Showing posts with label தூங்காவனம். Show all posts
Showing posts with label தூங்காவனம். Show all posts

Tuesday, November 10, 2015

தூங்காவனம்'

கமலஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
* தனது சரக்கை திருடிய போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தும் போதைப்பொருள் கும்பலின் தலைவன். சரக்கை திரும்பத் தருமாறு மிரட்டுகிறான். தன்னையும் தன் மகனையும் காப்பாற்ற போலீஸ் தந்தை போடும் திட்டமே படம் 'தூங்காவனம்'.
* கமல், த்ரிஷா, கிஷோர் மூவரும் போலீஸ் அதிகாரியாகவும், பிரகாஷ்ராஜ் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனாகவும் நடித்திருக்கிறார்கள். த்ரிஷா நடிப்பில் வெளியாக இருக்கும் 50-வது படம் இது.
* 60 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு படப்பிடிப்புகளையும் முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்குச் சொல்லும் முன்பு படக்குழுவினர் அனைவருக்குமே நடிப்புப் பயிற்சியில் பங்கேற்றதால் தான் விரைவில் முடிக்க முடிந்தது என்கிறது படக்குழு
* தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படத்தில் வரும் காரின் நம்பர் ப்ளேட், போலீஸ் உடை என அனைத்தையுமே மாற்றி தெலுங்கு படத்துக்கான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
* முரட்டுத்தனமாகாவும் அதே வேளையில் ஸ்டைலாகவும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். அப்போது, தமிழ் மக்களுக்காக நடைபெற்ற ஒரு போராட்டத்தில் இதே போன்றதொரு தோற்றத்தில் இருந்திருக்கிறார். கமலிடம் "உங்களது தோற்றம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்" என்று அந்த போராட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தைக் காட்டியிருக்கிறார். இயக்குநர் சொன்னதும், கமல் சரி என்று ஒப்புக் கொண்டார்.
* படப்பிடிப்பு நடைபெறும்போது எடிட்டிங்கும் அங்கேயே நடைபெற்று இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் முதல் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டார்கள். எடிட்டிங்கிற்கு என்று தனியாக எந்த ஒரு நாளையும் படக்குழு செலவிடவில்லை.
* ஒரு நாள் விபத்துக் காட்சிக்கு ஒப்பனை செய்ய ஒப்பனைக் கலைஞரை படக்குழுவினர் அழைக்கவில்லை. ஆனால் அந்த கலை கமலுக்குத் தெரியும் என்பதால், அவரே அன்று ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி இருக்கிறார்.
* இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் மதுஷாலினி. இப்பாத்திரத்துக்கு மதுஷாலினி இருந்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.
* படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கதைப்படி கிடையாது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமலே பாடியிருக்கிறார்.
* ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இப்படத்துக்காக ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் பெரிய பார் செட்டப் போடப்பட்டு, அதனுள் பிரத்யேக காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
* இப்படத்தில் த்ரிஷாவின் வேடத்துக்கு பல்வேறு மேக்கப் செய்து பார்த்தார்கள். போலீஸ் வேடம் என்பதால் இறுதியில் எந்த ஒரு மேக்கப்பும் போடாமல் நடித்திருக்கிறார். கண்ணுக்குக் கூட மேக்கப் போடப்படவில்லை.
* 'ஸ்லீப்லஸ் நைட்' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் 'தூங்காவனம்'. ப்ரெஞ்ச் படத்தில் பணியாற்றிய சண்டைக் கலைஞர்கள் அனைவருமே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறார்கள்.
* பாரில் உள்ள சமையல் செய்யும் இடத்தில் கமல் - த்ரிஷா - கிஷோர் மோதும் ஒரு சண்டைக்காட்சி இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது.
* படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமான விளக்குகள் எல்லாம் போடாமால், படப்பிடிப்பு தளமே முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த வெளிச்சத்தில் மொத்த படத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்.
* வேறு ஒரு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் போது, இயக்கத்தில் தலையிடுவார் கமல் என்பார்கள். அது குறித்து இயக்குநர் ராஜேஷிடம் கேட்டால், "கமல் சாரிடம் இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறது பாருங்கள் என்று கேட்டால், படத்தின் இயக்குநர் நீங்கள் தான், அதைப் பார்க்கத் தான் உங்களுக்கு சம்பளம் கொடுத்திருக்கிறேன்" என்று கமல் சொன்னதாக தெரிவித்தார்.
* இப்படத்துக்கான ஒலிவடிவமைப்பை லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் செய்திருக்கிறார்கள். இதற்காக ஒரு பெரும் தொகையை படக்குழு செய்திருக்கிறது.
* படத்தில் பார் காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருப்பதால் சென்சார் அதிகாரிகள் 'U/A' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
* இதுவரை கமலின் தெலுங்கு படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் டப்பிங் பேசியிருக்கிறார். கமல் முதன் முதலில் தெலுங்கில் டப்பிங் பேசிய படம் இது தான்.
* தெலுங்கில் நாகார்ஜுன் மகன் அகிலின் படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாவதால், 'தூங்காவனம்' தெலுங்கு பதிப்பு நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. அதுவரை ஆந்திராவில் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு பதிப்புகளின் வெளியீடுமே இல்லை என்கிறது படக்குழு.
* 13 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் கமல் - அஜித் படம் வெளியாகிறது. 'தூங்காவனம்' - 'வேதாளம்' படங்களுக்கு முன்பாக ஒரே நாளில் வெளியான கமல் - அஜித் படம் 'பம்மல் கே.சம்பந்தம்' - 'ரெட்'.

-thanx- the hindu

Saturday, November 07, 2015

தீபாவளிபடங்கள்-சிறப்புக் கண்ணோட்டம்/முன்னோட்டம்|

அவ்வப்போது முழுநீள நகைச்சுவைப் படங்களை எழுதி நடித்தாலும், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் புதிய புதிய கதைக் களங்களில் விறுவிறுப்பான டெஸ்ட் மேட்ச் ஆடுவது கமலின் தனித்துவம். தீபாவளிப் பரிசாக கமல் தனது ரசிகர்களுக்குத் தரும் ‘தூங்காவனம்' படமும் அந்த வரிசையில்தான் வருகிறது. 2011-ல் வெளியான ‘ஸ்லீப்லஸ் நைட்' என்ற பிரெஞ்சு படத்தின் மறு ஆக்கம் என்று படக் குழு வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும் இது அந்தப் படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்கா என்பது இதுவரை தெரியவில்லை.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ‘திவாகர்’ என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல். மனைவியைப் பிரிந்து தனது 14 வயது மகனுடன் வாழ்கிறார். எதிர்பாராமல் அவரிடம் சிக்குகிறது பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பை ஒன்று. அதைத் தனது அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று முதல் தகவல் அறிக்கையைத் தயார்செய்யத் தனது இருக்கையில் அமரும்போது ஒரு போன். போதை மருந்துப் பையைக் கொடுத்துவிட்டு மகனை அழைத்துச் செல்லும்படி நட்சத்திர ஹோட்டலும் நைட் கிளப்பும் நடத்தும் ஊரின் மாஃபியா மனிதர் சொல்ல, போதை மருந்துப் பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.
இதற்கிடையில் கமலின் டிபார்ட்மெண்டிலிருந்து அவரது நடவடிக்கையைக் கண்காணிக்கக் கிளம்புகிறது ஒரு குழு. கமல் போதை மருந்துப் பையைக் கொடுத்து மகனை மீட்டாரா, இல்லையா? தன்னை மோப்பம் பிடிக்கக் கிளம்பிய தனது துறையின் சகாக்களிடம் கையும் களவுமாகச் சிக்கினாரா ஆகிய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக விரிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறது படம்.
கமல் நடித்த ஆக்‌ஷன் படங்களில் இதுவரை இல்லாத வண்ணம் இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், சேஸிங்குகள் ஆகியவற்றை ஹாலிவுட்டுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில் படமாக்கியிருக்கிறார்களாம். காரணம் 'ஸ்லீப்லஸ் நைட்' படத்தின் பணியாற்றிய கில்லஸ் கோன்செய், சில்வியன் கேபட், வெர்ஜின் அர்னாட் ஆகிய சண்டை இயக்குநர்கள் ‘தூங்காவனம்' படத்திலும் பணியாற்றியிருக்கிறார்கள்.
நீண்டகாலமாகத் தன்னுடன் பணியாற்றிய தன் இணை இயக்குநர் ராஜேஷை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஆக்கி அழகுபார்த்திருக்கிறார் கமல். த்ரிஷா, மதுஷாலினி, ஆரண்யகாண்டம் சோமசுந்தரம், த்ரிஷயம் ஆஷா சரத், உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் போதிய முக்கியத்துவம் கதையில் இருக்கிறதாம். வில்லன்கள் குழு படத்தின் முக்கியமான ஆச்சிரியங்களில் ஒன்று. பிரகாஷ்ராஜ், சம்பத்ராஜ், கிஷோர், யூகிசேது என்று மாஃபியா வலைப்பின்னலில் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக மிரட்டியிருக்கிறார்கள் என்கிறது படக் குழு.
வேதாளம் முருங்கை மரம் ஏறினால்!?
கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற ‘வீரம்’ படத்தின் மூலம் இணைந்த அஜித் - இயக்குநர் சிவா - தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘வேதாளம்’. முதல்முறையாக அஜித்துடன் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேர்ந்திருக்கிறார். மற்றொரு முன்னணிக் கதாநாயகியான லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாக நடித்திருக்கிறார். அனிருத் அஜித் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் என்கிற பரபரப்புகளைத் தாண்டி இந்தப் படத்தின் கதை மீது ஏகப்பட்ட ஊகங்கள்.
நமக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி அஜித் இந்தப் படத்தில் ஆவியாகவோ பேயாகவோ நடிக்கவில்லை. அதேபோல இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களிலும் நடிக்கவில்லை.
இது பாட்ஷா படத்தைத் தொட்டுக்கொண்டு அஜித்துக்கு ஏற்ப ஆல்டர் செய்யப்பட்ட ஒரு கதை என்று சொல்கிறார்கள். தன் தங்கை லட்சுமி மேனனுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார் அமைதியான அஜித். ஆனால் பழைய எதிரிகள் அஜித்தின் தங்கையைக் கடத்தி அவரைச் சீண்டுகிறார்கள். பொறுமை இழக்கும் அஜித் தனது பழைய முகத்தைக் காட்டுகிறார். இறுதியில் தனது எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் வேதாளம்.
இந்தப் படத்தில் தனக்குத் தங்கையாக நடித்த லட்சுமி மேனனின் நடிப்பை டப்பிங் பணியின்போது பார்த்த அஜித் வியந்துபோய் தயாரிப்பாளருக்கு போன் செய்து கூறி, கூடுதலாகச் சம்பளம் தரும்படிக் கூறினாராம்.
அஜித்தின் உயிருக்கு உயிரான நண்பராகவும் பிறகு அவரைக் காட்டிக்கொடுக்கும் துரோகியாகவும் மங்காத்தா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடமேற்ற அஷ்வின் இதில் நடித்திருக்கிறார். இவர்களோடு சூரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், லொள்ளுசபா சாமிநாதன், தாபா என்று முதல் பாதிப் படம் முழுக்க இவர்களது காமெடியில் படம் குலுங்கப்போகிறதாம்.
அனிருத் இசையில் ‘ஆளுமா டோலுமா’ குத்துப்பாடலும் ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கும் டூயட் பாடலும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்.
செரிமானத்துக்கு இஞ்சி முரப்பா!
இந்த இரண்டு படங்களையும் பார்த்து செரிமானம் ஆகாவிட்டால் எப்படி? அதற்காகவே புதுமுகங்கள் நடிப்பில் ‘இஞ்சி முரப்பா’ என்ற படமும் துணிச்சலுடன் ரிலீஸ் ஆகிறது. எஸ். ஏ. சந்திரசேகரின் உதவியாளரான எஸ். சகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி சோனி சிறிஷ்டா என்ற மற்றொரு புதுமுகம்.
தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணன், அவளது அனுமதியில்லால் காதலில் விழுந்தால் அந்தக் காதலுக்கு வரும் புது மாதிரியான சோதனையை நகைச்சுவையுடன் சித்தரிக்கும் ‘கமர்ஷியல் இஞ்சிமுரப்பா’வாம் இந்தப் படம்.
இந்த மூன்று நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் சல்மான் கான் - சோனம் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரேம் ரதன் தாங் பயோ’ என்ற இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ மெய் மறந்தேன் பாராயோ’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.


-தஹிந்து

Tuesday, September 22, 2015

தூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஸ்லீப்லெஸ் நைட்’ படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்

பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஸ்லீப்லெஸ் நைட்’ படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் ‘தூங்காவனம்’.
போதைத் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் காவல் அதிகாரியாக கமல் நடித்திருக்கிறார். அந்த அதிகாரி போதைக் கும்பலால் கடத்தப்பட்ட தன் மகனை மீட்க, ஒரு நைட் கிளப்பில் போராடும் கதை என்று தெரிகிறது. த்ரிஷா கதாநாயகியாக கமலுடன் இரண்டாம் முறை ஜோடி சேர்ந்திருக்கும் ‘தூங்காவனம்’ ஆக் ஷன் திரில்லர் வகை என்பதை சமீபத்தில் வெளியாகியிருக்கும் படத்தின் ட்ரைலர் உணர்த்துகிறது.
இன்னொரு யதார்த்த சினிமா
’மதயானைக் கூட்டம்’ படத்தில் இயல்பான நடிப்பால் கவர்ந்த அறிமுக நாயகன் கதிர். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கிருமி’. கதிருக்கு ஜோடி ரேஷ்மி மேனன். அறிமுக இயக்குநர் அனுசரண் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் கதையை இவருடைய நண்பரான ‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டனுடம் இணைந்து எழுதியிருக்கிறார் இயக்குநர். வெளியீட்டுக்குப் பிறகு சர்வதேசப் படவிழாக்களுக்குப் பயணப்படப் போகிறதாம் இந்தப் படம். போலீஸுக்கு உதவ முன்வரும் இளைஞர் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார் என்பதுதான் கிருமி படத்தின் கதையாம்.
கிளாமர் ஷாம்லி
‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ். நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘வீரசிவாஜி’. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஷாலினியின் தங்கை ஷாம்லி நடிக்கிறார். பாண்டிச்சேரியில் நடந்த பூஜைக்கு வந்திருந்த ஷாம்லி, ஒல்லியான தோற்றத்துடன் காணப்பட்டார். கதாநாயகிகள் ரேஸில் விரைவில் ஷாம்லியும் இணைவார் என்கிறார்கள். காரணம் ஷாம்லி க்ளாமர் நடிப்பிலும் துணிச்சலாகக் களமிறங்க இருக்கிறாராம்.
கார்த்தியுடன் இணைந்த நாகார்ஜுன்
பி.வி.பி. சினிமா நிறுவனம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரித்துவரும் புதிய படத்தில் கார்த்தியும், நாகார்ஜுனாவும் இணைந்து நடிக்கிறார்கள். தமன்னா முதன்மைக் கதாநாயகி. தமிழ்ப் பதிப்புக்கு குக்கூ பட இயக்குநர் ராஜுமுருகன், பத்திரிகையாளர் முருகேஷ் பாபு ஆகியோர் இணைந்து வசனமெழுதுகிறார்களாம். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவிலுள்ள முக்கிய நகரங்களில் ஒரு மாதம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுன் ஏற்கும் கதாபாத்திரம் அவரது வாழ்நாள் கதாபாத்திரமாக அமையப்போவது உறுதி என்கிறார்கள்.
விறுவிறு வியாபாரம்
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையைப் பிரபல சத்யம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘ஐ’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப் படம், அவரது வசூல் ஏரியாவை மீட்டுத் தரும் என்கிறார்கள்.
அமிதாப் வழி
இந்தியில் 'சர்கார்' என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அமிதாப் பச்சன். தற்போது 'கபாலி' படத்தில் அமிதாப் வழியைப் பின்பற்றி இருக்கிறார் ரஜினி. மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரன் என்ற பாத்திரத்தில் வயதான தாதா வேடத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. சின்ன தாதாக்களை எல்லாம் அழித்து பெரிய தாதாவாக வலம் வரும் ரஜினி, தன்னுடைய நண்பர்களின் மகன்களை மலேசியாவுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று ஏமாற்றியது தெரிய வருகிறது. தனது அதிரடியின் மூலம் அவர்களைப் பழிவாங்கி எப்படி மலேசிய தமிழர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றினார் என்பதுதான் ‘கபாலி' படத்தின் கதை
இந்தியில் 'சர்கார்' என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அமிதாப் பச்சன். தற்போது 'கபாலி' படத்தில் அமிதாப் வழியைப் பின்பற்றி இருக்கிறார் ரஜினி. மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரன் என்ற பாத்திரத்தில் வயதான தாதா வேடத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. சின்ன தாதாக்களை எல்லாம் அழித்து பெரிய தாதாவாக வலம் வரும் ரஜினி, தன்னுடைய நண்பர்களின் மகன்களை மலேசியாவுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று ஏமாற்றியது தெரிய வருகிறது. தனது அதிரடியின் மூலம் அவர்களைப் பழிவாங்கி எப்படி மலேசிய தமிழர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றினார் என்பதுதான் ‘கபாலி' படத்தின் கதை


நன்றி-தஹிந்து