Showing posts with label சுபா. Show all posts
Showing posts with label சுபா. Show all posts

Tuesday, May 19, 2015

சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் -கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 2

October 22, 2014

- கிரைம் நாவல் மன்னர்
ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்

Rajesh Kumar
தமிழின் முன்னணி எழுத்தாளரும் கிரைம் நாவல் மன்னருமான

திரு. ராஜேஷ்குமார் அளித்த சிறப்பு நேர்காணலின் இரண்டாம் பகுதி இது…
உங்களது சமகால எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுடன் உங்கள் உறவு எப்படி?
என்னைப் பொருத்த வரை நான் யாரையுமே போட்டியாகக் கருதவில்லை. அவர்கள அனைவருமே என்னைப் பார்த்து பிரமித்தனர். ஒருமுறை சுரேஷ்- பாலா (சுபா) இருவருமே என்னிடம் கையில் ரேகை பார்த்தார்கள். ஏன் என்று கேட்டபோது,  “இவ்வளவு எழுதுகிறீர்களே, கையில் ரேகைகள் இருக்கிறதா, அழிந்துவிட்டதா என்று பார்த்தேன்” என்றார்கள்.
பலவிதக் கருத்துக்களில், விதவிதமாக எழுதுவது எப்படி கேட்கும் பல எழுத்தாளர்கள், என்னை எழுத்து இயந்திரம் என்று வர்ணிப்பார்கள். எனது ஆயிரமாவது புதினத்தை (டைனமைட் 98) எழுதியபோது பட்டுக்கோட்டை பிரபாகர்,  “ராஜேஷ்குமாரின் புதினங்களின் தலைப்புகளை எழுதினாலே நீண்டநேரம் ஆகும். எப்படி இவற்றை எழுதுகிறார்?” என்று பாராட்டினார்.
எழுத்தாளர் பாலகுமாரன் எனது நலம் விரும்பி. அவர் என்னிடம் ஒருமுறை சொன்னார்: “ராஜேஷ்குமார் நீ வாசகர்களைப் படிக்க வை; பிறகு நாங்கள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்கிறோம்” என்று. ஆரம்பநிலை வாசகர்கள் என்னிடம் துவங்கி பிற்பாடு மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் படிப்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சுஜாதா ஒருமுறை கூறுகையில், “ராஜேஷ்குமார் வேகமாக எழுதுகிறார். அதே சமயம் விவேகமாகவும் எழுதுகிறார்’’ என்றார். எனது வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் அவர்.
இந்த இலக்கியப் பயணத்தில் உண்மையில், என்னுடன் ஓடி வந்தவர்கள் யார் என்றோ, எனக்குப் பின்னால் ஓடி வருபவர்கள் யார் என்றோ பார்க்கவே நேரமின்றி நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம், எனக்கு முன்னே யாரும் இல்லை என்பது தான்.
உங்களது புதினங்களில் துப்பறிவாளராக வரும் விவேக், அவரது மனைவி ரூபலா, காவல்துறை அதிகாரி கோகுல்நாத் ஆகியோரை எவ்வாறு உருவாக்கினீர்கள்?
Rajeshkumar-Vivekஎனது புதினங்களில் தொடர்ந்து வரும் கதாபாத்திரங்கள் அவர்கள். சங்கர்லாலின் தாக்கம் இதில் உண்டு. குற்றப் புலனாய்வில் ஈடுபடும் நிபுணர் ஒருவரை கதையில் கொண்டுவர வேண்டியிருந்தது. அப்போது காவல்துறையில் உள்ள எனது நண்பர் விவேகானந்தனிடம் பல ஆலோசனைகள் பெற்றுப் பயன்படுத்தி வந்தேன். எனவே அவர் பெயரைப் பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.
தவிர, நான் சுவாமி விவேகானந்தரின் தீவிர பக்தன். நான் படித்ததே ராமகிருஷ்ண வித்யாலயம் பள்ளியில் தான். கோவையில் தேவாங்கர் பள்ளி அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் எனது வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது. அங்குதான் இலவச தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படித்து முன்னேறினேன். அங்கு படிக்கும்போது ராமகிருஷ்ணர் பற்றிய பிரார்த்னைகளைப் பாடுவோம். அப்போதே சுவாமி விவேகானந்தர் மீது மிகுந்த பக்தி ஏற்பட்டுவிட்டது. அவரது உபதேசங்களே என் வாழ்க்கையில் முன்னேற உந்துசக்தி. எனவே விவேகானந்தர் நினைவாகவும், எனது நண்பருக்கு நன்றிக்கடனாகவும் அவர் பெயரைச் சுருக்கி  ‘விவேக்’ என்று எனது புலனாய்வு நிபுணருக்கு பெயர் சூட்டினேன். அவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
சில வருடங்கள் கழித்து விவேக்கிற்கு திரும்ணம் செய்வதாக ஒரு புதினத்தில் எழுதியபோது அவரது மனைவியாக உருவாக்கப்பட்டவர் ரூபலா. இப்பெயர் எனது வாசகி ஒருவரது பெயராகும். ஒருமுறை மதுரை சென்றபோது விடுதி ஒன்றில் வரவேற்பாளராக இருந்த ரூபலா என்ற பெண்ணைச் சந்தித்தேன். அவர் எனது வாசகி என்பது தெரியவந்தது. விடுதியில் இடம் இல்லாதபோதும் எனக்காக சிரமப்பட்டு ஓர் அறையை எனக்கு அவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். அப்போது எனது பெயரை உங்கள் புதினத்தில் மறக்க முடியாத பெயராகக் கொண்டுவர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று அவரது பெயரையே விவேக்கின் மனைவியாக்கினேன். ஆனால் அதன்பிறகு அந்தப் பெண்ணைப் பார்க்க முடியவில்லை. அவர் அங்கிருந்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்கள். அவர் எனது கதையில் தனது பெயர் சேர்க்கப்பட்டதைப் படித்தாரா என்பதும் தெரியவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இது எனக்கு வருத்தம் தான். இதையே,  ‘கல்கி’ வார இதழில் இரண்டாண்டுகளுக்கு முன் ‘எங்கே அந்த ரூபலா?’ என்ற தலைப்பில் தனிக் கட்டுரையாக எழுதினேன். இன்றும் அந்த வாசகியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அதேபோல, காவல்துறையில் சிபிசிஐடி அதிகாரியாக கோகுல்நாத், இளமைத் துடிப்பான விஷ்ணு கதாபாத்திரங்களை தேவைக்கு ஏற்ப உருவாக்கினேன். ஒரு சுவாரசியமான சம்பவம். விவேக்- ரூபலா திருமணம் குறித்து நகைச்சுவையாக ஓர் அறிவிப்பை நண்பர் ஜீயேவும் நானும் திட்டமிட்டு  ‘கிரைம்’ நாவலில் வெளியிட்டோம். அதை உண்மையென்று நம்பி ஆயிரக் கணக்கில் பலநூறு வாசகர்கள் மொய் அனுப்பினர். அவற்றை எல்லாம் திருப்பி அனுப்பினோம். அந்த அளவிற்கு விவேக்- ரூபலா கதாபாத்திரங்கள் வாசகர்களுடன் ஒன்றிக் கலந்துவிட்டன.
சிறுகதை, புதினம் – இதில் எதை எழுதுவது சிரமம்?
சிறுகதை தான். ஏனெனில், குறிப்பிட்ட பக்கங்களுக்குள் கதைக் கருவைச் சுற்றிவந்து கதையை எதிர்பாராமல் முடித்துவிடுவதென்பது சிரமம். அது கிட்டத்தட்ட மருத்தை அடைத்திருக்கும் ‘கேப்சூல்’ போன்றது. ஆனால் புதினத்தை நீங்கள் விருப்பம் போல வளர்க்கலாம். கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தை உதைத்தபடி அங்குமிங்கும் கொண்டுசெல்வது போல, கதைக் கருவைப் பின்னிப் பிணைத்து, சம்பவங்கள், திருப்பங்களை உருவாக்கி, வாசகரைத் திகைக்கச் செய்யலாம். புதினத்தில் புதிய பாத்திரங்களை அறிமுகம் செய்யலாம். சிறுகதையிலோ, குறைந்த கதைமாந்தர்களே போதும்.
நீங்கள் எழுதிய படைப்புகள் அனைத்தும் உங்களிடம் இருக்கின்றனவா?
இல்லை. நான் ஆரம்பகாலத்தில் எழுதும்போது இந்த அளவிற்கு வளர்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. காலம் செல்லச் செல்லத் தான் எனது எழுத்துகளை பத்திரப்படுத்துவதன் அவசியம் புரிந்தது. இதுவரை 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 1,500க்கு மேற்பட்ட புதினங்களையும் எழுதி இருக்கிறேன். ஆனால், இவற்றில் சுமார் 300 புதினங்கள் இப்போது என்னிடம் இல்லை. அவற்றை வெளியிட்டவர்களில் பலரும் இப்போது இல்லை. ஆனால், நான் எழுதிய படைப்புகளின் பட்டியல் என்னிடம் உள்ளது.
எனது வெற்றிக்கு பென்னும் பெண்ணும் தான் காரணம்
Rajeshkumar 001
சாதனை எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது வெற்றிக்கு பென்னும் (PEN), பெண்ணும் (மனைவி) தான் காரணம் என்கிறார்.  “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்; எனது வெற்றிக்குப் பின்புலமாக இருப்பவர் எனது மனைவி தனலட்சுமி தான்” என்கிறார். அவரது மனைவியோ, ஒன்றரை மணிநேரம் நீண்ட கணவரின் நேர்காணலின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆவலுடன் கேட்டபடி கதவருகிலேயே நின்றுகொண்டிருக்கிறார்.

இவர்களது அன்பான இல்லறத்தின் கனிகளாக, கார்த்திக்குமார், ராம்பிரகாஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் வங்கியிலும், இன்னொருவர் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சென்னையில் பணிபுரிகின்றனர்.
ரங்கசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனான ராஜகோபால் (பிறந்த தேதி: 20.03.1947) எழுத்துலகில் ராஜேஷ்குமார் ஆனது தனிக்கதை. வாழ்க்கையில் வெல்ல தனி பாணி மட்டுமல்ல, பிரத்யேகப் பெயரும் தேவை என்பதை ராஜகோபால் உணர்ந்திருந்தார்; ராஜேஷ்குமாராக மாறினார்.
இவரது எழுத்துலக வாரிசாக குடும்பத்தில் யாரும் உருவாகவில்லையா என்று கேட்டால்,  “எழுத்து இறையருள், அதைத் திணிக்க முடியாது” என்கிறார் ராஜேஷ்குமார். ஆனால், தனது மகன்வழிப் பேரனான ஸ்ரீவத்சனிடம் கதை சொல்லும் திறமை ஒளிந்திருப்பதை அறிந்து மகிழ்கிறார்.
“எனது மரபணு அவனிடம் இருக்கலாம். அவன் பள்ளியில் தானாகக் கூறிய ஒட்டகச் சிவிங்கி கதையைக் கேட்டு விசாரித்தறிந்த சென்னை பள்ளி நிர்வாகத்தினர், ராஜேஷ்குமாரின் பேரன் அவன் என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்த்துடன், என்னை அவர்களது பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்தனர். பேரனால் கிடைத்த கௌரவம் அது” என்று நெகிழ்கிறார்.
இவ்வளவு எழுதி இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் இருந்து வருகிறீர்கள். உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
Crime Novels3நிச்சயமாக இல்லை. எனது எழுத்துலக வாழ்வு திருப்திகரமானது. 40 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் என்னை பத்திரிகைகள் எழுதச் சொல்லி நாடி வருவதே எனக்கான அங்கீகாரம் தான். தமிழக அரசின் கலைமாமணி விருது 2009-ல் எனக்கு முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது. இது தவிர நான் விருதுகளை நாடிச் செல்வதில்லை.
இப்பொதெல்லாம், விருதுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டுவிட்டன. நான் விருதுகளை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனது வாசகர் ஒருவர் அஞ்சல் அட்டையில் எனக்கு எழுதும் கடிதத்தை விட விருது எனக்குப் பெரிதல்ல. எனது கதையால் வாழ்க்கையில் முன்னேறியதாக பல வாசகர்கள் எழுதும்போது எனக்கு மிகுந்த திருப்தி உண்டாகிறது. அதுதான் எனக்கு மகத்தான விருது. இதைவிட நான் எழுத்துலகில் என்ன சாதிக்க வேண்டும்?
குமுதம் வார இதழில் எனது முதல் தொடர்கதை 1987-ல் ‘ஜனவரியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை’ வெளிவந்தது. இப்போதும் (2014) அதே இதழில் தொடர்கதை எழுதி வருகிறேன். பல தலைமுறைகளைத் தாண்டியும் வாசகர்களை ஈர்க்கும் சக்தி இருப்பதே எனக்கு பெருமை தான். வாசகர்களுக்கு எனது தேவை இருக்கும் வரை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுவேன்.
எனது 1,500 புதினங்கள் எழுதிய சாதனையை கின்னஸில் பதிவு செய்ய வேண்டும் என்று நண்பர்கள் கூறியதால் அதற்கு முயன்றேன். அப்போது தான் அதற்கு பணம் செலுத்திக் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. அதுவும் ஒருவகை வர்த்தகமாகவே தெரிந்தது. எனவே அம்முயற்சியையும் கைவிட்டுவிட்டேன். வாசகர்களின் பிரியமே எனக்கான மதிப்பீடு.
சின்னத்திரையில் உங்கள் அனுபவம் குறித்து…
முதன்முதலில் பொதிகை தொலைக்காட்சியில் தான் எனது புதினங்கள் ஒருமணி நேரத் தொடராக சின்னத்திரை வடிவம் பெற்றன. அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் பவானி தொடர் வந்த்து. பிறகு விஜய் தொலைக்காட்சியில் நண்பர் லேகா ரத்னகுமார் தயாரிப்பில்  ‘நீ எங்கே என் அன்பே?’ வெளிவந்தது. அதைத் தொடர்ந்து  ‘இருட்டில் ஒரு வானம்பாடி, அஞ்சாதே அஞ்சு’ ஆகிய சின்னத்திரை தொடர்கள் வெளிவந்தன. கடந்த இரண்டாண்டுகளாக, கலைஞர் தொலைக்காட்சியில் ‘சின்னத்திரை சினிமா’ என்ற தலைப்பில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 10.30 மணிவரை 2 மணிநேரம் ஒளிபரப்பாகும் வகையில் எனது புதினங்கள் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. நூறு வாரங்களை எட்ட உள்ள இத்தொடரால் புதிய வாசகர்கள் பலர் கிடைத்து வருகின்றனர்.
உங்கள் புதினம் ஒன்று திரைப்படமாக தயாரிக்கப்பட்டதே?
திரைப்படத் துறையில் நான் அதிக கவனம் கொடுக்காததற்கு அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதே காரணம். ஆயினும் எனது இரு புதினங்கள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. நண்பர் நாகா வெங்கடேஷ் தயாரித்த  ‘அகராதி’, கோவை நண்பர் தயாரித்த  ‘சிறுவாணி’ ஆகிய திரைப்படங்கள் வெளியிடத் தயார்நிலையில் உள்ளன. தவிர நடிகர் சரத்குமார் நடிக்கும்  ‘சண்டமாருதம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளேன். அந்தப்படம் அநேகமாக முதலில் வெளியாகும். அதைத் தொடர்ந்து பிற படங்களும் வெளியாகும். அதன்பிறகு பெரிய திரையிலும் எனது பயணம் தொடரும்.

குற்றப் புனைவுப் புதினங்கள் இலக்கியமல்ல என்று இலக்கியவாதிகள் சிலர் கூறுவதை அறிவீர்களா?
இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் 64 வயதிலும் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு சிறந்த நடிகர் என்று விருது கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் மனங்களில் அவர் தான் என்றும் சூப்பர்ஸ்டார். யாருக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும்; யாருக்கு எது சிறப்பாக வருமோ அதுதான் வரும். எனவே, இதுபோன்ற விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. நான் அண்மைக்கால எழுத்தாளர்களையே படிப்பதில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை.
சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமானால், கெட்டதைச் சொல்லி அதன் விளைவைச் சொல்லி எச்சரிக்க வேண்டும். அதையே எனது குற்றப் புனைவுக் கதைகளில் சொல்லி வருகிறேன். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்; தப்பு செய்தவன் தண்டனை பெற வேண்டும் என்பதே எனது கதைகளின் நீதி. இதனைக் கொச்சைப்படுத்துவோர் குறித்து எனக்கு கவலையில்லை. பாமரரையும் படிக்கவைக்கும் எழுத்தாளனாக இருப்பதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்.
Rajeshkumar 004சாஹித்ய அகாதெமி விருது சர்ச்சைகள் குறித்து…
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் உண்டு. சாஹித்ய அகாதெமிக்கும் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதன் விருதுகள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. நான் தான் விருதுகளை நாடிச் செல்வதில்லையே? எனவே இதுபற்றி எனக்கு எந்தக கருத்தும் இல்லை; வருத்தமும் இல்லை.
தமிழ் பத்திரிகையுலகப் பிதாமகர்களான எஸ்.ஏ.பி.அண்ணாமலை, சாவி, விகடன் பாலசுப்பிரமணியம், இதயம் மணியன் போன்ற ஆலமரங்களின் நிழலில் வளர்ந்தவன் நான். குத்துச்செடிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இறைவன் எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டான். இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரைகள்…
எழுத்தாளனுக்கு எப்போதும் ஒரு தேடல் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளில் தான் கதைகளுக்கான கரு புதைந்திருக்கிறது. அதேபோல விடாமுயற்சியும் கடும் உழைப்பும் அவசியம்.
நான் கோவையிலிருந்தபடியே இத்தனைகாலம் எழுதி வந்திருக்கிறேன். எழுத்துத் துறைக்கு சென்னையே தலைமையிடமாக இருந்தாலும், எனது திறமையை நம்பி கோவையில் இருந்தபடியே சாதித்தேன். திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் உலகம் அவர்களைத் தேடி வரும்.
நான் எழுதத் துவங்கியபோது என்னை நகலெடுத்து பலர் எழுத முயன்று தோற்றார்கள். எனவே, ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நடையை, தனி பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கதை சொல்லும் பாணியில் வாசகர் மனதைக் கவர்பவரே வெற்றி பெற முடியும். அதேபோல எடுத்தவுடன் புதினம், தொடர்கதை என்று விண்ணுக்குத் தாவ முயற்சிக்க்க் கூடாது. சிறுகதையில் தேர்ச்சி பெற்றபின், மெல்ல அடுத்த நிலை நோக்கி வளர வேண்டும். அவசர அணுகுமுறை இத்துறையில் நிலைக்க சரியான வழியல்ல.
தவிர யதார்த்தம் என்ற பெயரில் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் அள்ளித் தெளிக்கக் கூடாது. சமுதாயத்தைச் சீரமைக்க விரும்பும் நமது எழுத்தில் ஒரு நாகரிகம் இருந்தாக வேண்டும்.

thanx -the hindu

Thursday, March 12, 2015

மாற்றான் - படத்தில் ஒரு மறக்க முடியாத காட்சி - வசனகர்த்தா சுபா விவரிப்பு

‘மாற்றான்’ படத்தில் சூர்யா.
‘மாற்றான்’ படத்தில் சூர்யா.
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் கே.வி. ஆனந்த் உதவியாள ராய்ச் சேர்ந்திருந்த நாட்கள். அவரு டைய வீட்டுக்கு அடுத்த காம்பவுண்டில் எங்கள் குடும்பம் குடியிருந்தது.
ஓர் இரவு ஆனந்த் கதவைத் தட்டி னார். எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுப் போனேன். உள்ளூர்ப் படப் பிடிப்பில் இருந்து திரும்பி, அவசரக் குளியல் போட்டிருந்தார். கையில் ஒரு பயணப் பெட்டி.
“அர்ஜென்ட்டா சென்ட்ரல் ஸ்டேஷன் போகணும். கொஞ்சம் வர்றீங்களா..?”
“நானா..?”
“ஆமா, அரை மணில ரயில் கிளம் பிடும். ஆட்டோ பிடிச்சுப் போனா, ரயிலை மிஸ் பண்ணிடுவேன். பைக்ல போலாம்...”
எச்சிலைக் கூட்டி விழுங்கினேன். நான் நிதானமாக வண்டி ஓட்டுபவன். பரபரப்பாக பைக் ஓட்டிப் பழக்கமில்லை. என் தயக்கத்தைப் பார்த்தார்.
“வண்டிய ஓட்டப் போறது நான். பின்னாடி உக்காந்து பெட்டியப் பிடிச் சிட்டு வாங்க. ஸ்டேஷன்ல நான் இறங் கினதும், நிதானமா திரும்பி வந்துக் குங்க...” என்றார்.
பேன்ட் அணிய உள்ளே போனேன். என் அம்மா ஆனந்திடம் “எங்கப்பா ஷூட்டிங்?” என்று கேட்க, “கேரளா போறோம்...” என்று அவர் சொன்னது காதில் விழுந்தது.
பைக்கில் பெட்டியை இருவருக்கும் நடுவில் வைத்துக்கொண்டு உட்கார்ந் தேன். பெட்டியை மட்டுமல்ல; உயிரை யும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டி யிருந்தது. ஆனந்த் பைக்கை ஓட்டிய வேகம் அப்படி.
பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் எல்லாவற்றையும் முந்திக்கொண்டு வாகனங்களுக்கு இடையில் புகுந்து புறப்பட்டு பைக் பறந்தது. ராணி மேரி கல்லூரி அருகில் இருந்த இரட்டை ஸ்பீடு பிரேக்கர்களிலும் வேகம் குறைக் காததில் சற்று மேலே எகிறி, (ஹெல்மெட் கள் கிடையாது) குதிரை சவாரி போல் முழங்கால்களால் பைக்கை இறுக்கிக்கொண்டு, கோணல் மாணலாக சீட்டில் விழுந்து ஒட்டிக்கொண்டேன்.
“பார்த்துப்பா...” என்று முணுமுணுத் தேன். அவர் காதில் ஏன் விழுகிறது? அத்தனை அவசரத்திலும் போக்குவரத்து விதிகளை மீறவில்லை. ஒரு வழியாக சென்ட்ரல் ஸ்டேஷன் கடிகாரம் கண்ணில்பட்டதும், ஆனந்த் இன்னும் பரபரப்பானார்.
“வண்டி கிளம்ப மூணு நிமிஷம்தான் இருக்கு...”
ஆட்டோக்கள் நுழையும் வாசலருகே பைக்கைக் கொண்டு நிறுத்தினார். ஸைடு ஸ்டேன்ட் போட்டார். பெட்டியைக் கவர்ந்துகொண்டு, ஓட்ட மாக ஓடி கூட்டத்தில் கலந்தார்.
பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத் திக்கொண்டேன்.
“பாதையை மறிச்சு, இப்படிலாம் வண்டியை நிறுத்தக் கூடாது.. எடுங்க சார்...” என்று ஆட்டோ டிரைவர்கள் குரல் கொடுத்தனர்.
“இதோ…” என்று பைக்கில் ஆரோ கணித்து, வண்டியை நிமிர்த்தினேன். ஹேண்டில்பாரைத் திருப்ப முடிய வில்லை. லாக் ஆகியிருந்தது. இக்னிஷ னில் சாவியைக் காணவில்லை. கீழே எங்காவது விழுந்திருக்கிறதா? தேடியதில் சில கணங்கள் வீணாயின. சாவி கிடைக்கவில்லை. ஒருவேளை வண்டியை நிறுத்திய வேகத்தில் ஆனந்த் சாவியை உருவி, கையோடு எடுத்துப் போய்விட்டாரா?
செல்போன்கள் இல்லாத காலம். அவர் எந்த ரயிலில் போகிறார் என்றுகூட தெரியாது. என் அம்மாவிடம் அவர் உரையாடியபோது ‘கேரளா’ என்ற வார்த்தை காதில் தற்செயலாக விழுந்தது நினைவில் இடறியது.
என்னை அதட்டிய ஆட்டோ டிரைவ ரிடமே, “வண்டியக் கொஞ்சம் பாத்துக் குங்க...” என்று கோரிக்கை வைத்து விட்டு, ஸ்டேஷனுக்குள் ஓடினேன். அந்த டிரைவர் என் வம்சத்தையே முதுகுக்குப் பின்னால் திட்டிக்கொண்டிருந்தார்.
கலைந்த எறும்புப் புற்று போல் ஆயிரக்கணக்கானவர்கள் அலைமோத, ஆனந்தை எப்படி கண்டுபிடிப்பேன்? ஒரு போர்ட்டரை நிறுத்தினேன்.
“கேரளாவுக்கு எந்த ரயில் கிளம்புது..?”
“அலப்பி எக்ஸ்பிரஸா? வண்டி மூவ் ஆயிருச்சேப்பா...”
“எந்த பிளாட்பார்ம்..?”
“எட்டு…”
பிடரியில் பாதம் மோதவோ, இதயம் தொண்டைக்கு எகிறவோ, உங்களுக்குப் பிடித்த உவமானத்தைப் போட்டுக்கொள்ளுங்கள் ஓடினேன்.
ரயில், பிரசவ காலத்துப் பெண் போல பெருமூச்சுடன் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.
ஆனந்த் எந்த கம்பார்ட்மென்ட் என்றும் தெரியாது. ஜன்னல் சதுரங்கள் வழியே அவரைத் தேடிக்கொண்டு ரயிலுக்கு இணையாக, அதை விட வேகமாக ஓடினேன். எதிரில் மோதியவர்களின் சாபங்கள் காற்றில் கலந்தன. என்னைப் பயணி என்று எண்ணி, வண்டிக்குள் இழுக்க கதவருகே நின்ற நல்லவர்களின் கரங்கள் நீண்டன.
ஆறாவது பெட்டியில் ஜன்னல் வழியே ஆனந்தின் உருவம் தென்பட்டது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பரபர வென்று நகர்ந்து கொண்டிருந்தார்.
“ஆனந்த்… ஆனந்த்...” என்ற என்னுடைய கூக்குரல்கள் சுற்றியிருந்த ஏராள ஓசைகளில் அவரை எட் டவே இல்லை. ரயிலோ வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணி ஒருவர் அவரை எட்டிப் பிடித்து என்னைச் சுட்டிக்காட்டவில்லை என்றால், ஆனந்த் திரும்பிப் பார்த்திருக்கவே மாட்டார்.
“சாவி... பைக் சாவி..?” என்று கூவினேன். சைகைகளிலும் காட்டினேன். புரிந்து, பேன்ட் பாக்கெட்டில் துழாவி எடுத்தார். ஜன்னல் வழியே வீசினார். பிளாட்பாரத்தில் சாவியைக் கண் டெடுத்து நான் நிமிர்வதற்குள் ரயிலின் கடைசிப் பெட்டி என்னைக் கடந்திருந்தது.
வண்டியை சைடு ஸ்டேண்டில் போட்ட வேகத்தில், பழக்க தோஷத்தில் சாவியை உருவிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்தார்.
வெளியே வந்து, (ஆட்டோக்காரர் களால் நகர்த்தப்பட்ட) பைக்கை வேறோரு மூலையில் கண்டெடுத்து வீடு திரும்பினேன்.
சில சமயம் பின்னணியில் ஒலிக்கும் வார்த்தைகள் எவ்வளவு உதவிகரமாக இருக்கின்றன!
‘மாற்றான்’ திரைப்படம்...
ஒட்டிப் பிறந்த இரட்டையரில் உடன்பிறந்தவனைக் கொன்றவனைப் பிற்பாடு அடையாளம் கண்டு சண்டையிடுவான் அகிலன் (சூர்யா). சண்டையில் எதிரியின் போன் அகிலனிடம் கிடைக்கும். கொலைக்கு ஏற்பாடு செய்தவன் அதே போனில் அழைக்க… பின்னணியில், லிஃப்ட் குரல், “LOCUS LACTO PRODUCTS. ஐந்தாவது மாடி” என்று அறிவிக்கும்.
அந்தப் பின்னணிக் குரலை வைத்து, அவனைத் தேடி தன் கம்பெனியின் ஐந்தாவது மாடிக்கு விரைவான், அகிலன். அந்த போனைப் பயன்படுத்தி குற்றவாளியைக் கண்டுபிடிப்பான். வெகு பரபரப்பான காட்சியாக அது அமைந்திருக்கும்.
வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]



நன்றி  - த  இந்து

Friday, February 13, 2015

அனேகன் - சினிமா விமர்சனம்




கே வி ஆனந்த்  சாரை 1990 களில்   சூப்பர்  நாவல்  எனும்  பத்திரிக்கையில்  அட்டைப்பட  புகைப்படக்காரராக  இருந்த  காலத்தில்  இருந்தே  எனக்குத்தெரியும் ( அவருக்கு  என்னைத்தெரியாது). கதிரின்  காதல்  தேசம் , ஷங்கரின் சிவாஜி உட்பட 15    படங்களில்  ஒளிப்பதிவாளராக  பணியாற்றி  பின் தேன்மாவின்  கொம்பத்து  எனும்  மலையாளப்படத்தில்  ஒளிப்பதிவாளருக்கான  தேசிய  விருது   பெற்றபோது அகமகிழ்ந்தேன் ( 2005).


15  வருடங்கள்  தேவைப்பட்டிருக்கு  ஒரு  திறமைசாலிக்கான  அங்கீகாரம்  கிடைக்க . தமிழில்  அவர்  இயக்கிய  முதல்  படமான  கனா கண்டேன்  பிரமாதமான  திரைக்கதை. பிரித்விராஜ்  வில்லனிக்  நடிப்பில்  படம்  செம  ஹிட் ( 2005).பின்  ஏனோ  4  வருடங்கள்  தாமதமாக  அடுத்த  படம்  சூர்யா  வின்  அயன். (2009)இது கமர்ஷியல்  சக்சஸ்  என்றாலும்   முதல்  பட  அளவு  புதுமை  இல்லை

ஆனால்  3 வது  படமான  கோ  ( 2011)  மாபெரும்  ஹிட்.ஆனால்  அடுத்து  வந்த  மாற்றான்  சுமார்  ரகப்படம் .இவர் இதுவரை  இயக்கிய 4  படங்களில்  எதுவும் அட்டர் ஃபிளாப்  ஆகவில்லை  என்பது  சிறப்பம்சம். இது  இவரது  5 வது  படம்  .நாசரின்  தேவதை    டைப்  முன்  ஜென்மக்காதல்  கதை.இது எந்த  அளவு  ஒர்க் அவுட் ஆகி  இருக்குன்னு பார்ப்போம்.


படத்தோட   கதைக்குள்ளே  போகும்  முன்  கதையின்  அவுட்  லைனை  எப்டி  சொல்லி  இருக்காங்கன்னு  சொல்லிடறேன்.இந்தப்பட  திரைக்கதை யில்  வரும்  முக்கியக்கேரக்டர் போன  ஜென்மத்தில்  கம்யூனிஸ்ட்  நல்லக்கண்ணு  போல்  நல்லவரா, இந்த  ஜென்மத்தில் கலைஞரா , அடுத்த  ஜென்மத்தில்  அர்விந்த் கேஜ்ரிவாலா , அதுக்கும்  அடுத்த  ஜென்மத்தில்  ஜெ  வா   பிறப்பெடுப்பாங்க. சுருக்கமாச்சொன்னா   ஒரு ஜென்மத்தில்   கெட்டவனா  இருக்கும்  வில்லன்  அடுத்த  ஜென்மத்தில்  நல்லவன் , அதுக்கடுத்த   ஜென்மத்தில்   கெட்டவன்.


சென்னையில் வாழும்  வெண்ணை  நாயகி.  ஆண் பால் ல  வெண்ணைன்னா  செல்லத்திட்டு  வார்த்தை . அதுவே  பெண்  பால் ல  வெண்ணைன்னா நெகு  நெகுன்னு அர்த்தம் . ஏன்னா தமிழன் பெண் பால் ல  திட்டவே  மாட்டான். 

நாயகிக்கு  போன  ஜென்ம  நினைவு வருது. பொதுவா  பொண்ணுங்களுக்கு  15  வருசம்  முன்னால  புருசன்  சின்னதா  ஒரு  தப்புப்பண்ணாக்கூட  கரெக்டா  நினைவு  வெச்சுக்குவாங்க .1962ல்  முதல்   காதல்  கதை .வழக்கம்  போல  ஒரு ஆபத்தில்  இருந்து   நாயகியை  நாயகன்  காப்பாத்தறார் (  பொதுவா  பொண்ணுங்கன்னாலே  ஆபத்துதான்.அவங்களுக்கே  ஆபத்துன்னா  பார்த்துட்டு  சும்மா இருக்க  முடியுமா? ) 2  பேருக்கும் லவ்.  நாயகியின்  அப்பா  எதிர்ப்பு . லவ்  ஜோடி  பிரியுது.



1980 ல அடுத்த  ஜென்மத்துல  ஹீரோயினுக்கு  ஒரு  ட்விஸ்ட். போன  ஜென்மத்துல  அப்பாவா  இருந்தவர்  இந்த  ஜென்மத்துல  மாமா.இதுலயும்   ஹீரோயினை ஹீரோ  காப்பாத்தறார். லவ் வருது. பிரியறாங்க .

2015  ல   3 வது  ஜென்மம். இவங்க  காதல்  சேர்ந்ததா?  இல்லையா? என்பதே  கதை




ஹீரோவா  தனுஷ். ரஜினி  ,கமல், அஜித், விஜய் , விக்ரம், சூர்யா வுக்குப்பின்  தமிழ்  சினிமாவின்   மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம்.துள்ளுவதோ  இளமை  ரிலீஸ் ஆன  காலகட்டத்தில்   தமிழின் நெ1  இதழ்  இவர்  எல்லாம்  நடிக்க  வந்துட்டாரா?  என  கிண்டல்  செய்தது. ஆனா  இப்போ  அவர்  கலக்கிட்டு  வர்றார். ஷமிதாப் விருதுப்படம்  எனில்  வேலை  இல்லாப்பட்டதாரிக்குப்பின்  கமர்ஷியல்  ஹிட். பல  கெட்ட்பகளில்  கலக்கறார். ஸ்கூல்  பையனா  நடிச்சாக்கூட   நம்பற அளவு  உடல்  அமைப்பு . டங்கா மாரி  பாட்டு  டான்சில்  அரங்கம்  அதிருது



வில்லனா  நவரச  நாயகன்  கார்த்திக் . அசால்ட்டான  நடிப்பு


 நாயகியா  அமைரா. 3    ஜென்மங்களிலும்  வித்தியாசம்  காட்டும்  கெட்டப். அழகு  தேவதை , காதல்  தேவதை  நாயகி இஷா  கோபிகர்  முகச்சாயல்.புருவம் , உதடு  எல்லாம்  ரொம்ப  சன்னம் . நடையில்  அன்னம்.  அடிக்கடி   குளிக்கும் நல்ல  மனசு. தமிழில்  ஒரு  ரவுண்ட்  வருவார்


ஆஷிஷ்  வித்யார்த்தி   கம்பீரமான  நடிப்பு   ஹீரோ  நண்பரா  ஜெகன் .அதிகம்  மொக்கை போடாமல்    காப்பாற்றுகிறார்


ஹாரீசின்  இசையில்  எல்லாப்பாடல்களும்  ஹிட் , பிஜி எம்மில்   நல்லா  ஸ்கோர் பண்றார்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  ஏன் என் முகத்தைப்பார்த்துப்பேசமாட்டேங்கறே?
அழகான பொண்ணு முகத்தைப்பார்த்தாலே பிரச்னைதான்.ஆனா உன்னை எத்தனை டைம் வேணா பார்க்கலாம் #,அ

2 வில்லன் = ஒழுங்கா இல்லைன்னா நீ உங்க வீட்டுக்கு பிள்ளையா இருக்க மாட்டே!
ஹீரோ = பின்ன உன் வீட்டுக்கு மாப்ளையா வருவனா? # அ

3 உன் சைஸ் எல்லாம் எப்டி அவளுக்கு கரெக்ட்டா தெரியுது?
அதான் டெய்லி பார்க்கறாளே?சர்ட் தானே? நோ.ஜட்டி கிfப்ட் #,அ




4 இந்த பாழாப்போன காதலோட தலை எழுத்து என்ன தெரியுமா? பிரிஞ்சு இருக்கும்போதுதான் அதன் அருமை தெரியும். # அ


5 ஹீரோ = அய்யோ கண்ணைக்கட்டுதுடா சாமி # குறியீடு





 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  வித்தியாசமான முன்ஜென்மத்துக்காதல் கதை + த்ரில்லர் மூவி திரைக்கதை எழுதிய kvஆனந்த்+சுபா டீம், 5 கெட்டப்களில் அசத்தி இருக்கும் தனுஷ்-wish

2 ஓப்பனிங் சீன்ல தோள் ல் பல கட்டைகளை தூக்கிட்டு வர்றார் ஹீரோ.குறியீடு. #,அனேகன்


3 ஹீரொயின் அமைரா கஸ்தூரி ரொம்ப சுத்த பத்தமான பொண்ணு போல.ஓப்பனிங் சாங் லயே குளிக்குது


4 மணிரத்னம் ,ஷங்கர் படஙளுக்கு இணையான பாடல் காட்சி படமாக்கம்
.ஆத்தாடி செம்பருத்தி


5 ஒவ்வொரு முன் ஜென்மக்கதைக்கு முன்னாடியும் ஹீரோயின் குளிக்குதுஅ.டடே


6 ஸ்கூல் பாய் ,காலேஜ் பாய் ,லவ் பெய்லியர் என 3,கெட்டப்களில் கலக்க சூர்யா ,தனுஷ் இவர்களால் மட்டுமே முடியும்



7 பாய்ஸ் படத்துல வரும் பாட்டு மெட்டை ஹாரீஸ் அட்டகாசமா சுட்டுட்டார்

8 த்ரில்லர் நாவல்களில் கலக்கிய ரைட்டர் சுபா ஒரு பட வசனகர்த்தாவாக பட்டையக்கிளப்பவில்லை. #,ஐ ,அனேகன்


9 திரைக்கதையில் மகதீரா வாசம் வீசுது


10 நாயகி அமைரா வின் அழகு ,தனுஷ் ,கார்த்திக் அசால்ட் நடிப்பில் போர் அடிக்காத சைக்கலாஜிக்கல் த்ரில்லர் -இடைவேளை #,அ

11 டங்கா மாரி  பாட்டு  டான்ஸ் கலக்கல் ஹிட்டு , தனுஷ்  பேய்  ஹிட்  மூவ்மெண்ட் ., திருடா திருடி   மன்மத ராசா போல்





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   தமிழில்  நீண்ட  இடைவெளிக்குப்பின்  வந்திருக்கும்  சைக்கலாஜிக்கல்  த்ரில்லர்  மூவி . , ஒரு  ச முழுக்க சஸ்பென்ஸ்   நாவல்   படிப்பது போல் திரைக்கதை  அமைத்த  விதம்


2   நாயகியைச்சுற்றியே   கதை  செல்வதால்  நாயகிக்கு காட்சிகள்  நாயகனை  விட அதிகமாக  வைத்த  துணிச்சல்


3   ஹாரீசின்  இசையில்   பாடலகள்  ஹிட் ஆக்கியது  ஒளிப்பதிவு  , பிஜி எம்  எல்லாம் பக்கா 




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   ஜெயிலில்   இருந்து   தனுஷ்  தப்பும்  காட்சி  நம்பகத்தன்மை இல்லை. ஜெட்லீ  கணக்கா  பாயறார், முடியல

2   கதையி  ல்  3  ஜென்மக்கதைகளிலும்  பலரும்  ரிப்பீட்  ஆகறாங்க, ஆனா   ஹீரோயினுக்கு மட்டும்  அது  நினைவுக்கு  வருது  அது  ஏன்? (  சஸ்பென்ஸ்  கருதி சிலதை சொல்ல  முடியலைன்னாலும்  ஹீரோயின்க்கு  அந்த டவுட் ஏன் வர்லை?  நம்மைத்தவிர  ஏன் யாருக்கும்  முன் ஜென்ம  நினைவு வர்லைன்னு )


3  ஹீரோயின்   தோழியை   ரேப்  பண்ண  வரும்  தீய  சக்திக்ளைக்கண்டு  அது மாயத்தோற்றமோ  கற்பனையோ  ஏன்  அவர்  ஜன்னல்  வழியா  குதிச்சு  சாகறார்? திரும்பி  வாசல்  பக் கம்  ஓடலாமே ?  திறந்து தானே   இருக்கு ?


4   வில்லன்  கார்த்திக்  க்ளைமாக்சில்  ஏன்   அவசரப்பட்டு   நாயகியை  ஹிப்னாடிக்ஸ்  தூக்கத்தில்  இருந்து  எழுப்பறார்?


5   வில்லன்  தேவை  இல்லாமல்   ஏன்  அவர்   அசிஸ்டெண்ட்   லேடி  டாக்டரை  விட்டுட்டுப்போறார்? பெரிய  எதிர்  சாட்சி ஆச்சே?


6  பின் பாதி   திரைக்கதை  பி  சி  செண்ட்டர்   ரசிகர்களுக்குப்புரியும் படி இன்னும் எளிமையாக  சொல்லி   இருக்கலாமே?


7   க்ளைமாக்ஸ்    காட்சி  சொதப்பல்




சி  பி  கமெண்ட்  - அனேகன் - வித்தியாசமான   சைக்கலாஜிக்கல்  த்ரில்லர்  மூவி -ஏ, பி  செண்ட்டர்களில்  ஹிட் ஆகும் -  விகடன்  மார்க் = 43 . ரேட்டிங்  3.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  43



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  ஓக்கே



 ரேட்டிங்  =  3.25 / 5


Thursday, December 18, 2014

180 -வெட்டிவேரு வாசம் 14-சுபா win திரைக்கதை அனுபவங்கள்

முரளியைத் துரத்திய கரடி!
பள்ளி விடுமுறை நாட்கள் வேணு வீட்டில்தான் கழியும். வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பிரம்மாண்ட ஆலமரத்தின் நிழற்பரப்புதான் எங்களுக்கு கிரிக்கெட், கிட்டிப்புள், கபடி மைதானம்.
வேணுவுக்கு இரண்டு தம்பிகள். சுந்தர், முரளி. சின்னவன் முரளிக்கு சிரித்த முகம். உற்சாகமாகப் பந்து பொறுக்கி வருவான். தாகத்துக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் கேட்டு தண்ணீர்க் கொண்டு வருவான். எல்லோருக்கும் செல்லத் தம்பி.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், வாழ்க்கை திசை மாறியது. வேணுவின் குடும்பம் புலம் பெயர்ந்தது.
பல ஆண்டுகள் கழித்து வேணுவைத் தற்செயலாகப் பார்த்தேன். பொறியியல் படிப்பு. அபுதாபியில் வேலை. ஒரு மகள்.
“தம்பிங்க என்ன பண்றாங்க..?” என்று விசாரித்தேன்.
“சுந்தர் லண்டன்ல செட்டிலாயிட்டான். ஒரு ஆண் குழந்தை…”
“முரளி? அவனுக்கு எத்தனை குழந்தைங்க..?”
வேணுவின் முகம் வாடியது. சற்று நேர மவுனத்துக்குப் பின் முரளியைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னான்.
“அபுதாபிலேர்ந்து வருஷத்துக்கு ஒரு தடவைதான் சென்னை வருவேன். போன்ல அப்பப்ப அம்மா, அப்பாவோட பேசுவேன். ஒரு வருஷமா முரளிக்கிட்ட பேச முடியல. எப்ப கேட்டாலும், ‘இன்ஸ்பெக்‌ஷனுக்குப் போயிருக்கான், டூர் போயிருக்கான்'னு வீட்ல சொல்வாங்க. சந்தேகமே வரல... போன வருஷம் வீட்டுக்கு வந்தப்ப அம்மாவும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க. மூஞ்சியில சிரிப்பே இல்ல...”
வேணு தொடர்ந்தான்.
‘முரளி எங்கம்மா?’
‘மொட்டை மாடி ரூம்ல இருக்கான்டா… ’ என்றாள் அம்மா.
அவனைப் பார்க்கப் படியேறினேன்.
‘வேணு…’ என்று அம்மாவின் குரல் இழுத்தது. திரும்பினேன். அம்மாவின் கண்களில் கண்ணீர். ‘இரு நானும் வரேன்...’
மொட்டை மாடியில் அறை ஜன்னல்களின் கண்ணாடிச் சதுரங்கள் மீது துளி ஒளி கூடப் புக முடியாமல் பேப்பர் ஓட்டப்பட்டிருந்தது. கதவு பூட்டியிருந்தது. அம்மா சாவியைப் பூட்டில் பொருத்தும்போது கை நடுங்கியது.
‘என்னம்மா ஆச்சு முரளிக்கு?’ என்றேன் திகிலுடன்.
‘கிறுக்குப் புடிச்சிருச்சிடா’ - அம்மா ஓவென்று கதறி அழத் தொடங்கினாள். ‘ரொம்ப மோசமா நடந்துக்கறான். எந்த நேரமும் கத்தியைக் கையில வெச்சிட்டு குத்திடுவேங்குற மாதிரி கையை ஓங்கறான். யாரைப் பாத்தாலும் கரடி, கரடின்னு கத்தறான்...’
கதவைத் திறந்தேன். அம்மா பின்வாங்கினாள். குப்பென்று வாடை நாசியைத் தாக்கியது. முரளி சுவரில் ஒண்டி உட்கார்ந்திருந்தான். என்னைப் பயத்துடன் பார்த்தான்.
‘ஏய் கரடி! கிட்ட வராதே...’ என்று கத்தியை ஓங்கினான்
உடலில் துணி இல்லை. தரையில் தட்டுகள். உணவு மிச்சங்கள். டம்ளர்கள். சிறுநீர்த் தேக்கங்கள். மலக் கழிவுகள்.
என்னை நோக்கி ஜல்லிக்கட்டுக் காளை போல் பாய்ந்து வந்தான். அசையாமல் நின்றேன். இரண்டடி தூரத்தில் நின்றுவிட்டான்.
‘முரளி... வேணுடா!’ என்றேன்.
அவன் கண்களில் சலனம். கத்தியைக் கீழே போட்டான்.
ஜன்னல் கதவுகளைத் திறந்தேன். அவன் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தேன். கட்டின பசு போல் வந்தான். குளிப்பாட்டினேன். ஆடைகள் அணிவித்தேன். அறையை பிளீச்சிங் பவுடர், டெட்டால் போட்டுச் சுத்தம் செய்தேன்.
இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னேன். சாதுவாகச் சாப்பிடத் தொடங்கினான்.
‘எப்படிம்மா இப்படி ஆச்சு?’”
‘அவனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சோம் இல்லியா? மாப்பிள்ளை மாதிரி கெத்தா இருந்துக்கோடா. இது என்ன குழந்தை மாதிரி எந்நேரமும் சிரிப்பும், கூத்தும்னு நாலஞ்சு தடவை அதட்டினேன். அதனாலயானு தெரியல… அப்ப என்னைப் பார்த்து கரடின்னு பயந்தவன்தான்.”
இரவு. மொட்டை மாடிக்கு அழைத்துப் போனேன். நட்சத்திரங்களைப் பார்த்தால் அவனுக்குப் பிடிக்கும். பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டேன். முரளி சட்டென எழுந்தான். ‘கரடி, கரடி’ என்று முணுமுணுப்புடன் களைத்துப் போகும் வரை என்னைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அழைத்துப் போனேன். பரிசோதித்தார்.
‘ஸ்கிசோஃப்ரெனியா’ என்றார். ‘எதிர்ல இருக்கறவங்களைப் பாத்தா கரடி மாதிரி என்ன, புலி, சிங்கம், பூதம் மாதிரி கூடத் தெரியும். கொடுமையான பிரமை. ஹாலுசினேஷன். இவர் இப்படி ஆனதுக்கு ஒருவிதத்துல உங்க பேரன்ட்ஸும் காரணம். உங்ககிட்ட கொஞ்சம் அடங்கறாரு. தினம் சிகிச்சைக்கு கூட்டிட்டு வாங்க…’
“இப்ப முரளிக்கு எப்படியிருக்கு, வேணு?”
“ஓரளவுக்கு சரியாயிடிச்சு. பழைய உற்சாகம் இன்னும் திரும்பல. கல்யாணப் பேச்சே எடுக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.”
“அவனைப் பார்க்கணுமே, வேணு..”
வேணு வீட்டுக்குக் கூட்டிச் சென்றான். முரளிக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எனது கண்களில் கண்ணீர். வேணு ஒரு ஆல்பத்தைக் காட்டினான். சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப் பின் ஆல்பம்.
முரளியின் புகைப்படங்களைப் பார்த்தபோது வயிற்றில் கலவரப் பந்து உருண்டது. இப்போது தேறிவிட்டானே என்று ஓர் ஆறுதல்.
‘180’ திரைப்படத்தில் கதாநாயகன் அஜய்க்கு (சித்தார்த்) புற்று நோய். இன்னும் 180 நாட்கள்தான் ஆயுள் என்று தெரியவரும். ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்நோக்கும் அச்சம்.
மரணபயம் தாக்கும்போது நாயகன் எப்படி நடந்து கொள்வான் என்று யோசித்த போது, முரளியின் நினைவு வந்தது. எங்கள் கருத்து இயக்குநர் ஜெயேந்திராவுக்குப் பிடித்திருந்தது.
கரடிக்குப் பதிலாக எமனாக ஒரு கருப்பு அரக்கன்.
எந்நேரமும் யாரோ தன்னைத் துரத்துவது போலவும், அவனிடம் இருந்து தப்பிக்க பயத்துடன் ஓடுவது போலவும் சித்தார்த் தன்னை உருமாற்றிக் கொண்டார். தன்னைத் தொந்தரவு பண்ணுகிறவர்கள் மீது கண்ணாடி டம்ளர்கள், பாட்டில்கள் என்றெல்லாம் வீசி உடைத்து முரளி மாதிரியே நடந்து கொண்டு ரசிகர்களின் பச்சாதாபத்தை ஒட்டு மொத்தமாக அள்ளிக்கொண்டார் சித்தார்த்.
- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected] 


thanx - the  hindu

Thursday, October 23, 2014

‘வேலாயுதம்’ திரைப்படத்தில் அனுராதா ரமணனுக்கு நேர்ந்த அனுபவம்

மோர்க் களியும் ஒரு ரயில் பயணமும்!
எழுத்தாளர் அனுராதா ரமணன் எங்களுடன் பந்தா எதுவுமின்றி நட்பாகப் பழகுவார். தன் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை உணர்ச்சிகரமாக எங்களுடன் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவர் வீட்டுக்கு எப்போது போனாலும், ‘சர்க்கரைக் கம்மியா… ஒரு ஸ்ட்ராங் காபி’ என்று ஆர்டர் செய்யாமலே ஆசையுடன் கொண்டுவந்து காபி கொடுப்பார். 


ஒருமுறை தான் செய்திருந்த மோர்க் களியைப் பரிமாறினார். வறுத்த மோர் மிளகாய், கடுகு, சீரகம் எல்லாம் தாளிக்கப்பட்டு மோர்க் களி அருமையான ருசியுடன் இருந்தது. நாங்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவருக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை எங்களிடம் விவரித்தார். 


அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்... 


‘‘போன திங்கக்கெழமை நானும் பத்மாவும் (அனுராதா ரமணனின் தங்கை) மயிலாப்பூர்ல என் ஓர்ப்படியோட தங்கை நாத்தனாரைப் பாக்கப் போயிருந்தோம். (அனும்மா குறிப்பிடும் உறவுகள் பெரும்பாலும் சிக்கலாக இருக்கும். புரியாது.) பழைய தேக்கு ஊஞ்சல்ல உக்காந்து ஜாலியா ஆடினோம். கிச்சன்லேர்ந்து கும்முன்னு ஒரு வாசனை வந்தது. 


‘வாசனைத் தூக்குதே மாமி!’ன்னு சொன்னேன். 


‘மோர்க் களி கிண்டினேன். இரு எடுத்துட்டு வர்றேன்’ என்று பரபரன்னு உள்ளே போன மாமி, ரெண்டு தட்டுல மோர்க் களியை அள்ளிட்டு வந்து நீட்டினா. 


‘ஹை! மோர்க் களியா? எனக்கு ரொம்பப் புடிக்குமே’ன்னா பத்மா.
‘சாப்பிடுங்கோ... சாமிக்கு வெளக் கேத்திட்டு வர்றேன்’னு சொல்லிட்டு, மாமி உள்ளே போயிட்டா.
ஆசை, ஆசையா ஒரு வாய் மோர்க் களியை எடுத்து வாயில போட்டேன். அவ்வளவுதான். மேலண்ணத்துல அப்படியே ஒட்டிக்கிச்சி. ருசியாவாவது இருந்து தொலைச்சிருக்கக் கூடாதா? பத்மாவைத் திரும்பிப் பார்த்தா… அவளும் வாயில போட்டுட்டு ரெண்டு கண்ணையும் அகல விரிச்சிட்டு, பேய் முழி முழிக்கறா. ரெண்டு பேராலயும் வாயைத் தொறக்கவே முடியலை. 


மாமி வர்றதுக்குள்ள, வாசலுக்குப் போய் தட்டுல இருந்ததையெல்லாம் பிளாட்பாரத்துல வழிச்சிப் போட்டோம். வாயில விரலைவிட்டு மிச்சமிருந்ததையும் எடுத்துப் போட்டோம். அப்போபாத்து ஒரு தெரு நாய் வாலை ஆட்டிட்டே ஓடி வந்தது. மோர்க் களியைப் பாத்துட்டு எங்களை ஒரு தரம் பாத்தது. வால் ஆடுறது மாத்திரம் நிக்கவே இல்ல. வாயில்லா ஜீவனாச்சே, பாவம் அவஸ்தைப் படப் போவுதேன்னு ‘ச்சூ… ச்சூ...'ன்னு விரட்டினேன். வாயில மோர்க் களி கொஞ்சம் ஒட்டிட்டிருந்ததால எனக்கு வார்த்தையே வரலை. ‘ஷூ... ஷூ…’ன்னு வெறும் காத்துதான் வந்தது. 


நான் கொஞ்சறேன்னு நெனைச்சிட்டு, அந்த நாய் மோர்க் களியை வாயால் கவ்வி எடுத்தது. அவ்வளவுதான். தலையைத் தூக்கி என்னைப் பரிதாபமாப் பாத்தது. ‘க்யீங்... க்யீங்’ன்னு மொனகற மாதிரியே ஒரு சத்தம்! 


‘அடிப்பாவி! என்னைக் கொல்றதுக்காகவாடி இதைக் கொண்டாந்துப் போட்டே’ன்னு கேக்கற மாதிரி என்னைப் பாத்து ஒரு மொறை மொறைச்சுது. ஆட்டிக்கிட்டிருந்த வாலைப் பின்னங்கால் ரெண்டுக்கும் நடுவுல செருகிட்டு ‘க்யீங்... க்யீங்…’ன்னு கத்திட்டே ஒரு ஓட்டம் எடுத்தது பாரு... 


அந்த நாய்க்கு யாரோடயும் ஒட்டும் இல்ல, ஒறவும் இல்ல. ஓடிப் போய்ட்டு. நாங்க அப்படி ஓடிப் போவ முடியுமா? வீட்டுக்குள்ள திரும்பி வந்து காலித் தட்டோட, மூஞ்சைத் தேமேன்னு வெச்சிட்டு ஊஞ்சல்ல உக்காந்தோம்.
வெளக்கேத்திட்டு, மாமி சொம்புல தண்ணி எடுத்துட்டு வந்தா. ரெண்டு பேர் தட்டும் காலியா இருக்கறதைப் பாத்தா. மாமி முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்! 


‘நிமிஷமா காலி பண்ணிட்டேளே. மோர்க் களி அவ்ளோ நல்லா இருந்திச்சா?’ன்னு கேட்டுட்டே, சந்தோஷமா உள்ளே போய் சட்டியோட மோர்க் களியைக் கொண்டாந்து ரெண்டு பேர் தட்டுலேயும் அப்படியே கவுத்துட்டா. இத்தனைக்கும் நாங்க ‘வேணாம்… வேணாம்’ன்னு தட்டு மேலயே கவுந்துப் படுக்காத கொறைதான் 


அதுக்குப் பரிகாரமா இன்னிக்கி என் கையால மோர்க்களி பண்ணிப் போடறேன்னு பத்மாவை வரச் சொல்லியிருக்கேன்…” 


‘வேலாயுதம்’ திரைப்படத்தில் கதாநாயகன் வேலாயுதம் (விஜய்), தான் மிகவும் நேசிக்கும் தங்கை காவேரி (சரண்யா மோகன்) மற்றும் நண்பர்களோடு ரயிலில் சென்னைக்குப் போவது போல் ஒரு காட்சி. 


சாப்பாட்டு நேரம். தன் தங்கை எவ்வளவு சூப்பராக சமைப்பாள் என்று ஏகத்துக்கும் பில்ட்- அப் கொடுத்துவிட்டு, அவள் செய்து எடுத்து வந்திருக்கும் புளியோதரையை நண்பர்களுக்கு வேலாயுதம் பரிமாறுவான். 


அதை வாயில் வைத்தவுடனேயே, ஒவ்வொருத்தர் முகமும் அஷ்ட கோணலாகிப் போகும். தங்கையின் சமையலைப் பற்றி எக்குத்தப்பாக ஏதாவது விமர்சித்துவிட்டால், அண்ணன் விஜய் நரசிம்ம அவதாரமே எடுத்துவிடுவான். நண்பர்கள் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கும்போது, ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டு ஒருவன் வர, ஒவ்வொரு நண்பனும் கொடைவள்ளலாக, தன் தட்டில் உள்ளதை திருட்டுத்தனமாக அவனுக்குப் போட்டுவிட்டு, அமுக்கமாக வந்து உட்கார்ந்துவிட... 


விழி பிதுங்கினாலும், தங்கையின் மனம் கோணக்கூடாது என்று விஜய் ‘சூப்பர் டேஸ்ட்டு…’ என்று பொய் ஏப்பம் விட்டுக் காட்டுவார். தங்கை முகத்தில் பெருமிதம் கூத்தாடும்.
சற்று நேரத்தில் பிச்சை வாங்கிப் போனவன் ஆத்திரத்துடன் அங்கே திரும்பி வருவான். 


நண்பர்களில் ஒருவனது சட்டையை ஆவேசத்துடன் பற்றி, ‘‘ஏண்டா… மனுஷனைக் கொல்றதுக்கு எவ்ளோ வழியிருக்கு? ஒரு கத்தியை எடுத்து ‘சர்க்’ன்னு வயித்துல எறக்கிட்டுப் போறதுதானேடா. சாப்பாட்டைப் போட்டுக் கொல்லப் பாக்கறீங்களே...’’ என்று கூச்சல் போடுவான். 


இந்தக் காட்சி திரையில் வந்தபோது தியேட்டரே சிரிப்பில் குலுங்கும். அனுராதா ரமணனுக்கு நேர்ந்த அனுபவம்தான், இந்தக் காட்சிக்கு அடிப்படை என்று சொல்லவும் வேண்டுமா? 

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள
[email protected]  

thanx -the  hindu

Monday, July 09, 2012

குப்பி -ஒற்றைக்கண் சிவராசனின் கடைசி நிமிடங்கள் -சினிமா விமர்சனம்

http://stat.homeshop18.com/homeshop18/images/product/radical/05Sep11-Mov-1240.jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமா வெச்சு ஆர் கே செல்வமணி எடுத்த  குற்றப்பத்திரிக்கை 14 வருடங்கள் தடை செய்யப்பட்டு பின் வந்தும் வெற்றி பெறாத நிலையில் அந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் கடைசி 21 நாட்கள் பற்றிய 2 மணி நேர படத்தை இப்போதான் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது.. 2007இல் ரிலீஸ் ஆன இந்தப்படம் செய் நேர்த்தி,நெறி ஆள்கை என பல விதத்தில் உலகப்படத்துக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கு.. டோண்ட் மிஸ் இட்.. 

21.5.1991 இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நாள்.. அந்த கொலை பற்றிய விசாரணைல சிறப்பு புலனாய்வுக்குழு இயங்குது.. வழக்கில் தேடப்படும் முக்கியக்குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசன்,சுபா இருவரும் தங்கள் ஆட்களுடன் எங்கே பதுங்கி இருந்தாங்க. எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சாங்க.. ஒரு வாடகை வீட்டில் தங்கக்கூட முடியாம எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்பட்டாங்க.இதுதான் படத்தோட கதைக்கரு.. 


படத்தோட டைட்டிலா குப்பி என வைக்காம வாடகை வீட்டிற்கான தீவிரத்தேடல்னு வெச்சிருக்கலாம் போல.. அவ்வளவு நுணுக்கமா வாடகை வீட்டின் தேடல் பற்றி சொல்லி இருக்காங்க.. 

 ரங்க நாத் ஒரு வீடு புரோக்கர்.. அவர் 1985ல விடுதலைப்புலிகளுக்கான நிதி உதவி அளித்தவர்.. அவங்க மேல  பாசமும், பரிதாபமும் கொண்டவர்.. அவருக்கு ஒரு மனைவி.. பயந்த சுபாவம்.. அவரு சிவராசன் & கோவுக்கு தன் வீட்டில் அடைக்கலம் அளிக்கிறார்,.. இது அவர் சம்சாரத்துக்கு பிடிக்கலை.. அவங்களை சீக்கிரம் அனுப்பிட துடிக்கிறார்.. 

 சிவராசன் இதையே துருப்புச்சீட்டா வெச்சுக்கிட்டு என் ஆளுங்களுக்கு ஒரு வீடு பிடிச்சுக்கொடுத்துட்டா நாங்க இங்கே இருந்து கிளம்பிடுவோம்னு சொல்றான்,.. உடனே ரங்கநாத் அதே போல அலைஞ்சு வீடு பிடிச்சு தர்றான்.. ஆனால் அவங்க அங்கே குடி போகலை. அவங்க ஆட்கள் கொஞ்சம் பேர் தான் அந்த வீட்டுக்கு குடி போறாங்க..


http://www.hindu.com/fr/2007/04/13/images/2007041300200201.jpg


சிவராசனின் நினைப்பு என்னான்னா ஃபேமிலியோட இருக்கற இந்த வீட்லயே குடி இருந்துட்டா  யாருக்கும் டவுட் வராது.. தனியா குடி போனா யாராவது கேள்வி கேப்பாங்க.. இதான் அவன் எண்ணம்.. ஆனா ரங்க நாத்தின் மனைவி அவங்களை துரத்துறதுல குறியா இருக்கா,.

 எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு பங்களா டைப் வீட்ல சிவராசன் -சுபா குடி போறாங்க.. போலீஸ்க்கு இந்த தகவல் எப்படியோ தெரிஞ்சுடுது.. அந்த பங்களாவை ரவுண்ட் அப் பண்ணிடுது.. அப்போ சிவராசன் நடவடிக்கை என்ன? என்ன நடந்தது? என்பதை நேரடி ரிப்போர்ட்டை படிக்கற மாதிரி டீட்டெயிலா படமா எடுத்திருக்கார் டைரக்டர்.. 


படத்தோட முதல் ஹீரோ திரைக்கதை , காட்சி அமைப்பு தான்..  சினிமா பார்க்கற உணர்வே இல்லை.. என்னமோ நேர்ல அந்த சம்பவம் நம் கண் முன் நடக்குதுங்கற மாதிரி பிரமை.. ஹாட்ஸ் ஆஃப் டைரக்டர்.. 


 2 வது ஹீரோ ஒற்றைக்கண் சிவராசன்.. இவர் டி வி சீரியலில் நடிச்சவர்னு நினைக்கறேன்.. நல்ல நடிப்பு. படம் பூரா ஒரு கண்ணை மட்டும் இவர் மூடி நடிச்சது அவன் இவன்ல விஷால் மாறுகண்ணாளரா நடிக்க சிரமப்பட்டதுக்கு எந்த விதத்திலும் குறை இல்லாத அளவு சிரமப்பட்டு நடிச்சிருக்காரு.. வெல்டன்.. அவர் பாடி லேங்குவேஜ் அபாரம்.. எதாவது சத்தம் கேட்டா அவர் ஒரு நாயைப்போல, பூனையைப்போல உஷார் ஆகி மற்றவரை வழி நடத்துவது அபாரம்.. 


அடுத்து ரங்கநாத்தின் மனைவியாக வருபவர்.. இவர் நடிகை தாரா .. இங்கேயும் ஒரு கங்கை என்ற பட நாயகி ( சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்). படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. சராசரி மனைவிக்குள்ள பயம், துடிப்பு, ஆத்திரம் என கலந்து கட்டி, உணர்வுகளை முகத்தில் கொட்டி நடித்திருக்கிறார்.


வீடு புரோக்கராக வரும் இவர் நடிப்பு யதார்த்தம்.சிவரசனிடம் மாஸ்டர் மாஸ்டர் என பம்மும்போதும் சரி, மனைவியின் மிரட்டலுக்கு அடி பணியும் போதும் சரி சபாஷ் போட வைக்கும் நடிப்பு..

 உண்மைச்சம்பவத்தில் இந்த ரங்க நாத் கேரக்டரின் நெருங்கிய உறவினர் தான் இந்தப்படத்தின் இயக்குநராம்.. அதனால் தானோ என்னவோ படத்தின் திரைக்கதை பக்காவாக உண்மைசம்பவத்தை அப்படியே கண் முன் நிறுத்துவதாக இருக்கு.. 

 சுபாவாக மாளவிகா .  குறை சொல்ல முடியாத நடிப்பு.. சிற்சில இடங்களில் செயற்கை தட்டுகிறது.. என்னை கேட்டா இந்த கேரக்டருக்கு உண்மையான இலங்கை  அகதிப்பெண்ணை தேடி பிடித்து நடிக்க வைத்திருக்கலாம்./. 

 போலீஸ் ஆஃபீசர்ஸ், சி பி ஐ ஆஃபீசர் அனைவரின் நடிப்பும் ஓக்கே.. நாசர் கூட 2 சீன் ஸ் வர்றார்.. 


http://mimg.sulekha.com/tamil/kuppi/stills/kupppii_15.jpg



மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை





1. அரசாங்கத்துல வேலை செய்யறீங்க, அரசாங்க சம்பளம் வாங்கறீங்க, ஆனா அரசாங்கத்தோட கண்ல மண்ணைத்தூவறீங்க.. 


2. சுபா - உங்களை அக்கான்னு கூப்பிடலாமா?

 ஏன்? உன் அக்கா என்ன ஆனா?


 அவளை கொன்னுட்டாங்க.. என் கண் எதிரே... 



3. பதவில இல்லைன்னாலும் எனக்கு 3 லிங்க் இருக்கு 1. பொலிட்டிகல் லிங்க், 2. போலீஸ் லிங்க், 3. இண்டெலிஜெண்ஸ் ஆஃபீஸ் லிங்க்..


4. நாம ஏதாவது சேஃபான இடத்துக்கு போயிடலாமே?

 இந்த பூமில பாதுகாப்பான இடமே எங்கேயும் இல்லை. 



5. போலீஸ் - வண்டியை ஏன் விட்டுட்டு வந்துட்டீங்க. வீதில அநாதையா நிக்குது. டெரரிஸ்ட் யாராவது எடுத்து யூஸ் பண்ணுனா என்ன செய்வீங்க? என்னசார்? கதவைதட்டுனதும் கதவை டக்னு திறந்தீங்க, ஆனா வாயைத்திறக்க மாட்டேங்கறீங்க?


6.  குட் நைட்


 மிட் நைட்ல என்ன குட் நைட் வேண்டிக்கிடக்கு?


7. யார் இவங்க? புதுசா இருக்காங்க?


 இவர் என் வீட்டுக்காரருக்கு வேண்டியவர்.. அவர் என் வீட்டுக்காரருக்கு வேண்டியவர்னு சொன்னேனே அவரோட உறவினர். ... அவரோட உறவினர்க்கு இவர் உறவினர்.. 



8. இந்த எலி அடிக்கடி கீச் கீச்னு கத்தி எனக்கு தொந்தரவு தருது.. இதைக்கொன்னுடவா?


 வேணாம்.. அது இருக்கறதால தான் நீ அலர்ட்டா இருக்கே..


9. இது என்ன தெரியுமா? சயனைடு.. இந்த குப்பியை ஒரு கடி கடிச்சா போதும். தொடர்ந்து 7 பிறப்புக்கும் பர்த் சர்ட்டிஃபிகேட்  வாங்க வேண்டியதிருக்காது. 



10. உங்களுக்கு வாழ ஆசை இல்லையா?

எண்டைக்கு எங்கட நாடும் மக்களும் சுகமா இருக்கிறனமோ அண்டைக்குத்தான் ஓய்வு, வாழ்வு எல்லாம்


11.   நான் அமரனா இருக்கனும், அதுதான் என்  கடைசி ஆசை



12.  சிவராசன் எங்கே இருக்கான்னு எனக்குத்தெரியும்.. 10 லட்சமும் எனக்குத்தான்.. 


 டீக்குடிச்சுட்டு காசை வெச்சுட்டு கிளம்பு.. உனக்கு எல்லாம் அந்த வல்லமை பத்தாது.. 


13. டெல்லிக்கு ஐ பி எஸ் ட்ரெயினிங்க் போனப்ப  என்னையே செக் பண்ணுனாங்க.. செக்கிங்க் என்பது அவமானப்படுத்தும் செயல் அல்ல.. 


14. வெளில போன பிசாசு புதுப்புது பேய்களோட உள்ளே வந்த மாதிரி இவனுங்க என்ன புது புது ஆள்ங்களோட வந்துட்டே இருக்காங்க?


15. சுபா -வீட்டுக்குள்ளே வாழை மர நிழல்  விழுந்தா எங்களை மாதிரி சோல்ஜர்ஸ்க்கு நல்ல சகுனம் இல்லை ( வீட்டுக்குள்ள வாழமர நிழல் வளர்ந்தா எங்கள மாதிரி ராணுவக்காரங்களுக்கு சகுனம் சரியில்ல)


16. எங்க நாட்டுல வந்து எங்க பி எம்மை கொன்னது தப்புதானே?


 ஆமா, எங்க மேல மக்கள் வெச்சிருந்த மரியாதை, சிம்ப்பதி எல்லாம் போச்சு..


17. நாங்க இந்த மண்ணில் வந்து மீண்டும் பிறப்போம்.. வீரர்கள் ரத்தம் சிந்தலாம், கண்ணீர் சிந்தலாமா? ( நாங்க திரும்பவும் இந்த மண்ணுல வந்து பிறப்போம்.. வீரர்கள் ரத்தம் சிந்தலாம்.. கண்ணீர் வடிக்கக்கலாமோ?)


18. முதல் தடவையா நம்ம வீடு நம்மளுது இல்லையோன்னு தோணுது.. அவங்க போன பின்பும் அவங்க நிழல் நம்ம கூடவே இருக்கறது மாதிரி தோணுது.. இங்கேயே சுத்திட்டு இருக்கற மாதிரி தோணுது.. ஏன்னா அவங்க வீட்டை விட்டுத்தான் போனாங்க, ஊரை விட்டுப்போகலையே?


சரி, அதனால நமக்கு என்ன இழப்பு?


 நிம்மதி, சந்தோஷம்..  எல்லாம் இழந்தோமே?


19. உண்மையான நண்பன் நீ தான், அடுத்த பிறப்பில் நீ எங்களுடன், எங்க நாட்டில் பிறக்கப்போகிறாய்(என்ட உண்மையான நண்பன் நீதான்.. அடுத்த பிறவில நீ எங்கட நாட்டில தான் பிறக்கப்போறாய்..)


20. உயிரோட அவங்களை பிடிக்கனும், போலீஸோட பவர் என்ன?ன்னு அவங்களுக்கு நாம காட்டனும்


21. சரண்டர் ஆனா தூக்கிலே தானே போடுவாங்க, அதுக்கு குப்பி சாப்பிட்டு மரணிக்கலாம்


22. என்னை நீ சரண்டர் ஆகச்சொல்றியா? உன் முதுகை காட்டாம அப்படியே போய்ட்டா நீ உயிர் தப்பிக்கலாம்


23. நம்ம கிட்டே இருக்கற ஒரே ஆயுதம் சயனைடு தான்.. நம்ம மரணம் சரித்திரத்தில் இடம் பெறனும்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjogl7ebFTOGz7WeKB_yy11C0Hx90-5MtFPTx13rbTYNk4OSeuSfp7cxK7xuswkqzvBIjEwwljqE1Y0SMrvi3Or9KjT-OqbOeYJxgPny6nrovyDI8-1mZD_BCwgztvJbixdUs_C79Us7ovM/s400/kuppi.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வாடகைக்கு வீடு பிடிச்சு கொடுக்கும் புரோக்கர் ஒரு பெரிய மனுஷன் பேரை ஒரு சீட்ல எழுதி தர்றார்.. அதை விடுதலைப்புலிகள் சர்ட் பாக்கெட்ல வெச்சுக்கறாங்க.. அது ஒரு முக்கியமான தடயமா போலீஸ் கைல சிக்குது.. அவ்வளவு  அசால்ட்டாவா ஆதாரத்தை வெச்சுக்குவாங்க.. படிச்சுட்டு அழிச்சுட மாட்டாங்களா?


2.  வீடு பார்ப்பது, குடி போறது எல்லாம் ஓக்கே.. அவங்களூக்கு பணம் எப்படி வருது? அதை பற்றி காட்டவே இல்லையே?


3.  ஒரு சீன்ல அதாவது க்ளைமாக்ஸ் சீன்ல சிவராசன் பங்களாவை   போலீஸ் ரவுண்ட் அப் பண்ணினதை பார்த்து பொது மக்கள் கூட்டம் கூடுவது போல் சீன்.. அப்போ ஒரு வசனம்.. கூட்டத்தை முதல்ல விரட்டுங்க.. உடனே 12 பேர் உள்ள கூட்டத்தை காட்டறாங்க.. சிரிப்பா இருக்கு.. அந்த சீன்ல அட்லீஸ்ட் 100 பேரையாவது காட்டி இருக்க வேணாமா?


4. ரவுண்ட் அப் பண்ணுன போலீஸ் மயக்க மருந்து , கண்ணீர்ப்புகை இதை எல்லாம் யூஸ் பண்ணவே இல்லையே? அவங்க கிட்டே பணயக்கைதி யாரும் இல்லை.. அப்புறம் என்ன தயக்கம்?உயிரோட பிடிக்க ஆசைப்படறவங்க மாஸ்க் அணிஞ்சு மயக்க மருந்தை அந்த வீட்டில் விட்டிருக்கலாமே?

5. சிவராசன் ஜோக் அடிச்சுக்கிட்டு அங்கங்கே காமெடி பண்ணீட்டு இருக்கற மாதிரி சீன்கள் நிறைய வெச்சிருக்காங்க.. உண்மையில் அவன் சீரியஸ் டைப் என்று படித்த மாதிரி ஞாபகம்./.


6. சுபாவாக வரும் கேரக்டர் ஒரு  ரிசர்வ் டைப் என்று படிச்சிருக்கேன். ஆனா படத்துல தாரா கிட்டே அவங்க தொண தொணன்னு பேசிட்டு இருக்காங்க.. அந்த அக்கா செண்ட்டிமெண்ட் எடுபடலை..


7. அடிக்கடி வீட்டுக்குள் சூரியனின் கிரணங்கள் படுவது போல் செயற்கையான மஞ்சள் லைட்டை உபயோகப்படுத்தி இருக்க வேணாம்././ 


8. ஏகப்பட்ட பேருக்கு வீடு பிடிச்சு தர்றாரே சிவராசன்.. அவங்க எல்லாம் விடுதலைப்புலிகள் போல தோணலை.. அகதிகள் மாதிரியும் காட்டலை.. இன்னும் தெளிவு வேணும்..

9.  இலங்கைத்தமிழ் சரியா பதிவு செய்யப்படலை.. இங்கே இருக்கற ஆள்ங்க பேசற தமிழ் போலவே இருக்கு,..


http://mimg.sulekha.com/tamil/kuppi/stills/kupppii_10.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் ( ramesh)

1. ரங்கநாத்தாக வரும் ஜெகன் நல்லா நடிச்சிருக்கார்.. அவரது பாத்திர படைப்பு கன கச்சிதம்.. அதே போல் சிவராசன்.. பாராட்ட வைக்கும் நடிப்பு தாராவின் பண் பட்ட நடிப்பு


2. படத்தில் தொய்வைத்தரும் சீன்கள் என எதுவுமே இல்லை.. செம விறு விறுப்பு.


3. மொத்த படத்திலும் ஒரு சீனில் கூட ராஜீவ் காந்தி, விடுதலைப்புலி , இலங்கை போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏதும் வராமல் பார்த்துக்கொண்டது.


4. இயக்குநரின் நோக்கம் விடுதலைப்புலிக்கு ஆதரவாகவோ,  போலீஸ்க்கு ஆதரவாகவோ இல்லாமல் என்ன நடந்ததோ அதை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்தும் திரைக்கதை வடிவமைப்பு


இந்தப்படம் ரிலீஸ் ஆனப்போ ஈரோடு பாரதி தியேட்டரில் ஓடுச்சு.. ஆனா அப்போ பார்க்கலை.. நேற்றுத்தான் பார்த்தேன்.. டி வி டியில்


http://tamil.galatta.com/entertainment/wallpaper/tamil/movies/Kuppi/bigimage/12_Kuppi2.jpg




சி.பி கமெண்ட் -  பரபரப்பான  செய்திகளை ஆர்வமாகப்பார்ப்பவர்கள், விறு விறுப்பான படம் பார்க்க ஆசைப்படுபவர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும்படி வன்முறைக்காட்சிகள், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாம தான் இருக்கு.. மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் பார்ப்பதை தவிர்க்கவும்

நன்றி - ,,தாமரைக்குட்டி @Thamaraikkutty ( இலங்கைத்தமிழ் மொழி பெயர்ப்புக்கு )