Showing posts with label இயக்குநர் மிஷ்கின். Show all posts
Showing posts with label இயக்குநர் மிஷ்கின். Show all posts

Thursday, October 08, 2015

'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம்

"சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'" என்று வெற்றிமாறனுக்கு இயக்குநர் மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. வெனீஸ் திரைப்பட விழாவில் இப்படம் "மனித உரிமை சினிமா விருது" என்ற விருதை வென்றிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு இயக்குநர்கள் படக்குழு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
'விசாரணை' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு மிஷ்கின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
வெனீஸ் நகர திரைப்பட விழாவில் உன்னுடைய 'விசாரணை' திரைப்படம் சிறப்புப் பரிசு பெற்றதையெடுத்து, உனக்கு தொலைபேசி மூலம் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அப்போது, நீ என்னை உன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அத்திரைப்படத்தின் ஒரு காட்சியைக் காண்பித்தாய். அதில் பரவியிருந்த குரூரமும், நேர்மையும் என் ஆழ்மனத்தை உலுக்கியது. அதிர்ந்தவனாய் என் அலுவலகத்திற்கு திரும்பினேன்.
என் நண்பர்கள் "படம் பார்த்தாயா? எப்படியுள்ளது 'விசாரணை'?" என்று விசாரித்தனர். என் மெளனம் உடைந்தது, என் எண்ணவோட்டத்தினை பகிர்ந்தேன். அவர்கள் அமைதியானார்கள்.
மறுநாள், சி. மோகனை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். மிகுந்த ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றியபடி, "'விசாரணை' பார்த்தாயா?" என்று கேட்க, "நான் இன்னும் பார்க்கவில்லை" என்று கூறினேன். "நீ நிச்சயம் பார்க்க வேண்டும், பிரமாதமான படமது" என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. அவரது கண்களில் நேர்மை பளிச்சிட்டது.
பின்பு நான் உன்னை அழைத்து "எனக்கு முழுப்படத்தினையும் காண்பி" எனக் கேட்டேன். இன்னும் சில இயக்குநர்களை ஒன்று சேர்க்கட் சொன்னாய், மறுநாள் உன்னுடைய அலுவலகத்தில், எடிட்டிங் ரூமில் காட்டப்படும் என முடிவானது. நான் மற்ற இயக்குநர்களை தொடர்புகொள்ள ஆரம்பித்தேன், பாலாஜி சக்திவேல் என்றவொரு திருடன், "நாம் வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா" என்று கேட்டான். சரிதானே எனத் தோன்றியது. மறுகணமே, என் அலுவலகத்தில் சிறிய விழாவொன்றுக்கான ஏற்பாட்டினை ஆரம்பித்து, இயக்குநர்களை அழைக்க ஆரம்பித்தேன்.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி படைப்பாளிகளுக்கும், "வெற்றிமாறனின் வெற்றியைக் கொண்டாடலாமா?" எனக்கேட்டு மெசேஜ் தட்டினேன். சரி, நான்கைந்து பேராவது வந்தால் போதுமே என்று தான் என் எண்ணமாக இருந்தது. அனைவருமே 'சரி' என மறுகணமே பதிலளித்தனர்.
மகிழ்ச்சிக் களிப்பில், அன்று முழுவதும் விழாவிற்கான வேலையில் ஈடுபட்டு கடைசியில் படம் பார்க்க முடியாமல் போனது. ஆனால், மற்ற இயக்குநர்கள் உன் அலுவலகத்தினில் படம் பார்த்தனர். சிலர் அமைதியானார்கள், சிலர் புகழ்ந்தார்கள், சிலர் அழுதார்கள்.. சிலர்...
விழாவிற்கு முதல் ஆளாக மணிரத்னம் வந்து நின்றார். அவர் படம் பார்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து பாலா, ஷங்கர், லிங்குசாமி, ராம், சமுத்திரக்கனி, மோகன் ராஜா, பாலாஜி சக்திவேல், கே.வி.ஆனந்த், எஸ்.பி.ஜனநாதான், சசி, மணிகண்டன், ரஞ்சித், சுப்ரமணிய சிவா, ரோகினி, ஸ்டான்லி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், மகேஷ் முத்துசாமி, ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், உனது சக தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். மேடை வலுத்திருந்தது.
ரோகிணி தொகுத்து வழங்க, மணிரத்னம் 'விசாரணை' திரைப்படத்தின் மீது புகழ் கிரீடம் சூட்டினார். படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனியோ பேச நா எழாது உறைந்து நெகிழ்ச்சியுடன் நின்றான். திரைப்படம் கொடுத்த அனுபவத்தினை வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல் மெளனத்தில் தஞ்சமடைந்தான் பாலாஜி சக்திவேல். "நான் பேச மாட்டேன். ஆனால், இப்படத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒலிப்பெருக்கியாவேன்" என்றார் ஸ்டான்லி. உன் தைரியத்தினைப் பற்றி வியந்து பேசினார் சுப்ரமணியசிவா. "என் படம் விசாரணை முன் ஒன்றுமேயில்லை" என்றான் மணிகண்டன்..
உன் படத்தின் ஒளிப்பதிவாளருக்கோ பேச்சு எழவில்லை, உன் கலை இயக்குநர், "நான் மேடையேற மாட்டேன்" என்று கூறி உரக்க "நன்றி" சொல்லி அமர்ந்தார். படம் பார்க்காத மற்றவர்கள் எதுவும் புரியாமல், எல்லோருக்கும் புரிந்த ஒற்றை வாக்கியமான 'வெற்றி பெற வாழ்த்துகள்' என்று சொல்லி தப்பித்தனர்.
பிறகு விருந்து தொடங்கியது. ஆலமரத்தின் கிளைகளில் வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான பறவைகள் போல் கலகலவென்ற குதூகலப் பேச்சொலி.. பிறகு இசைந்தோடியது இளையராஜாவின் பாட்டு. அதில் மயங்கினோம், பாலாஜி சக்திவேலின் சேட்டைகளுக்கு சிரித்து விழுந்தோம். பின்பு மரத்திலிருந்து இறங்கி மனதை வெற்றிடம் ஆக்கிரமிக்க, வீட்டை நோக்கி நகர்ந்தோம்.
மறுநாள் நான் ஃபோர் பிரேமிஸில் 'விசாரணை' படம் பார்த்தேன். படத்தின் முடிவில் "எண்ட் கிரெட்டிட்ஸ்" வரும் முன்னே நான் திரையரங்கினை விட்டு வெளியே ஒடி வந்து என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
"விசாரணையின் ஒற்றைக் காட்சியைப் பார்த்தபின் என் மனதில் எழுந்திருந்த எண்ணம் தவறு. மிகச்சிறந்த படம் இது. கலையும் கலைஞனும் கை கோர்த்து புதிய பரிமாணத்தினை எட்டியிருக்கின்றனர்."
வெற்றிமாறா, என் சக பயணியே, நீ நிகழ்த்திவிட்டாய். கலையின் உச்சியை தொட்டுவிட்டாய், என் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்துவிட்டாய். பாலுமகேந்திரா மட்டும் இன்றிருந்திருந்தால் உன்னைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார்.
ஒரு கடுமையான உண்மையான திரைப்படமே 'விசாரணை'. 'மனிதம்' என்பதனை அத்திரைப்படம் எனக்கு உணர்த்தியது. மக்கள் இதை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். உன்னையும், படைப்புகளையும் மேலும் மதிப்பார்கள்.
நண்பா, உன் 'விசாரணை' என் திரைப்பட ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது.
இதோ, சில வார்த்தைகள் கூவிச் சொல்கிறேன்.
"சினிமா கலைஞர்களாகிய நாம் சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'"
இனி வரலாறு சத்தமிடும்..
வெற்றிமாறா.. தலை நிமிர்ந்து நட..
இவ்வாறு அந்தக் கடிதத்தில் மிஷ்கின் கூறியுள்ளார்.

thannnx-thehindu

Saturday, October 05, 2013

மதுரையில் தான் மிகுந்த வரவேற்பு - மிஷ்கின் உற்சாக பேட்டி

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்திற்காக போஸ்டர் ஒட்டும் இயக்குநர் மிஷ்கின்விமர்சகர்கள் மத்தியில் சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. இப்படத்தினை தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார் மிஷ்கின். திரையரங்குகளுக்கு கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் ஓட்டும் பணியையும் இவரே செய்து வருகிறார். 



சமீபத்தில் மதுரை மற்றும் திருச்சி ஆகிய ஊர்களுக்கு சென்றார். மதுரையில் இப்படம் திரையிடப்பட்டுள்ள மினிப்பிரியா திரையரங்கத்திற்கு சென்றார். அங்கு அவர் பேசியது “நான் இதுவரை 73 தொழில்கள் செய்துள்ளேன். சினிமா என்பது எனக்கு 74 ஆவது தொழில். கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே என்னுடைய அலுவலகத்தை அடகு வைத்து இந்த திரைப்படம் எடுத்தேன். 



மதுரையிலேயே சிறந்த கலா ரசிகர்கள் இருக்கிறார்கள். மற்ற இடங்களைவிட மதுரையில் சினிமாவுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. எனவே இங்கு சினிமா சிறப்பாக ஓடுகிறது.2 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் இந்த படத்தை எடுத்துள்ளேன். இதற்கு முந்தைய திரைப்படமான 'முகமூடி' மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு பெறவில்லை. எனவே, விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு பிராயச்சித்தமாக இந்த திரைப்படத்தை எடுத்துள்ளேன். 


இந்த திரைப்படம் சிறப்பாக இருந்தால் தியேட்டருக்கு உறவினர்களை வரவழையுங்கள். நன்றாக இல்லையென்றால் யாரும் இந்த சினிமாவை பார்க்காதீர்கள். 



ஏற்கெனவே இரவில் மாறுவேடத்தில் சினிமா போஸ்டர் ஒட்டியுள்ளேன். இந்த நிலையில், அதிக போஸ்டர்களை மதுரையில் ஒட்ட இருக்கிறேன்” என்று தெரிவித்தார். 


அதன்பின்பு திருச்சி வந்த மிஷ்கின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர்களிடையே அவர் “இப்படம் பலரின் பாராட்டை பெற்றிருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷத்தை தருகிறது. இந்த படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை. என் கதையைக் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். 'முகமூடி' என்ற தோல்விப்படம் கொடுத்த பண நெருக்கடி, மன நெருக்கடிகளுக்கிடையில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் கூட வரவில்லை. அதனால்தான் நானே இந்த படத்தை தயாரித்தேன். 



என் அலுவலகத்தை அடமானம் வைத்துதான் இந்த படத்தின் கதையையே எழுதினேன். 


ஹாலிவுட் தரத்தில் படம் இயக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த படத்தை நான் ஒரு பாட்டு கூட இல்லாமல் இயக்க முக்கிய தூண்டுகோலாய் இருந்தது. நான் இந்த படத்தை எனக்கான சுய பரிசோதனை முயற்சியாகத்தான் எடுத்து கொண்டேன். இந்த படத்தில் ஒரு காதல் சீன் வைக்க கூட இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் எனக்கு 42 வயதாகிறது; நான் மரத்தை சுற்றிவந்து டூயட் எல்லாம் பாட முடியாது. அதனால் படத்தில் டூயட் இல்லை. 


முதல் படத்தில் தெரியாத்தனமாக வைத்த குத்து பாட்டு தெரியாத்தனமாக ஓடிப்போச்சு. அடுத்த படத்திலும் தயாரிப்பாளரின் வற்புறுத்தலின் பேரில் வாய்த்த குத்து பாட்டு பயங்கர ஹிட் அடித்து, என்னை எல்லோரும் குத்துபாட்டு இயக்குனர் என அழைக்க ஆரம்பித்தார்கள். அது எனக்கு நாகரிகமாகப்படவில்லை. 


இந்த படத்திலும் குத்து பாட்டில்லை என்றால் பெட்டி வாங்க மாட்டோம் என சொல்லிவிட்டார்கள். இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு நான் 'நந்தலாலா' தந்த அனுபவத்தால் போட்டு காட்டவில்லை. ஆனால் அதையும் மீறி ரிலீஸ் ஆனது பத்திரிகையாளர்களின் நேர்மையான பாராட்டுகளால்தான். இந்த கதையில் யாருமே ஓநாய் பத்திரத்தில் நடிக்கமாட்டார்கள் என தெரியும். அதனால்தான் என் கதையை நம்பி நானே களத்தில் இறங்கினேன். 


இதுவரை 6 படம் செய்திருக்கிறேன். ஒரு கோடி ரூபாய்க்கு கூட இந்த படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. என்னுடைய 6 படங்களையும் பாருங்கள் ஒரு படத்திலாவது ஏதேனும் ஒரு பெண்ணை மோசமாக காட்டியிருக்கிறேனா? வயது குறைந்த இளைஞர்கள், வயதானவர்களை கிண்டல் பண்ணும் காட்சி இருந்திருக்கிறதா ? அவ்வளவு கண்ணியமாக படம் எடுத்ததுக்கு எனக்கு கிடைத்த பரிசுதான் இது. 



நல்ல படங்களை எடுக்கவேண்டும் என நினைத்தது தப்பா? இந்த படத்திற்காக 107 கிலோவில் இருந்து 87 கிலோவாக எடை குறைந்திருக்கிறேன். கடைசியில் இந்த படத்தை யாருமே வாங்கவில்லை. 30 லட்ச ரூபாய்க்காக நாய் மாதிரி அலைந்தும் கடன் கிடைக்கவில்லை. முதல் நாள் 30 லட்ச ருபாய் கொடுக்காததால் 10 தியேட்டர்களில் எனது படத்தை எடுத்துவிட்டார்கள். நம்பிக்கை இழந்து மீண்டும் தெருவுக்கே வந்துவிடலாம் என எண்ணினேன். ஆனால் அடுத்தநாள் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. 



அந்த ஒரே காரணத்தால்தான் இதோ ஒரு வாரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஒட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கண்ணீர் மல்க பேசினார். 

 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் இயக்குநர் மிஷ்கின்