Showing posts with label கருணை. Show all posts
Showing posts with label கருணை. Show all posts

Thursday, November 12, 2015

இப்படியும் பார்க்கலாம்: நத்தைக்கும் சொந்தமானது சாலை

முதலில் ஒரு கேள்வி.

மந்திரக்கை கொண்டவர்களைப் பார்த்திருக்கிறீர்களா..? தெரியவில்லை என்றால் கடைசியில் பதில் சொல்கிறேன்.

பையனை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காகப் போகிறேன்...பலதரப்பினரும் கார், பைக், நடை என்று பள்ளிக்கு வந்து, திரும்புகிறார்கள்... இதில் காதுக்கும் தோளுக்கும் நடுவில் போனைக் கிடத்திப் பேசியவாறு செல்கிறவர்களும் அடக்கம். வாகனங்களின் அணிவகுப்பில் எழும் விதவிதமான ஹாரன் அலறல்களில் ஒளிந்திருக்கும் செய்தி -- “எனக்கு வழி விடுங்கள்...” நெகட்டிவாகச் சொன்னால் “எல்லோரும் எக்கேடும் கெட்டுத்தொலையுங்கள்...என்னைப் போகவிடுங்கள்...” என்பதுதான்.
இரண்டாவது கேள்வி --- சாலைகள் யாருக்கானவை...?


பலமும் பலவீனமும்

வீடுகளில் கடைக்குட்டிக்கு சலுகை காட்டப்படுவது இயல்பு. தப்பு கடைக்குட்டியின்மீது இருந்தால்கூட, எளிதாகச் சொல்லிவிடுவோம். “ நீதான் பெரியவன்...விட்டுக் கொடுத்துப் போகணும்...”; “ அவதான் கஷ்டப்படறா...நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்...” அவ்வளவு ஏன்...பலவீனமான குழந்தைக்குக் போஷாக்குகூட மற்றவர்களைவிட கொஞ்சம் அதிகம்தான்...இவை குடும்பத்தில் பெரியவர்களின் பொறுப்புணர்ச்சியை உணர்த்துவதாகவும் இருக்கின்றன.
இதே தியரியை சாலைகளில் பொருத்திப் பார்க்கலாம்....நடந்து செல்லும் நீங்கள் , நடந்து செல்லும் இன்னொருவர் மீது மோதினால்--இரண்டு பேருக்குமே அதிக சேதம் ஏற்பட வாய்ப்பில்லை.அவரவர் கிலோகிராம்களைப் பொறுத்து திட்டுக்களோடோ,ஸாரியோடோ விஷயம் முடியும். நடந்து செல்லும் ஒருவர் மீது உங்கள் சைக்கிள் மோதினால் உங்களால் அவருக்கு அதிக வலியைத் தரமுடியும்...

பாதசாரி, சைக்கிள்காரர் மீது பைக்கில் வந்து நீங்கள் மோதினால் உங்கள் முரட்டு வாகனம் தருகிற சேதாரம் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து போலீஸையும், ஆம்புலன்ஸையும் அழைக்காமல் விடாது. பைக்குடன் உள்ள நீங்கள் பலம் வாய்ந்தவர். நடந்து செல்கிறவரும், சைக்கிளில் செல்கிறவரும் பலவீனர்கள்.

இதேபோல் காரில் செல்பவரால் பாதசாரிகளின், பைக் ஓட்டிகளின் எலும்பையும், உயிரையும் வெளியே கொண்டு வரமுடியும். அப்படியானால்...பஸ்...லாரி....?

குடும்பத்தில் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டீர்கள் என்றால், காரிலோ, பைக்கிலோ செல்கிற---பலம் வாய்ந்த நீங்கள் --- மெதுவாகச்செல்கிற --- பலவீனர்களிடம்--- எவ்வளவு கருணை காட்ட வேண்டும்...?
கற்களையும், வில்-அம்பையும் வைத்திருப்பவர்களைவிட, அணுகுண்டுகளை வைத்திருப்பவர்கள் நிச்சயம் அதிகப்பொறுப்புடன் இருந்தாக வேண்டும், இல்லையா...?


எப்போதும் அடுத்தவர்கள்தானே?

ஆனால், அன்றாடம் நாம் பார்க்கும், கேள்விப்படும் சாலைக்காட்சி என்ன...?
சினிமா கதாநாயகனுக்கு வேண்டுமானால்.வில்லனைத் தடுக்க இவ்வளவு வேகம் தேவைப்படலாம். மற்றபடி, நம் மகளுக்கோ, தங்கைக்கோ, காதலிக்கோ வில்லன்களால் அவ்வளவு பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்...!

பைக்காரன் புழுதி கிளப்பிப் பறக்கிறான்..”அதான் , ஹாரன் அடிச்சுக்கிட்டே வரேன்ல...காது கேக்கல...?” அதாவது, அதிக சேதத்தை விளைவிப்பவர்கள் வேகமாகவும், பொறுப்பற்றும் வருவார்களாம், ஏனையோர் பதறியும், சிதறியும் அவர்களுக்கு வழி விட வேண்டுமாம்....

“கார் வர்றது கண்ணுக்குத் தெரியல...?” பிற வாகன ஓட்டிகள் மிரண்டு வழி விட வேண்டும். அவ்வளவு அவசரக்காரர்கள் போட்டி போட வேண்டியது லாரிகள், தானே தவிர, நடந்து செல்லும் சாமானியர்கள் அல்ல...

எங்கே சாமானியர்களிடம் நீங்கள் காட்ட வேண்டியப் பொறுப்புணர்ச்சி...?
இவற்றை உணராவிட்டால், விபத்துக்கு உள்ளாகி, மயிரிழையில் தப்பிப் பிழைத்தவர்கள் “ நான் நேராத்தான் போனேன்...அவன் ராங் ஸைட்லதான் வந்தான்...சிக்னல் காட்டாம வந்தான்..டக்குன்னு நான் பிரேக் புடிச்சேன்...நல்லவேளை...நான் கீழ விழுந்தப்ப வண்டி எதுவும் வரல...”; “கொஞ்சம் அசந்திருந்தா தூக்கியிருப்பான்...” ரகக்கதைகளை

சொல்லித் திரியவேண்டியதுதான்..நாட்டில் நடக்கிற விபத்துக்களில் 90 சதவீதம் பொறுப்பற்ற முறையில் ஓட்டுவதால்தான் நிகழ்கின்றன.
பொறுப்பில்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் யார்...? நம்மைப் பொறுத்தவரை எப்போதும் அடுத்தவர்கள்தானே...? நடந்த தவறில் நம் பங்கு எவ்வளவு என்று யோசித்தால்,அடுத்த முறை நீங்கள் பொறுப்புடன் வாகனத்தை ஓட்டுவீர்கள். இல்லையென்றால், காலம் உங்களுக்குக் கன்னத்தில் அறைந்து கற்றுத் தரும். எது வசதி...?

பொறுப்பை உணர்ந்து ஓட்டுபவர்கள் நிச்சயமாய் அடுத்தவர்களைக் குற்றம் சொல்ல மாட்டார்கள். வாகன விதிகள், சாலை விதிகளை அறிவீர்கள். இவற்றுடன் வாகனக்கருணை, சாலைப் பொறுப்புக்களையும் அறிந்து கொள்ளுங்கள். அறிந்தாலும் அவற்றைக் கடைப்பிடியுங்கள்...


நத்தைக்கும்தான்
ஒரு சின்ன அத்து மீறல் எவ்வளவு சிக்கலில் கொண்டு விடும் என்பதை இன்னும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருப்பவர்கள்தான் உணர்வார்கள். ஒரு நகத்தின் அருமைகூட, அது இல்லாதபோதுதான் தெரியும்...! எல்லாம் இருக்கிறபோது நாம் எதையும் மதிப்பதில்லை...!
முந்திச் செல்வது உங்கள் திறமை. நிச்சயமாய் அது அடுத்தவர்களை அச்சுறுத்தியோ, அவர்களை அலறலுடன் ஓடச் செய்தோ அல்ல...சாலை என்பது டயர்களின் வலிமை தெரியாத , மெல்லக் கடக்கும் நத்தைக்கும் சொந்தமானது...

பலம் வாய்ந்தவரின் கருணை பலரையும் காப்பாற்றும். அதுவே அவருக்குப் பெருமையும் சேர்க்கும்...

வாகனக் கருணை

“மந்திரக்கை மனிதர்கள் “யாரென்று கேள்வி கேட்டேனே?
எனக்கும் தெரியாது. ஆனால் அவரை அடையாளம் காட்ட முடியும்...அவர் ஆணாகவும், பெண்ணாகவும், எந்த வயதிலும் இருக்கலாம்...சாலையின் ஒரு ஓரமாக நின்றிருப்பார். அவருக்கு எதிர் ஓரம் நின்றிருக்கும் அமெரிக்க அதிபருடன் அவசரமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். சாலையைக் கடந்து சென்றேயாக வேண்டும். வாகனங்களோ இதைப் பற்றிக் கவலைப்படாமல் விரைந்து கொண்டிருக்கும். எனவே, அவர் வேறு வழியின்றி தன் கையை உயர்த்தி மக்களுக்கு ஆசி வழங்குவது போல உயர்த்தி சாலையைக் கடப்பார்....


அவரது கைக்கு ஒரு சூப்பர் பவர் இருந்திருக்க வேண்டும். கையை உயர்த்திய வுடன் போக்குவரத்து நதி துண்டாடப்பட்டு, பல ‘க்ரீச்சுகள்’ ஒலித்து, வாகனங் கள் நிறுத்தப்பட்டு “அறிவு கெட்டவனே...வீட்ல சொல்லீட்டு வந்துட்டியா..?” என்று சாலையைக் கலக்குவாரே அவர்தான் மந்திரக்கையாளர்.


பொறுப்பு எல்லோருக்கு மானது, இல்லையா...? வாருங்கள் வாகனக் கருணை கொள்வோம்

thanks - the hindu