Showing posts with label ஃபேஸ்புக் ரகசியங்கள். Show all posts
Showing posts with label ஃபேஸ்புக் ரகசியங்கள். Show all posts

Sunday, April 14, 2013

ஃபேஸ்புக் ரகசியங்கள் ( முக புத்தக சீக்ரெட்ஸ் )

பாவமன்னிப்பு @ ஃபேஸ்புக்.காம்

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

இணையத்துடன் இணையும் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட 'நெட்டிஸன்கள்’ ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட்ஆரம்பிக்கிறார்கள் என்கிறது ஒரு சர்வே. அந்த 70 சதவிகிதத்தினரிலும் பாதிப் பேருக்கு மேல் இணையத்தில் நுழைந்ததும் முதலில் 'லாக்-இன்’ செய்வது ஃபேஸ்புக்கில்தானாம்!


'சிகரெட், மதுப் பழக்கம்போல ஃபேஸ்புக்கும் மாணவர்களை அடிமை ஆக்குகிறது’ என்று பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை இறுக்கிப் பிடிக்கப் பார்த்து முடியாமல்போனதெல்லாம் பழங்கதை. அந்த வகையில், இப்போது சமீப ஃபேஸ்புக் சென்சேஷன் 'கன்ஃபெஸன் பேஜஸ்’. அதாவது, பாவ மன்னிப்புப் பக்கங்கள்!


'கன்ஃபெஸன்’ என்றால், நீங்கள் செய்த பாவத்தை, குற்றத்தை ஒப்புக்கொள்வது. அப்படி தங்கள் பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்கு என பிரத்யேக கன்ஃபெஸன் பக்கம் ஆரம்பித்து, தங்கள் அடையாளம் மறைத்து குற்றங்களை, பாவங்களை உலகத்தின் பார்வைக்குப் பந்திவைக்கிறார்கள் மாணவர்கள். ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடையே தொடங்கிய இந்த டிரெண்ட், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கன்னியாகுமரி கலைக் கல்லூரிகள் வரை பரவியிருக்கிறது. தமிழகப் பள்ளி, கல்லூரி பக்கங்களில் பதிவாகியிருக்கும் பாவ மன்னிப்புகளில் சில இங்கே...


சென்னை கல்லூரிகளின் பக்கங்களில் இருந்து சில சாம்பிள்கள்...


''பாவி... காலேஜ் ஜிம்மில் இருந்து டம்புள்ஸ்களைத் திருடி என் லக்கேஜில் வைத்துவிட்டான். நான் இப்போது அதை ஸ்டேஷன் வரை கொண்டுசெல்ல வேண்டும். செம கனம்!''


''தினமும் இரவு ஹாஸ்டலில் என் தோழி அவள் பாய் ஃப்ரெண்ட்பற்றிக் கூறுவாள். இப்படியே ஒரு மாதமாக அவள் சொல்லச் சொல்ல... எனக்கும் அவனைப் பிடித்துவிட்டது. நவ் ஐ’ம் இன் லவ் வித் ஹிம்... ஸாரி ஜெனி!''


''நான் முதலாம் ஆண்டு படிக்கும்போதே என் பெற்றோரை இழந்துவிட்டேன். அதன் பின் எனக்கு நண்பர்கள் மட்டுமே உறுதுணையாக இருந்தார்கள். கல்லூரியின் இறுதி இரண்டு வருடங்கள் அவர்கள்தான் என்னைப் படிக்கவைத்தார்கள். இப்போது நான் பெங்களூரில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டுஇருக்கிறேன். ஆனால், நேற்று ஒரு டிரஸ்ட்டில் இருந்து கல்வி நன்கொடை கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன். ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!''


''அடப்பாவி... லைப்ரரியில் இருந்து 20 அரிதான புத்தகங்களைத் திருடிவிட்டான் என் உயிர் நண்பன். எந்த ரெக்கார்டும் கிடையாது. யாரும் கண்டுபிடிக்கவும் முடியாது... ஹ்ம்ம்!''


கோவைக் கல்லூரிகளின் பக்கங்களில் இருந்து...


''நண்பர்களே... கடந்த செமஸ்டர் வரை நான் 85 பெர்சன்ட் வைத்திருப்பதாக என் அப்பா - அம்மாவிடம் பொய் சொல்லிவந்திருக்கிறேன். ஆனால், ஆறு அரியர்கள் வைத்திருக்கிறேன். ஸாரி அப்பா - அம்மா!''


''நான் முதலாம் ஆண்டு படிக்கும்போதே அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு நடனப் பயிற்சியின்போது கீழே விழுந்த அவளுடைய தோடை எடுத்துவைத்துக்கொண்டேன். இப்போது நான் அதே கல்லூரியில் முதுகலை படிக்கிறேன். அவளும்தான். தோடு காணாமல் போனபோது கல்லூரியையே கிடு கிடுக்கவைத்துவிட்டாள். அதனால், இன்று வரை அவளிடம் பேசக்கூடப் பயமாக இருக்கிறது. என் காதலையும் சொல்லவில்லை!''


இப்படியான பாவமன்னிப்புகள் சாம்பிள் வகையறாதான். 'அதான் நம் அடையாளம் தெரியாதே!’ எனப் பல பகீர் தகவல்களை வெளியிடுகிறார்கள் பல மாணவர்கள். ஆசிரியருடனான உறவுகள் துவங்கி, குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் ரகசியங்கள் வரை இந்தப் பக்கங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், வெறுமனே லைக்ஸ் அள்ளவும் கமென்ட் குவிக்கவும் அல்லாமல், யாரிடமும் பகிர முடியாத வேதனைகளை இறக்கிவைக்கும் ஒரு வடிகாலாகத்தான் இந்தப் பக்கங்களைக் கையாள்கிறார்கள் பல மாணவர் கள். கிடைக்கும் அறிவுரைகள், வழிகாட்டல்கள் மூலம் மனம் சாந்தியடைந்ததாக வரும் பின்னூட்டங்களும் ஏகம்!


ஆனால், பேராசிரியர்களைத் திட்டுவது, கேலி செய்வது எனக் கழிவறை சுவரின் டெக் வளர்ச்சியாக இயங்கும் பக்கங்களும் உண்டு. அப்படியான தங்கள் கல்லூரியின் பக்கம் ஒன்றை மூடச் சொல்லி, இங்கிலாந்தில் இருக்கும் ஸ்வான்சீ பல்கலைக்கழகம் தன் மாணவர்களை வற்புறுத்த, 'முடியவே முடியாது’ என வீதிக்கு வந்து போராடினார்கள் மாணவர்கள். பல அமெரிக்கக் கல்லூரிகள், இந்த கன்ஃபெஸன் பக்கங்களில் இயங்குபவர் எனத் தெரிந்தால் வேலை கிடைக்க விட மாட்டோம். உங்கள் எதிர்காலமே வீணாகிவிடும் என மிரட்டியும் மாணவர்களிடம் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை.


கன்ஃபெஸன் பக்கம் ஒன்றில் தீவிரமாக இயங்கும் சென்னை மாணவர் ஒருவரிடம் சாட்டில், 'இது ஆரோக்கியமான போக்கா?’ என்று கேட்டேன். 'இதுல என்னங்க தப்பு? நல்லதோ, கெட்டதோ ஓப்பனா இருக்கோம். இங்கே போஸ்ட் பண்றதுல பல விஷயங்களை அப்பா, அம்மாகிட்டயோ, புரொஃபசர்கள் கிட்டயோ பேசத்தான் ஆசை. ஆனா, காது கொடுத்துக் கேட்க அவங்களுக்கு நேரம் இல்லை. ஒருவேளை கேட்டாலும் எங்களையே திட்டி பி.பி. ஏத்திக்குவாங்க. அதான் அதை உலகத்தின் பார்வைக்கு வெச்சிடுறோம்!'' என்கிறார் செம கூலாக.


வாசகர் கருத்து 


1. இந்தப் பாவ மன்னிப்புக்கள் அவற்றை எழுதுபவர்களின் மனச்சுமைகளைச் சற்றே குறைக்க வல்லது என்றால் கன்பெஷன் பக்கம்
தேவை தான் !


2. இப்படியான பாவமன்னிப்புகள் சாம்பிள் வகையறாதான். **** ஹலோ, கன்பெஷன் என்றால் குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல் என்று பொருள். பாவமன்னிப்பு அல்ல அது.



3. குப்பைகளைக் கொட்டவும், எரிக்கவும் ஒரு தனி இடம் தேவைதான், ஆனால் அதில் அவர்களே எரிந்து போகாதவரை.........


4. அகில இந்திய தொழில் நுட்பக்கழகம் மொபைல் லேர்னிங் என்றொரு கான்செப்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.நை தலும் என்ற காந்தியின் கல்விக்கொள்கையை, ராஜாஜியின் கல்விக்கொள்கையை ஒட்டிய வகையில் இந்த மொபைல் லேர்னிங்கை தனி நபர் கல்வித்திட்டமாக , தனி நபர் கல்வி சுதந்திரமாக ஒரு தனிநபர் வடிவமைத்துக் கொள்ள முடியும்.


அது முழுக்க லைப் டைம் எக்ஸ்பீரியன்சஸ் கல்வித்தகுதியாக பல்கலைக்கழக ஆசிரியர், நிபுணர், வல்லுநர் குழுவின் ஒத்துழைப்போடு மாற்றிக் கொள்ளத்தக்கது.இம்முறை அமலுக்கு வந்தால் தற்போது செய்திகளில் அடிபடும் அசம்பாவிதங்களுக்கு முற்று வைப்பதோடு, ஒவ்வொரு தனி நபர் திறனும் முற்போக்காக மாற்றம் கொள்ளும்.இந்த கட்டுரையில் மாணவர் பகிர்ந்திருப்பதைப்போல பெற்றோருடன், ஆசிரியருடன் பகிர்ந்து முன்னேறலாம் .எந்நிலையிலும் பாடத்திட்டம் மாற்ற முடியும் வசதி கொண்டது.அகாடமிக் காலண்டர் , வருகைப்பதிவு இல்லாததால் அவசியமில்லாத பொய், சாக்குகள், திட்டங்கள், பழி போன்ற எதிர் மறை செயல்களுக்கு இடமேயில்லாத சூழல் வரும்.ஒதுக்குதல் என்பதற்கு சிறிதும் இடமேயில்லை. 


5. மனதில் உள்ள இரகசியத்தை, சுமையை வெளியில் சொல்லி விட்டால் பாரம் குறைந்துவிடும் என்பார்கள். எனவே, இளைஞர்கள் மன பாரத்தை குறைக்க, தம், பீர் அடித்து உடலை கெடுப்பதைவிட, இப்படி எழுத்து கன்பெஷன் வழியாக விடுதலை தேடுவது சரியென்றே தோன்றுகிறது.


6. எழுதுகிறவர்கள் எழுதி ஈதோ ஒருவகையில் அமைதி பெறட்டும். படிக்கிறவர்கள் பொழுதுபோக்காகப் படிக்கட்டும். அப்படியே எப்படியெல்லாம் நடக்ககூடாதென்பதை புரிந்துகொள்ளட்டும்.


நன்றி - விகடன்