Showing posts with label மனைவியைப்பற்றிய உண்மையால் உடைந்த சந்திரபாபு வாழ்க்கை! -ஒரு ஃபிளாஸ்பேக். Show all posts
Showing posts with label மனைவியைப்பற்றிய உண்மையால் உடைந்த சந்திரபாபு வாழ்க்கை! -ஒரு ஃபிளாஸ்பேக். Show all posts

Tuesday, August 04, 2015

மனைவியைப்பற்றிய உண்மையால் உடைந்த சந்திரபாபு வாழ்க்கை!-ஒரு ஃபிளாஸ்பேக்

தமிழ் சினிமாவின் வரலாறு கூறும் நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த வகைமையில் கால வாரியாகப் பேசும் நூல்களின் வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறது சித்ரா லட்சுமணன் எழுதியிருக்கும் 80 ஆண்டு காலத் தமிழ் சினிமா 1931 - 2011 என்ற நூல்.
89 அத்தியாயங்கள் 552 பக்கங்கள் என விரியும் இந்த நூலின் ஈர்க்கும் அம்சம் அவற்றில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள். வெறும் தகவல் களஞ்சியமாகச் சுருங்கிவிட்டால் நூல் முழுமையான வெற்றியை அடையாது என்று தெளிவாகவே இருந்திருந்திருக்கிறார் நூலாசிரியர். எண்பதாண்டு காலத் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த படங்கள் உருவான பின்னணியே பிரமிப்பாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும்போது சம்பவங்களுக்குப் பஞ்சமா என்ன?
அதேபோல் நட்சத்திரங்களின் வாழ்க்கையும் திரைப்படங்களைவிட விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்டிருப்பதை இந்த நூலின் மூலம் அவதானிக்க முடிகிறது. உதாரணத்துக்கு, சந்திரபாபு திருமண வாழ்க்கை குறித்து விவரிக்கும் இடம்.
ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார் சந்திரபாபு. மணமான சில நாட்களில் கணவன் மனைவிக்கு இடையில் எவ்வித ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மணமாவதற்கு முன் தனக்கிருந்த பெண் சிநேகிதம் பற்றி மனைவியிடம் மனம் திறந்து கூறியிருக்கிறார். கணவனின் பெருந்தன்மையை எண்ணிப்பார்த்து வியந்த ஷீலா, தனக்கும் திருமணத்துக்கு முன் ஒரு ஆண் நண்பர் இருந்ததாகக் கூறினாராம். அவ்வளவுதான் வந்ததாம் கோபம் சந்திரபாபுவுக்கு.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, மனைவியை அழைத்துப்போய் வீட்டுக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்திவிட்டாராம். அது இரவு நேரம். ஷீலா எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்கவில்லை. வேறு வழியில்லாமல் சந்திரபாபு மிகவும் மதிக்கும், ‘தமிழ்ப் பட உலகின் தந்தை’ எனப் போற்றப்படும் கே. சுப்ரமணியம் வீட்டுக்கு போன் செய்து விவரத்தைச் சொல்லியிருக்கிறார் ஷீலா. அவர் உடனே தனது உதவியாளரை அனுப்பி ஷீலாவைத் தனது வீட்டுக்கு அழைத்துவரச் செய்தார். “கவலைப்படாமல் நீ போய்த் தூங்கு. காலையில் நான் அவனை அழைத்துப் பேசிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மறுநாள் காலை சந்திரபாபுவை அழைத்து சமாதானம் செய்து வைக்க முயன்றார் கே. சுப்ரமணியம். வழக்கமாக அவரது பேச்சைக் கேட்கும் சந்திரபாபு இந்த விஷயத்தில் மசியவில்லை. “நீங்கள் என்னை வற்புறுத்தினால் நான் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டியிருக்கும்” என்று முடிவாகக் கூறினாராம் சந்திரபாபு.
இனியும் அவரை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்த கே. சுப்ரமணியம் லண்டனில் வாழ்ந்துவந்த ஷீலாவின் தயாருக்குத் தகவல் அனுப்பி அவரை சென்னைக்கு வரச் செய்து அவரிடம் மகளை ஒப்படைத்தாராம் கே. சுப்ரமணியம். (ஆனால் பின்னர் தனது மனைவியை அவரது காதலருடன் சந்திரபாபு இணைத்து வைத்ததாகவும் ஒரு தகவல் இருக்கிறது.)
இப்படிப் பல சம்பவங்கள் இந்த நூலில் வாசிக்கக் கிடைக்கின்றன. மனித வாழ்வில் இருக்கும் எல்லாச் சுவைகளும் உணர்வுகளும் அவற்றில் உண்டு. முன்னோடியாகத் தனக்கு முன் சினிமா வரலாற்றை பதிவு செய்த பலரது புத்தகங்களிலிருந்தும் தேவையான தரவுகளையும் தகவல்களையும் சரியான இடங்களில் எடுத்தாண்டிருக்கிறார் நூலாசிரியர்.
80 ஆண்டு கால தமிழ் சினிமா 1931-2011
சித்ரா லட்சுமணன், விலை 500 ரூபா, காயத்ரி வெளியீடு
H3E, இரண்டாவது தளம், பாரதிதாசன் காலனி,
சென்னை-78 தொடர்புக்கு: 044 24893559