Showing posts with label ஈமு. Show all posts
Showing posts with label ஈமு. Show all posts

Wednesday, August 29, 2012

ஈரோடு , சேலம் மாவட்ட மக்களே! உஷார் ! புதிய மோசடிகள் உலா

'ஈமு, நாட்டுக் கோழியைத் தொடர்ந்து அகர் மரம்



ஈமு கோழியை வைத்து ஏமாற்றப்பட்ட அதிர்வலையில் இருந்து மீள்வதற்குள், நாட்டுக் கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய், டேட்டா என்ட்ரி என்று வரிசையாகப் புகார்கள் கிளம்பவே, கொங்கு மண்டலம் அதிர்ந்து கிடக்கிறது!



ஈரோடு நசியனூரைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும், நந்து கொப்பரா பவுல்ட்ரி கேட்டில் ஃபார்ம்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஈரோடு, சேலம் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களில் புகார் கொடுத்தபடி உள்ளனர். இவர்கள் அனைவரும் கொப்பரைத் தேங்காய், நாட்டுக் கோழி, உயர்ரக ஆடு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள். புகார் கொடுத்தவர்கள் ஏமாந்த தொகை 100 கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. கம்பெனியின் எம்.டி. நந்தகுமாரும், அவருக்கு மூளையாகச் செயல்பட்ட ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.




நாட்டுக் கோழித் திட்டத்தில் ஏமாந்த சேலம் இருப்பாலை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், ''ஒன்றரை லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தினால், 300 நாட்டு கோழிக் குஞ்சுகளைத் தருவார்கள். அவர்களே பண்ணை அமைத்துக் கொடுத்து தீவனம், மருந்து, ஊசி எல்லாம் போடுவதாகவும் சொன்னார்கள். கோழிக் குஞ்சுகளைக் கவனமாக மூன்று மாதம் வளர்த்துக் கொடுத்தால், வாரம்தோறும் 2,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகச் சொன்னார்கள். கடன் வாங்கித்தான் ஒன்றரை லட்ச ரூபா கட்டினேன்.


 சொன்னபடியே 300 நாட்டுக் கோழிக் குஞ்சுகளைக் கொடுத்தவங்க, மூன்று வாரங்கள் சம்பளமும் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு வரலை. என்னை மாதிரி எங்க ஊரில் மட்டும் பணத்தைக் கட்டி நான்கு பண்ணைகள் போட்டிருக்காங்க. எங்களைப் பார்த்து 20-க்கும் மேற்பட்டவங்க வைப்புத் தொகை கட்டி ரெண்டு மாசமாகுது. அவங்களுக்குக் கோழிக் குஞ்சுகளும் தரலை. ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்டவங்க ஏமாந்து இருக்காங்க'' என்றார் கவலையுடன். 




சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ராணி, கொப்பரைத் தேங்காய் ஸ்கீமில் பணம் கட்டி ஏமாந்துள்ளார். ''எங்க வீட்டுக்காரர் மூட்டை தூக்கும் தொழிலாளி. நானும் ஏதாவது தொழில் செஞ்சா குடும்பக் கஷ்டம் தீரும்னுதான் இந்த ஸ்கீம்ல சேர்ந்தேன். ஒரு லட்சம் வைப்பு நிதியாகக் கொடுத்தால், வாரா வாரம் வெள்ளிக்கிழமை 4,000 கொப்பரைத் தேங்காய் போடுவாங்க. அதை உறிச்சு, தேங்காயை உடைச்சுக் காயவைச்சுக் கொடுத்தால், வாரத்துக்கு 3,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாச் சொன்னாங்க. அதனால், வட்டிக்குக் கடன் வாங்கிப் பணத்தைக் கட்டினோம். ரெண்டு வாரம் தேங்காய் போட்டாங்க. அதுக்குப் பிறகு வரலை. கம்பெனியில் போய் பார்த்தால், பூட்டிக்கிடக்குது'' என்று கண்ணீர் சிந்தினார்.



சேலம் மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் பேசியபோது. ''இவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள். ஈரோட்டில்தான் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள். அத்தனை புகார்களையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். விரைவில் அதிரடிகள் அரங்கேறும்'' என்றார்.



ஈரோடு சென்னிமலை தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், '''பண்ணைக் கோழி வளர்வதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகும். இந்த மூன்று மாதங்களுக்கும் நிறுவனங்கள் சொல்லும் கணக்குப்படி, செட் அமைத்துக் கொடுத்து தீவனம் தந்து, பராமரிப்புத் தொகையையும் கொடுப்பதாக இருந்தால், அந்த நிறுவனத்துக்கு ஒரு பண்ணைக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு பெரிய சந்தையும் கிடையாது. கோழி மற்றும் ஆடு பற்றி நம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தங்களுடைய பேராசை காரணமாக ஏமாறுகிறார்கள்.



ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்றும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்றவர்கள் என்றும் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் செய்கின்றனர். இதை ஏன் கால்நடைத் துறையோ மாவட்ட நிர்வாகமோ கவனிப்பது இல்லை? புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்பது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க கடுமையான சட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்'' என்றார்


.

கால்நடைத் துறை அமைச்சர் சின்னையாவிடம் பேசினோம். ''தனியார் நாட்டுக் கோழிப் பண்ணைகளுக்கு அரசு அங்கீகாரம் எதுவும் வழங்க வில்லை. அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறோம் என்று தனியார் ஒப்பந்தப் பண்ணைகள் கூறினால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



இந்தச் சிக்கல்கள் போதாது என்று இப்போது, 'அகர் மரம் வளர்ப்போம்... அரசனாய் வாழ்வோம்!’ என்ற புதிய திட்டம் கொங்கு மண்டலத்தில் பரபரக்கிறது. 'ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 200 மரக்கன்றுகளும், ஆறு வருடங்களுக்கு வருட போனஸ் 10 ஆயிரம் ரூபாயும், 6-வது வருட இறுதியில் 10 லட்ச ரூபாயும் கொடுப்போம்’ என்று தூண்டில் போடுகிறார்கள். 'மச்சி இந்த ஸ்கீம் நம்பிக்கையாத் தெரியுதே... பணம் கட்டலாமா?’ என்று ஏமாறத் தயாராகிறது இன்னொரு குரூப்!

நன்றி - ஜு வி

Saturday, August 11, 2012

35,000 கோடி ஊழல்!!! அடேங்கப்பா சி டி ரெடி

35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.! 


இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்தும் முக்கிய அம்சமாக இருப்பது கனிமக் கொள்ளைதான் போலும்! ஆந்திராவில் நடந்தது மாபெரும் கொள்ளை. கர்நாடகாவில் ஆட்சியையும் முதலமைச்சர் களையுமே ஆட்டுவிப்பதும் இதுதான். வடகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பசுமை வேட்டைக்குத் தூண்டுதலாய் அமைந்ததும் கனிம வளங்கள்தான். அரசாங்கத்தின் சொத்தை தனியார் கொள்ளை அடித்துப் பதுக்கிக்கொள்வது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக இந்த முதலைகள் சிக்க ஆரம்பித்து உள்ளனர்!



கனிம வளங்கள் குவிந்துகிடக்கும் நிலப் பகுதி மலையாக, காடாக, மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அவை உடனடியாக தேசியச் சொத்தாக மாற்றப்படும். அதன் பின் அவை அடிமாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குக் குத்தகை என்ற பெயரில் தாரைவார்க்கப்படும். இப்படித்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதற்கு ஆப்பு வைப்பதுபோல் ஒரு முடிவு எடுத்து கனிமக் கொள்ளையர்களைக் கதிகலங்க வைத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.



ஜார்கண்ட் மாநிலத்தின் காத்குரி மற்றும் மேற்கு சிங்பும் பகுதிகள் இரும்புத் தாது நிரம்பிய மாவட்டங்கள். இங்கு இரும்புத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்போகிறோம் என்று கூறி ஆறு தனியார் நிறுவனங்கள் மாநில அரசிடம் அனுமதி பெற்றன. பிறகுதான் அவை அனைத் துமே, இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. 

உடனே அவர் களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஜார்கண்ட் அரசு ரத்து செய்தது. ஜார்கண்ட் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெச்.எல்.கோகலே ஆகியோர், 'கனிம வளங்கள் தேசிய சொத்து. தேசிய சொத்தைக் குத்தகைக்கு விடுவது, விடப்பட்ட குத்தகையை ரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகள் சுரங்கம் மற்றும் கனிம சட்டங்களுக்கு உட்பட்டது.



 இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. கனிம வளங்கள் உள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அவர்கள் அதை குத்தகைக்குப் பெற்றிருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் கனிமங்கள் அரசுக்குச் சொந்தமானவைதான். கனிம வளங்களை அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி வேறு யாரும் அதற்கு உரிமை கோர முடியாது’ என்று கூறி தனியார் நிறுவனங்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டனர். ஜார்கண்ட் அரசின் நடவடிக்கையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்தில்கொண்டால், மதுரை கிரானைட் குவாரிகளுக்கும் இந்தத் தீர்ப்பு அப்படியே பொருந்தும்.



இந்த நிலையில், ''கிரானைட் குவாரி மோசடி வழக்கில் சிலதனியார் முதலாளிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளது தமிழ்நாடு கனிம வள நிறுவன ஊழியர் சங்கம். அதன் செயலாளர் விஜயனைச் சந்தித்தோம். 



''அதிகாரிகளின் தில்லுமுல்லுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், டாமின் நிறுவனம் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தை 1979-ம் ஆண்டு, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இதன் பிரதான நோக்கம், கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதும், மண்ணுக்கு அடியில் வீணாகப் புதைந்துகிடக்கும் கனிமங்களைக் கண்டுபிடித்து, அவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நாட்டின் வருவாயை உயர்த்துவதும்தான். டாமின் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீடு 100 கோடி ரூபாய். கனிம வளங்களைக் கண்டுபிடிப்பதும், அவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்வதும் முழுக்க முழுக்க டாமின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதேபோல், கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருந்தாலும், அவை அரசுக்குத்தான் சொந்தம் என்ற நிலை இருந்தது.



10 ஆண்டுகளுக்கு முன்பு டாமின் நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் உள்ள கனிமங்களை வெட்டி எடுக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை நிலத்தின் சொந்தக்காரர்களே வெட்டி எடுத்து விற்பனையும் செய்யலாம் என்று விதிமுறைகள் மாற்றப்பட்டன. இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் டாமின் அதிகாரிகள் தங்கள் வசம் வைத்திருந்தனர். இதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருந்ததைப்போல், தனியார் முதலாளிகள் தங்கள் தகிடுதத்தங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.



டாமின் நிறுவனத்தில் கனிமங்கள் வெட்டி எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அதற்கு அருகிலேயே ஒரு பட்டா இடத்தை வாங்குவார்கள். அங்கு கிரானைட் கிடைக்கிறதோ இல்லையோ... அங்கும் கற்கள் வெட்டும் பணி நடைபெறும். அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் தனியார் குவாரிக்குக் கடத்தப்படும். பின், அந்தக் கற்கள் தனியார் குவாரியிலேயே வெட்டி எடுக்கப் பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்படும். இதை கண்காணித்துப் பதிவுசெய்ய வேண்டிய உதவி இயக்குனர் (சுரங்கம்), வருவாய்த் துறை கோட்ட மேலாளர் போன்றவர்களை தனியார் முதலாளிகள்  கவனித்துவிடுவார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலாளிகளுக்குப் போய்ச்சேரும். உதாரணமாக மதுரையில் உள்ள அரசு டாமின் குவாரிக்கு 30 அடி தூரத்தில், அரசியல் செல்வாக்குள்ள மனிதரின் மகனுக்குச் சொந்தமான  கிரானைட் குவாரி உள்ளது. அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் எல்லாம், இந்தக் குவாரியில் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப் பட்டு உள்ளது

.

இதேபோல், வேலூர் மாவட்டம் மகிமண்டலம் என்ற ஊரில் வெட்டி எடுக்கப்பட்ட 45 கன மீட்டர் அளவுள்ள கற்களை 3 க.மீ அளவுள்ள கற்கள் என்று போலியாகக் கணக்கு காட்டி உள்ளனர். ஒரு க.மீ. கறுப்பு கிரானைட் கல்லின் விலை 70 ஆயிரம் ரூபாய். அப்படியானால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதேபோல், மேலூரில் பி.ஆர்.பி. நிறுவனம் 100 அடி ஆழத்துக்குக் கற்களை வெட்டி எடுத்துள்ளது. இதைப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.



இந்தத் தொழிலில், தனியார் நிறுவனங்கள் லாபம் மட்டும் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்போது, தமிழக அரசின் கனிம வள நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே லாபம் ஈட்டியுள்ளது. தனியார் முதலாளிகளின் கைக்கூலிகளாக அவர்கள் செயல் பட்ட காரணத்தால்தான், இத்தனை முறைகேடுகளும் நடந்தன. தற்போது, விதிமுறைகளை மீறி கொள்ளை லாபம் சம்பாதித்த சில தனியார் முதலாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த முதலாளிகளின் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். அதோடு முழுக்க முழுக்க கனிம வளத்தைத் தோண்டி எடுக்கும் பணிகளை முன்பு போல் அரசே செய்ய வேண்டும்'' என்றார் விரிவாக.



''மதுரை கலெக்டராக இருந்த சகாயம் ஒரு கணக்குப் போட்டு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மதுரை வட்டாரத்தில் இருக்கும் கனிம வளங்களைக் கணக்கிட்டு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வந்துள்ளோம்'' என்று இப்போது சொல்லும் சில உயர் அதிகாரிகள், ''வருவாய்த் துறை, கனிமவளத் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இதுவரை இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்துள்ளன என்பதற்கான பட்டியலை சி.டி.யாக தயாரித்து வைத்துள்ளார்கள்.


டைரியில் எழுதியும் வைத்துள்ளார்கள். அதன் விவரங்கள் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இப்படி மாமூல் வாங்கிய மந்திரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் பட்டியல் பெரியது!'' என்கிறார்கள். இதனைத் தெரிந்துகொண்ட குவாரி அதிபர் ஒருவர், ஆட்சியை மிரட்டும் தொனியில் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியதாகவும் அவர் அதனை டேப் செய்து கோட்டைப் பிரமுகர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது அரசு நடவடிக்கையின் வேகத்தை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது.



அதிரடி தொடரட்டும்!



'சத்யராஜ், சரத்குமார் சொன்னதால பணம் போட்டோம்!''



ஈமு ஓட்டம்... பதறும் முதலீட்டாளர்கள்!



எத்தனையோ முறை சொன்னோம். ஆனால், பட்டால்தான் திருந்துவோம் என்ற முடிவோடு ஏமாந்தவர்களை என்னவென்று சொல்வது!



ஈமு கோழியில் முதலீடு செய்பவர்களைத் தொடர்ந்து எச்சரித்து வந்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன், கோபிசெட்டிபாளையத்தில் கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது புகார் கிளம்பியது. இப்போது, பெருந்துறையைச் சேர்ந்த சுசி ஈமு ஃபார்ம்ஸ் காவல்துறையின் பிடிக்குள் சிக்கி இருக்கிறது. ஏமாற்றப்பட்டு நொந்துபோய் இருக்கும் விவசாயிகள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடவே, இந்த நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் செய்யவே ஏரியா கலகலக்கிறது.



ஈமு வளர்ப்பு மோசடிக்கு எதிராக பல வருடங்களாகப் போராடி வரும் வழக்கறிஞர் தளபதியைச் சந்தித்தோம். ''சுசி ஈமு நிறுவனத்தின் அதிபர் குரு என்ற குருசாமி. இவர், பெருந்துறை நகர பா.ம.க. செயலாளராக இருந்தவர். இத னால் அவருக்கு ஒரு அறிமுகம் இருந்தது. மேலும், ஈமுவுக்காக விளம்பரம் செய்த நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சரத்குமார் மீது மக்களுக்கு நிறைய மரியாதை இருக் கிறது. 

 

அதனால்தான், பாமர கிராம விவ சாயிகள் உட்பட 25,000 பேருக்கும் மேல் முதலீடு செய்தனர். மொத்த முதலீடு 600 கோடி ரூபாயைத் தாண்டி இருக்கலாம். இந்த மோசடிக்கு மாவட்ட நிர்வாகம், கால்நடைத் துறையும் உடந்தையாக இருந்துள்ளன. இவர்கள் அனைவரின் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் ஆவேசமாக.



சுசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பேசியவர்கள், ''எங்க நிறுவனத்தின் உரிமையாளர் குரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இங்கே உள்ள ஆதிக்க சமுதாயத்தினரும், காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் மாமூல் கேட்டு தொடர்ந்து அவரை மிரட்டி வந்தனர். ஆனால், மாமூல் கொடுக்க குரு மறுத்து விட்டார். அதனால், ஆட்களைத் தயார் செய்து, ஒரே சமயத்தில் எங்கள் நிறுவனத்தை முற்றுகையிட வைத்து பிரச்னை ஆக்கி விட்டனர். முதலீட்டாளர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றனர்.



விளம்பரத்தில் நடித்த நடிகர் சத்யராஜிடம் பேசினோம். ''ஈமு கோழி விளம்பரம்னு சொன்னாங்க. நடிச்சுக் கொடுத்தேன். மத்தபடி அதுல இருக்கும் நல்லது கெட்டது எல்லாம் எனக்குத் தெரியாதுங்க'' என்று சொன்னார்.




சரத்குமார் தரப்பிலோ, ''சுசி ஈமு நிறுவனத்தினர் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகின்றனர். அதற்கான விளம்பரத்தில், ஈமு கோழியின் கறி உடலுக்கு நல்லது. ஈமு கோழி சாப்பிடுங்க என்பது மட்டும்தான் சரத்குமார் சொல்வதைப் போல வரும். மற்றபடி எந்த இடத்திலும் ஈமு வளர்த்தால் லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர் சொல்லவில்லை. அதுவும் இல்லாமல் விளம்பரத்தின் நம்பகத் தன்மைக்கு அதில் நடித்தவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இதை சட்டரீதியாக சந்திக்க சரத்குமார் தயாராக இருக்கிறார்'' என்றார்கள்.

ஆனால், மாமூல்

ஈமு தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன. 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. புகார் தருபவர்கள் சத்யராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் சொன்னதனால்தான் முதலீடு செய்தோம் என்கின்றனர். இந்த விஷயத்தில் நடிகர்களும் பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பக்கம் இருக்க... அந்தப் பண் ணைகளில் இருக்கும் ஈமுவுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லை. அதன் பசியைப் போக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.



ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்!



நன்றி - ஜூ வி

Tuesday, August 07, 2012

பெருந்துறை சுசி ஈமுப்பண்ணை - கோடிக்கணக்கில் மோசடி - தலைமறைவு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள்.


ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.. 

 ஒரு சோப் விளம்பரமோ, ஷாம்பு விளம்பரமோ இந்த அளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. ஆனால் லட்சக்கணக்கான முதலீடு சம்பந்தப்பட்ட மேட்டர் என்பதால் மக்கள் ஒரு நம்பகத்தன்மையை  சினிமா பிரபலங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். 


மக்கள் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. சினிமா பிரபலங்களும் காசு கிடைக்குதுன்னு கண்ட கண்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்.. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இமேஜும் தான்..


நேற்று மாலை 5 மணிக்கு  முதலீட்டாளர்கள் வாசலில் கூடி நின்று கோஷம் போட்டிருக்கிறார்கள்.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு, லாபம் ஏதும் வேண்டாம், முதலீட்டுத்தொகை மட்டும் போதும் என  கெஞ்சிக்கேட்டும் பொறுப்பான பதில் இல்லை..


ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களில் மட்டும்  கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.. முழுமையான விபரம் இன்னும் 2 நாட்களில் தெரியும்..  பணத்தை இழந்தவர்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வருகிறார்கள்.. பலர் வெளியே சொன்னால் கேவலம் என்று யோசித்து வருகிறார்கள்..


 கலைமகள் சபா, தேக்கு மர மோசடி ஆகியவற்றுக்குப்பின் சமீபத்தில் நடந்த மிகப்பெரும் மோசடி இதுதான்.. கவுண்டர்கள் , முதலியார்கள் சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது ..


ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ 6000 தருவதாக வாகு கொடுத்தவர்கள் அபப்டி தர முடியாததால்  வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் கேள்விக்கு பதில் தர முடியாமல் திணறினர்..

 அரசு 80 ப்பைசா வட்டி தருது, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தனியார் சீட்டு நிறுவனங்கள் நமக்கு ரூ 2 முதல் ரூ3 வரை வட்டி தருது.. அப்படி இருக்க ரூ 100க்கு ரூ 6 வட்டி என்றதும் மக்கள் அது எப்படி முடியும்? என்றெல்லாம் யோசிக்காமல் முதலீட்டை அள்ளி அள்ளி வழங்கினர்,..


இப்போ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற பழமொழிக்கெற்ப சோகத்தோடு உலா வருகின்றனர்..


ஈமு கோழிகளுக்கு தீவனம் வழங்கும் நிறுவனத்துக்கு இவர்கள் ரூ 1,34,000 பாக்கி வைத்திருக்கிறார்கள்.. எனவே அவர்கள் சப்ளையை நிறுத்தி விட்டார்கள். விஷயம் வெளீயே கசிந்ததும் மக்கள் பொங்கி விட்டார்கள்..


 மக்களின் புகாருக்குப்பின் போலீஸ் பெருந்துறை சுசி பண்ணை உரிமையாளர்  குருவை தொடர்பு கொண்டபோது அண்ணன் செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீ விட்டிருந்தார்.. கம்ப்யூட்டர்களை செக் பண்ணியபோது அவர்கள் வங்கிக்கணக்கில் ரூ  18,78,000 மட்டுமே இருந்தது..


இது மேலும் அதிர்ச்சி.,. ஏன்னா குறைஞ்ச பட்சம் 1000 பேர் தலா 1 லட்சம்னு முதலீடு  கணக்கு போட்டலும் 10 கோடி ரூபா இருக்கனும்.. எல்லாம் ஸ்வாகாவா? தெரியலை




 சுசி ஈமு பண்ணை ஒரு வருடம் முன் தமிழ் முரசு பத்திரிக்கைக்கு கொடுத்த இண்ட்டர்வியூவை இப்போ பார்ப்போம்






‘ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவது:





நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்து வந்தேன். விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன். ஆந்திரா, புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டேன்
.




2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும்  வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த் தேன். ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.  சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.




சந்தை வாய்ப்பு!



ஈமு இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.




பயன்கள்: மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது ஈமுவில் கழிவு குறைவு. முட்டை, இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. ஈமு கோழிகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் ஈமு. ஈமு இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.  40 முதல் 45 கிலோ எடை கொண்ட ஈமுவை இறைச்சிக்காக வெட்டும்போது 10 முதல் 12 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.



கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 முதல் 6 லிட்டர் ஈமு எண் ணெய் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு ஈமுவில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.



இதன் சிறகுகள்  கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களை சுத்தம் செய்யும் பிரஷ்கள் தயாரிக்கவும், அழகான தொப்பிகள், ஆடைகளின் மேல் அழகு வேலை பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாஸ்து பொருளாகவும் ஈமு முட்டைகளை பயன்படுத்துகின்றனர். ஈமு முட்டைகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு


பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி ஈமு குஞ்சுகள்(ரூ.75 ஆயிரம்) வேண்டும். 40 அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், தண்ணீர் தொட்டி (இதற்கு செலவு ரூ.15 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.



எங்கு வாங்கலாம்?



ஈமு குஞ்சுகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள ஈமு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.



குஞ்சுகள் தேர்வு



ஈமு குஞ்சுகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, கால்களை வளைக்காமல் நடக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேற்பட்ட குஞ்சுகளைதான் வாங்க வேண்டும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு 3 மாதம் வரை உடல் பகுதியில் வெள்ளை கோடுகள் இருக்கும். 3 மாதத்துக்கு பின் கோடுகள் மறைந்து இயல்பான நிறம் வரும். 3 மாத ஈமு, 4 முதல் 6 கிலோ எடை இருக்கும்.



வளர்ப்பு முறை



3 மாத குஞ்சுகளை வாங்கிவந்து 5 மாதம் வரை கூட்டமாக வளர்க்கலாம். ஆண், பெண் தெரிந்த பின்  தனித்தனியாக பிரித்து வளர்க்க வேண்டும். பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் முட்டையிடும் பருவத்துக்கு வரும். தொண்டையில் இருந்து தும்தும் என ஒலி எழுப்புவதை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம்.   24வது மாதத்தில் இனச்சேர்க்கைக்கு  விட்டால் அதிக முட்டை கிடைப்பதோடு தரமான குஞ்சுகளையும் பொரிக்க வைக்க முடியும்.



குஞ்சு பொரிப்பு


ஹேச்சர் மெஷினில் ஒரே நேரத்தில் 700 முட்டைகளை அடுக்கி வைத்து, 93 முதல் 96 டிகிரி வரை தொடர்ந்து 52 நாட்களுக்கு  வைத்திருக்க வேண்டும். பொரித்த குஞ்சுகளுக்கு கால்கள் வளையாமல் இருக்க 2 கால்களையும் சேர்த்து டேப் மூலம் ஒட்டி விடவேண்டும். 15 நாட்களுக்கு பின் டேப்பை பிரித்து இன்குபேட்டரில் 20 நாட்களுக்கு வைக்க வேண்டும். பின்னர் குஞ்சுகளுக்காக தனியாக ஷெட் அமைத்து ஒரு மாதம் வளர்க்க வேண்டும். 3 மாதத்துக்கு பின்னர் வளர்ந்த கோழியாக மாறும்.



வருமானம்


3 மாத வயதுள்ள 5 ஜோடி ஈமு வளர்த்தால் 16 மாதத்துக்குள் 30 கிலோ எடையுள்ள ஈமு கோழி கிடைக்கும். 5 ஜோடியும் சராசரியாக 30 கிலோ எடை இருந்தால் 300 கிலோ இறைச்சி கிடைக்கும். ஒரு கிலோ இறைச்சி குறைந்தபட்சம் ரூ.295க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் ரூ.88,500 கிடைக்கும். வெட்டப்படும் கோழிகளில் இருந்து 5 லிட்டர் எண்ணெய் வீதம் 5 ஜோடி ஈமுவுக்கு 50 லிட்டர் ஈமு எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் ரூ.1500க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.75 ஆயிரம் கிடைக்கும். இறைச்சி, கொழுப்பு மூலம் ஒரு ஆண்டில் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 கிடைக்கும்.


இதற்கான செலவு 5 ஜோடி ஈமு கோழிகள் ரூ.75 ஆயிரம், 15 மாதத்திற்கு அதற்கான தீனி உள்பட மற்ற செலவுகள் ரூ.25 ஆயிரம். ஆண்டு முடிவில் 5 ஜோடிகளுக்கு மட்டும் ரூ.63,500 வருமானம் கிடைக்கும். 15 மாதத்தில் இறைச்சிக்காக ஈமுக்களை


இனவிருத்தி செய்து வளர்த்தால் பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் பருவத்துக்கு வந்து ஆண்டுக்கு 20 முட்டைகள் தரும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான 60 குஞ்சுகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம்.



தினமணி செய்தி - ஈரோடு பகுதியில் சுசீ ஈமு ஃபார்ம் - ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் கடந்த 3 நாள்களாக கோழித் தீவனம் இன்றி திண்டாடுவதால், ஈமு கோழிகள் தீவனம் இன்றி வாடிப் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 


சுசீ ஈமு ஃபார்ம் கோழிப் பண்ணையில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்து, பண்ணையை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பண்ணையின் செயல்பாடு தடைப்பட்டுள்ளது. கோழிப் பண்ணை நிர்வாக இயக்குனர் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர் போலீஸார். இந்நிலையில் இன்று அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 


அதிகாரிகள் அந்தக் கோழி நிறுவனத்தின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த 75 ஆயிரம் ஈமு கோழிகளுக்குத் தேவையான தீவனம் நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. கடந்த 3 நாள்களாக கோழிகள் தீவனமின்றி இருந்ததும் தெரியவந்தது. அதிகாரிகளும் அவற்றின் தீவனத்துக்கு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். கோழிகளையும் அழிக்க முடியாது என்பதால் சரியான தீர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 



நன்றி - ஈரோடு சோழமண்டலம்  ஃபைனான்ஸ் கதிர், தமிழ் முரசு, பெருந்துறை நகர பொதுமக்கள், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு, தினமணி

Thursday, May 03, 2012

ஈரோடு மக்களை முட்டாள் ஆக்கும் ஈமு கோழி மோசடி

''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' - இப்படிப்பட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் இன்று ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை கலங்கடித்து வருகின்றன.


'பொன்ஸி’ நிதி மோசடித் திட்டம் போல நடந்துவரும் இத்திட்டங்களில் உள்ள  ஆபத்தை உணராமல், அப்பாவி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் கொண்டு போய் கொட்டுவதைப் பார்த்து, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம். ( விகடன் டீம்)


நாம் முதலில் சந்தித்தது தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமியை.

''ஒப்பந்த முறையில் ஈமு கோழி வளர்க்க விரும்புபவர்கள், முதலில் 1.5 லட்சம் ரூபாயை டெபாசிட்-ஆக கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து மூன்று மாத வயதுடைய ஆறு ஈமு கோழி குஞ்சுகளை தருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனமே அந்த ஆறு கோழிகளையும் திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்லி ஒப்பந்தம். 


இதில் அதிர்ச்சி என்ன வெனில், இரண்டு ஆண்டு வரை கோழிகளை வளர்க்கும் நபருக்கு கோழித் தீவனம் வழங்குவதுடன், வளர்ப்புக் கூலியாக மாதம் 6,000 ரூபாயும், ஆண்டு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாயும் கொடுப்பதாகவும் ஒப்பந்தத்தில் சொல்கிறார்கள். முதலீடு செய்த பணமும் கிடைக்கிறது; கூடவே மாத வருமானமும் வருகிறது என்று நினைத்து அப்பாவி மக்கள் ஈசல் போல இத்திட்டத்தில் விழுகிறார்கள்'' என்றார் சுப்பு.


இதெல்லாம் எப்படி சாத்தியம்? 


'ஒரு ஈமு கோழி ஆண்டுக்கு 30 முட்டை வரை இடும். ஒரு முட்டையின் விலை 1,500 ரூபாய்.  சேதாரம் போக 22 முட்டைகள் தேறினால், 33 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.


30 கிலோ கறி மூலம் 9,000 ரூபாயும், 3 கிலோ கொழுப்பு எண்ணெய் மூலம் 7,500 ரூபாயும் மற்றும் அலங்கார பொருட்களாகும் இதன் இறகுகள், மருத்துவக் குணம் கொண்ட எலும்புகள், நகம் உள்ளிட்டவைகள் மூலம் 5,000 ரூபாய் என மொத்தம் 54,500 ரூபாய் கிடைக்கும்' என்கின்றன  ஈமு கோழி வளர்க்கும் நிறுவனங்கள். 


இதுபற்றி தடப்பள்ளி அரக்கன்கோட்டை நீர் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் சுபி.தளபதியிடமும் பேசினோம்.


''ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட ஓப்பந்தமுறை ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தங்க நாணயம் தருகிறோம், போனஸ் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன இந்நிறுவனங்கள். 


மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒப்பந்தமுறை ஈமு கோழி வளர்த்துவந்த ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக கண்டுபிடித்து, அந்நிறுவனத்தை தடை செய்திருக்கிறது மகாராஷ்டிரா அரசாங்கம். அதேபோல ஆசை வார்த்தைகளைச் சொல்லி, இங்கும் மக்களை ஏமாற்றி வருகின்றன சில நிறுவனங்கள்'' என்றார்.   


எனினும், கோவையைச் சுற்றியுள்ள நான்கைந்து மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இத்திட்டங்களில் முதலீடாகி இருப்பதாகச்  சொல்கிறார்கள் வேறு சிலர்.


கடந்த பத்து ஆண்டுகளாக ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருபவரும், தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவருமான ராஜேந்திரகுமாரிடம் பேசினோம்.


''தமிழகத்திலிருந்து ஈமு கோழியின் மூலம் பெறப்படும் எந்த ஒரு பொருளும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதை பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளும் இங்கு இல்லை. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சொல்வதிலும் உண்மை இல்லை'' என்றார்.


இத்திட்டம் பற்றி இதுவரை அரசுத் தரப்பில் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தென் மாவட்டங்களுக்கு பரவ ஆரம்பித்திருப்பது அபாயகரமான வளர்ச்சிதான்!




மக்கள் கருத்து

1.mahendran.r
 
தமிழ்நாட்டில் ஈமு கறி விற்பனை அப்படி ஒன்றும் சொல்லிக்கொல்வது போல் இல்லை. எங்கும் ஏற்றுமதியும் இல்லை, எப்படி காசு வளரும்? அடுத்தவர் முதலீட்டில் (வைப்புத்தொகை) இருந்துதான் உங்கள் பணம் வரும் போல் தெரிகிறது! 1.5 லட்சம் வைப்புத்தொகை=>6000*12 20000 54500=146500=> என்ன லாபம்? இதுவும் காந்தப்படுக்கை மோசடி போல் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
2.ram1
 
நிறைய தொலைக்காட்சிகளில் இத்திட்டத்தை பற்றிய விளம்பரங்கள் பிரபல நடிகர்களின் நடிப்போடு வெளிவருகின்றது.

நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் முதலில் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் அவர்கள் சொன்னபடி தந்து விட்டார்கள்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் ஆண்டிற்கு 25 சதவீதம் வட்டி தருவதாகவும், ஈமு நிறுவனஙள் பொதுமக்களிடம் வாங்கும் பணத்தை அதில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியை பொதுமக்களுக்கே திருப்பி தருவதாகவும். எஞ்சிய தொகை தான் ஈமு நிறுவனங்களின் வருமானம் என்றும் கூறப்படுகிறது.

மற்றபடி கோழி வளர்ப்பெல்லாம் ஒரு கண்துடைப்பென்றே ஒரு சிலர் கூறுகின்றார்கள்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈமு நிறுவனங்களில் மக்கள் டெபாசிட் செய்வது குறைந்தாலோ, அல்லது மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் திவாலானாலோ (ஏமாற்றினாலோ) தான் மக்களுக்கு பணத்தை திருப்பி தரமுடியாத சூழ் நிலை ஏற்படும்.

அதன் பிறகு தெரியும், சுசி, ருசி, பசி எல்லாம்.


நன்றி - நாணயம் விகடன்




டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.