Showing posts with label அழகிரி. Show all posts
Showing posts with label அழகிரி. Show all posts

Sunday, March 10, 2013

அழகிரிக்கு அஸ்தம காலமா? ஆனந்த விகடன் அலசல்

அவஸ்தை காலம் ஆரம்பித்துவிட்டது அழகிரிக்கு!

 தி.மு.க. தலைவரின் மகன், தென்மண்டல அமைப்புச் செயலாளர், மத்திய அமைச்சர், தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தி, ஏழு தென் மாவட்டங்களில் அவர் வாக்குதான் வேதம், விரும்பியவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைத் தாரைவார்ப்பார், அவருக்கு ஒன்று என்றால், உயிரைக் கொடுப்பதற்கு மதுரை வட்டாரத்தில் பெரும் படையே இருக்கிறது, கட்சித் தலைவர் போட்டியில் அவருக்கு தாய் தயாளுவின் ஆதரவு, ஸ்டாலினைப் பிடிக்காத முக்கியஸ்தர்கள் அனைவரும் இவரது தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்... என்று உச்சி முகர்ந்து சொல்லப்பட்ட அழகிரி, இப்போது காற்று அடங்கிய பலூன் மாதிரி கம்மென்று கிடக்கிறார்.


முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் அழகிரி. 'தலைவரின் மகன்’ என்ற ஒற்றைத் தகுதியுடன் அவர் எதிர்பார்த்த மகுடம், ஸ்டாலின் தலைக்குச் சென்றுவிட்டது. தென் மண்டல அமைப்புச் செயலாளரை, தென் மாவட்டத்து மாவட்டச் செயலாளர்களே மதிப்பது இல்லை. தி.மு.க-வில் அவர் பேச்சைக் கேட்டுவிட்டு, இப்போது எதுவும் செய்யப்படுவது இல்லை. மாநிலத்தில் ஆட்சி போனதால், மதுரை வட்டாரத்தில் லாபம் எதிர்பார்க்கும் கட்சிப் புள்ளிகள் கரைய ஆரம்பித்துவிட்டார்கள்.


 நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாததால் அங்கும் அவருக்கு நல்ல அறிமுகம் இல்லை. தயாளு, இவரை ஆதரித்துச் செயல்படும் அளவுக்கு ஆரோக்கியமான உடல்நிலையில் இல்லை. 'தலைமைக்கான தேர்தல் வந்து போட்டி வந்தால், நான் ஸ்டாலின் பெயரைத்தான் வழி மொழிவேன்’ என்று கருணாநிதியே சொன்ன பிறகு, ஸ்டாலினைப் பகைப்பவர்கள்கூட வலியப்போய் அவரிடம் சிரிப்பைப் பதிவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாக் கஷ்டமும் சொல்லிவைத்தது மாதிரி ஒரே சமயத்தில் அழகிரியைத் தாக்கும் என்பது யாரும் எதிர்பாராதது!


இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. அழகிரி மட்டுமே அனைத் துக்கும் காரணம். கருணாநிதியின் மூத்த மகனாக, கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக, மத்திய அமைச்சராக... ஏதேனும் ஒரு பொறுப்பிலேனும் புலிப் பாய்ச் சல் காட்டியிருக்கிறாரா அழகிரி?


கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார் தி.மு.க. உறுப்பினர் கே.பி.ராமலிங்கம். அழகிரிக்கென இப்போது இருக்கும் ஒரு சில ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். ஆனால், தான் கேட்ட கேள்வி தனது கட்சித் தலைவரின் மகனையே பதம் பார்க்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். உர மானியத்தில் 5,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக பரபரத்த விவாதத்தின்போது கே.பி.ராமலிங்கம் கேட்ட ஒரு கேள்விக்கு, ரசாயனம், உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா எழுந்து பதில் சொல்ல முற்பட்டார். 




அவ்வளவுதான்... பா.ஜ.க-வின் வெங்கய்ய நாயுடு பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார். ''எவ்வளவு பெரிய விவாதம் இங்கு நடக்கிறது. இதற்குப் பதில் சொல்ல வேண்டிய துறையின் அமைச்சர் எங்கே? அவர் எப்போதுமே அவையில் இருப்பது இல்லை. எல்லாவற்றுக்கும் இணை அமைச்சரே பதில் சொல்வதாக இருந்தால், அழகிரிக்கு எதற்கு அமைச்சர் பதவி? மொத்தத்தில் அவரது போக்கு சரியில்லை'' என்று பொரிந்துதள்ள... மொத்த பா.ஜ.க. உறுப்பினர்களும் அழகிரிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.



 மத்திய அமைச்சரவையில் அழகிரியின் மீதான அதிருப்தி ஒன்றும் புதிய விஷயம் அல்ல; பல முறை பிரதமரே அழகிரியின் ஆப்சென்ட்டால் அப்செட் ஆகி இருக்கிறார். நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டும், மணிக்கணக்கில் பேச வேண்டும், பதிலுக்குப் பதிலடி தர வேண்டும் என்று அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், சபையில் பங்கேற்க வேண்டும், தேவையான பதில்களையாவது தர வேண்டும். அதுவும் முடியாவிட்டால், 'எழுத்துபூர்வமாகப் பின்னர் பதில் தருவேன்’ என்று சொல்ல வேண்டும். இவை எதையுமே அழகிரி பின்பற்றவில்லை என்ற ஆதங்கம் பிரதமருக்கு இருக்கிறது.


மத்திய அமைச்சர் பதவி என்பது அழகிரியின் அரசியல் எதிர்காலத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஆனால், அந்த வல்லமை மிகுந்த வாய்ப்பை அழகிரி தவறவிட்டுக்கொண்டே இருக்கிறார். தி.மு.க-வின் மற்ற எம்.பி-க்கள் பிரதமரையும், சோனியாவையும், ராகுலையும் சகஜமாகச் சந்திக்க முடிகிறது. ஆனால், அழகிரியால் மட்டும் முடியவே இல்லை. கேட்டால், 'மொழிப் பிரச்னை’ என்கிறார்கள்.

 தி.நகரில் சாதாரண வியாபாரியாக இருந்த பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தி ஆங்கிலமும் இந்தியுமா பேசி அவ்வளவு ரயில்வே திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார்? லாலுபிரசாத் யாதவ் கொச்சை ஆங்கிலத்தைக்கொண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு, வார்ட்டன் பல்கலைக்கழகங்களை யும் அகமதாபாத்தின் ஐ.ஐ.எம்-மையும் அசத்த வில்லையா? திறன்மிக்க அமைச்சராகப் பிரகாசிக்க... கட்சியின் உறுப்பினராக மத்தியில் லாபி செய்ய... மொழி ஒரு தடை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்!



டெல்லியை விடுங்கள்... கட்சியில் என்ன பிரச்னை? 'செயல்வீரர்’, 'இடைத் தேர்தல் வெற்றிகளின் வித்தகர்’ என்றெல்லாம் சொல்லித்தானே கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பதவி வந்த பிறகு, ஒரே ஒருமுறை தன்னுடைய வீட்டில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியதைத் தவிர, கட்சிக்காகக் களம் இறங்கி அவர் என்ன வேலை பார்த்தார் என்று யாருக்கேனும் நினைவிருக்கிறதா? ஓரிரு நாள் பிரசாரங்களில் தலைகாட்டுவது மட்டுமே, ஒருவரை ஆக்ட்டிவ் அரசியல்வாதி ஆக்கிவிடாதே!




அதிலும் 'திருமங்கலம் ஃபார்முலா’ அழகிரிக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால், தி.மு.க-வின் ஜனநாயக - ஓட்டு அரசியல் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை... தி.மு.க-வுக்கு தேசிய அளவில் இருந்த நற்பெயரை அது எந்த அளவுக்குச் சிதைத்தது என்பது கட்சித் தலைவரின் மனசாட்சிக்குத் தெரியும்.



கடந்த காலத்தில் அழகிரியின் பிறந்த நாள் விழாக்களில் பெருமளவு திரண்ட தென் மாவட்டச் செயலாளர்களும் முக்கிய அமைச்சர் களும் இந்த முறை சொற்ப எண்ணிக்கையாகச் சுருங்கிப்போனது ஏன்? உண்மையில் ஒரு சமஸ்தானத்தின் சர்வாதிகாரச் சக்ரவர்த்தியாக இருக்க மட்டுமே ஆசைப்படுகிறார் அழகிரி. 'யாரங்கே!’ என்று கட்டளையிட்டால், மூத்த அமைச்சர்களும் அண்ணா பாசறையில் திராவிடம் பயின்ற மூத்த தலைவர்களும் ஓடி வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?



எல்லாவற்றையும்விட அ.தி.மு.க. ஆட்சியில் தனது நிலைமை எப்படி இருக்கிறது என்பதைக்கூடவா அழகிரி உணர மாட்டார்?



கிரானைட் வழக்கில் அவரது மகன் துரை தயாநிதியை விடாமல் துரத்துகிறது அ.தி.மு.க. அரசு. வேறு ஏதாவது ஒரு வழக்கில் அவரை வளைத்துப் போடக் கண்கொத்திப் பாம்பாக வாய்ப்புக்குக் காத்திருக்கிறது காவல் துறை. இன்னொரு பக்கம் தயா சைபர் பார்க்கின் சுற்றுச்சுவர்களை இடித்துத்தள்ளுகிறது மாநகராட்சி. எல்லாவற்றுக்கும் மேலாக பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீஸின் சந்தேகக் கரங்கள் அழகிரியையும் துரை தயாநிதியையும் நோக்கி நீள் கின்றன.



குடும்ப உறவுகளில் சுமுகமாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஸ்டாலின், கனிமொழி, துர்கா, ராசாத்தி அம்மாள் தொடங்கி அத்தனை பேரும் ஆகாது அவருக்கு. அவ்வளவு ஏன்? தனது மகள்கள் கயல்விழியிடமும் அஞ்சுகச்செல்வியிடமும் ஓரிரு வார்த்தைகள் பரிவாகப் பேசி ஓர் ஆண்டுக்கு மேலாகிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. அவர்களைவிடவா கட்சியும், பதவியும், அதிகாரமும் அழகிரிக்கு நிம்மதியைத் தந்துவிட முடியும்?



இப்போதைக்கு அழகிரி நம்புவது மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மருமகள் அனுஷா ஆகிய மூவரை மட்டும்தான். எல்லாப் பிரச்னைகளின்போதும் அழகிரிக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பது அவர்கள்தான். ஆனால், அந்த மூவருக்குமே அவரது 'செயல்பாடு’கள் பிடிக்குமா என்ன?



நன்றி - விகடன் 

Wednesday, February 27, 2013

அழகிரி - அட்டாக் பாண்டி - பொட்டு கொலை வழக்கு - ஜூ வி கட்டுரை

அழகிரியிடம் அட்டாக் கேட்ட 5 சத்தியங்கள்!
 
 
>>சிவப்பு விளக்கு வைத்த காரில் வலம் வருகிற மாதிரி  ஒரு ஃபவர்புல் பதவி.

 >>தி.மு.க-வில் ஏதாவது ஒரு பதவி.

>>பொட்டு சுரேஷ§க்கு நீங்கள் முக்கியத்துவம் தரக் கூடாது.

>>இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டும்.

>>மதுரை உயர் நீதிமன்றம் எதிரில் இருக்கும் 100 சென்ட் இடப் பிரச்னையில் நான் தலையிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு எதிராகப் பஞ்சாயத்து செய்து அந்த லாட்டரி அதிபருக்கு சாதகமாகச் செய்து விட்டனர். அதில் 50 சென்ட் நிலமாவது எனக்கு வாங்கித்தர வேண்டும்.



-''இந்த ஐந்து கோரிக்கைகளை அழகிரியிடம் வைத்து சத்தியம் கேட்டார் அட்டாக் பாண்டி'' என்று, போலீஸ் கஸ்டடி விசாரணையில் விஜய பாண்டி சொல்லி, திகிலைக் கிளப்பி உள்ளாராம்.


 சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஹோட்டல் அறையில் ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய சந்திப்பு நடந்தது. அப்போது மு.க.அழகிரியிடம் இந்தக் கோரிக்கைகளை முன் வைத்தாராம் அட்டாக் பாண்டி. 'கடந்த தி.மு.க. ஆட்சியிலும் சரி.. இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியிலயும் அரசியல் ரீதியாக நான் ரொம்பப் பாதிக்கப்பட்டு விட்டேன். இதிலிருந்து விடுபட நீங்கள்தான் உதவ வேண்டும்... பொட்டு சுரேஷ் இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. அவரது முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும்' என்றும் அட்டாக் கேட்டாராம்.  'அட, அவரும் உன்னை மாதிரித்தானே பாதிக்கப் பட்டிருக்கார். அவரை எப்படி விட முடியும்?'' என்றாராம் மு.க.அழகிரி.

சந்திப்பு முடிந்த பிறகு,  ஜனவரி 31-ம் தேதி திடீரென பொட்டு சுரேஷ் கொலை செய்யப்​பட்டார். சென்னை சம்பவத்தை அட்டாக் பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டி விலா வாரியாக வர்ணித்துள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது.


விஜயபாண்டி மற்றும் ஆரோக்கிய பிரபு ஆகிய இருவரையும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். அவர்கள் சொன்ன பகீர் ரகத் தகவல்கள் போலீஸ் வட்டாரத்தையே கலங்க வைத்துள்ளது.


சென்னை ஹோட்டலில் என்ன நடந்தது?  


''சென்னை ஹோட்டலில் கீழே நின்றிருந்தோம். சிவப்பு விளக்கு வைத்த கார் இருந்தது. போலீஸ் செக் யூரிட்டிகள் நின்றுகொண்டிருந்தனர். டெல்லிக்கு மு.க.அழகிரி செல்ல வேண்டிய விமானம் இரண்டு மணிநேரம் லேட் ஆனதால், அங்கே தங்கியிருந்தார். அவர் ஒரு அறையிலும் அவரது மகன் துரை தயாநிதி இன்னொரு இடத்திலும் இருந்தனர். முதலில், துரைதான் அட்டாக்கிடம் பேசிவிட்டு, பிறகு, அழகிரி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் பேசி இருக்கிறார்கள்.



 அப்போது அங்கே நடந்ததை ரிசப்ஷனில் காத்திருந்த என்னிடம் அட்டாக் திரும்பி வந்து சொன்னார். 'பொட்டுவால் எங்களுக்குப் பெரிய தலைவலி. குடும் பத்துக்கும் தொந்தரவு' என்று அழகிரி சொன்னதாக அட்டாக் எங்களிடம் சொன்னார். 'நீங்க என்ன சொல்றீங்களோ? அப்படியே செய்றேன்' என்று அட்டாக் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு, கொஞ்சநேரம் அமைதியாக இருந்த அட்டாக், பிறகு ஆவே சமாக மாறினார். 'ஆள் ரெடி பண்ணுங்க' என்று எங்களிடம் சொன்னார். பிறகு நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்'' என்று முடித்தானாம் விஜயபாண்டி.



போலீஸின் அன்பான விசாரணை! 



கஸ்டடியில் மூன்றாவது நாள், போலீஸின் அன் பான விசாரணை ஆரம்பிக்க... விஜயபாண்டியின் பேச்சு அங்குமிங்கும் அலைபாய்ந்ததாம். 'பொட்டு சுரேஷ் கொலைக்குப் பிறகு அட்டாக்கை எங்கே பார்த்தே?’ என்று விஜயபாண்டியிடம் கேட்டபோது, 'மைசூரில் சந்தித்தோம். யார், யார் எப்படி வாக்குமூலம் கொடுக்கவேண்டும் என்று கிளாஸ் எடுத்தார். 


அவர்களும் அவர் சொன்னபடிதான் வாக்குமூலங்களை போலீஸில் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் என்னிடம், 'நீ போய் கோர்ட்டில் சரணடைந்து விடு. நீ போலீஸில் என்ன சொல்ல வேண்டும் என்று உனக்குத் தகவல் வரும்' என்றார். அதன்படியே, சட்டம் தெரிந்த பிரமுகர் ஒருவர் மூலம் 'அழகிரி, துரை தயாநிதி பெயரை நீ சொல்லலாம்’ என்று தகவல் வந்தது. வழக்கு விஷயங்களுக்காகத் தேவைப்படும் பணம் அப்போது​தான் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்றும் கூறினார். அதன்படிதான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன்'' என்றானாம் விஜயபாண்டி.


''அழகிரி, துரை தயாநிதி பெயர்களை விஜயபாண்டியை விட்டு முதலில் சொல்லச் சொல்கிறார் அட்டாக் பாண்டி என்றால், வேறு ஏதோ சதி செய்கிறார் என்று அர்த்தம். முன்னுக்குப் பின் முரணாக அவரின் ஆட்களை போலீஸிடம் பேசவிட்டுக் குழப்பப் பார்க்கிறார். அழகிரியிடம் ஏதோ நிபந்தனைகளை வைத்து பிளாக்மெயில் செய்கிறார். அதற்காகத்தான் விஜயபாண்டியை விட்டு ஒரு 'ஷாக்' கொடுத்துவிட்டு, அடுத்து தனது கோரிக்கைகள் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிறார். அட்டாக் போலீஸில் சிக்கும்போது, தங்களையும் சொல்லிவிடுவாரோ? என்ற பீதியில் அழகிரியையும் துரை தயாநிதியையும் தவிக்க விட்டிருக்கிறார்.



முன்னோட்டமாக இப்படிச் சொல்லி வைத் தால்தான் இந்த வழக்கில் இருந்து அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் காய் நகர்த்துகிறாரா? என்று சந்தேகப்படுகிறோம்'' என்கிறது போலீஸ் தரப்பு.


ஆனாலும் விஜயபாண்டி சொன்னதை​யெல்லாம் வீடியோ பதிவுசெய்து, வாக்குமூலமாக மேலிடத்​துக்கும் அனுப்பி விட்டதாம் போலீஸ் தரப்பு.


துப்பு சொல்லும் பொட்டு தரப்பு 


பொட்டு சுரேஷின் அனுதாபிகள் தரப்பில், ''எங்கள் அண்ணன் கொலையில் இருந்து தப்பிக்க, அட்டாக் ஏதாவது தந்திரம் செய்வார். அவரது சகாக்களை விட்டு முதலில் போலீஸை ஆழம் பார்க்கிறார். நம்பாதீர்கள்'' என்று திரும்பத் திரும் பச் சொல்லி வருகிறார்களாம். மதுரையில் உள்ள பொட்டு சுரேஷின் நலம்விரும்பி ஒருவர் கூறும்போது, ''தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில், தன்னை ஏவியது யார் என்று அட்டாக் கடைசி வரை சொல்லவே இல்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் அடித்து விசாரித்தபோதும்கூட சொல்லவில்லை. 


ஆனால், எந்த நேரமும் சொல்லி விடுவேன் என்று மறைமுக பிளாக்மெயில் செய்தே, வாரியத் தலைவர் பதவியை வாங்கினார். ஜெயம் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் அட்டாக்கின் தலையீடு பற்றி ஊரில் அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த விவகாரத்தில் தன்னை போலீஸ் நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டார். இவைபோக, பணம் வரும் பல்வேறு கான்ட்ராக்ட்களைப் பெற்றார். அப்படிப்பட்ட கேரக்டர் அட்டாக் பாண்டிக்கு உண்டு. அதுபோலவே இப்போதும் எங்கள் அண்ணன் கொலை வழக்கில் அழகிரிதான் செய்யச் சொன்னார்... துரைதான் செய்யச் சொன்னார்.. என்று மறைமுகமாகத் தகவலைப் பரப்பிவிடுகிறார் என்றே நாங்கள் நினைக்கிறோம். எங்கள் அண்ணனுக்கும் அழகிரி குடும்பத்தினருக்கும் இடையே ஏதோ சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்திருக்கலாம். கொலை வரை போகும் அளவுக்கு முக்கியமான எந்த ஒரு மோட்டிவும் இல்லை'' என்கிறார்களாம்.


எதிர்வாதம் பண்ணும் அட்டாக் தரப்பு..! 


அட்டாக்கின் நெருங்கிய சட்டம் தெரிந்த நண்பர்​களிடம் பேசியபோது, ''கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே நிலை இல்லாமல் தவித்தார் அட் டாக். ஓடஓட விரட்டிக்கொண்டே இருந்தனர். அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், கேட்கவே வேண்டாம்... படு ஸ்பீடில் துரத்தினர். தான் உயிர் வாழப் புகலிடம் தேடி ஸ்டாலினிடம் போனார். பொட்டுவுக்கும் அட்டாக்குக்கும் மோட்டிவ் உண்டு என்பது ஊர் உலகத்துக்கே தெரியும். இதையே ஒரு சான்ஸாகக் கருதி பழி அட்டாக் மீது திரும்பும் என்பதைத் திட்டம் போட்டு, யாரோ அட்டாக்கின் ஆட்களைப் பிடித்து இந்த அசைன்மென்ட்டைத் தந்திருக்க வேண்டும். அட்டாக் கூடிய விரைவில் வருவார். அப்போது எல்லா வினாக்களுக்கும் விடை தெரிந்து விடும்'' என்று அப்பாவியாகச் சொல்கிறார்கள்.


மௌன வேடிக்கை பார்க்கும் போலீஸ்... 



அட்டாக் கோஷ்டியினர் ஒருகோணத்திலும் பொட்டு தரப்பினர் இன்னொரு கோணத்திலும் தகவல்​களைச் சொல்லிவர... மௌனமாக வேடிக்கை பார்க்கிறது போலீஸ். பொட்டுவைக் கொலை செய்தது 'அட்டாக்’தான் என்பதில் உறுதியாக இருக்கிறது. இருந்தாலும், இரு தரப்பினர் சொல்வதையும் புறக்கணித்து விடவில்லை அவர்கள். பொட்டு கொலைக்குப் பிறகு, சரணடைந்த ஆட்களில் சிலர் துரை தயாநிதியின் நண்பர்கள் பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் அணியில் பொட்டுவின் சகாக்களும், அட்டாக்கின் உறவினரான இளைஞர்களும் இருக் கிறார்கள். இதை வைத்து, பொட்டு கொலை ஏற்பாடுகளில் உதவியவர்கள் என்ற பட்டியலில் சிலர் பெயர்களைச் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால், போலீஸ் அதை கிராஸ்செக் செய்தபோது, அது பொய் என்று தெரிந்து மேற்கொண்டு விசாரிக்கவில்லை. ஏன் துரை நண்பர்களையும் இதில் இழுத்து விடு கிறார்கள் என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைக்கவில்லை. பொட்டுவின் பினாமிகள் யாராவது இந்தக் கொலையை பின்னணியில் இருந்து செய்தார்களா என்ற கோணங்களிலும் விசாரிக்கிறார்கள்.




'அட்டாக் பாண்டிக்கு யாரோ மாஸ்டர் ப்ரெய்ன் இருக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. அதேபோல், சட்ட ஆலோசனை விவகாரங்களைக் கவனிக்க, எங்கிருந்தோ திடீர் திடீரென்று உத்தரவுகள் வருகின்றன. இந்த செலவுகள் எப்படி நடக்கிறது என்பதையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்’ என்கிறது போலீஸ்.


''விஜயபாண்டியின் வாக்குமூலத்தில் மு.க.அழகிரியையும் துரை தயாநிதி¬யும் சொல்​கிறான். ஆனால், 'அவர்களை நேரடியாக சென்னை ஒட்டலில் இவன் பார்க்கவில்லை என்றும், அட்டாக் கூறியதை வைத்து சொல்வதாகவும்’ எங்களிடம் சொல்கிறான். எனவே, அட்டாக் பிடிபட்ட பிறகு, எங்களிடம் அந்த ஹோட்டல் சந்திப்பு பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகுதான், அழகிரி, துரை தயாநிதிக்கு சம்மன் அனுப்பும் படலம் தொடங்கும். ஒருவேளை, சென்னை ஹோட்​டலில் அழகிரியோ, துரை தயாநிதியோ இருந்து பொட்டு பற்றி பேசி இருப்பது ஆதாரத்துடன் தெரியவந்தால், இந்தக் கொலை வழக்கில் சதி என்ற பேனரில் அவர்கள் பெயரை நிச்சயமாகச் சேர்ப்போம்'' என்கிறார்கள்.


அட்டாக் அரெஸ்ட்டில் அடங்கி இருக்கிறது பொட்டுவின் வழக்கு.
- ஆர்.பி.

நன்றி - ஜூ வி 


 வாசகர் கருத்து 



1. முன்னோட்டமாக இப்படிச் சொல்லி வைத் தால்தான் இந்த வழக்கில் இருந்து அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் காய் நகர்த்துகிறாரா? என்று சந்தேகப்படுகிறோம்'' என்கிறது போலீஸ் தரப்பு.

பொய் சாட்சியாக எவ்வளவு பொய்களை கூறினாலும் டிஃபென்ஸ் வக்கீல் அதை உடைத்தெறிந்து விடுவார், இது போலீசுக்கு தெரியாதா? அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பொய் வழக்காக அழகிரி மேல் புனைந்தாலும் பாட்டிக்கு மீண்டுமொரு முறை குட்டு விழும் நீதிமன்றத்தில்



2. அவர் உத்தமரா இல்லையா என்பது அல்ல. இவ்வளவு அப்பட்டமாக ஒரு காரியம் செய்து பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் அளவு.. யோசிக்காமலா செய்வார்?


 3. பொட்டு-வால் குடும்ப பிரச்சனை; அட்டாக் பாண்டி ஏற்கெனவே 5 விஷயங்களை கேட்டு ப்ளாக் மெயில் செய்கிறான். ஒருத்தனை கொலை செய்து இன்னொருத்தன் மேல் பழியை போட்டுவிட்டால் பிரச்சனை எல்லாம் முடிந்தது. கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியா வருதோ?




4. இந்த வழக்கோடு அழகிரியின் அரசியலை அடக்கும் முடிவாக இருக்கலாம். எது நடந்தாலும் நல்லதே.




5.  நாடாளு மன்ற தேர்தல் அறிவிச்ச உடனே ரெண்டு பேரையும் லிஸ்ட்ல சேருங்க பையன்அப்ஸ்கான்ட் ஆவாரு அப்பா சரம் அடைவார் இதையே 2 மாசம் நியுசா போட்டு பேர பங்க்சர் ஆக்கி 40 சீட்லயும் அந்த கும்பல மன்ன கவ்வ வைச்சுரலாம் . மத்தில இருக்கும் செல்வாக்க வைச்சு ஜெ. அரசுக்கு கெட்ட பேரு வரணும்கரதுக்காக தமிழ் நாட்டுக்கு நிதி, கரண்ட் , தண்ணி எல்லாம் சரியாய் கிடைக்க விடாம ரொம்ப பிரச்சனை பண்றாங்க 



6. சிவப்பு விளக்கு வைத்த காரில் வலம் வருகிற மாதிரி ஒரு ஃபவர்புல் பதவி.......தப்பே இல்லை......அழகிரி மத்திய அமைச்சராக இருக்கும்போது, அட்டாக் ஒரு பதவி எதிர்பார்ப்பது தப்பே இல்லை........இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டும்.......அமௌண்ட் மிக கம்மியாய் இருக்கே.......செய்திருக்கும் வேலைக்கு ஏத்த மாதிரி கூலியை கேளுங்கப்பா......எவ்வளவு கேட்டாலும் தருவாங்க.......ஏனெனில், அவ்வளவு இருக்கு அவிங்க கிட்டே.....


7. எங்கள் அண்ணனுக்கும் அழகிரி குடும்பத்தினருக்கும் இடையே ஏதோ சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்திருக்கலாம். கொலை வரை போகும் அளவுக்கு முக்கியமான எந்த ஒரு மோட்டிவும் இல்லை'' என்கிறார்களாம்.*** ஆதிக்க அரசியலில் அனைத்தும் சாத்தியமே.



Thursday, January 31, 2013

எம் ஜி ஆர் VS கலைஞர் நட்பு - மு க ஸ்டாலின் பேட்டி

அ தி.மு.க-வில் தங்களுக்குப் பிடித்த நபர் யார்? மறைக்காமல் சொல்லுங்கள்?''
''எனது மிகுந்த மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஒரே ஒருவர் இருந்தார். அவரும் மறைந்துவிட்டார். அவர்தான் அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!''



ச.புவனேந்திரன், தேனி.


 '' 'தி.மு.க-வின் பொருளாளர் என்ற முறை யில் கட்சியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களால் கூற முடியுமா?''


''தி.மு.க. எப்போதும் ஒளிவு மறைவற்ற இயக்கம். அதன் வரவு - செலவுக் கணக்குகள் முறையாக வருமான வரித் துறைக்குத் தாக்கல் செய்யப்பட்டுவருவது மட்டுமல்லாமல்; தணிக்கைக் குழுவின் மூலம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு, பொதுக் குழுவில் வைக்கப்படுகிறது. இதற்கும் மேலதிகமான தகவல் உங்களுக்கு வேண்டுமாயின், நீங்கள் கழகத்தின் பொதுக் குழுவில் இடம்பெற வேண்டும்!''



எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


''தங்கள் மனைவி துர்கா கடவுளை வழிபடுவது அரசியலாக்கப்படுகிறதே?''

 ''ஆன்மிக ஈடுபாடு என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பொறுத்ததுதானே? அதனை அரசியல் ஆக்குவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஆகாதே. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அறிஞர்அண்ணா அவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவித்ததை ஏன் மறைக்க வேண்டும்?''


த.சத்தியநாராயணன், அயன்புரம்.


''உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள நினைக்கும் கேள்வி?''


 ''  'தலைவர் கலைஞர் அவர்க ளும், பொதுச் செயலாளர் பேராசிரி யர் அவர்களும், கழக முன்னணியின ரும், கழகச் செயல்வீரர்களும், கழக உறுப்பினர்களும், இளைஞர் அணி யினரும், மகளிரும், பொதுமக்களும் என் மீது பொழிந்துவரும் பாசத்துக்கும் அன்புக் கும் எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்?’ என்ற கேள்விதான்!''


இனியவதி சரவணன், கொட்டாரக்குடி.


''புரட்சித் தலைவர், கலைஞர் இருவரின் நட்பைப் பற்றிச் சொல்லுங்கள்?''


''என் வார்த்தைகளைவிட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே இதைப் பற்றிச் சொல்லிஇருக்கிறார்.


அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்...


'தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் 20 ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் நோய் பரவிக்கொண்டு இருந்த காரணத்தால், குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு, கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். நான் இருந்த வீட்டுக்கு அப்போது 12 ரூபாய் வாடகை. இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.


அப்போது அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால், இறுதியில் நான்தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும் நான் கழகத்தின் பொருளாளராக வும் இருக்கும் அளவுக்கு அந்த ஈர்ப்பு வலிமை யானது. கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமை யும் புகழும் என்று யாராவது நினைத்தால், அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகள் எல்லாம் தேடி வந்து அமைவதற்கு முன்பே, பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருந்தவர் கலைஞர். நான் முதன்முதலாகப் பெற்ற பட்டம் புரட்சி நடிகர் என்பது. அந்தப் பட்டத்தை எனக்குத் தந்தவர் கலைஞர்’. கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு, சரித்திரத்தில் சான்றாவணமாக நின்று நிலைத்துவிட்ட நட்பு!''


கு.அரவிந்தராஜ், சேலம்-6.


''தி.மு.க. ஆட்சியைத் தோற்கடித்த மக்கள் மீது கோபமே இல்லையா?''


'' 'மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று மக்களாட்சித் தத்துவத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட பிறகு, பெரும்பான்மை மக்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு, கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர, யார் மீதும் கோபம்கொள்வதோ, யாரிடமும் குறை காண்பதோ தேவை இல்லாதது. பெரும்பான்மை மக்களின் முடிவுக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, அதைக் களைய அயராது காரியமாற்ற வேண்டும்!''


மு.சந்தோஷ்குமார், திருவான்மியூர்.


''உங்களைக் கவர்ந்த பேச்சாளர்கள் யார் யார்?''


''தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் வீரமணி, அண்ணன் துரைமுருகன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தொல்.திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், திருச்சி என்.சிவா, ஆ.ராசா என என்னைக் கவர்ந்த பேச்சாளர்கள் பட்டியல் நீளமானது.''


வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.


''உங்கள் பிறந்த நாள் அன்று என்ன செய்வீர்கள்?''


''எனது பிறந்த நாளில் காலையில் நானும் எனது மனைவியும் எனது பெற்றோரிடம் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வது வழக்கமான முதல் கடமை. அதனைத் தொடர்ந்து இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடுதல், கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்களிடம் வாழ்த்துக்களைப் பெறுவேன்.


அதன்பிறகு, அண்ணா சாலை மேம்பாலம் அருகேயுள்ள பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளியில் பயிலும் சிறுமலர் பள்ளிக்குக் குடும் பத்துடன் செல்வேன். அந்தக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகின்ற மனநிறைவான பணியை ஒவ் வொரு ஆண்டும் தவறாது செய்துவருகிறோம்.''


போஸ்டல் சந்தானம், முத்துப்பேட்டை.


''உங்களுக்குப் பிடித்த விளையாட்டு, விளையாட்டு வீரர் யார்?''


''பிடித்த விளையாட்டு - கிரிக்கெட்.

விளையாட்டு வீரர் - சச்சின் டெண்டுல்கர்.''

ஜி.கருப்பையா, பொள்ளாச்சி.

''பள்ளிப் பருவத் தோழர்கள் இன்றும் உங்களிடம் நட்பு பாராட்டுகிறார்களா?''


''பள்ளிப் பருவத்தில் என்னுடன் சிநேகம் கொண்ட 40-க்கும் மேற்பட்ட நண்பர்களை நான்கு மாதத்துக்கு முன்னர் எனது வீட்டுக்கு அழைத்து, உபசரித்து, கலந்துரையாடி மகிழ்ந்தேன்.


சிறந்த பேச்சாளர் சுகிசிவம், திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நடிகர் 'சிறை’ பிரசன்னா உட்பட மேலும் சில பெண் நண்பர் களும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இப்படியான சந்திப்புகள் போக கடிதங்கள், தொலைபேசி வாயிலாகவும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறேன்.''


மு.தியாகராஜன், ஆழ்வார் திருநகர்.


''நாளுக்கு நாள் இப்படி இலவசங்களை வாரி வழங்குவது நல்லதா?''


''இலவசங்கள் வழங்குவதில் தவறு இல்லை. 'பசி என்று வருபவனுக்கு உண்ணு வதற்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது’


என்பதை நாங்களும் அறிவோம். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறோம். எனினும் 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ அல்லவா?பசித்த வனுக்கு உடனடியாக உணவளித்து, அவன் பசி ஆறியதற்குப் பிறகு வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் வழியைக் கற்பித்துப் பயிற்சி அளிப்பதே தொலைநோக்கில் நன்மை அளிப்ப தாக இருக்கும். எல்லாரும் எல்லாமும் பெற இயலாத இந்தியா போன்ற ஒரு நாட்டில், இல்லா தோர்க்கு அவர்களிடம் இல்லாததை அவர் களாகவே பெற்று நுகரும் நிலை உருவாகிடும் வரை இலவசங்களை வழங்குவதில் தவறு இல்லை.''


சு.அருளாளன், ஆரணி.


''மேயர், அமைச்சர், துணை முதல்வர் ஆகிய மூன்று முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் நீங்கள். ஒரு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்?''


''மக்களுக்கான நிர்வாகமாக அது அமைய வேண்டும். எல்லா வகையிலும், எந்த நிலையிலும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பதே நல்ல நிர்வாகத்துக்கான அழகு. அத்தகைய நிர்வாக அமைப்புதான் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் உயிரோட்டம் உள்ள அமைப்பாகத் திகழும்.''


சு.இராமஜெயம், ஆற்காடு.


''தனிமையை விரும்பினால் நீங்கள்செல்லும் இடம் எது?''


''மாமல்லபுரம்!

ஒரு பக்கம் பல்லவர் காலத்துச் சிற்பங்கள்... இன்னொரு பக்கம் ஓயாமல் பாடிக்கொண்டு இருக்கும் அலைகள். தனிமையை நாடும் மனம் கலையோடும் அலையோடும் கலந்துவிடும்.''


ப.கணேஷ், சென்னை-8.


''தி.மு.க-வின் எதிர்காலம்?''


''சூரியன் மறையும். ஆனால், உதிக்கும். அதனை யாரும் தடுக்கவும் முடியாது... மறைக்கவும் முடியாது.


காலம் எப்போதும் ஒரே மாதிரியாக நிலைகொண்டு இருப்பது இல்லை. வசந்த காலம், வேனிற் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் எனப் பருவங்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். இது தனிமனித வாழ்க்கைக் கும் ஓர் இயக்கத்துக்கும்கூடப் பொருந்தக் கூடியதே. தனி மனித வாழ்க்கையில் ஏற்ற இறக் கங்கள், ஓர் இயக்கத்தில் மேடு பள்ளங்கள் என்பதை இயல்பானது என்ற அளவிலேதான் பார்க்க வேண்டும். தி.மு.க-வின் எதிர்காலம் ஏற்றமானது என்பதைக் காலம் கட்டாயம் நிரூபிக்கும்!''


ஆ.மணி, உத்திரமேரூர்.


''ஜெயலலிதாவை நேருக்கு நேர் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அப்படிச் சந்தித்திருந்தால், என்ன பேசிக்கொண்டீர்கள்?''


''இரண்டு முறை சந்தித்துள்ளேன்.


2.3.2002 அன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது கழகப் பொதுச் செயலா ளர் பேராசிரியருடன் நானும் கலந்துகொண்டேன். பதவியேற்றுக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.


10.2.2005 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்தேன். தலைவர் கலைஞர் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய 'மண்ணின் மைந்தன்’ படத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 11 லட்சம், 'கண்ணம்மா’ படத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 10 லட்சம்... ஆக மொத்தம் ரூபாய் 21 லட்சம் நிதியை சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக அப்போது வழங்கி னேன். என்னிடம் இருந்து காசோலை யைப் பெற்றுக்கொண்ட முதலமைச் சர் ஜெயலலிதா, 'அப்பா நலமாக இருக்கிறாரா?’ என்று கேட்டார். 'நலமாக உள்ளார்’ என்று கூறினேன். எங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை அவ்வளவுதான்!''


நன்றி - விகடன்



டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


ிஸ்கி - 3 ிராவிடக்கட்சிகள் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியா? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 3 http://www.adrasaka.com/2013/01/2016.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html


பாகம் 5 -நான் ஏன் ட்விட்டருக்கு வர்லை?  http://www.adrasaka.com/2013/01/blog-post_635.html 


Monday, January 28, 2013

நான் ஏன் ட்விட்டருக்கு வர்லை? - மு க ஸ்டாலின் பேட்டி

விகடன் மேடை - ஸ்டாலின்




எஸ்.அங்கயற்கண்ணி, காரைக்கால்.


 ''ஒரு சில நண்பர்களைக்கூட அரசியல் பிரிக்கிறதே... இதற்குக் காரணம் என்ன?''


''நட்பை அரசியல் கண்கொண்டு அணுகுவதால்தான்!''


கே.அருண், வந்தவாசி.


''தி.மு.க-வில் இளைஞர் அணிக்கு மட்டும் ஏன் கூடுதல் முக்கியத்துவம்? நீங்கள் அதன் பொறுப்பாளராக இருப்பதால்தானே?''


''அப்படி இல்லை. தி.மு.க-வைப் பொறுத்த வரை இளைஞர் அணியைப் போலவே மகளிர் அணி, தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, வழக்கறிஞர் அணி என அனைத்து அமைப்புகளுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த ஓர் இயக்கத்திலும் மற்ற பிரிவுகளைவிட, இளைஞர்கள் அதிகமாக இருப்பார்கள். அதனால், அந்த அணிக்கு முக்கியத்துவம் இயல்பாகவே கிடைத்துவிடும்.


இளைஞர் அணியை மதுரை ஜான்சி ராணி பூங்காவிலே தொடக்கிவைக்கும்போது தலைவர் கலைஞர், 'இது தி.மு.கழகத்துக்குத் துணை நிற்குமே தவிர, இணை அமைப்பு அல்ல’ என்று கட்டளை இட்டார். அந்தக் கோட்டைத் தாண்டாமல்தான் இளைஞர் அணி இதுவரை செயல்பட்டு வந்தது... இனியும் அப்படித்தான் செயல்படும்!''


க.மோகன், மங்கலம்.


 ''கல்லூரி நாட்களில் காதல் அனுபவங்கள் உண்டா?''


''அந்தப் பருவத்திலேயே பொதுப்பணி உணர்வுகள் மேலோங்கி இருந்தன. அதனால், அப்போது காதலிக்க நேரம் இல்லை!''



இரா.கமலக்கண்ணன், சித்தோடு.


''விஜயகாந்தின் அரசியல், திரைப்படச் செயல்பாடுகள்பற்றி உங்களது பார்வை..?''


''கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார். அந்தப் பிழையினால் ஏற்பட்ட பின்னடை வுகளை அவர் கண்கூடாகக் கண்டு வருகிறார். எனவே, அந்தப் பிழையைத் திருத்தும் பரிகாரத்தைத் தேடும் பண்பட்ட மனநிலையிலே அவர் இருந்துவருகிறார்.
திரைத் துறையைப் பொறுத்தவரையில், அவர் நடித்த 'சின்னக்கவுண்டர்’, 'கேப்டன் பிரபாகரன்’, 'ரமணா’ ஆகிய படங்கள் எனக்குப் பிடித்தவை!''


பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.



''தி.மு.க-வை விமர்சித்து கேலி, கிண்டல், நையாண்டி செய்து விகடனில் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அதிலேயே வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முன்வரும் உங்கள் பண்பு, தமிழக அரசியல் சூழலில் ஆச்சர்யம் அளிக்கிறதே?''



'' 'செவி கைப்பச் சொற்பொறுக்க’ வேண்டும் என்பது அய்யன் வள்ளுவரின் அறிவுரை. உள்நோக்கம் அற்ற யதார்த்தமான அனைத்து விமர்சனங்களும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால், சிலர் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு செயல்படும்போது கண்டிக்க வேண்டியிருக்கிறது. விகடனில் விமர்சனங்கள் வரும்போது அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, நம்மை நாமே பார்த்துக்கொள்ள அவை உதவுகின்றன. வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, அவர்களுடன் நேசத்தை வளர்த்துக்கொள்ளவும் விளக்கம் அளித்து ஒளியேற்றவும் பயன்படுகிறது!''


ஆ.கமலக்கண்ணன், புதுச்சேரி.


''இசைமுரசு நாகூர் ஹனீபா... பெயரைச் சொன்னதும் உங்களுக்கு நினைவு வருவது எது?''


'' 'ஓடி வருகிறான் உதயசூரியன்...’

  'அழைக்கின்றார்... அழைக்கின்றார்... அண்ணா...’

'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’

'இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...’

'வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா...’


- என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த 'தனிமனித வானொலி’. அவர் குரலுக்கு மனதைப் பறிகொடுத்த அனைவரும் இயக்கத்துக்குள் இணைந்து இரண்டறக் கலந்துவிட்டார்கள். திராவிட இயக்கம் இருக்கும் வரை அதன் செவிகளில் தூரத்து இடி முழக்கமாக இசைமுரசுவின் எக்காளப் பேரொலி எதிரொலித்துக்கொண்டே இருக்கும்!''


வி.குமரேசன், தூத்துக்குடி.


''நீங்கள் மறக்க முடியாத மனிதர் யார்?''


 ''மறக்க முடியாத என்பதைவிட, மறக்கக் கூடாத மனிதர் ஒருவரைச் சொல்கிறேன். அவர்... சிட்டிபாபு!



என் மீது விழுந்த அடிகள் அனைத்தையும் தன் மீது தாங்கிய மனிதர். அன்று அவர் தோள் கொடுக்காமல் போயிருந்தால், இன்று நான் உங்களின் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருப்பேனா 
 என்பதே சந்தேகம்தான்!



அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவில் அமலான நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி யான அந்தக் காலகட்டத்தில் நடந்த சிறைக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அடிவயிற்றில் நெருப்பு பரவும். நான் சொல்வதை விட அண்ணன் சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரியில் இப்படி எழுதுகிறார்...



'தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் பூட்ஸ் காலால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் அவனது கன்னத்தில் கைநீட்டினான். கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.



 எனக்கென்று ஒரு துணிவு. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தடிகள் கழுத்தில் விழுந்தன. அவை அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினைத் தட்டிப் பதப்படுத்தி உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தன. கழுத்தில் அத்தனையையும் தாங்கிக்கொண்டேன்’ என்று கதறக் கதற எழுதி இருப்பார் சிட்டிபாபு. இத்தகைய விழுப்புண்களைத் தாங்கி விண்ணுயர இயக்கத்தை வளர்த்தவர்கள் தி.மு.க-வின் வீரர்கள். அத்தகைய தீரர்களில் ஒருவர் சிட்டிபாபு!''


அ.கணேசன், காஞ்சிபுரம்.


''ஊடகங்களால் (நாடகம், திரைப்படம், இதழ்கள்) வளர்ந்த இயக்கம் தி.மு.க. ஆனால், இந்நாளைய ஊடகங்களான (இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர்) ஆகியவற்றை நீங்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே?''



''இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். மேலும், அதை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பான ஆலோசனையில் இருக் கிறோம். எனினும் இதழ்கள், திரைப் படம், நாடகம் போன்று அனைத்துத் தரப்பு மக்களையும் இவை எளிமை யாகவும் வலிமையாகவும் நெருக்க மாகவும் சென்றடைந்திட முடியுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்பட வில்லை.''



கோ.பகவான்,  பொம்மராஜுபேட்டை.


''நீங்கள் கடைசியாக அழுதது எப்போது? எதற்காக?''
''சேலம் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் மறைந்தபோது ஆற்றாது அழுதேன். சேலம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழகத்தைக் கட்டிக்காத்தவர். சோதனைகள் பல வந்தபோதும் குன்றென நிமிர்ந்து நின்றவர். சாதனைகள் பலவற்றைச் செய்துகாட்டியவர். அவர் பழக்கத்தில் சேலத்து மாங்கனி. பகையை அழிப்பதில் சினங்கொண்ட சிங்கம்.



'தி.மு.கழகத்தின் தூண்களில் ஒன்று சாய்ந்துவிட்டது. சேலத்துச் சிங்கமான எனது தளபதியை இழந்த துக்கம் என்னை வாட்டி வதைக்கிறது’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் தேம்பித் தேம்பி அழுதபோது, நானும் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதேன்!''


அடுத்த வாரம்...


திருத்தம்: கடந்த இதழில் குறிப்பிடப்பட்ட 'எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடல் கவிஞர் கண்ணதாசனாலும், 'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ பாடல் கவிஞர் உடுமலை நாராயண கவியாலும் எழுதப்பட்டவை.


- இன்னும் பேசுவோம்...



நன்றி - விகடன் 


டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


ிஸ்கி - 3 ிராவிடக்கட்சிகள் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியா? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 3 http://www.adrasaka.com/2013/01/2016.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html



diSki பாகம் 5 -

எம் ஜி ஆர் VS கலைஞர் நட்பு - மு க ஸ்டாலின் பேட்டி

http://www.adrasaka.com/2013/01/vs_31.html


Thursday, January 17, 2013

எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

விகடன் மேடை - மு.க.ஸ்டாலின் பதில்கள் 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpgவைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?'' 

 
''வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாத அயராத உழைப்பு!''


தங்க.நாகேந்திரன், செம்போடை.


''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளதே?'' 


''எனது தொடர் சுற்றுப்பயணங்களும் இடையறாது கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுமே அந்த வதந்திகளுக்கான பதில். 'உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''



ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''


கே.ஹரி நாராயணன், மதுரை.


''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?'' 


 ''விஜய் - காதலுக்கு மரியாதை

அஜித் - வரலாறு

விக்ரம் - அந்நியன்

சூர்யா - ஏழாம் அறிவு

சிம்பு - விண்ணைத் தாண்டி வருவாயா?

தனுஷ் - யாரடி நீ மோகினி?

ஆர்யா - மதராஸபட்டினம்

'ஜெயம்’ ரவி - சந்தோஷ் சுப்ரமணியம்

ஜீவா - ராம்.''

தா.சூர்யா, வேதாரண்யம்.


 ''உங்கள் பார்வையில் மு.க.ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கை எப்படி இருக்கிறது?'' 



 ''தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே நினைத்து உழைத்திடும் தளராத தி.மு.க. தொண்டன். கழகத்துக்கும் அதன் மூலமாக தமிழ்ச் சமுதா யத்துக்கும் இறுதி வரை சிறந்த பணியாற்ற நினைக்கும் சேவகன். அரசியல் நடவடிக்கைகளில் கடிகாரம்போல் கச்சிதமாகச் சுழல்வதும், கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு போற்றி நடப்பதும் அவருடைய பண்புகள்!''


தங்க.நாகேந்திரன், செம்போடை.


 ''உங்கள் மாணவப் பருவ நினைவொன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்..?'' 



''அப்போது நான் சேத்துப்பட்டு பகுதியில் இருந்த கிறிஸ்துவக் கல்லூரி மேனிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஒருநாள், பள்ளி முடிந்து சினிமாவுக்குச் செல்வதற்காக அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்குசைக்கிளில் வந்தேன். என் நண்பன் ஒருவன் சைக்கிளை ஓட்டி வந்தான். 


அப்போது எல்லாம் சைக்கிளில் டபுள்ஸ் செல்லக் கூடாது. இன்றைக்கு ஸ்பென்சருக்கு முன் இருக்கும் சிக்னலில் நாங்கள் நின்றுகொண்டு இருந்தோம். அப்போது  டபுள்ஸ் வந்ததற்காக ஒரு போலீஸ்காரர் எங்க ளைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். என் பெயர், வீட்டு விவரம், எந்தப் பள்ளி என்பதை விசாரித்தார்கள். சொன்னேன். குறித்துக்கொண்டார்கள்.

'உங்க அப்பா பெயர் என்ன?’ என்று கேட்டார் கள். 'கருணாநிதி’ என்று சொன்னேன். 'என்ன வேலை பார்க்கிறார்?’ என்று கேட்டார்கள். 'செக்ரட்டரியேட்ல’ என்றேன். 'எந்த டிபார்ட்மென்ட்?’ என்று கேட்டார்கள். 'பொதுப்பணித் துறை மந்திரியாக இருக்கிறார்’ என்றேன். அதற்குப் பிறகுதான் நான் மந்திரியின் மகன் என்பதே அவர்களுக்குத் தெரிந்தது. அதன் பிறகு வீட்டுக்கு அனுப்பிவிட்டார் கள்!''



ப.பிரேம்குமார், தேனி.


''நீங்கள் மனம் விரும்பிக் கேட்கும் பத்து பாடல்களை இங்கு பட்டியலிடுங்களேன்..?'' 


'' 'காகித ஓடம் கடல் அலை மீது...’ - தலைவர் கலைஞர் எழுதியது.


'செந்தமிழ் நாடெனும்போதினிலே...’ என் செல்போனுக்கு அழைத்தால், இந்தப் பாடலைத் தான் நீங்கள் கேட்பீர்கள்.


'நீ இல்லாத உலகத்திலே...’ - கண்ணதாசன் எழுதி பி.சுசீலா பாடியது.


'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ - கலைஞர் எழுதி சி.எஸ்.ஜெயராமன் பாடியது.


'எங்கள் திராவிடப் பொன்னாடே’ - புரட்சிக் கவிஞரின் எண்ணவோட்டம் எப்போது கேட்டா லும் சிலிர்க்கும்.


'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ - இன்றைய காலகட்டத்துக்கு இது தானே பொருத்தமானது.


'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ - சி.எஸ்.ஜெயராமன் குரல் இப்போதும் வசியப்படுத்தும்.


'தப்பித்து வந்தானம்மா... காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்’ - கவிஞர் மாயவநாதன் எழுதி, கே.பி.சுந்தராம்பாள் பாடியது.


'இது ஒரு பொன்மாலைப் பொழுது’- கவிப்பேரரசு வைரமுத்துவின் காவியத் தொடக்கம்.



'எம்மா எம்மா காதல் பொன்னம்மா’- 'ஏழாம் அறிவு’ படத்துக்காக கபிலன் எழுதிய சுந்தர கீதம்.


- இவை நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் சில. நீங்கள் பத்துப் பாடல்கள் என்று கேட்டதால் இதனை மட்டும் சொன்னேன். இன்னும் என்னால் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். செவிச்சுவை மூலமாக இப்புவியை வாழவைப்பது இசைதானே!''



'நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?'' 



 ''திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த 'வடநாட்டில் பெரியார்’ என்ற புத்தகம். பம்பாய், லாகூர், அமிர்தசரஸ், கல்கத்தா, செகந்திராபாத், லக்னோ ஆகிய பகுதிகளுக்குச் சென்று, பெரியார் கொள்கை முழக்கம் இட்டதை நம் மனக்கண் முன் கொண்டுவந்து காட்டுகிறது அந்தப் புத்தகம். இன்றைக்கு பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது. அதற்கு அடித்தளம் அமைத்த பயணத்தைப் பற்றிய முழுமையான நூல் இது. அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் ஆசிரியர் தொகுத்த இரண்டு பாகங்களும் இன்றைய தலைமுறை அறிய வேண்டியது!''


ஆதிபகவன், கும்பகோணம்.


 ''தி.மு.க-வை வளர்த்த எழுத்து, பேச்சு எல்லாம் காணாமல் போய்விட்டனவே? இளைய தலைமுறைக்கு அதில் ஆர்வம் இல்லையே? எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களை வளர்க்க நீங்கள் முயற்சி எடுக்கவில்லையே?'' 


'' 'எங்களுடைய கால்கள் நடையை நிறுத்தா...
நாங்கள் நடந்துகொண்டே இருப்போம்.
எங்கள் கைகள் எழுத்தை நிறுத்தா...
நாங்கள் எழுதிக்கொண்டே இருப்போம்.


எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா...

நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்!’ 


- என்று தலைவர் கலைஞர் அவர்கள் இளைஞர் அணியின் தொடக்க விழாவில் குறிப்பிட்டார்கள். தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர் முதல் அனைவருமே எழுத்தாற்றல், பேச்சாற்றல் பெற்ற வர்களே. இன்றைக்கு இளைஞர் அணியின் புதிய அமைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கு தடை இல்லாமல் எழுச்சியாகப் பேசுவார் கள்.


வருங்காலத் தலைமுறையினருக்கும் திராவிட இயக்கத்தின் லட்சியத்தில் ஈடுபாடு வேண்டும் என்பதற்காகவே, பள்ளி மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் வைத்து பரிசுகள் அளித்துவருகிறோம். சமீபத்தில் தஞ்சா வூரில் அத்தகைய போட்டிகள் நடந்தன. காலை முதல் இரவு வரை நடந்த இந்தப் போட்டிகளில் மாணவ - மாணவியர் பேசியதைக் கேட்டபோது, எதிர்காலத் தலைமுறை மீது எனக்குப் பெரிய நம்பிக்கையே வந்துவிட்டது.


'தமிழகம் அம்மா ஆசையால் ஆட்சி கண்டு, இருளில் மூழ்கி இன்று அமாவாசையாய் இருண்டுகிடக்கிறது’ என்று ஒரு மாணவர் பேசினார்.
'ஏ.எம்., பி.எம். பார்க்காமல் உழைத்த சி.எம். நம் தலைவர் கலைஞர்’ என்று ஒரு மாணவி முழங்கினார்.


அண்ணா, கலைஞரின் வாரிசுகளாக இந்த மாணவச் செல்வங்கள் திகழ்கிறார்கள். இவர்கள் எதிர்கால மேடைகளில் ஒளிவீசுவதை நீங்கள் பார்க்கலாம். எனவே, தி.மு.க. சும்மா இருக்க வில்லை; விதைத்துக்கொண்டு இருக்கிறது. விளைச்சலின் விளைவுகள் வியக்கவைக்கும்!''


அடுத்த வாரம்...
நன்றி - விகடன் 


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkzaSiRxdl1V75CcipvAidnYobv5_snjFQrVGrcE6pX69TspkiuG9mEBfaEz2HvuuJK_aAtR76qi-BVikkUfU_E8HdFKryIQbDjIlOEcJKiPJqNJdCJrpom1ogcxh-LCZNwP0oU3mShpqz/s1600/Stalin-jayalalitha-.jpg



டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி 

( பாகம் 1) http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி

 பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html



டிஸ்கி 3 - திராவிடக் கட்சிகள்  தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின்  பேட்டி
 பாகம் 3  http://www.adrasaka.com/2013/01/2016.html
 




Thursday, January 10, 2013

திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி

கி.மனோகரன், பொள்ளாச்சி.


 ''சாதிபற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், வன் முறையைத் தூண்டும் வகையில் பேசும் ராமதாஸ், மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?''



''சாதி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி. அந்த ஆயுதத்தை யார் பயன்படுத்தினாலும் அது ஆபத்தில்தான் முடியும். கூட்டணியைப் பொறுத்தவரை அது எப்படி அமைய வேண்டும் 


 என்பதை, தி.மு.க-வின் செயற்குழு, பொதுக் குழு தேர்தல் நேரத்தில் தீர்மானிக்கும்!''


எம்.மேனகா, திருச்செந்தூர்.


''கடந்த ஆட்சியின்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசியலிலும், சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்தியது உண்மைதானே?''



 ''இது பெரிய அளவில் மிகைப்படுத் தப்பட்ட குற்றச்சாட்டு. அரசியலில் நாங்கள் இருப்பதாலேயே எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று தொழில் எதையும் செய்யக் கூடாது என்பது நியாய மானதா?
தலைவர் கலைஞரின் வழியைப் பின்பற்றி திரைப்பட ஆர்வம் எங்கள் குடும்பத்து இளைஞர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டது. 


தங்களது திறமையால், ஆர்வத்தால், உழைப்பால் அவர்கள் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டார்கள், படங்களைத் தயாரித்தார்கள், நடித்தார்கள். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும்கூட திரைப்படத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். அவரவர் அவரவர் மனதுக்கு ஏற்ற தொழிலைச் செய்வதே தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?
வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்களாகத் தொழில் செய்கிறார்கள். மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாகத் தொழில் செய்கிறார்கள். 



அதைஎல்லாம் பார்த்து விமர் சிக்காதவர்கள், அரசி யல் குடும்பங்களை மட்டும் தாக்குவது, அதுவும் கலைஞர் குடும்பத்தை மட்டும் தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியானதுதானா? ஆதிக்கம் என்று சொல்வதெல்லாம் உள்நோக்கம் கொண்டவை என்பதை உணர முடிகிறது அல்லவா?''


ரேவதிப்ரியன், ஈரோடு-1.


''கலைஞரின் மகனாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அரசியலுக்குள் நுழைந்திருப்பீர்களா?''



''ஐந்து நிமிடங்களுக்கு முன் நான் பிறந்திருந்தால் அரசாளும் மன்னனாகவே இருந்திருப்பேன் என்ற அனுமானத்தைப் போன்றது இந்தக் கேள்வி. அனுமானத்தைப் பற்றியெல்லாம் அலசி ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்க முடியாது. நிதர்சனமான நிகழ்வுகளையே நினைத்துப் பார்க்க வேண்டும்!''



நா.கோகிலன், ஜோலார்பேட்டை.



 ''தலைவர் கலைஞருக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் மீது பாசம் அதிகம்?''


'' 'படைப்பாளிகள்’ என்றாலே தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாசம்தான். இலக்கியப் படைப்பாளிகள் மீதும் இசைத் துறை வல்லுநர்கள் மீதும் அதிகப் பாசம் காட்டுவார். அரசியல் வெப்பத்தைத் தணித் திடும் அற்புத மூலிகை இலக்கியம் என்பதும், கனியிடை ஏறிய சுளை போன்று இனிமையானது இசை என்பதும் அவரது கருத்து!''


எஸ்.தீன்முகம்மது, திருவாரூர்.


''கட்சித் தொண்டர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?''


''கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... இம்மூன்றும்தான் பேரறிஞர் பெருந்தகை இட்ட கட்டளை. 'கடமை, கண்ணியத்தைவிட முக்கியமானது கட்டுப்பாடுதான்’ என்பது பெரியார் விதைத்த சிந்தனை. இந்த இரண்டையும்தான் தலைவர் கலைஞர் அடிக்கடி வழிமொழிந்து சொல்வார். அதேயே நானும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றிக் கட்சியைக் கண்ணும் கருத்துமாகக் காத்திட வேண்டும்; ஒவ்வொருவரும் அவருக்கான  முறை (tuக்ஷீஸீ)வரும் வரை காத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கட்சிப் பணிகளில் ஆத்திரமோ அவசரமோ கூடாது; எந்த நிலையிலும் மாற்றாருக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. இவை யாவும் கட்சித் தோழர்கள் அனைவருக்குமான எனது அறிவுரை அல்ல: அன்பு வேண்டு கோள்!''


அ.ராஜா ரஹ்மான், கம்பம்


 ''அரசியல்வாதியாக இருப்பதற்கு நீங்கள் அச்சப்பட்ட தருணம் எது? ஆனந்தம் அடைந்த தருணம் எது?''


''அச்சமுடைய யாரும் அரசியல்வாதியாக இருக்க முடியாது. 'அச்சம் என்பது மடமையடா’ என்பதற்கேற்ப அச்சத்தை அறவே விலக்கியவர்களே, நல்ல அரசியல்வாதிகளாக இருந்திட முடியும்.


ஆனந்தம் அடைந்த தருணங்கள் ஏராளம். நான் செய்த பணியைப் பாராட்டி தலைவர் கலைஞர் அவர்களோ, பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களோ பேசியபோதும், என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் எதிர்பார்த்த நல்ல விளைவுகள் ஏற்படும்போதும், நான் பேசும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கட்சித் தோழர்களும் பொதுமக்களும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பும்போதும்... என நான் ஆனந் தம்கொண்ட தருணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!''


ப.சுகுமார், தூத்துக்குடி-1.


''மதுவிலக்கு குறித்து தி.மு.க. எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?''


''மதுவிலக்கு என்பதைப் பொறுத்தவரை தமிழகம் மட்டும் தனித்து முடிவெடுக்க முடிய£து. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து ஒட்டுமொத்த மாக ஒரு முடிவுக்கு வர வேண்டும். கலைஞர் அடிக்கடி சொல்லும் உதாரணம்தான் இது, 'நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல் தமிழகம்’! அண்டை மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு நடைமுறையில் இல்லாத சூழலில் தமிழகம் மட்டும் மதுவிலக்கை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பது இயலாத காரியம்!''


பரிமளா கென்னடி, புலிவலம். 


''உங்கள் மகன் சினிமாவில் நடிக்கிறார், சினிமா எடுக்கிறார். உங்கள் மகள் செந்தாமரை என்ன செய்கிறார்?''


''மகள் செந்தாமரை, கல்விப் பணியில் ஈடுபாடுகொண்டு பள்ளிகளை நடத்திவருகிறார்!''


ரேவதி ப்ரியன், ஈரோடு.


''நிறைய வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த நாடு எது?''


''லண்டன்!''


ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.


''காதல் திருமணங்கள்பற்றி உங்கள் கருத்து என்ன?''


''இரு மனங்கள் இணைவதுதான் திருமணம். அந்த மன இணைவுக்கு அடிப்படையானது காதல். பழங்காலத் தமிழர் வாழ்க்கையும் திருமணமும் காதலை அடிப்படையாக வைத்து தான் அமைந்து இருந்தன என்பதற்கு எத்த னையோ உதாரணங்கள் அகநானூற்றில் உண்டு. இந்த சாதியும், சமயக் கட்டுப்பாடுகளும், பழக்க வழக்கங்களும் பிற்காலத்தில் வந்து தமிழ்ச் சமூகத்தைப் பின்னடையச் செய்துவிட்டன.


'செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே’ என்கிறது தமிழ் இலக்கியம். அத்தகைய காதல் திருமணங்கள் எத்தகைய அதிகாரத்தையும் உடைத்து நடந்தே தீரும் என்பதைத்தான் நாள்தோறும் நாம் பார்க்கிறோம். காதல் திருமணங்களை எந்தக் காலத்திலும் யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. தடைசெய்துவிடவும் முடியாது என்பதே என் கருத்து!''


ஜெ.முரளி, செம்பனார்கோவில்.


''டெல்லி பேருந்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடூரம்?''


''இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தின் மூலமாக நாடே தலைகுனிய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


'கழுத்தில் நிறைய நகை அணிந்து ஒரு பெண் எப்போது நிம்மதியாக இரவு நேரத்தில் நடக்கிறாளோ, அப்போதுதான் நாடு சுதந்திரம் அடைந்த தாக ஒப்புக்கொள்வேன்’ என்று காந்தியடிகள் சொன்னார். காந்தியின் கனவு நிறைவேறும் நாள் எப்போது?''


எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


 '' 'திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டன’ என்று ஒரு குற்றச் சாட்டு நிலவுகிறதே..? கோபப்படாமல் பதில் சொல்லுங்கள்!''


''எனக்குக் கோபம் வரவில்லை. வருத்தம்தான் வருகிறது. திராவிட இயக்கத்தின் சாதனையால் கல்லூரியில் சேர்ந்து, திராவிட இயக்கத்தின் சாதனையால் வேலைவாய்ப்பைப் பெற்று வளர்ந்து வாழும் சிலரே இந்தக் கருத்துக்குப் பலியாவது வேதனைக்கு உரியதுதானே!


சாதியின் பெயரால் அடக்கப்பட்ட பெரும்பான்மை இனத்தவர்க்கு, அதே சாதியின் பெயரால் உரிமையைப் பெற்றுத்தந்து இடஒதுக்கீடு வாங்கித் தந்த இயக்கம் திராவிட இயக்கம். நீதிக் கட்சியின் ஆட்சியால்தான் அதுவரை உயர் கல்வி நிறுவனங்களுக்குள் போக முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உள்ளே அணி அணியாக நுழைந்தார்கள். உயர் பதவியை அடைந்தார்கள். இன்று அனைத்து இடங்களிலும் இந்த மக்கள் கோலோச்சுவது திராவிட இயக்கத் தின் சாதனை அல்லவா?


80 ஆண்டுகளுக்கு முன்னால் கோயில்களில், தெருக்களில், உணவகங்களில் இருந்த சமூகச் சூழ்நிலையை உங்களது மூத்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்று சமரசம் உலாவும் பூமியாக இந்தத் தமிழகம் மாறியதற்கு அடிப்படை திராவிட இயக்கம் அல்லவா?


மிகப் பெரிய பணக்காரர்கள், நிலச்சுவான்தார்கள் மட்டுமே அரசியலுக்குள் நுழைய முடியும், பதவிகளை அடைய முடியும் என்ற சூழ்நிலையை மாற்றி சாமான்யன் கையில் அரசியல் அதிகாரம் கிடைக்கவைத்தவர்  பேரறிஞர் அண்ணா. ஜனநாயகத்தை உண்மை யான மக்கள் மயமாக்கியவர் அண்ணா. மக்கள் மனதையும் தேவையையும் அறிந்து மக்கள் நலத் திட்டங்களை மக்கள் முன்னேற்றத்துக்காக நிறை வேற்றுவது மட்டும்தான் ஓர் அரசாங்கத்தின் வேலை என்ற நிலையில்; ஏழை எளியோர், நலிந்த பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறு பான்மையினர் ஆகியோர் சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கமாக அதனை மாற்றி நடத்திக் காட்டியவர் கலைஞர்.




திராவிட இயக்கம் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விடவில்லை, குட்டிச் சுவராக்கப்பட்டு தலை கவிழ்ந்து, தாழ்ந்துகிடந்தோரைத் தட்டி எழுப்பி தன்மானம் கொள்ளச்செய்து தலை நிமிர்ந்து நடை போடச் செய்தது திராவிட இயக்கமே!''


அடுத்த வாரம்...


 ''வைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?''


 ''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளனவே?''


''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''


- இன்னும் பேசுவோம்...


நன்றி - விகடன் 


டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html