Showing posts with label மழலை. Show all posts
Showing posts with label மழலை. Show all posts

Saturday, August 31, 2013

தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்


ஒரு படைப்பாளிக்கு ஆத்ம திருப்தி அளிப்பது  அவனது படைப்புக்குக்கிடைக்கும்  கை தட்டல்  ஓசையே!படம் பார்க்கும்  அனைவரையும்  எழுந்து  நின்று  கை தட்ட வைக்கும் அளவு  பிரமாதமாக  ஒரு படம்  கொடுத்திருக்கும்  இயக்குநர் ராம்க்கு  மரியாதையுடன்  ஒரு  சல்யூட் .கமர்ஷியலுக்காக  எதையும் செயற்கையாக சேர்க்காமல் எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்ததற்கு ஒரு சபாஷ் !


ஹீரோ  ஒரு கிராமத்தில் வசிக்கும் சராசரி ஆள். லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவன், பெற்றோருடன் கூட்டுக்குடித்தனம். 2 ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு பெண் தேவதை மழலையாக . பணி புரியும்  இடத்தில் சம்பளம் சரி வரத்தராததால்  பாப்பாவுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை, எல்லாத்துக்கும் தன் அப்பாவை எதிர் பார்க்க வேண்டிய பொருளாதார நிர்ப்பந்தம்.


ஒரு கட்டத்தில் அப்பாவுடனான வாக்குவாதத்தில் வீட்டை விட்டு வெளியேறும்  ஹீரோ கொச்சினில்  பணி நிமித்தம் தங்குகிறான்.2000 ரூபா ஃபீஸ் கட்டவே முடியாத அவனிடம் பாப்பா 25,000 மதிப்புள்ள வோடஃபோன் நாய் கேட்குது. அவன் எதிர்  கொள்ளும் கஷ்டங்களை  மிக கவிதையான நடையில் சொல்லி இருக்கிறார் .


படத்தில்   முதல் அப்ளாஷ் அந்த மழலைக்குத்தான் , மிக பிரமாதமான நடிப்பு . அப்பா , அப்பா என செல்லம் கொஞ்சும் போதும் சரி , பள்ளியில் எல்லோர் முன்னாலும் அவமானப்படும்போதும் சரி  அட்டகாசமான நடிப்பு . என்ன ஆங்காங்கே  ஓசை பேபி ஷாலினி போல்  ஓவர் ஆக்டிங்கும் உண்டு . அது இயக்குநரின் தவறே அன்றி அந்த  குழ்ந்தையின் தவறில்லை . இந்த மாதிரி மழலைகளை நடிக்க வைக்க மணி ரத்னம் போல் குழந்தைகளை இயல்பாக இருக்க விட்டு படம் பிடிக்க வேண்டும் , நடிக்க விட்டு படம் பிடிக்கக்கூடாது . எது எப்படியோ இந்த ஆண்டின் சிறந்த   குழ்ந்தை நட்சத்திரம் விருது உறுதி .சாதனா என்ற பெயர் சாதனை படைக்கவோ?




ஹீரோவாக இயக்குநர் ராமே களம் இறங்கி இருக்கிறார் , சேரன், தங்கர் பச்சான் போன்ற வெகு சிலரே நடிக்க ஒத்துக்கொள்ளும் கேரக்டர் . குழ்ந்தையிடம் பாசம் காட்டுவது , அப்பாவிடம் வாக்குவாத்ம் செய்வது , மனைவியிடம் எரிந்து  விழுவது ம், ஸ்கூலில்  டீச்சரிடம் சண்டை போடுவது என இவர் வரும் காட்சிகள் எல்லாமே எதார்த்தமோ எதார்த்தம் .ஒரு இயக்குநர்  ஹீரோவாக அவர் இயக்கும் படத்தில் நடித்தால்   திரைக்கதையை விட அவர் கேரக்டருக்கே முக்கியத்துவம்  கொடுக்கப்படும் , ஆனால் அப்படி நடக்காமல்  குழந்தையை மையபடுத்திய விதம் பிரமாதம் . 


ஹீரோயினாக  சாதனாவின் அம்மாவாக  வருபவர் மகேந்திரன்  பட நாயகி போல் அவ்வளவு அமைதி , சாந்த சொரூபியாக வரும் அவர்  குழந்தை வயசுக்கு வருவது பற்றி சந்தேகம் கேட்கும்போது பொரிந்து தள்ளுவதில் ஸ்கோர் செய்கிறார். கவர்ச்சி என்ற இம்மியளவு  நிரடல் கூட இல்லாமல் மிக கண்ணியமான ஒரு கதாநாயகிக்கு சிறந்த எடுத்துக்காட்டு . வெல்டன் .


குழந்தைக்கு பாட்டியாக வரும்  ரோகினி , தாத்தாவாக வரும்  பூ பட ராம் , டீச்சராக வரும்  பத்மப்ரியா என    கேரக்டராகவே மாறிவர்கள் லிஸ்ட் செம நீளம் . மிக பாந்தமான நடிப்பு அனைவருடையதும் 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  படத்தின் ஓப்பனிங்கிலேயே இவ்வளவு திகிலான , பர பரப்பான  ஒரு காட்சி கடந்த 10 வருடத்தில்  வந்ததில்லை ( புலி வருது பட கனவு பலிக்கும் கருணாஸ் காட்சி விதி விலக்கு ) . குளத்தில் தங்க மீன்கள் இருபதாக நம்பும் சிறுமி எந்த நேரத்திலும்  தங்க மீனைக்காண குளத்தில் குதிப்பாள் என எகிற வைக்கும் பி பி  வர வைப்பதில்  இயக்குநருக்கு வெற்றி . அதே டெம்ப்ப்போவை க்ளைமாக்சில் உபயோகித்தது  அருமை 


2. அர்பிந்துசரிரா என்பவரின் பிரமாதமான ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம் . குளம் , காடு , மலை , புல் வெளி என அவர் கேமரா விளையாடி இருக்கிறது . இது போன்ற கலைப்பூர்வமான  ஒரு படத்துக்கு கேமரா எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார்கள் , வெல்டன் 



3. யுவன் சங்கர் ராஜா வின் பின்னணி இசை அபாரம் . நந்தலாலா படத்தின் பி ஜி எம்மை ஆங்காங்கே டச் பண்ணி வந்தாலும்  யுவனின் சரிதத்தில் இது ஒரு முக்கியமான படம் . ஆனந்த யாழை  மீட்டுகின்றாய் பாட்டு இந்த ஆண்டின்  மிக முக்கியமான மெலோடி ஹிட் சாங்க் . படமாக்கிய விதம் அருமை . அதே போல் மற்ற  2 பாட்டுகளும்  குறை சொல்ல முடியாத தரத்தில் .. 



4. சைக்கிளில் டிராப் பண்ணும் அப்பா வேண்டாம் , காரில் வா என தாத்தா  அழைக்கும்போது குழந்தை ஸ்கூல் பேக்கை மட்டும் காரில் வைத்து விட்டு சைக்கிளில் அப்பாவுடன் பயணிக்கும் காட்சி  கண் கலங்க வைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி . அந்த சீனில்  ராமின் முக பாவனை அருமை 


5.  மிக மெதுவாக, ஒரு நதியின் அமைதியுடன் பயணிக்கும்  திரைக்கதைக்கு  மதி நுட்பமான , பிரமாதமான வசனங்கள்  கை கொடுத்திருக்கிறது . உதவி  இயக்குநர்கள் மட்டும் இந்தப்படத்தில்  27 பேர் . அனைவருக்கும் பாராட்டுக்கள் 


6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்பதும் , இழுத்தடிக்கும் நண்பனிடம் அவர் பொரிவதும்   பிரமாதமான காட்சி அமைப்பு 


7. போஸ்டர் டிசைன்கள் , விளம்பரங்களில் அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் ஸ்லாகன்கள் அழகு 



இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1. ஸ்கூல் மிஸ்கள் எல்லாரையுமே சிடு சிடு முகமாக காட்டி இருப்பது செயற்கை தட்டுகிறது . பத்மப்ரியா மட்டுமே விதி விலக்கு . பாதிக்குப்பாதி இரு தரப்பிலும்  காட்டி  இருக்கலாம் . குழந்தை மீது பரிதாபம் வர வேண்டுமே என்பதற்காக டீச்சர்கள் எல்லோரும்  ஓவராக கண்டிப்பது பட்டவர்த்தனமாய்த்தெரிகிறது 



2. இடைவேளை கார்டு போடும்போது ஹீரோ சைக்கிளில்  ரயில்வே கிராசை கடந்த அடுத்த செகண்டிலேயே ரயில்வே கேட் போடப்படுகிறது , கேட் போட்ட அடுத்த செகண்டிலேயே ரயில் வருகிறது , அது எப்படி? ரயில்வே   ரூல்ஸ் படி 10 நிமிடங்கள் முன்னதாக கேட் போடப்பட வேண்டுமே? சீன் எஃபக்டா வரனும் என்பதற்காக ரயில்வே ரூல்ஸை  மீறலாமா?



3. மழலை மீது  அவ்வளவு பாசமாக இருக்கும்  ஒரு அப்பா  அடிக்கடி தம் அடிப்பது ஏன்? குழந்தைகள் முன்னிலையில்  அப்பா தம் அடிப்பது இந்தப்படத்தின்  கதைக்குத்தேவையே இல்லையே?



4. பத்மப்ரியா டீச்சர்  வீட்டில்  அவர் கணவர்  ஒரு கொடுமைக்காரர் போல் காட்டி இருப்பதும்  திரைக்கதைக்கு தேவை  இல்லாததே 


5. தங்க மீன்கள்  குளத்தின் கதையை சொல்வதிலேயே   குழந்தை குளத்தில் குதிக்கும் அபாயம்  இருப்பதை அப்பா உணர வில்லையா? ஒரு முறை  பாப்பா அந்த  குளத்தில் இறங்க முற்படுவதைப்பார்த்த பின்பாவது அவர் இன்னொரு புனைக்கதை  குறி குளத்தில் இறங்காமல்  எச்சரிக்கைப்படுத்தி  இருக்கலாமே?  


6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்கும்போது அதை தட்டிக்க்ழிக்க நினைப்ப்வன்  மணி பர்சில் பணத்தை அப்படி பட்டவர்த்தமாய் காட்டுவானா? அந்த விசிட்டிங்க் கார்டை தனியா எடுத்து வைத்து கொடுத்திருக்கலாமே?



7.  சொந்த அப்பாவிடம் என்ன ஈகோ வேண்டிக்கிடக்கிறது? நண்பனிடம் அவமானப்படுவதற்க்கு அப்பாவிடம் பணிந்து போகலாமே?


8.  டபிள்யூ , எம்  குழப்பம்   3ஆம் வகுப்பு மாணவிக்கு வருவது நம்ப முடியவில்லை



9. பாப்பா எக்சாம் எழுத   ரூ 3000 கட்ட வேண்டும் என ஹெச் எம் சொல்கிறார். ஆனால் தாத்தா   ஹீரோவிடம் 2000 ரூபா ஃபீஸ் கட்டியாச்சு என்கிறார். எதுக்கு இந்த  குழப்பம் ?



10 , சம்பளம் சரியாக  வராத ஏழை  ஹீரோ ஏன் தனியார் ஸ்கூலில் மகளைப்படிக்க வைக்க வேண்டும் ? ஆரம்பத்திலேயே அரசுப்பள்ளியில் படிக்க வைக்கலாமே?


11.  தாத்தா , பாட்டி , மகன் என நால்வரும் மிக எளிமையான உடை உடுத்தி  இருக்கும்போது   மருமகள் மட்டும்  பொருந்தாத ஆடம்பர உடை உடுத்தி  இருப்பது ஏன்?  ரோகினி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் 200  ரூபா மதிப்புள்ள சாதா  வாயில் புடவை தான் அணிந்து வருகிறார் . ஆனால் குழ்ந்தையின் அம்மாவாக   வருபவர் 2500  ரூபா புடவையில் வருகிறார். தாய் வீட்டு சீதனமாக  இருந்தாலும் கணவன்  மிக சாதாரணமாக உடை உடுத்தி  இருக்கும்போது  காதல் கல்யாணம் செய்த மனைவி அவனைப்போலவே எளிமையான ஆடையில்




மனம் கவர்ந்த வசனங்கள்


1. அப்பா.அந்த அங்க்கிள் ஏன் வீட்டுக்குள்ளே வர்ல?  


கடன் வாங்க வர்றவங்க வீட்டுக்குள்ளே வர மாட்டாங்க


2. பணம் கடன் கேட்டா இல்லைனு அப்பவே சொல்லிடுங்கடா.அலைய விடாதீங்க.பணம் இல்லைனு சொல்றதுல என்ன க்வுரவக்குறைச்சல்



3. அப்பா, செத்துப்போறதுன்னா என்னா?

இந்த உலகத்தை விட்டே போறது .


அப்டின்னா?

நமக்குப்பிடிச்சவங்க யாரையும் பார்க்க முடியாது


அப்போ நீயும் செத்துப்போய்டுவியாப்பா? ப்ளீஸ்ப்பா, நீ மட்டும் செத்துடாதே



4. இவன் படிக்கறதுக்கு காசு கட்டுனோம், இவன் குழந்தை படிக்கவுமா? குழ்ந்தைக்கு இவன் தானே அப்பன்?


5, டீச்சர் - இப்போ செல்லம்மா கிட்டே ஒரு கேள்வி கேட்கப்போறேன்


லொள் மாணவன் - ஹி ஹி ஹி


என்னடா சிரிப்பு ?


அவ என்னைக்கு சரியான பதில் கொடுத்திருக்கா?



6. பறவை இனங்கள்லயே தானே கூடு கட்டாம அடுத்தவங்க கட்டுன கூட்டில் வசிப்பது குயில் மட்டுமே


மனுஷங்க நாம இருப்பது கூட வாடகை வீட்டில் தானே?



7. ஏம்மா? சம்பளம் வாங்கியாச்சா?ன்னு உன் புருஷன் கிட்டே கேட்டியா?


கேட்டா உன் வேலையைப்பாருன்னு சொல்லிடறாரு அத்தை

சாமார்த்தியக்காரி தான் , எப்படி ஊசி குத்தற மாதிரி பதில்


8. டியர் , கொஞ்சம் என்னை வெளீல கூட்டிட்டுப்போறீங்களா?


எங்கே?


எங்கேயாவது



9. நான் காதலிச்சப்ப பார்த்த கல்யாணி நீங்க இல்லை

ஆமாண்டி , கொஞ்சம் தொப்பை போட்டிருக்கு


10 பணம் இருந்தா பணம் இருக்குதேன்னு கவலை , இல்லைன்னா பணம் இல்லைன்னு கவலை



11. எதுக்குங்க இப்போ அந்த நாயை அடிச்சீங்க ?


நான் யாரைத்தான் அடிக்கறது ?



12. வேலை நல்லாப்பார்க்கறவரை முதலாளிங்க எல்லாம் மகனே , அவனே இவ்னேம்பாங்க , சம்பளம் கேட்டா எவன் பாங்க



13. ஆளுக்கு வயசாகிற மாதிரி தொழிலுக்கும் வயசாகுது



14. ஏண்டா , நான் என்ன எப்பவும் உன் கூடவா இருந்தேன்? உனக்கு நல்ல அப்பனா இல்லை?


அதை நான் சொல்லனும்


15. யாராவது செத்தா ஸ்கூல் லீவ் விடறாங்க , ஐ ஜாலி


அதுக்காக பிரேயர்ல அப்படித்தான் கை தட்டுவியா? உங்கப்பா செத்தாலும் இப்படித்தான் கிளாப்ஸ் பண்ணுவியா?


டீச்சர் , குழந்தைட்ட இப்படியா பேசுவாங்க ?



16. ஏய் , உன் தாத்தாவைப்பார்த்தா எருமை மாடு மாதிரி இருக்கார்டி

உஷ் சும்மா இரு


17. டிகிரி படிக்காதவங்க குழ்ந்தை படிக்கக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா சார்?



18. இந்த நாயோட விலை ஏன் இவ்வளவு ஜாஸ்தி இருக்குன்னா இதனோட அண்ணன் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வீட்ல வளருது


அப்போ இதை மெகா ஸ்டார் மம்முட்டி வீட்ல வித்துடு



19. உனக்கு யார் மேலயாவது  கோபம்னா அவங்களை என்ன வேணா பண்ணு , திட்டு , அடி , கொலை கூட பண்ணு , ஆனா பேசாம மட்டும் இருந்துடாதே




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 50 



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று 

ரேட்டிங் =  4  / 5


சி பி கமெண்ட் -தங்கமீன்கள் - நேர்த்தியான ஒளிப்பதிவு ,மனதை வருடும் பின்னணி இசை ,நுட்பமான வசனங்கள் ,கண் கலங்க வைக்கும் நடிப்பு- அனைவரும் தியேட்டருக்குப்போய் பார்க்கவேண்டிய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் , டோண்ட் மிஸ் இட்

ஏழ்மையை அனுபவிக்காதவர்கள் ,அதணால் ஏற்படும் அவமானங்களை உணராதவர்கள் தங்க மீன்கள் மாதிரி படத்தை ரசிக்க முடியாது

தங்க மீன் கள் கமர்சியல் ரீதியான வெற்றி பெரும் வாய்ப்பில்லை.பல விருதுகளை அள்ளும்.பத்திரிக்கைகளில் பலத்த பாராட்டு விமர்சனங்களை அள்ளும்

Thursday, August 09, 2012

உயிர்வதை! - வில்லவன் கோதை -சிறுகதை

சிறுகதை

உயிர்வதை!

வில்லவன் கோதை

ஜோதி, இன்னிக்கு நைட்டே நாகப்பட்டினம் கிளம்பறோம். பத்து மணிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ். நாளைக்கு நாகப்பட்டினத்துல ஹால்ட். மறுநாள் ஞாயிறு மார்னிங் திருக்கண்ணபுரம். வேண்டுதல முடிச்சிட்டு அன்னிக்கு நைட்டே சென்னை ரிட்டர்ன். தேவையானதை எடுத்து வெச்சுக்க. ஒங்க அம்மாகிட்டயும் பேசிடு. வாசுவுக்கு சொல்லிட்டேன்" அலுவலகத்திலிருந்து படபடவென்று பேசினான் சுரேஷ்.
வர்றப்ப சாமி பாவாடையை மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க..."
இடுக்கோடு இடுக்காக சுரேஷுக்கு நினைவூட்டினாள் ஜோதி.
சரி... அனுவுக்கு..."
பட்டுப் பாவாடைச் சட்டை... அம்மா எடுத்துட்டு வந்துடுவாங்க."
ம்...சரி!"
- துண்டித்தான் சுரேஷ். இரண்டு வருடம் நின்றிருந்தது குலதெய்வ வழிபாடு. நெடு நாளாக நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த ஒரு சுமை இப்போது மெல்ல தளர்வதை உணர்ந்தாள் ஜோதி.
சுரேஷைக் கைப்பிடித்து, சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. சமீப காலங்களில் எத்தனையெத்தனை கஷ்டங்கள். அத்தனைக்கும் இதுவேகூட ஒரு காரணமென்று உறுதியாக நம்பினாள் ஜோதி.
இந்த வருடம் கூடுதலாக தங்கள் குழந்தை அனுவுக்கு மொட்டை போட்டு, காது குத்தவும் போகிறார்கள். இரண்டு வருடத்துக்கு முன்பே செய்யவேண்டியது. அனுஷா இப்போது ஆறு வயது முடிந்து யூகேஜி வந்துவிட்டாள்.
இந்த சந்தோஷ சமாச்சாரத்தை அம்மாவோட பகிர்ந்துகொள்ள தொலைபேசி எண்களை அழுத்தினாள் ஜோதி.
அடுத்தகணம் தொலைபேசி மணி நன்னிலத்தில் ஒலித்தது.
அம்மாதான் எடுத்தாள்.
அம்மா... அவருக்கு லீவு கெடச்சிட்டாம். வர்ற ஞாயித்துக்கிழமை அனுவுக்கு காது குத்தல். நீங்கெல்லாம் அண்ணாவோட நேரா கோயிலுக்கே வந்துடுங்க. தோடும் ஜிமிக்கியும் துக்னோண்டு எடுத்துக்கிட்டு வந்து நிக்காதே! செத்த பெரிசாவே எடுக்க வாசுகிட்டே சொல்லு. அனுவுக்கு பட்டுப் பாவாடைச் சட்டை அரக்கு கலர்தான் நல்லா இருக்கும். திருபுவனம் சொஸைட்டியிலேயே எடுத்துடு. ஜிமிக்கி மாயவரம் ஏஆர்சிலேயே வாங்கச்சொல்லு" - தகவலைப் பகிர்ந்த திருப்தியில் தொலைபேசியை வைத்தாள் ஜோதி.
மூவருக்கும் இரண்டுநாள் பயணத்துக்குத் தேவையான துணிகளைத் தேடித்தேடி சேகரித்தாள்.
மூலைக்கு மூலை இறைந்து கிடந்த அனுவின் விளையாட்டுச் சாமான்களைப் பொறுக்கி எடுக்கும்போதுதான், சின்னஞ்சிறு குட்டி நாய் ஜானி ஞாபகம் வந்தது.
அது இந்த நடுத்தரக் குடும்பத்தோடு கலந்து ஏறத்தாழ ஆறுமாதமிருக்கலாம். அனு இப்போதெல்லாம் பள்ளியில் கழிக்கும் நேரத்தைத் தவிர பெரும்பாலும் ஜானியோடுதான்.
இந்த இரண்டு நாள் பயணத்துக்கு ஜானிக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீட்டின் சுற்றுச்சுவரின் கதவுகளுக்கிடையே இரண்டு கால்களை உயர்த்தி, கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து வாலை விசிறியவாறே அனுவின் வருகையைப் பார்த்திருந்தது ஜானி.
சுரேஷ், அனுவோடு பைக்கிலிருந்து இறங்கினான்.
ஒன்னவர் பிஃபோராவே கௌம்பிட்டேன். சாமி பாவாடை வாங்கிக்கிட்டு அப்படியே இவளையும் பிக்கப் பண்ணிட்டு வந்துட்டேன்."- உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
முதுகை இறுக்கிய புத்தகச் சுமையைத் தளர்த்தி வராண்டாவில் வீசிவிட்டு ஜானியை அள்ளிக் கொண்டாள் அனு.
நாமெல்லாம் ஊருக்குப் போறோம்.. செல்லம்!"
ஜானியின் முகத்தோடு முகம் வைத்தாள் அனு.
ஜானி இல்லை.. நாம மட்டுந்தான்டா தங்கம்."
ஏம்மா..." குழந்தையின் முகம் மாற்றம் பெற்றது.
அனு ! ஊர்ல ஒன்னோட விளையாட புதுசா ஒரு ஃப்ரெண்ட் வெயிட் பண்றான்." அனுவை சமாதானப்படுத்திக்கொண்டே வியர்வை வாசம் நிறைந்த ஆடைகளைக் களைந்தான் சுரேஷ்.
ஜோதி! கிருஷ்ணா ஒரு குட்டி ஆட்ட வாங்கிட்டானாம். கிடா வெட்டித்தான் காது குத்தணுமாம். அவன் ஃப்ரெண்ட்ஸெல்லாம் வர்றாங்களாம்."
இது என்ன புதுப்பழக்கம்..." -முகம் சுளித்தாள் ஜோதி.

மனுஷா ரசனைக்குத் தகுந்தாற்போல பழக்கங்களும் மாறிக்கிட்டுத்தான் வருது..." -நிகழப்போகும் ஓர் உயிர் வதையை அங்கீகரித்தான் சுரேஷ்.
கடாவெட்டா ... என்னப்பா அது..."- அனு, அப்பாவை வியப்போடு பார்த்தாள்.
ஆட்டுக்குட்டியை சாமிக்கே குடுத்துடுறது..."
சுருக்கமாகப் பதிலளித்த சுரேஷ் குளியலறைக்குள் நுழைந்தான்.
காப்பிக்குப் பாலைக் காய்ச்சி வைத்து விட்டு அனுவைக் குளிப்பாட்ட ஜோதி தேடியபோது, அனு சோபாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஜானியும் அவள் பிஞ்சு கைகளில் சுகமாகச் சிறைப்பட்டுக் கிடந்தது.
விர்ரென்று ஆட்டோ வட்டமடித்து கிருஷ்ணா வீட்டு வாசலில் நின்றது. முன்னால் பைக்கில் வந்த கிருஷ்ணாதான் குழந்தை அனுவை வாங்கிக்கொண்டான்.
சுரேஷும் ஜோதியும் உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.அடுத்த அரைமணியில் கிருஷ்ணாவின் மனைவி கங்கா ஃபில்டர் காபியுடன் உபசரித்தாள். அனு வீட்டின் பின்புறம் தனக்காக காத்திருக்கும் புதிய நண்பனைக் காண ஆவலோடு ஓடினாள்.
வாயிலின் ஓரத்தில் வளர்ந்திருந்த கிளுவ மரத்தின் அடியில் அந்த வெள்ளாட்டுக்குட்டி கயிற்றால் கட்டப்பட்டு கொஞ்சம் கிளுவ இலைகள் உணவுக்காக போடப்பட்டிருந்தது. தன் நுனிப்பற்களால் இலைகளைக் கடிப்பதை நிறுத்தி, தலையைத் தூக்கி தன்னைக் கூர்ந்து நோக்கும் சிறுமியை நோட்டமிட்டது அந்தக் குட்டி ஆடு. அனுவுக்கு அந்தப் புதிய நண்பனை மிகவும் பிடித்து விட்டது. அனுவும் நட்பாகப் பேசி அந்தக் குட்டி ஆட்டின் நெஞ்சுக்குள் நுழைந்துவிட்டாள்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குலதெய்வ வழிபாட்டு இடங்கள் ஊருக்கு வெளியே எல்லையோரங்களில் அமைந்திருக்கவில்லை. பிரமிப்பூட்டும் உயரங்களில் வண்ணம் பூசப்பட்ட சுடுமண் சிற்பங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் நின்றதில்லை.
அந்நாட்களில் மூதாதையர்களின் நினைவாக நடப்படும் நினைவுக் கற்களை பெரும்பாலும் தங்கள் தங்கள் வீடுகளுக்குப் பின்புறமே நடப்பட்டு, காலம் காலமாக குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு மிகவும் பிரியமான மீனையும் மாமிசத்தையும் படைத்துக் கொண்டாடினர். மதுவையும் சுருட்டையும் கூட வழிபாட்டின் போது படையலிட்டு மகிழ்ந்தனர். அதன் வளர்ச்சிதான் இந்த உயிர்வதை.
சரியாக காலை பதினொரு மணியளவில் பத்து, பதினைந்து பேரை சுமந்து கொண்டு அந்த மகேந்திரா வேன் திருக்கண்ணபுரத்தை அடைந்தது.
சிறப்புமிக்க வைணவ தலங்களில் ஒன்றான சௌரிராஜ பெருமாள் திருக்கோயிலும் எதிரே விரிந்து கிடந்த திருக்குளமும் ரம்மியம். கோயிலைச் சுற்றிப் படர்ந்து கிடந்த வீடுகளைக் கடந்து கிழக்கு மூலையில் ஒதுங்கிக் காணப்பட்ட அங்காள பரமேஸ்வரி ஆலயத்தை அடைந்தபோது முன்னதாகவே மேலும் ஒரு மகேந்திரா வேன் இளைப்பாறுவதை சுரேஷ் பார்த்தான். அந்த வேனில் சம்பந்திக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் நன்னிலத்திலிருந்து வந்திருந்தார்கள். மாமியும் மைத்துனனும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்கள். ஜோதியும் வாசுவும் நெகிழ்வோடு பார்க்க அனு ஓடிப்போய் பாட்டியோடு ஒட்டிக்கொண்டாள்.
இரண்டு வேன்களிலிருந்தும் வந்தவர்கள் ஏறத்தாழ முப்பது பேர்களுக்குள் இருக்கக்கூடும். வேன்களிலிருந்த வேண்டுதலுக்குத் தேவையான அத்தனை பொருள்களும் இறக்கப்பட்டன. அனுவுக்கு பிரியமான குட்டி ஆடும் இறக்கப்பட்டது.
திருப்புகலூரிலிருக்கும் சுரேஷின் சித்தப்பா செல்வம் வழிபாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னால் குறுகிய கொட்டகையில் வாசம் செய்த அங்காளம்மை இப்போது சற்று விரிவான வளாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சுற்றுச்சுவரையொட்டி வீரன் பெரியாச்சி முனி என்ற காவல் தெய்வங்களும் தனித்தனியே நின்றிருந்தன. கருவறைக் கோபுரம் வண்ணப்பூச்சு செய்து புதுப்பிக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சுரேஷின் சித்தப்பா செல்வம் பூசாரியைத் தேடி வழிபாட்டுக்குச் சொல்லியிருந்தார். கிடா வெட்டுவதற்கும் தனியாக ஒரு ஆளை பேசியிருந்தார்.
கோயில் பூசாரி பாலகுரு குடம்குடமாக தண்ணீர் விட்டு தெய்வங்களை நீராட்ட தொடங்கியிருந்தான். வாசம் மிக்க சாம்பிராணி புகை சூழ தீபாராதனையை அத்தனை பேரும் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
மொட்டையடிக்க பேசப்பட்ட முருகேசன் சைக்கிளில் வந்து இறங்க ஆட்டுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுவைத் தூக்கி வந்தான் மாமன் வாசு. தனித்தனியே வட்டமிட்டுக் கதை பேசிய இரண்டு குடும்பத்தினரும் பரபரப்பாயினர்.
வாசுவின் மடியில் அனு அமர்ந்திருக்க கத்தியில் ப்ளேடை மாற்றிய முருகேசன் லாகவமாக முடியை வழித்தெடுத்தான்.

செருமிச்செருமி அழுத அனுவை நீராட்டி, பட்டுப் பாவாடைச் சட்டையை அணிவித்தாள் ஜோதி. வழவழப்பான சிவந்த தலை முழுதும் குளிர்ச்சிக்கு மணம் கமழும் சந்தனம் பூசப்பட்டது. இன்னும் அனுவின் அழுகை நின்றபாடில்லை. அழுகையை நிறுத்த அவளுக்குப் பிரியமான குட்டி ஆட்டிடம் கொண்டு போனான் வாசு. அடுத்த கணம் அனுவின் அழுகை தடம் மாறி இயல்பு நிலைக்கு வந்தது. ஆட்டின் கழுத்தை இழுத்து இறுக்கி முத்த மிட்டாள். மொட்டையடிக்கப்பட்ட அனுவை அறியாது ஆடு மிரண்டது.
அனுதாண்டா தங்கம்...!"
ஆட்டுக்கு தன்னைப் புரிய வைக்க மெல்ல மெல்ல முயற்சித்தாள் அனு.
சூரியன் மேல் திசையில் சரியத் தொடங்கினான். மணி ஒன்றைத் தாண்டிற்று. காதுகுத்தும் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்ட பொற்கொல்லன் சண்முகம் கைப்பையுடன் காத்திருந்தான்.
ஆடு அறுப்பதற்குச் சொல்லப்பட்ட உள்ளூர்க்காரன் வந்து சேரவில்லை.அவனை எதிர்பார்த்துப் பயனில்லை என்பதை உணர்ந்த சித்தப்பா செல்வம் பக்கத்திலிருக்கும் திருமருகலிலிருந்து யாரோ ஒருவனை டி.வி.எஸ்.50யில் அழைத்து வந்தார்.
வந்து இறங்கியதுமே கத்திகளை எடுத்து கருங்கல் தரையில் தீட்டத் தொடங்கி விட்டான். அனு அவனை அச்சத்தோடு பார்த்தாள்.
என்ன செய்யப் போறீங்க..." -நடக்கப் போவது அனுவுக்கு மெல்ல புரிந்தது. அனு உயர்ந்த குரலெழுப்பி அழத் தொடங்கி விட்டாள்.
வெட்டாதீங்க... ப்ளீஸ்..."
மாமா வெட்டப் போறாங்க மாமா... சொல்லுங்க மாமா..."
அனுவின் அழுகுரலைக்கேட்டு ஜோதியும் சுரேஷும் ஓடிவந்தார்கள்.
அப்பா! ஆட்டுக்குட்டிய வெட்டச் சொல்லாதீங்கப்பா... பாவம்பா... அம்மா சொல்லுங்கம்மா... பாட்டி!... பாட்டி...நீங்க சொல்லுங்க."
குட்டியின் கழுத்தை இறுகப் பற்றியவாறு ஒவ்வொருவரையும் உதவிக்கு அழைத்தாள் அந்தச் சிறுமி.
அவள் காட்டிய பிடிவாதம் சுரேஷை நிலை குலையச் செய்தது.
சரி. வேண்டாம்மா..."
ஒரு முடிவுக்கு வந்தான் சுரேஷ்.
கொழந்தைக்கு என்னங்க தெரியும்."
கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுப்பிற்று.
வாசு... குட்டியக் கோயில் நிர்வாகத்துக்கிட்ட விட்டுடு....காது குத்தற வேலையைப் பாருங்க.. சாப்பாட்ட சித்தப்பா பாத்துக்குவார்."
குழுமியவர்களிடையே ஏற்பட்ட சிறு சலசலப்பைத் தவிர்த்து அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினான் சுரேஷ்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்லப்பட்டதை மீறி, குழந்தையின் குரலுக்கு முதன் முதலாகக் கட்டுப்பட்டான் சுரேஷ்.



நன்றி - கல்கி , புலவர் தருமி