Sunday, August 14, 2016

ஜோக்கர்-திரை விமர்சனம் ( டாப் டக்கர்)

கொஞ்சம் நையாண்டியும் நிறைய கோபமுமாக ஓர் அரசியல் படம். வணிக அம்சங்களைத் தவிர்த்து சமூக அக்கறையுடன் இப்படி ஒரு படத்தைக் கொடுத்த துணிச்சலுக்காகவே இயக்குநர் ராஜு முருகனைப் பாராட்டலாம்.


தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சாமானியக் குடிமகனான சோம சுந்தரத்தின் வீட்டில் ஒழுங்காக ஒரு கழிப்பறைகூட கிடையாது. ஆனால் அவர் தன்னை இந்திய ஜனாதிபதியாகக் கற்பித்துக் கொண்டு செயல்படுகிறார். அரசு அதிகாரிகள், காவல் துறையின ரிடம் ஜனாதிபதிக்குரிய தோரணை யுடன் பேசுகிறார். பொதுப் பிரச் சினைகளுக்காகப் போராடுகிறார், ‘உத்தரவுகள்’ பிறப்பிக்கிறார்.



யார் இந்த ‘ஜனாதிபதி’, அவ ருக்கு என்ன பிரச்சினை என்பதற் கான பதில்கள் சோமசுந்தரத்தின் பின்கதையில் உள்ளன. தனியார் தண்ணீர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் சோமசுந்தரம். ரம்யா பாண்டியனை அவருக்குப் பெண் பார்க்கிறார்கள். வீட்டில் கழிப்பறை இருந்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறார் ரம்யா. அரசின் மானி யத் திட்டத்தில் கழிப்பறை கட்ட முயல்கிறார் சோமசுந்தரம். அமைச் சர் தொடங்கி அதிகாரிகள்வரை ஊழலில் தின்றதுபோக நாயக னுக்குக் கிடைப்பது கழிப்பறைக் கிண்ணம் மட்டுமே.



அதன் பின்பு என்ன நடந்தது? ஊழல் புரையோடிய அமைப்பு, சோமசுந்தரத்தின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பது மீதிக் கதை.




அதிகப்படியான பிரச்சினை களால் மனநிலை பிறழ்ந்த ஒருவரால்தான் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும்; விதவிதமான போராட்டங்களைத் தொய்வில்லா மல் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்பதாகக் காட்டுவது பொருத்தமாக இருக்கிறது. அரசி யல் நாற்றமெடுக்கும் ஊழல்கள், ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகளின் சாவுகள், ஆறு களில் மணல் கொள்ளை இவற்றை எல்லாம் நமது பொதுச் சமூகம் இயல்பாகக் கடந்து செல்லப் பழகிவிட்டது. ஆனாலும் விதிவிலக்காகச் சிலர் போராடத் தான் செய்கிறார்கள். யாருக்காக இவர்கள் போராடுகிறார்களோ அவர்களே இவர்களைக் கேலிப் பொருளாக்குவதும் புறக்கணிப் பதும் வழக்கமாகிவிட்டது. யாரும் கண்டுகொள்ளாத இந்த விஷ யத்தை சாட்டையடியாகச் சொன்ன விதம் தமிழ் சினிமாவுக் குப் புதிது!



படத்தின் பலவீனம் நிதான மான நகர்வு. மக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்கிற மையப் பிரச்சினையை முன்வைத்து மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த போராட்டங்கள் ஒரே காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. சில காட்சிகளில் தெரியும் நாடகத் தன்மை உறுத்துகிறது. ஜனாதிபதி கிராமத்துக்கு வரும் காட்சி மிகவும் பலவீனமானது.



அரசியல் கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது, குக்கிராமங்களின் நிலை, மக்கள் நலத் திட்டங் களின் நிஜ முகம் ஆகியவை எதார்த்தமாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. காதல் அத்தியாயம் இயல்பாகவும் அழகாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.


சோமசுந்தரம் (மன்னர் மன் னன்) அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்பாவி இளைஞராகக் காதலியைப் பின்தொடர்வது, மனம் பிறழ்ந்த நிலையில் ஜனாதிபதியாக அதிகார தோரணை காட்டுவது, நீதிமன்றத்தில் கதறுவது என முகபாவனையிலும் உடல் மொழியிலும் அசத்தியிருக்கிறார்.



கிராமத்து ஏழைப் பெண்ணாக வரும் ரம்யா பாண்டியன், நாயகனைப் பார்த்து முதலில் விலகுவதும், பிறகு அன்பில் கரைவதுமாக இயல்பாக நடித்திருக்கிறார். குடியால் கணவனை இழந்த பெண்ணாக வரும் காயத்ரி கிருஷ்ணா எளிமையான தோற்றத்திலும் உறுதியான பேச்சிலும் கவனம் ஈர்க்கிறார். போராடுவதையே வாழ்க்கையாகக் கொண்ட மு.ராமசாமி, முற்போக்குக் கருத்துக்களைப் போகிறபோக் கில் அள்ளிவிடும் பவா செல்லத் துரை என அனைவரும் தத்தமது பாத்திரத்துக்கு நியாயம் செய் திருக்கிறார்கள்.



ராஜுமுருகன், முருகேஷ் பாபுவின் எழுத்தில் ‘நகைக் கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?’, ‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை.. சகாயம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம்!’ என வசனங்கள் சுரீர் ரகம்.



வசனம், இசை, ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் மிகப் பெரிய பலம். கிராமத்தின் சூழலை அருமையாகக் காட்சிப் படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ‘செல்லம்மா’வில் உருகவைக்கிறார். ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாடலில் நிமிரவைக்கிறார்.



அழுத்தமான செய்தியைக் கூர்மையாகச் சொல்லும் படம், அதை முழுமையான திரைப்பட அனுபவமாக மாற்றுவதில் முழு வெற்றி பெறவில்லை. எனினும் எடுத்துக்கொண்ட விஷயத்துக்காகவும் அதைச் சொல்லும் விதத்தில் தெறிக்கும் துணிச்சலுக்காகவும் இந்தப் படத்தைப் பாராட்டலாம்.



நன்றி - த இந்து

0 comments: