Showing posts with label உளவியல் பிரச்சினை. Show all posts
Showing posts with label உளவியல் பிரச்சினை. Show all posts

Monday, November 02, 2015

பதின் பருவமா, புதிர் பருவமா? 7 - கலக்கம் தரும் திடீர் கனவு-டாக்டர் ஆ. காட்சன்

வளர் இளம்பருவத்தில் நுழைந்த புதிதில், பலருக்குச் செக்ஸ் சார்ந்த கனவுகள் வருவது சகஜம்தான். சில நேரம் தெரிந்த நபர்கள்கூட அந்தக் கனவுக் காட்சிகளில் வரலாம்.
ஒருமுறை 15 வயது மாணவர் ஒருவர், தனக்குப் பாலியல் ரீதியான கனவுகள் அடிக்கடி வருவதாகவும், அது அவருடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் பாவம் என்று கருதுவதாகவும் கூறினார். 'தான் மோசமானவனாக மாறிவிட்டேன்' என்ற குற்றவுணர்ச்சியே இதுபோன்ற பதற்றங்களுக்குக் காரணம். சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகள் பற்றிய ஆராய்ச்சியின்படி, அன்றாடம் நிகழும் பல சம்பவங்களால் ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே கனவு. இது ஒரு பாதிப்பு இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈர இரவுகள்
'சொப்பன ஸ்கலிதம்' இளம் பருவத்தினருக்குச் சிம்மசொப்பனம். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையே மருத்துவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால், இந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியே தொலைக்காட்சி, பத்திரிக்கை விளம்பரங்கள் மூலமாகப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனதைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிக் காசு பறித்து வருகின்றன பல கும்பல்கள்.
வளர் இளம்பருவத்தினர் எல்லோருக்கும் இந்த அனுபவம் சில முறையாவது நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அவ்வப்போது அதிகாலை நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் விந்து தானாகவே வெளிப்படும் அல்லது செக்ஸ் கனவுகளின் விளைவாக வெளிப்படும். சிலருக்கு அதனுடன் சேர்ந்து உச்சகட்டத்தை அடைந்த உணர்வும் ஏற்படலாம். சில வேளைகளில் உடை நனைந்த உணர்வால் விழிக்கலாம். இந்த அனுபவம் முற்றிலும் சாதாரணமான ஒன்று. இதைக் குறித்துப் பயப்படவோ, கலக்கமடையவோ தேவையில்லை.
கிட்டத்தட்ட 13 வயது ஆரம்பிக்கும்போது தேவைப்படவில்லை என்றாலும் ஆண் குழந்தைகளின் விதைப்பைகள் விந்து உற்பத்தியைச் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. உதாரணமாக ஒரு மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை எடுத்துக்கொள்வோம். கீழே குழாய் திறக்கப்படவே இல்லை. ஆனால், தொட்டியில் தண்ணீர் மட்டும் நிரம்பிக்கொண்டேயிருந்தால், அந்தத் தண்ணீர் வெளியே நிரம்பி வழிவதைத் தவிர வேறு வழியே இல்லை. அதுபோலத்தான் பதின் பருவத்தில் அதிகமாக உற்பத்தியாகும் விந்து வெளியேறுவதற்கு, கனவு ஒரு வடிகாலாகப் பயன்படுகிறது.
சிறுநீரில் விந்து
‘ஒரு சொட்டு விந்து, 52 சொட்டு ரத்தத்துக்குச் சமம்’ என்ற முறையில்கூட விளம்பரங்கள் வருகின்றன. சில விடலைப்பருவத்தினர் சிறுநீர் கழிக்கும்போது அதில் விந்து வெளியேறுவதாகவும், அதனால் தங்கள் ‘சக்தி’ முழுக்க வீணாகி உடல் சோர்வு, நடுக்கம், தேக மெலிவு ஏற்படுவதாகவும் நம்புவார்கள். முற்றிய நிலையில் தங்களுடைய ஆணுறுப்பு சுருங்கிக் கொண்டே போய், வயிற்றின் அடியில் சென்றுவிட்டதாகவும் பிரமையில் புலம்புவார்கள். சில வேளைகளில் மனநோய்க்கும் ஆளாவார்கள்.
சிறுநீர் என்பது உடலின் கழிவுநீர். அதில் பல செல்கள், திசுக்கள், சிலநேரம் கிருமிகள் கலந்து வரலாம். இதனால் அதன் நிறம் மாறி விந்து வெளியேறுவதுபோலத் தோற்றமளிக்கலாம். அப்படியே வெளியேறினாலும்கூட, அது ஒன்றும் ரத்தத்துக்குரிய மாற்று அல்ல.
சுயஇன்பம்
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இது பற்றிய சந்தேகமும் பயமும் இளம்பருவத்தினரை எப்போதும் தொற்றிக்கொண்டே இருக்கும் வேதாளம் போன்றது. சுயஇன்பம், சுயமைதுனம், கைப்பழக்கம் எனப் பல பெயர்களைக் கொண்ட இந்தப் பழக்கத்துக்கு, ஆங்கிலத்தில் மாஸ்ட்ருபேஷன் (Masturbation) என்று பெயர்.
இந்தப் பழக்கம் மூன்று வயது சிறுவர்களிடம்கூட, வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் காணப்படும் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று வயதில்தான் ஒரு குழந்தைக்குத் தான் ஆணா, பெண்ணா என்ற வேறுபாடு புரிய ஆரம்பிக்கும். இன்பம் பெறுவது நோக்கமாக இல்லாவிட்டாலும் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பாலுறுப்பைத் தூண்டுவது இயற்கையான ஒன்று. இது காலப்போக்கில் மாறிவிடும்.
முதல் அறிமுகம்
இந்தப் பழக்கம் பெரும்பாலும் நண்பர்களின் மூலமாக அறிமுகமாகிறது. ஆய்வு முடிவுகளின்படி 13-14 வயதுக்குள் இரு பாலினத்தவருமே இதைப் பற்றிய தேடல் ஆரம்பித்து விடுவதுடன், முதல் அனுபவத்தையும் பெற்றுவிடுகிறார்கள்.
வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆண்களும், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்களும் சுயஇன்பம் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர், அதைத் தொடர்ச்சியாகவும் செய்கிறார்கள். விடலைப்பையன்கள் இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு, பெண் குழந்தைகள் சொல்வதில்லை.
கொல்லும் குற்றஉணர்வு
சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும், தனிப்பட்ட நபர்களின் கருத்துகள் சுயஇன்பத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன. ஆனால் உடலியக்கவியல் ரீதியாகவும், மனநல ரீதியாகவும் இந்தப் பழக்கம் விடலைப்பருவத்தின் கடந்து செல்லும் நிலைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு பார்வைகளுக்கு நடுவே வளர் இளம்பருவத்தினர் சிக்கிக்கொள்வதால்தான், அவர்கள் எளிதில் குற்றஉணர்வுக்கு ஆளாகின்றனர். நண்பர்கள் வட்டத்திலேயே இதைப் பற்றிய மாறுபட்ட கருத்துகள் நிலவுவது, அவர்களுக்குப் பயத்தை உருவாக்குகிறது.
செய்தே ஆகவேண்டும் என்ற உந்துதல், செய்தால் அதைப் பற்றிய குற்றஉணர்வு என்ற இந்த இரண்டு மனநிலைகளுக்கு இடையில் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கும் வளர் இளம்பருவத்தினரை நேரம் பார்த்துத் தாக்க இன்னொரு கூட்டமும் காத்திருக்கிறது.
தவறான போதனைகள்
கொசு கடிப்பதால்தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் கூற்றை நம்பும் நம்மவர்கள், சுயஇன்பப் பழக்கத்தைப் பொறுத்து மட்டும் அறிவியலுக்குப் புறம்பான விளக்கங்களையும் வைத்தியங்களையும் நாடிச்செல்லும் நிலை உள்ளது.
தொலைக்காட்சி, வார இதழ்களில் வெளியாகும் விளம்பரங்களும் இவர்களை வேட்டையாடிவிடுகின்றன. சுயஇன்பத்தால் உறுப்பு சுருங்கிப்போவதாகவும், நரம்புத்தளர்ச்சி ஏற்படுவதாகவும், விந்து நீர்த்துப் பின்பு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் விளம்பரங்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளை நம்பிப் பணத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் தொலைத்த இளம்பருவத்தினர் ஏராளம்.
குற்றஉணர்வுதான் எல்லா மனநலப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று அறிவியல் உலகம் கூவிக்கொண்டிருக்கிறது. ஆனால், 'அப்படியாகும்', 'இப்படியாகும்' என்ற பயத்தையும், குற்றஉணர்வையும் ஏற்படுத்திப் பிரச்சினைகளைப் பெரிதாக்கும் ஆதாரமற்ற வைத்தியங்களைத் தவிர்ப்பதுதான் விடலைப்பருவத்தினருக்கு நல்லது.
எது பாதிப்பு?
‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி சுயஇன்பத்துக்கும் பொருந்தும். ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுயஇன்பத்துக்கு தீனிபோடும் பழக்கம். சுயஇன்பம் செய்வதற்காக முக்கிய வேலைகளைப் புறக்கணித்தல், மற்ற விஷயங்களில் கவனம் குவிக்க முடியாமை போன்றவை, இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக மாற்றும் அறிகுறிகள்.
சுயஇன்பம் நல்லதா, கெட்டதா என ஆராய்ச்சி செய்வதைவிட, அதைக் கைவிட்டு வெளியேற முயற்சிப்பதே நல்லது. அது அளவுக்கு மீறி செல்லும்போது சுயகட்டுப்பாட்டை பாதிப்பதுடன், சுயஇன்பத்துக்கு அடிமையானால் திருமணமான பின்பும்கூட வாழ்க்கைத்துணையுடனான பாலியல் உறவுகளைவிட சுய இன்பத்திலேயே அதிக நாட்டம் செல்லலாம். அப்போது குடும்ப உறவில் பல பாதிப்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் தனிமையைத் தவிர்ப்பது, சந்தோஷம் தரும் மாற்று வழிகளில் ஈடுபாட்டை அதிகரித்துக்கொள்வது, நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசையில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்வது, விளையாட நேரம் செலவழிப்பது, ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது போன்ற வழிமுறைகள் சுயஇன்பப் பழக்கத்திலிருந்து வெளிவர உதவும்.
(அடுத்த முறை: காதல் என்பது எதுவரை?)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்தொடர்புக்கு: [email protected]

தஹிந்து
சுய இன்பம் அனுபவிப்பது என்பது கட்டுபாடின்றி போகும்போது நிச்சயம் ஆக உடல் சக்தி குறையும், பாதிப்பு அடையும், 50 சொட்டு ரத்தம் ஒரு சொட்டு விந்து என்பது சித்தர்கள் கூறியது, இது பொய்யாகாது. மேலும் ஆண், பெண் இன உடல் உறவு முடிந்ததும் ஏன் அதிக இன்பத்திற்கு பதிலாக உடல் முழுவதும் வலி, களைப்பு ஏற்படுகிறது, அதிக உடல் உறவில் ஏன் மூட்டுகள் வலி ஏற்படுகிறது, இது உடல் சக்தி குறைவதால் தானே, எனவே எதுவும் அளவு முறை மீறும்போது விபரீத விளைவுகள் ஏற்படும்.

Monday, October 19, 2015

பதின் பருவம் புதிர் பருவமா? 5 - கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சா?

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
‘அவன் கூட டூ! உன்கூட பழம் விட்டுக்கட்டுமா?' என்று கேட்பது குழந்தைப் பருவ நட்பு. ‘மச்சி இன்னிக்கு ஒரு நாளாவது ‘கிளாஸை கட்' அடிக்கிறியா... சும்மா அடிச்சுப் பாரு மச்சி!' என்பது விடலைப் பருவ நட்பு.
நடத்தையை வைத்தே, மேற்கண்ட இரண்டு நட்புக்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நட்புகள் சந்தர்ப்பச் சூழ்நிலையால் அமைவது. ஆனால், வளர் இளம்பருவத்தில் அமையும் நட்பு, ஒருவர் தேடித் தேர்வு செய்து அமைத்துக் கொள்வது. இதை சான்ஸ் எதிர் சாய்ஸ் (chance vs choice) என்று கூறுவதுண்டு.
வளர் இளம்பருவத்தில் தங்களுக்கு ஒத்த வயதுடைய, கருத்துடைய, விருப்பங்களுடைய நபர்களையே தேர்வு செய்து குழுவாகச் சேர்ந்துகொள்வார்கள். அதிலும் ஒரு சிலரைத் தங்கள் நெருக்கமான நட்புக்கென்று தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மையான நட்பு உருவாவதும், இந்த வளர் இளம்பருவத்தில்தான்.
நல்ல மாற்றமா?
இந்த நேரத்தில்தான் பெற்றோருக்குப் பதற்றமும் பயமும் ஏற்படும். தங்களிடம் நெருக்கமாக இருந்த மகன் / மகள் விலகிச்செல்வது போலத் தெரிவதும், புதிய நட்புகளிடம் நெருக்கம் பாராட்டுவதும் பெற்றோருக்குப் புதிய அனுபவமாகத் தெரியும். அது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகள் வழிதவறிச் சென்றுவிடுவார்களோ என்ற கலக்கத்துக்கும் உள்ளாவது வாடிக்கைதான்.
ஒருவகையில் பெற்றோர் பயப்படும் வகையில் சில சம்பவங்கள் நடந்தாலும், நட்பு வட்டம் பெரிதாவது என்பது, வளர் இளம்பருவத்தின் ஒரு படிநிலை என்பது மட்டுமல்லாமல், அது மிகவும் இன்றியமையாத ஒரு மாற்றமும்கூட.
ஏனென்றால், நட்பு வட்டத்தின் மூலம் அவர்கள் இந்த உலகத்தைப் புத்தாய்வு செய்வதுடன், சமூக உறவுகளை உருவாக்கவும், மேம்படுத்தவும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெற்றோர் அஞ்சுவதுபோல உண்மையில் அவர்கள் விலகிச் செல்வது இல்லை. இந்த உலகத்துக்குத் தங்கள் வரவை அறி விக்க முயற்சிக்கும், ஒரு தேடல்தான் இது.
குணநலன்களில் நட்பு
வளர் இளம்பருவத்தினரின் குணநலன்களை வடிவமைப்பதில் நட்பு வட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நபருக்கான நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் தான் ஒருவர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உணரும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும், சுயகவுரவம் பெருகும், வெளியுலக ஈடுபாடு மற்றும் தனிமனித உறவுகள் கூடும்.
ஆனால், குறிப்பிட்ட ஒருவருடைய நட்பு வட்டத்தில் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததாகவோ, புறக்கணிக்கப்பட்டதாகவோ வளர் இளம்பருவத்தினர் நினைக்கும் நிலை ஏற்பட்டால், பல எதிர்விளைவுகள் ஏற்படும். இதனால் அவர்களுடைய சுயமதிப்பீடு பாதிக்கப்படும். தாங்கள் சமூகத்துக்குத் தேவைப்படாதவர்கள், திறன் குறைந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்குவதால் மற்றவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், உள்முக சிந்தனை கொண்டவர்களாகவும் (Introvert) மாறி உலகத்திலிருந்து தங்களை ஒதுக்கியும் கொள்வார்கள்.
எதிர்மறை பிரச்சினைகள்
நண்பர்கள் வட்டத்திலிருந்து வரும் ‘பீர் பிரஷர்' என்று சொல்லப்படும் நிர்பந்தங்களும் அழுத்தங்களும் சில முக்கியப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவும் அமைந்துவிடும். பெரும்பாலும் முதன்முதலில் புகை, மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அறிமுகமாவது நண்பர்களின் கட்டாயத்தால்தான். ஆபாசப் படங்கள், சமூக விரோதச் செயல்கள், தன்பாலின உறவு போன்றவை நட்பு வட்டத்தின் மூலமாகவே அறிமுகமாகின்றன.
ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ஒரு விஷயத்தைப் புறக்கணித்தால் நட்பு வட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோமோ என்ற பயத்தாலும், கேலிக்குள்ளாகி விடுவோமோ என்ற எண்ணத்தாலும் சிலர் வேறு வழி தெரியாமல் ஒப்புக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நண்பர்களின் உற்சாகத் தூண்டுதல் கண்மூடித்தனமாக பைக்கை ஓட்ட வைக்கலாம், தினமும் பின்தொடர்ந்து வரும் முன்பின் தெரியாத ஆணைக் காதலிக்கக்கூட வைக்கலாம்.
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில்தான் பெற்றோர்-பிள்ளைகள் உறவின் தரம் பரிசோதனைக்குள்ளாகிறது. நல்ல ஆரோக்கியமான அடித்தளம் உள்ள உறவின் பின்னணியிலிருந்து வரும் வளர் இளம்பருவத்தினர் நட்புகளால் ஏற்படும் இந்தச் சவால்களை, எளிதில் எதிர்கொண்டுவிடுவார்கள் அல்லது சிறிது குழப்பம் ஏற்பட்டாலும் பின்னர் சுதாரித்துக்கொள்வார்கள்.
நண்பர்கள் அப்போது முக்கியமாகத் தெரிந்தாலும் பெற்றோர் கற்றுக்கொடுத்த மதிப்பு, ஒழுக்கம், மரபார்ந்த நம்பிக்கைகள் ஆகியவற்றை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதேநேரம் சிறுவயதில் குடும்ப வன்முறையைத் தினமும் பார்த்து வளர்வது, சிறுவயதில் உடல் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகள், பெற்றோர் இழப்பு மற்றும் பிரிவு போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர் இளம்பருவத்தின்போது நட்பு வட்டத்தின் சிக்கல்களில் எளிதில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.
தவறு என்று தெரிந்த எந்த ஒரு விஷயத்துக்கும் சின்ன வயதில் இருந்தே தைரியமாக ‘நோ’ சொல்லக் குழந்தைகளைப் பழக்குவது, பல பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும்.
(அடுத்த வாரம்: அதைப் பற்றி பேசலாமா, கூடாதா? )
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

தஹிந்து