Showing posts with label சென்சார் சான்றிதழ். Show all posts
Showing posts with label சென்சார் சான்றிதழ். Show all posts

Sunday, October 11, 2015

தடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு?

அண்மையில் வெளியாகிப் பலருக்கும் அதிர்ச்சியளித்த படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இந்தப் படத்தில் கையாளப்பட்ட கதை, அதில் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம், வசனங்கள், காட்சிகள், நடிகர்களின் உடல்மொழிகள் என்று மொத்தப் படமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது.
‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் இந்தப் படத்தின் பல காட்சிகள் மீது கருணையில்லாமல் தணிக்கை வாரியத்தின் கத்தரி பாய்ந்திருக்க வேண்டும் என்று எண்ணவைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத் தணிக்கைக் குழு இதுபோன்ற படங்களின் மீது மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறதா என்ற சந்தேகம் எழ, தணிக்கை வாரிய ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். தற்போதைய நடைமுறைகள் குறித்து விரிவாகவே பேசினார்.
“தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் இப்போது சுமார் 50 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். படங்களைத் தணிக்கை செய்யும் அமர்வு சுழற்சி முறையில் இவர்களுக்கு அளிக்கப்படும். தணிக்கைக்காகப் படம் திரையிடப்படும் தியேட்டரில் போய் இருக்கையில் அமர்ந்த பிறகுதான் தாங்கள் எந்தப் படத்தைத் தணிக்கை செய்ய வந்திருக்கிறோம் என்ற விவரமே ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியவரும்.
நாடுகளுக்கிடையில், மாநிலங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில், இரண்டு மொழி பேசுபவர்களுக்குள் பிரச்சினையைத் தூண்டும் வகையிலோ இந்திய இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலோ காட்சிகளோ வசனங்களோ இருக்கக் கூடாது. ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் தணிக்கைச் சான்று கிடைக்காது.
ஆலோசனைக் குழுவின் ஆட்சேபணைகள் படக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் அடுத்ததாகப் படத்தைப் பத்துப் பேர் கொண்ட ரிவைசிங் கமிட்டிக்கு அவர்கள் கொண்டுபோகலாம். அங்கே அதிகப்படியான உறுப்பினர்கள் எடுக்கும் முடிவின்படி சான்றளிக்கவோ நிராகரிக்கவோ முடியும். அதிலும் திருப்தி இல்லாவிட்டால் மத்திய தீர்ப்பாயத்தை அணுகலாம். தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு இவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகளை நாங்கள் இங்கே ஆட்சேபிப்போம். ஆனால், பல நேரங்களில் மத்திய தீர்ப்பாயத்தில் இருப்பவர்களுக்கு இங்குள்ள உணர்வுகளோ மரபுகளோ தெரிவதில்லை. அது மாதிரியான நேரங்களில், நாங்கள் ஆட்சேபிக்கும் படங்களுக்குத் தீர்ப்பாயத்தில் எளிதில் ஒப்புதல் கொடுத்துவிடுவார்கள். இதற்காகவே தீர்ப்பாயம் வரை முட்டி மோதும் தயாரிப்பாளர்களும் உண்டு’’ என்று சொன்ன அவர் தணிக்கை பெற முடியாத படங்களைப் பற்றியும் விளக்கினார்.
வெளியே வர முடியாத படங்கள்
“தணிக்கை பெற்றுத் திரைக்கு வரும் படங்கள்தான் வெளியில் தெரியும். ஆனால், ஆட்சேபகரமான உள்ளடக்கம் மற்றும் காட்சிகளால் தணிக்கைச் சான்று பெற முடியாமல் முடங்கிப் போகும் படங்கள் நிறைய உண்டு. இளம் இயக்குநர் ஒருவர் ஒரு சிறுமிக்குப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் மிகவும் வக்கிரமாக ஒரு படத்தை எடுத்திருந்தார். படம் முழுக்க வக்கிரம் தவிர வேறு எதுவுமில்லை. அந்தப் படத்தை அடியோடு நிராகரித்தோம்” என்கிறார்.
படைப்பாளிக்குப் பாதுகாப்பு
தணிக்கை விதிகளை மீறும் படங்களை முடக்கும் அதேநேரம் ஒரு படைப்பாளியின் உரிமையையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். “ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சி ஆட்சேபகரமாக வருகிறது என்பதற்காக அந்தப் படத்தையே முடக்க முடியாது. பெண்ணின் தொப்புளைக் காட்டியே தீர வேண்டும் என்பது இயக்குநரின் குறியாக இருந்தால் அதை நாங்கள் அனுமதிப்பதில்லை.
கதையின் ஓட்டத்தில் அப்படியொரு காட்சி வருகிறதென்றால் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. ‘யு’ சான்றிதழ் படங்களுக்கு வரிவிலக்குக் கிடைக்கும். ஆனால், சில இயக்குநர்கள் ‘ஏ’படத்துக்கு ‘யு’ தரச் சொல்லி எங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் நாங்கள் மசிந்துவிடுவதில்லை” என்கிறார்.
குடியின் இடம்
இப்போது படங்களில் தவிர்க்க முடியாததாகிவிட்ட குடியைப் பற்றியும் தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார். “முன்பெல்லாம் படத்தின் முதல் காட்சியில் சாமி படத்தைக் காட்டுவார்கள். ஆனால் இப்போது, ஒயின் ஷாப்பில் பீர் பாட்டிலைத் திறப்பதுதான் ஓப்பனிங் சீன். இது சினிமாவின் குற்றம் மட்டுமல்ல. சமுதாயத்தின் பங்கும் இருக்கிறது. தியாகராஜ பாகவதர் கதாநாயகியைத் தொடாமல் நடித்தார்.
சிவாஜி கணேசன் கட்டிப்பிடித்து நடித்தார். இப்போது கட்டிப்பிடித்து முத்தமும் கொடுக்கிறார்கள். இதெல்லாம் காலத்தின் கோலம் இந்த மாற்றத்துக்கு ஏற்ப நாங்களும் அனுசரித்துப் போக வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் சமுதாயமும் ஒரு காரணம். சமுதாயம் செல்லும் திசையில்தான் சினிமாவும் பயணிக்கிறது. எனவே காலம்தோறும் திரைப்படத் தணிக்கையும் சவாலான பணியாகவே மாறிவருகிறது” என்கிறார் அந்த முன்னாள் அதிகாரி.
எந்தக் காட்சிகள் வரக் கூடாது?
டீக் கடை மற்றும் ஒர்க்‌ஷாப்களில் சிறுவர்கள் வேலை செய்வது போல் காட்சிகள் வரக் கூடாது. பெண்கள், மற்றும் குழந்தைகளை எந்தச் சூழலிலும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கக் கூடாது. உடல் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் கொச்சையான வசனங்கள் இருக்கக் கூடாது. பெண்களை ‘சப்பை ஃபிகரு, மொக்க ஃபிகரு’ என்று அடையாளப்படுத்துவதையும் தணிக்கை விதி அனுமதிப்பதில்லை. படம் பார்ப்பவர்களுக்கு, மது குடித்தால் உற்சாகமாய் இருக்கலாம், ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணத்தை வரவழைப்பது போல் காட்டுவதை அனுமதிக்கக் கூடாது என்கிறது தணிக்கை விதி.
இப்படியெல்லாம் விதிகள் இருந்தாலும் இதுபோன்ற வசனங்களும் காட்சிகளும் பல படங்களில் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருப்பதுதான் தமிழ் சினிமாவின் விதியா?
பூவுக்குத் தடை!
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கதைகளைக் கையாளும் படங்கள் தொடர்ந்து தணிக்கைப் பிரச்சினையைச் சந்தித்துவருகின்றன. தற்போது தமிழகத் தணிக்கைக் குழு, மறு தணிக்கை, மத்திய தணிக்கை தீர்ப்பாயம் என மூன்று இடங்களிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படம். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பெங்களுரில் வசிக்கும் தமிழரான கணேசன்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர் இசைப்பிரியா. கடந்த 2009-ல் இலங்கையில் நடந்த போரில் இவர் ராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் உலக அரங்கில் அதிர்ச்சியலைகளைப் பரவச் செய்தன. அவரது வாழ்க்கையை மையமாக வைத்தே ‘போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படத்தை இயக்கியிருந்தார் கணேசன். இசைப்ரியாவாக தான்யா என்பவர் நடித்திருந்தார்.
இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் “இந்தியாவின் நட்பு நாடான இலங்கைக்கு எதிரான காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிடக் கூடாது” என்று கூறித் தமிழகத் தணிக்கை குழு, மறுதணிக்கைக் குழு ஆகியவை படத்துக்குத் தடைவிதித்துவிட்டன. ஆனால், படத்தைப் பார்த்த மத்திய தணிக்கைத் தீர்ப்பாயம், “இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது போன்ற காட்சியை நீக்கினால்” படத்துக்கு அனுமதி தருவதாகக் கூற, இயக்குநர் கணேசன் அதற்கு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில் பன்னாட்டு மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டிக் கவன ஈர்ப்பு செய்திருக்கிறார் இயக்குநர்.

நன்றி-தஹிந்து

  • தமிழ் திரைப்படங்களின் தரம் குறைந்து ஆபாசங்கள் அதிகரிக்க மூல காரணமே தணிக்கை குழுவின் அலட்சியம்தான் . இன்னமும் தமிழகத்தில் பண்பாடு ,பொது இடத்தில் நாகரிகமாக இருப்பது போன்றவை காக்கபடுகிறது.நகைசுவை என்ற பெயரில் அருவருப்பான ,தரமற்ற சொற்களை தணிக்கை குழு ஏன் அனுமதிக்க வேண்டும்? காதல் என்றால் கவர்சிதானா? தணிக்கை குழு உறுப்பினர்கள் தமிழர்களின் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
    Points
    2355
    about 18 hours ago
     (0) ·  (0)
     
    • க,கோவிந்தன் ,தி.மலை.  
      கேவலமான உரையாடல்களும்,இளம் பிள்ளைகளின் காதலும்,எதிர்மறை வசனங்களும் தான் தற்போதய திரைஉலகின் விஷ கொடையாக உள்ளது.
      about 19 hours ago
       (0) ·  (0)
       
      • PPRABHURAMKUMAR  
        த்ரிஷா இல்லன்னா நயன்தாரா வசனம் -எனக்கு VIRGINபொண்ணு தான் வேணும் -அதெல்லாம் Dinousourகாலத்துலயே அலிஞ்சிடுச்சி- ஒட்டு மொத்த பெண் சமுதாயத்தையே கேவலபடுத்தி உள்ளது இந்த வசனம்,மிகவும் தரம் தாழ்ந்த கொச்சையான வசனம், காமெடி என்ற பெயரில் திணிக்கபட்டுள்ளது இதை தணிக்கை குழு கண்டிப்பாக வெட்டி இருக்க வேண்டும்.இந்த வசனம் இடம்பெறும் விளம்பரத்தை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பி கொண்டே இருந்தார்கள், எங்கு ஓடி ஒழிந்தார்கள் இந்த பெண்கள் அமைப்புகள் ? இதே ரஜினி, கமல் படத்தில் இப்டி ஒரு வசனம் இருந்தால் ஓடி வந்திருப்பார்கள், பெண்கள் அமைப்புகள் வெற்று விளம்பரிதிர்காகவே செயல்படுகின்றன
        Points
        1265
        a day ago
         (0) ·  (0)
         
        • கெளதம்ராஜ்.சை  
          பேட்டி தந்திருப்பவர் எதற்கெல்லாம் அனுமதி வழங்க மாட்டோம் என்று சொன்னாரோ அத்தனையும் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இதுக்கு... கையிலிக்கும் புண்ணை கண்ணாடிக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்
          a day ago
           (0) ·  (0)
           
          • AA.Nagarajan  
            இன்று திரைக்கு எத்தனையோ வகையான குப்பை படங்கள் வருகின்றன. தணிக்கை செய்யப்பட வேண்டிய காட்சிகள் தணிக்கை செய்யப்படாமலே வெளியாகின்றன. அரைகுறை ஆடைகளோடு ரோட்டில் ஆடுவது - இதனை நகைச்சுவை என்று சொல்வது- தரங்கெட்ட வார்த்தைகளை பேசுவது... என பல காட்சிகள் இன்று சர்வ சாதாரணமாக திரைப்படங்களில் காட்டபடுகின்றன. இசைப்பிரியாவின் மரணம் உலகையே குலுங்கச் செய்த ஒன்று. தணிக்கை என்ற பெயரில் நமது நாடு அந்த திரைப்படத்தை வெளியிட மறுத்தால், அது வேறொரு வெளிநாட்டு சேனல்கள் மூலம் மீண்டும் இங்கு வரத்தான் செய்கிறது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது ஓர் ரகசிய தீர்மானமா? இதில் மறைக்க என்ன இருக்கிறது என்று தணிக்கை குழு எதிர்பார்க்கிறது? இவ் விசயத்தில் இயக்குனர் கணேசனின் மறுப்பு ஏற்க்ககூடியதே! தணிக்கை குழு தங்களது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது.
            Points
            200
            a day ago
             (4) ·  (0)
             
            Thiagarajan · pradeep · prasad · Balaji Up Voted
            • Subra Mani  
              30 பள்ளிபட்டி PR சுப்ரமணியன் ---- இது போன்ற படங்கள் பாரிஸ் அல்லது லண்டன் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு ,அங்கே தணிக்கை அனுமதி பெற்று பின்னர் அந்த படங்கள் இனையதளத்தில் இலவசமாக வெளியிட்டால் ?
              Points
              1640
              a day ago
               (1) ·  (0)
               
              pradeep Up Voted
              • Vaidhyanathan Sankar  
                இயக்குனர்களின் வக்கிரமான பாண்டஸி களை படம் பார்ப்பவர்களமீது திணிக்க முற்படும்வரை தணிக்கைக்குழு என்பது இன்றியமையாதது.
                Points
                17355
                a day ago
                 (0) ·  (0)
                 
                • Sசsugumar சுகுமார்  
                  இன்று திரைக்கு எத்தனையோ வகையான குப்பை படங்கள் வருகின்றன. தணிக்கை செய்யப்பட வேண்டிய காட்சிகள் தணிக்கை செய்யப்படாமலே வெளியாகின்றன. அரைகுறை ஆடைகளோடு ரோட்டில் ஆடுவது - இதனை நகைச்சுவை என்று சொல்வது- தரங்கெட்ட வார்த்தைகளை பேசுவது... என பல காட்சிகள் இன்று சர்வ சாதாரணமாக திரைப்படங்களில் காட்டபடுகின்றன. இசைப்பிரியாவின் மரணம் உலகையே குலுங்கச் செய்த ஒன்று. தணிக்கை என்ற பெயரில் நமது நாடு அந்த திரைப்படத்தை வெளியிட மறுத்தால், அது வேறொரு வெளிநாட்டு சேனல்கள் மூலம் மீண்டும் இங்கு வரத்தான் செய்கிறது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது ஓர் ரகசிய தீர்மானமா? இதில் மறைக்க என்ன இருக்கிறது என்று தணிக்கை குழு எதிர்பார்க்கிறது? இவ் விசயத்தில் இயக்குனர் கணேசனின் மறுப்பு ஏற்க்ககூடியதே! தணிக்கை குழு தங்களது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது.
                  Points
                  1785
                  a day ago
                   (1) ·  (0)
                   
                  Vikram Up Voted
                  • Subra Mani  
                    30 பள்ளிபட்டி PR சுப்ரமணியன் --சமுதாயத்தையும் இளைய தலைமுறையினரையும் சீரழிக்கும் படங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று , எவ்வித சிரமமும் இல்லாமல் திரையிட எளிதான அனுமதி சான்றிதழும் கிடைக்கிறது ஆனால் ,ஒரு இனம் அதுவும் நமதுபாரம்பரிய தமிழ் இனப்பெண் ஒருவர் கொடூராமான முறையில் பாலியலுக்கு உள்ளாக்கி , இன்னும் இங்கே எழுத முடியாத துயர்களை சந்தித்து பின்னர் உயிரிழந்த இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உலகம் அறிந்து கொள்ளும் முயற்சிக்காக மட்டுமே இந்த படம் வெளிவருகிறது . இந்த படம் வாயிலாக உலகமக்கள் அணைவரும் அறிந்து கொண்டால் , இலங்கையில் நடைபெற்றது மனிதஉரிமை மீறல் என்பதை முழு உண்மையை தெரிந்து கொள்ளமுடியும் . இவ்வளவு நடந்த பின்னர் இனியும் இதை தடுப்பது இரக்கமற்ற செயல் . ஒரே ஒரு குழந்தை சேதாரம் இல்லாமல் உயிரிழப்பு ஒட்டுமொத்தஉலகத்தைஈர்க்கும் போது,உறவு,உடமைமற்றும் பெண்களின் அங்கங்களை சிதைத்து கொடூராமானமுறையில் கொலைசெய்த உண்மைகள் வெளிவருவதற்கு இனியும் தடை எதற்கு