Showing posts with label புதிர் பருவம். Show all posts
Showing posts with label புதிர் பருவம். Show all posts

Monday, November 16, 2015

அவசியம் கற்க வேண்டிய பாடம்

ஓவியம்: முத்து

வயது ரீதியான சாதாரண உடல், மன மாற்றங்களைப் பற்றி அடிப்படைத் தெளிவுகூட இல்லாமல் விடலைப் பருவத்தினர் தொடர்ந்து உழன்றுகொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இன்மையும், வெளியில் சொல்ல வெட்கப்படுவதும்தான். சிறுநீரகத்தில் கல்லடைப்புக்கு எந்த மருத்துவரைப் பார்க்கலாம், என்ன செய்யலாம் என்று அது தொடர்பாகச் சிகிச்சை பெற்ற ஒருவரிடம் கேட்கலாம். ஆனால், பாலியல் சந்தேகங்களை யாரிடம் கேட்பது? பலருக்கும் இப்படிச் சந்தேகங்கள் நீண்டுகொண்டே போகும்.


கடைசியில் முறைசார்ந்த பயிற்சி பெற்ற மருத்துவருக்குப் பதிலாக, விளம்பரங்களால் கவரும் போலி மருத்துவர்களிடம் சரணடைந்து விடுவதுதான் பலரும் சென்றடையும் தவறான பாதையாக இருக்கிறது. வளர்இளம் பருவத்தினரிடம், பெற்றோர் நல்ல நண்பனைப்போல நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. நண்பர்கள் மற்றும் வலைதளங்கள் பல நேரங்களில் அவர்களைத் தவறான பாதைக்கு வழிநடத்த அதிக வாய்ப்புண்டு.


பொது மருத்துவரிடம் வேறு ஏதாவது நோய்க்குச் சிகிச்சை பெறச் செல்லும்போது, சந்தேகம் நாக்கின் நுனிவரை வந்துவிடும். ஆனால், அவர் ஏதாவது தப்பாக நினைத்துவிடுவாரோ என்ற பயம். சில நேரம் நோய்க்கான காரணங்களை அறிய, இது குறித்துக் கேட்கத் தோன்றி, மருத்துவரும் கேட்காமல் விடலாம். இந்தத் தடைவேலி அறுக்கப்பட்டால்தான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.


பாலுணர்வு வெட்கத்துக்குரியதா?

பத்தாம் வகுப்பில் உயிரியல் புத்தகத்தை வாங்கிய உடன், இனப்பெருக்க உறுப்புகளின் வரைபடங்களும் அது சம்பந்தப்பட்ட விளக்கங்களும் கடைசிப் பாடமாக இருந்தால்கூடப் பலரும் ஆர்வத்துடன் படித்து முடித்துவிடுவார்கள். வகுப்பில் காதல் சம்பந்தப்பட்ட இலக்கியம் பாடமாக நடத்தப்படும்போது மாணவர்களுக்குள்ளே நமுட்டுச் சிரிப்பும், குசுகுசு சத்தங்களும் கேட்கும்.


இத்தனை ஆர்வம் உள்ள விடலைப் பருவத்தினருக்கு, அதைப் பற்றித் தெளிவான கல்வி விளக்கங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இதைப் பற்றிய பேச்சு என்றாலே சிலர் கூச்சமாகவும் வெட்கமாகவும் நினைக்கிறார்கள். மற்றொரு சாரார் இதைப் பற்றி பேசுவதே பாவம், தவறு என்று நினைக்கிறார்கள். ஏன், நோயாளிகளிடம் நோய் வரலாறு கேட்டு எழுதும் படிவத்தில் ‘செக்ஸுவல் ஹிஸ்ட்ரி’ என்ற பகுதியை, மருத்துவ மாணவர்கள்கூட எழுதாமல் விட்டுவிடுகிறார்கள்.


கல்வியின் அவசியம்

பாலியல் குறித்த இத்தனை பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில், பள்ளி சார்ந்த பாலியல் விழிப்புணர்வுக் கல்வி பாலியல் சார்ந்த புரிதலில் பெரிய மாற்றங்களை நிகழ்த்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமூக ரீதியான குழுக்களில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளும் விடலைப் பருவத்தினர் மத்தியில், இளம்வயதில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் கர்ப்பம் போன்றவை பெருமளவு குறைந்திருப்பதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


அடுத்த ஐந்து வருடங்களில் உலக மக்களின் ஆரோக்கிய வாழ்வைத் தீர்மானிக்கும் பத்து முக்கியக் காரணிகளுள் ஒன்றாக, வளர்இளம் பருவத்தில் ‘நிதானமான மற்றும் ஆரோக்கியமான பாலியல் அணுகுமுறைகள்’ என்ற கருத்து முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எனவே பெற்றோர், அரசு, கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் இதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு செயல் பட வேண்டிய அவசியம் உள்ளது.


பாலியல் சந்தேகங்கள்: பெற்றோர் கவனத்துக்கு

# "இந்த வயதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் வருவது இயற்கைதான், நாங்களும் அதைக் கடந்துதான் வந்திருக்கிறோம்" என்று கூறி ‘தாங்கள் பெற்றோரால் புரிந்துகொள்ளப்படுகிறோம்’ என்ற உணர்வை விடலைப் பருவத்தினரிடம் ஏற்படுத்துங்கள்.


# செக்ஸைப் பற்றி பேசித் தேவையில்லாமல் நாமாகவே அந்த எண்ணத்தை விதைத்துவிடுவோமோ என்ற பயம் வேண்டாம். அது இயல்பானது. அந்த வயதுக்குரியது.


# வாரிசுகளின் சங்கோஜமான அல்லது முரண்பாடான கேள்விகளாலோ கருத்துகளாலோ கோபமோ பதற்றமோ அடையாதீர்கள். மாறாக "நீ இப்படி வெளிப்படையாகக் கேட்பது எனக்குப் பிடித்திருக்கிறது. பிரச்சினையைத் தீர்க்க இதுதான் முதல் படி" எனப் பாராட்டுங்கள்.


# பாலியல் குழப்பங்கள், பாலியல் சார்ந்த வன்முறைகளால் ஏற்படும் மன உளைச்சல்கள், இளம் வயது கர்ப்பம், பால்வினை நோய்கள், சமூகரீதியான பாதிப்புகள் பற்றி உங்கள் வாரிசுகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். இது பிரச்சினைகளை மோசமடையாமல் தவிர்க்க உதவும்.


# பாலியல் சம்பந்தப்பட்ட விளக்கங்களைத் தனி வகுப்புபோல் நடத்த வேண்டாம். அவ்வப்போதுக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாகச் சினிமாவில் பாலியல் சம்பந்தப்பட்ட கவுரவமான காட்சிகள் வரும்போது ‘இந்தக் காட்சியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று ஆரம்பிக்கலாம். அல்லது ‘இப்படித்தான், நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு நண்பன் இதுபோன்ற பாலியல் குழப்பத்தில் மாட்டிக்கொண்டான்’ எனக் கற்பனையாகக்கூடச் சூழ்நிலையை உருவாக்கிப் பேச ஆரம்பிக்கலாம்.


# எதிர்பாலினரிடம் பழகும்போது நல்ல தொடுதல் எது, தவறான நோக்கத்துடன் கூடிய தொடுதல் எது என்பதைத் தெளிவுபடுத்துங்கள். தவறு என்று தோன்றும் செயல்களுக்குத் தைரியமாக ‘நோ’ சொல்லக் கற்றுக்கொடுங்கள்.


# சில நேரங்களில் தன்பாலின உறவு பற்றிய எண்ணங்களோ தொடுதல்களோ இந்த வயதில் வர வாய்ப்பு உண்டு என்பதையும், அது செக்ஸைத் தவிர்ப்பதற்கான மாற்றுவழி அல்ல என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.


# மதரீதியான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் ‘செக்ஸ் என்பது ஒரு பாவச் செயல்’ என்று போதிப்பதைவிட, ‘செக்ஸ் என்பது கடவுள் தந்தவற்றுள் அற்புதமான, உன்னால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று பேசுங்கள்.


# உங்கள் கருத்துகளைத் திணிக்கும் களமாகப் பாலியல் கல்வியைப் பயன்படுத்தக் கூடாது. தங்கள் பாலியல் உணர்வு பெற்றோரால் தீர்மானிக்கப்படுகிறது என மகனோ / மகளோ நினைத்துவிட்டால் சகஜமாகப் பேச மாட்டார்கள்.


# பாலியல் என்பது மறைமுகமாகவோ, குத்திக்காட்டியோ, மழுப்பலாகவோ பேச வேண்டிய விஷயம் அல்ல. தெளிவாக, வெளிப்படையாகப் பேசப்பட வேண்டியது. பெற்றோர் அதைப் பேசக் கூச்சப்பட்டால், வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.
# கடைசியாக, ஆனால் முக்கியமாகப் பாலியல் குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

thanks the hindu

Wednesday, October 28, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 6 - புதுப்புது சந்தேகங்கள் முளைக்கும் காலம்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘செக்ஸ்’. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் காதை பொத்திக்கொண்டு ஓடுபவர்களும், ‘களுக்' என்று வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களுமே அதிகம். இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர் 'செக்ஸ்' என்பது பாவமான காரியம் என்றோ அல்லது கேலிக்குரிய செயல் என்றோ குழப்பத்தில் தத்தளிக்கின்றனர்.
உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனிதர்களுக்கு, இன்னும் பல நேரங்களில் புரியாத புதிராய் இருப்பது செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். அதிலும் இந்தியர்களுக்குப் பாலியல் குறித்த சந்தேகங்களும், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகம்.
இதைத்தான் மனநலப் பேராசிரியர் ஒருவர் நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: "ஆங்கிலேயர்கள் செக்ஸை இனப்பெருக்க உறுப்புகளில் (Genitals) வைத்து முடித்துவிடுவார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எப்போதும் மனதிலேயே (Mind) வைத்திருப்பார்கள்".
உளவியல் அடிப்படை
‘செக்ஸ் உணர்வு என்பது மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே உருவாகிவிடுகிறது. ஆனால், அது வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது' என்று உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். இப்படிச் சொன்ன தற்காகப் பல எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தார்.
அவருடைய கூற்றுப்படி பாலியல் உணர்வை ஒரு விதைக்குள் இருக்கும் மரத்தோடு ஒப்பிடலாம். ஊன்றப் பட்டதிலிருந்து மண்ணுக்குள்ளிருந்து வெளியே வரும்வரை வெளியில் தெரியாமல் இருக்கும். அந்த விதை செடியாக வளரும் பருவம் போலத்தான், விடலைப் பருவமும். பதிமூன்று வயதில்தான் பாலியல் உணர்வுகள் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பிக்கும். சில வருடங்களில் அது தீவிரமடையும், பரிசோதித்துப் பார்க்க முயற்சி செய்யும்.
பாலியல் தேடல்
இந்த ஆர்வத்தில்தான் ‘குழந்தை எப்படிப் பிறக்கிறது?’ என்றும் ‘திருமணமன்று கழுத்தில் தாலி கட்டிவிட்டால் குழந்தை பிறந்துவிடுமா?’ என்றும் ஏடாகூடமான கேள்விகளைச் சில வளர் இளம்பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள். கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில், அவர்களுடைய தேடல் ஆரம்பித்துவிடும்.
‘அய்யய்யோ... இந்தப் புள்ள இப்படியெல்லாம் பேசுதே!' ன்று பெற் றோர் கவலைப்படத் தேவையில்லை. மனிதனின் முக்கிய அடிப்படைத் தேவைகள் மூன்று. அந்த வகையில் உணவு, தூக்கத்துக்கு அடுத்துச் செக்ஸுக்கு மூன்றாவது இடம். அதனால்தான் பெரும்பாலான விடலைப் பருவத்தினர் தங்கள் ரகசியக் கேள்விகளுக்கான விடைகளை ராத்திரி 11 மணிக்கு மேல் டிவி சேனல்களிலோ, வலைதளங்களிலோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பாலின ஈர்ப்பு
கிட்டத்தட்ட 12 வயதுவரை பெண் குழந்தைகளுடன் உட்கார விரும்பாத ஆண் குழந்தைகள் ‘பதின்பருவ' வயதில் பெண் குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார ஆசைப்படுவார்கள். அதேபோல, ஆண் குழந்தைகளைப் போட்டியாளர்களாகப் பாவிக்கும் பெண் குழந்தைகள், பதின் பருவத்தில் ஆண் குழந்தைகளின் மீது கரிசனம் காட்டத் தொடங்குவார்கள்.
வளர் இளம்பருவத்தில் எதிர்பாலினத்தவருடன் பழக வேண்டும், நட்புகொள்ள வேண்டும் என்ற ஆசை அரும்புவிட ஆரம்பிக்கும். இதுவும் சமூகப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள ஒருவகையில் உதவி செய்யும், இயற்கையின் உந்துதல்தான். இந்த ஈர்ப்பு, வளர் இளம்பருவத்தினர் மத்தி யில் காதலாக மாறவும் வாய்ப்புண்டு.
ஹார்மோன் விளையாட்டு
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் ரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
பையன்களுக்கு மீசை மற்றும் உடலில் ரோம வளர்ச்சியும், பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உடல் வடிவங்களில் மாற்றம் மற்றும் மாதவிடாய் ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில் நுழைவதற்கான லைசென்ஸ் என்றே கருதலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மட்டுமல்ல, உடல் மற்றும் பாலியல் வளர்ச்சியிலும் முதலிடம் பெண்களுக்குத்தான். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வளர்ச்சி வேகமடைவதும் விடலைப்பருவம்தான்.
ஒப்பிடுதல்
ஆணுறுப்பு வளரும் இந்த நேரத்தில்தான் பையன்களுக்குப் பல சந்தேகங்கள் வரும். நண்பர்களுடன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் ஆணுறுப்பின் வளர்ச்சியைக் குறித்த பயம் ஏற்படும். பாலியல் மீதான எதிர்பார்ப்பு கூடுவதற்கு ஏற்ப, ஆணுறுப்பின் வளர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். பள்ளியில் சிறுநீர் கழிக்கும்போது நண்பர்களின் ஆணுறுப்பின் அளவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக எட்டிப்பார்க்கவும் கூச்சப்பட மாட்டார்கள்.
தங்கள் ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று தோன்றுகிற பட்சத்தில், மொத்தப் பாலியல் வாழ்க்கையுமே பாழாகிப்போனது போன்ற கவலை அவர்களைத் தொற்றிக் கொள்ளும். போதாக்குறைக்குப் புத்தகங்களிலும் வலைதளங்களிலும் வரும் ‘இந்தக் கிரீமை உபயோகித்தால் பல சென்டிமீட்டர் அளவுக்குக் கூட்டலாம்’ என்பது போன்ற விளம்பரங்கள் வேறு, அவர்களை அதிகப் பதற்றமடைய வைக்கும். ஆனால், ஆணுறுப்பின் அளவுக்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் மருத்துவரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.
மார்பக வளர்ச்சி
ஆண்களுக்கு ஆணுறுப்பைப்போல, பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் பல சந்தேகங்களும் பயங்களும் தோன்றும். மார்பக வளர்ச்சி குறித்துத் தோழிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பதற்றமடைவதும் இயற்கை. தாயிடம் இருக்கும் நல்ல உறவு, அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க உதவும்.
மாதவிடாய் குறித்த பயம், அது வரும் நாட்களில் உடல், மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆலோசனை பெறுவது மிக அவசியம். சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் ஐந்து நாட்கள் அதிகப் பதற்றம், தூக்கமின்மை, மார்பு கனமாகத் தோன்றுதல், எரிச்சல்தன்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு premenstrual syndrome என்று பெயர். இதைச் சமாளிக்க ஆரோக்கியமான உணவு, போதிய ஓய்வுடன் சிலநேரம் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படலாம்.
(அடுத்த முறை: கலக்கம் தரும் திடீர் கனவு)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: [email protected]


தஹிந்து

Wednesday, October 14, 2015

பதின் பருவம் புதிர் பருவமா?- 2: என் வழி தனி வழி-டாக்டர் ஆ.காட்சன்

‘வர வர அவன் சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிறான்’… ‘எப்பப் பாரு இவளுக்குக் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டிருக்கணும்’... பதின் வயதுப் பிள்ளைகள் உள்ள எல்லா வீடுகளிலும் இந்த வசனங்களைக் கேட்க முடியும். வளரிளம் பருவத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றங்களில், இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
இதுவரை பெற்றோரோடு தூங்கிய மகன்/மகள், தனி அறையை நாடத் தொடங்குவார்கள். இவ்வளவு காலம் தாயின் கையைப் பிடித்து சாலையில் நடந்து சென்றிருந்தாலும், இப்போது வெட்கமாகத் தோன்றும். பெற்றோரின் ஆலோசனையைவிட நண்பர்களின் சொற்கள் வேதவாக்காகத் தெரியும்.
ஆனால், இந்தப் பருவம்தான் தனக்கென்று ஒரு தனித்தன்மை (Identity) மற்றும் அகநிலையை - சுயத்தை (Self) உருவாக்கிக்கொள்ளும் காலம். இது ஆரோக்கியமான மாற்றம்தான்!
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில் ‘ஐயையோ... அவன் அப்படிச் செய்யுறான்.. இவள் இப்படிப் போறா..’ என்று பெற்றோர்கள் புலம்புவதால், பயனில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மாற்றத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய உலகத்தில் பங்கேற்று, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் அவசியத் தேவை.
உதாரணமாக, ‘அந்தப் பசங்களுடன் சேராதே' எனக் கட்டளையிடுவதைவிட, பிள்ளைகள் யார் யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள், அவர்களுடன் எப்படிப் பழகுகிறார்கள் என்று சற்றே விலகி நின்று கண்காணிப்பது பலன் தரும். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவோ வளரிளம் பருவத்தினர் நினைத்துவிட்டால் கொஞ்சம் ஆபத்துதான்.
அப்படி நம்பிவிட்டால், பெற்றோரை எதிரியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். உறவு சிக்கலுக்கு உள்ளாகும். இந்தக் கட்டத்தில் அவர்களை அதிகம் சந்தேகப்படுவதோ அல்லது அதிகம் நம்புவதோ, இரண்டுமே அவர்களுடைய மனதைப் பாதிக்கும்.
புதிய பிரச்சினைகள்
‘கூகுள்’ யுகத்துக்கு முன்னால் விடலைப் பருவத்தினரின் நடவடிக்கை மாற்றங்கள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தன. அதுவரை கசங்கிய சட்டை அணிந்தவன், திடீரென்று அயர்ன் செய்து நீட்டாக அணிய ஆரம்பிப்பது, எண்ணெய் வழியத் தலைசீவி சென்றவள் சிகை அலங்காரத்தை மாற்றச் சிரத்தையெடுப்பது போன்றவையெல்லாம் நடக்கும். அதையெல்லாம் தாண்டி அதிகபட்சமாக சைக்கிள் கேட்பார்கள். ஆனால், இப்போதோ ‘டாக்டர், என் பையன் மொபைல் போன் வாங்கிக்கொடுத்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று அடம்பிடிக்கிறான்’ என்றோ, ‘ஒன்றரை லட்ச ரூபாய்க்குப் பைக் வாங்கித் தரவில்லையென்றால், வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவேன் என்று மிரட்டுகிறான்’ என்றோ மனநல மருத்துவரிடம் புகார் சொல்லும் அளவுக்குப் பிரச்சினைகள் சகஜமாகி வருகின்றன.
கஷ்டப்பட விடலாமா?
சிறுவயதிலேயே குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நிலையைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்ப்பதில் தவறே இல்லை. ‘நான் பட்ட கஷ்டத்தை, என் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது’ என்ற எண்ணம், பெற்றோரிடம் இருப்பது இயல்பான ஒன்றுதான். இந்த வயதில் இது தேவையில்லை என்று பெற்றோர் நினைத்தால், அதைத் தைரியமாகப் பிள்ளைகளிடம் சொல்லப் பழக வேண்டும். மிக இன்றியமையாததாகவும், அதேநேரம் விலை உயர்ந்ததாகவும் இருந்தால், அதன் மதிப்பைச் சுட்டிக்காட்டிக் கையில் கொடுப்பதில் தவறில்லை.
நான் யார்?
‘பாட்ஷா' படத்தில் ரஜினி, ‘எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ' என்று பாடியதைப் போல, நூறு வருடங்களுக்கு முன்னரே புகழ்பெற்ற ஜெர்மன் உளவியல் நிபுணர் எரி எரிக்சன் வாழ்க்கையை எட்டு நிலைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் மனதளவில் ஏற்படும் மாற்றங்களைக் கூறியிருக்கிறார்.
அதில் ஐந்தாம் நிலையான பதிமூன்று வயதில் ஆரம்பித்து இருபத்தியொரு வயதில் முடியும் பருவத்தில் ஏற்படும் முக்கிய மாற்றமாக Self என்றழைக்கப்படும் தனித்துவமும் சுயமும் உருவாவதைக் குறிப்பிடுகிறார். இந்தக் காலகட்டத்தில்தான் ‘தான் யார், இந்தச் சமூகத்தில் தன் பங்கு என்ன?’ என்ற குழப்பம் ஏற்படும். இதற்கு Identity crisis (அடையாளச் சிக்கல்) என்று பெயர்.
அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக மனம் எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றுதான், தனக்குப் பிடித்த ஒருவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது. விளைவாக ஒரு நடிகர், நடிகை அல்லது விளையாட்டு வீரரின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்வது, அரசியல் தலைவரின் மானசீகத் தொண்டனாக மாறுவது, மதரீதியான நம்பிக்கைகளில் ஐக்கியமாவது போன்ற மாற்றங்கள் நடக்கும். பச்சை குத்திக்கொள்வது முதல் பாலாபிஷேகம் செய்வதுவரை, எல்லாமே இதன் வெளிப்பாடுதான்.
தடம் மாறும் நிலை
இந்த மாற்றங்களில் பெரும்பாலா னவை போகப்போக ஆரோக்கியமான முதிர்ச்சியை அடைந்துவிடும். இந்த அடையாளப்படுத்திக்கொள்ளுதல் சில நேரங்களில் எதிர்பாலின ஈர்ப்பாக மாறி, காதல் வயப்படுவதிலும் முடியும்.
சில வேளைகளில் சமூகவிரோதக் கும்பலுடன் சேர்வது, ஜாதி அடிப்படையில் அடையாளம் காண்பது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஆரோக்கியமற்ற செயல்பாடுகளிலும் முடிவடையலாம். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல், சாதகமான குடும்பச் சூழ்நிலை, ஆரோக்கியமான கல்வி போன்றவை, இந்தக் காலகட்டத்தில் சரியான பாதையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

நன்றி-தஹிந்து