Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Tuesday, November 24, 2015

தடம் மாறலாம்? தடம் புரளலாமா?

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து

‘என்னை அவன் அடிச்சிட்டான்மா...' என்று பெற்றோர்களிடம் புகார் பத்திரம் வாசித்த காலம் எல்லாம் மலையேறி, ‘மச்சி, அவன் என்னை அடிச்சிட்டான்டா. பதிலுக்கு நாம அவனுக்குச் செமத்தியா திருப்பிக் குடுக்கணும்டா' என்று நண்பர்களைப் பக்கபலமாகச் சேர்த்துக்கொண்டு அடிதடியில் இறங்கும் காலம் வளர்இளம் பருவம்.

சமீபகாலமாகப் பள்ளிகளில் வன்முறைச் சம்பவங்கள் பெருகிவருவது வளர்இளம் பருவத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய சவால்தான். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி ஏற்படும் கைகலப்புகளில் தொடங்கிக் கொலைச் சம்பவங்கள்வரை அடிக்கடி வன்முறை அரங்கேறி வருகிறது. சில நேரம் ஆசிரியர்களையே தாக்கும் அளவுக்குப் பிரச்சினை உருவாகிறது. மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கும்போதும் விபரீதங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

குற்ற உணர்ச்சியற்ற நிலை

எல்லா வளர்இளம் பருவத்தினரும், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கிடையாது. அதேநேரம், இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் அவ்வப்போது சில முன்னெச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும். இவர்களுடைய குடும்பச் சூழல் பெரும்பாலும் திருப்திகரமாக இருக்காது.

சிறிய பிரச்சினைகளுக்குக்கூட வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களைப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பது, பழிவாங்கும் செயல்கள், தன் கையைக் கிழித்துக்கொள்வது அல்லது அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற தன்மைகள் காணப்பட்டால் நிச்சயம் அவர்கள் கவனத்துக்கு உரியவர்கள்.

சின்ன வயதில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுதான், தற்போது நடக்கும் பல்வேறு ஆக்ரோஷமான சம்பவங்களுக்கு முக்கியக் காரணம். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது, தான் செய்யும் தவறான செயல்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்ற குற்றவுணர்ச்சி அற்ற மனநிலைதான். இது இளைஞர்களைக் கூலிப்படையினராக மாற்றும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது.

விதிமீறல்கள்

வளர்இளம் பருவத்தினர் அவ்வப்போது சில விதிமீறல்களில் ஈடுபடுவது சகஜம்தான். அது அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு பாகமாகவே காணப்படும். ‘இளம் கன்று பயம் அறியாது' என்று சொல்வது இதனால்தான்.

எதையும் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம், புதிய விஷயங்களில் நாட்டம், விபரீதங்கள் மற்றும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத தன்மை போன்றவை இவர்களைச் சில நேரம் சேட்டைகளில் ஈடுபடவைக்கிறது.

அதிலும் பலர் தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தச் சேட்டைகள் அதிகரிக்கும். எதிர்பாலினத்தைக் கவர்வதற்கு இவர்கள் எடுக்கும் சில முயற்சிகள், மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கலாம். அவர்களே சில வருடங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால், எத்தனை கோமாளித்தனமான செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்று புரியும்.


சமூகவிரோதச் செயல்பாடு

அதேநேரம் சில வளர்இளம் பருவத்தினரிடம், இந்த விதிமீறல்கள் எல்லை மீறிச் செல்லும்போது, அவர்களுடைய குணாதிசய உருவாக்கத்திலும் மாற்றம் காணப்படும். சமூகவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள் எல்லோரும் திடீரென்று ஒரே நாளில் உருவாகிவிடுவதில்லை. அதற்கான ஆரம்ப அறிகுறிகள், வளர்இளம் பருவத்திலேயே காணப்படும்.

பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இவர்கள் சிம்மசொப்பனமாகவே இருப்பார்கள். சின்ன வயதில் இவர்களுக்கு எத்தனை தண்டனைகள் கொடுத்தாலும், தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மாறாகப் பிரச்சினை தீவிரமடையும். இவர்கள் பின்னாட்களில் சமூகவிரோதிகளாக (Antisocial) உருவாக வாய்ப்பு இருக்கிறது.


ஓடிப்போவது

ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, சில வளர்இளம் பருவத்தினருக்கு வீட்டை விட்டு ஓடிப்போவது வாடிக்கையான விஷயமாக மாறிவிடும். அப்பா அடித்தாலோ, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது ஓடிப்போவது நடக்கும். இது ‘குணரீதியாக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்' எனப் பெற்றோருக்கு மறைமுகமாகச் சொல்லும் எச்சரிக்கை.

அதற்கு முன்னரே இரவில் அடிக்கடி வெளியில் தங்குவது, நண்பர்களுடன் குறிப்பாக வயதில் மூத்தவர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவது வழக்கமாக இருக்கும். பள்ளிக்குச் செல்லாமல் அடிக்கடி படத்துக்குச் செல்வதும் கவனிக்கத்தக்க மாற்றம்தான்.


கும்பல் சேருதல்

உணவு இடைவேளையின்போது பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையிலோ, ஒதுக்குப்புறமான இடங்களிலோ இப்படிப்பட்டவர்கள் கூடுவார்கள். இதுதான் இளம் சமூகவிரோதிகள் உருவாகும் மையம். பல புதிய நட்புகளுடன் போதைப்பொருட்களின் அறிமுகமும் இங்குதான் கிடைக்கும். ஒன்றாகச் சேர்ந்து புகைப்பது முதல் கஞ்சா பயன்படுத்துவதுவரை கற்றுக்கொள்வார்கள். தன்பாலின உறவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

சில நேரம் இளம்வயதிலேயே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது, பிறரைக் காயப்படுத்திப் பார்ப்பதில் அலாதி இன்பம் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளும் காணப்படலாம். மனசாட்சி மரத்துப்போவது சில நேரம் குரூரச் செயல்களாக வெளிப்படும். அதற்காக இவர்கள் வருத்தப்படுவதும் இல்லை.


பொய் மூட்டை

அதேபோலச் சிலரிடம் அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் திருடுவதில் ஆரம்பிக்கும் பழக்கம், பூட்டை உடைத்துத் திருடுவதுவரை போகக்கூடும். அவர்களின் புத்தகங்களுக்குள் ரூபாய் நோட்டை வைத்தால் பத்திரமாக இருக்கும் அளவுக்கு, படிப்பில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. பொய் சொல்வதில் போட்டி வைத்தால், இவர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்.

அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக எத்தனை பெரிய பொய்யையும் சாதாரணமாகச் சொல்லப் பழகிவிடுவார்கள். அதேநேரம் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள, எந்த நிலைக்கும் இறங்கிவருவார்கள்.


காரணங்கள்

‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை' என்ற சொலவடையின்படி பெற்றோருடைய நன்னடத்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் குழந்தைகளைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் போதைப்பழக்கம் (அது சார்ந்த மற்றப் பழக்கங்கள்) உள்ள பெற்றோருக்கும் வளர்இளம் பருவத்தினரின் சமூகவிரோதக் குணமாற்றங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற சமூகவிரோத நடவடிக்கைகளில் சில நேரம் ஈடுபடலாம். போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதனால் ஏற்படும் மனநோய்களும்கூட இதுபோன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.


கூடுதல் காரணங்கள்

குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கார்ட்டூன் படங்கள் மற்றும் வீடியோ கேம்களில் ஈடுபடுவது பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் வரும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் அதிகத் துறுதுறுப்பை ஏற்படுத்துவதுடன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனையும் பாதிக்கும். மனிதர்களை உயிராகப் பாவிக்காமல், பொருட்களாகப் பாவிக்கும் மனநிலை ஏற்படும்.

மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையை இது பாதிக்கும். வளர்இளம் பருவத்தில் பல உறவுரீதியான சிக்கல்களையும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளையும் இது ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டவை எல்லாம், இந்தக் குணநல மாற்றம் கொண்டவர்களைக் கொடூரர்களாக சித்தரிப்பதற்கு அல்ல. வளர்இளம் பருவத்தில்தான் இந்த மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சாதகமற்ற குடும்பச் சூழல், சமுதாயச் சூழல் மற்றும் அவர்களுடைய மனரீதியான பிரச்சினைகளை ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


thanks the hindu

Friday, November 20, 2015

அதிகமான நேர்மறை எண்ணங்கள் தேவை


கடந்த வாரத்தில் “எதை வேண்டாம்னு நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும்!” என்று நான் எழுதியது பல பெற்றோர்களைக் கலக்கத்தில் தள்ளியது தெரிகிறது. பொதுவாக, நாம் அனைவருமே நல்ல நோக்கத்தோடுதான் பேசுகிறோம். ஆனால், அச்சம் பல எதிர்மறை எண்ணங்களை வரவழைத்துவிடுகிறது. இது மனதின் இயல்பு. இதற்குக் குற்ற உணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.


நல்ல உள்நோக்கத்தை, நேர்மறை எண்ணங்களில், நல்ல சொற்களில் எப்படி தெரிவிப்பது என்பதுதான் சூட்சுமம். அதற்கு முன்பாக, நல்ல உள் நோக்கத்துடன் ‘எதை வேண்டும்’ என்று எண்ணுகிறோமோ, அது எப்படி நடக்கிறது என்பதை நம் மூளையின் செயல்பாட்டை வைத்துப் புரிந்து கொள்வோம்.


மூளையின் பயணம்

நாம் பேசும் மொழியைப் படங்களாய்த்தான் நம் மூளை உள்வாங்கிக்கொள்ளும். எழுத்து களாய் அல்ல.


“நான் சென்ற முறை சிக்கிம் போனபோது ஒரு சிலிர்ப்பான அனுபவம் நிகழ்ந்தது. குறுகிய சாலையில் எங்கள் வண்டி போகிறது. நானும் ஓட்டுநரும்தான். ஒரு புறம் திரும்பினால் பள்ளத்தாக்கு. இன்னொரு புறம் மலை மேடுகள். இடையில் ஆபத்தான முறையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.


இருட்டிக்கொண்டு மழை வேறு வரும் போலத் தெரிகிறது. ஆனால், வழியெங்கும் பல நிறங்கள் கலந்த மலர்க் கூட்டங்கள் மனதைக் கொள்ளை கொண்டன. இவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்த போதே திடீரென எதிரில் ஒரு லாரி வேகமாக வந்தது...”


இப்போது உங்கள் மனத்தில் என்ன காட்சிகள் வந்தன? நான் சென்ற வண்டி எது? எந்த நிறத்தில் பூக்களைப் பார்த்தீர்கள்? எந்தப் பக்கம் பள்ளத்தாக்கு? எந்தப் பக்கம் மலைமேடு? எதிரில் வந்த லாரி எப்படி இருந்தது? என் ஓட்டுநர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேனா அல்லது பின் சீட்டில் இருந்தேனா? எதிரில் வந்த லாரி என்ன செய்திருக்கும்?


இவை அனைத்துக்கும் உங்கள் மூளை தானாக விடையைத் தேடி நிரப்பிக்கொள்ளும். நிஜத்தில் உங்கள் மூளை உங்களை சிக்கிம் பயணத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்த அச்சு வரிகள் நினைவில் இருக்காது. ஆனால் ஒரு மலைப் பிரதேசக் காட்சியை உங்கள் மூளை வடிவமைத்துக்கொள்ளும்.


நிஜத்தின் பாவனை

நிஜமாகவே நான் சிக்கிம் போனேனோ அல்லது கதை விடுகிறேனோ, எதுவாக இருந்தாலும் உங்கள் மூளை தரும் உங்கள் அனுபவம் நிஜம். அதை விபத்து என்றோ சாகஸம் என்றோ நீங்கள் கூடுதலாகக் கற்பனை செய்யும்போது உங்கள் உணர்வுநிலையும் அந்தக் காட்சியை மேன்மைப்படுத்தும்.


காணாததை இப்படிக் காட்சிப்படுத்தி, அதற்கு ஏற்ப எண்ணங்களையும் உணர்வுகளையும் உருவாக்கி, அதை நிஜம் போலப் பாவிப்பது நம் மன இயல்பு. அதனால்தான் இத்தனை கற்பனை சந்தோஷங்களும், கற்பனை பயங்களும்!


இதில் ஒன்று முக்கியமானது. நீங்கள் காட்சிப்படுத்துவது நிஜமா, பொய்யா, நேர்மறையா, எதிர்மறையா என்றெல்லாம் மூளை கவலைப்படாது. அது செய்ய வேண்டிய வேலையைச் செய்யும்.


கிறக்கத்தின் காரணம்

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரின் பின்னாலிருந்து நம்பியார் தாக்க வந்தால் பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு, “வாத்தியாரே..பின்னால பாரு!” என்று கத்துவது இதனால்தான். அதே போல மல்லிகா ஷெராவத்தைப் பார்த்துக் கிறங்குவதும் இதனால்தான். படத்திலிருப்பதையும் தாண்டி, உங்கள் கற்பனைகள் உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்.


உங்களுக்குப் பிடித்த கோதுமை அல்வாவை அவசர அவசரமாய் விழுங்குகையில் ஒருவர் ஓடி வந்து, “ சர்க்கரைப் பாகில் ஒரு பல்லி விழுந்துடுச்சாம். சமையல்காரர் சொல்லிட்டிருந்ததை இப்பத்தான் கேட்டேன்!” என்கிறார்.


இப்போது உங்களால் தொடர்ந்து அல்வாவை ரசிக்க முடியுமா? பல்லி விழுந்த காட்சி மனதில் வரும். அதன் விஷம் உங்களைத் தாக்கி நீங்கள் வாந்தி எடுப்பதாகக் காட்சி வரும். பிறகு நிஜத்தில் வாந்தி வரும் உணர்வு வரும்.


கற்பனையின் கத்தல்

பொய்யா, நிஜமா என்று மூளை கேள்வி கேட்காது. கொடுத்த காட்சிக்கு ஏற்ற உணர்வுகளையும் உடல் நிலை மாற்றங்களையும் உடனே கொண்டு வரும்.


இதேபோலத்தான் கண்ணாடி டம்ளரைக் குழந்தை எடுத்துப் போகும்போது, அது கீழே போடுவதை மனம் கற்பனை செய்யும். உடைந்து கையில் குத்துவதைக் கற்பனை செய்யும். உங்கள் கத்தலில் பதற்றப்பட்டு குழந்தை டம்ளரைக் கீழே போடும்.


இதேபோலத்தான் எல்லா உறவுகளிலும். “அவன் அப்படி இருக்கக் கூடாது” என்று எண்ணுகையில் அவனை நம் எண்ணத்துக்கு ஏற்ப மாற்ற ஆரம்பித்துவிடுகிறோம்.


வன்முறையின் ஆதாரமே இதுதான். “அவன் நம்மைத் தாக்கக் கூடாது!” என்ற எண்ணம்தான் நம்மைத் தற்காப்புத் தாக்குதலுக்குத் தயார் செய்கிறது. அதன் முனைப்பை எதிராளி உணர்ந்ததும் அவனும் தற்காப்புக்குத் தயாராக, அதை ஆரம்பமாக நினைத்துக் கொண்டு, “பயந்த மாதிரியே நடக்குது” என்று முதல் அடியை (தற்காப்பாக நினைத்து) கொடுக்க...பின் யுத்த மயம் தான். இருவரும் எதிராளி தான் யுத்தம் துவங்கியதாக நினைத்துக் கொள்வார்கள்.


நேர்மறையின் சப்ளை

சரி, டம்ளரைக் கீழே போடாமல் குழந்தை போவதற்கு எப்படிச் சொல்லலாம்?
“ பாப்பா.. ஒரு கையைக் கீழே கொடுத்து டம்ளரைப் பத்திரமா எடுத்திட்டுப் போ! ஆ...அப்படித்தான் சபாஷ்!” என்றால் அதைக் குழந்தை நன்றாகக் கற்கும்.


ஆனால், இதைச் சொல்லத் தெளிவான மனமும், நேர்மறையான கற்பனை வளமும், உற்சாகமும், நம்பிக்கையும் அதிக அளவில் தொடர்ந்து மனதுக்குத் தேவைப் படுகிறது.


தினசரி அவ்வளவு எண்ணங்களை நாம் சப்ளை செய்கிறோமா? அத்தகைய அளவில், நேர்மறை எண்ணங்கள் தொடர்ந்து வர என்ன செய்யலாம்?

thanks the hindu

Wednesday, November 18, 2015

எதை நினைத்தோமோ அதுவே நடந்தது


“எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!


பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.


நம்பிக்கையும் நிகழ்வும்

இதுதான் self fulfilling prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம். நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும்.

“அவன் ஒரு ஆள் போதும் சார். அத்தனையும் தானா முடிப்பான்!” என்று பாஸ் நம்பிக்கை வைக்கும் போது அந்தப் பணியாளரின் வேலைத்திறன் தானாகவே உயர்கிறது. தன்னம்பிக்கை, திறமை, முயற்சி, பெருமை என அனைத்தும் இசைந்து ஒரு அற்புதம் நிகழும். பின் பாஸ் சொல்வார்: “நான் சொல்லலை? அவன் கிட்ட விட்டால். பிரமாதப்படுத்துவான்னு!”

நிர்வாகம் முழு மனதாகத் தொழிலாளர்களை மதித்து, நம்பிக்கை வைத்துப் பொறுப்புகள் கொடுக்கும் போது நல்லுறவு மட்டுமல்ல, உற்பத்தித் திறனும் பன்மடங்கு பெருகும் என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஆவணப் படுத்தியுள்ள உண்மை. இருந்தும், “இவனுங்க பேச்சை எல்லா விஷயங்களிலும் கேட்டா எதிர்பார்ப்பு அதிகமாயிடும். உடனே சரின்னு எதையும் சொல்லக் கூடாது.

எப்பவும் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும். இல்லேன்னா, பிரச்சினை பண்ணுவாங்க!” என்று நினைக்கும் நிர்வாகங்கள் அனைத்தும் தொழிலாளர் பிரச்சினைகளைக் கண்டிப்பாகச் சந்திக்கும். நிர்வாகத்திடம் உள்ள தொழிலாளர் பற்றிய ஆதார நம்பிக்கைகள்தான் தொழிலாளர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதைப் பெரும்பாலும் நிர்வாகத்தினர் அறிவதில்லை.


நடக்காது என்பார் நடந்துவிடும்

“நடக்கக் கூடாது” என்று நினைக்கும் போது அந்த எதிர்மறை எண்ணம் வலுப்படும். அச்சமும் பதற்றமும் ஏற்படும். தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்போமே தவிர இயல்பான முயற்சியை மகிழ்ச்சியான முறையில் எடுக்க முடியாது. அது தவறுகளுக்கும் அபிப்பிராயப் பேதங்களுக்கும் வழி வகுக்கும். எதிராளி இருந்தாலும் அவரிடமும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையை வளர்க்கும். பின் பயந்தது போலவே தோல்வி நிகழும்.

‘சின்ன தம்பி’ படத்தில் யாரையும் தங்கை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் மூன்று சகோதரர்களும் படு தீவிரமாக இருக்க, கடைசியில் அதுவே நிகழும். அவர்கள் தங்கையைத் தனிமைப்படுத்தி, ஆண்கள் சகவாசம் கிடைக்காமல் செய்ய, கிடைத்த முதல் தொடர்பிலேயே காதல் கொள்வாள் நாயகி. இது பல வீடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவம்.

இதிகாசங்களும் இதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. தன் மகன் இடிபஸ் தன்னைக் கொல்வான் என்பதால் அவனுடைய அப்பா அவனைக் குழந்தையிலேயே தள்ளி வைக்கிறார். வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்வான் மகன். தன் அப்பா என்று தெரியாமலேயே அவரை வென்று கொல்வான். இதுதான் கிரேக்க இதிகாசத்தில் உள்ள இடிபஸின் கதை. மகன் பற்றிய அப்பாவின் எண்ணம் தான் இதன் ஆரம்பம்.


ஊத்திக்கொள்பவர்கள்

தொடர்ந்து வியாபாரத்தில் தோற்பவர்கள் எனக்குப் பல பேரைத் தெரியும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். அடிப்படையில் அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தே வியாபாரத்தில் இறங்குவார்கள். “இந்த வாட்டியும் நஷ்டம் ஆகக் கூடாதுன்னு எல்லாம் பாத்து பாத்து செஞ்சேன். நம்ம ராசி இதுவும் ஊத்திக்கிச்சு!” என்பார்கள்.

அதே போலச் சிலர் திருமண வாழ்வில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார்கள். ஆள் மாறினாலும் பிரச்சினை மாறாது. காரணம் பிரச்சினை துணையிடம் இல்லை. தங்களிடம்தான் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

எந்த வேலையிலும் நிலையாகத் தங்காதவர்கள், எல்லாரிடமும் சீர்குலைந்த உறவு கொண்டிருப்போர், தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள், எப்போதும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என அனைவருமே ஏதோ சில ஆதார எண்ணங்களில் குறைபட்டவர்கள். அந்த எண்ணம் தரும் உணர்வும் செயல்பாடும் அவர்களுக்கு அவர்கள் வெறுக்கும் அதே முடிவுகளைத்தான் தருகின்றன.


பட்டியலிடுங்கள்

நமக்குப் பிரச்சினை என்று நாம் நினைக்கும் விஷயங்களில் நம் ஆதார எண்ணங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுங்கள். அது பிடிபடவில்லை என்றால் உங்களிடம் அதிகம் பழகும் நண்பரிடமோ, வாழ்க்கைத் துணையிடமோ, சக பணியாளர்களிடமோ கேளுங்கள். உங்கள் பேச்சு, உங்கள் எண்ணங்களை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்திருக்கும். அவர்கள் மிக எளிமையாக உங்கள் எண்ணங்களைச் சொல்லுவார்கள்.

உங்கள் நம்பிக்கைகளை நேர்மறையாக மாற்றுவது எப்படி என்று மிக விரிவாக, நவீன உத்திகளுடன் சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு முன் உங்களிடமுள்ள எண்ணங்களை முழுவதும் ஆராயுங்கள்.

வெறும் எண்ணத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா? வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை என்ன செய்வது?

முதலில் உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான அளவு பலமான எண்ணங்கள் தானாகத் தோன்றும்.


ஒரு நாளில் 35 ஆயிரம்

“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’’ என்றார் புத்தர். நீங்கள் ஒரு நாளில் அதிக நேரம் சிந்திப்பவை என்று கணக்கிடுங்கள். அவற்றில் எவையெல்லாம் நேர்மறை, எவையெல்லாம் எதிர்மறை என்று கணக்கிடுங்கள்.

ஒரு அதிர்ச்சிகரமான உளவியல் உண்மை சொல்லட்டுமா?

சமீபத்திய ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் எண்ணங்கள் நமக்கு வருகின்றனவாம். இது உங்கள் மனோபாவத்துக்கும் வேலைக்கும் ஏற்ப, கூடும், குறையும். அது முக்கியமில்லை. ஆனால் அவற்றில் 80 சதவீதம் எதிர்மறையானவை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் முழு நேரமும் யோசிக்கிறோமாம்!

ஆக, நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கவலையோ, பயமோ, கோபமோ கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளை நம் உடலில், வேலையில், வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த விஷயத்துக்காக, என்ன என்ன எண்ணங்களைத் தற்போது வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள்.
இந்த ஆய்வின் முடிவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இந்தத் தொடரைத் தொடர்ந்து படிக்காவிட்டலும் பரவாயில்லை. ஆய்வின் முடிவு அதிருப்தியைக் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புவது போல மாற்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள்!


thanks the hindu

Sunday, November 15, 2015

நல்ல எண்ணங்களைப் பயிலலாமே!

நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.


ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.


ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.
“உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.
ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.


மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும்தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை. அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.


“உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா? உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா? உங்களுக்குக் கொஞ்சமாவது துப்பு இருக்குதா?” என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.
மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.
அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.


அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.


இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!
இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடி யாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.
நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.


உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!”என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.


ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, “ எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?” என்று சமாதானமாகிறார்.


ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது.
அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதும் என்னென்ன கருத்துகள் வந்தன? “கோஹ்லி சரியில்லை. எல்லாம் அனுஷ்கா ஷர்மா ராசி”. “தோனியே சொதப்பிட்டார்” இப்படி வந்தவைதான் அதிகம். “அன்று ஆஸ்திரேலியா நம்மை விட நன்றாக விளையாடியது” என்று சொல்லியவர்கள் எத்தனை பேர்?


வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.
நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!
இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!

thanks the hindu

எத்தனை விதமாய் எண்ணங்கள்!

நம் அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதை முதலில் பார்ப்போம்.

10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து பிடிபட்டதால் வங்கி ஊழியர் தற்கொலை என்று படிக்கிறோம். கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் மந்திரி சாதாரணமாகப் பேட்டி கொடுப்பார். சாலையில் வாகனம் செல்லும் தடத்துக்கு மிக அருகில் ஓரமாகப் படுத்து , எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கும் உணர்விலும் நன்றாக உறங்குவோர் பலர் நம் நாட்டில்.

இதே நாட்டில் தான் மிக வசதியான இடத்தில் படுத்தும் தூக்கம் வராமல் தூக்க மாத்திரை உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகம். 1100 மதிப்பெண்கள் எதிர்பார்த்து அது குறைந்ததால் மன அழுத்தத்தில் சிகிச்சைக்கு என்னிடம் வரும் மாணவர்களும் உண்டு. இரு முறை தோல்வி அடைந்தும் பதற்றப்படாமல் இருக்கிறானே என்று மன அழுத்தத்தில் என்னிடம் வரும் பெற்றோர்களும் உண்டு.

பணம் இருந்தால் கடன் அடைக்கலாம் என்பார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் மைக்ரோ ஃபினான்ஸில் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பித் தருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அரசிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் தாமதம். சிக்கல். ஏன்?

எல்லாம் மனசு தான்.

இரண்டு எண்ணங்கள்

விற்பனைப் பயிற்சியில் அதிகம் சொல்லப்பட்ட கதை இது:
காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதிய தீவில் கிளை பரப்ப எண்ணி 50 ஜோடி காலணிகளுடன் ஒரு விற்பனைக்காரனை அனுப்பியது. சென்றவன் அதே வேகத்தில் திரும்பினானாம். “அங்கு காலணி அணியும் பழக்கம் யாருக்கும் இல்லை. அதனால் கிளை திறக்கும் எண்ணத்தைக் கைவிடலாம். இங்கு விற்பனை சாத்தியமில்லை.”

இரண்டாம் ஆளை அனுப்பினார்கள். அவன் மறு நாளே செய்தி அனுப்பினானாம்: “யாருமே காலணி அணியவில்லை. உண்மை தான். அதனால் இதை விற்கப் போட்டியும் இல்லை. முழு சந்தையையும் நாமே பிடித்துவிடலாம். இன்னும் 200 ஜோடி காலணிகள் அனுப்புங்கள். விரைவில் கிளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!”

வாய்ப்புகளில் பிரச்சினைகளைப் பார்ப்பதும் பிரச்சினைகளில் வாய்ப்புகளைப் பார்ப்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்ததே!
எண்ணம் தான் விதை. உணர்வு தளிர். செயல் விருட்சம். இதைப் புரிந்து கொண்டால் அனைத்தும் எளிதாக விளங்கும்.

செயலின் விதை
“ஏன் இப்படிச் செய்யறான்?” என்று கேட்பதற்கு முன் அந்தச் செயலுக்கு விதையான எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபலப் பத்திரிகையின் கேள்வி - பதில் பகுதியில் இதைப் படித்தேன்:
கேள்வி: “நடிகை ரோஜாவைக் கட்டிப் பிடிக்க ஆசை! ஒரு வழி சொல்லுங்கள்?”

பதில்: “ரோஜாவைக் கட்டிப்பிடிக்க நினைத்தால் முள் குத்தும்!”
அருகே நடிகை ரோஜாவின் படமும் ரோஜாப்பூவின் படமும் இணைந்ததாய் ஒரு கேலிச்சித்திரம். என்ன அரிய கருத்து!
சரி, இதை ஏன் ஒரு வாசகர் கர்மச் சிரத்தையாய்க் கார்டு வாங்கி எழுதி அனுப்புகிறார்? ஆயிரம் கேள்விகளில் ஏன் இதைப் பொறுக்கி எடுத்து அந்த உதவி ஆசிரியர் பதில் எழுதிப் பிரசுரிக்கிறார்? இதை ஏன் மெனக்கெட்டுப் படித்து ஞாபகம் வைத்து நான் இப்போது எழுதுகிறேன்?
ஒவ்வொருவர் எண்ணத்தை அறியவும் முயற்சி செய்யுங்கள். மூவரின் செயலுக்கும் உந்துசக்திக்கும் செயலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

எண்ணமே ஆதாரம்


“ஏன் முகம் கொடுத்துப் பேச மாட்டேன் என்கிறாள்?” “ஏன் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாக இல்லை? “ஏன் இவர் செய்கின்ற எல்லாத் தொழிலும் தோல்வியில் முடிகிறது?” “ஏன் இவர் எங்குச் சென்றாலும் பிரபலமாகிறார்?” “எந்த வேலையையும் இவரால் மட்டும் எப்படி சரியான நேரத்தில் செய்ய முடிகிறது?” “இவரால் மட்டும் எப்படி எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?” “இவன் எல்லோரிடமும் சணடை போடுகிறானே, ஏன்?” இப்படி நம்மைச் சுற்றிய மனிதர்களின் செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்களை ஆராயுங்கள். அவர்களின் செயல்களின் காரணங்கள் புரியும்.
எதிராளியின் எண்ணம் புரியாத போது நாம் நம் உறவுகளைச் சீர் குலைய விடுகிறோம்.


அவர் எண்ணத்தைப் புரிந்து நாம் எடுக்கும் முடிவுக்கும் அடிப்படை நம் எண்ணம் தாம். என்ன விசு பட வசனம் மாதிரி இருக்கா? சரி, கொஞ்சம் எளிமை படுத்தலாம் வாங்க...!
ப்ரமோஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். மேலதிகாரியான உங்களுக்குக் குழப்பமாக உள்ளது. “எந்தக் கிறுக்கனாவது பணமும் பவரும் வேண்டாம்னு சொல்வானா? என்ன ஆள் இவன்?” என்று யோசிக்கிறீர்கள். பின்பு, விசாரித்ததில் புரிகிறது. தொழிற்சங்க உறுப்பினர் தகுதி ப்ரமோஷனால் பறி போகும். பதவி உயர்வை விடத் தொழிற்சங்க அடையாளம் பெரிது என்று எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.


இப்போது இந்த அறிதல் உங்கள் எண்ணத்தை இப்படி மாற்றலாம். “சரியான அரசியல்வாதி போல. இங்கேயே இருந்து என்னென்ன பிரச்சினை செய்வானோ? கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணணும்!”
அல்லது இப்படி ஓர் எண்ணம் தோன்றலாம்: “என்ன ஒரு கொள்கைப்பிடிப்பு. அவ்வளவு தீவிரமான ஈடுபாடா? நாமெல்லாம் காசு கிடைச்சா போதும்னு நினைக்கறப்ப இப்படிப் பொதுக் காரணத்துக்கு உழைக்கும் ஆளைப் பாக்கறதே பெரிய விஷயம். அந்த ஆளைப் பாத்து இன்னும் நிறைய தெரிஞ்சக்கணும்!”
எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீகளோ அது அவருடனான உங்கள் உறவை தீர்மானிக்கும்.
ஆம். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!
“நீங்கள் உங்கள் வியாதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!” என்பார் தீபச் சோப்ரா. உங்கள் எண்ணம்தான் உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்றால் நம்புவீர்களா?


“அப்படியா ஆச்சர்யமாக இருக்கே.!” என்பதும் “ரொம்ப கதை விடறார்!” என்பதும் இரு எண்ணங்கள். எந்த எண்ணத்தை இப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள் என்று பாருங்கள்.
உங்கள் தேர்வு உங்கள் தேடலை நிச்சயிக்கும்!

thanks the hindu

Friday, November 13, 2015

முடியும், முடியாது இரண்டும் நிஜம்தான்!


ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்!

படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?


மன அமைப்பு

நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது.
உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க எங்கள் கல்லூரி தான் கியாரண்டி. திருமணத் தடையா இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள். இடுப்பு வலியா எங்கள் ஆஸ்ரமம் நடத்தும் யோகா கிளாஸ் வாருங்கள்.
மன அசதியா? இந்தப் புத்தகம் படியுங்கள். எங்கள் பயிற்சிக்கு வாருங்கள். அதிர்ஷ்டம் வேண்டுமா? இந்தக் கல்லில் மோதிரம் போடுங்கள்! எனும் குரல்களை நாடிப் போகிறவர்கள் அனைவருக்கும் கேட்டது கிடைக்கிறதா? நிச்சயம் இல்லை.

என்ன காரணம்? தருகிறவர் மன அமைப்பை விடப் பெறுகிறவர் மன அமைப்பு இங்கு முக்கியமாகிறது.

சுடுதண்ணீர் சிகிச்சை

ஒரு உளவியல் சிகிச்சையாளனாய் இதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒரே சிகிச்சை முறையை மேற்கொள்ளும் இருவருக்கு மிகுந்த மாறுபட்ட பலன்கள் கிடைப்பது உண்டு. ஒருவர் முழு பலனையும் ஒருவர் மிகக்குறைவான பலனையும் அடைவர்.

அது போலப் பல சமயங்களில் என் வார்த்தைகளும் வழிமுறைகளும் எனக்குப் பயன்படுவதை விட என்னிடம் வருபவர்களுக்கு அதிகம் பயன்படும். ஒரு முறை தீராத தலைவலிக்குச் சிகிச்சைக்கு என்னிடம் வருபவர் ஒருவருக்கு லூயிஸ் ஹேயின் அஃபர்மேஷன் முறை கொண்டு ஒரு சிகிச்சை அளித்தேன்.

நம்ப முடியாத அளவுக்கு வேகமாக முழுமையாகக் குணமானார். என் தலைவலிக்கு நான் முதல் முறையாக அந்த வழிமுறையைப் பயன்படுத்திய போது கூட ஏற்படாத மகத்தான மாறுதல் அது.
ஒரு வேளை இது வெறும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமா? வீரிய மருந்து என்று சொல்லிச் சுடுதண்ணீரைச் ஊசி மூலம் செலுத்தினால் கூடச் சிலருக்குப் பலன் ஏற்படும். இதை Placebo Effect ஆங்கிலத்தில் சொல்வார்கள். ராசியான டாக்டர் என்று சொல்வது கூட நம்பிக்கை சிகிச்சையின் ஒரு பகுதி தான். கிறிஸ்துவ மதத்தில் Faith Healing மிகப்பிரபலம்.

பெரும் கண்டுபிடிப்பு

நம் கிராமங்களில் அம்மனுக்காகத் தீமிதி சென்று காயம் படாமல் வருவது எப்படி முடிகிறது? தீக்குச்சி நுனி பட்டால் விரல் தீய்ந்து போகுமே! இது பக்தி அல்ல ஆழ்மனச் சக்தி என்று சொல்லும் ஆண்டனி ராப்பின்ஸ் போன்றோர் அமெரிக்காவில் நடத்தும் என். எல்.பி (Neuro Linguistic Programming) பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும் நெருப்பில் நடக்கிறார்கள்.

கடவுள் சக்தியோ மனித ஆற்றலோ நம்பிக்கையால் பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்றால் ஏன் இதை இளைஞர்களுக்குப் பள்ளியிலிருந்தே சொல்லித்தரக்கூடாது? உண்மை என்னவென்றால் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை விட நம்பிக்கை குலைந்து கிடக்கிறார்கள் இங்கு.

மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.

இரண்டும் நிஜங்கள்

பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர் மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம் செயலாகிய சாதனைகள் தான்.


இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான் வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.
“எங்க குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை.” “எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு தான் முடிஞ்சது.” “இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி.” “நம்ம நாட்டுல இதுவே ஜாஸ்தி”. “ நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!”


இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும் வலுப்படும்.


“என்னால் முடியும்” என்று சொன்னாலும் “என்னால் முடியாது” என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.


எண்ணமே வாழ்வு
நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன.
“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?

நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!

எல்லாருக்கும் வெற்றி வேண்டும். ஆனால் உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா?

உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள்.
கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்:

“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”


thanks the hindu

Monday, October 12, 2015

பாலியல் தொந்தரவுகள்-பதின் பருவம் புதிர் பருவமா? 4

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
சில மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறி மனநல ஆலோசனைக்கு என்னிடம் அழைத்து வந்திருந்தார்கள். அந்த மாணவி மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். சமீபத்தில் கையில் பிளேடால் பலமுறை கீறப்பட்ட அடையாளங்கள் இருந்தன.
பெற்றோரிடம் கேட்டபோது, பள்ளிக்குச் செல்ல அவள் மறுப்பதாகவும், வேண்டுமென்றே இப்படிச் செய்வதாகவும் புகாரை அடுக்கினார்கள். ‘இவள் இருப்பதைவிட, செத்துவிட்டால் நல்லது’ என்கிற அளவுக்குத் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண்ணைப் பரிசோதித்துப் பார்த்ததில், டிஸ்லெக்சியா (Dyslexia) என்ற கற்றல்திறன் குறைபாடு பிரச்சினையால் அவள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கற்றல்திறன் குறைபாடு
கற்றல்திறன் குறைபாடு கொண்டவர்களின் மனவளர்ச்சியும் அறிவுத்திறனும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இவர்களுக்கு எழுத்து வடிவங்கள் மற்றும் கணிதக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல், வாசித்தல் ஆகியவற்றில் அதீதப் பிரச்சினைகள் இருக்கும். வாய்மொழியாகப் பாடங்களை எளிதாகச் சொல்லும் இவர்களால், அதை எழுத முடிவதில்லை. அப்படியே எழுதினாலும் கேலிக்குள்ளாகும் அளவுக்கு எழுத்துப்பிழைகள் இருக்கும்.
'தங்கமீன்கள்' படத்தில் ‘W' என்ற கதாபாத்திரம் மூலம், இதை அழகாகக் காண்பித்திருப்பார் இயக்குநர். ‘மற்ற எல்லாவற்றிலும் நன்றாகத் திறமைகளை வெளிப்படுத்துகிறான். ஆனால், பரீட்சை பேப்பரில் மட்டும் ஒன்றுமே இருப்பதில்லை’ என்பதுதான், இப்படிப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர் சொல்லும் முக்கியப் புகார்.
பாதிப்பின் தீவிரம்
பத்து வயதுக்குள் கண்டறியப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டிய விஷயம், கற்றல்திறன் குறைபாடு. ஆனால், ஆரம்பத்திலேயே இதைக் கண்டறியாமல் போவதாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொதுத்தேர்வு நடத்தப்படும் பத்தாம் வகுப்புக்குள் நுழையும்போதுதான் பிரச்சினை பூதாகரமாகிறது. சுமார் 5-10 % மாணவர்கள், இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் குறைபாடு உள்ள வளரிளம் பருவத்தினரின் மீது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு திணிக்கப்படுவதால், பலவகை மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பைக் ரேஸ் பந்தயத்தில் ஒருவருக்கு சைக்கிளைக் கொடுத்து ஓட்டச் சொல்வதைப் போன்றது இது.
மேலே கூறப்பட்ட சம்பவத்தில் அந்தப் பெண், பள்ளியைப் புறக்கணிக்க வழிதெரியாமல், ஒரு மாதமாகத் தினசரி காலையில் பள்ளிக்குப் புறப்படுவதுபோல, பையை எடுத்துக்கொண்டு அவள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டைமாடியிலுள்ள தண்ணீர் தொட்டியின் கீழ் பகல் நேரம் முழுவதையும் கழித்துவிட்டு, மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்புவதுபோல் கீழே வந்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்குத் தெரியவந்ததும், அவளுடைய பிரச்சினையை அவர்கள் புரிந்துகொள்ளாமல் போனதன் விளைவே, தற்கொலை முயற்சி.
சலுகைகள் என்னென்ன?
இதுபோன்ற கற்றல்திறன் குறைபாடு மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய இளம் வயதினருக்கு அரசு பொதுத் தேர்வுகளில் பல சலுகைகள் வழங்கப்படுவது பற்றி பலருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட மாணவ / மாணவிக்குக் குறிப்பிட்ட பிரச்சினை இருப்பது மருத்துவக் குழு மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டால் சலுகைகளைப் பெறலாம்.
பிரச்சினையின் தீவிரத்துக்கேற்ப ஒரு மொழிப் பாடத்திலிருந்து விலக்கு அளித்தல், எழுத்துப் பிழைகளுக்கு மதிப்பெண்ணைக் குறைக்காமல் கருத்தின் அடிப்படையில் விடைத்தாளைத் திருத்தம் செய்யப் பரிந்துரைத்தல், ஒரு மணி நேரம்வரை கூடுதல் நேரம், சொல்வதை எழுதுவதற்கு எழுத்தர்களை நியமித்தல் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, மேற்பட்ட சலுகைகளோ வழங்கப்படும்.
பாலியல் தொந்தரவுகள்
சில நேரங்களில் வளரிளம் பெண்கள் பள்ளி செல்லும் வழியில் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவது உண்டு. கேலிப் பேச்சு மூலமாக மன உளைச்சலுக்கு ஆளாதல், சக மாணவர்களால் காதலிக்கக் கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற வெளிப்படையாகச் சொல்ல முடியாத காரணங்களும் பள்ளியைப் புறக்கணிக்கக் காரணமாக இருக்கலாம். இந்த இடத்தில்தான் வளரிளம் பெண்ணுக்கும் தாய்க்குமான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி பள்ளியைப் புறக்கணிப்பதாகச் சொல்லிப் பெற்றோர் அழைத்து வந்தார்கள். பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி வந்துவிடுவதாகவும், அதனால் அடிக்கடி விடுப்பு எடுப்பதாகவும் காரணம் கூறினார்கள். பல முறை ஸ்கேன், மற்றப் பரிசோதனைகளை எடுத்துப் பார்த்ததில் வயிற்றுப் பகுதியில் எந்தத் தொந்தரவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்ததில், அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பையன் அடிக்கடி பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதாகவும், அதனால்தான் பள்ளிக்குப் போகவே பயமாக இருப்பதாகவும் கூறினாள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அவள் பல முறை இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அம்மாவோ ‘நீ ரோட்டில் ஒழுங்காகச் சென்றால், யார் உன்னைத் தொந்தரவு செய்யப்போகிறார்கள்' என்று அந்தப் பெண்ணின் மீதே பழியைப் போட்டு, தட்டிக் கழித்துள்ளார்.
எனவே, பெற்றோர் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, தங்களுக்கு நேரிடும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை வளரிளம் பெண்கள் தைரியமாகச் சொல்வார்கள். ஆரம்பக் கட்டத்திலேயே அதைச் சரியாகக் கையாளும்போது, பல பிரச்சினைகளைத் தடுத்துவிடலாம். இல்லையென்றால் மேற்கண்டதுபோல மனரீதியான பாதிப்புகள், உடல்ரீதியான பாதிப்புகளாக வெளிப்படும்.
(அடுத்த வாரம்: நட்பு வட்டம் நல்லதா? கெட்டதா?) 
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

ன்றி-தஹிந்து

பதின் பருவம் புதிர் பருவமா? 3 - பெற்றோர் சிறந்த முன்மாதிரியா?

‘போதும்டி... ரொம்ப சீவி சிங்காரிக்காதே’ என்று கரித்துக்கொட்டும் அம்மாவைவிட, ‘ஆஹா... இன்னிக்கு எத்தனை பசங்க உங்கிட்ட புரபோஸ் பண்ணப் போறாங்களோ, தெரியலையே!’ என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கும் அம்மாக்களைத்தான், இன்றைய இளம்பெண்கள் பலருக்குப் பிடிக்கிறது.
‘சோம்பேறி... 8 மணிக்குத்தான் படுக்கையைவிட்டு எந்திரிக்கிறான்’ என்று திட்டும் அப்பாவைவிட, ‘என்னடா... ‘ஹேங் ஓவரா, எல்லாமே அளவா இருந்தாத்தான்டா நல்லது...’ என்று கேட்டுக்கொண்டே குளிப்பதற்கு டவல் எடுத்துத் தரும் அப்பாக்களை மகன்கள், அப்படிக் கொண்டாடுவார்கள்.
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன் என்று சொல்வார்கள், அதுதான் இந்தக் காலத்தின் தேவை.
வெளிப்படைத்தன்மை
எதிர்பாலினத்தவரின் ஏதோ ஒரு அம்சம் நம்மைப் பிடித்து இழுக்கிறது என்ற ஆர்வம் நம் வாரிசுகளிடம் இருப்பது இயற்கை. ஆனால், அந்த ஆர்வம் எல்லை மீறும்போது, பல விபரீதங்கள் நடந்தேறுகின்றன. வாரிசுகளின் ஆண், பெண் நட்பு வட்டங்கள், பெற்றோருக்குத் தெரிந்து வெளிப்படையாக இருப்பதே எப்போதும் நல்லது.
பெற்றோரும் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் தவறில்லை. அதேநேரம், வயதுக்கு ஒவ்வாத விஷயங்களில் வாரிசுகள் ஈடுபடும்போது கண்டிப்பு காட்ட யோசிக்கக் கூடாது.
ரோல் மாடல் யார்?
இயல்பாக, குழந்தைப் பருவத்தில் உள்வாங்கிக்கொள்ளப்படும் விஷயங்களையே விடலைப்பருவத்தில் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம் தோன்றும். பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களைவிட, அவர்கள் நடந்துகொள்ளும் முறைதான் குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்க்கும். இதைத்தான் ஆல்பர்ட் பண்டூரா என்ற உளவியல் நிபுணர் ‘சமூகத்திடம் இருந்து கற்றல்’ என்ற பிரபலமான கொள்கையின் மூலம் நிரூபித்தார்.
வளரும் பருவத்தில் குழந்தைகள் அதிகமாகக் கடந்துவரும் நபர்களைத்தான், பெரும்பாலும் முன்மாதிரிகளாக பின்பற்றுவார்கள். அந்த ரோல் மாடல்கள் பெற்றோர், ஆசிரியர், தலைவர்கள், ஏன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோவாகக்கூட இருக்கலாம். தெரிந்தவர்களின் ஒவ்வொரு அசைவும் வளரிளம் பருவத்தினரின் குணநல வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும்.
ஆசிரியர்களின் பங்கு
பெற்றோருக்கு அடுத்தபடியாக இளம்வயதினர் அதிக நேரம் செலவழிப்பது பள்ளியில்தான். அங்கு ஆசிரியர்களும் நண்பர்களும்தான் அவர்கள் அதிகம் பழகும் நபர்கள். பல நேரங்களில் தங்கள் மனதுக்குப் பிடித்த ஆசிரியர்களுடன், தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மாணவர்கள் விரும்புவார்கள் அல்லது ஒரு முன்மாதிரியாகவும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். இது ஆசிரியர் - மாணவர் உறவைப் பலப்படுத்துவதுடன், மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கும், கல்வியிலும் நல்ல மேம்பாட்டைக் கொண்டுவரும். முரட்டு குணம் கொண்ட ஒரு மாணவனைக்கூட, தன் ஆரோக்கியமான அணுகுமுறையால் ஓர் ஆசிரியர் நல்வழிப்படுத்த முடியும்.
ஏன் பள்ளி பிடிக்கவில்லை?
ஆனால், இன்றைக்குப் பல பள்ளிகளில் ‘தட்டிக் கொடுக்கும்’ ஆசிரியர்களைவிட, முட்டி போடச் சொல்கிற ஆசிரியர்கள்தான் துரதிர்ஷ்டவசமாக இருக்கின்றனர். இதுபோன்ற ஆசிரியர்களின் அணுகுமுறையால், சில வேளைகளில் விடலைப்பருவத்தினர் ஆசிரியர்களை எதிரி மனப்பான்மையோடு பார்க்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் மாணவரின் தனிப்பட்ட நடத்தை மற்றும் கல்வி ஆகிய இரண்டும் கடுமையாக பாதிக்கப்படலாம். ஒரு சிலர் ஆசிரியரை எதிர்ப்பது, அவரைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவது போன்ற எதிர்மறையான வழிகளில், தங்கள் எதிர்ப்பைக் காண்பிப்பது உண்டு. செல்போன் பயன்பாட்டுக்கு முந்தைய காலகட்டங்களில் கழிப்பறை சுவர்களிலும், வகுப்பு பெஞ்சுகளிலும் ஆசிரியரைத் தரக்குறைவாக எழுதுவது வாடிக்கை. ஆனால், இப்போது ஒருபடி மேல் சென்று சமூக வலைதளங்களில் மறைமுகத் தாக்குதல் தொடுக்கும் சம்பவங்களும் பெருகிவருகின்றன!
மறைமுக எதிர்ப்பு
குறிப்பிட்ட ஆசிரியரின் வகுப்பைப் புறக்கணிப்பது, அந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுப்பது என்பது போன்ற மறைமுகமான வழிகளில் சில மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள எதிர்ப்பை காண்பிப்பதும் உண்டு.
சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கிய நேரத்தில், ‘பள்ளிக்குப் போக மாட்டேன்' என்று அடம்பிடித்த ஒரு மாணவனை, சிகிச்சைக்காக என்னிடம் அழைத்து வந்தார்கள். அவனிடம் பேசிப் பார்த்தபோது, எதைப் பற்றியும் அவன் அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை.
அவனிடம் விசாரித்தபோது “டாக்டர், என் பார்வை, பாடி லாங்குவேஜ் எப்பவுமே இப்படித்தான் இருக்கும். அதனால் வகுப்பில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நான்தான் காரணம் என்று ஆசிரியர்கள் எப்போதும் என்னையே குறிவைக்கிறார்கள்” என்றான்.
உச்சகட்டமாக, விசாரணைக்காக தலைமை ஆசிரியரிடம் அவன் அழைத்துச் செல்லப்பட்டபோது ‘சார், கவனமாக இருந்துகொள்ளுங்கள். கத்தியை எடுத்துக் குத்தினாலும் குத்திவிடுவான்’ என்று ஆசிரியர் ஒருவர், தலைமை ஆசிரியரை எச்சரித்திருக்கிறார். அந்த ஒரு வார்த்தை ஏற்படுத்திய பாதிப்புதான், பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு அவன் பள்ளியை புறக்கணிக்கக் காரணமானது.
புளிக்கும் பாடங்கள்
இது போன்ற ஆரோக்கியமற்ற பள்ளிச் சூழல், படிப்பையே நிறுத்தும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அது மட்டுமே பள்ளியை புறக்கணிப்பதற்கு காரணம் அல்ல. வீட்டில் பெற்றோரிடையே ஏற்படும் சண்டைகள், அப்பாவின் குடிப்பழக்கம், அளவுக்கு மீறிய கண்டிப்பு அல்லது செல்லம் என்பது போன்று குடும்பம் சம்பந்தப்பட்ட மற்ற காரணங்களும் இருக்கலாம். இந்த இரண்டுமே இல்லாவிட்டால் பாடங்களைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்கள், தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பைத் திணிப்பது, கற்றல்திறன் குறைபாடு போன்றவையும் பள்ளியைப் புறக்கணிப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.
(அடுத்த வாரம்: கற்றல்திறன் குறைபாடா? பாலியல் தொந்தரவா?)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் 

உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர், 
தொடர்புக்கு: [email protected]


ன் றி-தஹிந்து

Thursday, August 06, 2015

மனசு போல வாழ்க்கை- 19: பணக்கஷ்டம் தரும் பாடங்கள்

யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை? எல்லோரும் தான் பணம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே செல்வம் கொழிக்கிறது. பலருக்கு நிராசையாகத் தானே இருக்கிறது? நினைப்பது தான் நடக்கும் என்றால் எல்லாரும் பணக்காரர்கள் ஆகியிருக்க வேண்டுமே! ஏன் நம்மில் பலருக்கு பணப்பற்றாக்குறை உள்ளது? ஆழ்மனச் சக்தி, அஃபர்மேஷன், நேர்மறை சிந்தனை எல்லாம் வேலை செய்யவில்லையா பண விஷயத்தில்?
இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பணம் இல்லை என்று குறை சொல்பவர்களைக் கொஞ்சம் அலசலாமா?
பண பயம்
“பணம் என்ன மரத்திலயா காய்க்குது!, “ பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படணும்.” “பணம் வந்தா நிம்மதி போயிடும்”, “ நம்ம ராசி சாண் ஏறுனா முழம் சறுக்கும்”, “பண விஷயத்தில யாரையும் நம்ப முடியாது” “அளவுக்கு அதிகமா ஆசைப்படக்கூடாது”, “ஒரு செலவு போனா அடுத்த செலவு கரெக்ட்டா வந்திரும்” “நம்மளுக்கு கை கொடுக்க ஆளில்லை”, “நமக்கு இதுவே ஜாஸ்தி”, “ஒரு ஜாக்பாட் அடிச்சா எல்லாம் சரியாயிடும்” “கடனைக் கடன் வாங்கித்தான் அடைக்க வேண்டியிருக்கு” - இப்படி அதிகமாக அவர்கள் பேசும் எண்ணங்கள் என்ன என்று கூர்ந்து நோக்குங்கள். காரணம் புரியும்.
பணம் சம்பாதிக்கும் லட்சியத்தை விடப் பணம் பற்றிய பயமும் பேராசையும்தான் தவறான முடிவுகளை எடுக்கவைக்கும்.
தடால் தீர்வு
பணச்சிக்கலில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தப் பணத்தேவையையும் ஏதாவது ஒன்றைத் தடாலெனச் செய்து தீர்க்க நினைப்பார்கள். பணம் தேவையா? எங்காவது கடன் வாங்கு அல்லது அடகு வை அல்லது எதையாவது விற்று ஏற்பாடு பண்ணு. எதையாவது செய்து பணம் புரட்டு. இந்த அவசரமும், எதையும் அலசி ஆராயாமல் எடுக்கும் முடிவுக்குக் காரணமான எண்ணம்: “இதை இப்போது சமாளிக்கலாம். பிறகு வருவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!” என்பதுதான்.
இந்த எண்ணமும் செயலும் காலம் காலமாய்த் தொடரும். பிறகு இது வாழ்க்கை முறை ஆகும்.
ஒரு நண்பர் சொன்னார்: “எனக்கு வர வேண்டிய கடன் தொகை 16 லட்சம். கொடுக்க வேண்டிய கடன் 12 லட்சம் தான். ஆனால் வர வேண்டியது நேரத்துல வராததால் சொத்தை வச்சு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்கிறேன்..” ரொட்டேஷன் என்பது தமிழ்ச்சொல் போலவே ஆகிவிட்டது. இது நாயர் பிடித்த புலி வால் கதைதான். முதலில் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு புது ஆளிடம் கடன் வாங்குவது. எந்தக் காலத்திலும் செலவும் குறையாது. கடனும் முடியாது. கடனால் மூழ்கிய குடும்பங்கள் பல எனக்குத் தெரியும்.
பணக் கண்ணோட்டம்
வரவுக்கும் மேலே செலவு செய்வது, தெரியாத தொழிலில் முதலீடு செய்வது, பணம் இல்லை என்பதற்காக எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ளாதது, எப்படியாவது கடன் வாங்கலாம் என்ற துணிச்சல், தவறான பொருளாதார முடிவுகள் எடுப்பது, பிறர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது என்று ஏராளமான தவறான முடிவுகளுக்குக் காரணம் பணம் பற்றிய பிசகான எண்ணங்களே. பண ஆசை இருந்தும் பணம் பற்றிய பிழையான எண்ணங்கள் தவறான முடிவுகளையே எடுக்க வைக்கும்.
உலகின் பணம் கொழிக்கும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் சரி, மார்வாடிகளாக இருந்தாலும் சரி, செட்டியார்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்குப் பணம் பற்றிய சில அடிப்படையான கண்ணோட்டங்கள் உண்டு.
வேலை,தொழில் தரும் பணம்
சிக்கனம் முக்கியம். சின்ன வரவு செலவுக்கும் கணக்கு வேண்டும். உறவு என்றாலும் பண விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும். வீணான பகட்டுச் செலவை விடக் கையிருப்பு சொத்தே சமூக மதிப்பு. எல்லா வயதிலும் உழைக்க வேண்டும். எளிய வாழ்க்கை வாழ வேண்டும். உத்தரவாதம் தராத தொழில்களில் முதலீடுகள் கூடாது. எல்லாவற்றையும் விட “பணம் சம்பாதிப்பது மிக முக்கியம். அதைத் திறன்படச் செய்வது தான் உயர்வுக்கு வழி” என்பதை உணர்ந்தவர்கள்.
மீட்டர் வட்டி, சீட்டுக்கம்பெனி மோசடி என அனைத்துப் பொருளாதார மோசடிகளிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். “எதையாவது செய்து சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும்” எனும் எண்ணம் தான் அவர்களைப் புதைகுழியில் தள்ளுகிறது.
நல்ல வேலையில், நல்ல தொழிலில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் பணத்தை எண்ணுவதை விட அதன் காரணமான வேலையையும் தொழிலையும் பற்றி அதிகம் எண்ணுவர். தொழில் மேம்படும்போது செல்வம் கொழிக்கும்.
பற்றாக்குறை மனநிலை
பிடித்ததை நம்பிக்கையுடன் செய்யும்போதும் பணம் வரும். இதுதான் உண்மை. பணம் பற்றிய பயம் இல்லாதபோது பணம் வரும். பணம் பற்றிய எண்ணத்துடன் கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவை உள்ளபோது செல்வம் சேராது.
பற்றாக்குறை மன நிலையில் பணத்துக்காகப் போராடுகையில் பணம் என்றும் பற்றாக்குறையாகவே இருக்கும்.
பணம் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இருங்கள். லக்ஷ்மி வரும் போது வரவேற்பது போல, போகும்போதும் வாழ்த்தி, நன்றி சொல்லி, மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தியுங்கள்.
பணம் தரும் பாடங்கள்
“எனக்குப் பணம் பெரிசில்லை...!” என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.
பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு சில பாடங்களை உங்களுக்கு வழங்க முயல்கிறது. அந்த பாடங்களை நீங்கள் கற்கும் வரை அவை உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்!
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து