Showing posts with label வர்த்தகம். Show all posts
Showing posts with label வர்த்தகம். Show all posts

Sunday, November 15, 2015

சிறுதானியங்கள் கொடுத்த வாழ்க்கை


பதினெட்டு வருடங்களாக ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்விப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர் பிரதாப சந்திரன். குறைந்த ஊதியம் என்றாலும் மனநிறைவான வேலை அது என்றவர், தான் தொழில் முனைவோர் ஆன வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.


சொந்த ஊர் மதுரை. வணிகவியல் பட்டம், கூட்டுறவு மேலாண்மை பட்டயம் மற்றும் பல பட்டயப் பயிற்சிகளையும் கையில் வைத்துள்ளார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணிப் பொறி மையப் பொறுப்பாளராக பணி யாற்றியவர். அந்த வேலையை தொடர முடியாத நிலையில் வெளியில் வந்து பல்வேறு வகைகளில் சுய தொழில் முயற்சிகளில் இறங்குகிறார்.


சுயமாக தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சிகளில் அவர் கண்டுகொண்டது... முதலீடு அதிகம் தேவை, அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும். இவை எவற்றையும் செய்வதற்கு அவருடைய பொருளாதார நிலைமை உதவவில்லை.


சுலபமாக சொந்த தொழில் தொடங்குபவர்களின் வாய்ப்பாக இருப்பது சிறு உற்பத்திகள்தானே... அதிலிருந்து தொடங்குகிறார்.. அப்படியான ஒரு மனநிலையில் சிறு முதலீட்டைக் கொண்டு ஊறுகாய் தயாரிப்பதில் தொடங்கியது அவரது இன்னொரு வாழ்க்கை.


எத்தனை நாட்களுக்குத்தான் ஊறுகாய் தயாரித்துக் கொண்டிருக்க முடியும். அதே காலகட்டத்தில் இவரது ஆர்வம் இயற்கை விளைபொருட்களை வாங்கி விற்பது என்பதை நோக்கி நகர்ந்தது. இதற்காக விடுமுறை நாட்களில் இயற்கை வேளாண்மைப் பொருட்கள் விற்பனையகம், பயிற்சிகள், அது தொடர்பான கூட்டங்களுக்குச் சென்று தனது ஆர்வத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டு இந்த உணவு பொருள் தயாரிப்பில் இறங்குகிறார்.


தற்போது மாதத்துக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைக்கும் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சிறிய முதலீட்டைக் கொண்டு இந்த தயாரிப்பில் இறங்கினேன். சொந்தமாக இயந்திரங்கள் கிடையாது. வேலைக்கு ஆட்கள் கிடையாது. நானே எல்லா வேலைகளையும் பார்ப்பேன்.


மாற்று உணவு தானியங்கள் எளிதாக கிடைக்கவில்லை என்பதால்தான் மக்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை. நான் அவற்றுக்கு மட்டும் தனிச்சிறப்பாக கவனம் செலுத்தினேன்.


கம்பு, திணை, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு என்ன என்ன உணவு வகைகளை செய்யலாம் என்று பல உணவுக் கண்காட்சிகளுக்கு சென்று செய்து காட்டுவேன். இப்படியாக விற்பனை தொடங்கியது. தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு எனது அபூர்வா உணவுப் பொருட்கள் தயாரிப்புகளை தூக்கிக் கொண்டு அலைந்திருக்கிறேன்.
இதன் மூலம் பல இயற்கை பொருள் ஆர்வலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்பும், விற்பனை ஆதரவும் கிடைத்தது. விற்பனையும் அதிகரிக்கத் தொடங் கியது.


பல விற்பனை அங்காடிகளிலும் கேட்கிறார்கள். என்னோடு சேர்த்து ஐந்து நபர்கள் பணியாற்றுகிறோம். சிறு தானிய உணவு வகைகளிலேயே தற்போது பல வெரைட்டிகளைக் கொடுக்கிறேன். குறைந்த லாபம், அதிக விற்பனை இலக்கு என்பதைத்தான் தொழிலில் கடைப்பிடிக்கிறேன். உற்பத்தி யை அதிகப்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
அப்போது வங்கிக் கடன் கிடைக்க வில்லை. நானும் முயற்சிக்கவில்லை. தற்போது சில வங்கிகளிலிலிருந்தே கடன் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.


அடுத்த கட்டமாக தொழிலை வளர்க்க அந்த கடனுதவிகளை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதற்கென தனியாக இடம் பார்த்து, இயந்திரங்கள் சொந்தமாக வாங்கி கொஞ்சம் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.
அப்போதும் இதே மனநிறைவோடு வேலை செய்ய வேண்டும். சிறு தானியங்களையும் தினசரி உணவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் எங்களைப் போன்ற சிறு உற்பத்தியா ளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என்று முடித்தார். நியாயமான ஆசைதான்.




எம்.பிரதாப சந்திரன், அபூர்வா புட் புராடக்ட்ஸ்

thanks the hindu

Saturday, November 14, 2015

டிஸ்யூ பேப்பர் உற்பத்தி செய்து ஆண்டு வர்த்தகம் 70 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் தனி நபர்

  • ஸ்ரீரோத்கர் - ஃபெதர்டச் டிஸ்யூஸ்

    ஸ்ரீரோத்கர் - ஃபெதர்டச் டிஸ்யூஸ்
சொந்த தொழில் செய்ய யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. இன்னொரு இடத்தில் வேலை செய்து வருமானத்துக்கு வழி செய்வதை விடவும், சொந்த தொழிலில் கிடைக்கும் சுதந்திரம் எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்யும்.

ஆனால் ரிஸ்க் அதிகம் என்பதை உணர்ந்து கொள்வதால் அந்த முடிவை மேற்கொள்வதில்லை. அப்படி ரிஸ்க் எடுத்து வெற்றிகரமாக நிற்பவர்களை அறிமுகப்படுத்தும் சின்ன அங்கீகாரம்தான் இந்த பகுதி.
ஸ்ரீரோத்கர். பூர்வீகம் திருநெல்வேலி வசிப்பது கோயம்புத்தூர். படித்தது சென்னை. பொறியியல் பட்டம் படித்து முடித்ததும் சொந்த தொழிலா? வேலையா? என்கிற நிலைமையில் சொந்த தொழில் என முடிவு செய்கிறார்.

சொந்த தொழில் என்றால் எந்த மாதிரியான தொழில் என தேடுகிறபோது டிஸ்யூ பேப்பர் தொழிலுக்கான சந்தையை புரிந்து கொண்டு அதை தேர்ந்தெடுக் கிறார்.

கோயம்புத்தூர் சார்ந்த தொழிலும் இல்லாமல், திருப்பூரை மையமாகக் கொண்ட பின்னலாடை சார்ந்த தொழிலையும் தேர்ந்தெடுக்காமல் இந்த தொழிலை தேர்ந்தெடுக்க காரணம் கேட்டோம். “நான் சொந்த தொழில் செய்யலாம் என தேடுகிறபோது, எனது நண்பரின் அப்பா இந்த தொழிலை செய்து வந்தார். ஆனால் அவரால் இதை தொடர முடியவில்லை. அவரது முதன்மை தொழிலாக ஓட்டல் தொழில் இருந்தது.

அதன் தேவைகளுக்கு ஏற்ப இந்த தொழிலை நடத்தி வந்ததால் இதில் நஷ்டத்தை சந்தித்து வந்தார்.அதை விற்பதற்கு முன் வந்ததால் இந்த தொழிலை வாங்கி சந்தையை விரிவுபடுத்தினால் லாபகரமாக இயக் கலாம் என அதை வாங்க முடிவு செய்தேன். ஆனால் உடனே வாங்காமல் அந்த தொழில் குறித்த ஆய்வுகளில் இறங்கினேன்.

தமிழ்நாட்டில் டிஸ்யூ பேப்பர் உற்பத்தியாளர்கள் குறைவு. வட மாநிலங்களில் இருந்துதான் அதிகமாக வருகின்றன. சில உற்பத்தியாளர்கள் சென்னையை மையமாகக் கொண்டு இருந்து வருகின்றனர்.

எனவே கோயம்புத்தூர் மற்றும் மேற்கு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சந்தை வாய்ப்பு இருந்தது. எனவே முதலில் சந்தையை விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கினேன்.

ஒன்றரை வருடங்கள் இந்த தொழிலைக் கற்றுக் கொண்டு, ஓரள வுக்கு சந்தையை புரிந்து கொண்ட பிறகு இந்த யூனிட்டை வாங்கினேன்.
அந்த உற்பத்தி யூனிட் வாங்குவதற்கான முதலீடு 7 லட்சம் ஆனது. அதற்கு பிறகு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தொழில்கடன் மூலம் உற்பத்தியை ஆரம்பித்தேன் என்று தனது தொழில் தொடங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.


தற்போது ஆண்டு வர்த்தகம் 70 லட்சம் வரை வர்த்தகம் செய்து வருகிறார். அடுத்த இரண்டு வருடங்களில் ஆண்டுக்கு ஒரு கோடி வர்த்தகம் என்கிற இலககு வைத்திருக்கிறார். இந்த தொழில் உடன் ஒரு முறை பயன்படுத்தும்
‘நான் ஓவன்' பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான வர்த்தகமும் செய்கிறார்.

உற்பத்தி தவிர மூலப்பொருட்கள் வாங்குவதிலும், சந்தையை தக்க வைத்துக் கொள்வதிலும் கவனமான இருந்தால்தான் இந்த தொழிலில் நிற்க முடியும். நான் எனது அனுபவத்தில் கற்றுத் தெரிந்து கொண்டது இது என்று குறிப்பிடும் ஸ்ரீரோத்கர் எனது பெற்றோர்களின் ஊக்கமும் வெற்றிக்கு காரணம் என்கிறார்.

தமிழ்நாட்டை விட கேரளாவில் டிஸ்யூ பொருட்களின் பயன்பாடு அதிகம். அங்கு வீடுகளில்கூட டிஸ்யூ பேப்பர்கள் பயன்படுத்துகின்றனர்.
எனவே தற்போது கேரள சந்தையில் சில்லறை விற்பனையில் கவனம் செலுத்துகிறேன் என்று தனது தொழிலின் அடுத்த கட்ட நகர்வு குறித்து நம்பிக்கை பொங்க பேசுகிறார்.

நன்றி - த ஹிந்து