Showing posts with label ஆஃப் பீட் படங்கள். Show all posts
Showing posts with label ஆஃப் பீட் படங்கள். Show all posts

Monday, November 23, 2015

இவர்கள் விட்டுச்சென்ற பாதையில்...

  • ‘காகஸ் கி பூல்’
    ‘காகஸ் கி பூல்’
  • குரு தத் - ‘பியாஸா’
    குரு தத் - ‘பியாஸா’

தரமான ரசனையை நோக்கி மக்களைத் திருப்பும் வேலையைச் செய்துவரும் இந்திய ‘ஆஃப்பீட்’(off-beat) திரைப்படங்களைத் தந்த முன்னோடிகள் சிலரைப் பற்றி பார்த்தோம். இதுபோன்ற படங்களை எடுத்த குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா ஆகியோரைக் கடந்த வாரம் அறிந்துகொண்டீர்கள். இந்தப் பட்டியலில் குறிப்பிடத் தக்க மற்றொருவர் குரு தத்.


பெயரை மாற்றிக்கொண்ட கலைஞன்

முப்பத்தொன்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த குரு தத், இவர்களை விடச் சற்றே வித்தியாசமானவர்.பெங்களூருவில் பிறந்தவர். சிறுவயது முதலே கல்கத்தாவில் வளர்ந்தார். அறிவுஜீவியாகவே வாழ்ந்தவர். வசந்த குமார் சிவ்ஷங்கர் படுகோனே என்ற இயற்பெயருக்குப் பதில், குரு தத் என்ற பெயரை கல்கத்தாவில்தான் வைத்துக்கொண்டார். இதனாலேயே, இவர் ஒரு பெங்காலி என்று பலரும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

பூனாவின் பிரபாத் பில்ம் கம்பெனி என்ற பிரபல ஸ்டுடியோவில் மூன்று வருட ஒப்பந்த வேலையில் 1944-ல் சேர்ந்தார் குரு தத். அதற்கு முன்னர் டெலிஃபோன் ஆபரேட்டராக இருந்தார். இந்த ஸ்டுடியோவில் சேர்ந்த பின்னர்தான் திரைப்பட ஆர்வம் அவருக்குள் எழுந்தது. பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அங்கே தனது வாழ்நாள் நண்பராக மாறிய தேவ் ஆனந்தின் நவ்கேதன் நிறுவனத்தில் தனது முதல் படத்தை (பாஸி - 1951) இயக்கினார்.

மறுபடியும் அதே நிறுவனத்தில் தேவ் ஆனந்தை வைத்து அவர் இயக்கிய ‘ஜால்’ இரண்டாவது படமாக அமைந்தது. இதன்பின்னர் ‘பாஸ்’, ‘ஆர் பார்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55’ ஆகிய படங்களில் அவரே நாயகனாக நடித்து இயக்கினார். இப்படங்கள், இந்தித் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக குரு தத் இயக்கியவை. எனவே ஜனரஞ்சகப் படங்களாகவே இவை விளங்கின.


‘பியாஸா’

இந்தப் படங்களுக்குப் பின்னர் இவர் இயக்கிய ‘பியாஸா’என்ற திரைப்படம்தான் இன்றளவும் குரு தத்தின் பெயரை உலகெங்கும் கொண்டுசேர்த்தது. ஒரு ஏழைக் கவிஞன், அவனது கல்லூரிக் காதலி, இவனது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு இவனைக் காதலிக்கத் தொடங்கும் ஒரு பாலியல் தொழிலாளி, கல்லூரிக் காதலியின் கணவன் ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு, இயல்பான, உணர்வுபூர்வமான ஒரு கதையைப் படமாக்கியிருந்தார் குரு தத்.

ஒரு கட்டத்தில் அவரது கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் கருதப்படும். இவரைச் சுற்றியிருக்கும் அனைவரும் சுயநலவாதிகள் என்பதைப் புரிந்துகொண்டு, தன்னை விரும்பிய பாலியல் தொழிலாளிப் பெண்ணுடன் இறுதியில் கிளம்பும்படியான கதை. ஸாஹிர் லுத்யான்வி என்ற புகழ்பெற்ற கவிஞரின் கதையில் இருந்து எடுத்த சில அம்சங்கள் இப்படத்தின் இயல்புத்தன்மையை உறுதிப்படுத்தின. படம் மிகுந்த பிரபலமடைந்தது.

இப்படத்துக்குப் பின்னர் குரு தத்தின் ‘காகஸ் கி பூல்’ வெளியாகியது. அச்சமயத்தில் படுதோல்வி அடைந்தாலும், பின்னாட்களில் திரைப்பட ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்த படங்களில் அதுவும் ஒன்று. இந்தப் படத்தில் ஒரு திரைப்பட இயக்குநராக குரு தத் நடித்திருப்பார். மனைவியின் குடும்பத்தினர் இவரை இளப்பமாக நடத்துவார்கள்.

காரணம், அச்சமயத்தில் திரைப்பட இயக்குநர் என்பது சமூகத்தில் அந்தஸ்து குறைந்த வேலையில் இருப்பவர் என்று கருதப்பட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருக்கும் ஒரு நபர், எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்த ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி, அவள்மீது காதல் கொள்ளும் கதை. இதனால் ஏற்கெனவே திருமணமான அவரது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இவரது மகள் இறைஞ்ச, அப்பெண் மனம்மாறி, கதாநாயகி வாழ்க்கையைத் துறந்து ஒரு பள்ளியில் ஆசிரியை ஆகிவிடுகிறாள். அனைவரும் அவரை விட்டுப் பிரிந்த நிலையில் குடிக்கு அடிமையாகி, இறுதியில் இயக்குநர் நாற்காலியில் இவர் உயிரை விடுவதோடு படம் முடியும்.


திரையும் வாழ்வும்

நிஜ வாழ்விலும் இதேபோல் தனது முப்பத்தொன்பதாம் வயதில், மதுபானத்தோடு அளவுக்கதிகமாகத் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதால் 1964 அக்டோபர் பத்தாம் தேதி இரவில் குரு தத் இறந்துபோனார். இதற்கு முன்னரே இரண்டு முறைகள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இந்த நான்கு இயக்குநர்கள் இந்தியாவின் ஜனரஞ்சகத் திரைப்படங்களை வேறு ஒரு நிலைக்கு உயர்த்தினார்கள். அதுவரை ஆடல்கள், பாடல்கள், சண்டைகள் என்று இருந்த திரைக்களம், இவர்களது இயல்பான படங்களால் தாக்கம் பெற்று, திரை ரசிகர்களது ரசனையின் தரத்தை உயர்த்தியது. தமிழ்நாட்டில் கூட இவர்களின் பாதிப்பு நிலவியது. பாலசந்தர் படங்களில் ரிஷிகேஷ் முகர்ஜியின் பாதிப்பை சர்வநிச்சயமாக உணர முடியும். இவர்களின் படங்கள், நாம் மேலே பார்த்தபடி, சென்னையில் கூட நன்றாக ஓடியிருக்கின்றன.

இவர்கள் விட்டுச்சென்ற பாதையில்தான் இந்தியாவின் ஆஃப்பீட் திரைப்படங்கள் இன்றும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. பாலு மகேந்திரா, மகேந்திரன், சுதீர் மிஷ்ரா, அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், விக்ரமாதித்ய மோட்வானே, ராஜ்குமார் குப்தா, சுஜோய் கோஷ், ரிதுபர்ணோ கோஷ், கிரீஷ் கர்நாட், ஷாஜி கருண், புத்ததேவ் தாஸ்குப்தா மற்றும் பல இயக்குநர்கள் தற்சமயம் இந்தியாவின் திரைப்படங்களை உலகெங்கும் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இது நமக்குப் பெருமை அளிக்கும் விஷயமே. இந்தப் பட்டியலில் மணிகண்டன், வெற்றிமாறன், பிரம்மா ஆகியோர் இணைந்துள்ளது, தமிழிலும் இனி அருமையான ஆஃப்பீட் மற்றும் கலைப்படங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையை உறுதி செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்

thanks the hindu

Wednesday, November 18, 2015

வாழ்க்கையைப் படமாக்கிய இயக்குநர்கள்!

‘ஆனந்த்’ படத்தில் அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா
‘ஆனந்த்’ படத்தில் அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா

இந்தியப் படங்களில் ‘ஆஃப் பீட்’ (off-beat) என்ற குறிப்பிட்ட வகையைப் பற்றிச் சென்ற வாரம் சுருக்கமாகப் பார்த்தோம். முடிந்தவரை இயல்பான திரைப்படங்களாக இருந்து, அதில் ஜனரஞ்சகப் படங்களைப் பார்க்கும் மக்களையும் உள்ளே இழுக்கும்படியான அம்சங்களை வைத்திருப்பது இவ்வகைப் படங்களின் நோக்கம்.

முற்றிலும் கலைப் படங்களாகவும் இருக்காமல், பாடல்கள் முதலிய ஜனரஞ்சக சினிமாவின் அம்சங்களையும் இவை கொண்டிருக்கும். இப்படிப்பட்ட படங்களின் மூலம், ஒரேயடியாக ஜனரஞ்சக சினிமாவாக இல்லாமல், நல்ல படங்களை நோக்கி மக்களைத் திருப்பும் வேலையை இப்படங்களை எடுத்த இயக்குநர்கள் செய்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா, குருதத் முதலானவர்கள். இவர்கள் படம் எடுத்த அறுபதுகளும் எழுபதுகளும் பல இனிமையான, இயல்பான படங்களைக் கொண்டிருந்தன.


நடுத்தர வர்க்கத்தின் கதைகள்

இவர்களில் ரிஷிகேஷ் முகர்ஜியின் படங்களே மிகப் பிரபலமானவை. இவரது ‘பவர்ச்சி’ படம், ‘சமையல்காரன்’ என்ற பெயரில் மு.க.முத்துவை வைத்துத் தமிழில் எடுக்கப்பட்டிருக்கிறது. இவரது ‘கோல்மால்’தான் தமிழில் ‘தில்லுமுல்லு’. இவர் எடுத்த ‘நமக் ஹராம்’தான் தமிழில் ‘உனக்காக நான்’ (சிவாஜி). இவரது பெரும்பாலான படங்கள் இன்றுவரை இந்தி ரசிகர்களால் பாராட்டப்படுபவை.

முஸாஃபிர், ஆனந்த், குட்டி (குட்டி அல்ல. Guddi), அபிமான், சுப்கே சுப்கே, கோல்மால் ஆகியவை இவரது மறக்க முடியாத படங்கள். இவற்றைத் தவிரவும் ஏராளமான படங்கள் எடுத்திருக்கிறார். இவரது பெரும்பாலான படங்களில் கதைக்கே முக்கியத்துவம் இருக்கும்.

நடுத்தரவர்க்க மக்களைப் பல காலம் திரையரங்கை நோக்கி இழுத்தவர். இவரது படங்களிலும் அவர்களின் கதையே பெரும்பாலும் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டிருக்கும். இவரது மாஸ்டர் பீஸாக ‘ஆனந்த்’ படத்தைச் சொல்லலாம். ஆனந்த் என்ற, புற்றுநோயால் இறந்துகொண்டிருக்கும் நபரைப் பற்றிய படம். தனக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தும், சுற்றிலும் இருக்கும் அனைவரையும் அன்போடும் சந்தோஷத்தோடும் பார்த்துக்கொள்ளும் நபரான ஆனந்தாக ராஜேஷ் கன்னா நடித்தார்.

அவருடைய நண்பராக அமிதாப் பச்சன். ராஜேஷ் கன்னாவின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. இப்படம் பல விருதுகளைப் பெற்றது. சலீல் சௌத்ரியின் இசையில் மறக்க முடியாத பாடல்கள் இப்படத்தில் உண்டு. வசனங்கள் குல்ஸார்.


வறிய கிராமங்களின் முகம்

புகழ்பெற்ற இயக்குநர் பிமல் ராயின் உதவி இயக்குநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பாஸு பட்டாச்சார்யா. ராஜ்கபூரை வைத்து இவர் 1966-ல் எடுத்த தீஸ்ரி கஸம் படம் தேசிய விருது பெற்றது. ஆவிஷ்கார் என்ற சூப்பர் ஹிட் படத்தை ராஜேஷ் கன்னாவை வைத்து எடுத்தார். திருமணம், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் முதலிய விஷயங்களை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்கள் பிரபலமானவை. அனுபவ், ஆவிஷ்கார், க்ருஹப்ரவேஷ் ஆகியவையே அவை.

பாஸு பட்டாச்சார்யாவுக்குத் தீஸ்ரி கஸம் படத்தில் உதவி இயக்குநராக இருந்தவர் பாஸு சட்டர்ஜீ. அதற்கும் முன்பாக, ப்ளிட்ஸ் சினிமா பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாக 18 வருடங்கள் இருந்தவர். தீஸ்ரி கஸம் தேசிய விருது வாங்கிய பின்னர், சாரா ஆகாஷ் என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். அது, சிறந்த திரைக்கதைக்காகத் தேசிய விருது வாங்கியது. வட இந்தியாவின் வறுமை சூழ்ந்த கிராமங்களிலேயேதான் பாஸு பட்டாச்சார்யாவின் பல படங்கள் நடைபெறும்.

அங்கே காதல், திருமணம் முதலிய உறவுகளும் அவற்றின் சிக்கல்களும் பேசப்படும். கூடவே, நகரங்களில் இருக்கும் இடம்பெயர்ந்த மனிதர்களின் பிரச்சினைகள். இதுதான் பாஸு பட்டாச்சார்யாவின் பாணி. அவர் படமெடுத்த காலத்தில் மிருணாள் சென், மணி கௌல் முதலியவர்கள் நல்ல படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அவர்களுடன் சேர்ந்து, பாஸு பட்டாச்சார்யாவின் படங்கள் ஆஃப் பீட் படங்களாக அமைந்து திரை ரசிகர்களை மகிழ்வித்தன. இவரது பியா கா கர், ரஜ்னிகந்தா, சித்சோர், சோட்டிஸி பாத், கட்டா மீட்டா, ஸ்வாமி, பாதோன் பாதோன் மே(ய்)ன், மன்ஸில் முதலிய படங்கள் இன்றும் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவை. எழுபதுகளில் நீங்கள் இளைஞராக இருந்திருந்தால், இப்படங்கள் சென்னையில் நன்றாக ஓடியது நினைவிருக்கும். இவரது பெரும்பாலான படங்களில் அமோல் பாலேகர் நடித்திருப்பார்.


இந்தியில் ஜேசுதாஸ்

ஜேஸுதாஸ் முதன்முதலில் இந்தியில் அறிமுகமானது பாஸு பட்டாச்சார்யாவின் படமான சோட்டிஸி கதாபாத்தில்தான். சலீல் சௌத்ரியின் இசையில் ‘ஜானேமன் ஜானேமன் தேரே தோ நயன்’ என்ற பாடல் அது. மிகவும் இனிமையான, குறும்பான பாடல். இத்தோடு சேர்த்து, ‘கோரி தேரா காவோ(ன்) படா ப்யாரா’ என்ற பாடல், சித்சோர் படத்தில் வரும் (இசை: ரவீந்த்ர ஜெய்ன்). இந்த இரு பாடல்களும் அந்தந்த ஆண்டுகளின் மிகப் பிரமாதமான ஹிட்கள். இந்தியா முழுதும் ஜேசுதாஸின் பெயரைக் கொண்டுசேர்த்தன.

இங்கே நான் சொல்லியிருக்கும் பாஸு பட்டாச்சார்யாவின் படங்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவற்றில் இடம்பெறும் காதல், இனிமையான காட்சிகள், உணர்வுபூர்வமான சம்பவங்கள், கதாபாத்திரங்களின் மனதில் இடம்பெறும் தவிப்பு ஆகியவை மிகவும் இயல்பாக இருப்பதை உணர்வீர்கள். இந்தப் படங்களும் இன்றுவரை இந்தி ரசிகர்களால் அவ்வப்போது நினைவுகூரப்படுகின்றன.

முப்பத்தொன்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த குருதத், இவர்களை விடவும் சற்றே வித்தியாசமானவர். பிறப்பால் தென்னிந்தியராக இருந்தாலும் (பெங்களூர்), சிறு வயதில் கல்கத்தாவில் வாழ்ந்த காரணத்தால், அப்பகுதியின் தாக்கம் அவருக்கு அதிகமாக உண்டு. வசந்த் குமார் சிவ்ஷங்கர் படுகோனே என்ற இயற்பெயருக்குப் பதில், குருதத் என்ற பெயரை கல்கத்தாவில்தான் வைத்துக்கொண்டார். இதனாலேயே, இவர் ஒரு பெங்காலி என்ற பரவலான எண்ணம் பலருக்கும் உண்டு. குருதத்தின் பங்களிப்பை அடுத்த வாரம் காண்போம்

தொடர்புக்கு: [email protected]

ரிஷிகேஷ் முகர்ஜி - பாஸு சட்டர்ஜி


பாஸு பட்டாச்சார்யாவின் ‘தீஸ்ரி கசம்’

thanks the hindu