Showing posts with label ஜூ வி . எஸ் ராம கிருஷ்னன். Show all posts
Showing posts with label ஜூ வி . எஸ் ராம கிருஷ்னன். Show all posts

Tuesday, December 18, 2012

ராணுவத்தை எதிர்த்த யுவான் சுவாங் - எஸ் ராமகிருஷ்ணன்

எனது இந்தியா!

புத்தனைத் தேடிய பயணி
 பள்ளிப் பாடப் புத்தகங்களில் பலரும் படித்து, மறந்துபோன 100 பெயர்களில் ஒன்று யுவான் சுவாங்.



சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி, பருத்து வீங்கிய கழுத்து, வட் டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடல் அமைப்பு கொண்ட யுவான் சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால், அவரது பயணத்தின் பின்னுள்ள தேடுதலையும், அவர் பதிவு செய்துள்ள வரலாற்றுக் குறிப்புகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ளவே இல்லை.



சமீபத்தில், ரிச்சர்ட் பெர்ன்ஸ்டெயின் என்ற அமெரிக்க எழுத்தாளர் யுவான் சுவாங்கின் பாதையில் திரும்பப் பயணம் செய்து, 'அல்டிமேட் ஜர்னி’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில், யுவான் சுவாங் மேற்கொண்ட பயணத்தின் இடர்ப்​பாடுகளையும், அவர் கடந்துவந்த பாதையின் வரைபடங்களையும் மீள்ஆய்வு செய்தபோது, 'எப்படி இந்த மனிதர் அந்த நாட்களில் பயணம் செய்தார்?’ என்று வியப்படைந்து, 'யுவான் சுவாங் ஒரு மகத்தான யாத்ரீகர்’ என்கிறார்.


எவ்விதமான முறையான வரைபடமும் வாகன வசதிகளும் இன்றி நடந்தும், கோவேறுக் கழுதைகளிலும் யுவான் சுவாங் பயணம் செய்து இருக்கிறார். அதே பாதையில் இன்று எல்லா வசதிகள் இருந்தும் பாதுகாப்பாக ஆப்கானுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் தாலிபான்கள், கண்ணி வெடிகுண்டுகள், தீவிரவாத வன்முறைகள். 


அந்தக் காலத்தில் மழை நேரங்களில் ஓர் ஆற்றைக் கடந்து செல்வதற்கு பல மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. இன்று உறுதியான இரும்புப் பாலம் இருக்கிறது. ஆனால், அதைக் கடக்க அரசு அனுமதி மறுப்பதால், பல வருடங்கள் காத்திருக்கவேண்டி இருக்கிறது’ என்று தனது நூலை முடிக்கிறார். காலம் காட்டும் உண்மை இப்படித்தான் இருக்கிறது.


நாடு பிடிக்கவோ அல்லது மதப் பிரசாரம் செய்வதற்காகவோ, ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா, கொலம்பஸ், கேப்டன் குக், பார்த்தலோமியா டயஸ், ஜீகன்பால்க் போன்ற பயணிகளைப் போலின்றி, அறிவையும் ஞானத்தையும் தேடி பல்லாயிரம் மைல்கள் தனியே பயணம் செய்து, இந்தியாவுக்கு வந்துசேர்ந்த புத்தத் துறவி யுவான் சுவாங்.


தனது வாழ்நாளில் 17 வருடங்களை அவர் பயணத்திலேயே கழித்திருக்கிறார். கழுதைகளிலும், ஒட்டகங்களிலும், மட்டக்குதிரைகளிலும்,கால்​​நடையாக நடந்தும் இவர் கடந்து வந்ததூரம் 20 ஆயிரம் மைல்களுக்கும் அதிகம். இந்தியாவைக் காண வேண்டும் என்ற ஆசை யுவான் சுவாங்கின் சிறு வயதில் வேர்விடத் தொடங்​கியது.


யுவான் சுவாங்கின் குடும்பம் பௌத்த மதத்தில் தீவிரப் பற்றுகொண்டது. அவரது அப்பா கன்பூசிய சிந்தனையில் தேர்ச்சி பெற்ற அறிஞர். யுவான் சுவாங்கின் சகோதரர்கள் பௌத்தத் துறவிகளாக இருந்தனர். ஆகவே, தத்துவமும் இலக்கியமும் சிறு வயதிலேயே அவருக்கு அறிமுகம் ஆனது.


தனது 12-வது வயதில் இளம் துறவியாக பௌத்த மடாலயத்தில் அனுமதிக்கப்பட்ட யுவான் சுவாங், அங்கே பௌத்தத் தத்துவமும் கன்பூசிய சிந்தனைகளும் கற்றார். அதன்பிறகு, அவர் பௌத்த அறிவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும், 'தி கிரேட் லேர்னிங் டெம்பிள்’ என்ற மடாலயத்துக்கு அனுப்பப்பட்டார். இந்த மடாலயத்தில் 500-க்கும் மேற்பட்ட துறவிகள் இருந்தனர். அவர்களது முக்கியப் பணி பௌத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்வது.


அந்த நாட்களில் பெரும்பான்மையான பௌத்த ஏடுகள் பாலி மொழியில் இருந்தன. இந்தியாவில் இருந்து கிடைத்த சில ஏடுகள் சமஸ்கிருதத்திலும் இருந்தன. ஆகவே, சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகள் அறிந்த பௌத்தத் துறவிகள், தங்கள் வாழ்நாளை மொழிபெயர்ப்புச் சேவைக்காகச் செலவு செய்தனர்.


பௌத்த சமய சூத்திரங்களையும் அறநெறிகளையும் கொண்ட ஏடுகளில் ஒன்றை மொழியாக்கம் செய்வதற்கு ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை மூத்த துறவிகள் பரிசீலனை செய்வார்கள். பிறகு, அந்த ஏடு அறிஞர் குழுவால் மூலப்பிரதியோடு ஒப்பீடு செய்யப்படும். 


 முழுமையாகத் திருத்தம்செய்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அந்த மொழிபெயர்ப்பை பிரதி எடுப்பதற்காக 40 துறவிகள் வேலை செய்தனர். அவர்கள் ஏடுகளைப் பிரதி எடுத்து, சீனாவில் இருந்த வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப் பார்கள். இப்படி, தங்கள் வாழ்நாள் சேவையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளின் நடுவில் பணியாற்றத் தொடங்கிய யுவான் சுவாங், இந்தியாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.



இதற்காக அவர் சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள விரும்பினார். நான்கு ஆண்டுகள் முழுமையாக பயிற்சி மேற்கொண்டு சமஸ்கிருத விற்பன்னரானார். இதன் காரணமாக அவரால் பல முக்கிய ஏடுகளை எளிதாக சீன மொழியில் மொழிபெயர்க்க முடிந்தது.



629-ம் ஆண்டு மடாலயத்தில் தங்கி இருந்த ஓர் இரவில், இந்தியாவில் உள்ள கயாவில் புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அருகில், தான் பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதாக யுவான் சுவாங்குக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு தன் மனதில் நீண்ட நாட்களாகப் புதையுண்டு கிடந்த ஆசையின் வடிவம் என்பதை உணர்ந்தார் யுவான் சுவாங்.


ஆகவே, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, பகவான் புத்தர் பிறந்த இடத்தைக் கண்டு வர வேண்டும் என்பதோடு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பௌத்த ஏடுகளை சீனாவுக்குக் கொண்டுவர வேண்டும் என விரும்பினார். இந்த விருப்பத்தை அவரது மூத்த துறவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்லாயிரம் மைல் பயணம் செய்து இந்தியாவைச் சென்று அடைவது நடக்க முடியாத செயல் என்று ஏளனம் செய்தனர். ஆனால், யுவான் சுவாங் தன்னால் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பினார்.



ஆனால், தாங் அரசு அந்த நாட்களில் யுத்தத்தைச் சந்தித்துக் கொண்டு இருந்த காரணத்தால், எவரும் தேசத்தைக் கடந்து வெளியேறுவதற்கோ உள்ளே வருவதற்கோ அனுமதிக்கவில்லை. யுவான் சுவாங் சூழலைப் பொருட்படுத்தாமல், தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு, குதிரையில் பயணம்செய்து தாங் அரசின் எல்லையைக் கடந்து சென்றார். சீனாவில் இருந்து இந்தி​யாவுக்குச் செல்வதற்கான முறையான வரைபடங்கள் அந்த நாட்களில் கிடையாது. ஆகவே, அவர் தனது பயணத்தை சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டார்.



மேற்கு நோக்கிய பயணம் என்று திசையை மட்டும் மனதில் கொண்டபடி தொடங்கிய அவரது பயணம், எண்ணிக்கையற்ற பிரச்னைகளைச் சந்தித்தது. சீதோஷ்ண நிலையும், வழிப்பறியும், பசியும், நோயும் அவரைத் தாக்கியது. ஆனாலும், அவர் தன் கனவுப் பாதையில் தொடர்ந்து பயணித்தார்



சீனாவின் எல்லையைக் கடக்கும்போது, அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை அருகில் உள்ள மடாலயம் ஒன்றில் கொண்டுபோய் சேர்த்துவிடும்படியாக ராணுவ அதிகாரி கட்டளை இட்டதும், 'அப்படித் தன்னைச் செய்வதாக இருந்தால், அந்த இடத்திலே கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போவேன்’ என்று யுவான் சுவாங்  தனது கத்தியைக் கையில் எடுத்தார்.



அவரது மனத்துணிவும் விருப்பமும் அறிந்த ராணுவ அதிகாரி, எல்லையைக் கடந்து செல்ல அனுமதித்தார். யுவான் சுவாங் புகழ்பெற்ற கோபி பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது, வெயிலும் தாகமும் வாட்டி எடுத்தது. பாதை தவறி மணலில் அங்குமிங்குமாக அலைந்து களைத்துப்போன யுவான் சுவாங், அந்தப் பாலைவனத்திலேயே இறந்து​விடக்கூடும் என்று நம்பினார். இனி, தனது முயற்​சியால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்று உணர்ந்த​வராக தன்னைக் குதிரையோடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்.



குதிரை பாலைவனத்தில் தனது போக்கில் போகத் தொடங்​கியது. எந்தத் திசையில் செல்கிறது என்று தெரியவில்லை. ஆனால், குதிரை எதையோ அறிந்தது​போல சீராகப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் கண் விழித்தபோது, தன் எதிரில் பெரிய பாலைவனச் சோலையையும் அங்கே குளிர்ந்த தண்ணீர்ப் பொய்கை இருப்பதையும் கண்டார்.


அவரால் அது நிஜம் என்று நம்ப முடியவில்லை. ஓடிப்போய்த் தண்ணீரைக் குடித்தார். அங்கேவிளைந்​திருந்த ஈச்சம்பழங்களைத் தின்றார். குதிரைதன் உள்ளுணர்வில் எங்கே தண்ணீர் உள்ளதுஎன்பதை அறிந்திருக்கிறது என்று உணர்ந்த யுவான் சுவாங், அதுவும் புத்தரின் கருணை என்று நன்றி செலுத்திய​தோடு, முடிவற்ற மணல் திட்டுகள் நிரம்பிய பாலையில் தனி ஒரு ஆளாக பல மாதங்கள் அலைந்து திரிந்து முடிவில் தர்பான் என்ற நாட்டை அடைந்தார்.



அந்த நாட்டின் அரசர் புத்தத் துறவிகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவரைத் தேடிச்சென்றார். அரசரும் யுவான் சுவாங்கின் அறிவுச் செல்வத்தைக் கண்டு வியந்து, தனது ஆஸ்​தான குருவாக தன்னோடு வைத்துக்கொண்டார். ஓர் ஆண்டு அங்கே கழித்த யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்துக்குத் தயாரானபோது அரசர் அனுமதி தர மறுத்தார். தன்னை இந்தியப் பயணத்துக்கு அனுமதிக்கா விட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக யுவான் சுவான் பட்டினி கிடக்கத் தொடங்கினார். அரசர் அனுமதி தந்ததோடு தனது நாட்டின் அரசப் பிரதிநிதி என்று முத்திரை ஓலையையும், பாதுகாப்புக்காக ஆட்களும், வழியில் தேவைப்படும் பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.



ஆனால், ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் போது, அவரை யாரோ ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் பயணம் செய்கிறார் என நினைத்தனர் கொள்ளைக்காரர்கள். அதனால், அவரை வழிமறித்துத் தாக்கி, காவலர்களைக் கொன்று அவரது உடைமைப் பொருட்களைப் பறித்தனர். திரும்பவும் கால் ஒடிந்த குதிரை ஒன்றோடு தனி நபராக விடப்பட்டவர், அங்கே இருந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். 



வழி முழுவதும் பௌத்த மடாலயங்களில் தங்கியும், சிறு நிலப்பரப்புகளை ஆண்ட அரசர்கள் மற்றும் மக்களது வாழ்க்கைமுறை கலாசார செயல்பாடுகள் யாவையும் குறிப்புகளாக எழுதிக்கொண்ட யுவான் சுவாங், வெவ்வேறு பௌத்த சமய ஏடுகளையும் சேகரிக்கத் தொடங்கினார்.

நன்றி - ஜூ வி . எஸ் ராம கிருஷ்னன்