Showing posts with label மும்பை போலீஸ் நிலையத்தில் தம்பதிக்கு நேர்ந்த கதி!. Show all posts
Showing posts with label மும்பை போலீஸ் நிலையத்தில் தம்பதிக்கு நேர்ந்த கதி!. Show all posts

Thursday, November 05, 2015

மும்பை போலீஸ் நிலையத்தில் தம்பதிக்கு நேர்ந்த கதி!

மும்பை அந்தேரி போலீஸ் நிலையத்தில் இளம் ஜோடியினரை,  போலீசார் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ இணையங்களில் வைரலாகியுள்ளது.  



ஆண் போலீசாருடன், பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் அந்த ஜோடியை ரத்தம் வரவர அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ பல்வேறு இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் மும்பைவாசிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த தொண்டு நிறுவன ஊழியர் குலாம் மக்போல் ஷேக் என்பவரே,  இதனை தனது மொபைல் கேமராவில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், " அந்த இளம் ஜோடியினர் காவல் நிலையத்திற்குள் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக, அந்த காவல் நிலையத்திற்கு வெளியே சண்டையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். அதனை பார்த்த அந்த காவல் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் அவர்கள் அருகே வந்து அந்த பெண்ணிடம், " நீ துன்புறுத்தப்படுகிறாயா? " எனக் கேட்டார். 

உடனே அந்த பெண்,  'இது எங்களது சொந்த விஷயம்... போலீஸ் தலையிடுவதை விரும்பவில்லை' எனக் கூறினார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த கான்ஸ்டபிள், அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து சென்றார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் காவல் நிலைய சூழல் அந்த இளம்பெண்ணை அச்சமூட்டவே, அவர் பயந்து கத்த தொடங்கினார். 

இதனையடுத்து அங்கு இருந்த போலீஸார் அந்த பெண்ணை அடிக்க தொடங்கினர். ஆண் காவலர்கள் மட்டுமல்லாது பெண் காவலர்களும் சேர்ந்துகொண்டு அடித்து உதைத்தனர். இதனையடுத்து அந்த பெண் தனது ஆண் நண்பரிடம் உதவி கேட்டு அலறவே, அவர் ஓடிவந்துள்ளார். உடனே போலீஸார் அவரையும் பிடித்து சரமாரியாக அடித்தனர். அதே நேரத்தில் அந்த பெண்ணும் அடி தாங்க முடியாமல் அலறினார். ஆனால் யாருமே கருணை காட்டவில்லை. அவர்கள் இருவரையும் சட்டவிரோதமாக லாக் அப்பில் அடைத்தனர்" என்று வேதனையுடன் கூறினார். 

இந்த வீடியோ இணையங்களில் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து காவல்துறை மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுபோன்ற சம்பவம் கடந்த ஒரு மாதத்தில் நடப்பது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் பாந்த்ரா காவல் நிலையத்தில் இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை,  " பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" என சொல்லி, காவல்ர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விகடன்