Showing posts with label வாசகர் கேள்விகள். Show all posts
Showing posts with label வாசகர் கேள்விகள். Show all posts

Sunday, April 12, 2015

எறும்புக்கு சர்க்கரை நோயே வராதா? ஏன்? - கிரேசி மோகன் பதில்கள்

கே.பாக்யம், சேலம்-2.
குல்ஃபி ஐஸ் சாப்பிடும் பழக்கம் உண்டா?
இப்போதெல்லாம் ரைஸ் (சோறு) சாப்பிட்டாலே பல் கூசுகிறது. ஐஸ் சாப்பிட்டால் மூப்பு திரண்ட அறுபதில், பற்கள் முப்பத்திரெண்டும் கூனிக் குறுகி அம்பேலாகி, வாய் ஆலவாய் ஆகிடும். வேண்டுமானால் குல்ஃபி சாப்பிடுவதைப் போல செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம்.
கி.மனோகரி ராஜா, மன்னார்குடி.
‘பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு’ என்றால் எந்த நம்பரை சொல்வீர்கள், ஏன்?
பத்துக்குள்ளே நம்பராக இருப் பதை விட டாப் -10 லிஸ்ட்டில் மெம்பராக இருப்பதே மேல். ஆக, என்னைக் கேட்டால் ‘எண் ஒன்றை’ அழுத்தவும்!
மத்தளராயன், மாம்பலம்
கவிதை நடையில் கதை சொல்ல முடியுமா?
கமல், எழுத்தாளர் இரா.முருகன் அடியேன் மூவரும் அவ்வப்போது வாட்ஸ்அப்பில் கவிதைகளைப் பரிமாறிக்கொள்வது உண்டு. அது போன்ற சமயத்தில், கமல் சார் ‘இலக்குவன் ரேகை’என்ற கவிதையை, ஸாரி… கவிதை அல்ல; அதையும் தாண்டி புனிதமான கதை ஒன்றை அனுப்பினார்.
ஒரு பக்கக் கதைகளை இப்படி கவிதையாகச் சொல்வது சுவாரஸ் யமாகப்பட்டது. இதைப் படித்த பின்பு இதே பாணியில் ‘உத்தர ராமாயணம்’ என்றொரு க(வி)தை எழுதி வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பினேன். ‘வசந்த மாளிகை’ படத்தில் வரும் கண்ணதாசனின் ‘கட்டழகானோதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந் ததடா…’ என்ற மெட்டில் இதோ ‘உத்தர ராமாயணம்!’
‘வெட்ட வெளிதனில் கொட்டும் அருவியில்
வெப்பம் தணிந்ததடா - அவள்
வெட்கம் அகன்றதடா.
பட்டுக் கனியதில் இட்ட முத்திரைகள்
பற்பலக் கோடியடா - எங்கள்
பற்களே சாட்சியடா.
தெப்பமென்றே அவள் தேகம் நனைந்ததில்
தப்பு நடந்தடா - மழலைச்
சொப்பு பிறந்ததடா.
குப்பனென்(று) கொஞ்சிக் குலாவிட
காலம் உருண்டதடா - பிள்ளை
வாலும் வளர்ந்ததடா.
அப்பன் அன்னை எங்கள் ஆயுள் முடிந்திடும்
அந்திமக் காலமடா - தேயும்
எந்திரக் கோலமடா.
குப்பன் இளங்குப்பி காதல் கிழத்தியைக்
கைத்தலம் பற்றி வந்தான் - கண்ணில்
பொய்த்தனம் காட்டி நின்றான்.
அற்ப மருமகள் அன்னை தந்தையெமை
திண்ணைக்(கு) அனுப்பிவிட்டாள் - பையன்
தெருவில் நிறுத்திவிட்டான்.
சிற்பமென யெண்ணி செல்லம் கொடுத்தவன்
சொற்சர அர்ச்சனையால் - கொடும்
நச்சரவமாகினனே.
நற்குணம் இல்லாத நாட்டுபெண் கொட்டத்தில்
வாசல் அடைந்தோமடா - மகன்
நேசம்(கதவு) அடைத்தானடா.
சுடும்சொற்கள் துளைத்ததில் சோர்ந்து களைத் துயிர்
சோதி துடித்ததடா - விதி
நீதி உரைத்ததடா.
வெட்டவெளிதனில் கொட்டும் அருவியில்
வெப்பம் கனன்றதடா - எங்கள்
தப்பும் புரிந்ததடா - கண்கள்
கெட்ட பின்னே ஒளி சூரியனைத் தொழும்
மானிட கும்பலிலே - அதில்
நாமொரு தம்பதிகள்.
புத்திர சோகத்தில் பெற்றவன் போலவே
புண்ணிய ராமபிரான் - லவகுசன்
எண்ணித் தவிக்கலையோ - அந்த
நித்திய விஷ்ணுவும் நிர்குணம் விட்டிந்த
மண்ணில் பிறந்ததனால் - பாற்கடல்
கண்ணில் சுரந்ததடா!
ராகுல் பெனிட்டா, கோவை.
பென்சில் சீவுதலுக்கும் தலை சீவுதலுக்கும் என்ன சார் ஒற்றுமை, வேற்றுமை?
கணினி தட்டச்சு வந்த பின்பு புழுக்கை ஆகும் அளவு பென்சில் சீவல் வழக்கில் இல்லை. அடி யேனுக்கு தலை சீவல் கஷ்டமும் இல்லை. பென் சில் புழுக்கை என்றால் என் தலை வழுக்கை. மலைக்கு செல்ல ரெடியாக தலையில் இரு முடிதான். ஆக, எனக்குத் தெரிந்த தெல்லாம் ‘வெத்திலை சீவல்தான்’!
கிருத்திகா, சென்னை-15.
குரங்கு வாங்கித்தான் தீர வேண்டு மென்றால் எத்தனை குரங்கு வாங்கு வீர்கள், ஏன்?
இருக்கிற ஒரு ‘மனக் குரங்கு’ போதாதா? அப்படியும் வாங்கித்தான் ஆகவேண்டுமென்றால் ‘மருந்து சாப் பிடும்போது’ மறக்காமல் வாங்குவேன்!
சி.மணி, பாபநாசம்.
வாதம், விதண்டாவாதம் விளக்கம் ப்ளீஸ்?
வக்கீல் செய்வது வாதம். வக்கற்றவர் கள் செய்வது விதண்டா வாதம். வாதத்துக்குத் தீர்ப்பு உண்டு. விதண்டா வாதத்துக்கு ஈர்ப்பு உண்டு!
கி.பாலா, தஞ்சாவூர்.
பரீட்சையில் சைபர் வாங்கினால் அதுதான் சைபர் கிரைமா சார்?
நான் பேபி கிளாஸ் படிக்கும்போது, ‘பாபா ப்ளாக் ஷீப்’ ‘டுவின்கிள் டுவின்கிள் லிட்டில் ஸ்டார்’சொல்லமுடியாமல் டீச்சரிடம் சைபர் வாங்கியிருக்கிறேன். அது ‘சைபர் ரைம்!’
சாருமதி, ஸ்ரீரங்கம்
எறும்புக்கு சர்க்கரை நோய் வந்தால்?
சர்க்கரைக்குத்தான் எறும்பு வருமே ஒழிய, எறும்புக்கு சர்க்கரை வராது. பிறவி யிலேயே எறும்பு
‘Ant’டி டயாபடீஸ்!
சந்திரன், எடப்பாடி
எட்டப்பன்கள் இப்போதும் வாழ் கிறார்கள்தானே?
வாழவில்லை. வாழவைத்துக் கொண்டிருக்கிறார். குருவாயூரில் எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ண குட்டப்பன் (குருவாயூரப்பன்).



நன்றி  - த  இந்து

Tuesday, March 24, 2015

உலகக் கோப்பையை ஜெயிக்க-கிரேசியைக் கேளுங்கள் 25

  • ஓவியம்: கேசவ்
    ஓவியம்: கேசவ்
  • கிரேசிமோகனின் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் பார்க்க வந்த கவாஸ்கருடன் நாடகக் குழுவினர்...
    கிரேசிமோகனின் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் பார்க்க வந்த கவாஸ்கருடன் நாடகக் குழுவினர்...
சோனா, நியூஜெர்ஸி.
இந்தியா உலகக் கோப்பையை ஜெயிக்க ஒரு வெண்பா கூறுங்களேன்?
ஜெயிக்கட்டும் பிறகு வாழ்த்துவோம் வெண்பாவால். இப்போதைக்கு ஜெயிப்பதற்கு பிரார்த்தனை செய்வோம் ‘வேண்டுதல் வெண்பா’வாய்!
அடியேனுக்கு ‘சாக்லேட் கிருஷ்ணா’ ஜெயிக்க, அது அமெரிக்காவானாலும் அமிஞ்சிக்கரையானாலும் கிருஷ்ணர் துணை வேண்டி ‘வேண்டுதல் வெண்பா’ எழுதும் சென்டிமெண்ட் உண்டு. கிரிக் கெட்டை தமிழில் ‘கிட்டிபுள்’என்பார்கள். கிருஷ்ணரைச் செல்லமாக ‘கிட்டன், கிட்டி’என்றும் சொல்வதுண்டு. மகேந்திர சிங் தோனியும் கிருஷ்ணரைப் போல தீராத விளையாட்டுப் பிள்ளை.
கிருஷ்ணர் பாம்பின் மீது ஆடியது போல தோனி ஆட அந்தக் கண்ணனையே வேண்டு வோம். மேலும், கிருஷ்ணர் பீதாம்பரதாரி. அதாவது தமிழில் பீதகம் (மஞ்சள் வண்ண ஆடை) அணிபவன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனியும் அணிவது யெல்லோ யெல்லோதான் (Yellow Yellow Dress). எல்லாம் சரியா வருது. கப்பு (CUP) வருதா பாப்போம். இங்கே கண்ணனை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் வேண்டிக் கொண்டு, தோனியைக் கிருஷ்ணாவை போல் வரைந்தது ‘ஹிண்டு’ கேசவ்.
‘வேண்டுதல் வெண்பா’
‘சென்னைக்கு
சூப்பர்கிங் சிங்தோனி - பீதகக்
கண்ணனைப் போல் மஞ்சள் கட்டுகிறார் என்னைக்கும்
ஆடைஆள் பாதிபாதி ஆடய்யா கோகுல
மாடய்யன் போல்பாம்பின் மேல்’.
கி.கன்னையா, திண்டிவனம்.
உங்கள் மேடை நாடகத்தைக் காண விளையாட்டு நட்சத்திரம் யாராவது வந்திருக்கிறார்களா?
என்ன அப்படி கேட்டுட்டீங்க! அஃப்கோர்ஸ் என் நாடகத்தைக் காண வரும் ரசிகர்கள் எல்லோருமே என்னைப் பொறுத்தவரையில் விளையாட்டுத்தனம் கொண்ட ஸ்டார்களே! கிரிக்கெட் பிரபலம் சுனில் கவாஸ்கர் எங்கள் நாடகத்துக்கு வந்ததைப் பெருமையாக குறிப்பிட விரும்புகிறேன்.
’சியர்ஸ் எல்காட்’ டி.வி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு ஹோட்டல் லீ மெரிடினியனில் 5 நாள் கிரிக்கெட் மேட்ச்சைப் போல் ஒரு நாள் முழுக்க நடந்தது. அதற்கு பிரதம விருந்தினராக ‘சியர்ஸ் எல்காட்’ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் கவாஸ்கர் சிறிது நேரம் தலைகாட்ட ‘டுவெல்த் மேன்’ போல் வருகை புரிந்தார். அங்கே குழுமியிருந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் வேடிக்கையாளர்களாக எங்கள் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் போட அழைத்தார்கள்.
ஏற்கெனவே எஸ்.வி கேப்டனாக ‘மினிமேக்ஸ்’ கிரிக்கெட் டீம் வைத்திருந்த நாங்கள், கவாஸ்கர் பார்க்கும்பட்சத்தில் நாடகம் போட வருவதாகக் கூறினோம். கவாஸ்கருடன் அன் றைய தினம் எங்கள் குழு வினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் எஸ்.வி இடம்பெறவில்லை.
கார ணம், சியர்ஸ் எல்காட் மினிமேக்ஸ் கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங்கில் பிஸி. கோபி இருக் கிறான். ஆனால், குள்ள மாக இருப்பதால் போட்டோவுக்குக் கீழே, மறைந்துவிட்டான். நான் போட்டோ எடுக்கும் சமயம் ‘பவுண்டரி லைனில்’ டின்னர் ஃபீல்டு செய்ய முந்திவிட்டேன்.
நான்கு ரன்கள்தான் என்று நினைத்த போது ‘தேர்டு அம்பயர்’ சிக்ஸர் சொன் னால் எப்படி மைதானம் அலறுமோ, அது போலவே கவாஸ்கர் எங்கள் நாடகம் பார்க்கப்போகும் நல்ல சேதி யைக் கேட்டவுடன் எங்கள் ‘கிரேசி குழுவினர்’ ஸ்டேடியத்தில் இல்லாம லேயே சந்தோஷ சத்தமிட்டார்கள். கிச்சா மட்டும் ‘யார்ரா கவாஸ்கர்..?’ என் றான். ‘ஏண்டா… கிரிக்கெட் தெரி யாதா?’ என்று நாங்கள் தலையில் அடித் துக்கொள்ள, கிச்சா ‘யார்ரா அவன் கிரிக்கெட்?’என்று தன் கிரிக்கெட் ஞானத்தை வெளிப்படுத்தினான்.
கிரிக் கெட் சுத்தமாக, நாடகம் அசுத்தமாகத் தெரியாத கிச்சா ஆங்கிலத்தில் ஆஸ்கர் வாங்கியவன் (சிரசாசனத்தில் ஏ,பி,சி, டியை தலைகீழாகச் சொல்வான்). அவனை கவாஸ்கருக்கு மொழிபெயர்ப் பாளராக அமர்த்தினோம். நாடகம் தெரியாத கிச்சா கவாஸ்கரிடம் ‘வெயிட் எ மினிட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ்’ என்று சொல்லிவிட்டு பாதி நாடகத்தில் மேடையேறி ‘‘பாலாஜி (மாது) கடசீயா… நீ சொன்ன டயலாக் என்ன?’ என்று கேட்டு, உடனே அதை கவாஸ்கருக்கு மொழிபெயர்ப்பான்.
கடைசி வரை கிரிக்கெட் தெரியாத கிச்சா கவாஸ்கரிடம் ‘நீங்க என்ன வேல பாக்குறீங்க?’ என்று கேட்டு கழுத்தறுத்தான். ஒரு கட்டத்தில் கவாஸ்கர் கிச்சாவைக் கழட்டிவிட்டுவிட்டு நாடகத்தைக் கைத்தட்டி சிரித்து ரசிக்கத் தொடங்கினார்.
‘எப்படி சார் எங்கள் டிரான்ஸ்லேட்டர் இல்லாம டிராமாவைப் புரிஞ்சுண் டீங்க?’ என்று டின்னரின்போது நாங் கள் கேட்டோம். ‘கிரிக்கெட்டும் காமெடியும் மொழிக்கு அப்பாற்பட்டது’ என்று ஆரம்பித்து, கிரிக்கெட்டுக்கும் காமெடிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி ‘கமெண்ட்ரி’ கொடுத்தார்.
கவாஸ் கரிடம் கிரிக்கெட் தெரிந்த எங்கள் நாடக இயக்குநர் காந்தன் டெண்டுல்கரைப் பற்றிக் கேட்டபோது ‘நீங்க வேணா… பாருங்க மிஸ்டர் காந்தன்... அந்தப் பையன் (சச்சின்) என்னைத் தொட்டுண்டு டொனால்ட் பிராட்மேனைத் தூக்கி சாப்பிடப் போறான்’என்று ஜோஸ்யம் சொன் னார். கவாஸ்கர் வாயால் ’கிரிக்கெட் ரிஷி’ பட்டம் சச்சினுக்கு அன்றே கிடைத்துவிட்டது.
சமீபத்தில் நாடகம் போட இலங்கைக்குச் சென்ற போது, ஹோட்டல் சமுத்ராவில் கமெண்ட்ரி கொடுக்க தங்கியிருந்த கவாஸ் கரிடம் கிச்சா சென்று ‘சார்… இப்போதான் நீங்க ‘கWasகர்’… அன்றைக்கு ‘கவ்Isகர்’ என்று தனது Is, Was, Past Tense- Present Tense ஆங்கிலப் புலமையைக் காட்ட, Tense ஆன சுனில் கவாஸ்கர், இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற கிலியில் ‘ரன் அவுட்’ ஆனாலும் பரவாயில்லை என்கிற ரீதியிலும் பீதியிலும் ஓடியது ஞாபகத்துக்கு வருகிறது!


நன்றி - த இந்து

Sunday, March 01, 2015

பிரம்மாவுக்கு மட்டும் 4 , நமக்கு மட்டும் ஏன் 1 ? - கிரேசி மோகன் பதில்கள்

கோமதி நமச்சிவாயம், திருநெல்வேலி
படைக்கும் கடவுள் பிரம்மாவுக்கு நான்கு முகங்கள். ஆனால், அவர் படைக்கும் மனுஷனுக்கு மட்டும் ஏன் ஒரே முகம்?
நாலு பேர் நாலு விதமா தன் படைப்பைப் பத்தி எங்கே பேசிடுவாங்களோ என்கிற பயத்தில் ஒரு முகத்தோடு படைச்சிருக்கலாம். மனுசனோட மூஞ்சிக்கு இது போதும்னு ஒரே முகத்தோடு படைத்திருக்கலாம்!
லதா ரகுநாதன், சென்னை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் தங்களின் கிரிக்கெட் அனுபவத்தைக் கூறுங்களேன்?
70-களில் மந்தைவெளியில் எங்கள் காலனியில் சுவரில் கரித் துண்டால் ஸ்டம்ப்ஸ் வரைந்து, ஆறிப் போன பூரியைப் போல இருக்கும் லப்பர் பாலில் அண்டராம்ஸ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ‘மினிமேக்ஸ்’என்ற கிரிக்கெட் குழுவை ஆரம்பித்தான் ‘பெரியப்பா’என்று நாங் கள் மரியாதையாக அழைக்கும் எஸ்.வி!
‘பெரியப்பா’ அவ்வப்போது எங்களுக்குக் கணக்கு சொல்லித் தருவான். நவராத்திரி கொலு சமயத்தில் படுதா கட்டி ‘காளிதாஸன்’ நாடகம் போடுவான். அவனுக்கு வளர்த்தி ஜாஸ்தி. பதினோரு வயதிலேயே எதிர் போட்டு ஷேவ் செய்துகொள்ளும் அளவுக்குக் கன்னம் சொரசொரவென்று இருக்கும்.
எனது பால்ய அறிவுஜீவி காம்ரேட் எஸ்.வி, ‘மினிமேக்ஸ் என்கிற பேர் எப்படி இருக்கு?’ என்றான். ‘‘போடப் போறது என்னமோ சமஸ்கிருத டிராமா. எதுக்குடா இங்லீஷ்ல பேரு?’’ என்றேன்.
‘‘முட்டாள்... அதான் உனக்குக் கணக்கு சரியா வர மாட்டேங்குது. டிராமா இல்லடா கிரிக்கெட் டீம்’’ என்று என் தலையில் ஓங்கி உலகளந்து குட்டினான். அவன் குட்டிக் குட்டியே இன்றும் என் தலை பத்தாங்குத்து பாறாங்கல் பம்பரம் போல மேடு பள்ளமாயிருக்கும்.
‘‘அது என்னடா பெரிப்பா ‘மினிமேக்ஸ்’? ஏதோ ஐஸ்கிரீம் பேரு மாதிரி இருக்கு?’’ என்றான் மூணு பிட்ச் முரளி. அவன் எங்கள் குழுவின் ஸ்பின் பவுலர். மூணு தபா பிட்ச் ஆகித்தான் பந்து பேட்ஸ்மேனை வந்து சேரும்.
முதல் பிட்ச்சில் ‘ஃஹாப் பிரேக்’ ஆகி, இரண்டாவது பிட்ச்சில் ‘லெக் பிரேக்’ ஆகி, மூன்றாவது பிட்ச் ஆனதும் வீரியம் குறைந்து… நிறைமாதக் கர்ப்பிணியைப் போல ‘என்னை யாராவது சிக்ஸர் அடியுங்களேன்…’ என்று கெஞ்சும் பாவனையில் நிதானமாக பந்து வரும்.
‘‘டேய் முரளி... இப்படிக் கேள்வி கேக்கறதாலதான் உனக்குக் கணக்கு சரியாவே வரலை’’ என்றான் எஸ்.வி. எங்கள் எல்லா குறைகளுக்கும் கணக்கைக் காரணம் காட்டி, எங்கள் வாயை அடைப்பான்.
‘‘நம்ப டீம்ல நான்தான் பெரியவன். கணக்குத் தெரிஞ்சவன். நீங்கள்லாம் சின்னப் பசங்க, அதான் மினி மேக்ஸ்” என்று கோனார் நோட்ஸ் போட் டான்.
ஒரு வாரம் பிராக்டீஸ். தான்தான் ஓப்பனிங் பவுலர் என்று எதேச்சதிகாரமாக சாயங்காலம் வரை லப்பர் பந்தை பெரியப்பா எங்கள் கண்ணிலேயே காட்டவில்லை. பெரியப்பாக்கு மட்டும் ஒரு ஓவருக்கு 60 பால். ஓப்பனிங் பேட்ஸ்மேனும் அவன்தான். போடும் பந்தை எல்லாம் மார்பால் தடுத்து ‘மார்பிடபுள்யு’ ரூல்ஸ் பிரகாரம் ‘கிடையாது’ என்று அழுகுனி ஆட்டம் ஆடுவான்.
திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கம்பெனி குழுவோடு மோத, நாங்கள் அவர்கள் அனுப்பிய பஸ்ஸில் போனோம். அந்த டீமில் 11 பேரும் ‘நிர்மா வாஷிங்’ வொய்ட் அண்ட் வொய்ட்டில் கிறிஸ் கெய்ல் ஜாடையில் வாட்டசாட்டமாக இருந்தார்கள். ‘‘பயமா இருக்குடா மோகன். படாத இடத்துல கட்டபால் பட்டுவெச்சுதுன்னா நாளைக்கு பாத்ரூம் கூட சரியா போக முடியாது’’ என்றான் பத்து.
‘‘பத்து… நீதான் பதினொண்ணுல இல்லையே டுவெல்த் மேன்தானே…’’ என்று நான் அவனை சமாதானப்படுத்த, ‘‘இல்ல... பத்து டீம்ல இருக்கான். என்னோட ஓபனிங் அவன்தான். ஏன்னா… பத்துக்குக் கணக்கு நல்லா வரும்’’ என்று சொல்லி பத்துவின் பயந்த வயிற்றில் சுடச்சுட காச்சின பாலை வார்த்தான் பெரியப்பா.
கணக்குக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன அப்படி ‘பம்மல் கே சம்பந்தம்’னு இன்று வரை எனக்குப் புரியவில்லை.
டாஸ் போட அழைத்தார்கள். பெரியப்பா இரண்டு பக்கமும் ‘தலை’ இருப்பது போல, தான் தயாரித்து வைத் திருந்த 10 பைசா நாணயத்தைச் சுண்டி எறிந்து ‘தலை’ என்றான். பூவா- தலையாவில் ஜெயித்த பெரியப்பா, ‘பவுலிங்’ என்கிற முடிவை எடுத்து எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தான்.
‘‘ஏண்டா எஸ்.வி (ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வளாகத்துக்குள் யாராவது தன்னை ‘பெரியப்பா’ என்று விளித்தால் டீமைவிட்டு விலக்கிவிடுவதாக எஸ்.வி எச்சரித்திருந்தான்) பவுலிங் செலெக்ட் செஞ்சே …’’ என்று நடராஜர் காலடியில் நசுங்கிக் கொண்டிருக்கும் குள்ள ராட்சஸன் ‘முயலகன்’ ஜாடையில் இருந்த முனுசாமி கேட்க, பெரியப்பா வழக்கம்போல ‘‘இப்ப புரியுதா முனுசாமி... உனக்கு ஏன் கணக்கு வரலேன்னு’’ என்று, தனது அரித்மெடிக் அஸ்திரத்தை வீச, கணக்கில் நூத்துக்கு ‘மூணு’சாமியான முனுசாமி கப்சிப் ஆனான்.
அப்புறம் என்ன? முதலில் விளை யாடிய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் டீம் ஆயிரத்து சொச்சம் ரன்கள் குவித்தனர். பேட்ஸ்மெனுக்கு வெகு அருகில் ஷார்ட்-லெக்கில் கேட்ச் பிடிக்க குப்புசாமி நின்றபோது கேப்டன் எஸ்.வி அவனைத் தள்ளி நிற்கச் சொன்னான். ‘‘இல்லடா எஸ்.வி இங்கேதான் பால் வரும்…’’ என்று முனுசாமி சொல்ல ‘‘மூதேவி… அதனாலதான் சொன்னேன்.
பால் பேட்லேர்ந்து வேகமா வரும். உனக்கு அடிகிடி பட்டு வெச்சுதுன்னா உங்க அப்பன், ஆயிக்கு எவன் பதில் சொல் றது?’’ என்று சொல்லி ஷார்ட் லெக்கை பவுண்ட்ரி-லைன் அருகில் மாற்றினான். ஒரு ரன்னையெல்லாம் லப்பர் பால் ஃபீல்டு செய்தே பழகிய நண்டுபிடி நாக ராஜன் கட்ட பாலை ‘கவட்டை’ வழியாக நழுவவிட்டு ஃபோர் ஆக்கினான்.
மூணு பிட்ச் முரளியின் ஸ்பின்னை ஸ்பின்னி எடுத்தார்கள் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஹேய்டன்களும் கில்க்ரிஸ்ட்டுகளும். அவர்கள் அடித்த ஆயிரத்து சொச்சத்துக்கு பதிலாக ‘மினிமேக்ஸ்’ சொச்சம் கூட அடிக்க வில்லை.
‘‘ஏண்டா… பெரிப்பா... முதல்ல ஏன் பவுலிங் எடுத்தே? எப்படியும் தோத்திருப்போம். நாம முதலில் விளையாடியிருந்தா மேட்ச்சாவது சீக்கிரம் முடிஞ்சிருக்குமே…’’ திரும்பிப் போகும்போது பெரிப்பாவைக் கேட் டேன். ‘‘முண்டம்… அவங்க மொதல்ல விளையாடியதாலதான் மேட்ச் ‘லஞ்ச்’வரை போச்சு. அதனாலதான் நமக்கும் பிரியாணி, புலவு ரைஸ் கிட்டைச்சுது’’ என்ற பெரியப்பா என்னைப் பார்த்து விஷமமாக சிரித்தபடி ‘‘இப்ப புரிஞ்சுதா மோகன்… உனக்கு ஏன் கணக்கு சரியா வர மாட்டேங்குதுன்னு’’ என்று கூறி பிரியாணி ஏப்பம் விட்டான்!
சீதா ஷங்கர், தளவாய்புரம்.
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணின் கற்பனை பாத்திரம் ’மிஸ்டர் பொதுஜனம்’. கிரேசி உருவாக்கும் கற்பனை மனிதரின் பெயர் என்ன?
‘மிஸ்டர் பிரயோஜனம்!’




நன்றி - த இந்து

Saturday, December 20, 2014

கிரேசி மோகன் , எஸ் வி சேகர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் நாடகம் போட்டா..-கிரேசியைக் கேளுங்கள் 13

இரா முருகன், செ-17.
தனியார் துறை, அரசுத் துறை... உங்கள் பார்வையில்?
அரசுத்துறையில், ஏதாவது குறை இருந்து ஆராய்ச்சி மணி அடித்தால் அடுத்த நிமிடமே ‘குறையொன்றுமில்லை கோவிந்தா’ என்று நாம் பாடும் அளவுக்கு ஆஜர் ஆவார்கள்.
தனியார் துறையில் நாம் நமது குறையை ஒரு நம்பருக்கு போன் செய்து சொன்னால்… அவர்கள் வேறு நம்பர் கொடுத்து பேசச் சொல்வார்கள். பேசினால் ‘நீங்கள் நிரந்தர வாடிக்கையாளர் என்றால் எண் ஒண்ணை அழுத்தவும். இனிமேல்தான் வாடிக்கையாளர் என்றால் எண் இரண்டை அழுத்தவும். இரண்டுமே இல்லை என்றால் எண் மூன்றை அழுத்தவும். பிறகு, என்னை அழுத்தவும்...
அப்பாலே உன்னையே அழுத்தவும்’ இப்படி பதிவு செய்யப்பட்ட பேச்சு ‘அழுத்திப் பிடி’ வைத்தியம் கூறிக் கொண்டேயிருக்கும். கடைசியில் ‘ஊப்ஸ்... உங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்று சொல்லி இணைப்பு கட் ஆகும். இந்த விளையாட்டில் போன் வைத்து பேசிய நம் காது சிவந்து ‘மெட்ராஸ் ஐ’ போல ‘ மெட்ராஸ் EAR’ ஆகிவிடும்!
கி.மனோகரன், பொள்ளாச்சி.
சுஜாதாவுக்கு கிரேசியின் ‘இரங்கல் வெண்பா’!
‘கதையா கவிதையா கட்டுரையா - கேட்போர்க்(கு)
எதையும் அளித்த எழுத்துப் -புதையலே
ஏ ரங்க ராஜரே, ஸ்ரீரங்க தேவதையே
பார்இங்கு நீரின்றி பாழ்’
ஆத்திகம் - நாத்திகம்... ஓர் லேசான அலசல் ப்ளீஸ்?
ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே இறுதி முடிவை நோக்கிச் செல்லும் யாத்ரீகம்.
முருகருக்கு மயில். பிள்ளையாருக்கு மூஞ்சூறு. பெருமாளுக்குக் கருடன். அது மாதிரி, நமக்கும் ஒரு வாகனம் உண்டு. அதுதான் கடவுள். Our Vehicle Is GOD. அதில் நமது பாரத்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக நாம் சவாரி பண்ணலாம். Free Will Driving.
சத்தியம், தர்மம், மனிதாபிமானம், போன்ற சிக்னல்களுக்குக் கட்டுப்பட்டு, ஒழுங்காக நாம் ஓட்டினால் We Will Reach The Destination Without Any Accident. இதுதான் என் வீட்டில் எங்க தாத்தா, எங்க பாட்டி, எங்க அப்பா, எங்க அம்மா சொல்லிக் கொடுத்த ‘எங்காத்திகம்!
சிட்டி வேணு, சென்னை.
மதுரை மணி அய்யர் கச்சேரி கேட்டது உண்டா?
மதுரை மீனாட்சி கண்ணுக்கு விருந்தென்றால், மதுரை மணி அய்யர் காதுக்கு விருந்து. ஆறேழு வருடங்களுக்கு முன்பு புனேவுக்கு நாடகம் போடச் சென்றேன். கிளம்பும்போதே வயிறு சரியில்லை. அங்கு போனவுடன் நயாகரா போல வயிற்றுப்போக்கு. என் பால்ய நண்பன் ராம் வீட்டில் தங்கினேன். அவன் மதுரை மணி அய்யரின் தீவிர ரசிகன். இரவு 2 மணி வரை மணி அய்யரின் ஆடியோவைப் போட்டு, எனது வயிற்றெரிச்சலை ‘சாந்தமு லேகு’வாக்கினான். தியாகய்யரின் ‘மா ஜானகி’ கீர்த்தனையை மதுரை மணி அய்யர் ‘காம்போதி’ ராகத்தில் பாடுவதைத் திரும்பத் திரும்ப கேட்டதில், என் பேதி CALMபேதி ஆகி சுத்தமாக நின்றது!
மத்தளராயன், சென்னை-2.
மகாபாரதத்தில் எந்தப் பாத்திரம் உங்க ஃபேவரைட்?
சூரிய பகவானால் கொடுக்கப்பட்டு பாஞ்சாலி பயன்படுத்திய அட்சய பாத்திரம்! பசி என்று சொல்லி வந்த கண்ணன் அந்தப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கீரையை தின்று ஏப்பம் விட, துர்வாசரின் வாயில் ஏப்பம் வந்ததாம். கண்ணனைப் பஞ்ச, பாண்டவப் பாத்திரங்களுக்கு தோழனாக்கிய அட்சய பாத்திரம்தான் என் ஃபேவரைட் பாத்திரம்!
ராதா ரமேஷ் , சேலம்.
உங்க சினிமா, டிராமா எல்லாவற்றிலும் உங்க ‘ஹீரோயின்’ பெயர் ஜானகியாவே இருக்கே?
‘ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார்’ என்பார்கள். என் வெற்றிக்குப் பின்னால் பல பெண்கள் உள்ளனர். தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் சொல்வது எனது பாட்டி, அம்மா, மனைவி, வகுப்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனத்தை சொல்லித் தந்த ஜானகி டீச்சர் ஆகியோர். நான் வசனம் எழுதப் போகும் படங்களில் ‘சம்பளத்தைக் கூட ரெண்டாம் பட்சமாகத்தான் பேசுவேன். ஆனால், கதாநாயகிக்குக் கட்டாயம் ‘ஜானகி’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பேன்.
ஆறேழு வயதிலேயே எனக்குள் நாடக வெறியை விதைத்தவர் ’ஜானகி’ டீச்சர். எனக்குக் ‘கட்டபொம்மன்’ வேஷம் போட்டு அட்டைக் கத்தி, கிரீடம் எல்லாம் செய்துகொடுத்து, என்னை எல்லாப் பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று பரிசு வாங்கித் தந்தவர். அந்த ஜானகி டீச்சருக்கு ‘குரு தட்சணையாக’த்தான் எனது ஹீரோயின்களுக்கு அவர் பெயரைச் சூட்டுகிறேன். சமீபத்தில் பெங்களூர் சென்றபோது 85 வயதான எனது டீச்சரை மேடையேற்றி, சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்!
கார்த்திக்கேயன், மதுரை.
நீங்கள் படித்து ரசித்த புதுக்கவிதை ஒன்று சொல்லுங்களேன்?
‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ என்ற சிறுகதையில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு கவிதை. கதையில் வரும் விஞ்ஞானி, கதை எழுதும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்து, ‘கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் கவர்ச்சி,கொஞ்சம் மரபு etc ஆணைகளைக் கொடுத்து, கவிதை எழுதுமாறு பட்டனைத் தட்ட, அது
‘கதவைத் திறந்து கவனித்து வந்த ராஜராஜன் - தங்கப்பதுமைக்கு முத்தம் பதினெட்டுத் தந்த ராஜராஜன்’
என்று பிரின்ட்-அவுட்டைத் துப்பும். நான் ரசித்த சுஜாதாவின் கணினிக் கவிதை இது!
கே.விஸ்வநாதன், சேலம்
ஒரு பஸ்ஸில் நிறைய பாகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ரொம்பவும் பிடித்த பாகம் எது… ஏன்?
ஒழுங்கா ‘பிடிக்கும் பிரேக்’தான் எனக்குப் பிடிக்கும். அது பிடிக்காவிட்டால் நம் பாகங்கள் நம்மைப் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். அப்பால ‘அப்பல்லோ’தான்!
கலைமணி, திருச்சி.
இளையராஜா இசையில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
‘பாரதியார்’ படத்தில் வரும் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடல்தான் இசைஞானியின் இசையில் எனக்கு ரொம்பப் பிடித்தது. இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க காரணம் உள்ளது.
‘தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னைச் சரணடைந்தேன்’
- என்கிற மகாகவியின் வேண்டுதல் வரிகள் எனக்கு கீதை, குரான், பைபிள் எல்லாமே. இதையே ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ‘கடவுள் என்ற எஜமான் வீட்டு வேலைக்காரனாக இரு’ என்றார். அவர் சொல்வது சரணாகதிக்கு ஷார்ட்-கட்!
எஸ்.மதுரா, குரோம்பேட்டை.
எஸ்.வி.சேகருடன் இணைந்து நீங்கள் ஏன் ஒரு நாடகம் போடக் கூடாது?
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகம் போட்டால் மேடையைக் கலக்கலாம். எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்கள் சபாக்காரர்கள் எல்லோருக்கும் லாபம்தான். ஆனால், இரண்டு நகைச்சுவை நாடகங்கள் போட முடியாமல் போய்விடுமே! அந்த வகையில் நஷ்டம். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது மாதிரி ‘கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்குக் கொண்டாட்டம்’, இரண்டு டிராமா போடலாம் இல்லியா!
- இன்னும் கேட்கலாம்... 


 thanx -the  hindu


  • ஜானகி டீச்சர்
    ஜானகி டீச்சர்