒதுங்க வைக்கிறபோது உத்தியம்மாவின் கண்கள் தேடுவது அத்தையம்மாவின் சிறுவாட்டு வெள்ளிப் பணம், பாக்கி தங்க நகைககளை எல்லாம் அத்தையம்மா எந்த இடத்தில் புதைத்து வைத்துவிட்டுப் போயிருப்பார் என்பதைத்தான்.
அந்தக் காலத்தில் ஒளித்து வைக்க வேற வழியே கிடையாது. ஒழுக்கரைப் பெட்டிகள் புழக்கத்துக்கு பட்டிதொட்டிகளுக்கு வராத காலம் அது. ரூபாய் நோட்டுகளேகூட அவ்வளவாக சகஜமாகப் புழக்கத்துக்கு வரவில்லை.
அந்த வீட்டின் மண் தரையில் எல்லா இடத்தையும் நினைச்ச சமயத்தில் அடிக்கடி தோண்டியோ, நோண்டியோ பார்க்க முடியாது. குறிப்பிட்ட, சந்தேகம் வரும் இடங்களை மட்டும்தான் நோண்டிப் பார்க்க முடியும். அப்படிப் பார்த்த ஓர் இடத்தில் மண் சும்மாடு ஒன்று தலை காட்டியது. ‘‘வாங்க அத்தையம்மா’’ என்று மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு, வெளிவாசக் கதவுகளெல்லாம் சரியாகப் பூட்டி யிருக்கா என்று பார்த்துவிட்டு, ஒரு பிள்ளைக் கடப்பாரையும், கொத்து வேலைக்குப் பயன்படும் தேய்ந்துபோன ஒரு கரணையையும் எடுத்துக்கொண்டு வந்தாள். இன்னும் கொஞ்சம் தோண்டிய உடனே ஒரு தோண்டி தெரிந்தது.
வேகமாகப் போய் ஒரு கோழியைப் பிடித்துக்கொண்டு வந்து, அதன் ஒரு காலின் விரல்நுனியை அறுத்து ரத்தப் பலி காட்டிவிட்டு, மேற்கொண்டு தோண் டினாள். முயற்சி வீண் போகவில்லை.
வெள்ளி நாணயங்கள், தங்க நாணயங்கள், பழங்காலத்து தங்க ஆபரணங்கள் இன்னும் ஏதேதோ உள்ளே இருந்துகொண்டு சிரித்தன.
‘கையும் ஓடலை காலும் ஓடலை’ என்று சொல்வார்களே அந்த நிலைதான் உத்தியம்மாவுக்கு. மனசு கிடந்து திக்குமுக்காடியது. அதுமட்டுமா…
ஓவென்று கூப்பாடு போட்டு சங்… சங்… என்று கும்மாளமும் போட்டது மனசு.
‘கொடுக்கிற தெய்வம் கூரை யைப் பிய்த்துக்கொண்டுதான் கொட் டும்’ என்பார்கள். இதுவோ, தரையைப் பிய்த்துக்கொண்டல்லவா மேலெழுந்து துருத்திக்கொண்டு வந் திருக்கிறது. இதுவொரு வகை விபத்துப்போலத்தான்.
கரிசல்ச் சீமையில் ‘தன்னூத்து’ என்று சொல்வார்கள். அவனுக்கு எதுவும் பூமியின் கீழ் இருந்தே வர வேண்டும். குளமோ, குளத்துக்குள் கிணறோ தோண்டும்போது எதிர்பாராத கணத்தில் காத்துக்கொண்டே இருந்ததுபோல் பூமியின் அடியில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.
அந்த நீர் ஒருவருக்கானது அல்ல; ஊருக்கே ஆனது. அப்படி பீய்ச்சியடிக்கும் தண்ணீரைக் கண்டு விட்டால் ஆனந்தக் கூத்திடுவார்கள் மக்கள். ஊரே அதில் நனையும்.
தூங்கா நாயக்கரின் குடும்பம் அதில் இருந்து நிலம் நீச்சு என்று நிமிர்ந்து எழுந்து நின்றது.
எந்திரங்கள் இல்லாத தனிமனித உழைப்பை மட்டுமே கொண்டு வாழ்ந்த காலம் அது. எந்திரம் என்றால் அது சுற்ற வேண்டும்.
அப்போது திரிகை ஒன்றுதான் இருந்தது. அதுவும் கல்லால் ஆனது. அதன் கைப்பிடியும் உள் அச்சு மட்டுமே மரத்தில் ஆனவை.
உலக்கைகளுக்கான பூண்கள் பின்னால் வந்தவை. உரல்களும் மரத்தில் இருந்து பிறகு கல் பிறப் பெடுத்தவையாகும். இரும்புச் சுத்திய லுக்கு முந்தி இருந்தது கொட்டாப்புளி கட்டை.
வெகுநாள்ப்பட்ட வைரம் பாய்ந்த புளிய மரத்தில் இருந்து வந்ததினால் அது கொட்டாப்புளி எனப்பட்டது.
மரச்செக்குகள் கல் செக்குகளாயின. பருத்தியில் இருந்து கொட்டையையும் பஞ்சையும் பிரிக்கும் எந்திரம் முழுவதும் மரத்தினால் ஆனதே.
உலோகத்தினால் முதல் சக்கரம் செய்து எதிரிகளை வதைத்த முதலவன் அசோதை வளர்த்தெடுத்த கண்ணபிரானே. அந்த மாயம் அவனோடு போய்விட்டது.
ஓவியங்கள்: மனோகர்
- இன்னும் வருவாங்க…


நன்றி-த இந்து

Wednesday, August 12, 2015

மனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்

ஓவியம்: மனோகர்
ஓவியம்: மனோகர்
ஆடு மேய்ப்பவர்களிடம் இருந்து நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். கதைகளைச் சொல்லவும் கேட்கவும் அவர்களிடம் விஸ்தாரமான பொழுதுகள் உண்டு.
முக்கியமாக இவர்கள் பேய் பிசாசுக் கதைகள்தான் அதிகம் சொல்லுவார்கள். மக்களிடம் பயம், பீதிகளை உண்டாக்கினால்தான் ராத்திரிகளில் தைரியமாக‌ வெளியே வர மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை!
கிடை தூங்கிக் கொண்டிருக்கும் போதே இயங்கிக் கொண்டிருக்கும் அதனுடைய அமைப்பு அப்படி.
ஈனுவதற்கு ராப்பொழுதுகள்தான் வசதி போலிருக்கிறது. தூக்கம் ஒரு பக்கம்; கிடாய்கள் பெண் ஆடுகளில் முடையடித்து, முகர்ந்து பார்த்து விர‌ட்டி விரட்டி பொலிந்துகொண்டிருக்குங்கள்.
ரா வேட்டையாடும் நரிகள், ஓநாய்கள் ஒரு பக்கம்.
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் இங்கே மனுசன்தான் பிரசவ‌ம் பார்க்கிறான். காட்டு ஆடுகளுக்கும் காட்டு மாடுகளுக் கும் அவை தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்கின்றன. அதேபோல் காட்டுப் பெண்களும் அவர்களே தங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு சொல்கதையில் ஒரு காட்டு வேட்டு வப் பெண், தனக்குத் தானே பிரசவம் பார்த்துப் பிள்ளைப் பெத்து, தொப்புள் கொடியைப் பல்லால் துண்டித்து, பச்சைத் தண்ணீர்த் தொட்டுக் குழந்தை யைத் துடைத்து, குழந்தையை புஜத்தில் சேர்த்தணைத்து வைத்துக் கொண்டு, சேகரித்துக் கட்டிய விறகுச் சுள்ளிகள் கொண்ட கட்டைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டுப் போகிறதை, புலிவேட்டைக்காக மரத்தின் மேல் இருந்த ராஜா ஒருவன் பார்த்ததாக அந்தக் கதையில் வருகிறது.
பசு மாடு ஈனும்போது பார்க்கக் கிடைப் பது பாக்கியம் என்கிறது ஒரு நம்பிக்கை. ஈனும் பசுவை அந்த நிலையில் பிரதட் சணம் வந்து வணங்குவது மிகப் பெரிய புண்ணியம் என்கிறது இன்னொரு நம்பிக்கை.
குற்றாலத்தில் எனது நண்பர்களோடு இதுபற்றிய பேச்சு வந்தபோது, நான் அவர்களிடம் சில கிரித்திரியமான கேள்விகள் கேட்டேன்.
‘‘உங்களில் யாராவது குரங்கு ஈனும்போது பார்த்தது உண்டா?'' என்று கேட்டு வைத்தேன்.
ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘நீங்கள் குற்றாலவாசிகள். இங்கே உள்ள குரங்குகளும் குற்றாலவாசிகள். இங்கே முந்தி வந்தது அதுகளா? நீங்களா?'' என்றேன்.
சிரித்தார்கள் நண்பர்கள்.
‘‘சிரிக்கிறதுக்குக் கேட்கவில்லை நான்; நிசமாகத் தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்” என்றேன்.
‘‘எங்களுக்குத் தெரியவில்லை; தெரிந்தால் நீங்களே சொல்ல‌லாமே...'' என்றார்கள்.
‘‘குரங்குகளின் பூர்வீகம்தான் இந்த மலை. அதுகள் எங்கிருந்தும் வர வில்லை. வந்தவர்கள் நாம்தான் என்று தோன்றுகிறது'' என்றேன்!
“சரியான கரிசல் காடையா நீங்க?” என்று சொல்லிச் சிரித்தார் தீப.நடராஜன்.
சிறந்த உழைப்பாளிகளையும், அதி லும் யோக்கியமானவர்களையும், பெண் ணைப் பெற்றவர்களும் பெண்களும் கண்டுபிடித்துவிடுவார்கள். ரொம்ப அலைய வேண்டியதில்லை. மாப் பிள்ளைகளுக்கு, அவர்களுக்குப் புழக் கடையிலேயே பச்சிலை கிடைத்துவிடும்.
அப்படித்தான் தூங்காநாயக்கரும் ‘ஆம்புட்டுக்' கொண்டார் உத்தியம்மாவிடம்.
இரு உழைப்பாளிகள் சேர்ந்து பாடுபட்டால் செல்வம் கூடிவரும்.
கிடையிலும் அவர் செயலாக இருந்தார்; ஊரினுள்ளும் செயலாளரானார்.
அதிகம் பேசாதவருக்கு எப்போதும் மதிப்புதான்!
கலியாணம் முடிந்ததும் தூங்காநாயக் கர் இன்னொரு மனுசனானார். கிடையில் இருந்து அவர் ‘தள்ளிவைக்கப்'பட்ட மாதிரி எல்லாரும் சேர்ந்து அவரை வீட்டுக் காவல் வைத்ததுபோல ஆக்கிவிட்டார்கள்.
உத்தியம்மா நல்ல விளைந்த பெண் பிள்ளை. உலகத்தைப் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்ட பொம்பிளை.
எப்போது பார்த்தாலும் ஒரு துருதுருப் புத் தெரியும். தானும் ஒரு உலகம் கண்டு, அவருக்கும் ஒரு உலகத்தைக் காட்டினாள். புது மனுசனாகிவிட்டார் தூங்காநாயக்கர்!
விளக்கேற்றாமலேயே பிரகாசம் கொண்டது வீடு. அவள் வந்தபிறகு வீடே தனியொரு மணம் கொண்டது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் வாரம் இரு முறை உச்சியில் இருந்து உள்ளங் கால்வரை எண்ணெய்த் தேய்த்துத் தலைமுழுக்கு என்று ஏற்பட்டது. இந்த மாதிரிப் புது மாப்பிள்ளைக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் எண்ணெய்த் தலைமுழுக்கு. மற்ற சாதாரண நாட்களில் நல்லெண்ணெய்தான் தலை முழுக்கில். இந்த நாட்களில் மட்டும் விளக்கெண்ணெய்தான் பயன்பட்டது தலைமுழுக்குகளுக்கு.
ஏண்டாப்பா என்று கேட்டால், ‘சூடுல்லா' என்பார்கள்.
‘‘என்னா சூடு? வேனா வெயிலில் மண்டையைப் பிளக்க ஆடு மேய்த் தவனுக்கு இல்லாத சூடு இதுல வந்துட்டதாக்கும்.”
‘‘லேய் கோட்டிக்காரா, அது மண்டை யிலே மட்டுந்தாம் சூடு, இதுல ஒடம்பு பூராவும் கடுஞ்சூடு டேய்'' என்பார்கள்.
‘‘அதுலேயும் ஒருநாள் மாத்தி ஒருநாள் தவறாமக் கோழிக் கறி, கேக்கணுமா...'' என்பார்கள்.
ஆக, தூங்காநாயக்கனெத் ‘தொவைச்சி’ எடுத்துருவாங்கன்னு சொல்லு!
பொண்ணு வீட்டு விருந்துன்னா சும்மாவா. மூணு மாசம்!
பிட்டி நகண்டு போகும் மாமனார் வீட்டுக்கு. மாப்பிள்ளை தனது ஊருக் குத் திரும்பிவரும்போது, யாரு இதுன்னு கேக்கணும். அப்படி ஊதி உதைச்சிப் போயிறணும்.
பொண்ணு வீட்டில் இருந்து வரும் போது அந்த ஊரு கம்மாக்கரையிலேயோ, ஊர் மடத்துக்கு முன்னாலயோ இளவட்டக் கல் கிடக்கும். அதைத் தூக்கி தோளுக்கு ஏற்றி, பின்புறம் விழும்படி போடணும். அப்படிப் போட்டு விட்டால் அந்த மாப்பிள்ளைக்கு ஊர் இளவட்டங்கள் மாப்பிள்ளையின் கையில் வெத்திலை பாக்கும், கால் ரூபாயும் கொடுத்து மரியாதை செய்து வழியனுப்புவார்கள்.
தூங்காநாயக்கர் இளவட்டக் கல்லை யும் எடுத்து முதுகுக்குப் பின்பக்கம் வீசி எறிந்து, அந்த ஊர் இளவட்டங்களுக்கு வெத்திலையில் வெள்ளி ரூபாய் ஒன்றை வைத்துக்கொடுத்துவிட்டு வந்தார்.
பார்வைக்கும் அவர் கொஞ்சம் ஆள் அம்சமா இருப்பார்.
ஆடுகளில் ரெட்டைக் குட்டி ஈனுகிற வம்சம்னு இருக்கிறதுபோல மனுசக் குடும்பங்களில் ஒத்தைப் பிள்ளை வம்சம் என்று உண்டு. தூங்காநாயக்கர் வீடுகளில் ஒரு பிள்ளைதான் பிறக்கும்.
இந்தக் குடும்பம் கட்டுப்பாடுங்கிற தெல்லாம் ‘நேத்து’ வந்தது. ‘ஒரு பிள்ளை வம்சம்’ என்பது பூர்வீகத்தில் இருந்து வருவது.
ஒரே ஆண்பிள்ளை; அல்லது ஒரே பெண்பிள்ளை. மிஞ்சிப் போனால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும்.
ஒரே பிள்ளை மட்டும் பெறுவதால் அந்தப் பெண்கள் இடை சிறுத்து, கடைசிவரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
வீட்டிலும் சரி, காட்டிலும் சரி... வேலை களில் அவர்களுக்கு ஈடு அவர்களே. உத்தியம்மா கம்மம் புல் குத்தினால் வீடே அதிரும். தெருவழியாகப் போகிறவர் கள் கொஞ்சம் நின்னு பார்த்துவிட்டுப் போவார்கள்.
- இன்னும் வருவாங்க…


நன்றி- த இந்து
 கி.ராஜநாராயணன்

Thursday, June 11, 2015

மனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க!-கி.ராஜநாராயணன்

தோழர் பி.சீனிவாசராவ் எழுதிய ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற சிறிய புத்தகத்தில், கரிசல்காட்டில் அவர் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கையில் ஒரு சம்சாரி சீனிவாசராவை ராச்சாப்பாட்டுக்கு அழைத்துப் போகிறார். நல்ல பசி இவ ருக்கு. ஆனாலும், அந்த ரசமும் குதிரை வாலி அரிசிச் சோற்றையும் அவரால் சாப்பிட முடியவில்லை. அந்தச் சம்சாரி வேகமாகப் பிழிந்து பிழிந்து சாப்பிடு வதை அதிசயமாகப் பார்த்துக்கொண்டி ருந்ததாகச் சொல்லுகிறார்.
முதன்முதலில் ரங்கூனில் இருந்து நெல்லரிசி வந்து இங்கே விற்கும்போது ரூபாய்க்கு எட்டுப் படி அரிசி கிடைத் தது என்று சொன்னால், இப்போது நம்பவே மாட்டார்கள். அதோடு அதனுடைய ருசியையும் சொல்லணும். கரிசல்காட்டுக்காரனுக்கு நெல் அரிசி்ச் சோறுதான் ருசியான பலகாரம். ஓட்டல் களைப் பார்த்து அவன் ஓடியதுக்கு இதுவும் ஒரு காரணம்.
சின்னப் பையனாக இருந் தப்போ, ஓட்டல்களில் பாம்பே ரவையில் ஆக்கிய உப்புமாவை ரொம்ப விரும்பி உண்பேன். அதையெல்லாத்தையும்விட ஓட்டல்களில் ரவா தோசை அப்படி ஒரு ருசி அந்தக் காலத்தில்.
நான் இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் என்னைப் புரட்டிப் போட்டது அந்தக் காலத்து ஓட்டல்களின் பூரிக் கிழங்கு. அந்தக் கிழங்குக்கும் பூரிக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம்!
அந்தக் கிழங்கின் ருசியைப் பற்றி ரசிகமணியிடம் சொன்னேன். உற்சாக மாகிவிட்டது அவருக்கு. ‘‘அந்தக் கிழங்கை வைத்துக்கொண்டு ஒரு ஹிண்டு நியூஸ் பேப்பரையே சாப்பிட்டு விடலாமே’’ என்றார் அவர். அதை நாங்கள் மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி இப்பவும் சிரிப்போம்.
அந்தக் காலத்தில் அந்த உருளைக் கிழங்கின் அப்படியான ருசிக்குக் காரணம்? ஊட்டியின் குளிர், மண், அந்த மழைதான்!
இப்போது உருளைக் கிழங்கு எந்தத் தரையிலும் விளைவதால் ருசியும் தரை மட்டமாகிவிட்டது. வெள்ளைப் பூண்டி லும்கூட மலைப் பூண்டின் ருசி தரைப் பூண்டுக்குக் கிடையவே கிடையாது.
சென்னையில், ஒரு பிரபலமான கல்யாணத்துக்கு நாரணதுரைக் கண்ணன், கு.அழகிரிசாமியை அழைத் துக்கொண்டு போனார். அங்கே பாதாம்கீர் தந்துள்ளார்கள். அருமையாக இருக்கிறதே என்று விரும்பி வாங்கிக் குடித்தார்களாம். கு.அழகிரிசாமியால் மட்டும் குடிக்கவே முடியலையாம். என்ன செய்கிறதுனும் தெரியல. இதை என்னிடம் அவனேதான் சொன்னான். நானும் பாதாம்கீர் குடித்தது இல்லை.
அது எப்படியிருக்கும் என்று கேட் டேன். ‘‘அதை ஏம் கேக்கிற. ஒரே மூட்டப் பூச்சி வாடை அடிக்குது. கொண்டா கொண்டான்னு வாங்கி வாங்கி மொக்குரான்க’’ என்று அப்போது அப்படிச் சொன்னவன், அதே பாதாமில் தயாரித்த பாதாம் அல்வாவைச் சாப்பிட என்னை கோந்தப்ப நாயக்கன் தெருவில் இருந்த ஆரிய பவனுக்கு அழைத்துச் சென்றவனும் அவனே!
கிராமப்புறங்கள்ல நாங்கள் தின்னு அனுபவிச்ச பலகாரப் பண்டங்கள் கருப் பட்டித் தோசை, கருப்பட்டிப் பணியாரம், சுசியம், சினைக் கொழுக்கட்டை, உளுந்த வடை, ஆமைவடை, முந் திரிக் கொத்து, மாவு உருண்டை, முறுக்கு வகைகளெல் லாம் இப்போ இப்படித்தான்.
ஏழை சம்சாரி வீடுகளில் அப்போ தெல்லாம் தோசைக்குப் போட்டாலே கொண்டாட்டம்தான்.
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் கேட் டாராம். ‘‘ஏண்டா நீ நேத்துப் பள்ளிக் கூடத் துக்கு வரலை?’’ என்று. அதுக்கு அந்தப் பையன் ‘‘நேத்து எங்க வீட்டுல தோசைக் குப் போட்டிருந்தார்கெ சார். அதான் வரல’’ என்று பதில் சொல்லியிருக்கான்.
இந்தப் பையன் பெரியவனாகி, பட் டணத்துக்குப் போய் மிட்டாய்க் கடையை முதன்முதலில் பார்க்க நேர்ந்தபோது தான் ‘பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை முறைச்சுப் பார்த்ததுபோல’ என்கிற பேச்சு வந்திருக்கும்போல!
ஆனால், நான் முதன்முதலா முறைச் சுப் பார்த்தது திருநெல்வேலி போனப்ப நிலக்கண்ணாடி வைச்ச முட்டாசுக் கடையைத்தான். அந்த நிலக்கண்ணாடி யில் நமது மூஞ்சி முகரை எல்லாம் பளிச்சென்று தெளிவாத் தெரியும். அதை தரமான அசல் பெல்ஜியம் கண்ணாடி என்பார்கள். அதுசரி, இருந்துட்டுப் போகட்டும்.
இந்தக் கண்ணாடிங்க முடி திருத்துற கடைங்கள்ல இருக்கிறது சரி. வித விதமா இனிப்புகளை நிறுத்துப் போடுற கடைகள்ல ஏன் வைக்கணும்?
ஒருநாள், கு.அழகிரிசாமியின் மாமனார் சந்திரஹரியிடம் இந்த சந்தேகத் தைக் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டு அழகிரிசாமி முதல் எல்லோருமே சிரிச்சோம்.
திருநெல்வேலியில் லாலாக்கடை அல்வா பிரிசித்தி பெற்றது. இந்த லாலாக்களில் ஒருத்தர் தேசிய விடுதலை இயக்கத்திலும், நெல்லையில் நடந்த போராட்டங்களிலும் பங்கேற்றுப் பிரி சித்திப் பெற்றார்.
தமிழ்நாட்டுப் பலகாரங்களில் கீர்த்தி பெற்றது என்று பலதைச் சொல்லலாம். ருஷ்ய நாட்டில் இருந்து வந்த பிரதமர் குருஷேவ்வுக்கு, நெய்யில் சுட்ட ஒரு உளுந்த வடையைக் கொடுத்தார்களாம். தின்னு பார்த்துவிட்டு இன்னொண்ணு கிடைக்குமா என்று கேட்டார் என்பார்கள்.
பயணம் போகும்போது உண்ணக் கொண்டுபோக என்றே நம்மிடம் பலது உண்டு. ஒருநாள் ‘கப்பல் குழம்பு’ பற்றிக் கேள்விப்பட்டேன். இதுவும் பலநாட்கள் தாக்குப்பிடிக்குமாம்.
கிருபானந்த வாரியார் ஒருநாள் தண்ணீர் விடாமல் செய்யும் குழம்பைப் பற்றிச் சொன்னார்.
குற்றாலத்தில் பெரிய அண்ணியார் (ரசிகமணி அவர்களின் வீட்டம்மா) சிறப்பாக ஆக்குவார் என்று கேள்விப் பட்டுள்ளேன்.
நாங்களே ஒருநாள் ரசிகமணி அவர் களிடம் இதுபற்றிக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே கேள்விப்பட்டா மட்டும் போதுமா? சாப்பிட்டும் பார்க்க வேண்டாமா என்று கேட்டார். மறுநாளே எங்களுக்கு அது அண்ணியாரிடம் இருந்து கிடைத் தது. ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தோம்.
எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் குறித்து வைத்துக்கொள் கிற புத்தியெல்லாம் எங்களுக்கு இல்லை. அந்தப் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படிக்கவில்லை.
ருசித்து அனுபவிச்சுச் சாப்பிடுகிறது என்பதையே சொல்லிக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.
- இன்னும் வருவாங்க…
a


thanx - the hindu

Monday, June 08, 2015

என்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநாராயணன்

என்னோடு பழகியவர்களைப் பற்றியெல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை. என்றாலும் முடிந்த மட்டும் பார்க்கலாம்.
என்னைப் போன்ற உதவாக்கரைகள் கிராமங்களில் அபூர்வம்தான்.
‘முளைக்கும் செடிகளில் எதுவும் களையில்லை…’ என்று சமீபத்தில்தான் படித்தேன்.
இதேபோல்தான் மனுசப் பிறப்புக்களிலும் என்றாலும், விதிவிலக்கு எதிலும் இருக்கும் போலிருக்கு.
பூமிக்குப் பாரமாகப் பிறந்துவிட் டோமே என்று, ஒரு நேரம் நினைத்துக் கொண்டதில்லை என்னைப் பற்றி.
பேராசிரியர் பஞ்சு ஒருநாள் சமீபத்தில்தான் கேட்டார் என்னிடம்:
‘‘தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எப்பவாவது தோன்றியது உண்டா?’’
சிரிப்புதான் வந்தது.
என்னை பேட்டி கண்டபோது, அவர் கேட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று.
முற்றிய தொழுநோய் வந்து, விரல் கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண் டிருக்கும் நிலையில்கூட, ஒருவன் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்கிறான். ஏன்?
‘ஒரு அற்புதம் தோன்றும்; இந் நோய் குணமாகிவிடும்’ என்ற நம்பிக்கையில்தான்!
‘‘சீன் நாயக்கர்’ என்றுதான் அவ ரைக் கூப்பிடுவேன். என்னைவிட அவர் மூப்புதான். அய்ந்தாறு வயசுகூட அதிகம் இருக்கலாம். அவர் என்னை ‘‘யோவ்…’’ என்றுதான் அழைப்பார்.
பொதுவாக கிராமங்களில் இப்ப டிக் கூப்பிடுகிறது இல்லை; முறை சொல்லித்தான் கூப்பிடுகிறது; மாமா மச்சான்; அண்ணன் தம்பி என்று.
ஓரனேர் சம்சாரி அவர். ஜோடி மாடுகள், அதுக்கான கோப்புசம் எல்லாம் இருந்தது. வீட்டில் அவரும், அவரது உடன் பிறந்த அக்காள் மகள் நாச்சியாவும் இருந்தார்கள். நாச்சியாள் பிறந்ததில் இருந்து அந்த வீட்டின் சகல வேலை, பொறுப்பு, சமையல் முதக் கொண்டு யாவும் அவள்தான். அவரை வாய் நிறைய ‘மாமா… மாமா’ என்று கொண்டாடுவாள். அவள் பிறந்தவுடனே வீட்டார், இவள் சீன் நாயக்கருக்குத்தான் என்று தீர் மானித்திருந்தார்கள்.
அம்மா, அப்பா காலமானார்கள். உடன் பிறந்த பெண்களையெல்லாம் கட்டிக் கொடுத்தாயிற்று. ஒரே அண் ணன் பக்கத்து ஊரில் கல்யாணம் செய்துகொண்டு, அங் கேயே போய் நிரந்தரமாகிவிட்டார். இப்போது வீட்டில் இவர்கள் இருவர் மட்டும்தான்.
அந்த வீட்டுக்கு வரும் அவரது சொந்தங்கள், ‘‘என்னப்பா, வயசு காணாதா. அந்தப் பிள்ளை கழுத்தில் ஒரு மூணு முடிச்சு போட்டு கொண்டனைச்கொ..’’ என்பார்கள்.
நாயக்கர் மவுனமாகிவிடுவார். பதிலே பேச மாட்டார். ரொம்ப நெருக்கமானவர்கள் வற்புறுத்திக் கேட்டால் மட்டும், ‘‘அவளை வெளியே எங்கேயாவதுதான் கட்டிக் கொடுக்க வேணும். உடன் பிறந்தாபோல கூடவே இருந்துவிட்டு, வேற மாதிரி பார்க்க முடியலை…’’ என்பார்.
நாச்சியாள் தனிமையில் போய் அழுது கண்ணீர் வடிப்பாள்.
வயசு ஏறிக் கொண்டே போயிற்று இருவருக்கும். என்ன செய்வதென்று தெரியவில்லை.
கரிசல் விவசாயத்தில் கொஞ்சங் கொஞ்சமாக இருள் கவிய ஆரம்பித்தது. வானம் சுருங்கிக் கொண்டே வந்தது.
ரங்கூனில் இருந்து கப்பல்களில் வந்திறங்கிய அரிசி வரத்து நின்று போனது. வங்காளத்தில் பஞ்சம் வந்து ரெண்டு லட்சம் மக்கள் செத்துப் போனார்கள் என்று சொன்னார்கள்.
இரண்டாவது உலகப் போர் பற்றி ஒரு தொடர்கதையைப் போல பத்திரிகைகள் சுவாரஸ்யமாக செய்திகள் கொடுத்துக் கொண்டி ருந்தன. படிக்கத் தெரிந்த இள வட்டப் பிள்ளைகள் வாசித்துச் சொல்ல, வயசாளிகள் கேட்டுத் தெரிந்துகொண்டே இருந்தார்கள்.
வெள்ளைக்காரன் பேரில் இருந்த கோபத்தால் ஜெர்மன்காரனான இட்லர் மேல் மக்களுக்கு ஒரு அபிமானம் உண்டானது.
‘கப்சிப் தர்பார்’, ‘பாசிஸ்ட் ஜடாமுனி’ என்று இட்லர் பற்றியும், முசோலினி பற்றியும் புத்தகங்கள் வந்தன.
விடிஞ்சதும் பத்திரிகைகள் எப்ப வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித் தார்கள். அப்போது ரேடியோ எல்லாம் வரவில்லை கிராமங்களுக்கு.
தினப் பத்திரிகை படிப்பது என்று ஆரம்பித்துவிட்டால் ஒரு போதை வஸ்துபோல பற்றிக் கொள்ளும். சீன் நாயக்கருக்கு இந்த நோய் பலமாகவே பற்றிக்கொண்டது. எப்படா விடியும் என்று காத்திருந்து, ஒரு கூறு பருத்தியை எடுத்துக் கொண்டு கடைத் தெருவுக்கு வந்து விடுவார் பீடி வாங்க.
பீடியைச் சுண்டுவதும், பத்திரிகை படிப்பதும் அவருக்கு ஏற்பட்டுப் போனது, கடைசி வரையிலும் அதுவே கதி என்றும் ஆகிவிட்டது.
சம்சாரித்தனம் (விவசாயம்) நின்று போனதால், எதுவும் செய்யாத மனிதர் ஆனார். அதுவே சுகம் என்று ஆகிவிட்டது.
அவருடைய சொந்தக்காரர்கள், ‘இனி, இவர் ஒப்பேற மாட்டார்… ’ என்று தீர்மானித்து நாச்சியாளுக்குக் கல்யாண ஏற்பாடு செய்தார்கள்.
- வருவாங்க...
ஓவியங்கள்: மனோகர்


நன்றி- த இந்து


இதன்  2ம்  பாகம்  நாளை மதியம் 1 30 க்கு

Wednesday, February 04, 2015

சினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க வேண் டிய 3 தகுதிகள் - இயக்குநர் சீனுராமசாமி

சினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு 3 தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்’ என்று, திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையும் மனோ மீடியா கிளப்பும் இணைந்து நடத்தும் 3 நாள் கரிசல் திரைவிழா பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று தொடங்கியது.
இயக்குநர் சீனுராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசும்போது, ‘இந்நிகழ்வில் பறை இசை இசைத்தது நமது பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு மூன்று தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஒன்று அதீத ஆர்வம், அதுவே சினிமா இயக்க அடிப்படைத் தேவை, இரண்டு சினிமாவின் மீதான காதல், மூன்றாவது தரமான இலக்கிய வாசிப்பு. உலகத்திரைப்படம் என்று தனியாக எதனையும் கூற முடியாது. ஒரு வாழ்வியல் முறை எவ்வளவு எதார்த்தமாக, ஆழமாக பதிவு செய்யப்படுகிறதோ அதனை வைத்தே அது உலகத்தரம் பெறுகிறது.
புரட்சி கருத்துகள் நிராகரிப்பு
திரைப்படத்தை தணிக்கை செய்கையில் ஆபாசமான காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் நீக்கப்படுவதைப்போல புரட்சிகரமான கருத்துக்களை உடைய காட்சிகளும் தணிக்கைக் குழுவினரால் நிராகரிக்கப்படுகின்றன.
சத்திய ஜித் ரே போன்ற இயக்குநர்களை முன்னோடிகளாக கொண்ட இந்திய சினிமாத் துறையில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி நமது திறமையினை பறைசாற்றி வருகின்றன.
வீழ்ச்சி என்று பார்க்கையில் ‘நாயக பிம்பம்’ எனும் படிமம் அதிகரித்து, எதார்த்த சினிமாக்கள் குறைந்து முழுக்க முழுக்க கதாநாயகனைத் தூக்கி நிறுத்தும் படங்கள் வரத் தொடங்கியுள்ளன.
குடிக்கு எதிரான காட்சி
குடிப்பழக்கத்தின் காரணமாக கலாச்சாரம் எனும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட சமூகம் அநீதியை எதிர்க்கும் திராணியற்றிருக்கிறது. எனவே தான் எனது படங்களில் குடிநோய்க்கு எதிரான காட்சிகளை அமைக்கிறேன்’ என்றார் அவர்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ தலைமை வகித்தார். தொடர்பியல் துறைத் தலைவர் பெ.கோவிந்தராஜு கருத்துரை வழங்கினார். தொடர்பியல் துறை மாணவர் கு.நாகரத்தினம் வரவேற்றார்.
மாணவர் பி.ஹாட்லின் ஜெனித்த ரால்ப், 3 நாள் நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார். மாணவி வெ.அபிநயா நன்றி கூறினார்.
மதியம் போட்டியாளர்கள் அனுப்பிய குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடுவராக ‘தமிழ் ஸ்டூடியோ’ அமைப்பின் நிறுவனர் மோ.அருண் செயல்பட்டார். இதை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இத்திருவிழா நாளை வரை நடைபெறுகிறது.


நன்றி  - த இந்து