Showing posts with label மிடில் கிளாஸ் ஃபேமிலி - சேமிப்பு. Show all posts
Showing posts with label மிடில் கிளாஸ் ஃபேமிலி - சேமிப்பு. Show all posts

Wednesday, October 17, 2012

மிடில் கிளாஸ் ஃபேமிலி - சேமிப்பு- எப்படி?

முதலீடு முக்கியம்!

உங்கப் பணத்தைக் குட்டி போட வைக்கும் படு சுட்டி டிப்ஸ்!

ஒரு நல்ல இல்லறத்தலைவி எப்படி இருக்க வேண்டும்? இதோ நம்ம வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சார்ந்த
சொற்காத்து சோர்விலாள் பெண்

என்ற குறளை இன்றையச் சூழ்நிலையில் கீழ்கண்ட படிதான் பொருள் கொள்ள வேண்டும்.
தனது சொத்துக்களைப் பாதுகாத்து, தனது கணவனின் சொத்துக்களையும் வளர்த்து, குடும்பத்தின் எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டிய பாதுகாப்பையும் செய்துகொள்ள சோர்வில்லாமல் செயல்படுபவளே நல்ல குடும்பத்தலைவி’.
முதலீடுகளை நிர்வகிப்பது சிரமமா?

படிப்பு, குழந்தை வளர்ப்புப் போல முதலீடுகளும் ஒரு சிரமமான வேலைதான். இதில் நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு, முறையாகச் செயல்பட்டால் சாதனைப் படைக்கலாம். கூடவே வாழ்க்கைக்கு ஓர் இனிய சுவையையும் சேர்க்கலாம். வெற்றியில் வரும் த்ரில் ஒலிம்பிக்கில் மட்டும்தானா? முதலீட்டிலும் அதைக் காணமுடியும். முதலீடுகளைச் செய்வதும், நிர்வகிப்பதும் ஒரு சுவையான சவால்தான்!
ஒரு பெண்ணின் சாதனை!

இது நடந்தது 1978-1985ம் ஆண்டு காலத்தில். என் நண்பர் மும்பைக்கு (அப்போது பாம்பே) பணிமாற்றாலாகிப் போனார். பள்ளி இறுதிவரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி, மொழி தெரியாத புது இடத்தில் கணவரையும் குழந்தைகளையும் ஆபீஸுக்கும் பள்ளிக்கும் அனுப்பி விட்டு, பொழுது போகாமல் தவித்தாள். நண்பர் ஆஃபிஸ் முடிந்து வரும் போது கொண்டுவரும் செய்தித்தாள்களை பொழுதுபோக்குக்காகவும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் படிக்க ஆரம்பித்தார்.
அந்தக் காலக் கட்டத்தில் இந்திய அரசின் அப்போதைய கொள்கையின் படி இந்தியாவில் செயல்பட்டு வந்தப் பல அயல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளைப் பல இந்தியருக்கு விற்றன. ஃபெராஇஷ்யூஸ் என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்டவை அந்தப் பங்கு வெளியீடுகள். அன்றைக்குப் பங்குகளை வெளியிட்ட நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்து விற்றப் பொருட்களும் பிரபலமானவை. உதாரணத்திற்குபிலிப்ஸ்‘. அன்றைக்கு அந்த விலையில் அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்கியவர்கள் பெரும் லாபம் பார்த்தார்கள். இந்தத் தகவல்களை நாளிதழ்களில் படித்த அவர் அந்தப் பங்குகளை தானும் வாங்க முயன்றார். அந்தப் பங்குகளை வாங்குவதற்குண்டான நடைமுறைகள் மிகவும் நச்சுபிடித்தவையாக இருந்தன. ஆனால், வேலையேதும் இல்லாத என் நண்பரின் மனைவிக்கோ அது ஓர் இனிய பொழுதுபோக்காகவே இருந்தது. வீட்டைவிட்டு வெளியே செல்ல மற்றவர்களுடன் தொடர்புக் கொள்ளவும், பேசிப் பழக உதவும் ஒரு விஷயமாகவும் இருந்தது. என் நண்பரும் அவர் மனைவிக்கு ஊக்கம் கொடுத்து துணையாக இருந்ததில், நான்கே ஆண்டுகளில் அவர் செய்த முதலீடுகள், ஒரு சொந்த ஃபிளாட் வாங்கும் அளவுக்குப் பிரமாதமாக வளர்ந்து விட்டது. நாளடைவில் அந்தப் பெண், குடும்பப் பண நிர்வாகத்திலும் கணவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
ஒரு முக்கிய விஷயம். அது தொலைக்காட்சி இல்லாத காலம். அது மட்டும் இருந்திருந்தால் மெகா சீரியல்கள் பார்ப்பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்திருக்கும். அப்புறம் பங்கு வர்த்தகமாவது... முதலீடாவது!
சேமிப்பும் முதலீடும்

‘சேமிப்புஎன்பது வாழ்க்கையில் அனைவருக்கும் அவசியமான ஒன்று. நிறைய சம்பாதிப்பதுதான் வெற்றி என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நல்ல வருமானம் என்பது மட்டுமே முக்கியமல்ல. பொறுப்பற்ற வாழ்க்கையால் சம்பாத்தியம் முழுவதுமே கூட கரைந்து போய்விடலாம். இதனால்தான் இள வயதில் மிக அதிக வருமானம் கொண்டிருந்த ஒருவர், அவருடைய ஆடம்பரப் போக்கினால் வயதான காலத்தில் சேமிப்பு கரைந்து, சிரமப்படுவதையும், சாதாரண வருமானம் கொண்டிருக்கும் ஒரு நபர் முறையான சேமிப்பின் மூலம் வயதான காலத்தில் சௌகரியமாக இருப்பதையும் பார்க்கின்றோம்.
எனவே, சிக்கனம்தான் சொத்து சேர்ப்பதின் முதல்படி என்பதை நீங்கள் அனைவரும் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். சிக்கனம் என்று சொன்னால் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. நல்லதொரு ஒரு வரவு-செலவுத் திட்டத்தை அமைத்துக்கொண்டு அதனுள்ளேயே சிறப்பாக வாழ்வது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
சேமிப்புமற்றும்முதலீடுஎன்ற இரண்டு வார்த்தைகளுக்கும் நம்மில் பலர் ஒரே அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு! ‘சேமிப்புஎன்பது பணத்தை, பிற்கால உபயோகத்திற்காகவோ அல்லது அவசர உபயோகத்திற்காகவோ ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கிலோ, லாக்கரிலோ, இரும்புப் பெட்டியிலோ போட்டு ரிஸ்க் இல்லாமல் பத்திரப்படுத்திவைப்பது. சேமிப்பிலிருந்து உங்களுக்குப் பெரிய வருமானம் (ரிட்டர்ன்) ஏதும் வராது. ஆனால் முதலீட்டில் ரிஸ்க் உண்டு. வருமானமும் அதிகம் வர வாய்ப்புள்ளது. சேமிப்பு - குறைந்த காலத்திற்கானது. முதலீடு - நீண்டகாலத்திற்கானது.
முதலீடு செய்யத் தகுதியானவர் யார்?

முதலீடு செய்யத் தகுதி என்ற ஒன்று இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். தகுதி என்றவுடன் பயந்து போய்விடாதீர்கள். தகுதி என்பது பண ரீதியான தகுதி. கண்டிப்பான அளவீட்டில் சொன்னால், கையில் சேமிப்பு தனை வைத்திருப்பவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முயலவேண்டும். உங்கள் குடும்பத்துக்கு மூன்று மாத செலவுக்குத் தேவையான அளவுக்கு சேமிப்பைத் தனியாக நிலை நிறுத்திவைத்திக் கொண்டு மீதிப் பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் நீங்கள் கடன் ஏதும் வாங்கியிருந்தால் அதை அடைத்துவிட வேண்டும். பின்னரே முதலீடுகளில் இறங்க வேண்டும்.
ஹவுசிங் லோன், குறைந்த வட்டி, வட்டி மற்றும் திரும்பச் செலுத்தும் முதலுக்கு வருமான வரிச்சலுகை என பல மானியங்களை உள்ளடக்கியது அது. முதலீடு செய்வதற்கு முன் இது போன்ற மானியம் மற்றும் வரிச்சலுகை நிறைந்த குறைந்த வட்டிக் கடனை நீங்கள் அடைக்க வேண்டியதில்லை. கிரெடிட் கார்ட் லோன், பர்சனல் லோன், கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக வாங்கிய லோன், போன்ற அதிகவட்டிக் கடன்களை அடைத்த பின்னரே முதலீட்டிற்கான முயற்சியில் இறங்கவேண்டும். ஏனென்றால், இந்தக் கடன்கள் அதிக வட்டியைக் கொண்டவை. இந்தக் கடன்களைத் திருப்பிக்கட்டாமல் நிலுவையில் வைத்துக்கொண்டு கையில் இருக்கும் பணத்தை சந்தையில் போட்டால் அந்தக் கடன்களுக்கு உண்டான வட்டியின் அளவிற்குக் கூட முதலீட்டில் சில சமயம் சம்பாதிக்க முடியாமல் போகலாம். எனவே, கடனை அடைத்த பின்னரே முத லீட்டிற்கு வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்தபுல் அவுட்பகுதியில் சொல்லாமல் விட்டது என்பது நிறைய இருக்கும். இந்தக் கட்டுரையைப் படித்து சிறிது சிறிதாய் முதலீடுகளைச் செய்து அனுபவம் பெற்ற பின்னரே அவ்வாறு விடப்பட்டுள்ள விஷயங்கள் உங்களுக்குப் பயன்படுவதாய் இருக்கும். எனவே தான் அவை விடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு இண்டெக்ஸ் மற்றும் ஸ்டாக் டெரிவேட்டிவ்ஸ், கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ், ஸ்ட்ரெக்சர்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், அயல்நாட்டு சந்தையில் பங்கு முதலீடுகள் போன்றவை. தேவையான அனுபவம் பெறும் வரை இவை உங்களுக்குத் தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து.
இனி மேலே போவோம்.
உங்கள் குடும்ப வருமானத்தில் எதற்கு முன்னுரிமை தரணும்?
முதலீடுகளைச் செய்வதற்கு முன்னர் சில செலவுகளுக்கு நீங்கள் முன்னுரிமை தரவேண்டும். அந்தச் செலவுகளைச் செய்த பின்னரும் ஏதேனும் மீதியிருந்தால் மட்டுமே நீங்கள் முதலீடுகளைப் பற்றி யோசிக்கவேண்டும். அவ்வாறான செலவுகளில் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸும், (மெடி-க்ளைய்ம்) ஆயுள் இன்ஷ்யூரன்ஸும் முக்கியமானது. முதலில் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மெடி- க்ளைம் பாலிசி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றைய நிலைமையில் உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்றால் எவ்வளவு செலவாகும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. உங்களைச் சார்ந்துள்ள பெரியவர்களின் மருத்துவச் செலவுக்கும் நீங்கள் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். முதியவர்களை கவனித்துக் கொள்வது குடும்ப வழக்கமாக இருந்தது போக, இப்போது சட்டப்படியான கடமையாகவேறு மாறிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மெடி-க்ளெய்ம் பாலிசி எடுக்க நீங்கள் செலுத்தும் ப்ரீமியத்துக்கு வருமான வரி விலக்கும் உண்டு (ரூபாய் 15,000 வரை - முதியவர்கள் போன்ற சில பிரிவினருக்கு ப்ரீமியம் செலுத்தினால் ரூபாய் 20,000 வரை).

உங்கள் வீட்டிலிருக்கும் சம்பாதிக்கும் நபருக்கு கட்டாயம் எடுக்கவேண்டிய மற்றுமொரு பாலிசி, பெர்சனல் ஆக்சிடெண்ட் பாலிசி. இந்தப் பாலிசியின் படி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏதாவது விபத்து நடந்ததன் காரணமாகவோ அல்லது விபத்தினைப் போன்ற வேறெதாவது எதிர்பாராத காரணத்தினாலோ (உடற்பயிற்சிக்காக விளையாடும் போது ஏதாவது கால் கை சுளுக்கு ஏற்பட்டாலும் கூட) அலுவலகம் செல்ல முடியவில்லை என்றால் இழப்பீடு வழங்கப்படும். இந்த இழப்பீடை வாங்க அவர் அலுவலகம் செல்லாத காரணத்தால்லாஸ்- ஆஃப்-பேஎன்ற நிலை இருந்திருக்க வேண்டும். எத்தனை வாரம் அலுவலகம் செல்லவில்லையோ அத்தனை வாரத்துக்கும் இழப்பீடாக இன்ஷ்யூர் செய்யப்பட்ட தொகையில் ஒரு சதவிகிதம் வழங்கப்படும். உதாரணத்திற்கு, நீங்கள் ஐந்து லட்சம் பாலிசி வைத்திருந்தால் வாரம் ரூபாய் 5,000 உங்களுக்குக் கிடைக்கும். வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாத சூழலில் இந்தப் பணம் பேருதவியாய் இருக்கும். இந்த பாலிசிக்கான பிரீமியமும் மிகவும் குறைவே! இதனையும் கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிலிருக்கும் வருமானம் ஈட்டும் நபரும் எடுத்தேயாகவேண்டும்.
அடுத்த படியாக ஆயுள் காப்பீடு. ஆயுள் காப்பீடு என்பது மிகமிக அத்தியாவசியமானது. ‘டேர்ம் பாலிசிஎனப்படும் கால இலக்கை எல்லையாக வைத்த பாலிசி ஒன்றை கட்டாயமாக அவர் எடுத்தாக வேண்டும். இந்தப் பாலிசியில் கட்டும் பணம் திரும்ப வராது. ஆனால், ஏதாவது ஒரு காரணத்தினால் உயிரிழப்பு நிகழ்ந்தால் பாலிசியில் கொடுக்கப்பட்டிருக்கும் தொகையானது, பாலிசி எடுத்தவரின் வாரிசுதாரருக்குக் கிடைக்கும். கட்டும் பணம் திரும்ப வராது என்றவுடன் பயந்து போகாதீர்கள். ப்ரீமியமாக கட்டும் தொகையோ மிகவும் குறைவாகவே இருக்கும்.
உதாரணத்துக்கு, 30 வயது நிரம்பிய ஒருவர் 10 லட்சரூபாய்க்கு 25 வருட காலத்திற்கான ஒரு டேர்ம் பாலிசியை எடுத்தால் அவர் வருடத்திற்கு ரூபாய் 3,821 மட்டும் செலுத்தினாலே போதுமானது. இந்தப் பாலிசிதனை இளம் வயதிலேயே எடுத்துவிடவேண்டும். பாலிசி எடுப்பவரின் வயது அதிகரிக்க அதிகரிக்க ப்ரீமியம் தொகை அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, இன்றைக்கு 50 வயதாகும் மேலே சொன்ன 10 லட்சத்துக்கான பாலிசிதனை எடுக்கவேண்டும் என்றால் ரூபாய் 13,741 ப்ரீமியமாய் செலுத்தவேண்டியிருக்கும். மிகவும் குறைந்த ப்ரீமியம் தொகையைக் கொண்ட இந்த வகைப் பாலிசிகள் ஆபத்துக்காலத்தில் நிச்சயமாய் உங்களுக்கு உதவவே செய்யும்.
வருமானம் ஈட்டாமல் கல்லூரியில் படிக்கும் குழந்தைகளுக்கும் கூட இன்ஷ்யூரன்ஸ் செய்துகொள்வது நல்லது. இன்ஷ்யூரன்ஸ் ஒரு முதலீடு அல்ல. இது வருமான வரியைக் குறைக்கும் வழியும் அல்ல. இதை நீங்கள் நன்றாக மனதில் கொள்ளவேண்டும். காலங்காலமாக ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் இந்த இரண்டு தவறான காரணங்களை முக்கியமானதாகச் சொல்லியே விற்கவும் எடுக்கவும் படுகின்றது. இது தவறு. ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் ஒரு காப்பீடு. காப்பீடு காப்பீட்டிற்காக மட்டுமே வாங்கப்படவேண்டும். விளம்பரங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டும், ஏஜென்ட்களின் கவர்ச்சிப் பேச்சில் மயங்கியும் ஆயுள் இன்ஷ்யூரன்ஸை எடுக்காதீர்கள். நீங்கள் செய்யும் ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் மேலே நான் சொன்ன மலிவு விலையில் நிறைய இழப்பீடு தரக்கூடிய டேர்ம் இன்ஷ்யூரன்ஸாக மட்டுமே இருக்கட்டும். இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களுக்கு பணம் செலுத்து முன் அதன் சட்டத் திட்டங்களை, விதிமுறைகளை, நிபந்தனைகளை நன்கு புரிந்துகொண்ட பின்னரே பணம் செலுத்தவேண்டும்.
இன்டெர்நெட்டிலும் ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி குறித்து விவரம் அறியலாம். www.policybazaar.com, www.bimaonline.com போன்ற பல இணைய தளங்களிலும் விவரங்களைப் பெறலாம். கூகுளில் சென்று லைஃப் இன்ஷ்யூரன்ஸ் என்று தேடினால் விவரங்கள் கொட்டும்.
பிராவிடண்ட் ஃபண்ட்
பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வருங்கால வைப்பு நிதியை (பிஃஎப்) சம்பளத்திலேயே பிடித்துவிடுவார்கள். சிறு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், ‘பப்ளிக் ப்ராவிடண்ட் ஃபண்ட்கணக்கு ஒன்றை, பாரத ஸ்டேட் வங்கியில் தொடங்கி பணம் செலுத்தி வருவது நல்லது. இது ஓய்வு பெறும் நாளில் நல்லதொரு சேமிப்பைத் தருவதுடன் இதில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரி விலக்கும் உண்டு. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திலும் நீங்கள் சேர்ந்து பணம் செலுத்தி வருவது நல்லது. இதில் செலுத்தப்படும் தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு.

அடுத்தபடியாக நீங்கள் எடுக்கவேண்டிய முக்கியமானதொரு இன்ஷ்யூரன்ஸ் ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசி. இந்தப் பாலிசியானது வீட்டிலிலுள்ள தங்க, வைர நகை, விலையுயர்ந்த கம்ப்யூட்டர், மடிக்கணினிகள், எல்சிடி டீவி, மியூசிக் சிஸ்டம் போன்றவற்றுக்கு திருட்டு, நெருப்பு, இயற்கைச் சீற்றம் போன்றவற்றினால் ஏற்படும் இழப்புகளுக்குக் காப்பீடு வசதியை அளிக்கின்றது. சமூகக் குற்றங்களும் விபத்துகளும் அதிகரித்துள்ள இன்றைய சூழ்நிலையில் இந்த பாலிசி மிகவும் தேவையானது!
கடைசியாக நான் சொல்லப்போகும் செலவு கல்விக்கானது. வீட்டில் உள்ள குழந்தைகளுக்குத்தான் என்றில்லை! வேலைக்குப் போகும் நபரும் கூட அவருடைய தொழிலுக்கு ஏற்றாற்போல் படித்து, பட்டங்களையோ அல்லது தொழில் ரீதியான டிப்ளமாக்களையோ கட்டாயம் பெற வேண்டியிருக்கும். வாழ்க்கையும் வருமானமும் முன்னேற வேண்டுமென்றால் தகுதிகளையும் உயர்த்திக் கொண்டே ஆகவேண்டும். அதற்கான சேமிப்புகளையும் நீங்கள் அவ்வப்போது செய்துகொண்டே வரவேண்டியிருக்கும்.
வீடு
வீடு என்பது செலவா? முதலீடா? இது ஒரு பட்டி மண்டபம் நடத்தக் கூடிய தலைப்பு. 'Fools build houses and wise men live in them' என்ற ஓர் ஆங்கில சொலவடை உண்டு. அயல் நாடுகளில் அப்படி இருக்கலாம். ஆனால், இந்தியச் சூழ்நிலையில் வீடு என்பது ஒரு முக்கிய முன்னுரிமை கொண்ட முதலீடுதான். வருமான வரியில் உள்ள விலக்குகளும் இதற்கு சாதகமாகவே உள்ளன.
காப்பீடுகளைச் செய்து கொண்டபின் நீங்கள் செய்ய வேண்டிய முதல் முதலீடு ஒரு வீடு. நீங்கள் கடனும் வாங்கலாம் (மற்றைய முதலீடுகளுக்கு கடன் வாங்கக் கூடாது). அடுத்த கேள்வி வீட்டில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது தான். பெரும்பாலானோர் கடன் வாங்கியே வீடு வாங்குகின்றார்கள். அப்படி வாங்கிய கடனுக்குக் கட்டும் தவணைத் தொகை, உங்கள் கைக்கு வரும் வருமானத்தில், 20 சதவிகிதத்திற்கு மேல் போகக் கூடாது. வீட்டுக்கடன் கொடுப்பவர்கள் போடும் சட்டமல்ல இது. ஆனால் புத்திசாலித்தனமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை. வீடு கட்ட கடன் கொடுப்பவர்கள் நிகர சம்பளத்தில் 50 சதவிகிதம் வரை திருப்பிக் கட்டும் அளவிற்கு கடன் தொகையை உயர்த்தித்தர தயாராய் இருப்பார்கள். இன்றைய வேகமாக மாறும் பொருளாதாரச் சூழ்நிலையில் திடீரென்று வேலை பார்க்கும் நிறுவனம் மூடப்பட்டாலோ அல்லது துரதிர்ஷ்டவசமாக நமக்கு வேலை போய்விட்டாலோ நாம் தேடிக் கொள்ளும் புதியவேலையில் பழைய அளவிலேயே சம்பளம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, வீட்டுக்கான நம்முடைய மாதாந்திரக் கடன் தவணையை மேலே சொன்ன 20% வைத்துக்கொண்டால் சிரமம் இருக்காது.
இன்ஷ்யூரன்ஸ் பாலிசியானாலும் சரி, வீடு கட்டும் கடன் வாங்கப் போடும் ஒப்பந்தங்களானாலும் சரி, அனைத்து ஷரத்துக்களையும் நன்கு படியுங்கள். அதில் உள்ள நிபந்தனைகளைப் புரிந்து கொண்டு அனுசரியுங்கள்!
இன்ஷ்யூரன்ஸ் ப்ரீமியம்களும், வீட்டு கடன் தவணைக்கும் இதர முதலீடுகளைப் பற்றி யோசிப்போம்.
முதலீடுகள் எதற்காக?
எதிர்காலமானது நமக்கு எந்த விதமான நல்லது - கெட்டதுகளை எந்த ரூபத்தில் வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது என்பது தெரியாது. எல்லோருக்கும் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிப்பதில்லை. அதே போல் எல்லோரையுமே டீவி சீரியலில் வருவதுபோல் துரதிர்ஷ்டம் துரத்தித்துரத்தி சோதனை கொடுப்பதும் இல்லை. அனைவருமே வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது இன்ப துன்பம் கலந்த ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போம் என்ற எண்ணத்துடனேயே தான் ஆரம்பிக்கின்றோம். மிகச்சிலருக்கு யோகமான வாழ்க்கையும் மிகச்சிலருக்கு சோகமான திருப்பங்களும் வந்து விடுகின்றது. ஆனாலும் பெரும்பாலானோர் சராசரியான வாழ்க்கையையே வாழ்ந்து முடிக்க நேரிடுகின்றது. அப்படிப்பட்ட சராசரியான வாழ்க்கையை சிறப்பாக பண ரீதியாக தன்னிறைவுடன் நடத்தி முடிக்க முதலீடுகள் அவசியமாகின்றன. பிள்ளைகளின் கல்வி, மகளின் திருமணம், ஓய்வுக்கால வாழ்க்கை என பல்வேறு விதமான நோக்கங்களுக்கு நாம் முதலீடுகளைச் செய்ய வேண்டியுள்ளது.
முதலீடுகளின் ரிஸ்க்கும் வருமானமும்:
முதலீடுகள் என்று நினைக்கும் போதே அவற்றைத் தேர்வு செய்வதிலும், அவற்றை நிர்வகிப்பதிலும் உள்ள சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
ரிஸ்க் (risk): இது எல்லோராலும் மிகச் சாதாரணமாக கையாளப்படுகின்ற ஒரு சொல். ரிஸ்க் என்ற சொல்லுக்கு முதலீடுகளில் தனி அர்த்தமே உண்டு. அது உங்கள் முதலீட்டின் அசலுக்கோ அல்லது அதிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்திற்கோ ஏற்படக்கூடய இழப்பு அல்லது இழப்பிற்கான வாய்ப்பு, இழப்புக்கூறு எனலாம். இது அனைத்து முதலீடுகளிலும் உண்டு. ஆனால், அதன் அளவுதான் மாறும். ரிஸ்க்கின் அளவைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன.
ரிட்டர்ன் (return): முதலீடு செய்வதே இதற்காகத்தான்! முதலீட்டினால் உங்களுக்கு வரும் பலன்தான் ரிட்டர்ன். இங்கு ரிட்டர்னுக்கு பலன் என்ற சொல் கையாளப்படும். கூட்டு வட்டியல்லாத வங்கி வைப்புகளுக்குக் கிடைக்கும் வட்டியைப் போல அவ்வப்போதோ, முதலீடு செய்த சொத்தை விற்றுக் காசாக்கும் போது ஒட்டுமொத்தமாகவோ, வருங்கால வைப்பு நிதி (PF) முதிர்வடையும் போது கிடைப்பதைப் போலவோ, ரிட்டர்ன் கிடைக்கலாம். உதாரணத்துக்கு, வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டால் மாதாமாதம் வாடகை கிடைக்கும். பின்னர் வீட்டை விற்கும் போது முதலீடு நம் கைக்கு வந்துசேரும். இப்படி பல்வேறு காலக் கட்டங்களில் பலனளிக்கும் முதலீடுகளை ஒப்பிடுவதற்கு ஒரு முறைதேவை. அதுதான்டைம் வேல்யூ ஆப் மணிஎன்ற அடுத்த அடிப்படை.
டைம் வேல்யூ ஆப் மணி (time value of money): இன்று உங்களுக்குக் கிடைக்கும் பணம், அடுத்த ஆண்டில் கிடைக்கும் பணத்தை விட அதிக மதிப்புள்ளது என்பதுதான் இந்த நியதியின் சுருக்கம். இது அனைவருக்கும் புரிந்த செய்திதான். ஆனாலும், நாளைய வரவின் இன்றைய மதிப்பு என்ன என்று கணக்கிடுவதற்குக் கொஞ்சம் பயிற்சி தேவை. இதே மாதிரி முதலீடுகள் பல காலக்கட்டங்களில் செய்து, முதலீட்டின் மொத்த பலனையும் ஒரே தவணையில் திரும்பப் பெறுவதும் உண்டு. ஏற்கெனவே, நான் குறிப்பிட்டுள்ள வருங்கால வைப்பு நிதி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மாதா மாதம் நீங்கள் கட்டும் தொகை, ஒரே தவணையாக நீங்கள் ஓய்வு பெறும்போது கிடைக்கின்றது. இந்த முதலீட்டையும் இன்றைய மதிப்பாக்கித்தான் ஒப்பிடவேண்டும். ஆகவே, இன்றும் நாளையும் நீங்கள் தரும் பணத்தையும், நீங்கள் திருப்பிப்பெறும் பணத்தையும் இன்றையப் பணமாக ஒப்பிடும் முறையை நீங்கள் கற்றுக் கொள்வது அவசியம். இதற்கு வேண்டிய மென்பொருட்கள் கம்ப்யூட்டர்களில் உள்ளன. அதனைப் பயன்படுத்தும் முறையைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

லிக்யுடிட்டி(liquidity): ஒரு முதலீட்டை காசாக்கத் தேவையான நேரத்தையும் முயற்சியையும் லிக்யுடிட்டி என்று குறிப்பிடுகின்றோம். இதைக் காசாக்கும் தன்மை என்பது பொருத்தமாக இருக்கும். காசாகும் தன்மை அதிகமுள்ள முதலீடுகள் அனைவராலும் அதிக அளவில் விரும் பப்படும் முதலீடாக இருக்கும். வங்கியில் போடப்பட்டிருக்கும் டெபாசிட்களை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் திருப்பிப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, அதற்கு காசாகும் தன்மை அதிகம். நிலங்கள், வைப்பு நிதிகள், தனியார் கம்பெனிகளில் போடும் டிபாசிட்கள் போன்றவற்றுக்குக் காசாகும் தன்மை குறைவு.
காசாகும் தன்மை முதலீடுகளில் ஒரு விரும்பத்தக்க அம்சம். ஆனால், அதனை மட்டும் கருத்தில் கொண்டு முதலீடுகளை மதிப்பீடு செய்யக்கூடாது. ரிஸ்க் குறைவான, ரிட்டர்ன் அதிகமான, காசாகும் தன்மை அதிகமுள்ள முதலீடுகளைத் தேர்வு செய்வதுதான் திறமை.
விலைவாசி ஏற்றம் (inflation): விலைவாசி உயர்வு பணத்தின் மதிப்பைக் குறைக்கின்றது. உங்கள் முதலீடு இன்றைய பணத்தில் செய்யப்படுகின்றது. உங்களுக்கு அது திரும்பிவரும் போது நாளைய பணத்தில் கிடைக்கின்றது.
முதலீட்டினைச் செய்யும் போது நீங்கள் சிந்திக்க வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம் ஒன்றே ஒன்றுதான். இன்றைக்கு நீங்கள் செய்யும் முதலீடு என்பது உங்கள் சேமிப்பில் இருந்து செய்யப்படுகின்றது. சேமிப்பு என்பது நீங்கள் பணத்தை உபயோகிக்காமல் இருக்க நினைப்பதால் வருகின்றது.
உதாரணத்துக்கு, உங்கள் கணவர் வீட்டுச் செலவுக்கு கொடுத்த பணத்தில் சிறுகச் சிறுக சேமித்த 3,000 ரூபாய் பணம் உங்களிடம் இருக்கின்றது. உங்களுக்கு ஒரு மிக்ஸி வாங்கிவிட வேண்டும் என்று ஆசை. மிக்ஸியின் இன்றைய விலை ரூபாய் 3,000. அந்தப் பணத்தைக் கொடுத்து இன்றைக்கு ஒரு புதிய மிக்ஸியை வாங்கி சிரமமில்லாமல் உங்கள் சமையலறை வேலைகளை முடித்துக்கொள்ளலாம். மிக்ஸியை வாங்காமல் அம்மிக்கல்லிலேயே சமையலுக்குத் தேவையான வேலைகளை முடித்துக் கொள்ள நினைக்கின்றீர்கள். மிக்ஸி வாங்காமல் இருப்பதால் நீங்கள் செய்வது ஒரு தியாகம். அதற்கு பதிலாக அந்தத் தொகையை ஒரு 10 ஆண்டு டெப்பாசிட்டாக ஒரு வங்கியில் 8 சதவிகித வட்டிக்குப் போடுகின்றீர்கள். பத்து ஆண்டுகள் கழித்து வங்கி உங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி போட்டு அசலும் வட்டியும் சேர்த்த முதிர்வுத் தொகையாக 6,624 ரூபாயினைத் தருகின்றது. உங்களுக்கு வயதும் அதிகரித்து விட்டதால் அந்த நேரத்தில் அம்மிக் கல்லை உபயோகிப்பதைத் தவிர்த்து மிக்ஸி வாங்க நினைக்கின்றீர்கள். கடைக்குச் சென்று மிக்சியின் விலை கேட்கின்றீர்கள். ரூபாய் 8,055 என்கின்றார் கடைக்காரர். பத்துவருடம் பொறுத்திருந்தற்கு இப்படி ஒரு சோதனையா? பேசாமல், பத்துவருடத்திற்கு முன்னாலேயே மிக்ஸியை வாங்கியிருக்கலாமோ என்று நினைக்கின்றீர்கள்.
என்ன நடந்தது இந்த விஷயத்தில்? வங்கியில் நீங்கள் போட்ட டெபாசிட் காலாண்டுக்கு ஒருமுறை 8 சதவிகித வட்டியை கொடுத்து வட்டிக்கு வட்டி (கியுமுலேட்டிவ்) போட்டு வளர்ந்து ரூபாய் 6,624 ஆக முதிர்வடைந்தது. அதேசமயம் விலைவாசி காலாண்டுக்கு ஒருமுறை க்யுமுலேட்டிவ்வாக 10 சதவிகிதம் என்ற விதத்தில் அதிகரித்தது. அதனால் உங்களுக்கு உங்கள் முதலீட்டில் 2 சதவிகித நஷ்டம் வந்து விட்டது இல்லையா? எனவே, நல்ல முதலீடுகள் விலைவாசி ஏற்றத்தை விட அதிகமான பலன் அளிக்கவேண்டும்.
உண்மையான பலன்
உங்கள் முதலீட்டில் கிடைக்கும் பலனில் விலைவாசி ஏற்றத்தைக் குறைத்தால் கிடைப்பது முதலீட்டில் இருந்து கிடைக்கும் உண்மையான பலன் ஆகும். உங்கள் முதலீடு 16 சதவிகித பலன் அளித்திருந்து, விலைவாசி அதே காலகட்டத்தில் 10 சதவிகிதம் ஏறியிருந்தால், அந்த முதலீட்டின் உண்மையான பலன் 6 சதவிகிதம் (16 - 10 = 6). இது நல்ல முதலீடா இல்லையா என்பது நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் ரிஸ்க்கின் அளவைப் பொறுத்தது.
முதலீடுகள் என்பன யாவை?

ஒரு சொத்தை மீண்டும் பணமாக மாற்றிப் (பெரிய அளவில் மதிப்புக்குறை வில்லாமல்) பெற முடிந்தால் அதை ஒரு முதலீடு எனலாம்.
உங்கள் சொத்தை பணமாக்கி, பணத்தைத் திரும்பப் பெறும் பொழுது உங்களுக்குக் கிடைக்கும் தொகை நீங்கள் கொடுத்த தொகையைக்காட்டிலும் அதிகமாக இருந்தால், அது லாபம் தந்த முதலீடு, அல்லது பயனுள்ள முதலீடு.
எல்லா முதலீடுகளும் பலனளிக்காது. சிலவற்றில் நீங்கள் திரும்பிப்பெறும் தொகை கொடுத்த தொகையைக் காட்டிலும் குறைவாக இருக்கலாம். அது நஷ்டம் தந்த முதலீடாக இருப்பதால் மட்டுமே அது முதலீடு அல்ல என்று சொல்ல முடியாது.
பலனளிக்க வாய்ப்புள்ள சொத்துக்கள், செலவுகள் முதலீடுகளாகும்.
எவை முதலீடுகள் அல்ல?

மீண்டும் பணமாக்க முடியாத உடமைகள் எல்லாம் செலவுகள் தானே தவிர முதலீடுகள் அல்ல.
இந்த சூத்திரத்திற்கு விதி விலக்குகள் உண்டு. ஆனால், அவை அபூர்வம்தான். சில முதலீடுகளில் செலவும் கலந்திருக்கும். உங்களுக்கு அதில் முதலீடு மட்டுமே நீண்ட காலத்தில் பலன் தரும். எடுத்துக்காட்டாக, நீங்கள் வாங்கும் நகைகளில் உள்ள தங்கம், நீங்கள் வாங்கும் வீடுகளில் உள்ள நிலம் போன்றவை முதலீடுகள்தான்.
மாதாந்திரச் சீட்டுகள் முதலீடுகள் அல்ல. அவற்றை ஒரு தவணை முறை சேமிப்பாகக் கொள்ளலாம். பணச்சீட்டே முதலீடு அல்ல என்கிற போது பாத்திரச் சீட்டுக்கள், நகை சீட்டுக்கள் போன்றவற்றைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
முதலீடுகள் எவ்வாறு/எவ்வளவு செய்யப்படவேண்டும்?

சேமிப்பது ஒரு கலை என்றால் அதனை சரியான விகிதத்தில் முதலீடு செய்து பாதுகாப்பது சூப்பர் கலை. பல்வேறு விதமான ரிஸ்க் குணாதிசியம் கொண்ட முதலீடுகள் இருக்கும்போது உங்களிடம் இருக்கும் பணத்தில் எந்த அளவு எந்தவிதமான முதலீட்டில் போடவேண்டும் என்பதற்கும் ஒரு கணக்கு உண்டு. அந்தக் கணக்கின் படி உள்ள சதவிகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டிருப்பது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் வைத்திருக்கும் குடும்பத்தலைவருக்கான முதலீடு. இது ஒரு கைட்லைன்தானே தவிர சட்டமில்லை. அவரவர் வசதிக்கேற்ப சற்று முன்னேயும் பின்னேயுமாய் சதவிகிதங்களை வைத்துக்கொள்ளலாம். ஒரேயடியாய் அதிகரிப்பதோ அல்லது குறைப்பதோதான் தவறாகும்.

இடம்/வீடு : ஏற்கனவே நான் சொன்னபடி குடியிருக்க ஒரு வீடு வாங்கிய பின்னரே முதலீட்டிற்கு வரவேண்டும். பெருநகரங்களில் இருப்பவர்கள் வீடுகளில் முதலீடு செய்யலாம். ஏனென்றால் அதிலிருந்து கணிசமான வாடகை வர வாய்ப்புள்ளது. சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் இருப்பவர்கள் வீட்டில் முதலீடு செய்வது அவ்வளவு உகந்ததல்ல. ஏனென்றால், வாடகை வருமானத்துக்கு பெரிய சாத்தியக் கூறுகள் இருக்காது. எனினும், காலி மனைகளில் முதலீடு செய்வது நல்லது. இவை இரண்டுமே எனக்குச் சரிப்படாது என்று நினைத்தீர்கள் என்றால் பேசாமல் குடியிருக்கும் வீட்டின் மதிப்பை போர்ட்போலியோ முதலீடாகக் கருதிக்கொள்ள வேண்டியதுதான். குடியிருக்கும் வீடு எப்படி வயதான காலத்தில் செலவுகளுக்கு உதவும் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது. வயதான காலத்தில் வீட்டிலிருந்தபடியே வீட்டின் பேரில் வருமானம் பெற அண்மையில் அரசாங்கம் அறிவித்த ரிவர்ஸ் மார்ட்கேஜ் எனும் திட்டம் உதவியாக இருக்கும்.



நன்றி - மங்கயர் மலர்