Showing posts with label ஏன் தெரியுமா. Show all posts
Showing posts with label ஏன் தெரியுமா. Show all posts

Tuesday, August 04, 2015

அடிக்கடி களைப்பு ஏற்படுவது ஏன்? மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. கடுமையான உழைப்புக்குப் பிறகு உடலில் களைப்பு ஏற்படுவது இயற்கை. மாலையில் அல்லது இரவில் போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டால், காலையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் களைப்பு மறைந்து, உடல் புத்துணர்ச்சியைப் பெற்றுவிடும். மறுநாள் உழைப்புக்கு உடல் தயாராகிவிடும்.
ஆனால், சிலருக்கு எந்த நேரமும் களைப்பாக இருக்கலாம்; அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்படலாம்; உடல் தளர்ந்து, உள்ளம் உற்சாகம் இழந்துபோகலாம். அப்படியானால், அது சாதாரணக் களைப்பு அல்ல! உடலில் அல்லது உள்ளத்தில் உள்ள பிரச்சினையின் வெளிப்பாடு; அறிகுறி!
களைப்பைப் பற்றி சொல்லும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். ஒரு வேலையைச் செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறது; உற்சாகம் இல்லாமல் இருக்கிறது; உடல் சக்தியை இழந்த மாதிரி இருக்கிறது; உடலில் சக்தியே இல்லாததுபோல் இருக்கிறது; ஆர்வமில்லாமல் இருக்கிறது; அசதியாக இருக்கிறது; கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. இப்படியாகத்தான் களைப்பை வெளிப்படுத்துவார்கள்.
காரணம் என்ன?
களைப்புக்கு உடல் சார்ந்த காரணங்களும் உண்டு; உள்ளம் சார்ந்த காரணங்களும் உண்டு. ஒரு சிலருக்கு இந்த இரண்டு விதக் காரணங்களும் சேர்ந்தே இருக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில பேருக்கு, முதலில் உடல் சார்ந்த காரணங்களால் களைப்பு ஏற்படும். அதற்குத் தீர்வு கிடைக்கத் தாமதமாகும்போது உள்ளம் சார்ந்த காரணங்களும் சேர்ந்துகொள்ளும்.
களைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உடல் சார்ந்த களைப்பு என்றால், பகலில் தெரிகிற களைப்பைவிட மாலையில் களைப்பு சற்று அதிகமாகவே தெரியும். உள்ளம் சார்ந்த களைப்பு, நாள் முழுவதும் தொல்லை தரும். இது ஒரு பொதுவான மருத்துவக் கருத்து. என்றாலும், அவரவர் காரணத்தைப் பொறுத்துக் களைப்பின் தன்மை, அளவு, நேரம், தீவிரம் அமையும்.
முறையற்ற உணவுப் பழக்கம்
கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், துரித உணவு வகைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது களைப்பை வரவேற்கும். காரணம், இந்த உணவு வகைகளில் வைட்டமின்களும் தாதுச் சத்துகளும் குறைவு. இது ஊட்டச்சத்துக் குறைவுக்கு வழிவகுக்கும். மேலும், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால், உடல் மந்தமாகவே இருக்கும்; தூக்கக் கலக்கமாகவே இருக்கும்.
ரொட்டி, கேக் போன்ற பேக்கரி உணவு வகைகளில் ‘குளூட்டன்’ எனும் புரதம் உள்ளது. இது ஒவ்வாமையாக மாறினால் ‘சிலியா’ நோயை (Coeliac disease) ஏற்படுத்தும். அப்போது களைப்பு பிரதானத் தொல்லையாக இருக்கும். நேரம் தவறிச் சாப்பிடும் உணவுப் பழக்கம் நீடிக்கும்போது செரிமானம் குறையும். அப்போது உணவுச் சத்துகள் உடலில் சேராது. இதுவும் களைப்புக்குப் பாதை அமைக்கும்.
ஊட்டச்சத்துக் குறைவு
உடல் உற்சாகமாக உழைப்பதற்குக் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாச் சத்துகளும் தேவையான அளவில் தரும் சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டியது அவசியம். ஆனால் வறுமை, விரதம், உடல் எடையைக் குறைப்பதில் / ஒல்லியாவதில் விருப்பம் போன்ற காரணங்களுக்காகப் பலரும் உணவு சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால் உடலுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. இது களைப்புக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும். குறிப்பாக இரும்புச் சத்து, வைட்டமின் பி12, வைட்டமின்- டி, ஃபோலிக் அமிலம் போன்றவை குறைய ஆரம்பித்ததும் களைப்பு தலைகாட்டும்.
ரத்தசோகை
ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுகிற நோய்களில் மிக முக்கியமானது ரத்தசோகை. ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ‘ரத்தசோகை’ என்கிறோம். இன்றைய தினம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள் என்று வயது வேறுபாடின்றிப் பாதிக்கிற நோய் இது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு மட்டுமன்றி, முறையற்ற மாதவிலக்கு காரணமாக வும் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்த சோகையின் ஆரம்ப அறிகுறி களைப்பு.
தொற்றுநோய்கள்
எந்த ஒரு தொற்றுநோயும் களைப்பை ஏற்படுத்தும். தடுமம், ஃபுளூ காய்ச்சல் போன்ற சாதாரணத் தொற்றுகளில் தொடங்கி மலேரியா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை, காச நோய் என்று பல விபரீத நோய்கள்வரை களைப்பை ஏற்படுத்து வதில் முன்னிலை வகிக்கும். ஆனால், இவை எல்லாமே தற்காலிகமாகவே களைப்பை ஏற்படுத்தும். நோய் குண மானதும் களைப்பும் மறைந்துவிடும்.
தூக்கமின்மை
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலருக்கும் தூங்கும் நேரம் குறைந்துவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி சராசரியாக 5 மணி நேரமே தூங்குகிறார்கள் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் பகலில் களைப்பு ஏற்படுவது இயல்பு. குறட்டை விடுதல், தூக்கத் தடை (Obstructive Sleep Apnea), அதீதத் தூக்கம், தூக்கக் குறைவு நோய், வேலை நேர மாறுதல்கள், இரவில் நெஞ்செரிச்சல், புராஸ்டேட் வீக்கம் போன்ற தொல்லைகளைக் கொண்டவர்களுக்கு, இதுபோலத் தூக்கம் குறைந்து களைப்பு உண்டாகிற வாய்ப்பு அதிகம்.
மருந்துகளின் பக்கவிளைவு
தடுமத்துக்குத் தரப்படும் மருந்துகள், அரிப்பு மருந்துகள், தூக்க மருந்துகள், மன அழுத்த மாத்திரைகள், மன அமைதியூட்டிகள், போதை மாத்திரைகள், ரத்த அழுத்த மாத்திரைகள், ஸ்டீராய்டுகள் போன்ற பலதரப்பட்ட மாத்திரை மருந்துகளின் பக்கவிளைவாகவும் களைப்பு ஏற்படும்.
நீரிழந்த உடல்
ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுகளின் அளவு எப்போதும் சரியாக இருக்க வேண்டும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, வெயில், அதிக வியர்வை, வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி, நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற பல காரணங்களால் உடலில் நீரிழப்பு ஏற்படும். அப்போது களைப்புதான் மற்ற அறிகுறிகளைவிட முன்னிலை வகிக்கும்.
உளவியல் காரணங்கள்
தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், கோபம், பொறுமையின்மை, பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் களைப்பு ஏற்படுகிறது.
மற்ற காரணங்கள்
தைராய்டு சுரப்புக் குறைவு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், நுரையீரல் நோய், புற்று நோய், மூட்டழற்சி நோய், நார்த்திசு அழற்சி வலி (Fibromyalgia) போன்ற பல நோய்களிலும் களைப்பு தலைதூக்குவதுண்டு. புற்று நோய்க்கு மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை தரப்படும்போது களைப்பு ஏற்படுவதுண்டு. முதுமை, கர்ப்பக் காலம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகைபிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் களைப்பை வரவேற்பவையே.
நாட்பட்ட களைப்பு
ஒருவருக்குக் களைப்பு ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதை ‘நாட்பட்ட களைப்பு’ (Chronic fatigue syndrome). என்கிறோம். இவர்களுக்குக் களைப்பு கடுமையாக இருக்கும். தசைவலி, மூட்டுவலி, தலைவலி, நிணநீர்ச் சுரப்பிகளில் வலி, தொண்டை வலி, கவனக்குறைவு போன்ற பல அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இதற்கான காரணம் மருத்துவர்களுக்கே இன்னும் தெளிவாகப் புரியவில்லை. எனவே, அடிப்படை நோய்க்குச் சிகிச்சை அளிக்கமுடியவில்லை; நோயாளி கூறும் அறிகுறிகளைப் போக்குவதற்கு மட்டும் சிகிச்சை அளிக்கிறார்கள்.
பரிசோதனை என்ன?
களைப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதால், இதற்கென்று தனிப்பட்ட பரிசோதனை எதுவும் இல்லை. களைப்புடன் சேர்ந்து காணப்படும் மற்ற அறிகுறிகளை வைத்து, அடிப்படை நோய் எது எனத் தீர்மானிக்கப்படும். அதற்கேற்பப் பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படும். பொதுவாக, ரத்தஅணுப் பரிசோதனைகள், ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்க்கான பரிசோதனைகள், ரத்த அயனிகள் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, எக்கோ உள்ளிட்ட ‘முழு உடல் பரிசோதனைகள்’ மூலம் களைப்புக்குக் காரணம் தெரிந்துகொள்வது வழக்கம்.
மேலும், இவர்களுக்கு உளவியல் சார்ந்த பரிசோதனைகளும் உளவிய லாளரின் ஆலோசனைகளும் தேவைப் படும். என்றாலும், நடைமுறையில் மூன்றில் ஒருவருக்குக் களைப்புக்கான காரணம் தெரிவதில்லை.
தடுப்பது எப்படி?
களைப்புக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறுவதுதான் சரி. அப்போதுதான் களைப்பு மறுபடியும் தொல்லை தராது.
அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். முடியாதவர்கள் வார இறுதி நாட்களிலாவது ஓய்வு எடுக்க வேண்டும்.
உடல் பருமனாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.
மேற்கத்திய உணவு வகைகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள்.
தினமும் காலையில் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். முக்கிய வேலைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துச் செய்வதும், நன்கு திட்டமிட்டு, நேர மேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்யவேண்டியதும் முக்கியம். காரணம், தினமும் அவசர அவசரமாகவும் பரபரப்பாகவும் வேலை செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டால், உடல் விரைவிலேயே களைப்பு அடைந்துவிடும்.
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் பணிபுரிபவர் களுக்கு நீரிழப்பு ஏற்படுவது கோடைக் காலத்தில் வெளியில் தெரியாது. ஆனால், களைப்பு தெரியும். அவர்களும் தேவைக்கு ஏற்பத் தண்ணீர் அருந்தினால்தான் களைப்பு நீங்கும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்றால், இயற்கைப் பழச்சாறுகளை அருந்துங்கள். செயற்கைப் பழச்சாறுகள் வேண்டாம்.
காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் களைப்பு ஏற்படுகிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.
புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
மது அருந்த வேண்டாம்.
மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். மனக் கவலை இருக்கும்போது உங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆசைகளுக்கு ஓர் எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். பிறருடன் வாதிடுவது, சண்டை போடுவது போன்றவற்றைத் தவிருங்கள். பாதுகாப் பான முறையில் உங்கள் உரிமைகளைப் பெறுவதற்குப் பழகிக்கொள்ளுங்கள். இம்மாதிரி பழக்கங்கள் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்; களைப்பையும் தடுக்கலாம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Monday, July 20, 2015

கண்களைப்பாதுகாப்பது எப்படி? - மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
பார்வை இழப்புக்குக் கண் புரை நோய், விழித்திரை நோய் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘கிளாக்கோமா’ (Glaucoma) என்று அழைக்கப்படும் கண் நீர் அழுத்த நோய் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கண் புரையைத் தெரிந்துவைத்திருக்கிற அளவுக்குக் கண் நீர்அழுத்த நோயைப் பற்றி, பலருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை. இந்த நோயின் ஆரம்பத்தில் கண்ணில் வலி இருக்காது என்பதால், பெரும்பாலானோர் இதை ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பார்வை பறிபோனபின்தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.
கண் நீர்அழுத்த நோய் என்பது எது?
கண்ணுக்குள் லென்ஸின் முன்புறத்தில், கருவிழியும் (Iris) கார்னியாவும் (Cornea) இணைகிற இடத்தில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் சுரக்கிறது. இதற்கு ‘முன்கண் திரவம்' (Aqueous Humor) என்று பெயர். கண்ணின் வெளிப்பக்கத்தில் வட்ட வடிவில் இருக்கிற கார்னியா மற்றும் லென்ஸ் உள்ளிட்ட கண்ணின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவையான உணவுச் சத்துகளை விநியோகிக்கவும், கண்ணுக்குள் உண்டாகின்ற கழிவுகளை அகற்றவும் இது தேவைப்படுகிறது.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். அதாவது, முன்கண் திரவமும் கண்ணீரும் ஒன்றல்ல. கண்ணின் வெளிப்பக்கமாகக் கண்ணீர் சுரக்கிறது என்றால், இது கண்ணின் உட்பக்கமாகச் சுரக்கிறது. இது விழிவெண்படலமும் (Conjunctiva) கார்னியாவும் இணையும் இடத்தில் உள்ள சல்லடை போன்ற வடிகால்களின் மூலம் வெளியேறுகிறது. இந்தப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, இதன் வடிதலில் தடை உண்டானாலோ, அதிகத் திரவம் சுரந்தாலோ, திரவத்தின் அளவு அதிகமாகி, கண் நீர் அழுத்த நோயை ஏற்படுத்துகிறது.
ரத்தக் குழாய்களில் பயணிக்கும் ரத்தத்துக்கு ஒருவித அழுத்தம் உள்ளதைப் போல, கண்ணில் பயணிக்கும் இந்தத் திரவத்துக்கும் அழுத்தம் இருக்கிறது. அதுதான் கண்ணின் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. இந்தத் திரவம் சுரக்கிற அளவும் வெளியேறுகிற அளவும் சமமாக இருந்தால், கண் நீர் அழுத்தம் சரியான அளவில் இருக்கும். நமக்குச் சரியான கண் நீர்அழுத்தம் 10 முதல் 20 மி.மீ. பாதரச அளவாகும். விழிக்கோளத்தின் கனஅளவுகள் மாறாமல் இருப்பதற்கு, இந்த அழுத்தம் தேவைப்படுகிறது.
அதே வேளையில் இந்த அழுத்தம் அதிகமானால், அது கண் முழுவதும் பரவும்; குறிப்பாக, விழித்திரைக்குப் பின்புறம் இருக்கிற பார்வை நரம்பைப் பாதிக்கும். பார்வை பற்றிய தகவல் மூளைக்குச் செல்லாது; அதனால் பார்வை பறிபோகும். இதுதான் இந்த நோயின் அபாயகரமான தாக்குதல்.
வகைகள்
நோயின் தன்மைகளை வைத்தும் அது உண்டாகிற காரணத்தை வைத்தும் இதை விரிகோணக் கண் நீர்அழுத்தம் (Open angle glaucoma), குறுங்கோணக் கண் நீர்அழுத்தம் (Closed angle glaucoma), பிறவி கண் நீர்அழுத்தம் (Congenital glaucoma) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அறிகுறிகள்
இந்த மூன்றில் முதல் வகைதான் முக்கியமானது. இந்த நோயின் தொடக்கத்தில் எந்தவொரு அறிகுறியும் வெளியில் தெரியாது. திடீரெனக் கண்பார்வை குறைவது, இதன் முதல் அறிகுறி. இந்த நிலைமையில் டாக்டரிடம் வரும்போது, நோயாளிக்குப் பார்வை நரம்பில் 30 முதல் 50 சதவீதம்வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும். இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய முடியாது.
இதைத் தொடர்ந்து, இன்னும் சில அறிகுறிகள் ஏற்படும். எரியும் மின்விளக்கைப் பார்க்கும்போது, அதைச் சுற்றி வட்டவட்டமாக வண்ண வளையங்கள் அல்லது புள்ளிகள் தெரியும். இவர்கள் அடிக்கடிக் கண்ணாடியின் 'பவரை' மாற்றுவார்கள். தியேட்டர்களில் சினிமா பார்த்துவிட்டு இருட்டிலிருந்து வெளியே வரும்போது கண்களைச் சுற்றிக் கனமாகத் தெரியும்.
இரவில் பார்வை மங்கலாக இருக்கும். இருட்டுக்குக் கண்கள் பழகத் தாமதமாகும். பகலில் ஒரு பொருளைப் பார்த்தால், அந்தப் பொருளின் நடுப்பகுதி நன்றாகத் தெரியும். ஆனால், பக்கப்பார்வை இருக்காது. நடுப்பார்வை நன்றாகத் தெரிவதால், தங்களுக்கு உள்ள நோயை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள இவர்கள் தவறிவிடுகின்றனர். ஆனால், நாளாக ஆக நடுப்பகுதிப் பார்வையும் குறைந்துவிடும். கண்ணைச் சுற்றி ஒரு மந்தமான வலி, எப்போதும் இருக்கும்.
இரண்டாம் வகை கண் நீர்அழுத்த நோய் உள்ளவர்களுக்குத் திடீரென்று கடுமையான கண்வலியும் தலைவலியும் ஒரே நேரத்தில் உண்டாகும். வாந்தி வரும். கண்கள் சிவந்துபோகும். கண்களில் நீர் வழியும். பார்வை மங்கும். கண்கள் கூசும். விளக்கைச் சுற்றி வளையங்கள் தெரியும்.
மூன்றாவது வகை பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுவது. இதுதான் கொடூரமானது. குழந்தையின் கண் மாட்டுக்கண் போல, பெரிதாக இருக்கும். கண்களில் நீர் வடிந்துகொண்டே இருக்கும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கண்கள் கூசும். பார்வை குறைந்திருக்கும்.
யாருக்கு வரும்?
இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். பிறவியிலேயேகூட வரலாம். பொதுவாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பர்களுக்கும், அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவோருக்கும் இது சீக்கிரத்திலேயே வந்துவிடுகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் இந்த நோய் பரம்பரை ரீதியாக வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது வரலாம். அதிக மைனஸ் பவர் கண்ணாடி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, இது வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கண்ணில் அடிபட்டு, முன் கண் திரவம் போகும் பாதையில் அடைப்பு ஏற்பட்டாலும் இது வரலாம்.
என்ன பரிசோதனை?
‘விழி அழுத்தமானி' (Tonometer) எனும் கருவி மூலம் கண்ணின் அழுத்தத்தைத் தெரிந்துகொள்ளலாம். ‘விழி அகநோக்கி' (Ophthalmoscope) பயன்படுத்திப் பார்வை நரம்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்த்துவிடலாம். ‘விழிக்கோணமானி' (Gonioscope) உதவியுடன் முன்கண் திரவம் வெளியேறுவதில் எங்குத் தடை ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பார்வை பரப்பளவை அளக்க உதவும் கணினி இணைக்கப்பட்ட ‘பெரிமீட்டர்’ (Perimeter) கருவிப் பரிசோதனையால் பக்கப் பார்வை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை அளந்துகொள்ள முடியும்.
என்ன சிகிச்சை?
இந்த நோய்க்கு மருந்து சிகிச்சை, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை என மூன்றுவித சிகிச்சைகள் இருக்கின்றன. நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்து சிகிச்சை பலன் தரும். ஆனால், ஆயுள் முழுவதும் இவர்கள் கண் சொட்டு மருந்துகளைப் போட வேண்டியிருக்கும். மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். டாக்டர் யோசனைப்படி தொடர்ந்து முறையான கால இடைவெளிகளில் கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிலருக்கு மருந்து சிகிச்சை யோடு லேசர் சிகிச்சையும் தரப்படும். கருவிழியில் மிகச் சிறிய துளை போட்டு முன்கண் திரவத்தை வெளியேற்றிக் கண்ணின் அழுத்தத்தைக் குறைப்பது லேசர் சிகிச்சையின் (Laser iridotomy) முக்கிய நோக்கம். இந்த நோய்க்குத் தற்போதுள்ள நவீன சிகிச்சை இதுதான்.
கண் நீர்அழுத்த நோயை இந்த இரண்டு சிகிச்சைகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கண்ணில் திரவ அடைப்பைத் திறக்க ‘டிரபிகுலெக்டமி’ (Trabeculectomy) எனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்தச் சிகிச்சையின்போது முன்கண் திரவம் வெளியேறுகிற பாதை மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்மூலம் கண் நீர்அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையால் இனிமேல் ஏற்படக்கூடிய பார்வை இழப்பை மட்டுமே தடுக்க முடியும்; அறுவை சிகிச்சைக்கு முன்பு ஏற்கெனவே இழந்துவிட்ட பார்வையை மீட்டுத் தர முடியாது. அந்தப் பார்வை இழப்பு நிரந்தரமானது. ஆகையால், கண் நீர்அழுத்த நோயைப் பொறுத்தவரை நோய்த்தடுப்பு ஒன்றே பார்வை இழப்பைத் தவிர்க்க ஒரே வழி.
தடுக்க என்ன வழி?
கண் நீர்அழுத்த நோய்க்கு ‘ஓசையின்றிப் பார்வையைத் திருடும் நோய்’என்று ஒரு பெயரும் இருக்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட வேண்டும். பொதுவாகவே 30 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொண்டால் இந்த நோய் இருப்பது தெரிந்துவிடும்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி யாருக்காவது கண் நீர்அழுத்த நோய் இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் 30 வயதுக்கு மேல் வருடத்துக்கு இரண்டு முறை கண் நீர்அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து