Sunday, January 03, 2016

தற்காப்பு (2016)-சினிமா விமர்சனம்

நடிகர் : சக்தி வாசுதேவன்
நடிகை :வைஷாலி தீபக்
இயக்குனர் :ஆர்.பி.ரவி
இசை :பைசல்
ஓளிப்பதிவு :ஜோன்ஸ் ஆனந்த்
போலீஸ் அதிகாரியான சக்தி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். உயர் அதிகாரிகளின் ஆணைப்படி அவர்கள் தீர்மானிக்கும் நபரை சக்தி என்கவுன்டர் செய்து வருகிறார். இந்நிலையில் ரியாஸ்கானை போலி என்கவுன்டர் செய்கிறார் சக்தி. 

இந்த என்கவுன்டர் (Human rights) மனித உரிமை ஆணையத்திற்குக்கு செல்கிறது. மனித உரிமை ஆணையத்தில் உயர் அதிகாரியாக இருககும் சமுத்திரகனி, இந்த என்கவுன்டரில் சம்பந்தப்பட்ட சக்தி உள்ளிட்ட மூன்று போலீஸ்காரர்களை விசாரிக்கிறார். 

ரியாஸ்கானை அவர்கள் போலி என்கவுன்டர் மூலமாகத்தான் கொன்று இருக்கிறார்கள் என்பதை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் அதை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் சமுத்திரகனி இருக்கிறார். 

செல்வந்தர்களும், தொழிலதிபர்களும், உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக் கொண்டு உங்களை கூலிப்படையாக வைத்து என்கவுன்டர்கள் செய்கிறார்கள் என்று சக்தியிடம் சமுத்திரகனி கூறுகிறார். இதைகேட்ட சக்தி தாம் செய்த தவறை உணர்கிறார். 

இதையறிந்த உயர் அதிகாரிகள், கோர்ட்டில் சக்தி உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுவான் என்பதற்காக, சக்தியை குற்றவாளியாக்கி அவரை என்கவுன்டரில் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். 

இதிலிருந்து சக்தி தப்பித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கும் சக்தி, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு ஜோடி இல்லை. போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவு பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம். 

மனித உரிமை ஆணைய அதிகாரியாக வரும் சமுத்திரகனி, அவருக்கே உரிய பாணியில் வசனம் பேசி கைத்தட்டல் பெறுகிறார். இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 

சக்தியை தவிர படத்தில் ஆதித், சுவராஜ் என்ற இரண்டு கதாநாயகன்களும், வைசாலி தீபக், அமிதா என்ற இரண்டு கதாநாயகிகளும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்கள். 

தற்காப்பு என்ற தலைப்பை வைத்து, செல்வந்தர்கள் சட்டத்தை தங்களது பணபலத்தால் எப்படி அதை தவறாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரவி. என்கவுன்டர் மூலம் உயிர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது என்றும், ஒரு உயிரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும், என்கவுன்டரால் பல பெரிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறார். என்கவுன்டர் கதையில், திரைக்கதைக்காக இரண்டு காதல் ஜோடிகளை புகுத்தி படமாக்கியிருக்கிறார். இது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது. 

பைசல் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையையும் சிறப்பாக அமைத்திருக்கிறார். ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘தற்காப்பு’ பாதுகாப்பு.


-maalaimalar


0 comments: