Showing posts with label அறிவு. Show all posts
Showing posts with label அறிவு. Show all posts

Wednesday, October 14, 2015

ஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வார்த்தை?

ஒரு நண்பர் Onomatopoeia (அனமாடபியா) என்ற வகையிலான வார்த்தைகளை விளக்க முடியுமா என்கிறார். விளக்குவது கஷ்டம். புரிய வைக்கலாம்.
ஓர் இயல்பான ஒலியை நகல் எடுப்பது போன்ற வார்த்தைகள் இவை. Cuckoo, meow போன்ற வார்த்தைகள் இவை.
அவன் கதவைப் படார் என்று சாத்தினான் என்ற வார்த்தையில் படார் என்பதை மட்டும் கொடுத்தால், அர்த்தம் கூறுவது கஷ்டம்தானே. அறைந்து மூடும்போது எழும் சப்தம் எனலாம்.
உங்கள் கன்னத்தில் ஒருவர் அறைந் தால் அதை எப்படி விவரிப்பீர்கள்? ‘பளார்’ என்று அறைந்தான் என்றுதான் சொல்வீர்கள். படார் என்பதில்லை.
தட்தட் என்று இதயம் அடித்துக்கொண்டது என்கிறோம். இதய ஒலியை மருத்துவர்கள் லப்டப் என்கிறார்கள்.
‘ஆ’ என்று அலறினான். ‘ஓ’ என்று கூக்குரலிட்டான். ‘வீல்’ என்று கத்தினான். இது போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Onomatopoeia என்பார்கள்.
பட்டிமன்றங்களில் அடிக்கடி “அமெரிக்கப் பசு மட்டும் மம்மி என்றா குரல் கொடுக்கும்? அம்மா என்றுதானே?’’ என்ற கேள்வி இடம் பெறும். இந்த தர்க்கத்தின்படி பார்த்தால் Onomatopoeia வார்த்தைகள் எல்லா மொழிகளிலும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், ஏனோ அப்படி இருப்பதில்லை. கடிகாரத்தின் ஒலியை நாம் டிக் டிக் என்கிறோம். ஆங்கிலத்தில் Tik Tak என்கிறார்கள். சில கடிகாரக் கடைகளில் ‘Tik Taks are sold here’ என்றே அறிவிப்புப் பலகைகளைக் காண முடியும்.
காரின் ஹாரன் ஒலியை நாம் ‘பாம் பாம்’ என்போம். ஜப்பானிய மொழியில் ‘பூ பூ’ என்பார்கள். வியட்நாமிய மொழியில் அது ‘பிம் பிம்’. கொரிய மொழியில் ‘பாங் பாங்’.
அமெரிக்காவில் ஒரு பிரபலமான கோரஸ் பாடல் உண்டு. அது இதுபோன்ற வார்த்தைகளைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.
“Bang! went the pistol.
Crash! went the window.
Ouch! went the son of a gun.
Onomatopoeia, I don't wanna see ya ’’
க்வாக் (Quack) என்பது வாத்தொலி (வாழ்த்தொலி அல்ல). இங்கே ‘குவாகுவா’ என்பார்கள். Baa Baa என்பது ஆட்டின் ஒலி - அதனால்தான் Baa baa black sheep.
Zip என்பதுகூட அது எழுப்பும் ஒலியைக் கொண்டு உருவான வார்த்தைதான். வேண்டுமானால் demo செய்து பாருங்கள். Twitter என்றால் நீங்கள் நினைப்பது அல்ல. அது பறவைகள் எழுப்பும் ஒலி.
Buzz, Hiss போன்ற ஒலிகளைக்கூட இந்த வகையில் அடக்கிவிடலாம்.
இதுபோன்ற வார்த்தைகள் சிலவற்றை கவனித்துவிட்டு ‘பொருத்தமாக இல்லையே’ என்று நீங்கள் கூற வாய்ப்பு உண்டு. அது ஆங்கிலேயர்களுக்குப் பொருத்தம்! (தொபுக்கடீர் என்று குதித்தான் என்கிறோமே, தொபுக்கடீர் என்ற வார்த்தை ரொம்பப் பொருத்தமோ?)
அது இருக்கட்டும், எதற்காக Onomatopoeia என்ற கரடுமுரடான வார்த்தை? கிரேக்க மொழியில் இதற்கு “நான் பெயர்களை உருவாக்குகிறேன்’’ என்று பொருள்.
இத்தகைய வார்த்தைகளைத் தண்ணீர் தொடர்பான சில வார்த்தைகளோடு பொருத்திப் பார்ப்பவர்களும் உண்டு. Splash என்றால் தண்ணீரில் குதிக்கும்போது எழும்பும் ஒலி.
Spray என்றால் வாசனைத் திரவியத்தை அடித்துக்கொள்ளும்போது எழும்பும் ஒலி. அதாவது, காற்றின் மூலம் ஒரு திரவத்தை வெளியேற்றும்போது எழும்பும் ஒலி. Drizzle என்றால் தூறல் ஒலி. (பல Onomatopoeia வார்த்தைகள் பெயர்ச் சொற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன).
குரல் தொடர்பான இதுபோன்ற வார்த்தைகளும் உண்டு.
Giggle என்றால் அது சிரிப்பொலிதான். ஆனால், கிண்டலாக லேசான கனைப்புடன் கூடிய சிரிப்பு. ஒருவரை வெறுப்பேற்றுவதற்காகக் கொஞ்சம் பண்புக் குறைவாகச் சிரிப்பது.
Grunt என்றால்? உங்களிடம் எதற்கோ ஒப்புதல் கேட்கிறார்கள். வேண்டாவெறுப்பாக நீங்கள் அதை ஒப்புக் கொள்வதுபோல் ‘ம்ம்’ என்று அடித்தொண்டையிலிருந்து ஒரு ஒலியை எழுப்புகிறீர்கள். அது grunt.
Chatter என்றால் தொணதொணப்பது. Murmur என்றால் முணுமுணுப்பது. Mumble என்பதும் கிட்டத்தட்ட அப்படித்தான். தெளிவில்லாமல் முணுமுணுப்பது.
STAND
‘‘Stand ஆடுது பார். மேலே விழுந்திடப்போவுது, ஜாக்கிரதை’’ என்பதுபோல் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்போம். அதை verb ஆகப் பயன்படுத்துகையில் ‘நில்’ என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தியிருப்போம்.
ஆனால், ஒவ்வொருவித preposition-ஐ stand என்ற வார்த்தையுடன் சேர்க்கும்போது அது ஒவ்வொருவிதமான அர்த்தத்தைத் தரும்.
Stand by என்றால் support என்று அர்த்தம். We will be unbeatable if we stand by one another.
Stand out என்றால் இறுதிவரை வளைந்து கொடுக்காமல் இருப்பது. It is difficult but I think you can stand it out. தனித்துத் தெரிவதையும் stand out என்பதுண்டு.
Stand over என்பது தள்ளிப் போடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. Let this matter stand over for the present.
Stand up என்றால் உறுதியாக இருப்பது என்ற அர்த்தம். We must have the courage to stand up.
LIMIT LIMITATIONS
சிலர் Limit என்ற வார்த்தையையும், Limitation என்ற வார்த்தையையும் மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். Limit என்றால் எல்லை. This is the limit. இந்த இடத்தில் இது noun ஆகப் பயன்படுத்தப்படுகிறது.
Limit என்பதை verb ஆகப் பயன்படுத்தும்போது ஒரு எல்லையோடு நிறுத்திக்கொள்வது அல்லது கட்டுப்படுத்துவது என்று அதற்கு அர்த்தம்.
The lift limits the number of users to ten at a time.
Limitation என்பது சில கோணங்களில் Limit போலவே பயன்படுத்தப்படலாம் என்பது உண்மை. குறைபாடு என்ற அர்த்தத்தையும் இது தருகிறது. I am not good at public speech. This is my limitation.
இப்படியும் வைத்துக் கொள்ளலாம். I have my limits என்று நீங்கள் சொன்னால் அதில் உங்கள் விருப்பம் கலந்துள்ளது. அதாவது, சிலவற்றைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது போல.
ஆனால் I have my limitations என்றால் அது உங்கள் விருப்பம் தொடர்பானது அல்ல. உங்கள் இயலாமையைக் குறிக்கும் சொல் அது.
Limitation என்று ஒரு சட்டம் உண்டு. அதற்கான அர்த்தம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வழக்கு தொடுக்கவில்லையென்றால் உங்களுக்குச் சட்டம் உதவிக்கு வராது என்பதுதான். மிகவும் காலம் கடந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் இறந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவேதான் இந்த Law of Limitation.
எளிமையாகச் சொல்வதென்றால் நீங்கள் ஒருவருக்குப் பணத்தைக் கடன் கொடுத்துவிட்டு அதற்கான பிராமிஸரி நோட்டில் அவரது கையெழுத்தையும் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் பிராமிஸரி நோட்டில் கையெழுத்து போட்ட தேதியிலிருந்து மூன்று வருடத்துக்குள் வழக்கு தொடுக்க வேண்டும்.
தொடர்புக்கு: [email protected]

thehidhu

Tuesday, February 25, 2014

எப்படிக் கற்பது ஆங்கிலம்? ( HOW TO ;LEARN ENGLISH?)

ஆங்கிலத்தின் தேவையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் புதிதாக எழுதத் தேவையில்லை. ஆங்கிலம் இன்று நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார, கலாச்சார அடையாளம். இந்த நிலை இக்கால உலகப் பொருளாதார அமைப்பின் விளைவு. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் மொழி. அதைக் கற்க வேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், அதை எப்படிக் கற்க / கற்பிக்க வேண்டும்? 



நடக்கப் படி… பின் ஓடப் படி!


 
மொழி இல்லாமல் கல்வி பெற முடியாது; அறிவு பெற முடியாது. அனுபவத்தின் மூலம் அறிவு பெறவும் மொழி தேவை. இந்த மொழி, தெரிந்த மொழியாக இருந்தால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த முடியும். தெரியாத மொழியில், தெரியாத அறிவைப் பெற விரும்புவது கண்ணைக் கட்டிக்கொண்டு நடக்கப் பழகுவது போன்றது. 



‘‘வீட்டில் பயின்ற தாய்மொழியின் மூலம் பள்ளியில் கல்வி கற்பதே முறையானது’’ என்று கல்வியாளர்கள் சொல்வதற்கு இந்த இயற்கை விதி ஒரு காரணம். ஆங்கிலத்தின் மூலம் கல்வி பெற வேண்டும் என்றால், முதலில் ஆங்கிலத்தை மொழியாகப் படியுங்கள் என்று அவர்கள் சொல்வதற்கும் இது ஒரு காரணம். முதல் மொழியை முறையாகச் சில ஆண்டுகள் படித்துப் பெறும் மொழியின் பயன்பாட்டுத் திறன்களை இரண்டாவது மொழிக்கு மாற்றம் செய்யலாம். நடக்கப் படித்த பின் ஓடப் படிப்பது எளிது. 



ஆனால், இன்று இந்தியாவில் கல்விக்கொள்கை இந்த இயற்கை விதியைத் தலைகீழாகப் பிடிக்கிறது. மொழிவழிக் கல்வி என்பதற்குப் பதில் கல்விவழி மொழி என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அதாவது, பாடங்களைப் படிப்பதன் மூலம் மொழியைப் படிப்போம் என்று சொல்கிறது. இதன் விளைவு, கல்வி என்பதே ஆங்கிலத்தைப் படிப்பதற்காகத்தான் என்னும் நிலை. 



இதனால், இரண்டு, மூன்று தலைமுறைகளாக ஆங்கிலம் படித்த குடும்பங்களைத் தவிர, மற்ற குடும்பத்துப் பிள்ளைகள் கல்வியையும் சரியாகப் பெறுவதில்லை; ஆங்கிலத்தையும் நன்றாக அறிந்துகொள்வதில்லை. கல்விக்கும் மொழிக்கும் உள்ள 

உறவைத் தலைகீழாகப் பார்க்கும் எண்ணத்தோடு ஒரு வகையில் தொடர்புடையதுதான் ‘தமிழ்வழிக் கல்வி என்பது தமிழை வளர்ப்பதற்காக' என்ற கருத்தும். தமிழின் வளர்ச்சி இக்கல்வியின் விளைவாக நிகழலாம்; அதுவே, இதன் நோக்கமாக அமையக் கூடாது. தமிழ்வழிக் கல்வியின் நோக்கம் தரமுள்ள கல்வியைத் தருவது. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். 


நடைமுறை எது?

 
அரைகுறை ஆங்கிலம் இல்லாவிட்டால் தரமான கல்வியறிவும்கூட சந்தையில் விலைபோகாது என்பது நடைமுறை உண்மை. இது, ஆங்கிலத்தை ஒரு மொழியாக, அதில் நல்ல திறன் பெறும் அளவுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையை முன்னிறுத்துகிறது. இது முடியும். 


சீன மொழியை நன்றாகக் கற்க விரும்பும் ஒருவர், எல்லாப் பாடங்களையும் சீன மொழியின் மூலம் படிப்பதால் அந்த மொழியைக் கற்பேன் என்று சொல்வதில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் திறன்படப் பேசவும் எழுதவும் வல்ல அண்ணா, ராஜாஜி போன்ற பழைய தலைமுறையினர் பலர் பள்ளிக்கல்வியைத் தமிழ் மூலமே பெற்றவர்கள்; ஆங்கிலத்தை மொழியாகக் கற்றவர்கள். பழைய தலைமுறை விஞ்ஞானிகளும் அப்படியே. 



கல்வியியலில் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்படும் ஒரு ஆராய்ச்சி முடிவு, தாய்மொழியின் வழி முதல்நிலைக் கல்வி பெறுவது தன்னிச்சையாகவும் புதுவழியில் சிந்திப்பதற்கும் ஏற்றது என்பது; தன்னைப் பற்றியும் தன் மொழியைப் பற்றியும் வரும் கழிவிரக்கத்தைத் தவிர்க்கும் ஒன்று என்பது. இக்கல்வி மனவளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிப்படை. சமூகம், மனிதன் தொடர்பான ஆய்வில் பல ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகள் அபூர்வம். ஆகவே, இந்த முடிவு முக்கியமான ஒன்று. 



காற்று வீசும் திசையில்…


 
இருப்பினும், இன்றைய தமிழ்நாட்டில் பொதுமக்களில் - கற்றவர்களும் கல்லாதவர்களும் - பெரும்பான்மையினர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் தங்கள் பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், பொருளாதார உலகம் வேறுவகையில் நடப்பதே. இதை மக்களால் மாற்ற முடியாததால், காற்று வீசும் திசையிலேயே தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டுகிறார்கள். 



நிரூபணமான ஆய்வு உண்மைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் போக்கில் போவது புதிது அல்ல. புகைபிடிப்பதால் புற்றுநோய் வரலாம் என்பது நிரூபணமான விஷயம் என்றாலும், வேறு காரணங்களுக்காகப் புகைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களால் லாபம் பெறுவதற்காக சிகரெட் தயாரித்து விற்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. கல்வி வியாபாரிகளும் ஆங்கிலவழிக் கல்வி தரும் பள்ளிகளை இதே காரணத்துக்காக நடத்துகிறார்கள். 



மக்கள் விரும்புவதைத் தருவது


 
மக்கள் விரும்புவதைத் தருவதுதான் இன்றைய அரசியல். இது, சந்தை வியாபாரத்தைப் போல. இலவசப் பொருள்கள் தருவதிலிருந்து ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளைத் தருவதுவரை இதுதான். குறைந்த விலைக்கு உயர்ந்த கல்வி என்பது சமாதானப்படுத்திக்கொள்ளும் குரல். மக்கள் தங்கள் வாக்குகளைக் கொடுத்து இந்தக் கல்வியை வாங்குகிறார்கள். பின், தங்கள் சக்திக்கு மீறிச் செலவும் செய்கிறார்கள். 



கொடுக்கும் விலை


 
ஆங்கில அறிவு காலத்தின் கட்டாயம் என்பது கல்வியாளர்களும் பொதுமக்களும் உணரும் ஒன்று. இந்த அறிவை உயர்ந்த முறையில் எப்படிப் பெறுவது என்பதில்தான் கருத்து வேறுபாடு. ஆங்கிலத்தை முதல் வகுப்பிலிருந்து எல்லாப் பாடங்களிலும் படிப்பதே ஆங்கில அறிவு பெற வழி என்பது பரவலாக இருக்கும் கருத்து. அதாவது, அதிகக் காலமும் அதிகச் சூழ்நிலைகளிலும் இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்ற கொள்கை. இது எல்லோருக்கும் பொருந்தும் உண்மை அல்ல. உண்மையாக இருந்தாலும், இதற்குக் கொடுக்கும் விலையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மனப்பாடம் செய்வதே கற்பது என்று நம்புவது, மொழியிலும் பாடத்திலும் திறன் குறைவது, ஆங்கிலத்தில் இருந்தால் அபத்தமும் சரியாகத் தோன்றுவது முதலியனவும் நாம் கொடுக்கும் விலையில் அடங்கும். 



ஒரு மொழியாகக் கற்று ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற முடியும் என்றும், தமிழில் முதலில் பெறும் மொழியின் பொதுத்திறன்களை ஆங்கிலத்துக்கு மாற்ற முடியும் என்றும் செய்துகாட்டினால், மொழிக்கல்வி பற்றிய தங்கள் தவறான, ஆதாரம் இல்லாத எண்ணத்தை மக்கள் 


மாற்றிக்கொள்ளலாம். இதைச் செய்துகாட்டும் பள்ளிகளை அரசும் லாபநோக்கற்ற தனியார் நிறுவனங்களும் நடத்திக்காட்ட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தையும் தமிழையும் கற்றுக்கொடுக்கும் முறையில் அடிப்படையான மாற்றங்கள் செய்ய வேண்டும். மக்கள் எண்ணத்தில் இதன் பலன் பிரதிபலிக்க ஒரு தலைமுறை ஆகலாம் என்பதால், இந்த விஷயத்தில் நமக்குப் பொறுமையும் தேவை! 


WRITTEN BY = இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர்.

 
THANX - THE HINDU