Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Friday, October 09, 2015

கோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில்

'கோர்ட்' படத்திலிருந்து ஒரு காட்சி
'கோர்ட்' படத்திலிருந்து ஒரு காட்சி
சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற மராத்திய மொழி படமான 'கோர்ட்' இந்தியாவின் தேர்வாக ஆஸ்கருக்குப் போட்டியிடவுள்ளது.
ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கரில், மற்ற நாட்டு திரைப்படங்களுக்கென ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் என்ற அந்தப் பிரிவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் போட்டியிடும். தற்போது இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் ’கோர்ட்’, இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மூத்த நடிகரும், இயக்குநருமான அமோல் பலேகர் தலைமையில், 16 பேர் கொண்டு நடுவர் குழு ஒருமனதாக 'கோர்ட்' படத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
சமூகத்துக்காகப் போராடும் வயதான கவிஞர் ஒருவர் மீது வழக்கு தொடரப்படுகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. இந்திய நீதித்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் 'கோர்ட்', குற்றம் சாட்டப்பட்டவர், அவருக்காக வாதாடும் வக்கீல், அரசு வழக்கறிஞர், அந்த வழக்கை பார்வையிடும் நீதிபதி என பலரின் பார்வையில் விரிகிறது.
இம்முறை இந்தத் தேர்வுக்கு, 'மாசான்', 'பிகே', 'ஹைதர்', 'காக்கா முட்டை', 'பாஹுபலி' உள்ளிட்ட 30 படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


அமைதி.. அமைதி.. கோர்ட் நடக்கிறது
நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
குற்றம்: சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக.
எப்படித் தூண்டினார்?: அவர் மேடையில் பாடல்கள் பாடியதன் மூலமாக. உணர்ச்சிப் பாடல்கள் மூல மாக. ‘இவ்வுலகம் வாழ வழியில் லாதது. சாகத்தான் லாயக்கு’ என்றக் கருத்தைச் சொன்ன தால்.
அவருக்கு வருமானம்: குழந்தை களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது.
அவர் கைது செய்யப்பட்ட நாளில் சொல்லிக் கொடுத்தது: வண்ணத்துப்பூச்சிகள் பற்றி.
இதில் வரும் வழக்கறிஞர்கள் கூட மாறுபட்ட பாத்திரங்கள்தான்...
அரசாங்க வழக்கறிஞர்: கொஞ்சம் ஏழைதான். சாதாரண வீடு. பையனை பள்ளியில் இருந்து அவரே போய் கூட்டிக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. பேருந்து, தொடர்வண்டி நெரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தேங் காய் மூடி வக்கீல் என்ற பட்டப் பெயரும் உண்டு. பட்டினி இருக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. மக்களுடன் அதிக பழக்கம் கொண்டவராக இருக்கிறார். பெண்.
கவிஞருக்காக வாதாடும் வழக் கறிஞர்: கொஞ்சம் வசதியானவர். சாதாரண மக்களுக்கும் அவருக்கும் அதிகம் சம்பந்தம் இல்லை என்பது மாதிரி நடந்து கொள்கிறார். மாலை நேர பார், ஆங்கில பல்கேரியன் நடன நிகழ்ச்சிகளுக்குப் போவார். உயர்ந்த ரக மதுபானம் வாங்குபவர், ஜாஸ் கேட்பவர். சற்றே உயர் சாதிக்காரர். பெயர் வோரா.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நீதிமன்றத்தின் நீதிபதி: ஆங்கிலம் பிடிக்கும். அதேசமயம், ‘கவிதை, கவிஞர்... இதெல்லாம் என்ன?’ என்று எரிச்சல்படுபவர். சாட்சியாக வந்த பெண் - ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் உடை போட்டுக் கொண்டு வந்த காரணத்தால், நீதிமன்றத்துக்கு இந்த டிரஸ் கோடு சரிபட்டுவராது என்று வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்தி வைப்பவர்.
மாலை நேரத்தில் நாடகங்களுக்குப் போய் நகைச்சுவைகளை ரசிப்பவர். அவ்வப்போது பிக்னிக் என்று போகிறவர். கவிஞரிடம் இருந்து 40 தடை செய்யப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை ஆச்சரியம் பொங்கக் கேட்பவர்.
கவிஞர் மீதான விசாரணை நடக்கிறது. அவருக்கு வயது 65. ஆனால் வயது உடல் நிலை கருதி அவரது தரப்பு வழக்கறிஞர் ஜாமீன் கேட்டாலும், அரசாங்க பெண் வழக்கறிஞர் மறுக்கிறார். ‘இவர் பலமுறை விதிகளை மீறியவர். ஜாமீன் தரக்கூடாது. இவர் புரட்சிகர கருத்துகளை பாடி மக்களை தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டுவார்’ என்கிறார்.
செத்துப் போன துப்புரவு தொழிலாளியின் மனைவியிடம் நீதிபதி விசாரிக்கிறார். அவளுக்கு கணவனின் வயது தெரியவில்லை. கவிஞரின் பாடல் தற்கொலைக்குத் தூண்டித்தான் கணவர் செத்தாரா... தெரியாது. அவர் பாதுகாப்பு முகமூடி, கவசம், உறைகள் அணிய மாட்டார். அதுவும் காரணமாக இருக்கலாம்.
கவிஞருக்கு தற்காலிகமாக ஜாமீன் கிடைத்தாலும் அவர் சிறை, வழக்கு அனுபவங்களை புத்தகமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அச்சகத்தில் மீண்டும் கைது செய்யப்படுகிறார். விசாரணை தொடர்கிறது.
அழுக்கு நீதிமன்றம், நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், நெரிசலான இருக்கைகள் எல்லாம் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன.
கவிஞர் ஒருவரை முன்வைத்து ஒரு படம் நீளுவது விசேஷமானது, அவர் தலித் கவிஞர். மும்பை புற நகரில் வாழ்கிறவர். மேடையில் பாடும் தோற்றத்தில் கத்தார் போன்ற புரட்சிக் கவிஞரை - பாடகரை நினைவூட்டுகிறார்.
கடைசிக் காட்சியில் நீதிபதி தனது நண்பர்களுடன் பிக்னிக் போகிறார். பயணத்தில்... ஐ.ஐ.டி. படித்து பெரிய தொகையை சம்பாதிக்கும் இளைஞர்கள் பற்றி கவலைப்பட்டுக் கொள்கிறார். தூங்கிப் போகிறார். பையன்களோ கலாட்டா செய்து அவரை எழுப்பிவிடுகிறார்கள். பொறுப்பற்ற இளைஞர்கள் என்று ஒருவனை அறைகிறார். மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறார். கிண்டல் செய்து விமர்சிக்கும் இளைய தலைமுறை, தூங்கிக் கொண்டிருக்கும் நீதித்துறை என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ள இந்தப் படம் மும்பை திரைப்பட விழாவிலும் மூன்று பரிசுகள் வென்றுள்ளது. இதன் இயக்குநர் சைத்தன்ய தம்ஹனா 27 வயது இளைஞர். இதில் நடித்த துப்புரவு தொழிலாளியின் மனைவி அசலானவர்.
உண்மையில் சாக்கடை குழியில் இறந்த போன தொழிலாளி ஒருவரின் மனைவி! மற்ற நடிகர்களும் தொழில் முறை நடிகர்கள் அல்ல, இதற்கென்றே பயிற்சி தரப்பட்டு நடித்தவர்கள். சாதி, அரசியல் அதிகாரம் பற்றிய பல விவாதங்களைக் கொண்டிருக்கும், தூங்கும் யாரையும் தட்டி எழுப்பும் மராத்தி படம்தான் இந்த - ‘கோர்ட்’

thax-thehidu

Tuesday, July 14, 2015

சினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை!

பெரும்பாலான திரைப்படங்கள், பெரிய ஸ்டூடியோக்களின் வாயிலாகவே தயாரிக்கப்படுகின்றன. அப்படி இல்லாமல், சிறிய பட்ஜெட்டுடன், தனிநபராலோ அல்லது ஒரு சிறிய குழுமத்தாலோ, பெரிய ஸ்டூடியோக்களின் ஆதரவு இல்லாமல் எடுக்கப்படும் படங்களும் வருகின்றன. இன்டிபென்டண்ட் சினிமா’ (Independent Cinema) என்று இப்படங்கள் அழைக்கப்படுகின்றன.
சுருக்கமாக ‘இன்டி ஃபில்ம்ஸ்’ (Indie films). இப்படிப்பட்ட படங்களில் வழக்கமான மசாலாத் தன்மைகள் இருக்காது. மாறாக, இயக்குநரின் நோக்கம், அவரது கதைசொல்லல் முறை ஆகியவைகளுக்கே முக்கியத்துவம் இருக்கும். இந்த ‘இன்டி’ படங்கள் இன்றுவரை பல ஜாம்பவான்களை அளித்திருக்கின்றன. இந்த வகைப் படங்கள் பற்றியும், ஒரு சிறந்த ‘இன்டி’ இயக்குநர் பற்றியும் இந்த வாரம் கவனிக்கலாம்.
கிட்டத்தட்ட நாற்பதுகளிலிருந்தே இந்த ‘இன்டி’ படங்கள் எடுக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில், சொல்ல விரும்பிய கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பிற கேளிக்கை அம்சங்கள் திரைப்படத்தைக் கெடுக்காமல், நல்ல நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட இப்படிப்பட்ட படங்களில் 1953-ல் வெளியான ‘லிட்டில் ஃப்யூஜிட்டிவ்’ (Little Fugitive) முக்கியமானது.
இந்தப் படம் இன்றளவும் பேசப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல குறைந்த பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டன. ‘தி ஃபில்ம்-மேக்கர்ஸ்’ கோஆப்பரேட்டிவ்’ (The Film-Makers' Cooperative) போன்ற சில அமைப்புகளும் நிறுவப்பட்டு, ஸ்டூடியோ முறைக்கு வெளியே, இதுபோன்ற நல்ல படங்களை விநியோகிப்பதற்காகத் துவங்கப்பட்டன.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ‘இன்டி’ படங்கள் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டன. திகில், செக்ஸ், போதை மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகள் வெளியாயின. இந்தச் சமயத்தில்தான் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் காப்புலா (Francis Ford Coppola), ‘தி ரெய்ன் பீப்புள்’ (The Rain People) மூலம் அறிமுகமாகிறார். இதன் பின்னர் ஜார்ஜ் லூகாஸும் ‘டிஎச்எக்ஸ் 1138’ (THX 1138) படத்தை எடுக்கிறார். இவர்கள் மூலம் ‘இன்டி’ படங்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.
 s
டேவிட் லிஞ்ச், தனது ‘எரேசர்ஹெட்’ (EraserHead) படம் மூலம் பிரபலம் அடைந்தார். இப்படத்துக்கு ஏராளமான ஆஸ்கர் பரிந்துரைகள் கிடைத்தன. உடனடியாக ஜார்ஜ் லூகாஸ் இவரிடம் வந்து, ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கச் சொல்லிக் கேட்கிறார். ஆனால், சுதந்திரமான இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் ஹாலிவுட் ஸ்டூடியோக்களிடமே போய் சிக்கிக்கொண்ட ஜார்ஜ் லூகாஸின் அழைப்பை லிஞ்ச் நிராகரித்தார். இனியும் தன்னிஷ்டத்துக்கே படங்கள் எடுக்க வேண்டும் என்பதே டேவிட் லிஞ்ச்சின் விருப்பமாக அப்போது இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அமெரிக்க மக்கள் மீது இந்த ‘இன்டி’ படங்கள் செலுத்திய ஆதிக்கம் மறக்க முடியாதது. ஸ்டூடியோக்களின் மசாலா கலந்த, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள் மக்களை எப்போதெல்லாம் அலுப்பாக்கினவோ, அப்போதெல்லாம் ‘இன்டி’ படங்களே நல்ல படங்களை மக்களுக்கு வழங்கியுள்ளன. பல புதிய இயக்குநர்கள் இப்படங்களில் அறிமுகமாகி, இன்றளவும் மிகப் பிரபலமாகவும் விளங்குகின்றனர். அதேசமயம், ஜார்ஜ் லூகாஸ், க்வெண்டின் டாரண்டினோ (Reservoir Dogs) போன்ற ‘இன்டி’ இயக்குநர்களுமே தற்போது ஸ்டுடியோக்களின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.
இப்போதும் ‘இன்டி’ படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் சிறந்த இயக்குநர்களில் ஜிம் ஜார்முஷ் (Jim Jarmusch) முக்கியமானவர். 1980-ல் ‘பெர்மனெண்ட் வக்கேஷன்’ (Permanent Vacation) படத்துடன் தனது ‘இன்டி’ வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஜார்முஷ். இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் பனிரண்டாயிரம் டாலர்களே. அந்தப் பணமும், NYU திரைப்படக்கல்லூரியில் இவருக்கு ஸ்காலர்ஷிப்பாகக் கிடைத்த பணம். அதைக் கல்லூரியில் கட்டாமல் அதை வைத்துப் படம் எடுத்துவிட்டார் ஜார்முஷ். இதன்பின்னர் 1984-ல் ‘ஸ்டிரேஞ்சர் தன் பேரடைஸ்’ (Stranger Than Paradise) படத்தை 1,25,000 டாலர்களில் எடுத்து வெளியிட்டார்.
உலகெங்கிலும் உள்ள நல்ல சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த படம் இது. கான் திரைப்பட விழாவில் Camera d'Or என்ற, சிறந்த முதல் படத்துக்கான விருது இப்படத்துக்குக் கிடைத்தது (காரணம், ‘பெர்மனெண்ட் வெகேஷன்’ படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை). இப்படத்துக்குப் பின்னர் பல படங்களை அவ்வப்போது எடுத்து வெளியிட்டிருக்கிறார் ஜார்முஷ். இவரது படங்களில் டெட் மேன், கோஸ்ட் டாக், காபி அண்ட் சிகரெட்ஸ் ஆகியவை மிகவும் பிரபலமானவை.
குறிப்பாக, ‘காபி அண்ட் சிகரெட்ஸ்’ படம் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் மொத்தம் பதினோரு குறும்படங்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்களில் அவ்வப்போது ஜார்முஷ் எடுத்த குறும்படங்களின் தொகுப்பு இது. ஆனால் இந்தக் குறும்படங்கள் எல்லாமே, காபியையும் சிகரெட்களையும் மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டிருந்தன. இவற்றின் கதாபாத்திரங்கள், காபியை அருந்திக்கொண்டே சிகரெட்களைப் புகைத்துக்கொண்டிருப்பார்கள். இவற்றினூடே நடக்கும் பேச்சுகள்தான் படம்.
‘Don't let school get in the way of your education’ என்ற மார்க் ட்வெய்னின் மேற்கோள் ஜார்முஷுக்குப் பிடித்தமான மேற்கோள். 'திரைப்படக் கல்லூரியில் படித்த 70 சதவீத விஷயங்களை நான் மறக்க வேண்டியிருந்தது. அங்கு கற்றுக்கொண்ட 30 சதவீத விஷயங்களே இன்றுவரை எனக்கு உதவுகின்றன' என்று சொல்லியிருக்கிறார். இவரது படங்களைக் கவனித்தால், ஹாலிவுட் போன்று ஒரு குறிப்பிட்ட திரைக்கதையமைப்பை (ஸிட் ஃபீல்ட், ராபர்ட் மெக்கீ, ப்ளேக் ஸ்னைடர் இத்யாதி) பின்பற்றும் படங்களாக இவரது படங்கள் இருக்காது.
அந்தத் திரைக்கதை அமைப்புகள் சொல்லும் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு என்பதெல்லாம் அப்படியப்படியே பின்பற்றும் நபரல்ல ஜார்முஷ். அவரைப் பொருத்தவரை, ஒரு இயக்குநராக, தனது உணர்வுகளைத் திரைப்படமாக எடுக்கவே விரும்புகிறார். 'ஆடியன்ஸ் விரும்புவதைக் கொடுப்பது என் வேலை அல்ல' என்பது ஜார்முஷின் கருத்து. இதனாலேயே ஹாலிவுட்டின் மசாலாத்தனம் நிறைந்த படங்களைக் கிண்டல் செய்யும் ஜார்முஷின் பல பேட்டிகளையும் நீங்கள் படிக்கலாம்.
‘இன்டி’ என்று அழைக்கப்படும் சுதந்திரப் படங்கள் அமெரிக்கக் கலாச்சாரத்துடன் ஒன்றிப் பல வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் சிறந்த இயக்குநர்களில் பலர் இங்கிருந்து வந்தவர்களே. இன்னும் பலரும் இதிலிருந்து அவசியம் தோன்றுவார்கள். யாருக்கும் அஞ்சாமல், வளைந்துகொடுக்காமல் மனதில் தோன்றும் கருத்துகளையும் உணர்வுகளையும் பேசும் ஜிம் ஜார்முஷ் போன்ற இயக்குநர்கள், மசாலா மலிந்த ஹாலிவுட்டுக்கு அவசியம் தேவைதான். அப்போதுதான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் அரைத்த மாவு நிரம்பிய குரல்கள் மட்டுப்பட்டு, புதிதான குரல்கள் அங்கே கேட்கத் தொடங்கும். இது உலகம் முழுமைக்குமே பொருந்தக்கூடிய விஷயம்தானே?
தொடர்புக்கு [email protected]

நன்றி -த இந்து

Tuesday, April 28, 2015

யூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )

இது பேய்ப் படங்களின் காலம். இந்த வகைப் படங்களின் மிரட்டும் காட்சியமைப்புக்குப் பெரிதும் கைகொடுப்பது கிராபிக்ஸ். ஆனால் கிராபிக்ஸ் உதவி இல்லாமல் கேமரா மற்றும் படத்தொகுப்புத் தந்திரங்கள், ஒப்பனை, ஒளியமைப்பு, பின் னணி இசை ஆகிய அம்சங்களை அதிகம் நம்பி ரசிகர்களைப் பயமுறுத்த முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கமல்.
வினய், டேவிட், ராகுல், அமீர், அருண் (யஸ்மித், சித்து, ஷாம், பிரதீப் பாலாஜி, மனோஜ்) ஆகிய 5 நண்பர்களும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய் கின்றனர். 5 பேருமே வாழ்க்கை யைக் கொண்டாட நினைப்பவர் கள். இவர்களில் இருவர் மர்ம மான முறையில் கொலையா கின்றனர். மற்ற 3 பேரையும் தனது சந்தேக வளையத்துக்குள் கொண்டுவருகிறார் போலீஸ் உதவி கமிஷனர் சக்தி (தருண் சக்கரவர்த்தி).
இதற்கிடையில், தற்கொலை செய்து கொண்ட பூஜாவின் (சாக்‌ஷி அகர்வால்) செல்போன் எண்ணில் இருந்து அடுத்து கொல்லப்பட இருப்பது யார் என்று இந்த 3 நண்பர்களுக்கும் எம்எம்எஸ் வருகிறது. அதில் குறிப்பிட்டபடியே கொலையும் நடக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பூஜாவுக்கும் 5 நண்பர் களுக்கும் என்ன தொடர்பு? போலீஸைக் குழப்பும் இந்தக் கொலைகளைச் செய்வது பேயா, மனிதனா? இந்தக் கேள்வி களுக்குப் பதிலாக விரிகிறது ‘யூகன்’.
ஆண்களால் பழிவாங்கப் பட்டு இறக்கும் பெண் கண்டிப் பாக பேயாக வந்து பழிவாங்கு வார் என்பது விட்டலாச்சார்யா காலத்துக் கதை. ஆனால் பேயாக வரும் பெண் எந்தச் சூழ்நிலையில் பழிவாங்கப்பட் டாள் என்பது புதுமை. ஆள் அரவம் இல்லாத பகுதியில் இருக்கும் வீடு, பாழடைந்த பங்களா ஆகியவற்றை வைத் துப் பின்னப்படுவதுதான் பேய்ப் படம் என்ற க்ளிஷேவை உடைத்து ஐ.டி. நிறுவனத்தையும் அதில் வேலை செய்யும் நண்பர்கள் வசிக் கும் அதிநவீன வீடுகளிலும் காட்சிகளை நகர்த்தியிருக்கும் இயக்குநர் கமல் பாராட்டுக்குரியவர். பேய் தோன்றி மறையும் பல காட்சிகளைப் படத்தொகுப்பு மூலம் அமைத்திருக்கும் விதம் பார்வையாளர்களை அலற வைக்கிறது யூகன்.


சம்பவங்களைக் கலைத்துப் போட்டாலும் குழப்பம் இல்லாமல் நம்மைக் காட்சிகளுக்குள் இழுத்துக்கொள்கிறது திரைக்கதை. ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் இறப்பது மட்டும் காட்டப்படுகிறது. எப்படி இறந்தார்கள் என்பது புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரியின் ஊகத்திலேயே காட்சிப் படுத்தப்பட்டிருப்பது புதுமை.
பூஜாவின் தற்கொலைக்கான பின்னணிக் காரணத்தை அழுத்தமாக அமைத்த இயக்குநர், பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து எப்படி எம்எம்எஸ் வரமுடியும் என்பது போன்ற கேள்விகளுக்கும் கச்சிதமான பதில்களைத் தந்திருக்கிறார்.
ஆனாலும் ஆங்காங்கே சில ஓட்டைகள். சாக்‌ஷி இறந்து 2 ஆண்டுகள் ஆனதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் மகள் போன வருஷம் எங்கு வேலை பார்த்தாள் என்ற கேள்வி அடுத்த காட்சியிலேயே வருகிறது. டிராயிங் நோட் 2 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. லேப்டாப் 2 ஆண்டுகளாக சார்ஜில் இருக்கிறது. இதற்கெல்லாம் விளக்கம் இல்லை. பார்த்துப் பழகிய பேய் தோற்றம், ஆவி வரும் காட்சிகள் ஒரே மாதிரி அமைவது ஆகியவை படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.
முக்கிய வேடம் ஏற்றிருக்கும் அனைவரும் அறிமுக நடிகர்களாக இருந்தாலும் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். சேஸிங் காட்சியும், சண்டைக் காட்சியும் யதார்த்தமாக இருப்பதால் நம்பகத்தன்மை கூடுகிறது. திகிலுக்கு நடுவே இளைப்பாறலாக வினய்-சாக்‌ஷி காதல்.
திகில் படங்களுக்கு முதுகெலும்பாக அமைவது ஒளிப்பதி வும் இசையும். ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், அலெக்ஸ் பிரேம்நாத்தின் பின்னணி இசையும் படத்துக்கு நல்ல பலம்.
ஆக மொத்தத்தில், பழைய பேயை புதிய புட்டியில் அடைத்துக் காட்டியிருக்கின்றனர்.

நன்றி - த  இந்து



1  எல்லோருக்கும் லைப் ல ஒரு என்ட்டர்டெய்ன்மென்ட் இருக்கும்.எங்களுக்கு லைபே என்ட்டர்டெய்ன்மென்ட்தான்


============


உன் ஐடியாஸ் எல்லாம் சைடு டிஷ் மாதிரி சப்னு இருக்கு.பீர் மாதிரி பொங்கி வரவேணாமா?# யூகன்



==================




3 மாடர்ன் யுகம் இல்லையா? அதனால பேய் வில்லனுக்கு போன் ல Sms அனுப்புது.நல்லவேளை வாட்சப்ல ஆவிஉலக அந்தரங்கம் எதுவும் அனுப்பல



==================

ரெக்கமன்டேசன் லெட்டர் ங்கறது வேலை யை பிச்சை எடுத்து வாங்கற மாதிரி # யூகன்


==============



5 அதெப்பிடிடா விடிய.விடிய FB ல கடலை போட்டுட்டு விடிஞ்ச பின் பொண்ணோட போன் நெம்பர் கூட தெரியாதுனு அடிச்சு விடறீங்க?# யூகன்




===============




6 யாரை வேணா நம்பலாம்.ஒரு காபி சாப்பிடலாம் வானு கூப்பிடற பசங்களை நம்பக்கூடாது # யூகன்



ஹார்லிக்ஸ் ஓக்கே?்


===============

7 என்FB id எப்டி கண்டுபிடிச்சீங்க?
பொதுவா பொண்ணுங்க தன் அப்பா பேரை தன் பேருக்கு முன்னாலயோ/பின்னாலயோ போட்டுக்குவாங்க


=================

8  பொதுவா ஆபீஸ்ல நல்லா வேலை செய்யறவனை விட வேலைத்தனம் செய்பவனுக்குத்தான் ப்ரமோசன் ,இன் க்ரீமென்ட் கிடைக்குது # யூகன்

=============

சிபி கமெண்ட்= யூகன்= முன் பாதி ஜில்லிட வைக்கும் கோஸ்ட் த்ரில்லர் ,பின் பாதி சைபர் க்ரைம் த்ரில்லர்.ஒர்த் டூ வாட்ச்.

விகடன்=40 ,

ரேட்டிங் =2.75/ 5 .BGM SUP

==============

Friday, November 08, 2013

முள்ளும் மலரும் -உமாச்சந்திரனின் நாவல்ன் ஜெராக்ஸ் காப்பியா? -மகேந்திரன்

நாவலில் இருந்து உருவாகும் சினிமா என்பதற்கும், ஒரு இயக்குநர் தானாகவே உருவாக்கும் கதைப் படத்திற்கும் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கிறது. சினிமா, நாவல் எல்லாமே படைப்புகள்தான். நாவல் என்பது எழுத்து வடிவிலான ஒரு படைப்பு. சினிமா என்பது காட்சிகளாலான படைப்பு.
நாவலை வாசிக்கும்போது ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளும் பிம்பங்கள் முற்றிலும் அவனது கற்பனை உலகத்துக்கு சொந்தமானது. ஒவ்வொரு வாசகரும் ஒரு நாவலில் சொல்லப்பட்டுள்ள காட்சிகளை அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக் கொள்கிறார்கள். நாவலை வாசிக்கும்போது நாம் ஏற்படுத்திக் கொள்ளும் காட்சிப் படிமங்கள், அதை வேறொருவர் படமாக்கும்போது, நாம் உருவாக்கி வைத்திருந்த காட்சிப் படிமங்களில் இருந்து மாறுபடும்போது நாம் “நாவலின் திருப்தி படத்தில் இல்லை” என்கிறோம்.



நாவலை வாசிக்கும்போது, ஒன்றை காட்சிப்படுத்திக் கொள்ள நமக்கு எந்தவித தடைகளும் இல்லை. தவிர, ஒரு நாவலை நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாசித்து முடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. நாம் நமது வசதிக்கேற்ப ஒரு நாவலை வாசிக்க முடியும். ஆனால் ஒரு திரைப்படம் நிச்சயம் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கதையை பார்வையாளனுக்கு அதன் மொழியில் சொல்லியாக வேண்டிய அவசியத்தில் உள்ளது. நாவலில் நாம் கட்டற்ற சுதந்திர வெளியில், நாம் நினைத்தவற்றை கட்டமைத்துக் கொள்ளும் சுதந்திரம் பெற்றுள்ளோம். மேலும் நாம் அத்தகைய தடைகளை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. மாறாக நாம் நமது கற்பனைத் திறனை இன்னமும் அதிகப்படுத்திக் கொண்டே நாவலை வாசிக்க தொடங்குகிறோம்.



உதாரணமாக பொன்னியின் செல்வன் நாவல் நமக்குள் தோற்றுவிக்கும் காட்சிப் படிமங்களை ஒருபோதும் படமாக பார்க்கும்போது நம்மால் பெற முடியாது. நாவலை வாசித்தவர்கள் கட்டற்ற வெளியில் தங்கள் சிந்தனைகளை, கற்பனை வெளிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அந்த நாவலை வாசிக்காதவர்களுக்கு அதுவே படமாக வரும்போது மிகப் பெரிய பிரம்மிப்பை உண்டுபண்ணலாம்.



நாவலை படமாக்க முயற்சிக்கும் இயக்குநர், அந்த நாவலைப் படிக்கும்போது தன்னுள் எழுந்த காட்சிப் படிமங்களை பொருத்திப் பார்த்தே அதை சினிமாவாக கொண்டு வருகிறார். ஆனால் ஒரு படைப்பாளி தன்னுடைய உச்சபட்ச சிந்தனையை, கற்பனைத் திறனை அதில் விதித்தாலும், அதைப் பார்க்கும் பார்வையாளன், நாவலில் இருந்து ஏதோ ஒன்று குறைகிறதே என்று வினவுகிறான். காரணம், நாவலைப் படிக்கும்போது வாசகன் உருவாக்கி வைத்திருக்கும் கற்பனை காட்சிகள் மிக பிரம்மாண்டமானவை. அதை அவரவர் வாசிப்புத் திறனுக்கேற்ப, கற்பனைத் திறனுக்கேற்ப வசதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் படமாக்க முயலும்போது அதில் அந்த இயக்குநருக்கு, தன்னுடைய கற்பனை வெளியை விஸ்தரிக்க பல தடைகள் காத்திருக்கலாம். அதையெல்லாம் தாண்டி அவர் அந்த நாவலை வாசகனின் காட்சிப் படிமங்களோடு குறைந்தபட்சம் ஒத்துப் போய் படமாக எடுத்திருந்தாலே அது பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.



ஒரு நாவலை எல்லா வாசகர்களும் ஒரே மாதிரியாகத்தான் புரிந்துக் கொண்டிருப்பார்களா என்பதும், எல்லா வாசகர்களும் ஒரே மாதிரிதான் ஒரு காட்சியை தங்கள் மனதில் படம்பிடித்து பார்த்திருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். அதற்கான வாய்ப்பும் இல்லை. கற்பனை வெளி வேறு.. நிஜத்தில் கதாபாத்திரங்களாக உலவ விடுவது வேறு. எந்த இடத்திலும், நாவலையும், அதன் காட்சிப்படிமங்களாக வெளிவரும் படங்களையும் நாம் ஒப்பிட்டு பேசுவது கூடாது.


ஒரு நாவலின் ஆத்மா சிதையாமல், அதில் சொல்லப்பட்டிருக்கும் அரசியலை தனக்கேற்றவாறு, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு மாற்றிக் கொள்ளாமல், கருத்தியலை சிதைக்காமல் படமாக்க, ஒரு இயக்குநர் முயன்றால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாறாக, நாவலில் அவளும், அவனும் வாழ்ந்தார்கள், ஆனால் திரைப்படத்தில் அவர்களின் வாழ்வே சரியாக படமாக்கப்படவில்லை என்கிற கூற்றெல்லாம் எத்தனை தூரம் சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அதெல்லாம் 'நான் ஒரு படிப்பாளி, தொடர் வாசிப்பாளன், எழுத்தாளன்' என்கிற கட்டுக்குள் தன்னை வைத்திருப்பவர்கள், சினிமாவைப் பார்க்கும்போது எழுப்புகிற விவாதமாகவே இருக்கும்.



மேலும் நாவல் என்பது உடனடியாக பல நூற்றாண்டுகளை ஒற்றை வரியில் தாண்டிவிடும் வல்லமை கொண்டது. ஆனால் அதை காட்சிப்படுத்தும்போது அதே மாதிரி ஒற்றை காட்சியில் தாண்டுவதற்கு ஒரு இயக்குநர் உழைக்க வேண்டியதன் அளவு மிகப் பெரியது. அது மிகப் பெரிய கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம் ஆகும். மேலும், நாவலை வாசிக்கும்போது அதில் நமக்கு பல காட்சிகள், பல கதாபாத்திரங்களை மிக ஆழமாக விளக்கும் காட்சிகளை அதன் ஆசிரியர் எழுதிவிடலாம். ஆனால் அதை இரண்டு மணி நேரம் படமாக்க முயற்சிக்கும் ஒரு இயக்குநருக்கும் அத்தகைய பெரிய சுதந்திரம் திரைப்படத்தில் இல்லை. அதனால்தான் நாவலின் ஆத்மாவை ஒழுங்காக சிதைக்காமல், திரையில் காட்சிகளாக கொண்டு வந்தாலே போதும் என்று சொன்னேன்.



மகேந்திரன் படமாக்கிய நாவல்களையும், அவரது திரைப்படங்களையும் ஒப்பிட்டே இதனை என்னால் நிறுவ முடியும். ஆனால் மகேந்திரன் எந்த நாவலை எல்லாம் படமாக்கியுள்ளார் என்பது கூட தெரியாமல், அந்த நாவல்களைப் படிக்காமல், மகேந்திரன் மாதிரி இப்போது யாரும் நாவல்களை படமாக்குவதில் தேர்ச்சி பெறவில்லை என்று போகிற போக்கில் சொல்லி செல்பவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஒரு நாவலை குறைந்தபட்ச நேர்மையோடு படமாக்கும் திறன் பெற்ற இயக்குநர்கள் வரும்போது, நாம் நாவல் அளவிற்கு படமில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் நாவலைப் படமாக்க யாரும் முன்வரமாட்டார்கள். 


கி.ராஜநாராயணன் சொல்வது போல் சிறுகதை, நாவல் என்பதெல்லாம் அதனதன் தளத்தில், அதனதன் புனிதத்தை, வீரியத்தை, அழகியலை, அது எழுத்து வடிவத்திலேயே பதிவு செய்துவிட்ட பின்னர், அதை மாற்றி தங்கள் வசதிக்கேற்ப ஒரு இயக்குநர் படமாக்க முயற்சிக்கும்போது, அந்த படைப்பு, எழுத்தின் வடிவத்தில் அது பதிவு செய்த காட்சிகளை, அழகியலை, ஒருபோதும் மறுதளிக்கப்போவதில்லை. எழுத்து வடிவிலான அந்த படைப்பு மறு விசாரணைக்கு உட்படுத்தப் போவதுமில்லை.



எழுத்தும், காட்சியும் இரண்டு வெவ்வேறு வடிவிலான படைப்புகள். ஒரே மாதிரி (காட்சி ரீதியாக) இரண்டும் இருந்துவிட்டால், பிறகு எதற்கு அது இன்னொரு வகையிலான படைப்பிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.? வாசகனை, அவனது வாசிப்புத் திறனைத் தாண்டியும், வாசிக்கும்போது அவனது கற்பனை வெளியில் தெரிந்த காட்சிகளைத் தாண்டியும், வேறுமாதிரி காட்சிப் படிமங்களோடு, திரை அழகியலோடு சொல்லி புரிய வைத்தாலே, அது அந்த நாவலுக்கு இயக்குநர் செய்யும் மரியாதையாக இருக்கும்.



உமாச்சந்திரனின் நாவல் ஒன்றும் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்றல்ல, மிக சுமாரான நாவல்தான் அது. ஆனால் அதுவே 'முள்ளும் மலரும்' என்று மிகப் பெரிய காட்சிப் படைப்பாக வெளிவந்துள்ளது. நாவல் கொடுத்த அதே அனுபவத்தை படமும் கொடுத்திருந்தால் இன்று வரை அதை யாரும் கொண்டாடப் போவதில்லை.



எழுத்தாளர்களிடம் இருக்கும் இன்னொரு பிரச்சினை, திரைப்படத்திற்காக சில காட்சிகளையோ, சம்பவங்களையோ மாற்றும்போது கதையில் அப்படி இல்லையே என்ற அவர்களின் வாதம். ஒரு சிறுகதை, நாவல், சம்பவம் நமக்கு பிடித்திருந்தால் அதை அப்படியே கருவாக வைத்துக் கொண்டு நாமே அதற்கு திரைக்கதை அமைப்பதுதான் சிறந்த வழி. தவிர, சிறுகதை, நாவலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை, சம்பவங்களை அப்படியே திரையில் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. கொண்டு வருவதற்கான வாய்ப்புமில்லை.



 ஆயிரம் பக்க நாவலை இரண்டரை மணி நேர படமாக சுருக்கும்போது நாம் நிறைய விஷயங்களை விட்டுவிட வேண்டும். எதை விட வேண்டும் என்பது இயக்குநரின் அல்லது திரைக்கதையாசிரியரின் விருப்பமாகவே இருக்க வேண்டும். ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறும்போது, மாற்ற விரும்புபவரின் விருப்பத்திற்கு நாம் அதை விட்டு விட வேண்டும்.



இது சிறுகதை ஆசிரியர் அல்லது நாவல் ஆசிரியருக்கு நாம் செய்யும் அவமரியாதை இல்லையா என்றால், இல்லை என்றே சொல்வேன். அவர் எழுதியது சிறுகதையைதான். நாம் அதில் ஒரு மாற்றத்தையும் செய்துவிடப்போவதில்லை. அப்படி செய்யவும் முடியாது. மேலும் அச்சு வடிவில் அது நிலைபெற்றுவிட்ட ஒன்று.


 ஆனால் சிறுகதையில் இருந்து காட்சி எனும் வடிவத்திற்கும் மாறும்போது முழுக்க முழுக்க அது இயக்குநரின் படைப்பு. எப்படி இயக்குனர் சிறுகதை என்கிற வடிவத்தை மாற்ற முடியாதோ, அதே போல், சிறுகதை ஆசிரியரும், காட்சிப் படைப்பை மாற்ற கூடாது. மாற்ற முடியாது. மிக நுட்பமான இந்த வேறுபாடு புரியாமல்தான், இங்கே இலக்கியங்கள் சினிமாவாவதில் நிறைய சிக்கல்களை இரண்டு தரப்பினரும் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.



முன்னமே சொன்னதுபோல், எழுத்தை வாசிக்கும் வாசகன், நிறைய லாஜிக்கான அல்லது கற்பனைக்குட்பட்ட சில விஷயங்கள் பற்றி கவலைப்படுவதில்லை. அதே நடிப்பு, ஒளிப்பதிவு, சம்பவக் கோர்ப்பு என்று வரும்போது, மிக சுருக்கமாக காட்சி படைப்பாக வெளிவரும்போது, நாம் வாசகனை இங்கே பார்வையாளனாக மாற்ற வேண்டிய மிக நுட்பமான வேலையை செய்ய வேண்டும். வாசகன் பார்வையாளனாக மாறும்போது கேள்விகள் கேட்க பழகிக் கொள்கிறான். அதற்கான வசதிகளும், காட்சி ஊடகத்தில் இருக்கும்போது, நாம் அதை பயன்படுத்திதான் ஆக வேண்டும். மேலும், வாசிக்கும்போது இருக்கும் கற்பனை வெளி அவரவர் கற்பனைத் திறனுக்கேற்றது. ஆனால் காட்சியாக மாறும்போது, எல்லோரையும் ஒரே விளிம்பில் நிறுத்த வேண்டிய கடமை இயக்குநருக்கு உள்ளது.



மூன்று முறை ஆஸ்கர் விருதை வென்றிருக்கும் வால்ட்டர் முர்ச் (Walter Murch) நாவலில் இருந்து எடுக்கப்படும் சினிமா அதே அனுபவத்தை தரவேண்டுமா என்பது குறித்து அளித்த பதில் இங்கே முக்கியமானது.


ஒரு புத்தகம், வாசிப்பவனுக்கு அளிக்கும் சுதந்திரத்தை, பங்கேற்பை ஒரு திரைப்படம் பார்வையாளனுக்கு அளிக்கமுடியுமா?



புத்தகம் வாசிப்பவனை ஒரு விதமான மோன நிலைக்கு ஆட்படுத்துகிறது. ஏனெனில் அது காலத்தால் கட்டுப்படுத்தபடுவதில்லை.


சினிமா மிக பெரிய ஊடகம், என்ற போதிலும் பார்வையாளருடன் தனித்தனியே உரையாடலை நிகழ்த்துகிறது. இதன் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில் பார்வையாளர்கள் சொந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையின் பிம்பங்களோடு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இது எவ்வாறு நிகழ்கிறது? சினிமா அதனளவில் பிரித்தறிய முடியாத பன்முகத் தன்மை உடையது. மேலும், பார்வையாளர்களின் சொந்த அனுபவங்களை வெளிக்கொணர்கிறது. எல்லாரும் நினைத்துக் கொள்கிறார்கள், இந்தப் படம் எனக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்று.



ஒரு நல்ல திரைப்படம், பார்வையாளனின் ஐம்புலன்களில் இரண்டை மட்டுமே அனுமதிக்கிறது. பார்ப்பதும், கேட்பதும். மேலும் அது காலத்தால் குறுக்கப்பட்ட ஒன்று. புத்தகத்தைப் போல் அல்லாமல். புத்தகத்தின் ஒருபத்தி புரியவில்லையெனில் அதை திரும்ப வாசிக்க முடியும். நீங்கள் உள்வாங்கி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகரும் திரைப்படத்தில் அது சாத்தியமில்லை.


ஒரு திரைப்படம் என்பது பிம்பம், வார்த்தைகள் மற்றும் ஒலிகள் இவற்றுக்கிடையேயான நடனம். ஒரு திரைப்படம் பார்வையாளனின் பங்கேற்பைத் தூண்டுகிறது. ஒரு திரைப்படம் குறிப்பிடத் தகுந்த தகவல்களை அளிக்கிறது. அதே வேளையில், பார்வையாளன் படைப்பு சார்ந்து பங்கேற்கும்போது மட்டுமே முழுமையடைகிறது. ஒவ்வொருவரும் தத்தமது அனுபவங்கள் சார்ந்து பிம்பங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு திரைப்படம் மேஜிக்காக மாறுகிறது.


திரைப்படத்தின் ஒவ்வொரு கணமும் முழுமையடைவது தனித்தனியேயான பார்வையாளர்களைப் பொருத்தது. எனவே சினிமா, புரவயத்தில் (கட்டமைப்பில்) பிம்பங்கள் மற்றும் ஒலிகளால் ஆனது என்றபோதிலும், அதன் பார்வையாளர்களை வெவ்வேறு விதத்தில் வித்தியாசமான எதிர்வினைப் புரியத் தூண்டுகிறது.

thanx 

the hindu


அருண்.மோ, கட்டுரையாளர் - தொடர்புக்கு [email protected]


வலைத்தளம் www.thamizhstudio.com