Showing posts with label காலச்சுவடு. Show all posts
Showing posts with label காலச்சுவடு. Show all posts

Wednesday, October 31, 2012

ஜூ வி - வழக்கு பாயுதே வாழ்த்துகள் டூ ரைட்டர் ஜெயமோகன்

ஜெயமோகன் மீது வழக்கு ஏன்?

ரண்டு எழுத்தாளர்கள் மத்தியிலான மோதல் இப்போது நீதிமன்றப் படிக்கட்டுகளைத் தொட்டுள்ளது. 


சமூக அக்கறையோடு பெரியாரியம், மார்க்சியச் சித்தாந்தங்களைப் பேசியும் எழுதியும் வரும் வெகு சிலரில் எஸ்.வி.ராஜதுரை முக்கியமானவர். அவரது 60-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உலகளாவிய அரசியல், பொருளாதாரம், இலக்கியச் சிந்தனைகளை தமிழில் விதைத்தவை. இவர், எழுத்தாளர் ஜெயமோகன் மீது  மானநஷ்ட வழக்கு தொடுக்க, இலக்கிய வெளியில் அதிர்வலைகள்.


நீலகிரி மாவட்டம் ஊட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் ராஜதுரை. அவரது சார்பில் வழக்கு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் கே.விஜயன், இந்த விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''தனித்த எந்த இயக்கத்தையும் கட்சியையும் சாராமல் சுதந்திரமான சிந்தனையாளராக விளங்கும் எஸ்.வி. ராஜதுரை, தன்னை 'சர்வ தேசியவாதி’​யாகவே அடையாளம் காட்டிக்கொள்ள விருப்பப்படுகிறார்.

 முழு மனிதஇனத்தின் நலனுக்கும் சார்பான ஒரு மனிதனாக தன்னை வெளிப்படுத்த விரும்பும் இவர் மீது வலைதளத்தில் பொய்களை அள்ளித் தெளிக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். பெரியார், அம்பேத்கர் போன்ற மாமனிதர்களை இழிவுபடுத்தி எழுதுவதன் மூலம் தனது இருப்பை உறுதிபடுத்திக்கொள்வதே ஜெயமோகனின் வழக்கம். கடந்த ஜூன் 20-ம் தேதி ஜெயமோகன் தனது வலைதளத்தில், 'காலச்சுவடு இதழுக்கு வழங்கப்பட்ட மூல நிதியானது ஃபோர்டு ஃபவுண்டேஷன் அளித்ததே என்று, அந்த ஃபவுண்டேஷனின் முக்கிய நபரான முத்துக்குமாரசாமியே கூறியுள்ளார். 


காலச்சுவடும், க்ரியாவும், எஸ்.வி.ராஜதுரையும், இப்படிப் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்குக் கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச் செல்லும் கருத்துகளுக்கு இவ்வளவு பண மதிப்பா என நாம் வியப்போம். அடுத்த முறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களைப் புரட்டுவோம்’ என்று வார்த்தைக்கு வார்த்தை வன்மம் காட்டி எழுதி உள்ளார்.




மூன்று நாட்கள் கழித்து 'விதவிதமான பண்பாட்டு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வாயிலாகவே இந்த நிதியுதவிகள் பெரும்பாலும் அளிக்கப்படுகின்றன. முத்துக்குமாரசாமிபோல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதுதான் இந்த உண்மைகள் எல்லாம் நமக்குத் தெரிகிறது, இல்லையேல் இதெல்லாம் வெளியே வர வாய்ப்பே இல்லை’ என்று தொடர்ந்து தனது சாடலையும் கேலியையும் வலியுறுத்தி உள்ளார்.



ஒரு புத்தகத்தின் உருவாக்கத்துக்குப் பல நிலை​களில் ஊக்கமாகவும் உதவியாகவும் இருந்தவர்களை நன்றியோடு அந்தப் புத்தகத்தில் நினைவுகூர்வதுதான் இலக்கியப் பண்பாடு. ராஜதுரையின் 'பெரியார்- சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலில் இப்படி நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பதையே ஓர் ஆதாரமாக்கி, மேலும்மேலும் அவதூறு செய்திருக்கிறார் ஜெயமோகன்.



மேலும், அதேமாதம் 24-ம் தேதி தனது வலைதளப்பதிவில் 'ராஜதுரையின் நிதி ஆதாரங்​களை ஆராய்ந்துகொண்டிருக்கிறேன். இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியாரியல் ஆய்வு இருக்கையில் கௌரவப் பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி அந்த இருக்கையின் நிதிஆதாரம் என்ன? என்ற கோணத்திலும் ஆராய்கிறேன்’ என்று விடாது வசை மழையைப் பொழிந்திருக்கிறார். ஜெயமோகனின் ஆதாரமற்ற கருத்துகளுக்கு விடியல் பதிப்பகத்தின் சிவா எதிர் விமர்சனம் தெரிவித்தார். 'ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள்.


 ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த அமைப்புகள் எத்தனை அன்னியநிதியில் திளைக்கின்றன என்பதை நீங்கள் ஆராய்ச்சி செய்ததுண்டா? உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூட பார்க்கக் கூடாது’ என்று பதிவு செய்திருக்கிறார். ராஜதுரையோடு இணைந்து செயல்படும் எழுத்தாளர் வ.கீதா குறித்தும் தவறான பேச்சுகளை உதிர்த்திருக்கிறார்.


'வ.கீதா நடத்தி வரும் தன்னார்வக் குழு பற்றி ஒரு முழுமையான பொது விவாதம் தமிழில் தேவையாகிறது. நம் அறிவுஜீவிகளுக்கும் தன்னார்வக் குழுக்களுக்கும் இடையேயான உறவுகள் பற்றி வெளிப்படையான பேச்சு உருவாக வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஜெயமோகனின் இந்தப் பொய்யுரைகள் ராஜதுரையின் மனதை வெகுவாகக் காயப்படுத்தி இருக்கின்றன. அவர் நலம் நாடுவோர் வருத்தத்துடன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளவில்லை.



 மனிதநேயப் பணிகளுக்காகப் போராடும் ராஜதுரை போன்றோரைச் சீண்டி, அதன்மூலம் பெரிய ஆளாக நினைக்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்குச் சட்டம் தகுந்த சாட்டையடி கொடுக்கும் என்பதை இந்த வழக்கின் தீர்ப்பு வாயிலாக உலகுக்கு உணர்த்திட வேண்டும்'' என்றார்.



கோத்தகிரியில் வசித்துவரும் எஸ்.வி. ராஜதுரையைச் சந்தித்தோம். ''ஏன் இவ்வளவு மோசமாக, அடிப்படை ஆதாரங்கள் துளியும் இன்றி, பொய்யுரைகளால் என்னை ஜெயமோகன் விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை. தொடக்கத்தில் நான் ஜெயமோகன் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.



 ஆனால், பொறுமை காக்கக் காக்க, மிக அதிகப்படியான வன்மையோடு தாக்க ஆரம்பித்து விட்டார். என்னைப் பற்றி அறிந்திருக்கும் நபர்கள் எனக்கு ஆதரவாக அவரிடம் பேசியிருப்பார்கள்போல. உடனே, தமிழ் அமைப்புகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி அவரை மிரட்டச் சொன்னேன் என்று கயிறு திரிக்கிறார். இதயநோய்க்காகத் தொடர்அறுவை சிகிச்சைகளை செய்து மிகதளர்ந்த உடல்நிலையோடு என் வாழ்க்கையைக் கழித்து வருகிறேன். மருத்துவச் செலவுகளை எவ்வளவு கடினமான சூழலில் நானும் என் துணைவி யும் எதிர்கொண்டு வருகிறோம் என்று எங்களை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்'' என்றார்.


தொடர்ந்து பலமுறை, ஜெயமோகனை தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயற்சித்தும், அவர் பேசுவதற்குத் தயாராக இல்லை. எஸ்.எம்.எஸ். மூலமும் விவரம் தெரிவித்தோம். பதில் இல்லை. அவர் விளக்கம் கொடுத்தால் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.



இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 16-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ஜெயமோகனுக்கு ஊட்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எழுத்தாளர்களுக்குள் விமர்சன மோதல் இருக்கலாம்... ஆனால் அது, தனி மனித  தாக்குதலாக இருக்கலாமா?


நன்றி - ஜூ வி & ஆல்சோ வழக்கு பாயும் ஜெய மோகன் சார் 

Sunday, September 30, 2012

பத்ம வியூகம் – ஜெயமோகன்- சிறுகதை

தூண்டு விளக்கேந்திய தாதி கதவை ஓசையின்றித் திறந்து, உள்ளே வந்தாள். அவளிடம்
தீபமிருந்ததனால் அறையின் இருட்டு மேலும் அழுத்தமானதாகப் பட்டிருக்கக்கூடும்.
படுக்கையைக் கூர்ந்து பார்த்தாள். சற்றுப் புரண்டு அசைவு காட்டினேன். அணைந்து
விட்டிருந்த கன்யா தீபத்தை ஏற்றிவிட்டு, கைவிளக்குடன் என்னை நெருங்கினாள்.
குனிந்து மெல்லிய குரலில், “நேரமாகி விட்டது மகாராணி” என்றாள்.


“என்ன?” என்றேன். தொண்டைக்கும் நாவுக்கும் பேச்சே பழக்கமில்லாதது போலிருந்தது.
என் மனமோ பெரும் கூக்குரல்களினாலும் அலறல்களினாலும் நிரம்பி வழிந்து
கொண்டிருந்தது. அப்பிரவாகத்திலிருந்து ஒரு துளியை மொண்டு உதடுகளுக்குக்
கொண்டுவரப் பெருமுயற்சி தேவைப்பட்டது.
”விடிந்து வருகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்பவேண்டும் என்று உத்தரவு”
என்றாள் தாதி.


“எங்கு?” என்றேன். என்னால் எதையுமே யோசிக்க முடியாதபடி மனம்
ஓலமிட்டுக்கொண்டிருந்தது.


தாதி தயங்கினாள். உதடுகளை ஈரப்படுத்தியபடி, “இன்று இளவரசருக்கு நீர்க்கடன்”
என்றாள்.


குளிர்ந்த உலோகப் பரப்புள்ள வாள் ஒன்று என் அடிவயிற்றில் பாய்ந்தது
போலிருந்தது. மனம் ஒரு கணம் நின்றுவிட, ஏற்பட்ட அமைதி வலிபோல் என் உடம்பெங்கும்
துடித்தது. பிறகு விம்மல்கள் என் வயிற்றை அதிரவைத்தபடி எழுந்தன. மார்பை மோதி,
தொண்டையை இறுக வைத்தன. உதடுகளைக் கடித்துக் கொண்டேன்.


தாதி குனிந்து, “மகாராணி” என்றாள். என்ன சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
நான் என்னை இறுக்கி, அனைத்தையும் உடலுக்குள் அழுத்திக்கொண்டேன். ஒரு சில
கணங்கள் அப்படியே அமர்ந்திருந்தேன். என் குரல் பிறகு நிதானமாகவே வெளிப்பட்டது.
“ஏற்பாடுகள் எல்லாம் ஆயிற்றா?” என்றேன்.


“ஸ்தேதவனத்திலிருந்து பட்டத்துராணியும் பிறரும் நேராக கங்கைக் கரைக்கே வந்து
விடுவார்களாம்.”


எழுந்தேன். உடல் மிகவும் கனமாக இருந்தது. சம நிலையிழந்து துவண்டது. தாதி
என்னைப் பிடிக்கலாமா என்று யோசித்து முன்னகர்ந்தாள். வேண்டாம் என்று கையை
அசைத்தேன். மெதுவாக நடந்தேன். அரண்மனை அமைதியாக இருந்தது. தீபங்கள் நீரில்
மிதப்பவைபோல அலைய, தாதிகள் நடனமாடினார்கள். இரவுக்குரிய ஒலிகள் வெளியே கேட்டபடி
இருந்தன. இளம் தாதி ஒருத்தி வந்து “நீராட ஏற்பாடுகள் செய்துவிட்டேன்” என்றாள்.


இளம் வென்னீர் உடலைத் தழுவி வழிந்தது. மனம் அதில் சிறிது இளைப்பாறுவது
ஆச்சரியமாக இருந்தது. கூந்தலைத் துவட்டிவிட்டு வெண்ணிற உடைகளை அணிந்துகொண்டேன்.
ஒரேயொரு வைர மாலையை மட்டும் அணிந்தேன். சிதையிலும் நான் நகைகளை அணிந்தாக
வேண்டும். நான் சுபத்திரை. பாண்டவ குலத்தின் மகாவீரனின், உபசக்ரவர்த்தியின்
பத்தினி. யாதவகுலத் தலைவனின் தங்கை. அந்த இரு வேடங்களையும் ஒருபோதும் நான்
கழற்ற முடியாது. என் மகன் போர்க்களத்தில் இரும்புக்கதையால் மண்டை உடைபட்டு,
உடல் முழுக்க அம்புகள் தைத்திருக்க, விழுந்து கிடப்பதைப் பார்க்க
நேர்ந்தபோதுகூட அதை மறக்க நான் அனுமதிக்கப்படவில்லை.


செய்தியைக் கூற அன்று
அண்ணாவே வந்தார். எப்போதுமுள்ள தன்னம்பிக்கை நிறைந்த அந்தப் புன்னகை. அமைதியான
குரல். “சுபத்திரை, நீ யாதவ இளவரசி, பாண்டவ ராணி. அதை நீ ஒருபோதும் மறக்க
மாட்டாய் என்று தெரியும்…” பிற தாய்மார்களையும் மனைவிகளையும் போல் மார்பிலும்
வயிற்றிலும் அறைந்தபடி, தலைவிரிகோலமாக ஓட முடியவில்லை. அபிமன்யுவின் உடல்மீது
விழுந்து கதற முடியவில்லை. அவன் பால் குடித்த இந்த மார்புகளை அறைந்து அறைந்து
உடைத்திருந்தேனென்றால் என்னால் தூங்க முடிந்திருக்கும். எப்போதும் அண்ணாவின்
பார்வை உடனிருந்தது. அவரது அழுத்தமான சொறகள். அனைத்துமறிந்த நிதானம்.


“சுபத்திரை, பசுக்கள் திமிறும் திமில்கலைக் கருத்தரிக்கின்றன. குதிரைகள் மண்ணை
மிதித்துப் பாயும் நான்கு குளம்புக்லைக் கருத்தரிக்கின்றன. ஷத்திரியப் பெண்கள்
வீர மரணம் அடையும் மகாபுருஷர்களைக் கருத்தரிக்கிறார்கள்.” அவரை எப்படி
வெறுத்தேன் அன்று! வாழ்நாளில் முதல் முறையாக அவருடைய இனிய குரல் எனக்கு
நெருப்பாகப் பட்டது. அவருடைய நிதானம் அருவருப்பைத் தந்தது. அவருடைய தர்மோபதேசம்
மாறாத நியாயங்கள், சுற்றி வளைக்கும் தருக்கங்கள். அவர் மனிதர் அல்ல. வெறும்
ராஜதந்திரி. உறவு கிடையாது, பாசம் கிடையாது. நெகிழ்ந்துருகிக் கன்னத்தில்
வழியும் ஒரு துளிக் கண்ணீரை அவர் அறிய மாட்டார். அழகிய சொற்றொடர் ஒன்றை அவர்
அத்தருணத்தில் கூறக்கூடும்.


“அண்ணா எங்கிருக்கிறார்?”


“கண்டவனத்தில் சக்ரவர்த்தியுடன் தங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.”


நான் கேட்க வேண்டிய அடுத்த கேள்விக்காகத் தாதி காத்திருந்தாள்.

“அவர்?”

“இரவு இரண்டாம் நாழிகைவரைகூட இருந்தார் என்று சொன்னார்கள். பிறகு ரதத்தில்
ஏறி…”

“சரி” என்றேன். தாதி பின்வாங்கினாள். ஆம், அவர் இன்றிரவு திரௌபதியை நெருங்க
முடியாது. புண்பட்ட புலிபோல் அவள் இருப்பாள். அவளை யாருமே நெருங்க முடியாது.
கிருபரும் அஸ்வத்தாமாவும் வைத்த நெருப்பில் அவளுடைய ஐந்து புதல்வர்களும்
உயிரோடு எரிந்தார்கள். அதைத் தன் கண்ணால் பார்க்கும் சாபம் பெற்ற பிறவி அவள்.
என்ன செய்துகொண்டிருப்பாள் இந்நேரம்? வாளெடுத்து ஆயிரம் பேரின் இதயத்தைக்
கிழித்து, அந்த உதிரத்தில் நீராடினால் ஒருவேளை அவள் மனம் ஆறக்கூடும். ஆரிய
வர்த்தத்தையே சாம்பலாக்கினால் அவள் மனம் ஆறக்கூடும். இந்நிலையில்கூட அவளைப்
பற்றி இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அவள் தன் புதல்வர்களை இழந்த செய்தியைக்
கேட்டபோதுகூட முதன் முதலில் மனதில் எழுந்தது திருப்திதான். அழட்டும். அடிவயிறு
பற்றியெரியட்டும். அவளுடைய ஆங்காரமல்லவா இந்த ஆரியவர்த்தத்தில் பேரழிவை
விதைத்தது. அத்தனைக்கும் பிறகு மணிமுடி சுடர அவள் சக்கரவர்த்தினியாக
சிம்மாசனமேறி அமர்ந்து சிரிக்க வேண்டுமா? தர்மம் அதற்கு அனுமதிக்குமா?
வைரமுடியின் ஒளி அவள் முகத்தில் விழும்போது கண்கள் கலங்கிக் கலங்கிக் கண்ணீர்
உகுக்க வேண்டும். பாரதவர்ஷம் அவள் பாதங்களைப் பணியும்போது அவள் உடல்
எரியவேண்டும். சப்ரமஞ்சக் கட்டிலில் மலர்ப் படுக்கைமீது ஒரு நாள்கூட அவள்
நிம்மதியாகத் தூங்கக்கூடாது. என் குழந்தை களத்தில் சிதைந்து கிடப்பதைக்
கண்டபோது; ஒரு கணம் அக்காட்சி உச்சமாக, அருவருப்பாக, அந்நியமாகத் தோன்றி என்னை
உறைய வைத்த பிறகு, அந்த குளிர்ந்த வெட்டு என் வயிற்றில் பதிந்தபோது; அடிப்பாவி
என் குழந்தையை பலிவாங்கி விட்டாயே என்றுதான் கூவினேன். என் குரல் என்
மனதுக்குள்ளேயே ஒலித்து அடங்கியது.

உறைந்த ரத்தம் கரிய தடாகமாகச் செம்மண்ணில்
பரவியிருக்க, அதன் மீது கிடந்த உடலில் நான் என் கையால் அணிவித்த மஞ்சள் மேலாடை
கிடந்தது. ஆனால் அந்த முகம்! அது என் குழந்தையல்ல. அந்தக் கணங்களில் அந்த
விலகல்தான் எவ்வளவு ஆறுதலூட்டுவதாக இருந்தது. இது அபிமன்யு இல்லை. அவன் வேறு
எங்கோ இருக்கிறான். எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் என்முன் தோன்றி
ஏமாந்துவிட்டாயா என்று சிரிப்பான்.


எப்படிச் சிரிப்பான்? உதடுகள் சிறியவையாக, சிவப்பாக இருக்கும். மேலுதட்டின்
இளநீல மயிர் மட்டும் இல்லையென்றால் பச்சைக் குழந்தைதான். சிரிக்கும்போது சிறிய
கண்களைப் பாதி மூடிவிடுவான். வலுவான அகன்ற தோள்களைக் குலுக்குவான். எப்போதும்
சிரிப்புதான். எதற்கெடுத்தாலும் கிண்டல். என் தோள்களைப் பிடித்து உலுக்குவான்.
அவனுக்காக அச்சம் மிகுந்தவளாக, மடமை நிரம்பியவளாக என்னையறியாமலேயே நான்
வேடமிடுவேன். கனத்த கரங்கள். வடு நிரம்பிய முழங்கை. அண்ணாந்து பார்க்க வைக்கும்
உயரம். அகன்ற மார்பு. அதைப் பார்த்ததும் மனம் மலரும். மறுகணம் கண்பட்டுவிடுமோ
என்று சுருங்கும்.

முன்பின் தெரியாத உத்வேகம் அவனுக்கு. அன்னையின் மனம்
தவிப்பது ஒருபோதும் அவனுக்குத் தெரிவதில்லை. அவன் நடக்கத் தொடங்கிய நாள்முதல்
தொடங்கிய அவஸ்தை அது. சாளரத்தில் ஏறி, பரணில் தொற்றி, தொங்கியபடி வீரிட்டலறும்.
ஏணியில் ஏறி உச்சிப்படியில் நின்று சிரிக்கும். பலாமரத்துக் கிளைகளின் நுனியில்
தொங்கி ஆடி அடுத்தக் கிளைக்குச் செல்வான். தென்னை மரத்திலிருந்து கங்கை நீரில்
தலைகுப்புறக் குதிப்பான். குதிரை மீதமர்ந்து நீரோடைகளைப் பறந்து தாண்டுவான்.
வாளைச் சுழற்றி மேலே வீசி கீழே நின்று பிடிப்பான். மதம் பிடித்த யானையை அடக்கி
ஏறி அமர்வான. “அபிமன்யு, அபிமன்யு கவனம் கவனம்!” இதுவே என் தாரக மந்திரமாக
ஆயிற்று. வேகம்தான் எப்போதும். எந்த நிமிடமும் மூடப்பட்ட கதவுகளை உதைத்துத்
திறக்கத் துடிப்பவனைப் போல. “அவசரப்படாதே அபிமன்யு” என்று எத்தனை தடவை
கண்ணீருடன் மன்றாடியிருப்பேன். உதிரம் வழிய வந்து நிற்பான். எலும்பு உடைந்து
படுத்துக் கிடப்பான். என் குழந்தைக்குத் தெரிந்திருந்தா இவ்வளவுதான் தன்
நாட்கள் என்று? அய்யோ, என் செல்வத்தை நான் கண்ணாரப் பார்க்கவேயில்லையே.
மார்போடணைத்து திருப்தி வர முத்தமிட்டதில்லையே. இந்த ஆபகரணங்கள், பட்டாடைகள்,
மகாராணிப்பட்டம் எல்லாவற்றையும் வீசிவிட்டு என் குழந்தையுடன் பத்து நாள்
எங்காவது இருக்கிறேன். அடர்ந்த காட்டில் ஒரு குடிலில். அவனுக்குப் பாத சேவை
செய்கிறேன். அவன் தூங்க், விழித்திருந்து கண் நிறைய அவனைப் பார்க்கிறேன். அவன்
என்னை அம்மா என்று அழைப்பதை மீண்டும் கேட்டால் போது. ஆசை தீர ஆயிரம் முறை
கூப்பிடச் சொல்லிக் கேட்டால் போதும். பிறகு அவனைக் கொண்டு செல்லட்டும். இல்லை;
அவனுக்குப் பதில் நான் வருகிறேன். போதும் இனி எனக்கு இங்கு எதுவும்
மிச்சமில்லை.


“தேர் வந்துவிட்டது. மகாராணி” என்று தாதி வந்து சொன்னாள். நான் எழுந்து மெல்ல
வாசலை நோக்கி நடந்தேன்.


*2*
குளிராக இருந்தது. வானமெங்கும் நட்சத்திரங்கள் விரிந்து கிடந்தன. பூமியை மாறாத
காதலுடன் பார்க்கும் ரிஷிகளின் கண்கள். என்னதான் பார்க்கிறார்கள் அப்படி?
மண்ணில் மனிதர்கள் கொள்ளும் துயரங்கள் அவர்களுக்கு அத்தனை மகிழ்வூட்டுகின்றனவா
என்ன? அவர்கள் ரிஷிகள். பந்தபாசங்களை வென்றவர்க்ள். பாமர மனதின் துக்கம்
அவர்களுக்குப் புரியாது. ஆகவேதான் அங்கிருந்தபடி தர்ம நியாயங்களைத்
தீர்மானிக்கிறார்கள். அண்ணாவும் ரிஷிதான். சதுரங்கம் விளையாடும் ரிஷி.
வெற்றிமீது மட்டும் பற்றுக்கொண்ட ரிஷி. மனிதர்களும் பேரரசுகளும் சதுரங்கக்
காய்கள்.


தேர் நிதானமாக ஓடியது. பிரதான வீதி ஓய்ந்து கிடந்தது. தூசி மணம் நிரம்பிய
குளிர்ந்த காற்று உடைகளைச் சிறகுகளாகப் படபடக்கச் செய்தது. இன்னமும் இரவின்
ஒலியே கேட்டது. அவ்வப்போது சில பறவைகளின் ஓய்ந்த ஒலிகள். வீடுகளில் விளக்குகள்
அலைய ஆட்கள் நடமாடுவது தெரிந்தது. ஆனால் குரல்கள் இல்லை. ஒருவேளை இந்த நகரமே
இன்று நீர்க்கடனுக்குத் தயாராகிறது போலும். எத்தனை ஆத்மாக்களை இன்று கங்கை
வாங்கிக் கொள்ளுமோ? அவற்றைக் கடலுக்குக் கொண்டு செல்லும் சக்தி அவளுக்கு
இருக்குமா? முலையூட்டிய மார்பில் பிணங்களை சுமந்து செல்லும் விதி அவளுக்கு.


காற்று வேகமடையும்போதெல்லாம் எண்ணங்கள் பிய்ந்து ரதத்திலிருந்து பறந்து
பின்னோக்கிச் செல்வதாகப் பட்டது. மெல்ல முகத்திலறையும் காற்றின் வேகத்தில்
தெரியும் ரதவேகம் மட்டும் மனதில் எஞ்சியது. தரையில் கால்படாத குதிரை போல மனம்
அந்த ரதத்துடன் சேர்ந்து ஓடியது. காலமும் இடமும் கரைந்து போய் எங்கு
வேண்டுமானாலும் நான் செல்ல முடியும் என்று பட்டது. என் உடலின் எடை குறைந்தது.
என் தசைகள் மென்மையும் இறுக்கமும் கொண்டன. என் சிரிப்பில் அதிர்வும் குரலில்
குழைவும் ஏறியது. அப்போதுதான் நான் சுபத்திரை என்று உணர்ந்தேன். ஆம், நான்
அணிந்திருப்பது ஒரு வேடம். இந்த கனத்த உடல் ஓர் ஆடை, இதைக் கழற்றி வீசிவிட்டால்
நான் சிற்றோடைகள் மீது ரதத்துடன் சேர்ந்து பறக்கும் சுபத்திரை. இரு கைகளிலும்
வாளேந்தி இருவரிடம் போரிடும் யாதவ இளவரசி. ரைவத மலையின் கிரி பூஜையன்று
தோழிகளுடன் மதுவருந்திவிட்டு கும்மாளமிடுபவள். வெறிகொண்டு புரவிமீதேறி உருளும்
பாறைகள் நிரம்பிய மலைச்சரிவில் காற்றாக இறங்குபவள். இது எல்லாம் கனவு.
விழித்துக்கொண்டால் நான் துவாரகையில் என் அறையில் இருப்பேன்.

சுதர்மையும்
கிரிஜையும் பக்கத்து அறையிலிருந்து வருவார்கள். வாட்போர் கற்றுத் தந்த அக்ரூகர்
தாத்தா, பிரியத்துடன் கதை சொல்லும் சாத்யகி மாமா, கண்டிப்பான சாம்பன் மாமா….
எப்போதும்கூட இருக்கும் தோழனாக அண்னா. குறும்பும் முரட்டுத்தனமும் பாசமும்
நிரம்பியவன். எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய மதிநுட்பம் வாய்த்தவன். அண்ணா,
நீதான் எப்படி மாறிவிட்டாய், உன் கண்களில் மாறாமல் தெரிந்த அந்தக் குறும்பு
எங்கே?


ரதம் குலுங்கியது. பிறகு மீண்டும் வேகம் எடுத்தது. இதே போன்ற ஒரு மத்ஸ்ய
ரதத்தில் தான் துவாரகையை விட்டு வந்தேன். ரதத்திற்குள் கையில் நாணேற்றப்பட்ட
வில்லுடன் அன்று சற்றும் அறிந்திராத, எனக்கு மாறாக புதிராகத் தோன்றிய, மாவீரன்
இருந்தான். பின்னால் அக்ரூகரின் தலைமையில் யாதவப் படை துரத்தி வந்தது. அம்புகள்
சிறு பறவைகள்போல வந்து தரையிறங்கின. ரதத்தில் நாணொலியின் டங்காரம். குறிதவறாத
அம்புகள் பட்டு யாதவர்கள் குதிரை மீதிருந்து பாறைகள் நிரம்பிய மண்ணில் விழுந்து
அலறினர். மனதில் கனிவெறி ஏறியபடியே வந்தது. கிரிபூஜையின்போது மதுவின் போதை
தலையைக் கிறங்க வைக்கும். அது மேலும் மேலும் என்று குதிரையைத் தூண்டச்
செய்யும். இப்போது மது இல்லை. ஆனால் மனதில் பலமடங்கு போதை. நாணேற்றும்
கரங்களில் புரளும் தசைகளை ஓரக்கண்ணால் பார்த்தேன். மயிர் அடர்ந்த கரிய மார்பு.
மான் தோல் சரடால் கட்டப்பட்டு, காற்றில் பறக்கும் சுருண்ட காகபட்சக் குழல்.
சல்லடத்தின் இறுக்கத்தில் இறுகி இறங்கிய வயிறு. வேகம் வேகம் என்று ஆத்மா
துடிதுடித்தது. முடிவற்று திசைவெளியில் அப்படியே ஊடுருவியபடி இருக்கவேண்டும்
போலிருந்தது.


யாதவ தேச எல்லையைக் கடந்தோம். வெகு தொலைவில் காண்டவப்பிரஸ்தத்தின் மலைகள்
தெரிந்தன. மழை வரப்போகும் தருணம். மங்கிய ஒளியில் யாதவ தேசத்துப் புல்வெளி
வெகுதூரம் வரை பரவியிருந்தது. வானில் பெரும் மேகக் குவியல்கள் மெல்ல நகர்ந்தன.
கூட்டம் கூட்டமாக பசுக்களை ஓட்டியபடி இடையர்கள் சென்றனர். தூரத்தில்
மேகமொன்ரின் இடுக்கு வழியாக செம்பொன்னிற வெயில் ஒரு தூண்போலப் புல்வெளியில்
விழுந்து கிடந்தது. அப்பகுதி மரகதப் பரப்பாக ஜொலித்தது. குதிரைகள்
களைத்துவிட்டன. நுரை தள்ளிய வாயுடன் அவை தலைகுனிந்தன. அவற்றின் உடல்களிலிருந்து
வியர்வை முத்துக்களாக உதிர்ந்து கொண்டிருந்தது. குதிரை வியர்வையின் மனதைக்
கிளரச் செய்யும் மணம் எழுந்தது. என் கண்முன் அறியாத தேசமொன்றின் வாசல்
திறப்பதைக் கண்டேன். தூரத்தில் காட்டின் விளிம்பு தெரிந்தது. தியானத்திலமர்ந்த
பெரும்பாறைகள். பசும்காடுகள் மண்டிய மலைச்சரிவுகள். மலைச்சிகரஙக்ளும் வானும்
மௌனமாகக் கரைந்து ஒன்றாகும் இளநீலம். யாதவநிலத்தின் நாற்புறமும் திறந்த மண்ணில்
வாழ்ந்து பழகிய நான் மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறையாகவே அந்தப் புதிய தேசத்தை
உணர்ந்தேன். அங்கு குதிரைமீது ஏறி முடிவற்றுப் பாய்ந்து செல்ல முடியாது. முதல்
முறையாக அச்சம் உள் மனதில் தலைகாட்டியது.


தேரின் உள்ளிருந்து உடலில் சிறு உதிரக்கறைகளுடன் வெளிவந்தார் அவர். தேரை ஓரமாக
நிறுத்தி, குதிரைகளை அவிழ்த்து ஓரமாக நீரோடையில் நீரருந்த விட்டேன்.
புல்பரப்பில் அமர்ந்து கால்களை நீரில் விட்டு அளைந்தபடி அமர்ந்திருந்தேன்.
வானம் கறுத்திருந்ததனால் நீர் குளிராக இருந்தது. என்னருகே வந்து அமர்ந்தார்.
குதிரையின் வியர்வை மணம் என் நாசிகளை நிரப்பியது. என் தோளைத் தொட்டார். சுட்டு
விரலின் நாண்வடு மரக்கட்டை போல உறுத்தியது. கிளர்ச்சி உடம்பெங்கும் கதகதப்பாகப்
பரவியது. “சுபத்திரை, நமது எல்லைக்கு வந்துவிட்டோம். இனி இதுதான் உன் தேசம்.”
நான் தலை குனிந்தான். என் புஜங்களைப் பற்றினார். “அச்சமாக இருக்கிறதா?” மீசை
மிக அருகே தெரிந்தது. கண்களின் ஒளி குறுவாள் நுனிகள் போலக் குத்திவிடும் என்று
அச்சமூட்டுவதாகத் தெரிந்தது. “இல்லை: என்றேன். அக்கணங்களில் உள்ளூர வியந்து
கொண்டிருந்தேன். எப்படி இந்த முடிவை எடுத்தேன்? “நான் அர்ச்சுனன்” என்று இவர்
கூறியதும் எப்படி என் மனத்தின் தளைகளெல்லாம் அறுந்தன. அண்ணாவின் உயிர் நண்பர்,
பெரும் வீரர். என்னை நாடி வந்தவர். இல்லையில்லை. அவற்றையெல்லாம் விட என்னைக்
கவர்ந்தது இன்னொன்று. அவரது சாகசம் பற்றிய கதைகள். புரட்டுகள், ஜாலங்கள்.
போகுமிடமெல்லாம் அவர் வென்றடைந்த பெண்கள். வென்றடக்க ஒரு முரட்டுக் கரும் புரவி
கிடைத்த சந்தோஷம் என்னுடையது. அபாயம் தரும் ஈர்ப்பு அது. அறிய முடியாத
ஆபத்துகளும் இன்பங்களும் நிரம்பிய ஒரு வாசலைத் திறக்கும் துடிப்பு.
”எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?” என்று கேட்டபடியே என் இடையில் கையை
வளைத்து, தோள் வளைவில் முகம் புதைத்தார். மெல்ல நகர்ந்த கைகள் பின்புறம் என்
கச்சை அவிழ்த்தன. உதடுகள் வெப்பமாக அழுந்தின. என் உடம்பு வெம்மையும்
இறுக்கமுமாக எழுந்தது. மறுகணம் அந்த அலட்சியமான சுதந்திரம் என்னைச் சுட்டது.
கைகளால் அவர் மார்பைப் பிடித்துத் தள்ளினேன். திமிறினேன். என் வளையல்கள்
குலுங்கின. மாலைகள் நெறிபட்டன. அவை என்னைக் கேலிப் பொருளாக மாற்றுவதை
உணர்ந்தேன். அவருக்கு என் திமிறல் உற்சாகத்தைத் தந்தது. சிரித்தபடி,
“குதிரைக்குட்டி போலிருக்கிறாய்” என்றார்.


என் வேகம் தளர்ந்தது. கூசிச் சுருங்கிப்போனேன். நான் ஒரு முரட்டுக் குதிரையை
வெல்லவில்லை. ஒரு சிறுத்தையால் வேட்டையாடப்பட்டிருக்கிறேன். அவரைத் தள்ளுவது
பயனற்றது என்று பட்டது. அவர் என் உடலைக் கையாண்ட விதத்தில் இருந்த அனுபவத்
தேர்ச்சி என் அங்கங்களை உறைய வைத்தது. என் மனம் கூர்மையடைந்தது. அந்த எண்ணம்
வந்த உடனே அந்த ஆயுதத்தின் கூர்மையை எண்ணி என் மனம் உவகை கொண்டது. ”சரி, உங்கள்
ராஜபத்தினி என்ன சொல்லப் போகிறாள் இதற்கு?” என்றேன்.


அவர் பிடி தளர்ந்தது. முகம் வெளிறியது. எழுந்து அமர்ந்தார். தலை குனிந்தபடி,
“எனக்கும் அவளை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது” என்றார். “ஒரு கணம்
கங்கைபோல அரவணைப்பாள். மறுகணம் பாம்பு போலிருப்பாள்.”


என் மனம் இறுகியது. பிறகு நெகிழ்ந்தது. இந்த ஜகப் புரட்டனுக்குள் இருக்கும்
அஞ்சிய குழந்தையை இதோ நான் கண்டுகொண்டிருக்கிறேன். அவர் தலையை என்
மார்போடணைத்தபடி, “கவலைப்படாதீர்கள்” என்றேன். மனதைக் கருணை நீராட்டிய போதிலும்
உள்ளூர ஒரு வெற்றிக்களிப்புதான் இருந்தது.


“நீ ஒரு இடைச்சியாக வேடமிட்டு திரௌபதியிடம் போ. அவளிடம் எனக்கு வேறு
யாருமில்லை; நீயே அடைக்கலம் என்று கூறு. அடைக்கலம் தந்துவிட்டாளென்றால் பிறகு
விஷயத்தைச் சொல்வோம். அவள் வாக்கு மாறக் கூடியவளல்ல” என்றார்.
“ஏற்றுக்கொள்ளவில்லையென்றால்?”
”நிச்சயமாக ஏற்றுக்கொள்வாள். அவளுடைய கர்வம் ஒரு கோட்டைபோல. அதை உடைத்து உள்ளே
போனால் அவள் ஒரு குளிர்ந்த தடாகம்.”


மீண்டும் என் ஆங்காரம் படமெடுத்தது. கசப்பு மனமெங்கும் பரவியது. அதன்பிறகு அவர்
என்னைத் தொட முயலவில்லை. எரியும் மனத்துடன் நான் ரதத்தில் ஏறிக்கொண்டேன்.
மழைத்துளிகள் உதிரத் தொடங்கின. வானம் உடைந்து கொட்ட ஆரம்பித்தது. புல்வெளியில்
மழையின் வெண்பட்டுத் திரை நெளிந்தது. அதைக் கிழித்தபடி ரதம் ஓடியது.
காண்டவப்பிரஸ்தத்தின் அடர்ந்த காடு மீது மழை கொட்டும் ஓலம் பெரியதோர்
சைன்யத்தின் போர்க்குரல் போல ஒலித்தது. அச்சம் புறக்குளிரைவிட அழுத்தமான
குளிராக என் மீது பரவியது. எனக்காக வியூகமிட்டிருக்கும் படை எது? ஒரே கணத்தில்
நான் உள்ளே நுழைந்து விட முடியும். ஆனால் அதன் நிச்சயமின்மையே என்னை ஈர்க்கும்
சக்தியாக இருந்தது. காட்டில் ரதம் நுழைந்தபோது உடம்பு ஏனோ சிலிர்த்தது.


*3
*
கங்கை நீர் கலங்கலாகச் சுழித்துச் சென்றது. அதன் கரைகளில் உயரமற்ற புதர்
மரங்கள் அடர்ந்திருந்தன. கரையோரமாக செந்நிற உத்தரீயம் போலப் பாதை கிடந்தது.
புரவிகளின் பாதங்கள் புழுதிமீது ஓசையின்றிப் படிய, நீரில் மிதப்பதுபோல ரதம்
நகர்ந்தது. திரையை விலக்கிப் பார்த்தபடியே வந்தேன். இருள் இன்னும் பிரியவில்லை.
ஆயினும் கூட்டம் நிறையவே இருந்தது. மரத்தடிகளில் மூட்டை முடிச்சுகளுடன்
வயோதிகர்கள் அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி முகத்திரை போட்டபடி, கூட்டம்
கூட்டமாகப் பெண்கள். ஊடே குழந்தைகள் விளையாடின. மாட்டு வண்டிகள் அவிழ்த்துப்
போடப்பட்டிருந்தன. மாடுகள் மணி குலுங்கத் தலையாட்டியபடி, அசை போட்டுக்கொண்டு
படுத்துக்கிடந்தன. கங்கை நீரின்மீது மட்டும் ஒளி சற்று அதிகமாக இருந்தது. அதன்
செந்நிற ஆழத்திற்குள் எங்கோ இருந்து ஏதோ ஒளிவிடுவது போலிருந்தது.
படித்துறைகளில் புரோகிதர்கள் நிரம்பியிருந்தனர். கட்டுக் கட்டாகத் தர்ப்பை
கிடந்தது. வெண்கலப் பாத்திரங்கள் கங்கையின் அலைபாயும் ஒளியை மௌனமாகப்
பிரதிபலித்தபடி காத்து நின்றன. கங்கையின் கரையோரமாக நீலமும் சிவப்பும்
வெள்ளையுமாக நீர்ப்பூக்கள் இலைப் பரப்புடன் சேர்ந்து நெளிந்தன.


அரசகுல ரதம் வருகிறது என்று தெரிந்தும் எவரும் கிளர்ச்சி அடையவில்லை. எழுந்து
பார்க்கவுமில்லை. வெகுசிலர் ஆர்வமின்றி திரும்பிப் பார்த்தனர். வெறித்த கண்கள்
என்னைத் தொட்டு மீண்டன. மரங்களின் மேல் நுனிகளில் இளம்பசுமை துலங்க
ஆரம்பித்துவிட்டது. இன்னும் அரை நாழிகையில் நன்கு புலர்ந்துவிடும். என்ன இது?
இவ்வளவு கூட்டமிருந்தும் ஏன் ஒலியே இல்லை? மனித உடல்கள் நீர்மீன்கள் போல
ஒலியின்றி வாயசைஹ்தபடி மெல்ல நடமாடுகின்றன. விசித்திரமானதொரு பொம்மலாட்டம்
போலிருந்தது. திடீரென்று அக்கூட்டத்தில் முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும்
மட்டும் இருப்பதைப் பார்த்தேன். இளைஞர்களேயில்லை. மீண்டும் அடிவயிற்றில் அந்த
வாள் பாய்ந்தது. அத்தனை பேருமா? அத்தனை பேருமா? உடம்பு நடுங்க, கண்களை மூடி,
நெற்றியை விரல்களால் அழுத்தியபடி, இறுகி அமர்ந்தேன். மனம் ரத வேகத்தின்போது
கொண்ட விடுதலையுணர்வு முழுக்கப் பின்னகர்ந்து துவாரகை போல, முற்பிறப்பு
ஞாபகம்போல, எங்கோ மறைந்தது. எல்லாம் வெறும் கனவு. நான் இதுதான். இந்த கனக்கும்
உடம்பு. கனக்கும் மனம். இந்தப் பாரம்தான் நான். இந்த வெறுமைதான் நான்.
ரதம் தயங்கியது. வீரர்கள் குதிரைகளில் வந்து எதிர்கொண்டனர். என் ரத
முகப்பிலிருந்து தண்டேந்தி என் குலத்தையும் சிறப்பையும் கூறி என்னை
அறிவித்தான். அப்பெயர் வரிசை மிக அருவருப்பூட்டுவதாக எனக்குக் கேட்டது.
அவற்றில் எதுவுமே நானல்ல என்று கூவ வேண்டும் போலிருந்தது. வம்சங்கள்,
பட்டங்கள், பதவிகள். கங்கைக் கரையெங்கும் மூடுபடமிட்டுக் கூனியமர்ந்திருந்த
விதவைகளின் உருவங்கள் ஞாபகத்திற்கு வந்தன. ரதம் உள்ளே போயிற்று. புல்வெளியில்
பர்ணசாலைகள் வரிசையாக இருந்தன. செம்பட்டு முகப்பு போடப்பட்டது. திரௌபதியின்
பர்ண சாலை போலும்.


சற்றுத் தள்ளிப் பெரிய வட்ட வடிவ பர்ணசாலையைச் சுற்றிக்
காவல் வீரர்கள் உருவிய வாளுடன் நின்றனர். மன்னருக்கு ஒருபோதும் இத்தகைய
பாதுகாப்பு இருந்ததில்லை. ஆனால் இனி வேறு வழியில்லை. காட்டிற்குள் சிரஞ்சீவியான
அஸ்வத்தாமா தணியாத கோபத்துடன் அலைந்துக் கொண்டிருக்கிறான். இனி குருவம்சத்தில்
எவரும் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒருபோதும் போர் அவர்களை விட்டு விலகாது.
வெற்றிமாலையின் ஏதோ ஒரு மலருக்குள் பூநாகம் காத்திருக்கிறது. தோற்றவர்கள்
நிம்மதியாகத் தூங்கலாம். அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை. காண்பதற்குக் கனவுகளும்
மிச்சமிருக்கும்.


என் பர்ணசாலை முன் ரதம் நின்றது. இறங்கிக்கொண்டேன். என்னைப் பார்த்ததும் பெரும்
அழுகையோசைகள் கேட்டன. என் தலையை அலை வந்து முட்டியது. என் வயிறு அதிர்ந்து
கொண்டிருந்தது. ஆனால் திடமான காலடிகளுடன் நடந்தேன். பர்ணசாலைக்குள் அரசகுலப்
பெண்கள், யார் யார் என்று பார்க்கவில்லை. விதவைகளுக்குப் பெயர் எதற்கு?
அடையாளம் எதற்கு? அவர்கள் சிதை காத்திருக்கும் ‘வெறும் சடலங்கள்’. ஒருவேளை
இதுவே அவர்கள் இறுதியாகப் பார்க்கும் வெளியுலகாக இருக்கக்கூடும். குழந்தைகளே,
வானையும் மரக்கூட்டங்களையும் மலர்களையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருப்தியாக கங்கையில் நீராடுங்கள்.
”மகாராணி” என்று ஒரு தாதி மரவுரியைக் கொண்டுவந்து நீட்டினாள். அதை அணிந்து
கொண்டேன். கனமாக உடலை அறுத்தியது. விரத உணவு வந்தது. கசப்பும் துவர்ப்பும். ஒரு
மண்டலமாக சக்ரவர்த்தியும் பரிவாரமும் இந்த உணவை உண்டு இந்த உடையை அணிந்து
விரதம் அனுஷ்டிக்கிறார்கள். யாருக்காக? எந்த அக்னியை அணைக்க? தாதியைக்
கையசைத்து அழைத்தேன். “அண்ணா எங்கிருக்கிறார்?” என்று கேட்டேன்.
“ராஜ சபையில் மகாராணி.”
”வியாச மகரிஷி வந்திருக்கிறார்” என்றார் ஒரு முதிய தாதி. “அவருடன் உரையாடியபடி
சோலைக்குள் செல்வதைப் பார்த்தேன்.”
“நான் உடனடியாக வியாச ரிஷியைப் பார்த்தாக வேண்டும்” என்றேன். “உபசக்ரவர்த்தி
எங்கே?”
தாதி இன்னொருத்தியைப் பார்த்தாள். தயங்கியபடி, “இரவு ரதமேறி நகருக்குள்
சென்றார். இன்னும் வரவில்லை” என்றாள்.


புதல்வனையோ கணவனையோ இழக்காத பெண் யாராவது கிடைத்திருக்கக்கூடும் என்று
கசப்புடன் எண்ணிக் கொண்டேன். இந்தக் கசப்பு எப்போது என் மனதில் நிரம்பியது?
எந்தக் கணத்தில்? பாயும் ரதத்தில் கடிவாளத்தைப் பற்றியபடி நின்று நான்
ஓரக்கண்னால் பார்த்து ரசித்த ஆண்மகன் தன் இறுகும் தசைகளுடன் இப்போதும் என் மன
ஆழத்தில் இருக்கிறான். இந்த மனிதர் – இவருடைய முகமும், குரலும், அசைவுகளும்
இவரைப் பற்றிப் பிறர் கூறிக்கேட்கும் ஒவ்வொரு சொல்லும் -என்னைக் கசப்பால்
நிறைக்கிறார். அதை அவர் அறிந்திருக்கக்கூடும். என் கண்களை ஏறிட்டுப் பார்த்துப்
பேச அவரால் முடியாது. என் முன் நிற்கும்போது அவர் உடலெங்கும் ஒரு சிறு தவிப்பு
அலையும்.


அந்தத் தாழ்வுணர்வு கோபமாக, மூர்க்கமாக வெளிப்படவும் கூடும். ஆனால்
என்னால் ஏன் இன்னமும் அவரை அலட்சியம் செய்ய முடியவில்லை? எத்தனை முயன்றும்
அவரைப் பற்றி எண்ணாமல் ஒரு பொழுதுகூடத் தாண்டுவதில்லையே. அவர் மீது என்னுள்
இன்னும் காதல் மிஞ்சியுள்ளதா என்ன? காதலா? அது வெறும் அறைக்கூவல். அவர் உள்
மனதின் அச்சம் தெரியவந்த கணமே அது அணைந்து போயிற்று. அவர் பெண்களை உடலாக
மட்டும் கையாளும்போதுதான் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும். அவர் கையில்
துவண்டு நிமிர்ந்து, சரம்சரமாக எய்யும் காண்டீபமே அவர் வரித்துக் கொண்ட
பாவனைத்தோழி போலும். அவர் திறமையெல்லாம் உள்ளூர ஓடும் வெறுமையின் வேகம் போலும்.
பெண்களின் உடல் வழியாக அவர் தேடுவது யாரை? காண்டீவமாக மாறித் தன் உடலின் ஒரு
உறுப்பாக இணைந்து கொள்ளும் ஒருத்தியையா?
யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது. பேசாத சொற்களெல்லாம் மனதில் தேங்கி
அவற்றின் வேகம் என்னைப் பைத்தியமாக அடித்துவிடும் என்று பட்டது. மகாராணி
பட்டத்தைத் துறந்து ஒரு பெண்ணாக, பேதையாக, குழந்தையாக, புழுவாக அழுது துடிக்க
வேண்டும். வியாச ரிஷியின் வெண்தாடி பரவிய குழந்தை முகம் மனதில் சிறு ஆறுதலாக
எழுந்தது.
தாதி என்னைச் சோலைக்குள் கூட்டிச் சென்றாள். பசுமையான மரங்கள் அடர்ந்து நிற்க
ஊடே பாதை நெளிந்து சென்றது. பாறையொன்றில் அண்ணாவும் வியாச மகரிஷியும்
அமர்ந்திருந்தனர்.


என்னைப் பார்த்ததும் வியாச மகரிஷி புன்னகையுடன், “வா குழந்தை” என்றார்.
அமரும்படி சைகை காட்டினார். அவர் பாதங்களைப் பணித்துவிட்டுத் தரையில்
அமர்ந்தேன். அண்ணா சிந்தனை நிரம்பிய முகத்துடன் என்னைப் பார்த்தார்.
“வருவீர்கள் என்று எவரும் கூறவேயில்லை தாத்தா” என்றேன்.


“இன்று நீர்க்கடன். நான் வந்தாக வேண்டுமல்லவா?” என்றார் வியாசர்.
என் கண்களும் மனமும் திறந்துகொண்டன. என் உடல் வழியாக அழுகை சுழற்காற்று
மரத்தைக் கடந்து செல்வதுபோலக் கடந்து சென்றது.
வியாசர் என் நெற்றிமயிரை வருடினார். “நான் என்ன சொல்ல இருக்கிறது குழந்தை?
அழுது அழுதுதான் உன் மனம் ஆறவேண்டும்” என்றார்.
“இதெல்லாம் எதற்காக தாத்தா? யாருடைய லாபத்திற்காக? இந்த கங்கைக்கரை முழுக்க…”
“பார்த்தேன்” என்றார் வியாசர். “எதற்காக என்று மட்டும் கேட்காதே. அப்படிக்
கேட்க ஆரம்பித்தால் தெய்வங்களே திகைத்து நின்றுவிடுவார்கள்…”


“என் அபிமன்யு.. என் தங்கம்.. அவன் தலை பிளந்து.. என்னால் மறக்கவே முடியவில்லை
தாத்தா…”


என் அழுகையைப் பார்த்தபடி வியாசர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். பிறகு கம்மிய
குரலில் “நான் என்ன சொல்லுவது அம்மா? உனக்கு ஒரு குழந்தைதான். எனக்கு…?
குருவம்சமே என் குழந்தைகளல்லவா? வென்றதும் வீழ்ந்ததும் என் உதிரமல்லவா? இதோ
இன்ரு கங்கை அள்ளிச் செல்லும் அத்தனை ஆத்மாக்களுக்கும் பிதாமகனல்லவா நான்?”


சட்டென்று என் மனம் சீறியெழுந்தது. ”இதோ இருக்கிறாரே, கேளுங்கள் தாத்தா.
எல்லாவற்றிற்கும் காரணம் இவர்தான். இவருடைய குயுக்தியும் தந்திரமும்
தருக்கமும். ஆட்சிக்காக சகோதரன் கழுத்தை சகோதரன் அறுக்கலாம் என்று இவர் ஒரு
உபதேச மஞ்சரி எழுதி அதைக் களத்தில் தினம் தினம் பௌராணீகர்கள் பாடினார்கள்.
கொல்லு கொல்லு என்று இரவு முழுக்க கோஷம் எழுந்தது….”


“போர் எப்போதும் வெற்றி ஒன்றால் மட்டுமே அளக்கப்படுகிறது அம்மா.”


”இப்போது இதோ வெற்றி கிடைத்துவிட்டதே. இவருக்குத் திருப்திதானா? என் குழந்தை..
என் செல்வம்.. அவன் மரணத்திற்கு யார் காரணம்? இதோ இவர்தான். என் குழந்தையைக்
கொன்றவர் இவர்தான். சதுரங்கத்தில் ஒரு காயாக அவனை வைத்து விளையாடினார். அடுத்த
நகர்வுக்குத் தேவையெழுந்தபோது தன் சுண்டுவிரலால் அவனைச் சுண்டி எறிந்தார்.
அரவான், கடோத்கஜன்… கடைசியில்க் அபிமன்யு. சொந்த ரத்தத்தில் பிறந்தவர்களைக்
கொல்லும்படி தான் சொன்ன உபதேசத்தைத் தனக்கும் பொருத்திக்கொண்ட மகான் இவர்…”
“சுபத்திரை, நீ உன் வேதனையில் பேசுகிறாய்” என்றார் வியாசர்.
“என் குழந்தை எப்படி இறந்தான்? அவன் என் கருவில் இருந்த போது பத்மவியூகத்தில்
நுழையும் வழியை இவர் கற்றுத் தந்தார். வெளியேறும் வழியைக் கூறாமலேயே
விட்டுவிட்டார். எங்கும் எதிலும் முட்டி மோதி நுழைபவனாக, வெளியேறும் வழி
தெரியாதவனாக, அவன் வளர்ந்தான். ஏன் என் குழந்தைக்கு அவன் பிறந்து வளர்ந்து களம்
காணும் தினம் வரை இவர் வெளியேறும் வழியைச் சொல்லித் தரவில்லை? சதி. வேறு என்ன?
இவருக்கு பந்தமில்லை. பாசமில்லை. தர்மம் என அவர் நம்பும் ஒன்றை நிறைவேற்றுவது
தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.”
“யார்தான் அப்படி இல்லை?” என்றார் வியாசர். “உன் தருமம் தாய்மை என நீ
எண்ணுகிறாய். அதைத் தவிர வேறு எதுவும் உன் கண்ணில் படவில்லையே….”
”எதற்கு என் குழந்தைக்கு பத்ம வியூகத்திலிருந்து வெளியேறும் வழியை இவர்
கற்றுத்தரவில்லை? அதைச் சொல்லச் சொல்லுங்கள் முதலில்.”
அண்ணா தணிந்த குரலில், “பலமுறை சொல்லிவிட்டேன் சுபத்திரை. உன் காது
மூடியிருக்கிறது. பத்ம வியூகம் சிறிய படைகளை நடத்தும்போது செய்ய வேண்டியது.
நகரங்களைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றியும் அமைப்பதுண்டு. துரோணர் அதைப்போல
குருஷேத்திரத்தில் வகுப்பார் என்று நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?


அந்தத் தருணத்தில் அர்ச்சுனன் சம்சப்தர்களுடன் போரிடப்போவான் என்று எப்படி நான்
ஊகித்திருக்க முடியும்? தருமர் அத்தனை வீரர்கள் இருக்க அபிமன்யுவைப் போய் அதை
உடைக்கச் சொல்வார் என்றோ, அவனைப் பின் தொடரந்த தருமரையும் பீமனையும் பிற
படைகளையும் ஜயத்ரதன் ஒருவனே தடுத்துவிடுவான் என்றோ நான் எப்படி எண்ண முடியும்?”


அண்ணா நிறுத்தினார். உடைந்த குரலில், “அதைவிட ஞானமும் விவேகமும் நிரம்பிய
குருநாதர் துரோணரும், பாண்டவ ரத்தமான கர்ணனும், மகா தார்மிகரான சல்லியரும்,
சுத்த வீரனான துரியோதனனும் சேர்ந்து ஒரு சிறுவனை சூழ்ந்து எதிர்த்துக்
கொன்றார்கள் என்பது இப்போதுகூட என்னால் நம்ப முடியாதவையாகவே உள்ளது.”
“போரில் வெற்றியே அளவுகோல்” என்றார் வியாசர் மீண்டும். “மனிதர்களால் போரைத்
தொடங்க மட்டுமே முடியும். பிறகு எல்லாம் விதியின் தாண்டவம்.” அவர் தலை மேலும்
குனிந்தது. பெருமூச்சுடன், “மனிதர்கள் போரிடாத சத்திய யுகம் ஒன்று வரக்கூடும்”
என்றார்.
“ஆம், எல்லாம் என் தத்துவம்தான்” என்றார் அண்ணா என்னிடம். “ஆனால் என் மனதை
ஆற்றும் வலிமை அவற்றுக்கு இல்லை. அபிமன்யு என் குழந்தை. பாதி நாள் துவாரகையில்
ருக்மிணியும் சத்யபாமையும் அவனை வளர்த்தார்கள். என் பிள்ளைக்கலியைத் தீர்க்க
வந்த தெய்வ அருளாக அவனை எண்ணினேன். இந்த மார்பிலும் தோளிலும் போட்டு அவனை
வளர்த்தேன். காடுகள் தோறும் அழைத்துச் சென்று அவனுக்கு வித்தைகள்
கற்றுத்தந்தேன்….”
“ஆம். அவன் களத்தில் காட்டிய வீரபராக்ரமங்களை இன்று பாரதவர்ஷமே பாடுகிறது”
என்றார் வியாசர். அவர் அண்ணாவை சமாதானப்படுத்த முயல்கிறார் என்பது தெரிந்தது.
“கோசல மன்னன் பிருஹத்பாலனை அவன் கொன்றது பற்றி சற்று முன்பு கூட ஒரு சூதன்
அற்புதமான பாடல் ஒன்றைப் பாடினான்.”
“ஆனால் நான் கற்றுத்தராத ஒன்று அவனை பலி கொண்டு விட்டதே கிருஷ்ணதுவைபாயனரே.”
“அவன் விதி அது” என்றார் வியாசர். “ஜென்மங்கள்தோறும் அது அவனைத் தொடர்கிறது.
இப்பிறவியில் உன் கருவில் அவனிருந்தபோதே அது அவனை அடைந்துவிட்டது.”


என் மனம் பகீரிட்டது. “தாத்தா, அப்படியானால் என் குழந்தைக்கு அடுத்த
பிறவியிலும் இதே விதியின் மிச்சம்தானா உள்ளது?” என்றேன்.


“இருக்கக்கூடும்; யாரறிவார்…?”


பதறிய குரலில், “தாத்தா, தன் விதியை அவன் அறிந்து கொள்ளவில்லையே. என்
குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே” என்றேன்.
“இது என்ன பேச்சு குழந்தை? நமது மகனாக அவன் விதி முடிந்தது. இனி நம் கடன் அவன்
நினைவை நம் மனதிலும் வம்சத்திலும் நட்டு வைப்பது மட்டுமே…”
“அது உங்கள் வேலை. என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லை. அதை
எண்ணினால் இனி நான் ஒருநாள்கூட நிம்மதியாக உயிர்வாழ முடியாது. தாத்தா நீங்கள்
முக்காலமும் உணர்ந்தவர். எனக்குக் கருணை காட்டுங்கள். உங்கள் பாதங்களைப்
பற்றிக்கொண்டு கேட்கிறேன். எனக்கு உதவுங்கள்….”
“குழந்தை, நீ உணர்ந்துதான் பேசுகிறாயா?”
“நன்றாக உணர்ந்துதான். என் குழந்தைக்கு அவன் விதியை அவன் வெல்லும் முறையை நான்
கற்பித்தாக வேண்டும். அடுத்த பிறவியிலாவது அவனுக்கு மீட்பு வேண்டும்.”
“மனிதர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லையை நீ தாண்ட முயல்கிறாய் குழந்தை. அது
சாத்தியமேயில்லை.”
நான் பாய்ந்து எழுந்தேன். “இனி உங்களிடம் கேட்க எனக்கு எதுவும் இல்லை, இப்போதே
நீங்கள் உதவ வேண்டும். இல்லையேல் இப்போதே இங்கேயே கங்கையில் குதித்து
உயிர்விடுவேன். இனி எனக்கு எதுவும் மிச்சமில்லை…”
“குழந்தை….” என்று கூறியபடி வியாசர் ஓடிவந்து என்னைப் பிடித்தார். “நில்லு.
சொல்கிறேன்…” என் தோளை அவர் கரம் இறுகப் பற்றியது. “என்ன காரியமம்மா
செய்கிறாய்? முதிய வயதில் இதுவரை நான் கண்டதெல்லாம் போதாதா? இரு, ஒரு வழி
சொல்கிறேன்.”
அப்போதும் சிந்தனை தேங்கிய முகத்துடன் அண்ணா அங்கேயே அமர்ந்திருந்தார்.
“தண்டகாரண்யத்தில் ஒரு ரிஷியை நான் பார்த்தேன். அவர் இப்போது இங்கு கங்கைக்
கரையில் எங்கோ இருக்கிறார். அவரால் பிறவிகளின் சுவரைத் தாண்டிப் பார்க்க
முடியும் என்கிறார்கள். அவரை அழைத்து வருகிறேன். உனக்காக.. ஒரு போதும் ஒரு ரிஷி
செய்யக் கூடாத காரியம் இது. என் மூதாதையரின் சாபம் என் மீது விழும்..
பரவாயில்லை.”
”எனக்கு வேறு வழியில்லை தாத்தா. என்னை மன்னித்து விடுங்கள். என் குழந்தையிடம்
நான் பேசியாக வேண்டும். என்ன நேர்ந்தாலும் சரி. என் குழந்தை வெளியேறும் வழி
தெரியாது பிறவிகள் தோறும்… தாத்தா தயவு செய்யுங்கள், தயவு செய்யுங்கள்…”
அவர் காலில் விழுந்தேன். என்னைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். என் கண்ணீர்
அவர் தாடியை நனைத்தது.
*4*
பர்ணசாலைக்குள் எட்டிப் பார்த்த தாதி என்னிடம் “உபசக்ரவர்த்தி தங்களை
அழைக்கிறார்” என்றாள். எழுந்து வெளியே வந்தேன். பின் மதியம் ஆகிவிட்டிருந்தது.
ஆனால் வெயில் வராமல் காலை போலவே இருந்தது. வானம் முழுக்க மேகங்கள். மஞ்சன
மரத்தடியில் அவர் நின்றிருந்தார். அவரை அணுக அணுக என் மனம் எரிச்சலடைந்தது.
ஆனால் உடலில் ஒரு கிளர்ச்சி இருந்தது. அது இம்சைக்கான ஆர்வம். அவரைக் குத்திப்
புண்படுத்தி, அவர் சுருண்டு திரும்புவதைக் கண்டு குற்றவுணர்வு கொள்ளும்போதுதான்
அது தணியும். அவர் கண்களை உற்றுப் பார்த்தபடி “என்ன?” என்றேன்.
“பொழுது சாய்ந்துவிட்டது. அபிமன்யுவிற்கு இன்னும் நீர்க்கடன் செலுத்தவில்லையே
என்று அண்ணா கேட்டார்” என்றார்.
“அரவானுக்கு நீர்க்கடன் முடிந்துவிட்டதா?” என்றேன். அவருடைய சுருண்ட மயிர்கள்
ஈரமாகத் தொங்கி ஆடின. காதோரம் சில நரை மயிர்கள். மீசை கன்னத்தில்
ஒட்டியிருந்தது. கண்களுக்குக் கீழே கருவளையங்கள். பார்வையில் எப்போதுமிருக்கும்
சிறுபிள்ளைத்தனமான உற்சாகத்தின் ஒளி அறவே இல்லை. இனி அது ஒருபோதும் திரும்பாது
போலும்.
“ஆம்” என்றார்.
அவருடைய பலவீனமான இடத்தில் நான் போட்ட அடி அது. அவர் நெற்றியில் நரம்பு
அசைந்தது. கண்கள் சுருங்கி இம்சை தெரிந்தது. என் மனம் உள்ளூர கும்மாளமிட்டது.
மேலும் மேலும் என்று தாவியது.
“சுருதர்மாவிற்கும் முடிந்துவிட்டதா?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.
அவர் கண்கள் சீற்றம் கொண்டன.
“அபிமன்யு மட்டும்தான் மீதி” என்றார்.
நான் தலையசைத்தேன்.
“ஏன் தாமதம்?” என்றார்.
“சற்று பிந்தட்டும்.”
“எங்கோ ரதமனுப்பியிருப்பதாகக் கூறினார்கள்.”
“ஆம்.”
“எதற்கு?”
“ஒன்றுமில்லை” என்றேன். இவரிடம் நான் கூற முடியாது. அபிமன்யு என் அந்தரஙகத்தின்
ஆழம். அதை ஒருபோதும் இவருடன் பகிர முடியாது. அதை எவரிடமும் பகிர முடியாது.
அவனிடம்கூடப் பகிர்ந்ததில்லை. அவன் பிறந்து விழுந்தபோது அவனைப் பார்த்தவர்கள்
தந்தையைப்போல என்று கூறியபோது என் மனம் எரிந்தது. அவன் வளர வளர அவனில் கூடி
வந்த குறும்பும், வில் திறனும், துணிச்சலும் அவரையே ஞாபகப்படுத்தின. அவை
என்னைக் கோபம் கொள்ளச் செய்தன. பாதி நாள் அவனை துவாரகைக்கு அனுப்பியதே
அதனால்தான். மீதிநாள் அவர் ஊரில் இருந்ததுமில்லை. ஆனால் அவனில் நான்
ரசித்ததெல்லாம் அவற்றைத்தானோ?
“ஏன் என்று கூறு” என்றார் கோபத்துடன். “இன்று நீர்க்கடன் வேண்டாம் என்று
எண்ணுகிறாயா? யாரைக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறாய்?”
நான் அவர் கண்களைப் பார்த்தேன். “அபிமன்யு என் மகன். அவனுக்கு எப்படிச் செய்ய
வேண்டும் என நான் அறிவேன்.”
அவர் கோபம் முகத்தில் நெளிந்தது. உரத்த குரலில், “அவன் என் மகன் இல்லையா?
எனக்கு மட்டும் துயரமில்லையா?” என்றார்.
“துயரமா…. எதற்கு?” என்றேன் வியப்புடன். உள்ளூர என் இம்சிக்கும் இச்சை
கூர்மையடைந்தது. மனம் மிகுந்த நிதானத்துடன் சொற்களைத் தேர்வு செய்தது.
“நீங்கள்தான் பழிவாங்கிவிட்டீர்களே? பொழுது சாய்வதற்குள் ஜயத்ரதன் தலையைக்
கொய்து, அதைக் காற்றில் பறக்கவைத்து, அவன் தந்தை கரங்களில் விழ வைத்து, அவர்
உயிரையும் பறித்து… சூதர்கள் பரவசமாகப் பாடும் கதை அல்லவா அது? வம்சகாதையில்
ஒரு பொன்னேடல்லவா? அப்புறம் எதற்குத் துக்கம்?”
“நீ என்னை ஏளனம் செய்கிறாய். உனக்கு மட்டும் பேரிழப்பு ஏற்பட்டுவிட்டது என்று
கற்பனை செய்து கொள்கிறாய். உன்னை முக்கியமானவளாகப் பிறரிடம் காட்டிக்கொள்ள இந்த
துக்க வேடத்தை மிகைப்படுத்திக்கொள்கிறாய்…”
நான் அவர் கண்களை மீண்டும் உற்றுப் பார்த்தேன். “நேற்றிரவும்
எங்கிருந்தீர்கள்?”
அவர் தடுமாறி, முகம் வெளிறி, “ஏன்?” என்றார்.
“இல்லை, தாத்தா தேடினார்” என்றேன்.
“அவரைப் பார்த்தேனே.”
“ஓகோ” என்றேன். பிறகு பார்வையை விலக்காமலே நின்றேன்.
“நான் வருகிறேன்” என்று அவர் நடந்தார். என் உடல் தளர்ந்தது. சன்னதம் விளகிய
குறிசொல்லி போல சக்தியனைத்தும் ஒழுகி மறைய, தள்ளாடினேன். தண்ணீர் குடிக்க
வேண்டும் போலிருந்தது. ஆனால் மீண்டும் என் பர்ணசாலைக்குப் போகத் தோன்றவில்லை.
இடுங்கின அறைகளில் துயரம் தேங்கிக் கிடக்கிறது. திறந்த வெளிகளில் மனம் சற்று
சுதந்திரம் கொள்வது போலப் பட்டது. சோலை வழியாக நடந்தேன். மீண்டும் அதே பாறையை
அடைந்தேன். அங்கு அண்ணா அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவரை அங்கு உள்ளூர
எதிர்பார்த்ததனால்தான் வந்திருக்கிறேன் என்று அறிந்தேன். என்னால் அவரைத்
தவிர்க்க இயல்வில்லை. அவர் இல்லாமல் என் மனமே இல்லை போலும். அவரது தலையணியின்
மீதிருந்த மயிற்பீலிக் கண் என்னைப் பார்த்தது. மனம் சற்று அமைதியடைந்தது.
மயிற்பீலியை எங்கு கண்டாலும் மனம் சற்ரு அமைதிகொள்கிறது. துணையை உணர்கிறது.
அபிமன்யு குழந்தையாக இருந்தபோது ஒரு முறை அவன் கொண்டையில் மயிற்பீலியை
அணிவித்தேன். அதைப் பார்த்ததும் அவர் முகம்தான் எப்படிச் சிவந்து பழுத்தது.
தொண்டை புடைக்க உறுமியப்டி அதைப் பிய்த்து வீசினார். “கொஞ்சிக் குலாவி
குழந்தையை அலியாகவா ஆக்குகிறாய்? பீலியும் மலரும்…” என்று கத்தினார்.
ஆங்காரமும் ஏமாற்றமுமாக, “பீலி சூடியவர்களெல்லாம் அலிகள் என்கிறீர்களா?”
என்றேன். கையை ஓங்கியபடி வந்தார். “நல்லது. கை எதற்கு, காண்டீவத்தையே எடுங்கள்.
அதுதான் புருஷ லட்சணம்” என்றேன். கதவை ஓங்கி உதைத்தபடி அந்தப்புரத்தை விட்டு
வெளியேறினார். வெளியே புரவிமீது சம்மட்டி விழும் ஒலி கேட்டது. அது கனைத்துக்
கூவியபடி கல்தளத்தில் தடதடத்து ஓடியது.
அண்ணா, “ரிஷி வந்துவிட்டாரா?” என்றார்.
“இன்னும் வரவில்லை. காத்திருந்து காத்திருந்து பொறுமை போகிறது.”
“வருவார்.”
“பின்மதியம் ஆகிவிட்டது. நீர்க்கடன் எப்போது முடிவது?” என்றேன். களைப்புடன்
கண்களை விரல்களால் அழுத்துக் கொண்டேன்.
“பார்த்தன் என்ன சொன்னான்?”
திடுக்கிட்டேன். எப்படி அறிந்தார் அவர் முகம் பதுமை போலிருந்தது. பிறகு அமைதி
ஏற்பட்டது. “நேரமாகிறது என்கிறார்” என்றேன்.
“பாவம்” என்றார்.
“ஏன்? அவர்தான் போரில் வென்று சவ்யசாஜி ஆகிவிட்டாரே. இனி அஸ்வமேதம்,
திக்விஜயம். வரலாற்றில் உங்களுக்கும் அவருக்கும் சிம்மாசனமல்லவா போட்டு
வைக்கப்பட்டுள்ளது!”
”உன் துயரம் கசப்பாக மாறிவிட்டிருக்கிறது சுபத்திரை. உலகமே உனக்கு எதிரியாகப்
படுகிறது. நீ என்னதான் எண்ணுகிறாய்? இன்று இங்கு ஒவ்வொருவரும் என்ன
எண்ணுகிறார்கள் என்று நீ அறிவாயா? இந்தக் கணம் காலதேவன் வந்து போர்
துவங்குவதற்கு முன்பிருந்த தருணத்தைத் திரும்ப அளிப்பதாகச் சொன்னானென்றால்
அத்தனை பேரும் தங்கள் எதிரிகளை ஆரத் தழுவிக் கண்ணீர் உகுப்பார்கள். இந்தப் போர்
ஒரு மாயச் சுழி. ஒவ்வொரு கணமும் இதன் மாயசக்தி எல்லோரையும் கவர்ந்திழுத்துக்
கொண்டிருந்தது. விதி அத்தனை பேர் மனங்களிலும் ஆவேசங்களையும் ஆங்காரங்களையும்
நிரப்பியது. இன்று… வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை சுபத்திரை.
எனக்கும் தெரியவில்லை…”
நான் பெருமூச்சுவிட்டேன். அண்ணா மனம் கலங்கியபோதுதான் அவரை அப்படிப் பார்க்க
நான் விரும்பவில்லை என்று அறிந்தேன். அவர் வெல்ல முடியாத வீரயோகியாகவே என்
மனதில் இருந்தார். அண்ணாவின் முகம் மீண்டும் நிதானம் கொண்டது. “நீ
உணவருந்தினாயா?” என்றார்.
”இல்லை”
“ஏன் இப்படி உன்னை வதைத்துக் கொள்கிறாய்?”
“என்னால் எதிர்பார்ப்பின் பதற்றத்தைத் தாங்க முடியவில்லை அண்ணா.”
“சுபத்திரை, நீ செய்யப் போவது என்ன என்று அறிவாயா?”
“எனக்கு வேறு வழியில்லை” என்றேன் உறுதியாக.
“நியதியின் பேரியக்கம் மனிதர்களையும் அண்ட வெளியையும் இயற்கையிலுள்ள
அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது சுபத்திரை. அதில் ஒரு சிறு துளியைக்கூட
மனித மனம் அறிய முடியாது. அதை மாற்றிவிடலாம் என்று நம் அகங்காரம் சில சமயம்
கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது அந்த இயக்கம்கூட
நியதியின் விளையாட்டுதான் என்று.”
“வேதாந்த விசாரம் கேட்க எனக்கு இப்போது மனம் கூடவில்லை அண்ணா….”
அண்ணா சிரித்தபடி, ”ஆம். பாரதவர்ஷத்தில் இப்போது மலிவாகப் போய்விட்டிருப்பது
அதுதான்” என்றார்.
அவரைப் புண்படுத்திவிட்டோமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. “அண்ணா, என் மனதைத்
தயவு செய்து புரிந்து கொள்ளேன். நான் என் குழந்தைக்கு… அவன் தன் விதியை
அறியாமல் போகக்கூடாது அண்ணா.. அதற்காக எனக்கு எந்த சாபம் வந்தாலும் சரி…”
“சரி வா. கங்கையோரமாகப் போவோம். யாராவது நம்மைத் தேடக்கூடும்.”
காட்டுக்குள் குளிர் இருந்தது. மரங்கள் மழைக்காலத்திற்குரிய புத்துணர்ச்சியுடன்
காற்றில் குலுங்கின. தளதளக்கும் ஒளியும் சிறு மணியோசைகளும் கங்கை
வந்துவிட்டதைக் கூறின. படித்துறைகளில் புரோகிதர்கள் அமர்ந்திருந்தனர்.
தர்ப்பைப் புல்லும் பிண்டங்களும் சிதறிக் கிடந்தன. அமாத்யர் ஸௌனகர் எழுந்து
வந்து அண்ணாவை வணங்கினார். “இப்போதுதான் முடிந்தது” என்றார்.
“சரி” என்று அண்ணா தலையசைத்தார். மெதுவாக நடந்தோம். எங்கும் அமங்கலமான மௌனமும்
நிதானமும். கங்கை மீதிருந்து குளிர் பரவிக்கொண்டிருந்தது.
பர்ணசாலைகளுக்குச் செல்லும் வழியில் திடீரென்று அடிபட்ட விலங்கின் ஊளைபோல ஓர்
அழுகைக் குரல் எழுந்தது. தாதிகள் தொடர, தலைவிரிகோலமாக திரௌபதி ஓடிவந்தாள்.
அவளைத் தாதிகள் பிடித்தனர். கங்கையை நோக்கிக் கைநீட்டியபடி அலறினாள். மரவுரி
விலகிக் கிடந்தது. சர்ப்பம் போன்ற உடல் தழல் போன்ற ’உடல் விஷம்’ துப்பும்.
சுடும். இப்படித்தான் கௌரவ சபையில் சென்று நின்றாள். தலைமயிரை அவிழ்த்துப்
போட்டு சபதம் எடுத்தாள். இப்போது தலையை முடிந்துகொள்ள வேண்டியதுதானே?
இப்போதுகூட ஏன் இப்படி எண்ணுகிறேன்? அவள் என்ன செய்வாள்! அண்ணா சொன்னதுபோல
அவளும் இப்போது மனமுடைந்து ஏங்கக்கூடும். எல்லாம் எவ்வளவு எளிமையாகத்
தொடங்கிவிடுகிறது! ஐந்து குழந்தைகள். பிரிதிவிந்தியன், சுதசேனன், சுருதகர்மா,
சதானீகன், சுதேசனன். ஐந்து தளிர் முகங்கள். ஐந்து பொன்னிறத் தோள்கள். அவள்
வயிற்றில் ஊழித்தீயல்லவா எரியும். அதை எண்ணியபோதே என் மனம் பதைத்தது.
சுருதகர்மாவின் முகம் மட்டும் அவ்வளவு தெளிவாக மனதில் எழுந்தது. அவன் அவருடைய
குழந்தை என்று சொல்வார்கள். அவனை மார்போடணைத்து அவன் முகத்தை உற்று உற்றுப்
பார்ப்பேன். அபிமன்யுவின் அருகே நிறுத்தி ஒப்பிட்டுப் பார்ப்பேன். பயிற்சிப்
போர்களின் அபிமன்யு அவனை அனாயாசமாகத் தோற்கடிக்கும்போது மனதில் களிப்பு
நிறையும். அபிமன்யுவிற்கு அவன்மீது எப்போதும் குறிதான். “சித்தி, அபிமன்யு
என்னை அடிக்கிறான். சித்தி, அபிமன்யுவைப் பாருங்கள்….” என்று சதா ஓடிவருவான்.
மழலைக் குரல்கள் எங்கிருக்கிறீர்கள் என் குழந்தைகளே? வானில் எங்காவது
விளையாடுகிறீர்களா? சண்டை போடுகிறீர்களா? மண்ணில் நீங்கள் வாழ்ந்த நாட்களில்
தான் உங்கள்மீது என்னென்ன கோபதாபங்கள், போட்டி பொறாமைகள் எங்களுக்கு. நான்
ஒருபோதும் பார்த்திராத அரவான். அவன் மீது எத்தனை கோபம் எனக்கு? என்
கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்படியே படித்துறையில் அமர்ந்துவிட்டேன்.
அண்ணா பெருமூச்சுடன் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார். கங்கை மீது இரு சிறு
ஓடங்கள் மிகுந்த துயரத்துடன் நகர்ந்து சென்றன.
*5*
ரிஷி வந்துவிட்டார் என்று செய்தி வந்தது. எழுந்து விரைந்தோடினேன். கால்
புழுதியில் பதிந்து வேகம் கூடவில்லை. என் உடல் கனத்தது. அஷ்டகலசப் படிக்கட்டில்
ரிஷி அமர்ந்திருந்தார். அவர் எதிரே நின்றிருந்த ஸ்தானிகர் என்னைப் பார்த்ததும்
வணங்கி விலகினார். என் மனம் சுருங்கியது. இனம் புரியாத ஓர் அச்சம் மனதைக்
கவ்வியது. கரிய குள்ளமான உருவம். தாடியும் தலைமயிறும் சடைகளாகத் தொங்கின.
சிவந்த கண்கள், உடம்பெங்கும் நீரு. ஒரு கண் கலங்கி சதைப்புரளலாக அசைந்தது.
வெளியே தெரிந்த பற்கள் கறுப்பாக இருந்தன. அவருக்கு சாஷ்டாங்க வணக்கம் செய்தேன்.
அவர் என் தலையைத் தொட்டு ஆசியளித்தார். அவர் கரஙக்ளை என் கண்கள் அணுகுவதைத்
தடுக்க முடியவில்லை. பழுதடைந்த நகங்கள் விகாரமாக இருந்தன.
“உன் கோரிக்கையை கிருஷ்ணதுவைபாயனர் சொன்னா. அவர் மகாவியாசர். அவருக்காகவே
இதற்கு ஒப்புக்கொண்டேன். இது சாதாரண விஷயமல்ல. தெய்வங்களின் அதிகாரத்திற்கு
அறைவிடும் செயல் இது” என்றார் ரிஷி.
“குருநாதரே, என் மீது கருணை காட்டுங்கள். என் குழந்தை…” என்று கைகூப்பினேன்.
கண்ணீர் வழிந்தது.
“அழுவதெல்லாம் எனக்குப் பிடிக்காது. விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.
ஒரே ஒரு முறைதான். அதற்குள் கூறவேண்டியதைக் கூறிவிட வேண்டும். பிறகு என்னிடம்
எதையும் கோரக்கூடாது.”
“போதும், போதும்”
அண்ணா வந்து சற்றுத் தள்ளி அமர்ந்தார். ரிஷி கண்மூடி தியானத்திலாழ்ந்தார்.
பரிதவிப்புடன் அமர்ந்திருந்தேன். நீண்ட பெருமூச்சுடன் அவர் கண்களைத் திறந்தா.
“உன் குழந்தைக்கு நீர்க்கடன் அளித்தாகிவிட்டதே அம்மா. அவன் இப்போது
ஃபுவர்லோகத்தில் இல்லையே…”
“குருநாதரே….” என்று வீறிட்டேன். “இல்லை. நீர்க்கடன் இதுவரை
அளிக்கப்படவில்லை….” மறுகணம் எனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. என்னைத்
தோற்கடிக்க அவர் அதைச் செய்திருக்கக்கூடும். என் உடம்பு பதறியது.
“இரு” என்றபடி ரிஷி மீண்டும் கண்களை மூடினார். நான் தவிப்புடன் அண்ணாவைப்
பார்த்தேன். அவர் கங்கைக் கரையோரம் மலர்ந்து கிடந்த தாமரைகளையும் குவளைகளையும்
பார்த்தபடி சிலைபோல அமர்ந்திருந்தார்.
ரிஷி கண்களைத் திறந்தார். “உன் குழந்தை கருபீடம் ஏறிவிட்டான்” என்றார்.
“எங்கே? எந்த வயிற்றில்?” என்று கை கூப்பியபடி பதறினேன்.
“அது தெரியாது. மனிதனா மிருகமா பறவையா புழுவா என்று கூடக் கூற முடியாது.”
“குருநாதரே, இப்போது என்ன செய்வது?”
“இன்னும் நேரமிருக்கிறது. ஆத்மா முதல் உயிரணுவாகிய பார்த்திவப் பரமாணுவை ஏற்று
அதனுடன் இணைவதுவரை வாய்ப்பிருக்கிறது. இணைந்துவிட்டால் இப்பிறவியுடனான அதன்
தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும். பார்ப்போம்.” ரிஷி நீரில் இறங்கி ஒரு தாமரை
மலரைப் பறித்தார். அதை எடுத்து வந்து தியானித்து என்னிடம் காட்டினார்.
“இதோ பார்.”
தாமரைப்பூவின் மகரந்தப் பீடத்தில் இரு சிறு வெண் புழுக்கள் நெளிந்தன மெல்லிய
நுனி துடிக்க அவை நீந்தி நகர்ந்தன.
“இது என் மாயக்காட்சி. உன் மகன் இருக்கும் கரு இந்த மலர். இதிலொன்று உன் மகன்.
நீ அவனிடம் பேசு. ஆனால் இந்த தாமரை கூம்பிவிட்டால் பிறகு எதுவும் செய்ய
முடியாது.”
“இதில் என் குழந்தை யார் குருநாதரே?”
“இதோ இந்தச் சிறு வெண்புழு. அவர்கள் இரட்டையர்கள்.”
என் மனம் மலர்ந்தது. பரவசத்தால் பதற்றம் பரவியது. மனதில் எண்ணங்களே எழவில்லை.
கைகள் பதைக்க அந்தப் புழுவைப் பார்த்தேன். அதன் துடிப்பு. அது அபிமன்யு சிறு
குழந்தையாக பட்டுத் தொட்டிலில் கைகால் உதைத்து நெளிவது போலிருந்தது. பேச்சே
எழவில்லை. மனம் மட்டும் கூவியது. அபிமன்யு! இதோ உன் அம்மா. என்னை
மறந்துவிட்டாயா என் செல்வமே. என்னை ஞாபகமிருக்கிறதா உனக்கு?
”பேசு பேசு” என்றார் ரிஷி.
“அபிமன்யு” என்றேன் தொண்டை அடைக்க.
அந்தச் சிறு புழு அசைவற்று நின்றது. பிறகு அதன் தலை என்னை நோக்கி உயர்ந்தது.
சிவந்த புள்ளிகள்போல அதன் கண்களைக் கண்டேன். என்னைப் பார்க்கிறானா? என்னை அவன்
ஞாபகம் வைத்திருக்கிறானா? என் மனம் களிப்பில் விம்மியது.
“பேசு பேசு” என்று ரிஷி அதட்டினார்.
திடீரென்று அந்த மற்ற புழுவைப் பார்த்தேன். “குருநாதரே இது யார்? அவனுடைய
இரட்டைச் சகோதரன் யார்?”
“அது எதற்கு உனக்கு? நீ உன் குழந்தையிடம் கூற வேண்டியதைக் கூறு.”
“இல்லை. நான் அதை அறிந்தாக வேண்டும். அவன் யார்?”
ரிஷி அலுப்புடன், “அவன் பெயர் பிருகத்பாலன். கோசல மன்னனாக இருந்தவன்” என்றார்.
என் மனம் திகிலில் உறைந்தது. “கோசல மன்னனா? என் மகனால் போர்க்களத்தில்
கொல்லப்பட்டவனா?”
“ஆம். அவர்கள் இருவருக்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவு பிறவிகள்தோறும்
தொடர்கிறது. அதன் காரணத்தை யாரும் அறிய முடியாது. நீ உன் குழந்தையிடம் சொல்ல
வேண்டியதைச் சொல்லிவிடு.”
என் தொண்டை கரகரத்தது. அடுத்தபிறவியில் என்ன நிகழப்போகிறது? “அபிமன்யு! அது
கோசல மன்னன் பிருகத்பாலன். உன்னால் கொல்லப்பட்டவன். உன் இரட்டைச் சகோதரன் உன்
எதிரி. மகனே, கவனமாக இரு…”
ரிஷி கோபமாக “என்ன பேசுகிறாய் நீ?” என்று கத்தினார்.
நான் களைப்புடன் மூச்சிரைத்தேன். திடீரென்று பத்ம வியூகம் பற்றி இன்னமும்
கூறவில்லை என்று உணர்ந்தேன். “அபிமன்யு, இதோ பார். பத்ம வியூகம்தான் உன்
விதியின் புதிர். அதிலிருந்து வெளியேறும் வழியைக் கூறுகிறேன்…..” என்மீது
யாரோ குனிந்து பார்ப்பது போல நிழல் விழுந்தது. திருக்கிட்டு அண்ணாந்தேன்.
யாருமில்லை. வானம் கன்னங்கரேலென்று இருந்தது. பதற்றத்துடன் மலரைப் பார்த்தேன்.
அது கூம்பி விட்டிருந்தது. “குருநாதரே” என்று கூவியபடி அதைப் பிரிக்க
முயன்றேன்.
“பிரயோசனமில்லை பெண்ணே. அவன் போய்விட்டான்” என்றார் ரிஷி.
“குருநாதரே” என்று கதறியழுதபடி அவர் காலில் விழுந்தேன். “எனக்குக் கருணை
காட்டுங்கள். என் குழந்தையிடம் ஒரு வார்த்தை பேசிக் கொள்கிறேன்…”
ரிஷி எழுந்து விட்டார். அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டேன். அவர் உதறிவிட்டு
நடந்தார். அப்படியே படிகளில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்துக் கதறிக்
கதறி அழுதேன்.
தோள்களில் கரம் பட்டது. அண்ணாவின் கரம் அது என்று தெரிந்தது. அதை நான்
விரும்பினேன் என்று அறிந்தேன். “அண்ணா! அபிமன்யு, என் குழந்தை…”
“வா போகலாம். மழை வரப்போகிறது.”
“என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே. தன் விதியின் புதிரை
சுமந்தபடி அவன் போகிறானே. நான் பாவி பாவி….”
அண்ணா என்னைத் தூக்கி எழுப்பினார். “வா. அழுது என்ன பயன்?”
“என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே…”
”யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே
நுழைந்தாய்?”
நான் அப்படியே உறைந்து நின்றுவிட்டேன். பிறகு “அண்ணா” என்றேன்.
“வா. மழை வருகிறது.”
இலைகள் மீது ஓலமிட்டபடி மழை நெருங்கி வந்தது. ஆவேசமான விரல்கள் பூமியைத்
தட்டின. பிறகு நீர்த்தாரைகள் பொழிய ஆரம்பித்தன.
“அண்ணா, என் குழந்தையின் விதி என்ன? அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும்?”
மழையில் அண்ணாவின் குரல் மங்கலாகக் கேட்டது. “தெரியவில்லை. ஆனால் அதன் தொடக்கம்
மட்டும் இன்று தெரிந்தது.”
“எப்படி?” என்றேன் அவரைத் தொடர்ந்து ஓடியபடி. அண்ணா பதில் பேசாமல் நடந்தார்.
ஒரு மின்னல் வானையும் மண்ணையும் ஒளியால் நிரப்பியது. பின் அனைத்தும் சேர்ந்து
நடுங்க இடியோசைகள் வெடித்து அதிர்ந்தன. அதன் எதிரொலியை வெகுநேரம் என்னுள்
கேட்டேன். என் உடலைக் கரைத்து விடுவதுபோல மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையின்
அடர்ந்த திரைக்குள் அண்ணா சென்று மறைந்தார்.



*(முற்றும்)*


*காலச்சுவடு (இதழ் எண் 18), 1997*


thanx - s ramakrishnan , jeyamokan ,thamilthoguppukal

Wednesday, June 27, 2012

சுஜாதா - ஒரு பார்வை - காலச்சுவடு கண்ணன் கட்டுரை


சுஜாதா ஒரு முரண்நோக்கு
கண்ணன்
கடந்த சில ஆண்டுகளில் தமிழுக்குப் பல விதங்களில் பங்களித்த ஆளுமைகளின் மறைவு தொடர்ந்து துக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையின் மறைவு நிகழ்ந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சுந்தர ராமசாமி, நகுலன், சிட்டி, ஆதிமூலம், லா. ச. ரா. என இப்பட்டியல் நீள்கிறது.
சுஜாதா இவர்களில் இருந்து வேறுபட்ட வெகுஜன தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இருப்பினும் ஒரு காலகட்டத்தில் வாசகர்களுக்கு வாசிப்பு இன்பத்தைத் தந்துவிட்டு மறைந்துவிடும் பட்டியலில் ஒதுக்கிவிடக்கூடியவர் அல்ல. சுமார் 35 ஆண்டுகாலம் வெகுஜன தளத்தில் தாக்குப்பிடித்தவர்கள் தமிழில் அபூர்வம். மறையும்வரை சமகாலத்தோடு தொடர்புடனிருந்து வெகுஜன தளத்தில் நுழையும் இளம் எழுத்தாளர்களுக்கு இறுதிவரை ஒரு சவாலாக இருந்தவர் சுஜாதா. அவரோடு வெகுஜன தளத்தில் எழுதவந்தவர்களுக்குப் பின்னர், சில தலைமுறை வெகுஜன எழுத்தாளர்கள் ஜொலித்து மறைந்த பிறகும் சுஜாதா வெகுஜன தளத்தில் தொடர்ந்து நாயகனாக நின்றார். இன்று வெகுஜன தளத்தில் நுழையும் பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் எவ்வாறு வேகமாகத் தேக்கமடைந்து காலாவதியாகிவருகிறார்கள் என்பதோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய செய்தி இது.



பலரையும் போல் சுஜாதாவை நானும் என் பதின்களில் வெகுஜன இதழ்களில் படித்திருக்கிறேன். அவரது நாவல்கள்மீதான ஆர்வம் பதின்கள் முடியும்வரை நீடிக்கவில்லை. பின்னர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் செயல்படத் தொடங்கிய பிறகு காலச்சுவடு ஆசிரியராக அவருடனான உறவு பெரிதும் எதிர்நிலையிலிருந்தே ஏற்பட்டுள்ளது. வணிகப் பண்பாட்டிற்கு எதிராக ஒரு சிற்றிதழ் இயக்கத்தை முன்னெடுத்தவர் காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி. அக்காலகட்டத்தில் வெகுஜனப் பண்பாட்டின் நாயகனாக நின் றவர் சுஜாதா. இருப்பினும் காலச்சுவடு சுஜாதாவை உரிய இடங்களில் அங்கீகரிக்கத் தயங்கவில்லை.
'தமிழ் இனி 2000' நிகழ்வை நாங்கள் நடத்தியபோது, 'கணினியும் தமிழும்' அமர்வு அவருடைய தலைமையிலேயே நடந் தது.


 எங்கள் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். பின்னர் 'அற்றைத் திங்கள்' நிகழ்விற்கு அவரை அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அவரது உடல்நிலை கருதி அழைக்காமலேயே இருந்துவிட்டோம்.
அதேநேரம் அவருடைய எழுத்துக்கள் சார்ந்தும் கருத்துகள் சார்ந்தும் பல முரண்பட்ட கட்டுரைகளும் விவாதங்களும் காலச்சுவடில் இடம்பெற்றுள்ளன. சுஜாதாவும் காலச்சுவடை அதிகமும் பாதகமாகவே சுட்டிவந்திருக்கிறார். ஆனால், சுந்தர ராமசாமியின் எழுத்தைப் பற்றி அவர் எப்போதுமே உயரிய மதிப்பீட்டை வெளிப்படுத்திவந்தார்.



சு. ரா. வுக்கு சுஜாதா பற்றிய மதிப்பீடு இருந்தது. அவரை ஒரு 'ஜீனியஸ்' என்று சு. ரா. கருதினார். தன்னை வெகுஜன தளத்தில் சமரசப்படுத்திக் கொண்டதால், தமிழ்ச் சமூகம் அவரது பங்களிப்பைக் குறைவாகவே அடைந்துள்ளது என்றும் கருதினார். அவரது மேலோட்டமான அணுகுமுறை, பாலியல் கொச்சைப்படுத்தல் பற்றிய கடும் விமர்சனமும் சு.ரா.வுக்கு இ ருந்தது. ஒரு எதிர்வினையில் 'வணிகச் சீரழிவின் நாயகன்'1 என்று சுஜாதாவைச் சுட்டினார் சு.ரா. அறிவியல் தமிழுக்கு அவரது பங்களிப்பைப் பற்றிய மரியாதையும் சு. ரா. வுக்கு இருந்தது. சிங்கப்பூர் நா. கோவிந்தசாமிக்கு எழுதிய அஞ்சலிக் கட்டு ரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:



கணினியில் பொது விசைப்பலகை - பொதுக் குறியீட்டு முறை உருவாக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடித் தொடர்ந்து அவர் முனைந்து வந்தார் என்பது தெரிகிறது. அவர் கண்டறிந்த உண்மைகள் என்ன? அந்த உண்மைகள் எந்தளவுக்கு இன்று நமக்குப் பயன்படும்? இவை பற்றி வாசகர்கள் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற வேண் டும். கணினித் துறையில் நுட்ப விபரம் கொண்ட ஒருவர்தான் இதனைத் தெளிவுபடுத்த முடியும். தமிழ் வாசகர்கள் அறியும் வகையில் சுஜாதா இதைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்2.
தீவிரமான விஷயங்களை மேலோட்டமாகவும் சில சமயங்களில் அலட்சியமாகவும் சுஜாதா எழுதுவது பற்றிய வருத்தமும் அவருக்கு உண்டு.


குவளைக்கண்ணனுக்கு அவரது கவிதைத் தொகுப்பு பற்றி சு. ரா. எழுதிய ஒரு கடிதம் நூல் மதிப்புரையாக காலச்சுவடில் வெளிவந்தது.
'கிட்டதட்ட கவிதைகள்' என்ற உபதலைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும். இது கவிதைக்கு எதிரான ஒரு வேடிக்கை மனநிலையை உருவாக்குகிறது. இந்த வேடிக்கை மனோபாவம் தமிழில் ஒரு இதழாலும், ஒரு பிரபல எழுத்தாளராலும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவது'3
என்று குறிப்பிடுவது சுஜாதாவைத்தான் என நினைக்கிறேன். (அழுத்தம் என்னுடையது)



சுஜாதா ஒன்றிரண்டுமுறை தெற்குப்பக்கம் வந்தபோது வீட்டிற்கு வந்துவிட்டு சு. ரா. வைப் பார்க்க முடியாமல் போனது பற்றிப் பத்திரிகைகளில் எழுதினார். 80களின் இறுதியில் இருக்கலாம், பீட்டர் புருக்கின் 'மகாபாரதம்' நாடக நிகழ்வு பெங்களூரில் நடைபெற்றபோது சு. ரா. வைச் சந்தித்த சுஜாதா, அவரும் இணைந்துகொண்டு காலச்சுவடைத் தொடர்ந்து நடத்து வது பற்றிப் பேசியிருக்கிறார்.


 அந்தத் திட்டத்தை சு. ரா. முன்னெடுக்கவில்லை. சுஜாதா இதனால் மிகவும் மனம் புண்பட்டார் என நினைக்கிறேன். 1991இல் காலச்சுவடு ஆண்டுமலர் வெளிவந்தது. கோமல் சுவாமிநாதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதல் பிரதி ஒன்று சுபமங்களாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்த இதழிலேயே சுஜாதாவின் மிக எதிர்மறையான விமர்சனம் சுபமங்களாவில் வெளிவந்தது.


 சுஜாதாவே தன்னை அழைத்து, தான் விமர்சனம் செய்வதாகக் கூறிப் பெற்றுக்கொண்டதாகக் கோமல் கூறினார். அவ்வாறு தான் செய்வது பற்றியும் முற்றிலும் தீவிரத் தளம் சார்ந்த அம்மலரை விமர்சிக்கத் தனக்கிருக்கும் தகுதி பற்றியும் சுஜாதாவுக்கு இருந்த உறுத்தல் அக்கட்டுரையிலேயே வெளிப்பட்டது.


இதற்கான உன் தகுதி என்ன என்றால் காலச்சுவடு மதிப்புரைக்காக சுபமங்களாவுக்கு இந்தப் புத்தகத்தை அனுப்ப - அவர்கள் எனக்கு அதை அனுப்பி விமரிசனம் எழுதச் சொன்ன ஒரே காரணம்தான். இருந்தும் இதை எழுதுவதில் எனக்கு இஷ்டமே.


சு. ரா. வின் கடுமையான எதிர்வினையும் சுபமங்களாவில் (ஏப்ரல் 92) வெளிவந்தது. காலச்சுவடில் பங்கு பெற முடியாது போனதால் தொடர்ந்து காலச்சுவடைச் சீண்டிவந்தார் என்றும் பிற்காலத்தில் காலச்சுவடு 'போன்ற' ஒன்றை உருவாக்கித் தன் ஆற்றாமையை சுஜாதா தீர்த்துக்கொண்டார் என்றும் எண்ண இடமிருக்கிறது.


n
2000ஆம் ஆண்டை ஒட்டி சுஜாதாவை அவர் வீட்டில் நண்பர்களுடன் சென்று சந்தித்தேன். சந்தித்த காலத்தையும் நோக்கத் தையும் இப்போது தெளிவாகச் சொல்ல முடியவில்லை. காலச்சுவடு இதழைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் எழுதியிருந்ததை அப்போது 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எடுத்துப் போட்டிருந்தோம். அதைக் கு றிப்பிட்டு 'உண்மையிலேயே எனக்குப் புரியவில்லையப்பா' என்றார்.


அதற்கு முன்னர் பேச்சுவாக்கில் சில தண்டிதண்டி ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்காட்டியிருந்தார். அவை கண் முன்னால் மேசையிலிருந்தன. 'இவை புரியும்போது காலச்சுவடு புரியவில்லையா?' என்று கேட்டேன். சில கட்டுரைகள் புரியவில்லை என்றார். 'சில' என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே என்றேன். சிரித்துக்கொண்டே 'அப்ப தப்புதான்' என்றார்.



அறிவியல் புனைகதைகள் எழுதுவது பற்றிய ஒரு பட்டறைக்குக் காலச்சுவடு ஒழுங்குசெய்தால் வந்து நடத்து கிறேன் என்றார். ஆர்தர். சி. கிளார்க் போன்று அறிவியலின் வளர்ச்சியை முன் உணரும் படைப்புகள் தமிழ்ச் சூழலில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. மேலும் அறிவியல் மனோபாவம், பகுத்தறிவு என்பன மிகுந்திருக்கும் சூழலில் ஒரு நெகிழ்ச்சியை அறிவியல் கதைகள் அளிக்கக்கூடும்.


 பகுத்தறிவும் அதீதங்கள் பற்றிய நம்பிக்கையும் இரட்டைப் பின் னல்போல இருக்கும் தமிழ்ச் சூழலில், மென்பொருள் வட்டத்திற்கு வெளியே அறிவியல் புனைகதைகளின் பொருத்தத்தை நான் உணரவில்லை. அதை அவரிடம் சொன்னேன். மாற்றுக் கருத்துகள் பற்றிய பொறுமையின்மை ஏற்பட்டுவிட்ட வயது அப்போது அவருக்கு.



பின்னர் அவர் ஆலோசகராகப் பணியாற்றிய மீடியா டிரீம்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஒரு புளிய மரத்தின் கதையைத் திரைப்படமெடுக்க அவர் யோசனை கூறியிருந்ததை அடுத்து அவரை ஓரிருமுறைகள் அலுவலகத்தில் சந்தித்தேன். அதில் ஆசிரியருக்கு உரிய தொகையின் போதாமையைச் சுட்டி நான் வாதிட்டதை அவர் ரசிக்கவில்லை.


படத்திற்கான மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம்கூட நூலாசிரியருக்கு இல்லை. எனக்குத் தொகையைவிடவும் இலக்கியவாதிகளை எளிதில் வசப்படுத்திவிடலாம் என்ற சினிமாக்காரர்களின் முன் முடிவை உடைப்பது அவசியமாகத் தோன்றியது. பின்னர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் இடையீட்டில் சமரசமாகி அந்த முயற்சி தொடங்குவதற்குள் நிறுவனம் பொளிந்துவிட்டது.



தமிழுக்கு சுஜாதாவின் பங்களிப்பை இவ்வாறு தொகுக்கலாம் என நினைக்கிறேன்:



1. சமகாலத் தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.



2. தான் செயல்பட்ட வெகுஜன தளத்தில் வாசகர்களுக்குத் தொடர்ந்து தீவிர ஆளுமைகளை அறிமுகப்படுத்தி வந்தி ருக்கிறார்.



3. தொழில்நுட்பத் தமிழுக்கு அவருடைய பங்களிப்பு மிக வலுவானது. சிக்கலான அறிவியல் செய்திகளை எளிய முறையில் விளக்கிவிடுவதில் அவருடைய ஆற்றல் தன்னிகரற்றது.



(பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது அமெரிக்கப் பயண அனுபவங்களைத் தமிழன் எக்ஸ்பிரசில் தொடராக எழு திக்கொண்டிருந்தார். அதில் அமெரிக்கா செல்லும்போதும் திரும்பும்போதும் ஏற்படும் ஜிவீனீமீறீணீரீ ஐ விளக்க, 'மறுநாள் கிளம்பி முதல் நாள் வருவதுபோல' என எழுதியிருந்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது நினைவுக்கு வருகிறது.)



2005 நவம்பரில் 'கருத்து' அமைப்பின் தொடக்க விழாவில் சுஜாதாவைக் கடைசியாகச் சந்தித்தேன். உடல்நலம்குன்றிக் காணப்பட்டார். சுந்தர ராமசாமியின் மறைவைப் பற்றிய துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். 'பெரிய இழப்பு, பெரிய இழப்பு' என மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக்கொண்டேயிருந்தார்.



அதெல்லாம் சம்பிரதாயமானதாக இல்லாமல் ஆத்மார்த்தமானதாக இ ருந்தது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்று நான் படித்த கட்டுரையைப் பற்றி உயர்வாக ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்' பத்தியில் எழுதியிருந்தார். இனி அதிகமும் முரண்படவும் அவ்வப்போது பாராட்டவும் சுஜாதா இல்லை.


n
ஒரு தலைமுறைத் தமிழ் வாசகர்களுக்குப் பெண் பற்றிய விடலைத்தனமான கிளுகிளுப்பை ஏற்படுத்தியவர் சுஜாதா. தனது சாதிச் சங்கங்களுடன் அவர் கொண்டிருந்த உறவை அவரே பதிவுசெய்திருக்கிறார். அவர் புறக்கணித்து ஒதுக்கிய 'காலச்சுவடு 1991 ஆண்டு மல'ரில் அவரைக் கவர்ந்த சில படைப்புகளில் ஒன்று ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனின் 'ராமஜென்ம பூமி: ஓர் இந்தியப் பார்வை.'



சென்னையிலிருந்து வெளிவரும் சமநிலை சமுதாயம் என்ற 'முற்போக்கு மாத இத'ழின் கௌரவ ஆசிரியர் ஏவி. எம். ஜாபர்தீன் மலேசியாவில் வசிப்பவர். அவர் சுஜாதாவுக்கு எழுதிய அஞ்சலியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் 'கோயில் ஒழுகு' பற்றி அவர் எழுதும்போது அது முஸ்லிம்களைத்தான் குறிப்பிடுகிறது என்று எண்ணிய இருவர், சுஜாதாவுக்குக் கடுமையான கடிதம் எழுதினர். சுஜாதா தானாக ஏதும் கூறவில்லை.


 கோயில் ஒழுகு பற்றி கூறப்பட்டவற்றை அப்படியே எழுதப்போய் சிலர் உணர்ச்சிவசப்பட்டு தூஷணையுடன் எழுத, மனம் நொந்த சுஜாதா இனி இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றித் தாம் ஏதும் எழுதப் போவதில்லை என்பதுபோல் 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் கு றிப்பிட்டார்.5 முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் முயற்சி இது. புகழ்பெற்றவர்களுடன் நெருங்கிப் பழகும்போது ஏற்படும் இன் பம், தர்க்கத்திற்கும் கருத்தியலுக்கும் அப்பாற்பட்டது. அந்த இன்பத்தை ஜாபர்தீன் அவர்கள் சுஜாதாவிடமிருந்து நிறைவாகப் பெற்றிருக்கும் செய்தி அவரது அஞ்சலிக் கட்டுரை முழுக்க விரவிக் கிடக்கிறது.



மேற்படி விஷயத்தில் சுஜாதா 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எழுதியது இதுதான்:


அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான 'கோயில் ஒழுகு' புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன். . .


. . . 'கோயில் ஒழுகு' நூலில், ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் என்று பதினோரு விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார் வைஷ்ணவஸ்ரீ. அதில், கோவிந்தா கூட்டத்தினர் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்று உண்மைகள் ஏதேனும் பொதிந்துள்ளதா என்று கேட் டிருக்கிறார்.
நிச்சயம் இருக்கலாம், நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள்போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.



யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். (ஆனந்த விகடன் 17.4.05) (அழுத் தம் என்னுடையது).
இது பற்றிய விவாதம் காலச்சுவடு இதழில் நடந்தது. கோம்பை எஸ். அன்வர், ஜெ. ராஜா முகமது, ஆ. சிவசுப்பிரமணியன், பொ. வேல்சாமி ஆகியோர் பங்களித்தனர். இவற்றை ஜாபர்தீன் அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.



விருந்தினர் வீட்டிற்கு வருவது, அதுவும் நாம் ஆதர்சிப்பவர்கள் வருவது மகிழ்ச்சியான செய்திதான். சுஜாதா குடும்பத்துடன் தன் வீட்டிற்கு வந்தது பற்றி ஜாபர்தீனின் உணர்வுகள் இவை:



1993இல் நான் கோலாலம்பூரில் இருந்த சமயம், ஒரு நாள் மாலை அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. "ஜாபர்தீன்! நான் உங்க ஊருக்கு வந்திருக்கிறேன்" என்றார். உடனே அவரைச் சந்தித்தேன். அவருடன் அவர் துணைவியார் திருமதி சுஜாதா ரங்கராஜனும் அவருடைய மாமனார், மாமியார் ஆகியோரும் வந்திருந்தனர்.


 அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு சைவ உணவு விடுதிக்குச் செல்லும்போது, "எங்கள் வீட்டிற்கு அழைக்கலாம்தான். ஆனால் அங்கு நீங்கள் உணவருந்தமாட்டீ ர்களே?" என்றேன். "யார் சொன்னது? நீங்கள் கூப்பிடவில்லை என்பதுதான் எங்கள் குறை. எங்களுக்கு சைவ சாப்பாடு தாரு ங்கள். நாங்கள் வருகிறோம்" என்றனர் அனைவரும்.
நான் என் மனைவியிடம் கூறி அசைவ உணவுகளை அப்புறப்படுத்திவிட்டு சைவம் மட்டுமே சமைத்து அவர்களை வி ருந்துக்கு அழைத்தோம். எவ்விதத் தயக்கமுமின்றி அனைவரும் வந்து விருந்துண்டனர். தொடர்ந்து கோலாலம்பூரைச் சுற்றிப்பார்க்க விரும்பிய அவர்களுக்கு எனது காரையும் டிரைவரையும் அவர்கள் மலேசியாவில் தங்கி இருக்கும்வரை கொடுத்தேன்.



மிகவும் மகிழ்வோடு அவர்கள் சுற்றுப்பயணம் நிகழ்ந்தது.6
ஆச்சாரமான அய்யங்கார்கள் நம் வீட்டில் தங்கி, உணவருந்தி கௌரவித்துவிட்டார்களே என்ற ஜாபர்தீன் அவர்களின் பெருமிதம் இ ன்றைய காலத்திற்குச் சிறிதும் பொருத்தமற்றது. மேற்படிப் பதிவில் விரவிக்கிடக்கும் புலால் உணவு பற்றிய ஜாபர்தீன் அவர்களின் தயக்கங்களும் குற்ற உணர்வும் சமூகவியல் ஆய்வுக்கு உரியவை.
n
சுஜாதா ஆர்வத்துடன் விரும்பிச் செயல்பட்ட தளம், வெகுஜன வணிகத்தளம். அத்தளத்தில் இருந்து அவருக்குச் செலுத் தப்பட்ட அஞ்சலிகள் பல ஆத்மார்த்தமானவை. சுஜாதாவால் பயன்பெற்றவர்கள், பயன்பெறத் தொடங்கிய காலகட்டத்திற்குப் பிறகு மட்டும் அவரைப் பற்றி உதிர்க்கத் தொடங்கிய மிகையான புகழாரங்களை, 'நன்றி விசுவாசத் தந்திரம்' என்று புறக்கணி த்துவிடலாம்.



 பெண்ணியமும் திராவிடச் சித்தாந்தமும் பேசுபவர்கள் சுஜாதாவின் கருத்தியல் தொடர்பாக மேற்கொள்ளும் விமர்சன மௌனத்தையும் இதே தொடரில் அடக்கிவிடலாம்.


தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம்


. இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.


என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற 'முழு உண்மை'மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் - சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது - உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.


நன்றி - காலச்சுவடு

Tuesday, June 05, 2012

காலச்சுவடு ஆசிரியரின் நண்பர் மரணம் - சில புரிதல்கள்



எல்லா மனிதரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத  துக்க பக்கம் மரணம்.. அது நமக்கான விடுதலைப்பத்திரமும் கூட ..இயற்கையை பல வழிகளில் வஞ்சித்த, வென்ற மனிதன் மரணத்தை மட்டும் வெல்லவே முடியவில்லை.. ஒரு வேளை மரணத்தை மனிதன் வென்று விட்டால் அது இயற்கைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.. வந்தவர்கள் எல்லாம் இங்கேயே தங்கி விட்டால், தேங்கி விட்டால் பூமியில் ஏது இடம்?

இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் மரணம் நம்மை அதிகம் பாதிக்கிறது.. தினசரி நாளிதழ்களில் யாரோ ஒருவரின் மரணச்செய்தியை நாம் படிக்க நேரிடும்போது, டி வியில் பார்க்க நேரும்போது நம்மை அது அதிகம் பாதிப்பதில்லை.. அடிக்கடி சந்தித்தோ, அல்லது நெருக்கமான பழக்கத்திலோ இருப்பவர்கள் இறக்கும்போதுதான் நம்மை மரணம் பாதிக்கிறது.. மரண பயமும் வருகிறது ..

சென்னிமலையில் தி முக  ஒன்றியச்செயலாளர் திரு மெய்யப்பன்.. அவரது தம்பிகள் அங்குராஜ், கே எஸ் சண்முக சுந்தரம் இருவரும் என் பால்ய கால நண்பர்கள்.. அவர்களது சித்தப்பா பையன் அய்யப்பன்.. இவரை பற்றி நான் எனது பத்திரிக்கை உலக அனுபவங்களில் சொல்லி இருக்கிறேன்.. ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் இவரது 3 கவிதைகள் வந்துள்ளன.. அது போக பால்ய காலத்தில் தென்றல் எனும் கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தி வந்த போது எனக்கு உறுதுணையாக இருந்தார்..

இவரது அண்ணன் சென்னிமலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் இல் மேனேஜர்..இவரது அடுத்த அண்ணன் பெயர் சம்பத்.. இவர் தான் நாம் இப்போ பார்க்கப்போற சம்பவ நாயகன்..

ஆள் ஒல்லியா, உயரமா இருப்பார்.. சின்ன வயசுல இருந்தே வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லாதவராக சித்தன் போக்கு சிவன் போக்கு என  ஏனோ தானோ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.. குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனார்..

தினமும் சரக்கு இல்லாமல் தூங்கவே மாட்டார்.. அய்யப்பன் குடும்பத்தில் அனைவரும் எனக்கு அறிமுகம், பழக்கம்.. ஆனால் இவர் மட்டும் அதிக டச் இல்லாமல் இருந்தார்..காரணம் இவர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார்..

தினமும் மாலை  வேளைகளில், குறிப்பாக சனி, ஞாயிறுகளில் இவர் சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் திண்ணையில் அல்லது ஈஸ்வரன் கோவில் அருகே அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்..  காலச்சுவடு ஆசிரியர் கதிர்வேலு அவர்களின்  நெருங்கிய நண்பர்..

சமீபத்தில் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.. 2 மாசம் இருக்கும்..

சம்பவம் நடந்த அன்னைக்கு 4 நாட்கள் முன்.....

சம்பத் சாலையில் நடந்து போய்ட்டு இருந்திருக்கார்... திடீர்னு வலது கால் மரத்துப்போன மாதிரி ஒரு உணர்வு.. சாலை அருகே உள்ள விளக்கு கம்பத்தில் கை வைத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கார்.. திடீர்னு அந்த மரத்துப்போன உணர்வு காலில் இருந்து இடுப்பு கை வரை பரவி வலது பாகம் முழுக்கவே மரத்து விட்டது..

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அருகாமையில் உள்ள ஹாஸ்பிடல் சென்றிருக்கிறார்.செல் ஃபோன் கையில் இருந்தது ரொம்ப உபயோகமாக இருப்பது இது போன்ற ஆபத்துத்தருணங்களில் தான்.. வீட்டுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லி விட்டார்..

டெஸ்ட் செய்த டாக்டர் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் ஜாம் ஆகி விட்டதாகவும்,இனி நாம் செய்ய ஏதும் இல்லையென்றும் கூறி விட்டார்.. எஸ்.. ஹி ஈஸ் ஹவுண்ட்டிங்க் ஹிஸ் டேஸ்..
இவருக்கு வயது 45.. ஆனால் ஆள் பார்க்க 32 வயசு போல் தான் இருப்பார்.. திருமணம் ஆகாதவர்.. பொறுப்பில்லாத மனிதராக இருந்தபோதும் தான் திருமணம் செய்தால் தன்னை நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் வைத்து காப்பாற்ற முடியாது என்ற உண்மை அவரது மனசில் இருந்திருக்க வேண்டும்.. எனவே தான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல.. காதல் தோல்வி ஏதும் இல்லை..

குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு என்ன ஒரு நிம்மதி என்றால் மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருந்திருந்தா இன்னும் சிரமம்.. அந்த குடும்பமும் நிர்க்கதி ஆகி இருக்கும் என்ற எண்ணமே..

2 நாள் சுய நினைவில்..  அப்போதும் அவரால் பேச முடியவில்லை.. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்திருக்கிறது.. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தம்பி அனைவரையும் கடைசி பார்வை பார்த்திருக்கிறார்.. அவருக்கு தன் இறுதி நாட்களில் இருக்கிறோம் என்பது தெரிந்து விட்டது..

இந்த இறப்பில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ஹாஸ்பிடல் சென்று கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது அவசியம்..

2.  மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்,சராசரி வாழ்க்கை வாழாமல் வித்தியாசமாக நடவடிக்கை தென் பட்டால் அவரை தனிமையில் விடாமல் இருத்தல்..

3. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் 18 வயசோடு முடிந்து விடக்கூடாது.. காலம் உள்ள காலம் வரை வாரிசுகளுடனான  அருகாமை, அக்கறை இருக்க வேண்டும்..

4. தன்  மகன் இப்படி ஆகிட்டான், இவன் இப்படிதான்.. என தண்ணி தெளிச்சு விட்டுட்டு மத்த வேலையைப்பார்ப்போம் என்ற மனப்பான்மை வரக்கூடாது..

5.ஒரு கலயாணம் காட்சி என்றால் யார் யாரை கூப்பிடனும் என்று ஆற அமர்ந்து லிஸ்ட் போடற மாதிரி 40 வயது கடந்தவர்கள் தங்கள் பால்ய கால நண்பர்கள், பள்ளி, கல்லூரி ,அலுவலக நண்பர்கள் இவர்கள் முகவரி அல்லது அட்லீஸ்ட் தொலை பேசி எண்ணையாவது ஒரு டைரியில் அல்லது ஒரு நோட்டில் எழுதி வைக்க வேண்டும்.. மேலோட்டமான பார்வையில் இது குரூரமாக தோன்றினாலும் என் அனுபவத்தில் நான் கண்ட பல மரணங்களில் கடைசி சமயங்களில் பலருக்கு தகவல்கள் சொல்லப்படாமலேயே இருந்திருக்கின்றன.. சொல்லாத காதல் எவ்வளவு துயரமோ அதை விட இரு மடங்கு துயரமனானது சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லப்படாத மரண தகவல்.

6. இன்சூரன்ஸ் பாலிஸி.. பெரும்பாலோர் இது பற்றி அக்கறை கொள்வதே இல்லை.. நாமே போயிடறோம்.. இனி என்ன ஆகப்போகுது? நமக்குப்பின்னால வரப்போற தொகைக்காக நாம ஏன் கஷ்டப்பட்டு , மெனக்கெட்டு பிரீமியம் கட்டனும் என்ற எண்ணம் மறையனும்.. சம்பத் பாலிஸி ஏதும் கட்டவில்லை.. சப்போஸ் கட்டி இருந்தால் வயசான காலத்தில் அவர் பெற்றோருக்கு உதவியாக இருந்திருக்கும்..

7. திருமணங்களில் மொய் வைப்பது தமிழனின்  பாரம்பரிய பழக்கமாக இருந்து வந்தாலும் நான் வியப்பது மரணம் நடந்த வீடுகளில் ஏன் அந்தப்பழக்கம் வரவில்லை என்பதே.. வசதியான, நடுத்தரக்குடும்பங்களில் பிரச்சனை இல்லை, சம்பத் குடும்பத்திலும் பணப்பிரச்சனை இல்லை, ஆனால் பொதுவாக நான் யோசிப்பது ஒரு ஏழையின் வீட்டில் குடும்பத்தலைவர், அல்லது முக்கியமான நபர் இறந்து விட்டால் அந்தக்குடும்பத்துக்கு மாபெரும் இழப்புத்தானே.. நாம என்ன பண்றோம்.. துக்க வீட்டுக்குப்போறோம்.. கையை கொடுக்கிறோம், துக்கம் விசாரிக்கறோம்.. வந்துடறோம்.. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யனும் என்று நினைப்பதே இல்லை.. ஏழை வீட்டில் மரணம் நிகழ்ந்தால் நம்மாலான பண உதவி செய்ய வேண்டும்..

8. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டீன் ஏஜ் வரை கவனமாக கண்காணித்து வர வேண்டும்.. 18 வயசுக்குள் தான் பெரும்பாலான கெட்ட பழக்கங்களை மனிதன் கற்றுக்கொள்கிறான்.. 19 வயசில் அவனுக்கு ஒரு பக்குவம் வந்து விடும்..  பலரை விசாரித்ததில் தெரிய வரும் தகவல் அவர்கள் ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை கற்றுக்கொண்டது அவர்கள் 15 டூ 18 வயசில் தான்.. அது மாற்ற முடியாத பழக்கமாக மாறி அவனை சிதைக்கிறது..

9. இருக்கும் வரை ஜாலியாக இருப்போம், எல்லாத்தையும் அனுபவிப்போம் என்ற எண்ணம் தான் பெரும்பாலான தவறுகளுக்குக்காரணம்.. இருக்கும் வரை ஆரோக்யமாக இருப்போம் என எண்ணுவதில்லை... யோகா, மூச்சுப்பயிற்சி என தினமும் 30 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும்..

10 , கடைசியாக நான் சொல்லப்போவது பைத்தியகாரத்தனமாகவோ , அல்லது தேவையற்றதாக தோணும்.. இருந்தாலும் சொல்லிடறேன்... நாம வாரம் ஒரு முறை ரிலாக்ஸ்ஸாக இருக்க, டைம் பாஸ் பண்ண  சினிமா, கோயில், பீச், பார்க் எங்காவது சென்று மனதை ரிலாக்ஸ் பண்ணிக்கறோம்.. பொழுது போக்கு - எண்ட்டர்டெயின்மென்ட்.. அந்த மாதிரி மாதம் ஒரு முறை அரசு மருத்தவமனைக்கு ஒரு விசிட் அடிக்கனும்.. எத்தனை பேர் .. எத்தனை நோய்கள், எத்தனை அஜாக்கரதைகள், எத்தனை விபத்துகள் என்பதை கண்கூடாக கண்டால் நமக்கு வாழ்வின் அர்த்தம், மதிப்பு புரியும்.. அதே போல் தெரிந்தவர், உறவினர் மரணங்களுக்கு  செல்கையில் சுடுகாடு வரை போய் வர வேண்டும்.. அந்த குடும்பத்துக்கும் ஒரு ஆறுதல், நமக்கும் வாழ்வின் நிலையாமை தத்துவத்தை நமக்கு நாமே உணர நல்ல வாய்ப்பு

சம்பத்தின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. நான் மரணத்தகவல் சொன்னதும் பொள்ளாச்சியில் தன் குடும்பத்துடன் சுற்றுலாவில் இருந்தபோதும் உடண்டியாக அதை  கேன்சல் செய்து சென்னிமலை வந்து துக்க நிகழ்வில் பங்கு கொண்ட  காலச்சுவடு ஆசிரியர்க்கு என் நன்றிகள்..

 சம்பத்தின் புகைப்படம்  போட வேண்டாம் என அவர் குடும்பத்தில் கூறி விட்டனர்.. அவர் இன்னும் அவர்களோடு வாழ்வதாக  நம்புவதால்...