Showing posts with label வழிகாட்டி. Show all posts
Showing posts with label வழிகாட்டி. Show all posts

Tuesday, November 17, 2015

சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை?

பக்கத்துத் தெருவில் புதிதாகக் காய்கறிக் கடை வந்தது. சும்மா சொல்லக் கூடாது. கண்ணைப் பறிக்கும் நிறங்களில் அவர் காய்கறிகளைக் காட்சிப்படுத்தியதில் ஏற்கெனவே இருந்த காய்கறியாளர்கள் வாடியும், வதங்கியும் போனார்கள். ஆப்பிரிக்கா,நேபாள நாடுகளின் மாணவிகள்கூட அங்கே வந்து தங்கள் நிலத்தின் காய்கறிகளைக் கொய்தார்கள்.


காய்கறிக் கடைக்காரர்

நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இடையில் கடை மெல்ல அழகை இழந்தது. தக்காளி கேட்டால்கூட “ இல்லீங்களே...”; வெங்காயம்? “பக்கத்துக் கடைல இன்னிக்கு ஒரு நாளைக்கு வாங்கி அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க சார்.....” பக்கத்துக் கடைக்குச் செல்கிறவர் வெங்காயம் மட்டுமா வாங்கிப் போவார்...?


கடை இன்னும் இருக்கிறது. ஆனால், கூட்டம் மெல்லக் குறைந்து, இறுதிநாள் நோயாளி போல் “அமாவாசை தாண்டுமா...?” என்றிருக்கிறது. தாண்டிச்செல்லும் தனது வாடிக்கையாளர்களைக் குழப்பத்துடன் வெயில் முகத்திலடிக்க, பார்த்துக் கொண்டிருக்கிறார்-- “முன்னாள் காய்கறிக் கடைக்காரர்” என்ற பெயரை விரைவில் சூட இருப்பவர்.


கொஞ்சம் மனசு வச்சா?

நிறையப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி அடுத்தவர் கேட்கிறாரா, இல்லையா என்ற கவலை எதுவுமின்றிப் பிரச்சாரம் செய்வார்கள். குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய பி.எச்.டி. அறிக்கையையே ஒப்படைப்பார்கள்.

அதிலும், இந்த அம்மாக்களின் ஆய்வுக் குறிப்புகளைத் தாங்க முடியாது. அதில் இடம்பெறும் முக்கியமான வாசகம் “டக்குன்னு புரிஞ்சுக்கறான்... கொஞ்ச நேரம்தான் படிக்கிறான்.. அதுலயே இவ்வளவு மார்க் வாங்கிர்றான். இன்னும் கொஞ்சம் மனசு வச்சு படிச்சாம்னா...,”

குறைந்த நேரப் படிப்பிலேயே அம்மாக்களை அசத்துகிறவர்களால் தொடர்ந்து ஏன் புல்லரிப்பை நிகழ்த்த முடியவில்லை ?

இரண்டு பிரச்சினையும் வெவ்வேறு விதமாகத் தோன்றினாலும் அவற்றின் பிறப்பு ரகசியம் ஒன்றுதான்.

அட்டகாச ஆரம்பம்

காய்கறியாளரின் முயற்சியிலும், ஆர்வத்திலும் குறை சொல்லவே முடியாது. அட்டகாசமாகவே தொடங்கி யிருக்கிறார். பின் தப்பு நடந்தது எங்கே என்றால், அவர் தொடர்ந்து முயலவில்லை. அதுதான் பிரச்னை..!
ஆரம்பநாட்களில் முயன்றால் போதுமா...? பின் அதுவாகவே தன்னை நகர்த்திக் கொண்டு போகும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்...?

தன்னிடம் வரும் வாடிக்கை யாளரைத் திருப்தி செய்யத் தொடர்ந்து முயற்சி செய்தால்தானே, அவர் களத்தில் நிற்க முடியும்? தினமும் எது தேவை? தனது பகுதியில் எது நன்றாகப் போகும் என்று கணித்து அதை வாங்கி வைக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாமல் கறிவேப்பிலைகூட இல்லாமல் உட்கார்ந்திருந்து “காலைல மார்க்கெட்டுக்கு லேட்டா போனேங்க்கா... அங்க வித்து போச்சு...” என்றால் “தனியே...தன்னந்தனியே... நான் காத்துக் காத்து இருந்தேன்” என்று பாட வேண்டியதுதான்.

மாணவச் செல்வங்கள் ஆடிக்கும், அமாவாசைக்கும் மட்டும் படித்தால் “அவனுக்கு இருக்கும் அறிவுக்கு எங்கேயோ போயிருக்கணும் சார்...” என்று தாயார்களின் புகழுரையைக் கேட்டுக் காலம் தள்ள வேண்டியதுதான்.


தொடர்ச்சி

வெற்றி பெற முயற்சி மட்டும் போதாது. அம்முயற்சிகளில் தொடர்ச்சித் தன்மை (consistency) தேவை.

கிரிக்கெட் தெரிந்த யார் வேண்டுமென்றாலும் ஒரு ஓவருக்கு பேட் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட் என்பது ஒரு ஓவர் மட்டும் விளையாடுவது அல்ல. மேட்ச் என்றால் பகல் முழுவதும் நின்று ஆடுகிற உடல், மன வலிமைகளையும் வளர்த்துக் கொண்டால்தான் கிரிக்கெட் வீரராக முடியும். அதை விடுத்து “ஸ்டெயின் பால்லகூட நான் சிக்ஸ் அடிச்சேன்...” என்றால் மூளையின் ஆற்றலைச் சரிவரப் பயன்படுத்தாதவர்கள் வேண்டுமானால் சொல்லலாம். “அவனுக்கு இருக்கிற திறமைக்கு ...”

நம்மில் நிறையப் பேருக்கு அவ்வப்போது உடற்பயிற்சி ஆசை தாண்டவமாடும். அதற்கான ஷூக்கள்,ஆடைகள்; “காலை 6 மணியிலிருந்து 7 வரை நான் வாக்கிங் போயிருப்பேன். அப்ப ஃபோன் பண்ணாதீங்க” போன்ற செய்திகள், பயிற்சி முடித்து வந்த களைப்பைப் போக்கப் பிரத்தியேகப் பானங்கள்... ஒருநாள் நடந்துவிட்டுத் தொப்பையைப் பார்ப்பதென்ன, கண்ணாடியைப் பார்ப்பதென்ன ... என்று டீஸர், ட்ரெய்லர் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்.

தெரிந்தவர்களைக் கேலி செய்வேன். “எப்போதும் முதல்நாள் உடற்பயிற்சியைவிட இரண்டாவது நா
ள் எளிமையாகத்தான் இருக்கும்.”
“பழகிரும்னு சொல்ல வர்றீங்களா..?”
“அது இல்லை...இரண்டாவது நாள்தான் நாம செய்யவே போறதில்லையே!”
நிறையப் பேர் முயற்சி என்றாலேயே அதை லட்சியத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்கிறார்கள். ஆனால், அன்றாட வாழ்வை சிரமமின்றி நகர்த்திச் செல்ல உதவும் எளிய வேலைகளில்கூடத் தொடர்ச்சியானத் தன்மை இருந்தால்தான் வாழ்க்கை சுமுகமாக நகரும்.

எல்லோராலும் வெகு சுலபமாகவும், பிரமாதமாகவும் எதை வேண்டுமானாலும் தொடங்க முடியும். நிறையப் பேர் தொடங்குவதே போதுமானது என்றும் தவறாக நினைத்து விடுகிறார்கள். அது திறமையே அல்ல. அது “ஆர்வக்கோளாறு” என்ற பிரிவிலேயே இடம் பெறும். .


தொடர்ந்தால்தானே?

ஆர்வக்கோளாறுகள் பெட்ரோல் இன்றி வழியில் நிற்கும். “அப்ப எல்லாம் ரொம்ப கஷ்டம். இப்ப இருக்கிற மாதிரி ஈஸி கிடையாது”, “எனக்கு நேரம் இல்ல, வாய்ப்பு வரல...” போன்ற சாக்குப்போக்குகளைச் சொல்லிப் புலம்பும்.

ஊக்குவிப்பு முகாம் ஒன்றில் கேட்டேன் “இப்போது போர் எதுவும் நடைபெறவில்லைதான். இந்திய ராணுவம் இந்தச் சூழலில் என்ன செய்து கொண்டிருக்கும்..? தூங்கி, சாப்பிட்டு, டி.வி பார்த்து, அரட்டையடித்து...”
“போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...”என்றார்கள்.

வானில் எதிரி விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்ட பிறகு, நீங்கள் விடுமுறையில் சென்ற உங்கள் சிப்பாயை வரவழைக்கப் புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்புவதும், ஆயுதங்களைத் தூசு தட்டி அவற்றின் கேட்லாக்கைப் படிக்கத் துவங்குவதுமாக இருந்தால்,போரின் முடிவைச் சொல்ல வேண்டியதில்லை.

தொடர்ந்து பயிற்சி எடுக்கிறார்கள். தொடர் முயற்சிகளில் இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் வீரர்களாகிறார்கள்... வாழ்க்கை என்பதும் போர்க்களம்தானே? சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை...?

thanks the hindu

Wednesday, October 14, 2015

பதின் பருவம் புதிர் பருவமா?- என்னப்பா, இப்படிப் பண்றீங்களே?-டாக்டர் ஆ. காட்சன்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
புராகிரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவின் கையெழுத்தைத் தானே போடுவது, ‘ஹேப்பி வயசுக்கு வந்த டே' என்று வகுப்புத் தோழிக்குப் பூ கொடுப்பது, பதின்பருவக் காதலியை எப்படியாவது திருப்திப்படுத்த நினைப்பது... திரைப்படங்களில் காட்டப்படுவது போல, இப்படிக் குழந்தையாகவும் அல்லாமல் வளர்ந்தவராகவும் இல்லாமல் இளமைத் துடிப்பு, குறுகுறுப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம் எனப் பல்வேறு உணர்வுகள் நிரம்பியதுதான் இளமைக் காலம்.
நம் அனைவரையும் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாகவும் நினைத்துப் பார்க்கச் செய்கிற இந்த வயசுதான் எவ்வளவு அழகானது! இந்த வயதில்தான் ஒவ்வொருவருக்கும் எத்தனை கனவுகள், எத்தனை லட்சியங்கள். இனிமையான நினைவுகளோ, கசப்பான அனுபவங்களோ... இரண்டுமே நம் மனநலத்தைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை.
விவகாரமான பருவமா?
விடலைப்பருவம் விளையாட்டான பருவம் மட்டுமல்ல... கொஞ்சம் விவகாரமான பருவமும்தான்! சரியான நேரத்தில் மன மற்றும் உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் தோள், ஒரு கட்டாயத் தேவை. இதைக் குழந்தைப் பருவம் என்றும் சொல்ல முடியாது, விவரம் அறிந்த பருவம் என்றும் எடுத்துக்கொள்ளவும் இயலாது. அதனால்தான் இந்த வயதை இரண்டும் கெட்டான் பருவம் எனச் சொன்னார்கள்.
இந்த வயதின் ஆரம்பக் கட்டமே, உடல் வளர்ச்சியின் வேகம் அதிகரிப்பதுதான். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வயதில் வளர்ச்சியின் வேகம் அதிகம். ஆண்கள் அரும்பு மீசையைப் பெருமையுடன் தடவிப் பார்ப்பதிலும், பெண்பிள்ளைகள் கண்ணாடி முன்பு அதிக நேரத்தைச் செலவிடுவதிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. சிலருக்கு இந்த வளர்ச்சிகள் இதமாக இருக்கும். சிலருக்கு அதுவே இடறலாகவும் இருக்கலாம்.
குழந்தைகள்தான்
இந்த வயதில் உடல் வளர்ச்சியைக் குறித்து எழும் பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் தேவை. அவை தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நண்பர்களின் தவறான கருத்துகள், குழப்பங்களை அதிகரிக்கவே செய்யும்.
நண்பர்கள், பெற்றோர் தரும் சுதந்திரம், எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு ஆகிய மூன்று விஷயங்களுக்கு மனம் முக்கிய இடம்கொடுக்கும். அதேநேரம் விஷயங்களைப் பகுத்து ஆராயும் தன்மை, தனிமனித உறவுகளை மேம்படுத்தும் தன்மை, சமூகத்தின் மீது அக்கறை, தனிப்பட்ட திறமைகள், தலைமைப் பண்புகள் எனப் பல நல்ல குணங்களும் வெளிப்பட ஆரம்பிக்கும்.
பிடிவாதம், எதிர்த்துப் பேசுதல், நண்பர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என நினைப்பது உள்ளிட்ட பல மாறுதல்கள் காணப்பட்டாலும், இவர்கள் இன்னமும் பெற்றோரின் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள்தான்.
புரிதல் அவசியம்
விடலைப் பருவத்தில் வேகத்தைத் தீர்மானிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சி, கட்டுப்பாடுகளை விதிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சியைவிட முன்னதாகவே முதிர்ச்சி பெற்றிருக்கும். அதனால்தான் இவர்களுடைய செயல்பாடுகள் சில வேளைகளில் கட்டுக்கடங்காமல், பிறர் முகம் கோணும் அளவுக்கு மாறிவிடுகின்றன.
பல மனநோய்களின் அறிகுறிகள் வெளிப்படும் பருவம் இதுதான். இந்த வயதில் காணப்படும் மாற்றங்களில் பெற்றோர், சமூகம் மற்றும் கல்வியின் பங்குக்குச் சமமாக மரபணுக்களும், முக்கிய அங்கம் வகிக்கின்றன. பதின் பருவத்தினரின் சாதாரண மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான், அவர்களிடம் உள்ள அசாதாரண மாற்றங்களையும் தேவைகளையும் அறிந்துகொள்ள முடியும். அதற்கு பதின் பருவத்தினருடன் தொடர்பில் உள்ள அனைவருடைய புரிதலும் மேம்பட்டிருக்க வேண்டும்.
வளரிளம் பருவம் சில பிரச்சினைகள்
l மற்றவர்களிடம் அனுசரித்துப்போவதில் உள்ள மாற்றங்கள்,
l எதிர்பாலின ஈர்ப்பு, காதல், பாலியல் தடுமாற்றங்கள், தவறான நம்பிக்கைகள்
l தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள்
l போதைப் பொருள் பழக்கம்
l படிப்பில் நாட்டமின்மை, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தல்
l மன அழுத்தம்
l சமூக வலைதளங்களின் தாக்கம்
l சினிமா தாக்கம்
l சமூக விரோதச் செயல்பாடுகள்
l ஆழ்மனப் பிரச்சினைகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
l வளரிளம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகள்
(அடுத்த வாரம் தனித்தன்மையா? தடம் மாறுதலா? )
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

நன்றி-தஹிந்து

Thursday, September 03, 2015

தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்? - டாக்டர் கு.கணேசன்

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்!
காது கேட்பது எப்படி?
காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்கிறது. நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது. இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன.
அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.
சமநிலை காவலன்
உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டுவிதமாக இருக்கிறது.
மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும்.
இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்தச் சங்கிலிவினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படுமானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.
தலைச்சுற்றல் என்பது என்ன?
கிறுகிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்கிறார்கள்.
இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். என்றாலும், இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பது ஓர் ஆறுதல்.
மூன்று வகை
மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.
மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகிவிடும்.
தீவிர வகை: இந்த வகைதான் மோசமானது. தலைச்சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
மினியர் நோய்
உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் வருவது ஒரு வகை. இது தூங்கும்போதுகூட வரும். இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.
ஒரு திசை தலைச்சுற்றல்
சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysmal Positional Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறிப்பாக, இந்த வகைத் தலைச்சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைசுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிறவர்களில், பெரும்போலோருக்கு இந்த வகை தலைசுற்றல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
உட்செவி நரம்புப் பிரச்சினை
ஜலதோஷம் பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் உண்டாகும். நடுக்காதில் சீழ் வைக்கும்போது, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
இதர காரணங்கள்
பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 சதவீதம் பேருக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத்துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.
பரிசோதனைகள் என்ன?
ஒருவருக்கு முதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்துகொள்ளமுடியும். மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை இது தொல்லை தரும்போது பயப்படாமல் இருக்கலாம்.
பொதுவாக, தலைச்சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனை உதவக்கூடும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.
சிகிச்சை என்ன?
தலைச்சுற்றலுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளதால், முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை பெற வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையைப் போக்க, இப்போது நல்ல மருந்துகள் உள்ளன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதால், தலைச்சுற்றல் சரியாகிறது. சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனாலும் தலைச்சுற்றல் கட்டுப்படும்.
மினியர் நோய்க்குக் காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இப்போது இதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. இதில் குணமடையாதவர்களுக்கு அறுவைச் சிகிச்சை உதவுகிறது.
பயிற்சிகள் உதவும்
இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ உள்ளவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் மட்டுமே தலைச்சுற்றலைத் தடுக்க முடியாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் முக்கியம்.
படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்துகொண்டு கழுத்துத் தசைகளுக்கும் தோள்பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகை தலைச்சுற்றலைத் தடுக்க உதவுகின்றன. இவற்றைக் காது மூக்கு - தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்துவந்தால், தலைச்சுற்றல் விடைபெற்றுக்கொள்வது உறுதி.
தடுப்பது எப்படி?
l உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
l அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
l சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
l ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
l புகைபிடிக்காதீர்கள்.
l மது அருந்தாதீர்கள்.
l போதை மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
l தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கமுடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழுந்திருங்கள்.
l எழுந்தவுடனேயே நடந்து செல்ல வேண்டாம்.
l படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால், தலைசுற்றல் ஏற்படாது.
l படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.
l தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
l உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
l அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்கமுடியும்.
l வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே பயன்படுத்துங்கள்.
l இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
l அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
l ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
l மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள். அப்படிச் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் சாப்பிடுங்கள்.
l மன அழுத்தத்தைத் தவிருங்கள்.
l வாகனத்தை ஓட்டாதீர்கள். ஆபத்தான இயந்திரங்களை இயக்காதீர்கள்.
l ஆண்டுக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

Tuesday, August 04, 2015

அடிக்கடி களைப்பு ஏற்படுவது ஏன்? மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. கடுமையான உழைப்புக்குப் பிறகு உடலில் களைப்பு ஏற்படுவது இயற்கை. மாலையில் அல்லது இரவில் போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டால், காலையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் களைப்பு மறைந்து, உடல் புத்துணர்ச்சியைப் பெற்றுவிடும். மறுநாள் உழைப்புக்கு உடல் தயாராகிவிடும்.
ஆனால், சிலருக்கு எந்த நேரமும் களைப்பாக இருக்கலாம்; அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்படலாம்; உடல் தளர்ந்து, உள்ளம் உற்சாகம் இழந்துபோகலாம். அப்படியானால், அது சாதாரணக் களைப்பு அல்ல! உடலில் அல்லது உள்ளத்தில் உள்ள பிரச்சினையின் வெளிப்பாடு; அறிகுறி!
களைப்பைப் பற்றி சொல்லும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். ஒரு வேலையைச் செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறது; உற்சாகம் இல்லாமல் இருக்கிறது; உடல் சக்தியை இழந்த மாதிரி இருக்கிறது; உடலில் சக்தியே இல்லாததுபோல் இருக்கிறது; ஆர்வமில்லாமல் இருக்கிறது; அசதியாக இருக்கிறது; கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. இப்படியாகத்தான் களைப்பை வெளிப்படுத்துவார்கள்.
காரணம் என்ன?
களைப்புக்கு உடல் சார்ந்த காரணங்களும் உண்டு; உள்ளம் சார்ந்த காரணங்களும் உண்டு. ஒரு சிலருக்கு இந்த இரண்டு விதக் காரணங்களும் சேர்ந்தே இருக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில பேருக்கு, முதலில் உடல் சார்ந்த காரணங்களால் களைப்பு ஏற்படும். அதற்குத் தீர்வு கிடைக்கத் தாமதமாகும்போது உள்ளம் சார்ந்த காரணங்களும் சேர்ந்துகொள்ளும்.
களைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உடல் சார்ந்த களைப்பு என்றால், பகலில் தெரிகிற களைப்பைவிட மாலையில் களைப்பு சற்று அதிகமாகவே தெரியும். உள்ளம் சார்ந்த களைப்பு, நாள் முழுவதும் தொல்லை தரும். இது ஒரு பொதுவான மருத்துவக் கருத்து. என்றாலும், அவரவர் காரணத்தைப் பொறுத்துக் களைப்பின் தன்மை, அளவு, நேரம், தீவிரம் அமையும்.
முறையற்ற உணவுப் பழக்கம்
கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், துரித உணவு வகைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது களைப்பை வரவேற்கும். காரணம், இந்த உணவு வகைகளில் வைட்டமின்களும் தாதுச் சத்துகளும் குறைவு. இது ஊட்டச்சத்துக் குறைவுக்கு வழிவகுக்கும். மேலும், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால், உடல் மந்தமாகவே இருக்கும்; தூக்கக் கலக்கமாகவே இருக்கும்.
ரொட்டி, கேக் போன்ற பேக்கரி உணவு வகைகளில் ‘குளூட்டன்’ எனும் புரதம் உள்ளது. இது ஒவ்வாமையாக மாறினால் ‘சிலியா’ நோயை (Coeliac disease) ஏற்படுத்தும். அப்போது களைப்பு பிரதானத் தொல்லையாக இருக்கும். நேரம் தவறிச் சாப்பிடும் உணவுப் பழக்கம் நீடிக்கும்போது செரிமானம் குறையும். அப்போது உணவுச் சத்துகள் உடலில் சேராது. இதுவும் களைப்புக்குப் பாதை அமைக்கும்.
ஊட்டச்சத்துக் குறைவு
உடல் உற்சாகமாக உழைப்பதற்குக் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாச் சத்துகளும் தேவையான அளவில் தரும் சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டியது அவசியம். ஆனால் வறுமை, விரதம், உடல் எடையைக் குறைப்பதில் / ஒல்லியாவதில் விருப்பம் போன்ற காரணங்களுக்காகப் பலரும் உணவு சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால் உடலுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. இது களைப்புக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும். குறிப்பாக இரும்புச் சத்து, வைட்டமின் பி12, வைட்டமின்- டி, ஃபோலிக் அமிலம் போன்றவை குறைய ஆரம்பித்ததும் களைப்பு தலைகாட்டும்.
ரத்தசோகை
ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுகிற நோய்களில் மிக முக்கியமானது ரத்தசோகை. ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ‘ரத்தசோகை’ என்கிறோம். இன்றைய தினம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள் என்று வயது வேறுபாடின்றிப் பாதிக்கிற நோய் இது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு மட்டுமன்றி, முறையற்ற மாதவிலக்கு காரணமாக வும் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்த சோகையின் ஆரம்ப அறிகுறி களைப்பு.
தொற்றுநோய்கள்
எந்த ஒரு தொற்றுநோயும் களைப்பை ஏற்படுத்தும். தடுமம், ஃபுளூ காய்ச்சல் போன்ற சாதாரணத் தொற்றுகளில் தொடங்கி மலேரியா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை, காச நோய் என்று பல விபரீத நோய்கள்வரை களைப்பை ஏற்படுத்து வதில் முன்னிலை வகிக்கும். ஆனால், இவை எல்லாமே தற்காலிகமாகவே களைப்பை ஏற்படுத்தும். நோய் குண மானதும் களைப்பும் மறைந்துவிடும்.
தூக்கமின்மை
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலருக்கும் தூங்கும் நேரம் குறைந்துவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி சராசரியாக 5 மணி நேரமே தூங்குகிறார்கள் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் பகலில் களைப்பு ஏற்படுவது இயல்பு. குறட்டை விடுதல், தூக்கத் தடை (Obstructive Sleep Apnea), அதீதத் தூக்கம், தூக்கக் குறைவு நோய், வேலை நேர மாறுதல்கள், இரவில் நெஞ்செரிச்சல், புராஸ்டேட் வீக்கம் போன்ற தொல்லைகளைக் கொண்டவர்களுக்கு, இதுபோலத் தூக்கம் குறைந்து களைப்பு உண்டாகிற வாய்ப்பு அதிகம்.
மருந்துகளின் பக்கவிளைவு
தடுமத்துக்குத் தரப்படும் மருந்துகள், அரிப்பு மருந்துகள், தூக்க மருந்துகள், மன அழுத்த மாத்திரைகள், மன அமைதியூட்டிகள், போதை மாத்திரைகள், ரத்த அழுத்த மாத்திரைகள், ஸ்டீராய்டுகள் போன்ற பலதரப்பட்ட மாத்திரை மருந்துகளின் பக்கவிளைவாகவும் களைப்பு ஏற்படும்.
நீரிழந்த உடல்
ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுகளின் அளவு எப்போதும் சரியாக இருக்க வேண்டும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, வெயில், அதிக வியர்வை, வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி, நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற பல காரணங்களால் உடலில் நீரிழப்பு ஏற்படும். அப்போது களைப்புதான் மற்ற அறிகுறிகளைவிட முன்னிலை வகிக்கும்.
உளவியல் காரணங்கள்
தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், கோபம், பொறுமையின்மை, பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் களைப்பு ஏற்படுகிறது.
மற்ற காரணங்கள்
தைராய்டு சுரப்புக் குறைவு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், நுரையீரல் நோய், புற்று நோய், மூட்டழற்சி நோய், நார்த்திசு அழற்சி வலி (Fibromyalgia) போன்ற பல நோய்களிலும் களைப்பு தலைதூக்குவதுண்டு. புற்று நோய்க்கு மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை தரப்படும்போது களைப்பு ஏற்படுவதுண்டு. முதுமை, கர்ப்பக் காலம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகைபிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் களைப்பை வரவேற்பவையே.
நாட்பட்ட களைப்பு
ஒருவருக்குக் களைப்பு ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதை ‘நாட்பட்ட களைப்பு’ (Chronic fatigue syndrome). என்கிறோம். இவர்களுக்குக் களைப்பு கடுமையாக இருக்கும். தசைவலி, மூட்டுவலி, தலைவலி, நிணநீர்ச் சுரப்பிகளில் வலி, தொண்டை வலி, கவனக்குறைவு போன்ற பல அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இதற்கான காரணம் மருத்துவர்களுக்கே இன்னும் தெளிவாகப் புரியவில்லை. எனவே, அடிப்படை நோய்க்குச் சிகிச்சை அளிக்கமுடியவில்லை; நோயாளி கூறும் அறிகுறிகளைப் போக்குவதற்கு மட்டும் சிகிச்சை அளிக்கிறார்கள்.
பரிசோதனை என்ன?
களைப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதால், இதற்கென்று தனிப்பட்ட பரிசோதனை எதுவும் இல்லை. களைப்புடன் சேர்ந்து காணப்படும் மற்ற அறிகுறிகளை வைத்து, அடிப்படை நோய் எது எனத் தீர்மானிக்கப்படும். அதற்கேற்பப் பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படும். பொதுவாக, ரத்தஅணுப் பரிசோதனைகள், ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்க்கான பரிசோதனைகள், ரத்த அயனிகள் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, எக்கோ உள்ளிட்ட ‘முழு உடல் பரிசோதனைகள்’ மூலம் களைப்புக்குக் காரணம் தெரிந்துகொள்வது வழக்கம்.
மேலும், இவர்களுக்கு உளவியல் சார்ந்த பரிசோதனைகளும் உளவிய லாளரின் ஆலோசனைகளும் தேவைப் படும். என்றாலும், நடைமுறையில் மூன்றில் ஒருவருக்குக் களைப்புக்கான காரணம் தெரிவதில்லை.
தடுப்பது எப்படி?
களைப்புக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறுவதுதான் சரி. அப்போதுதான் களைப்பு மறுபடியும் தொல்லை தராது.
அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். முடியாதவர்கள் வார இறுதி நாட்களிலாவது ஓய்வு எடுக்க வேண்டும்.
உடல் பருமனாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.
மேற்கத்திய உணவு வகைகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள்.
தினமும் காலையில் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். முக்கிய வேலைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துச் செய்வதும், நன்கு திட்டமிட்டு, நேர மேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்யவேண்டியதும் முக்கியம். காரணம், தினமும் அவசர அவசரமாகவும் பரபரப்பாகவும் வேலை செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டால், உடல் விரைவிலேயே களைப்பு அடைந்துவிடும்.
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் பணிபுரிபவர் களுக்கு நீரிழப்பு ஏற்படுவது கோடைக் காலத்தில் வெளியில் தெரியாது. ஆனால், களைப்பு தெரியும். அவர்களும் தேவைக்கு ஏற்பத் தண்ணீர் அருந்தினால்தான் களைப்பு நீங்கும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்றால், இயற்கைப் பழச்சாறுகளை அருந்துங்கள். செயற்கைப் பழச்சாறுகள் வேண்டாம்.
காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் களைப்பு ஏற்படுகிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.
புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
மது அருந்த வேண்டாம்.
மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். மனக் கவலை இருக்கும்போது உங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆசைகளுக்கு ஓர் எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். பிறருடன் வாதிடுவது, சண்டை போடுவது போன்றவற்றைத் தவிருங்கள். பாதுகாப் பான முறையில் உங்கள் உரிமைகளைப் பெறுவதற்குப் பழகிக்கொள்ளுங்கள். இம்மாதிரி பழக்கங்கள் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்; களைப்பையும் தடுக்கலாம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து