Showing posts with label இடிந்தகரை. Show all posts
Showing posts with label இடிந்தகரை. Show all posts

Wednesday, May 15, 2013

இடிந்தகரை பெண்களும் போராட்டக் களத்தில் குதித்தது எப்படி? சுப.உதயகுமாரன் பேட்டி

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்
எஸ்.ரகுபதி, குரோம்பேட்டை. 


''உங்கள் அடுத்த நடவடிக்கை அரசியலா?''

 
''இப்போதே நாங்கள் அரசியலில்தான் இருக்கிறோம். மக்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை, வருங்காலச் சந்ததிகளைக் காக்கும் அரசியலைவிட மேலான அரசியல் வேறென்ன இருக்கிறது?''


க.நாராயணன், செய்யாறு. 


''ஏதோ ஒரு நாட்டுக்குச் சென்று நீங்கள் வாழ்வதற்கு உங்களுக்கு அனுமதி அளித் தால், எந்த நாட்டைத் தேர்வு செய்வீர்கள்? ஏன்?''


''நார்வே. இயற்கையும், இனிமையும், ஜனநாயகமும், சமூக நீதியும் போற்றப்படும் நாடு. 1987-ம் ஆண்டு நான் அங்கே படித்த போது அப்போதைய பிரதமரின் கணவர் ஆஸ்லோ பல்கலைக்கழக வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்தார்.


 வெளியுறவுத் துறை அமைச்சரோடு மெட்ரோ ரயிலில் அரட்டை அடித்தபடியே பயணம் செய்ய முடிந்தது. அங்கு இருக்கும் ஒரே பிரச்னை என்ன வென்றால், கோடைக் காலத்தில் இருட்டே வராது. குளிர் காலத்தில் சூரியனே வராது. அதனால் என்ன, அங்குதான் ஈழத் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்களே... அது போதாதா?''


ம.ராஜா, கோயம்புத்தூர். 


''நீங்கள் வேண்டுமானால் நேரடியாக என்.ஜி.ஓ-க்களுடன் (அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்) தொடர்பு வைத் திருக்காமல் இருக்கலாம். ஆனால், கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் கணிசமானோர் என்.ஜி.ஓ-க்களாக இருக்கிறார்களே..?'' 


''எங்கள் போராட்டத்துக்கு எந்த உள் நாட்டு, வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமும் பணமோ, பொருட்களோ, வேறுவிதமான உதவி களோ செய்யவில்லை. நாங்களும் பெற முயற் சிக்கவில்லை. போராடும் மீனவ மக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள் தரும் நன்கொடையில்தான் போராட்டம் நடக்கிறது. மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பல தொண்டு நிறுவனங்கள் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிந்திப்பதில், அவர்கள் பகுதிகளில் அணுசக்திக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?''


எஸ்.ராதாகிருஷ்ணன், திண்டிவனம். 


''போராட்டத்தை வாபஸ் வாங்கவைக்க மறைமுகமான பேரங்கள் எதுவும் வந்தனவா?'' 


''விரும்பிய நாட்டுக்குச் சென்று பெரு வாழ்வு வாழ ஆவன செய்வதாக ஒரு நண்பர் மூலம் ஆசை காட்டப்பட்டது. 'என்ன வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்கள்... நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்’ என்று பலர் என்

பெற்றோரிடமும் மனைவியிடமும் சென்று கேட்டார்கள். தூது வந்தவர்கள் விரும்பாத பதிலைத் 'தூ’வென்று வீட்டாரே சொல்லி அனுப்பிவிட்டதால், நான் தலையிட வேண்டிய நிலை எழவில்லை!''


இரா.அரி, கண்ணமங்கலம். 


''நீங்கள் இடிந்தகரை மக்களுக்காகப் போராடுவது நல்ல விஷயம். இதே போல தமிழ கத்தின் பிற பகுதி மக்களும் மின்வெட்டு, ஊழல், ஆற்று மணல் கொள்ளை என்று பலப்பல விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இப்படியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்கிறீர்களா?'' 


''தங்களின் வாழ்வுரிமைகளும், வாழ்வாதார உரிமைகளும், வருங்காலச் சந்ததிகளும் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த எங்கள் பகுதி மீனவ மக்களும், மற்றவர் களும் போராடுகிறார்கள். நானும், நண்பர்களும் அவர்கள் சேவகர்களாகப் பணியாற்றுகிறோம். எங்கெல்லாம் மேற் கண்ட ஆபத்து எழுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் தன்னெழுச்சி யோடு முனைப்பாகப் போராடியே தீர வேண்டும். அப்படியான தருணங்களில் அவர்களுக்காக ஆதரவுக் குரல்களும் கரங்களும் இயல்பாகவே எழும்!''


கே.கலைவாணி, திருத்தணி. 


''அணு உலை பாதிப்பு உண்டாக்கும் என்பது உண்மைதான்... ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், வளர்ச்சி கொடுக்கும் வசதிகளை அனுபவிக்க, ஏதோ ஒரு வகையில் இழப்பு இருக்கத்தானே செய்யும். இப்போது நீங்களே கடைக்கோடி கிராமத்தில் அமர்ந்துகொண்டு சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் செய்துவருகிறீர்கள். அந்த இணைய இணைப்பு களுக்காக ஆழ்கடல் கேபிள்களைப் பதிப்பதால் கடல் சூழல் மாசுபடத்தானே செய்கிறது?''  



''கற்காலத்துக்குத் திரும்பச் செல்ல முடியாது என்பதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். எனவே, இழப்புகளை நம்மால் முடிந்த வரை குறைத்து... நீடித்த, நிலைத்த வளர்ச்சியை அடைய முயற்சிக்கலாமே? 'கடலில் கேபிள் போடுவதா, அணுக்கழிவைக் கொட்டுவதா?’ என்றால், கேபிள் போடுவோம் என்பதுதான் என் கட்சி. வாழ்க்கையின் விளிம்புநிலையில் நின்று உழலும் மீனவர்கள், விவசாயிகள், தலித் தொழிலாளர்கள் போன்றோர் இழப்புகளைச் சந்திக்க வேண்டும், டாட்டாக்களும், மிட்டல்களும், அம்பானிகளும் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை அனுமதிக்கவே முடியாது. ஏனெனில், சொற்ப ஆயிரங்களில் இருக்கும் பணக்காரர்களுக்காக கோடிக்கணக்கான மக்கள்தொகையின் நலனை நாம் விட்டுக்கொடுக்க முடியாது!''


இராம.பாலசுப்ரமணியன், கொடுங்காலூர். 


''இந்தியாவில் பாலிதீன் பயன்பாடு அதிகம், அணைகள் ஏகம், மணல் வளம் சகட்டுமேனிக்குக் கொள்ளை அடிக்கப்படுகிறது, காற்று மாசுபடுதல் அதீதம், காடுகள் அழிக்கப்படுகின்றன... திரும்பிய திக்கெல்லாம் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன அல்லது மாசுபடுத்தப்படுகின்றன. இந்த நிலையில், அதிஅவசரமாக இயற்கையின் எந்த வளத்தைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும்... ஏன்?'' 


''நாம் வாழும் பகுதியின் இயற்கை வளங்கள்பற்றிய முழுத் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது பகுதியில் நடக்கும் இயற்கை வாழ்வாதாரச் சிதைப்பை, சீரழிப்பை, திருட்டை, வியாபாரத்தைத் தடுத்து நிறுத்த அணி திரள வேண்டும். அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் இயற்கை பாதுகாப்புக் கொள்கைகள்குறித்துக் கேள்விகள் எழுப்ப வேண்டும். அதிகாரிகளின் இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும்.


 தகவல் அறியும் உரிமைச் சட்டம், பொதுநல வழக்கு, கருத்தரங்குகள், துண்டுப் பிரசுர விநியோகம், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் எனப் பல வழிகளில் தொடர்ந்து உழைக்க வேண்டும். பெண்கள், இளையோர், குழந்தைகள் மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும். இது நம் அனைவரின் தலையாய கடமையாகும்!''


எஸ்.ஏழுமலை, திருச்சி-3. 


''இடிந்தகரை பெண்களும் போராட்டக் களத்தில் மிகவும் தீவிரமாக நிற்கிறார்கள். அவர்களுக்குள் அந்தத் தீவிரத்தை எப்படி உண்டாக்கினீர்கள்?'' 


''அவர்கள்தான் என்னையும், நண்பர்களையும் தீவிரமிக்கவர்களாக மாற்றியிருக்கிறார்கள்!''


வா.இரவிச்சந்திரன், கோவிலூர். 


''அருந்ததி ராய், மேதா பட்கர் போன்றவர்களுடன் உங்கள் அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறதா? போராட்டத் திசைகுறித்த தகவல் தொடர்பு உரையாடல்கள் உங்களிடையே நிகழுமா?'' 


''இருவரோடும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 2003-ம் ஆண்டு முதல் மேதா பட்கர் அவர்களை நாகர்கோவில் பொதுக்கூட்டம், கூடங்குளம் மாநாடு, இடிந்தகரைப் போராட்டம் எனப் பல முறை அழைத்து வந்திருக்கிறோம். அமெரிக்காவில் இருந்தபோதே அருந்ததி எனக்குப் பரிச்சயம். அவரும் எங்கள் போராட்டத்தின் போக்கைக் கவனித்தபடிதான் இருக்கிறார்!''


அந்தோணிசாமி பாட்ரி, ஃபேஸ்புக்.   


''வேறுபட்ட சிந்தனைகொண்ட மனிதர்களை, சுயநல எண்ணம் மிகுந்தவர் களை இந்தப் போராட்டத்தின் பொருட்டு எப்படி உங்களால் ஒருங் கிணைக்க முடிந்தது. அதன் ரகசியம் என்ன?''

 
''கோஷ்டி சண்டைக்கும், வேஷ்டிக் கிழிப்புக்கும் பெயர்போன வேறு யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை எனக்கு அனுப்பிவிட்டீர்களோ? எங்கள் மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் ஒருமித்த சிந்தனையுடன் பொதுநல எண்ணம் மிகுந்தவர்களாக, சாதி, மதம், ஊர், தொழில், அரசியல் கடந்த ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இது ஒன்றிணைந்து வந்த தமிழர் கூட்டம்; யாராலும் ஒருங்கிணைக்கப்பட்டது அல்ல!''


சு.அருளாளன், ஆரணி. 


''உங்கள் போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும்? உங்கள் மனதில் ஒரு எண்ணம் இருக்குமே... அதைச் சொல்லுங்கள்?'' 


''உண்மையைச் சொல்லட்டுமா? கூடங்குளம் அணுமின் நிலையம் நிரந்தரமாக இழுத்து மூடப்படும். இது உறுதி!''


- அடுத்த வாரம்...



''அணுசக்தியின் முக்கியத்துவம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி கூட, கூடங்குளம் அணுஉலைகுறித்து வாய் திறக்க மறுக்கிறாரே?''


''நடுநிசியில் சாலையில் நடந்து வந்தாலே ஓர் இளைஞனைக் கைது செய்யும் நம் தமிழகக் காவல் துறை. ஆனால், எண்ணற்ற வழக்குகள் பதியப்பெற்ற உங்களை மட்டும் இத்தனை மாதங்களாகச் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதன் மர்மம் என்ன?''


''தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டுபற்றி தங்களுக்குக் கவலைஇல்லையா?''


- போராடுவோம்

நன்றி - விகடன் 

Friday, December 07, 2012

அன்புள்ள முதல்வருக்கு கூடங்குளம் மக்கள் சார்பில் ஒரு கடிதம்



தமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடிதம்


பிப்ரவரி 25, 2012 13:32
அன்புள்ள அம்மா,

வணக்கம்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து தாங்கள் நடத்திவரும் நல்லாட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்னையில் 2001,செப்டம்பர் மாதம் எங்களை அழைத்து, நேரில் சந்தித்து, எங்கள் கருத்துகளை கரிசனத்தோடு கேட்டு, எங்கள் மக்களின் அச்சங்கள்,பயங்களை அகற்றும்வரை, அணு மின்நிலைய வேலைகளை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றி, உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் திருப்தி எனக்கும் எனது அரசுக்கும் முக்கியம் என்றும் உறுதியளித்தீர்கள். எங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சனநாயக முறையில் அறவழியில் பதிவுசெய்ய அனுமதித்தீர்கள்.இவற்றுக்கெல்லாம் நாங்கள் எங்கள் ஆழமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடங்குளம் அணுமின் திட்டம் மத்திய அரசின் திட்டமென்பதும், எங்கள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அணுசக்தி பிரச்சனையில் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை நாடறியும். 2007 சூன் 26 அன்று அமெரிக்க அணுசக்தி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, இதை கடுமையாக எதிர்த்தீர்கள். அதேபோன்று இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தையும் அது ஏற்புடையதல்ல என்று அறிவித்து தீர்க்கதரிசனத்தோடு அதை எதிர்த்தீர்கள். அணுசக்தியின் தீமைகள்,கடுமையான விளைவுகள் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள். இந்தப் பின்னணியில் தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எங்கள் போராட்டம் தொடங்கி, தங்களை நேரில் சந்தித்த பிறகு பல எதிர்வினைகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவை பற்றிய தன்னிலை விளக்கங்களை அளித்திட தயவுசெய்து என்னை என்னை அனுமதியுங்கள்.

1. 1980 களிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை பலர் தலைமையிலே நடத்திக் கொண்டு வருகிறோம். 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வரவிருந்த போது, மக்கள் போராட்டங்களால் அது கைவிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் நடந்த மாபெரும் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்து, ஆறு பேர் குண்டடிபட்டனர். தொடக்கத்திலிருந்து இன்றுவரை பல நூறு தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இவையனைத்தும் ஊடகங்களிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தங்களிடம் நான் நேரில் விளக்கியது போன்று, எங்கள் போராட்டத்திற்கும் திமுகவுக்கோ வேறு எந்தக் கட்சிக்குமோ எந்த தொடர்பும் கிடையாது. எனது தந்தையார் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து கொள்கைக்காக திமுகவில் இருந்தவர். அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்காக இயங்க ஆரம்பித்த பிறகு முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டவர். திமுக எம்பி கனிமொழி தனது பாராளுமன்றக் கன்னிப் பேச்சில் அணுசக்தியை ஆதரித்துப் பேசியபோது,. எங்கள் இயக்கம் அதைக் கண்டித்து அதை விமர்சித்து 'காலச்சுவடு' இதழிலே நான் கட்டுரை எழுதினேன். எனக்கோ, எங்கள் போராட்டக் குழு உறுப்பினர்களுக்கோ அரசியல் ஆசைகளோ, எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகள் மீது மோகமோ கடுகளவும் கிடையாது என்பதை தங்களுக்குத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

2. எங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டிலிருந்தோ, பன்னாட்டு, இந்திய தொண்டு நிறுவனங்களிலிருந்தோ, தனியார், கட்சிகளிடமிருந்தோ எந்தப் பணமோ வேறு உதவிகளோ வந்ததுமில்லை. இப்போது வரவுமில்லை. எந்த சாதி, மத நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. எங்கள் மீனவ மக்களும், விவசாயிகளும், வர்த்தகர்களும், தொழிலாளர்களும், பீடி சுற்றும் பெண்களும் தருகின்ற சிறிய நன்கொடைகளை வைத்து மிகச் சிக்கனமாக செலவு செய்து காந்திய வழியில் எளிமையாகப் போராடி வருகிறோம். பிற ஊர்களில் இருந்து வருபவர்கள் போக்குவரத்து செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். போராட்டங்களுக்கு வருபவர்களுக்கு வெறும் தண்ணீர் மட்டுமே நாங்கள் கொடுக்கிறோம். இது முழு உண்மை.

 3. நான் 1989 ஆகஸ்ட் முதல் 2001 வரை அமெரிக்காவில் எம்.ஏ மற்றும் பிஎச்டி பட்டப்படிப்புகள் படித்துவந்தேன். பின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக, ஆசிரியராகப் பணியாற்றினேன். எனது மனைவியும் நானும் அன்றும் இன்றும் என்றும் இந்தியக் குடிமக்களாகவே இருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அந்நாட்டு குடியுரிமையை இயற்கையாகவே பெற்றாலும் அவர்கள் தமிழ்மண்ணில் தமிழர்களாக இந்தியர்களாக வாழவேண்டுமென விரும்பியதால் எங்கள் 2 வயது, மூன்று மாதக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கின்ற எனக்கு அமெரிக்க அரசுடனோ அதன் நிறுவனங்களோடா எந்தவிதமான தொடர்போ கிடையாது. அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு வருகைதரு பேராசிரியாராக மட்டுமே போய் வருகிறேன்.

 4. போராடுகின்ற எங்கள் மக்களில் இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரோ, சாதியினரோ நடத்துகின்ற போராட்டமல்ல இது. தமிழ் மக்களாக எங்கள் வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரத்திற்காக நடத்துகின்ற போராட்டம். நாங்கள் எங்களைத் தமிழராக இந்தியராக மனிதர்களாக மட்டுமே பார்க்கிறோம்.

 5. கூடங்குளம் அணுமின்நிலையம், எங்கள் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல், எந்தவிதமான உண்மைத் தகவல்களையும் தராமல், சனநாயக மரபுகளுக்கு எதிராக எங்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கூட 23 ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பெற்றிருக்கிறோம். இந்தியாவிலுள்ள மிகச்சிறிய அணுமின் நிலையங்களைப் போலல்லாமல் கூடங்குளம் அணு உலைகள் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்ற பூதாகரமானவை. ஒரு சிறிய அசம்பாவிதம் கூட பலத்த விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் கடினப்பாறைகள் போதுமான தடிமன் உடையவையாக இல்லை. இந்தப் பகுதியில் பல ஊர்களில் எரிமலைக் குழம்பு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்பகுதி பூமிக்குள் கார்ஸ்ட் குழிகள் என்னும் எபறும் வெற்றிடங்கள் இருக்கின்றன. எங்கள் பகுதி கடலுக்குள் பெரும் வண்டல் குவியங்கள் இருக்கின்றன. அவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டால் சுனாமி எழும் வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் நீரியல், நிலவியில், கடலியல் வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான எதிர்தரப்பு வாதங்களை சற்றும் பொருட்படுத்தாது, எங்கள் பகுதிக்கு வந்த டாக்டர் அப்துல் கலாம், மத்திய அரசு நியமித்த டாக்டர் முத்து நாயகம் குழு போன்றோர் கூடங்குளத்தில் நிலநடுக்கம் வராது, சுனாமி வராது, அணுஉலை பாதுகாப்பாக இருக்கிறது என்று வெறுமனே சொல்லிச் செல்கிறார்கள். அணுஉலை பாதுகாப்பு என்பது வெறும் கட்டங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்தது மட்டுமல்ல. மக்களின் பாதுகாப்பு பற்றி யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. அணு உலைகளின் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் பற்றி பேச மறுக்கிறார்கள். அணு உலை சாதாரணமாக இயங்கும்போதே அதிலிருந்து வெளிப்படும் "தினசரி வாடிக்கையான வெளிப்பாடுகள்" காற்றின் மூலமாகவும் நீரின் வழியாகவும் வெளிப்பட்டு மக்களைப் பாதிக்கும்.

ஆண்டுதோறும் 30 டன் அணுக்கழிவுகளை உற்பத்தி செய்து, அவற்றை எங்கள் மண்ணில் சேமித்து வைத்து, 40 முதல் 60 ஆண்டுகள் வரை அணு உலை இயங்கி முடித்தபிறகு, அதனை செயலிழக்கச் செய்து, பல்லாண்டுகள் பாதுகாத்து எங்கள் மண்ணை நீரை காற்றைப் பாதிப்புக்குள்ளாக்கும் அணுசக்தி துறை, கணக்கற்ற அளவு தண்ணீரை மீண்டும் கடலுக்குள் கொட்டும்போது எந்த பின்விளைவும் ஏற்படாது என்று எங்களை நம்பச்சொல்கிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் உள்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

இத்தகைய பாதுகாப்புக் குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகும் முத்துநாயகம் குழு அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை அளித்தது. நாங்கள் கேட்ட அடிப்படைத் தகவல்களைத் தரவில்லை. இந்நிலையில் தாங்கள் தலையிட்டு டாக்டர் இனியன் தலைமையில் மாநிலக் குழு ஒன்றை நியமித்தீர்கள். ஆனால் அணுசக்தித் துறையின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் அந்தக்குழுவில் இடம்பெற்றது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையால் அதனையும் ஏற்றுக்கொண்டோம்.





இனியன் குழு பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் அணு உலைக்குள் போய்விட்டு ஓரிரு மணிநேரங்கள் அங்கே இருந்துவிட்டு வந்தார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி நேரங்கள் எங்கள் போராட்டக் குழுவைச் சார்ந்த ஒன்பது பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தார்கள். அவர்களிடம் எ


ங்கள் நிபுணர் குழுவைச் சந்தித்துப் பேசவும், எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவந்து மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்கவும் மன்றாடினோம். அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்களின் அரசு என்று தங்களின் அரசை தாங்கள் கருதிச் சொல்லப்படுகின்ற நிலையில் தாங்கள் நியமித்த குழு எங்கள் மக்களைப் புறந்தள்ளியது வேதனை அளிக்கிறது. இதற்கிடையே இறுதி அறிக்கையை தங்களிடம் தருவதற்கு முன்பே கூடங்குளம் அணு உலைக்கு நற்சான்று வழங்கி தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது இனியன் குழு.

மக்களை அழிக்காது, வாழ்வாதாரங்களை நசுக்காது, எதிர்காலத் தலைமுறையை ஒழிக்காது, மாற்று வழிகளிலே மின்சாரம் தயாரிக்கு தங்களின் திட்டங்களை நாங்கள் வணங்கி வரவேற்கிறோம். ஆனால் அதற்கான உதவிகளைத் தர மறுக்கின்ற மத்திய அரசு, நான்கு தனியார் அனல் மின்நிலையங்களை முடக்கி தமிழகத்தில் மின்வெட்டை அதிகமாக்கி தங்கள் அரசையும், தமிழ் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் அறிவோம். நாங்கள் மின்சாரத்தை எதிர்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த ஏழை மக்கள் நலமாக வேண்டுமென்று விரும்புகிறோம். அவர்கள் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களாக மாற்ற தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நாம் செய்த செலவுகள் வீணாகாது. அமெரிக்காவிலுள்ள ஷோர்ஹம் அணுஉலை மக்களுடைய எதிர்ப்பால் இப்படி மாற்றப்பட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இறுதியாக தமிழகம் புகுஷிமா போன்ற ஓர் அணு உலை விபத்தை தாங்கிக்கொள்ளாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2006 ஆம் ஆஃண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கன்னங்குளம், அஞ்சுகிராமம், அழகப்ப்புரம், மயிலாடி, சுவாமித்தோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. கூடங்குளம் அணு உலை இயங்கினால் இப்படி ஒரு நிலநடுக்கம் நடந்தால் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வாழும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும்' என்பது வள்ளுவம்.

அடித்தட்டு மக்களுக்கும் வாழும் உரிமை, வாழ்வாதார உரிமை உண்டெனக் கருதும் செயல்படும் தாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நேரடியாகத் தைலயிட்டு எட்டு கோடி தமிழ் மக்களைக் காக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. இந்தியாவின் அரசியல் கட்சிகள் சிலவும் அரசியல்வாதிகள் பலரும் அமெரிக்காவுக்காக, ரஷியாவுக்காக, பிரான்ஸ் நாட்டுக்காக, பன்னாட்டு நிறுவனங்களுக்காக, இந்திய முதலாளிகளுக்காக, இந்திய முதலாளிகளுக்காக ஏவல் வேலை செய்யும்போது தாங்கள் சாதாரண மக்களுக்காக உழைப்பது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது. தங்கள் தலைமை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் கிடைக்கட்டும். 120 கோடி மக்களும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெறட்டும். வெள்ளைக்காரர்களின் அடிமை தேசமாக இல்லாமல் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற தலைமை தேசமாக மாற்றட்டும் என்று தங்களின் 64 ஆவது பிறந்த நாளில் போராடும் மக்கள் சார்பாக தங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். இறையருள் இனிது பயக்கட்டும்!

தங்கள் உண்மையுள்ள,

சுப. உதயகுமார்

ஒருங்கிணைப்பாளர்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
இடிந்தகரை



நன்றி - த சண்டே இந்தியன்