Showing posts with label இப்படியும் பார்க்கலாம். Show all posts
Showing posts with label இப்படியும் பார்க்கலாம். Show all posts

Tuesday, November 24, 2015

அற்புதமாக இருக்கிறீர்களா...?

ஒரு ஞானியிடம் “நீங்கள்தான் ஒன்றுமே வாங்க மாட்டீர்களே, பின் ஏன் கடைகளுக்குப் போகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“என்னென்ன பொருட்கள் இல்லாமல் என்னால் நிம்மதியாக வாழ முடியும் என்று தெரிந்துகொள்ளவே போகிறேன்!” என்று அவர் பதில் அளித்தார்.
கடைகள் வீதியில் இருந்தால் அது கடைவீதி. கடைவீதியே ஒரு கட்டிடத்துள் இருந்தால் அதன் பெயர் மால். அப்படியொரு பெருங்கடையுள் காலை 11.30-க்கு குடும்பத்துடன் நுழைகிறேன். கையில் 5,100 ரூபாய்.

அந்த ஞானியின் ஞானத்தன்மையை என்னுடைய குடும்பத்துக்கும் ஊட்டியிருந்தேன். ஆனால், ஒரு ஹேண்ட்பேக் என் மனைவியின் ஞானத்தன்மையை சவாலுக்கு இழுத்துவிட்டது. “ஏற்கெனவே இருக்கிறதே!” என்று நான் முணுமுணுத்தேன்.

அப்போது அவள் ‘என் கனவை, அடையாளத்தைத் தொலைத்துவிட்டு, உன்னிடம் நிற்க வேண்டியிருக்கிறதே’ என்று ஜோதிகா, மஞ்சு வாரியர் பாணியிலான பார்வைகளைப் பார்த்தாள். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 1,200 ரூபாயை இழந்தேன்.

தொடர்ந்து ஸ்வீட்கார்ன், சிடி, ஐஸ்க்ரீம், ஆடைகள், செருப்பு, கரண்டி, முகப்பூச்சுக்கள்...என ஞானத்தன்மை பங்கப்பட்டுக் கொண்டே வந்து மதியம் 2.30-க்கு என்னிடம் மிஞ்சியது வெறும் 100 ரூபாய்கள் மட்டுமே. அப்படியானால், நான் இழந்தது ?

5,000 ரூபாய் என்று பதில் சொல்வதற்கு விசேஷமான அறிவு எதுவும் தேவையில்லை.

ஆனால், நான் எனது உடலின் எரிபொருளை கலோரிக் கணக்கிலும் வேடிக்கை பார்த்தல், அதிருப்தியடைதல், வாதம் புரிதல் போன்றவற்றால் மனதின் எரிபொருளையும் இழந்திருக்கிறேன். 3 மணி நேரத்தை இழந்திருக்கிறேன். எனது ஆற்றலையும் காலத்தையும் செலவிட்டுள்ளேன்.
ஆனால், என்ன செலவானது என்ற கேள்விக்குப் பெரும்பாலானவர்கள் பண மதிப்பையே சொல்லியிருப்பார்கள். பணப் பார்வை கொண்டு இந்த விஷயத்தை அணுகி யிருக்கிறோம் என்பது இதன் பொருள்.

இது மட்டுமல்ல. அன்றாடம் வெகு சாதாரணமாக நாம் பணக் கண்கள் கொண்டு பார்க்கும் பல காட்சிகள் இருக்கின்றன.

“நல்லா இரு” என்று ஒருவர் ஆசி வழங்கினார் என்றால் நிறையப் பேருக்கு அதன் அர்த்தம் “கை நிறையப் பணத்துடன் வசதியாக இரு” என்பதுதான்.

“நல்ல தினமாக அமையட்டும்” என்றால் முதலில் தோன்றுவது ஏதோ புதையலின் சாவி கிடைப்பது போலவும், வராத கடன்கள் வசூலாகப் போவது போலவும், எதிர்பாராத அதிர்ஷ்டம் அமையப்போவது போன்ற காட்சிகள்தான்.

பெண் வீட்டுக்காரர்கள் பார்வையில் “நல்ல” என்பதன் பொருளே வேறு. “நல்ல இடம்” என்றால் கண்டிப்பாகப் பையன் கனமான பர்ஸைக் கொண்டிருக்கிறார் என்ற அர்த்தமே அநியாயத்துக்குப் புழக்கத்தில் இருக்கிறது.

‘‘நன்றாக இரு’’ என்றால் நோயில்லாமல் இருத்தல், மகிழ்வாக இருத்தல் என்று எவ்வளவோ சொல்லலாம்.

“ நல்ல தினம்” என்றால் நீங்கள் எவ்வித விபத்துமில்லாமல், மோசமான சம்பவங்கள் இல்லாமல் திரும்பினாலேயே அது நல்ல தினமில்லையா...? நல்ல உழைப்பு, நல்ல பசி, நல்ல தூக்கம் என்று அமைந்த தினங்கள் நல்ல தினம் இல்லையா...? அப்படியொரு தினத்தை நாம் நல்ல தினம் என்று ஏற்றுக்கொள்வதே இல்லை. “பெரிசா வாழ்த்தினான் “நல்ல தினமா அமையட்டும்னு” விசேஷமா ஒண்ணும் நடக்கலியே...வழக்கமான தினமாத்தான இருக்குது. போனோம்; வந்துசேந்தோம்.” என்றே பலரும் நினைக்கிறோம்.

“ நல்ல இடம்” என்றால் பண்பட்ட குடும்பம், பையன் எவ்விதக் கெட்ட பழக்கமுமில்லாதவன், நற்குணங்களைக் கொண்டவன் என்று எத்தனை பேர் நினைக்கிறோம்? பெண் “ நல்ல இடம்” என்றால், எழுகிற எண்ணம் பெண்வீட்டார் பணம் காய்க்கும் மரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.

“தப்பா நினைக்காதீங்க...ஒரு சின்ன ஹெல்ப்”என்று துவங்கினால் நிறையப் பேருக்கு முதலில் வருகிற நினைப்பு அவர் பணம் ஏதாவது கேட்கிறாரோ என்பதுதான். பணம் சாராத உதவிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைக் கேட்கவும்கூட அவர் நினைத்திருக்கலாம். சக மனிதருக்குச் செய்யும் உதவிக்குக்கூடப் பணத்தை முன் நிறுத்துகிறோம்.

நாம் சந்நியாசிகள் இல்லை என்பதால் பணம் சார்ந்து பார்ப்பது அப்படி ஒன்றும் பாவகாரியமோ, மட்டகரமான செயலோ இல்லைதான். பார்ப்பவர்களும் மோசமானவர்கள் இல்லைதான்.

ஆனால், எல்லாவற்றையும் நாம் கரன்ஸிக் கண் கொண்டு பார்க்கும்போது, பணத்தால் தர முடியாத, பல நல்ல விஷயங்களை- வாழ்வின் அற்புதங்களைப் பார்க்கத் தவறிவிடுவோம்.

தவிர, பணம் சார்ந்த பார்வைகள், பணம் சார்ந்த பிரச்சினைகள், எரிச்சல்கள், எதிர்பார்ப்புகளையே தரும். உங்களின் அக உலகில் கரன்ஸி இயந்திரங்கள் இயங்கிக்கொண்டே இருந்தால், அது நீங்கள் சுவாசிக்கும் காற்றிலும் கரன்ஸியின் மணத்தைக் கலந்து விடும்.

தவிர்க்கவே முடியாது என்பதற்காக எல்லாவற்றையும் பணம் சார்ந்தே பார்க்க வேண்டியதில்லை. சரியாகச் சொன்னால், நீங்கள், உங்களின் உள் அமைதி தேடி, உங்களுக்கான சந்தோஷம் தேடும் முயற்சிகளிலிலெல்லாம், பணம் இரண்டாம் இடத்தையே பிடித்திருக்கும்.
குழந்தையுடன் விளையாடுகிறீர்கள்.

நெருங்கிய நண்பனை, தோழியை வெகு காலத்திற்குப் பின் சந்திக்கிறீர்கள்.
பிரார்த்தனை செய்கிறீர்கள்.

வானில் நட்சத்திரங்களை ரசிக்கிறீர்கள்.

பணம் சந்தோஷம் தருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பணம் சாராத சந்தோஷங்களையும் அனுபவிக்கக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை முழுமை அடையும்.

“ நல்லாயிருக்கியா?” இதற்குப் பணம் சார்ந்து பதில் சொல்கிறவர்கள் “ஏதோ இருக்கேன்” என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் பணம் தேவைகளைச் சார்ந்தது. இன்று ஒரு லட்ச ரூபாய் உங்களிடம் இருந்தாலும் ஒரு லட்சத்து ஒரு ரூபாய்க்கான தேவையை உருவாக்கிக்கொள்ள முடியும். இது தவிர, இன்னொரு பிரச்சினையும் வந்துவிடும். அடுத்தவரிடம் இரண்டு லட்சம் இருந்தால் நீங்கள் மனதளவில் ஏழையாகிவிடுவீர்கள்!

இதில் “நன்றாயிருக்கிறேன்” என்று சொன்னால், கண் பட்டுவிடும். நாம் நன்றாயிருப்பது அடுத்தவருக்கு ஏன் தெரிய வேண்டும்? அது வேறுமாதிரியான பிரச்சினைகளைக் கொண்டுவரும். இவ்வளவு கணக்குகளையும் போட்டு “என்னத்தை சொல்ல” “ ஏதோ வண்டி ஓடுது” என்றுதான் பதில் வரும். பணம் சாராத பதில் என்றால் உங்களின் பதில் “சூப்பரா இருக்கேன்” என்றுதான் வரும்.

எப்படி, நீங்கள் “ஏதோ” இருக்கிறீர்களா...? இல்லை “அற்புதமாக” இருக்கிறீர்களா...?

thanks the hindu

Tuesday, November 17, 2015

எப்படி இருக்கிறது வாழ்க்கை?

எல்லா தினங்களும் நமக்கு உவப்பானதாக இருப்பதில்லை. எல்லாச் சூழல்களும் பிடித்தமானதாக இல்லை.

ஆனால், கசப்பான தினங்களையும் விரும்பாத சூழல்களையும், அவற்றில் பங்கேற்கும் மனிதர்களையும் சந்திப்பதைத் தள்ளிப்போடலாமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது.

கேள்வி- பதில்

அப்படியான தருணங்கள் பெரும்பாலும், நாம் நமது தரப்பு பதில்களை,விளக்கங்களைச் சொல்கிற தருணங்களாகவே இருக்கின்றன.
உதாரணமாக வேலை செய்பவர், வேலை கொடுப்பவர்,வியாபாரம் செய்பவர் ... என யாராக நீங்கள் இருந்தாலும் ---உங்கள் பாஸ் / முதலாளி / மேலாளர் /வாடிக்கையாளர் /அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டே தீரும்.

ஆனால், இந்தப் பதில்கள்,பெரும்பாலும், நீங்கள் வெளிப்படுத்தும் அதே உணர்வுகளுடன் புரிந்துகொள்ளப்படுவதில்லை; ஏற்றுக்கொள்ளவும் படுவதில்லை. “ஏன் விற்பனைக் குறியீட்டை அடையவில்லை...?”; “ஏன் வேலையை முடிக்கவில்லை...?”, “ஏன் இந்தச் சேவை வழங்கப்படவில்லை...?”.

இவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் அவற்றைச் சொல்ல நேர்கிற தருணங்கள் தலையைக் குனியவே வைக்கின்றன. பதிலாக சுடுமொழியையும், அவமானத்தையுமே பெறுகின்றன.
இதைத்தான் முன்னோர்கள் “சண்டையில் கிழியாத சட்டை எங்கிருக்கிறது..?” என்று குறிப்பிட்டார்கள். இவற்றைத் தவிர்க்க நினைத்தால் வீட்டிலேயே முடங்க வேண்டியதுதான் என்பதுதான் யதார்த்தம்.

ஈடாகும் இழப்பு

சரி, இவற்றிலிருந்து மீண்டு நமது சமநிலையை எப்படித் தக்க வைத்துக் கொள்வது...?

விவசாயத்தில் சாத்தியமான எல்லா முறைகளையும் பயன்படுத்தி அதிக லாபம் பெற ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ (integrated farming ) உதவுகிறது.
நண்பர் ஒருவரின் இத்தகைய பண்ணையில் கோழி,மாடு,தென்னை,தோட்டப்பயிர்கள், பூக்கள்...என கலவையான காட்சிகள் கிடைக்கும். “கோழீல நட்டம். ஆனா கறிவேப்பிலைல லாபம்...” என்பார்.” “தென்னைல பூச்சித்தாக்குதல். அந்த நட்டத்தை முருங்கைக்காய் தாங்கிக்கிச்சு...” என்பார்.

ஒன்றினால் ஏற்படும் இழப்பு இன்னொன்றின் மூலம் சரிசெய்யப்படுகிறது.
குழந்தைகள் பிற குழந்தைகளுடன் விளையாடும் போது ஒரு குழந்தை அடிவாங்கும்தான். இன்னொன்று தள்ளிவிடும்தான். ஆனால், வேறு கைகள் “எங்க வீட்ல செஞ்சது...”என்று எதையாவது தரும்.

சிற்றில் சிதைத்தல், சிறு வீடு கட்டல், சிறுபறை முழக்கல், ஊஞ்சல் ஆடல் , செல்போன் நோண்டல், சடையை இழுத்தல், “ உன் பேச்சு கா...” எனக்கூறல், பழம் விடுதல், சமாதானம் செய்தல்..என இவர்களின் ஆளுமைகள் விரிந்து , இந்தக் குழந்தைகளுக்கு சகிப்புத் தன்மை,விட்டுக் கொடுத்தல்,பகிர்தல், புரிந்து கொள்ளல்... போன்றவை இயல்பாகவே வந்து விடும்.

ஒன்றின் இழப்பை , இன்னொரு வரவின் மூலம் சரிசெய்வதை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த விவசாய முறை, குழந்தை வளர்ப்பு முறைகளைப் போல ஒருங்கிணைந்த வாழ்க்கையை வாழ முடிந்தால்...?

பல திசைகள்

ஒரு பெரிய நிறுவனத்தில் உடன் பணி செய்த இருவரை நினைவு கூர்கிறேன். பாஸிடம் வசவு வாங்கித் திரும்பும்போது அவமானச் சுவடுகளை அந்த அறையிலேயே துடைத்தெறிந்து மீள்வார்கள்.

ஒருவர் தனது எஞ்சிய நேரத்தில் ஃபினாயில், வாஷிங் பவுடர் தயாரிப்பவர். இன்னொருவர் தான் வளர்க்கும் நாயை “அவன் நாயாகப் பிறந்து விட்டானே “என்று வருந்திப் பேணுபவர்; “ இவ்வளவு திட்டு வாங்கியும் கூலா இருக்கறீங்க “என்றால் “ வாழ்க்கைல இதெல்லாம் சகஜம். அதுல உண்மை இருந்தா நாம எடுத்துக்கணும். இல்லீனா, தட்டிவிட்டுட்டுப் போய்ட்டே இருக்கணும்.”என்பார்கள்.

ஃபினாயிலும், பிராணியும் அவர்களை வேறு பாதையில் அழைத்துச் செல்கின்றன. ஒரேவிதமான வாழ்க்கை தரும் களைப்புக்கு அங்கே இளைப்பாறல் கிடைக்கிறது. புத்துணர்வுடன் அவர்கள் மீள்கிறார்கள்.

எனவே, உங்களின் கவனம், அவமானம்,காயங்களிலிருந்து திசைதிரும்பி, வேறொன்றின் பக்கம் மையம் கொள்ளுமானால், அது உங்களைச் சேதத்திலிருந்து காப்பாற்றக் கூடும். ஒன்றின் ஆற்றல் இழப்பு இன்னொன்றினால் சரி செய்யப்படக் கூடும்.

உங்களுக்கு எதிரில் பல திசைகள் இருந்தால் ஒரே இடத்தில் நிற்க மாட்டீர்கள்.

மலையேறுதல், பாராசூட்டில் குதித்தல், கோல்ஃப் ,பிலியர்ட்ஸ், நட்சத்திர ஓட்டல்களில் இரவு ஆட்டங்கள், ஸ்கூபா, கார் ரேஸ்...( ! ) என்றெல்லாம் ஈடுபடுகிற அளவுக்கு நேரம் இருக்குமானால் நாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்று சலித்துக் கொள்கிறவர்கள், அந்நிய மொழி கற்கலாம்; இதுவரை செய்திராத புதிய உணவைத் தயாரிக்கலாம்; தொடர்பற்றுப் போன நண்பர்களைத் தேடிப்போகலாம். நண்பர் ஒருவர் அவராகவே ஆர்மோனியம் பயின்றார். அதில் முதலில் தப்பியோடுவது இசை. அப்புறம் அவரது அன்றாட எரிச்சல்கள்.

ஒரேவிதமான வாழ்க்கையைவிட, இந்த ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையில் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் வரத் தொடங்கும். அந்தத் திசை திருப்பலில் விரும்பத்தகாத சூழல்களிலேயே நீங்கள் நின்று கொண்டிருக்க மாட்டீர்கள். நகர்ந்திருப்பீர்கள்..!

thanks the hindu

சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை?

பக்கத்துத் தெருவில் புதிதாகக் காய்கறிக் கடை வந்தது. சும்மா சொல்லக் கூடாது. கண்ணைப் பறிக்கும் நிறங்களில் அவர் காய்கறிகளைக் காட்சிப்படுத்தியதில் ஏற்கெனவே இருந்த காய்கறியாளர்கள் வாடியும், வதங்கியும் போனார்கள். ஆப்பிரிக்கா,நேபாள நாடுகளின் மாணவிகள்கூட அங்கே வந்து தங்கள் நிலத்தின் காய்கறிகளைக் கொய்தார்கள்.


காய்கறிக் கடைக்காரர்

நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இடையில் கடை மெல்ல அழகை இழந்தது. தக்காளி கேட்டால்கூட “ இல்லீங்களே...”; வெங்காயம்? “பக்கத்துக் கடைல இன்னிக்கு ஒரு நாளைக்கு வாங்கி அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க சார்.....” பக்கத்துக் கடைக்குச் செல்கிறவர் வெங்காயம் மட்டுமா வாங்கிப் போவார்...?


கடை இன்னும் இருக்கிறது. ஆனால், கூட்டம் மெல்லக் குறைந்து, இறுதிநாள் நோயாளி போல் “அமாவாசை தாண்டுமா...?” என்றிருக்கிறது. தாண்டிச்செல்லும் தனது வாடிக்கையாளர்களைக் குழப்பத்துடன் வெயில் முகத்திலடிக்க, பார்த்துக் கொண்டிருக்கிறார்-- “முன்னாள் காய்கறிக் கடைக்காரர்” என்ற பெயரை விரைவில் சூட இருப்பவர்.


கொஞ்சம் மனசு வச்சா?

நிறையப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி அடுத்தவர் கேட்கிறாரா, இல்லையா என்ற கவலை எதுவுமின்றிப் பிரச்சாரம் செய்வார்கள். குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய பி.எச்.டி. அறிக்கையையே ஒப்படைப்பார்கள்.

அதிலும், இந்த அம்மாக்களின் ஆய்வுக் குறிப்புகளைத் தாங்க முடியாது. அதில் இடம்பெறும் முக்கியமான வாசகம் “டக்குன்னு புரிஞ்சுக்கறான்... கொஞ்ச நேரம்தான் படிக்கிறான்.. அதுலயே இவ்வளவு மார்க் வாங்கிர்றான். இன்னும் கொஞ்சம் மனசு வச்சு படிச்சாம்னா...,”

குறைந்த நேரப் படிப்பிலேயே அம்மாக்களை அசத்துகிறவர்களால் தொடர்ந்து ஏன் புல்லரிப்பை நிகழ்த்த முடியவில்லை ?

இரண்டு பிரச்சினையும் வெவ்வேறு விதமாகத் தோன்றினாலும் அவற்றின் பிறப்பு ரகசியம் ஒன்றுதான்.

அட்டகாச ஆரம்பம்

காய்கறியாளரின் முயற்சியிலும், ஆர்வத்திலும் குறை சொல்லவே முடியாது. அட்டகாசமாகவே தொடங்கி யிருக்கிறார். பின் தப்பு நடந்தது எங்கே என்றால், அவர் தொடர்ந்து முயலவில்லை. அதுதான் பிரச்னை..!
ஆரம்பநாட்களில் முயன்றால் போதுமா...? பின் அதுவாகவே தன்னை நகர்த்திக் கொண்டு போகும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்...?

தன்னிடம் வரும் வாடிக்கை யாளரைத் திருப்தி செய்யத் தொடர்ந்து முயற்சி செய்தால்தானே, அவர் களத்தில் நிற்க முடியும்? தினமும் எது தேவை? தனது பகுதியில் எது நன்றாகப் போகும் என்று கணித்து அதை வாங்கி வைக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாமல் கறிவேப்பிலைகூட இல்லாமல் உட்கார்ந்திருந்து “காலைல மார்க்கெட்டுக்கு லேட்டா போனேங்க்கா... அங்க வித்து போச்சு...” என்றால் “தனியே...தன்னந்தனியே... நான் காத்துக் காத்து இருந்தேன்” என்று பாட வேண்டியதுதான்.

மாணவச் செல்வங்கள் ஆடிக்கும், அமாவாசைக்கும் மட்டும் படித்தால் “அவனுக்கு இருக்கும் அறிவுக்கு எங்கேயோ போயிருக்கணும் சார்...” என்று தாயார்களின் புகழுரையைக் கேட்டுக் காலம் தள்ள வேண்டியதுதான்.


தொடர்ச்சி

வெற்றி பெற முயற்சி மட்டும் போதாது. அம்முயற்சிகளில் தொடர்ச்சித் தன்மை (consistency) தேவை.

கிரிக்கெட் தெரிந்த யார் வேண்டுமென்றாலும் ஒரு ஓவருக்கு பேட் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட் என்பது ஒரு ஓவர் மட்டும் விளையாடுவது அல்ல. மேட்ச் என்றால் பகல் முழுவதும் நின்று ஆடுகிற உடல், மன வலிமைகளையும் வளர்த்துக் கொண்டால்தான் கிரிக்கெட் வீரராக முடியும். அதை விடுத்து “ஸ்டெயின் பால்லகூட நான் சிக்ஸ் அடிச்சேன்...” என்றால் மூளையின் ஆற்றலைச் சரிவரப் பயன்படுத்தாதவர்கள் வேண்டுமானால் சொல்லலாம். “அவனுக்கு இருக்கிற திறமைக்கு ...”

நம்மில் நிறையப் பேருக்கு அவ்வப்போது உடற்பயிற்சி ஆசை தாண்டவமாடும். அதற்கான ஷூக்கள்,ஆடைகள்; “காலை 6 மணியிலிருந்து 7 வரை நான் வாக்கிங் போயிருப்பேன். அப்ப ஃபோன் பண்ணாதீங்க” போன்ற செய்திகள், பயிற்சி முடித்து வந்த களைப்பைப் போக்கப் பிரத்தியேகப் பானங்கள்... ஒருநாள் நடந்துவிட்டுத் தொப்பையைப் பார்ப்பதென்ன, கண்ணாடியைப் பார்ப்பதென்ன ... என்று டீஸர், ட்ரெய்லர் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்.

தெரிந்தவர்களைக் கேலி செய்வேன். “எப்போதும் முதல்நாள் உடற்பயிற்சியைவிட இரண்டாவது நா
ள் எளிமையாகத்தான் இருக்கும்.”
“பழகிரும்னு சொல்ல வர்றீங்களா..?”
“அது இல்லை...இரண்டாவது நாள்தான் நாம செய்யவே போறதில்லையே!”
நிறையப் பேர் முயற்சி என்றாலேயே அதை லட்சியத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்கிறார்கள். ஆனால், அன்றாட வாழ்வை சிரமமின்றி நகர்த்திச் செல்ல உதவும் எளிய வேலைகளில்கூடத் தொடர்ச்சியானத் தன்மை இருந்தால்தான் வாழ்க்கை சுமுகமாக நகரும்.

எல்லோராலும் வெகு சுலபமாகவும், பிரமாதமாகவும் எதை வேண்டுமானாலும் தொடங்க முடியும். நிறையப் பேர் தொடங்குவதே போதுமானது என்றும் தவறாக நினைத்து விடுகிறார்கள். அது திறமையே அல்ல. அது “ஆர்வக்கோளாறு” என்ற பிரிவிலேயே இடம் பெறும். .


தொடர்ந்தால்தானே?

ஆர்வக்கோளாறுகள் பெட்ரோல் இன்றி வழியில் நிற்கும். “அப்ப எல்லாம் ரொம்ப கஷ்டம். இப்ப இருக்கிற மாதிரி ஈஸி கிடையாது”, “எனக்கு நேரம் இல்ல, வாய்ப்பு வரல...” போன்ற சாக்குப்போக்குகளைச் சொல்லிப் புலம்பும்.

ஊக்குவிப்பு முகாம் ஒன்றில் கேட்டேன் “இப்போது போர் எதுவும் நடைபெறவில்லைதான். இந்திய ராணுவம் இந்தச் சூழலில் என்ன செய்து கொண்டிருக்கும்..? தூங்கி, சாப்பிட்டு, டி.வி பார்த்து, அரட்டையடித்து...”
“போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...”என்றார்கள்.

வானில் எதிரி விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்ட பிறகு, நீங்கள் விடுமுறையில் சென்ற உங்கள் சிப்பாயை வரவழைக்கப் புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்புவதும், ஆயுதங்களைத் தூசு தட்டி அவற்றின் கேட்லாக்கைப் படிக்கத் துவங்குவதுமாக இருந்தால்,போரின் முடிவைச் சொல்ல வேண்டியதில்லை.

தொடர்ந்து பயிற்சி எடுக்கிறார்கள். தொடர் முயற்சிகளில் இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் வீரர்களாகிறார்கள்... வாழ்க்கை என்பதும் போர்க்களம்தானே? சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை...?

thanks the hindu

Thursday, November 12, 2015

இப்படியும் பார்க்கலாம்: நத்தைக்கும் சொந்தமானது சாலை

முதலில் ஒரு கேள்வி.

மந்திரக்கை கொண்டவர்களைப் பார்த்திருக்கிறீர்களா..? தெரியவில்லை என்றால் கடைசியில் பதில் சொல்கிறேன்.

பையனை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காகப் போகிறேன்...பலதரப்பினரும் கார், பைக், நடை என்று பள்ளிக்கு வந்து, திரும்புகிறார்கள்... இதில் காதுக்கும் தோளுக்கும் நடுவில் போனைக் கிடத்திப் பேசியவாறு செல்கிறவர்களும் அடக்கம். வாகனங்களின் அணிவகுப்பில் எழும் விதவிதமான ஹாரன் அலறல்களில் ஒளிந்திருக்கும் செய்தி -- “எனக்கு வழி விடுங்கள்...” நெகட்டிவாகச் சொன்னால் “எல்லோரும் எக்கேடும் கெட்டுத்தொலையுங்கள்...என்னைப் போகவிடுங்கள்...” என்பதுதான்.
இரண்டாவது கேள்வி --- சாலைகள் யாருக்கானவை...?


பலமும் பலவீனமும்

வீடுகளில் கடைக்குட்டிக்கு சலுகை காட்டப்படுவது இயல்பு. தப்பு கடைக்குட்டியின்மீது இருந்தால்கூட, எளிதாகச் சொல்லிவிடுவோம். “ நீதான் பெரியவன்...விட்டுக் கொடுத்துப் போகணும்...”; “ அவதான் கஷ்டப்படறா...நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்...” அவ்வளவு ஏன்...பலவீனமான குழந்தைக்குக் போஷாக்குகூட மற்றவர்களைவிட கொஞ்சம் அதிகம்தான்...இவை குடும்பத்தில் பெரியவர்களின் பொறுப்புணர்ச்சியை உணர்த்துவதாகவும் இருக்கின்றன.
இதே தியரியை சாலைகளில் பொருத்திப் பார்க்கலாம்....நடந்து செல்லும் நீங்கள் , நடந்து செல்லும் இன்னொருவர் மீது மோதினால்--இரண்டு பேருக்குமே அதிக சேதம் ஏற்பட வாய்ப்பில்லை.அவரவர் கிலோகிராம்களைப் பொறுத்து திட்டுக்களோடோ,ஸாரியோடோ விஷயம் முடியும். நடந்து செல்லும் ஒருவர் மீது உங்கள் சைக்கிள் மோதினால் உங்களால் அவருக்கு அதிக வலியைத் தரமுடியும்...

பாதசாரி, சைக்கிள்காரர் மீது பைக்கில் வந்து நீங்கள் மோதினால் உங்கள் முரட்டு வாகனம் தருகிற சேதாரம் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து போலீஸையும், ஆம்புலன்ஸையும் அழைக்காமல் விடாது. பைக்குடன் உள்ள நீங்கள் பலம் வாய்ந்தவர். நடந்து செல்கிறவரும், சைக்கிளில் செல்கிறவரும் பலவீனர்கள்.

இதேபோல் காரில் செல்பவரால் பாதசாரிகளின், பைக் ஓட்டிகளின் எலும்பையும், உயிரையும் வெளியே கொண்டு வரமுடியும். அப்படியானால்...பஸ்...லாரி....?

குடும்பத்தில் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டீர்கள் என்றால், காரிலோ, பைக்கிலோ செல்கிற---பலம் வாய்ந்த நீங்கள் --- மெதுவாகச்செல்கிற --- பலவீனர்களிடம்--- எவ்வளவு கருணை காட்ட வேண்டும்...?
கற்களையும், வில்-அம்பையும் வைத்திருப்பவர்களைவிட, அணுகுண்டுகளை வைத்திருப்பவர்கள் நிச்சயம் அதிகப்பொறுப்புடன் இருந்தாக வேண்டும், இல்லையா...?


எப்போதும் அடுத்தவர்கள்தானே?

ஆனால், அன்றாடம் நாம் பார்க்கும், கேள்விப்படும் சாலைக்காட்சி என்ன...?
சினிமா கதாநாயகனுக்கு வேண்டுமானால்.வில்லனைத் தடுக்க இவ்வளவு வேகம் தேவைப்படலாம். மற்றபடி, நம் மகளுக்கோ, தங்கைக்கோ, காதலிக்கோ வில்லன்களால் அவ்வளவு பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்...!

பைக்காரன் புழுதி கிளப்பிப் பறக்கிறான்..”அதான் , ஹாரன் அடிச்சுக்கிட்டே வரேன்ல...காது கேக்கல...?” அதாவது, அதிக சேதத்தை விளைவிப்பவர்கள் வேகமாகவும், பொறுப்பற்றும் வருவார்களாம், ஏனையோர் பதறியும், சிதறியும் அவர்களுக்கு வழி விட வேண்டுமாம்....

“கார் வர்றது கண்ணுக்குத் தெரியல...?” பிற வாகன ஓட்டிகள் மிரண்டு வழி விட வேண்டும். அவ்வளவு அவசரக்காரர்கள் போட்டி போட வேண்டியது லாரிகள், தானே தவிர, நடந்து செல்லும் சாமானியர்கள் அல்ல...

எங்கே சாமானியர்களிடம் நீங்கள் காட்ட வேண்டியப் பொறுப்புணர்ச்சி...?
இவற்றை உணராவிட்டால், விபத்துக்கு உள்ளாகி, மயிரிழையில் தப்பிப் பிழைத்தவர்கள் “ நான் நேராத்தான் போனேன்...அவன் ராங் ஸைட்லதான் வந்தான்...சிக்னல் காட்டாம வந்தான்..டக்குன்னு நான் பிரேக் புடிச்சேன்...நல்லவேளை...நான் கீழ விழுந்தப்ப வண்டி எதுவும் வரல...”; “கொஞ்சம் அசந்திருந்தா தூக்கியிருப்பான்...” ரகக்கதைகளை

சொல்லித் திரியவேண்டியதுதான்..நாட்டில் நடக்கிற விபத்துக்களில் 90 சதவீதம் பொறுப்பற்ற முறையில் ஓட்டுவதால்தான் நிகழ்கின்றன.
பொறுப்பில்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் யார்...? நம்மைப் பொறுத்தவரை எப்போதும் அடுத்தவர்கள்தானே...? நடந்த தவறில் நம் பங்கு எவ்வளவு என்று யோசித்தால்,அடுத்த முறை நீங்கள் பொறுப்புடன் வாகனத்தை ஓட்டுவீர்கள். இல்லையென்றால், காலம் உங்களுக்குக் கன்னத்தில் அறைந்து கற்றுத் தரும். எது வசதி...?

பொறுப்பை உணர்ந்து ஓட்டுபவர்கள் நிச்சயமாய் அடுத்தவர்களைக் குற்றம் சொல்ல மாட்டார்கள். வாகன விதிகள், சாலை விதிகளை அறிவீர்கள். இவற்றுடன் வாகனக்கருணை, சாலைப் பொறுப்புக்களையும் அறிந்து கொள்ளுங்கள். அறிந்தாலும் அவற்றைக் கடைப்பிடியுங்கள்...


நத்தைக்கும்தான்
ஒரு சின்ன அத்து மீறல் எவ்வளவு சிக்கலில் கொண்டு விடும் என்பதை இன்னும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருப்பவர்கள்தான் உணர்வார்கள். ஒரு நகத்தின் அருமைகூட, அது இல்லாதபோதுதான் தெரியும்...! எல்லாம் இருக்கிறபோது நாம் எதையும் மதிப்பதில்லை...!
முந்திச் செல்வது உங்கள் திறமை. நிச்சயமாய் அது அடுத்தவர்களை அச்சுறுத்தியோ, அவர்களை அலறலுடன் ஓடச் செய்தோ அல்ல...சாலை என்பது டயர்களின் வலிமை தெரியாத , மெல்லக் கடக்கும் நத்தைக்கும் சொந்தமானது...

பலம் வாய்ந்தவரின் கருணை பலரையும் காப்பாற்றும். அதுவே அவருக்குப் பெருமையும் சேர்க்கும்...

வாகனக் கருணை

“மந்திரக்கை மனிதர்கள் “யாரென்று கேள்வி கேட்டேனே?
எனக்கும் தெரியாது. ஆனால் அவரை அடையாளம் காட்ட முடியும்...அவர் ஆணாகவும், பெண்ணாகவும், எந்த வயதிலும் இருக்கலாம்...சாலையின் ஒரு ஓரமாக நின்றிருப்பார். அவருக்கு எதிர் ஓரம் நின்றிருக்கும் அமெரிக்க அதிபருடன் அவசரமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். சாலையைக் கடந்து சென்றேயாக வேண்டும். வாகனங்களோ இதைப் பற்றிக் கவலைப்படாமல் விரைந்து கொண்டிருக்கும். எனவே, அவர் வேறு வழியின்றி தன் கையை உயர்த்தி மக்களுக்கு ஆசி வழங்குவது போல உயர்த்தி சாலையைக் கடப்பார்....


அவரது கைக்கு ஒரு சூப்பர் பவர் இருந்திருக்க வேண்டும். கையை உயர்த்திய வுடன் போக்குவரத்து நதி துண்டாடப்பட்டு, பல ‘க்ரீச்சுகள்’ ஒலித்து, வாகனங் கள் நிறுத்தப்பட்டு “அறிவு கெட்டவனே...வீட்ல சொல்லீட்டு வந்துட்டியா..?” என்று சாலையைக் கலக்குவாரே அவர்தான் மந்திரக்கையாளர்.


பொறுப்பு எல்லோருக்கு மானது, இல்லையா...? வாருங்கள் வாகனக் கருணை கொள்வோம்

thanks - the hindu