Showing posts with label யாகாவாராயினும் நாகாக்க -திரை விமர்சனம்:. Show all posts
Showing posts with label யாகாவாராயினும் நாகாக்க -திரை விமர்சனம்:. Show all posts

Wednesday, July 01, 2015

யாகாவாராயினும் நாகாக்க -திரை விமர்சனம்:

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் ஒரு கொலையுடன் தொடங்குகிறது படம். அந்தக் கொலையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்ட நபர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை முன்னும் பின்னும் நகரும் திரைக்கதை மூலம் சொல்கிறார் புது இயக்குநர் சத்திய பிரபாஸ்.
செல்வாக்கும் அதிகாரமும் மிக்க செல்வந்தர் வீட்டுப் பிள்ளை களோடு ஒரு நடுத்தரக் குடும்பத் தின் பிள்ளை நட்பு பாராட்ட முடியுமா? முடியுமென்றால் அந்த நட்பு எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும் தாக்குப் பிடிக்குமா என்பதை நிழலுலகப் பின்னணியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.
ஆதி, கார்த்திக், ஷ்யாம், சித்தார்த் ஆகிய நால்வரும் கல்லூரி நண்பர்கள். இவர்களில் ஆதி நடுத்தர வர்க்கத் தைச் சேர்ந்தவர். மற்ற மூவரும் மிகவும் வசதி படைத்தவர்கள். கடைசித் தேர்வை எழுதிவிட்டால் நட்பைக் கொண்டாட முடியாது என்று ஹால் டிக்கெட்டைக் கிழித்தெறியும் அளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
ஆதி, கயல் (நிக்கி கல்ராணி) என்னும் பெண்ணைக் காதலிக்கிறார். தயங்கித் தயங்கித் தன் காதலைச் சொல்ல முயல, கயலோ அதிரடியாகத் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். வீட்டில் அக்கா வுக்குக் கல்யாணம் நெருங்க அந்த வேலைகளில் ஆதி மும்முரமாகிறார். அப்போதுதான் அந்தச் சம்பவம் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஆதியின் நண்பர்கள் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குச் செல்ல, அங்கே தன் காதல ருடன் வந்திருக்கும் ரிச்சா பலோட்டை நண்பர்கள் போதையில் சீண்டுகிறார் கள். தட்டிக் கேட்கும் காதலருக்கும் அவர் களுக்கும் சண்டை வருகிறது. இவர்கள் தகாத வார்த்தையைப் பேசிவிட, சண்டை முற்றுகிறது. தாமதமாக வரும் ஆதி, நடந்ததை அறியாமல் ரிச்சாவின் காதலரைத் தாக்குகிறார். ஆதியின் நண்பர்களில் ஒருவரான கார்த்திக் போலீஸ் கமிஷனரின் மகன் என்பதால் போலீஸார் ரிச்சாவின் காதலரைக் கைதுசெய்ய, ரிச்சா எரிமலையாக வெடிக்கிறார்.
போலீஸ் உதவியுடன் தப்பித்துச் செல்லும் நால்வருக்கும் அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல என்பது தெரி கிறது. அவர் மும்பையைத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் நிழலுலக தாதாவான முதலியாரின் (மிதுன் சக்கரவர்த்தி) மகள். இது தெரியவந்ததும் நண்பர்கள் தலைமறைவாகிறார்கள். ஆனால் கல்யாண வேலைகளால் ஆதி தனியே மாட்டிக்கொள்கிறார். ரிச்சா காணாமல் போவதால் பிரச்சினை மேலும் சிக்கலாகிறது.
ஆதியும் அவர் நண்பர்களும் முதலியாரின் மகளும் என்னவானார்கள்?
படத்தின் ஈர்ப்பான அம்சங்கள் திரைக்கதையும் படத் தொகுப்பும். நிழலுலகமும் குற்றப் பின்னணியும் கொண்ட ஒரு த்ரில்லர் கதையில், நட்பு, காதல், குடும்ப சென்டிமெண்ட் ஆகிய மூன்று அம்சங்களையும் கலந்த விதம் தேர்ந்த மாஸ் மசாலா ரசனையுடன் இருக்கிறது. சம்பவங்களை முன்னும் பின்னுமாகக் கலைத்துப்போடும் திரைக் கதையைக் கவனமாகத் தொகுத் திருக்கும் படத் தொகுப்பாளர் சபு ஜோசப்பைத் தாராளமாகப் பாராட்டலாம்.
பல காட்சிகளில் இருக்கும் சினிமாத் தனத்தையும் வன்முறையையும் கட்டுப் படுத்தியிருந்தால் யதார்த்த த்ரில்லர் படங்களில் ஒன்றாக இந்தப் படம் மாறியிருக்கும். வணிக சினிமாவுக்கான வரையறைகளில் கவனமாகச் செயல் பட்டிருப்பதால் மசாலா படம் பார்க்கும் உணர்வைப் பல இடங்களில் தவிர்க்க முடியவில்லை.
அடுத்தடுத்த திருப்பங்கள் மூலம் படம் வேகமாக நகர்ந்தாலும் சில ஓட்டைகள் நெளியவைக்கின்றன. நாயகன் ஒரே நாளில் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து, வயிற்றில் கத்திக் குத்து வாங்கி, அடிபட்ட சுவடு துளியும் தெரியாமல் மும்பைக்குத் திரும்புகிறான். உண்மை யான கொலையாளி எந்தத் துணையும் இல்லாமல் நாயகனையும் பசுபதியையும் பட்டப் பகலில் குத்திவிட்டுச் செல்ல முடிகிறது.
காணாமல்போன பெண் என்ன ஆனார் என்னும் முடிச்சு அவிழும் இடம் நம்பகத்தன்மையோடு உருப்பெற வில்லை. அதன் பிறகு நடக்கும் நீளமான சண்டை பொறுமையை அடித்து நொறுக்குகிறது. என்றாலும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு காரணமாக ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவத்தைத் தந்துவிடுகிறது இந்தப் படம்.
திரையில் காட்டப்படும் ‘யாகாவா ராயினும்…’ குறளில் எழுத்துப் பிழை (இழுக்குப்பட்டு - இழுக்கப்பட்டு). இது படக் குழுவினரின் கண்ணில் படாமல் போனது எப்படி?
ஆதி, அவரது நண்பர்களாக நடித்திருப்பவர்கள், மிதுன் சக்கரவர்த்தி, பசுபதி, பிரகதி ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் வரும் ரிச்சா பலோட் அழுத்தமாகத் தடம் பதிக்கிறார். நாயகி நிக்கி கல்ராணிக்கு வேலை அதிகம் இல்லை. எனினும் புயலுக்கு நடுவில் இதமான தென்றல்.
காட்சிக்கான மனநிலையை உணர்த் தும் விதமாக ஒளிப்பதிவு செய்திருக்கும் சண்முகசுந்தரம், தேறிவிடும் பாடல் களையும் பொருத்தமான பின்னணி இசையையும் தந்திருக்கும் ப்ரஷன் பிரவின் ஷியாம் ஆகியோர் திறமையான அறிமுகங்கள்.
நிழலுலகை மையமாகக் கொண்ட பார்முலா கதையைப் புதிய புட்டியில் அடைக்கும் முயற்சியில் ஓட்டைகளை அடைத்து, நீளத்தைக் குறைத்திருந்தால் ஈர்ப்பு கூடியிருக்கும்.


நன்றி - த இந்து